துரோகம் என்பது என்ன…. அது ஒரு வசைச் சொல்லா, கடந்த காலத்தின் அழிக்கமுடியாத காய வடுவா.., யாரோ ஒருவர் நம்மீது மாறாத வலியை சுமத்தி வைத்துவிட்டு பெற்றுக்கொண்ட சாபத்தின் பாடலா.. நம்பி நிற்பவர் சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் அவர் நிழலில் நின்றுக்கொண்டு நேசித்து நம்பிக்கை செலுத்தும் உடன் இருப்பவர் குத்தும் கத்தியா.. என்றால் இவை அனைத்தும் தான் என சொல்லத் தோன்றுகிறது.வரலாற்றின் பல பக்கங்கள் துரோகத்தின் நிழலால் இருண்டு கிடக்கின்றன. ஏதோ ஒரு ஆதாயம் கருதி இழைக்கப்படும் துரோகம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்து விதிக்கப்படும் சாபமாக மாறி துரத்தி வருவதை நாம் காண்கின்றோம்.துரோகத்தை ஆங்கிலத்தில் Betrayal என்று அழைக்கிறார்கள். அதற்கு ஆக்ஸ்போர்டு அகராதி “the action of betraying one’s country, a group, or a person; treachery.” என விளக்கம் தருகிறது. இதுகுறித்து தமிழ் அகரமுதலியில் தேடியபோதுராஜ துரோகம், சாமித் துரோகம், குரு துரோகம், இனத் துரோகம், பிரித்துரோகம் என ஐவகை துரோகங்களை நம்மால் காண முடிகிறது. துரோகம் என்பது ஒருவகை ஏமாற்றுகையின் வடிவத்தைத் தான் கொண்டிருக்கிறது என்றாலும், இது அதைவிட கொடியதான ஒன்றாக விவரிக்கப்படுகிறது.எதையும் மறக்க முடிகிற, கடக்க முடிகிற மனிதனின் ஆன்மா துரோகத்தின் வலியை மட்டும் கடக்கப் படாதபாடு படுகிறது. அது மகத்தான நம்பிக்கையின் மீது விழுந்த இடி. அந்த நம்பிக்கை தகர்வில் இருந்து வெகு சாதாரணமாக மனிதமனம் மீள மறுக்கிறது.சில வருடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயர்களிடம் கட்டபொம்மனை காட்டி கொடுத்த புதுக்கோட்டை ஜமீன் எட்டப்பனின் வாரிசுகள் அளித்திருந்த பேட்டி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. இன்னமும் அந்த துரோகத்தின் நிழலில் இருந்து தங்களது சந்ததிகள் தப்ப முடியாத வலியினை அவர்கள் உருக்கமாக தெரிவித்திருந்தார்கள். இன்னமும் தங்களை சொந்தபந்தங்கள் சேர்த்துக் கொள்ளாமல் நிகழ்வுகளில் புறக்கணிக்கிற வேதனையை அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னால் நடந்த ஒரு துரோகச் செயல் பல தலைமுறைகளை தாண்டியும் அந்தச் செயலுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத சந்ததிகளை கூட விடாமல் துரத்தி வருவது என்பது வரலாற்றின் விசித்திரம்.பண்டைய கிரேக்க சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னன் ஜூலியஸ் சீசர் மனித இனத்தின் நாட்காட்டியையே மாற்றியமைத்தவர். அவரால்தான் ரோமன் காலண்டர் மாற்றியமைக்கப்பட்டது. எல்லா இடங்களிலும் தனது சிலையை நிறுவ சொன்ன சீசர் , நாணயங்களிலும் தன் உருவத்தை பதித்தார். அதற்கு சொன்ன விளக்கம்தான் “உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காக காத்திருக்காதே”.அப்படிப்பட்ட ஜூலியஸ் சீசர் மீது கடுமையான போட்டி, பொறாமைகள் காரணமாக பலருக்கும் பகை ஏற்படுகிறது. கிரேக்கத்தின் உயரிய சபையான செனட் சபையின் கூட்டம் நடக்கும்போது அங்கே இருந்த பல பகைவர்களால் ஜூலியஸ் சீசர் கத்தியால் குத்தப்படுகிறார். தன் மகன் போல நேசித்த புரூட்டஸிடம் ஓடிச்சென்று அவன் காப்பாற்றுவான் என நம்பி நிற்க, அவனும் மறைத்து வைத்திருந்த ஒரு கத்தியால் சீசரை குத்த அப்போது வலியோடு ஜூலியஸ் சீசர் சொன்ன வார்த்தைதான் “யூ டூ புரூட்டஸ்..”