நிரந்தர
பிரிவொன்றின்
அடையாளமாக
நாங்கள்
புனைவேறிய
திட்டமிட்ட
புன்னகையோடு
கைக்குலுக்கி
கொண்டோம்..

இருவருமே
இயல்பாக இருப்பதாக
அவரவருக்கு
உணர்த்திக் கொள்வதில்
பெரிதாக ஒன்றும் சிரமமில்லை.

எல்லா கணக்குகளும்
தீர்த்தாகிவிட்டது.
இறுதியாய் இருந்த
புன்சிரிப்பைக் கூட
உதிர்த்தாகிவிட்டது.

திரும்பி
பார்க்கவே இயலாத
ஒரு பாதையில்
திசைகள் அமைக்க
எங்கள் திசைக்காட்டிகளை
கூட திருப்பி வைத்தாகி
விட்டது.

அவள் வெகு தூரம்
போன பிறகு தான்
நான் மெதுவாக உணர்ந்தேன்.

ஒரு குழந்தையின் அழுகைப்
போல எங்களின் சில இரவுகள்
என் விரல் பிடித்து
தலைதூக்கிப் பார்த்தன.

அந்த இரவுகளை
அப்படியே
அதே இடத்தில்
அதே நொடியில்
கைவிட்டு விட்டு
திரும்பிப் போகத்தான்
எத்தனித்தேன்.

ஆனாலும் நிலா
சொட்டிய அந்த இரவுகள்
கால தேச வர்த்தமானங்களை
தாண்டிய ஒரு அழகிய
பாடலாய் காற்றில் தனித்து
அலைகிற அபாயம்
கருதி அதுவரை
நான் சந்தித்திராத
இனியும் சந்திக்க முடியாத
அந்த இரவுகளை எங்கோ
சென்று இருட்குகையின்
ஆழ்க்குழியில்
புதைப்பதென
நிலவோடு கனத்திருந்த
அந்த இரவுகளை
வாரி சுருட்டி எடுத்துக் கொண்டேன்.

அந்த இரவுகளை
புதைப்பதற்கு முன்
பெருமூச்செறிந்து
இறுதியாக
ஒருமுறை பார்த்தேன்.

செந்நிற வானத்தின்
அந்திக்கால
செம்மைப்போல
நீங்காத வசீகரத்தை
அந்த இரவுகள்
தன் உடலெங்கும்
பூசிக்கொண்டு
இருந்தன.

அந்த இரவுகளை
சமன் செய்ய
நான் ஒருபோதும்
முயன்றதில்லை.

ஆனாலும்
அந்த நட்சத்திர
இரவுகள்
சதா ஒவ்வொரு
கணத்திலும்
உணர்ச்சிகளின்
கற்கள் வீசப்படுகிற
நினைவுகளின்
குளத்தில்
அல்லிகளாகத்தான்
பூத்துக் கொண்டிருந்தன.

எப்போதும்
என்னை நோக்கி
வீசப்படுகிற
முடிச்சுகள்
நிரம்பிய
மாயக்கயிற்றொன்றின்
கரங்களாக அந்த
இரவுகள் இருந்தன.

யாரும் பார்த்தறியாத
நொடி ஒன்றில்
கால நதியின்
கரையோரத்தில்
தீர்ந்தோர் கடனென
அந்த இரவுகளை
அப்படியே அள்ளி
கரைத்து விட்டு
திரும்பி பார்க்காமல்
நடந்தேன்.

மறுநாள்
நான் எதிர்பார்க்காத
ஒரு நொடியில்
என் ஜன்னலுக்கு
வெளியே பூத்திருந்த
மல்லிகைச் செடியின்
மீது அந்த இரவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாய்
பறந்து கொண்டிருந்தன.