(you too Brutus..?)இதை சீசர் சொன்னாரோ, சொல்லவில்லையோ.. என்று நமக்குத் தெரியாது. ஆனால் சீசரின் வரலாற்றை நாடகமாக படைத்த ஷேக்ஸ்பியர் தனது வசனத்தில் “யூ டூ புரூட்டஸ்..” என்கிற சொல்லாடலை பயன்படுத்தியபோது அது உலகத்திற்கு பொதுவான சொல்லாக மாறியது.சங்க இலக்கியங்களில் துரோகத்தை பற்றிய ஒரு முக்கியமான பாடல் ஒன்று உண்டு . கள்ளூர் என்ற ஊரில் ஒருவனால் காதலிக்கப்பட்டு துரோகம் இழைக்கப்பட்ட இளம்பெண் ஒருவள் ஊரின் அவையிடம் முறையிடுகிறாள். அவளது முறையீட்டை ஏற்றுக்கொண்ட ஊரவை காதலனை விசாரிக்கிறது. இந்தப் பெண்ணை தான் விரும்பவே இல்லை உறுதிப் பாடாக மறுக்கிற காதலனின் மறுப்பு பொய்யென சாட்சிகள் மூலம் உறுதி செய்கிறது. அந்த ஆடவன் குற்றவாளி என சபை அறிவித்து மூன்று கிளைகளாகப் பிரிந்து செல்கிற மரக்கிளைகளில் அவனை கட்டி வைத்து அவன் தலையில் சாம்பலை கொட்டி தூற்றிப் பேசிய தண்டனையை பின்வரும் பாடல் மூலம் நாம் அறியலாம்.”தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த், திரு நுதல் குறுமகளணி நலம்வவ்விய அறனிலாளன் அறியே னென்ற திறனில் வெஞ்சூளரிகரி கடாஅய், முறியார் பெருங்கிளை செறியப் பற்றி நீறு தலைப்பெய்த ஞான்றை வீறுசாலவையத்து ஆர்ப்பினும் பெரிதே”(அகம் 256)சீவலப்பேரி பாண்டி என்கின்ற திரைப்படம் தென் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. ஜூனியர் விகடன் இதழில் 1994 ஆம் ஆண்டு செளபா என்றழைக்கப்பட்ட சௌந்தரபாண்டியன் எழுதிய வரலாற்று உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்துத்தான் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.தன் சாதியை சேர்ந்த உறவுக்காரர்களின் அவதூறுகளை நம்பியும், தன் எதிர்காலம் குறித்து வழங்கப்பட்ட ஆசை வாக்குறுதிகளை நம்பியும் தன் மீது மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்த ‘கிராம முன்சீப்’ பை அவர் எதிர்பார்க்காத நேரத்தில் கொலை செய்து விடுகிறார். பிறகு சிறை வாழ்க்கையில் அவர் வாடும் போது தான் தனக்கு வாக்குறுதி அளித்த பெரிய மனிதர்களின் துரோகங்கள் தெரியவருகிறது. சிறையிலிருந்து தப்பிக்கின்ற பாண்டி தன்னை ஏமாற்றியவர்களை வெட்டி சாய்த்துவிட்டு இறுதியாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். வாழ்நாள் முழுக்க துரோகத்தின் நிழல் சீவலப்பேரி பாண்டியை ஒரு வெறி பிடித்த மிருகம் போல துரத்திக்கொண்டே இருந்தது.எல்லாவற்றையும் தாண்டி துரோகம் ஒரு மாபெரும் குற்றமாக வலியாக ஏன் கருதப்படுகிறது என்றால்.. நாம் நம்பிக்கை கொண்டு நேசிப்பவர்கள் இடத்திலிருந்து துரோகம் பிறக்கிறது. ஒரு வகையான நேசிப்பின் முறிவு போல துரோகத்தின் பாடல் எப்போதும் இருண்மையாகவே இருந்து வருகிறது.தமிழ் திரைப்படங்களில் துரோக உணர்ச்சியை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்து இருக்கின்றன. அதில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி மற்றும் சுப்பிரமணியபுரம் என்கின்ற 2 திரைப்படங்கள் மிக முக்கியமானவை.குறிப்பாக ரோசாப்பூ ரவிக்கைக்காரி கணவன் மனைவிக்கு இடையிலான உறவின் ஊடலாக நிகழ்ந்த துரோகத்தை பற்றி விரிவாகப் பேசுகிறது. அதற்கு இணையாக நட்பின் ஊடாக நிகழ்ந்த துரோகத்தைப் பற்றி சுப்பிரமணியபுரம் குறிப்பாக பேசுகிறது. இரண்டிலும் துரோகம் செய்தவர்கள் இறந்து போகிறார்கள். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில்கணவனுக்கு துரோகம் செய்த இளம் மனைவி பிற ஆடவன் ஒருவனோடு தான் இருப்பதை நேரடியாக பார்த்துவிட்ட கணவனை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த குற்ற உணர்ச்சியில் தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறாள். அதேபோல சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் நண்பர்களுக்கு துரோகம் செய்த ஒருவனை அந்தக் கும்பலில் மிஞ்சி இருக்கிற ஒரு மாற்றுத்திறனாளி ஒருவன் கொலை செய்து பழி தீர்ப்பான்.துரோகம் தான் கொடிய பாவம். “பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது பைபிள்.கடவுளின் மைந்தனான இயேசுநாதர் மிகப் புனிதமானவர். கருணை மிக்கவர். எளியவர்களை பார்த்தால் இரக்கம் கொள்பவர். ஆனால் அவருடைய நெருங்கிய சீடனான யூதாஸ் அப்படிப்பட்டவன் அல்ல. யூதாஸின் பணத்தாசை இயேசு நாதரை காட்டிக்கொடுக்க வைக்கிறது.கெத்சமனே என்ற இடத்தில் இருந்த தோட்டத்தில் நடந்த இரவு விருந்தில் இயேசு தனது சீடர்களின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவர்களது கால்களை கழுவி தூய்மைப்படுத்தி பெருமை செய்கிறார். இயேசுவை கைது செய்ய தேடி வந்த பரிசேயர் என்றழைக்கப்பட்ட காவலர்களிடம் யூதாஸ் இயேசுவை அடையாளம் காட்ட அவரை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறான்.இயேசு அவனைப் பார்த்து கேட்ட இறுதி கேள்வி ” மனுஷ குமாரனை முத்தத்தின் மூலமாக காட்டிக் கொடுக்கிறாய்..?(luk 22:48)யூதாஸ் அளித்த அந்த முத்தம் என்பது இயேசுநாதரின் தாடையோடு தாடை வைத்து விசுவாசத்தின் சின்னமாக அளிக்கப்பட்ட முத்தமாக இருந்தாலும் அதன் உள்நோக்கம் துரோகத்தின் விஷம் நிரம்பியிருந்தது.இயேசு கொடுமைப்படுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்படுவதை காண சகிக்காமல் குற்ற உணர்ச்சியில் யூதாஸ் தற்கொலை செய்துகொண்டான் என பைபிள் கூறுகிறது.நேர்மையான எதிரிக்கு என்றுமே வரலாற்றில் ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் துரோகி மட்டும் எக்காலத்திலும் புறக்கணிக்கப்படுகின்றவனாக மாறிவிடுகிறான். இதிகாச நாயகர்களின் எதிரிகளாக இருந்த இராவணன் மற்றும் துரியோதனும் கூட கதாநாயகர்கள்தான். ஆனால் ராமாயணத்தில் விபீஷணன் கதாபாத்திரம் துரோகத்தின் வடிவமாக இன்றளவும் தூற்றப்பட்டு கொண்டிருக்கிறது.மகாபாரதத்தில் துரோணருக்கு கேட்கும் விதமாக தருமன் “அவருடைய மகன் அஸ்வத்தாமா இறந்துவிட்டான்”(ஆனால் இறந்தது அஸ்வத்தாமா என்ற ஒரு யானை) என்று உதிர்த்த இரு பொருள் கொள்ளும் விதமான ஒரு பொய் துரோகத்தின் சாயல் உடையது. அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துரோணர் மரணம் அடைகிறார். இத்தனைக்கும் துரோணர் தருமனின் ஆசிரியர்.அறத்தின் சாயலாக நின்று கடைசி வரை களத்தில் போராடிய தேசியத் தலைவர் பிரபாகரன் என்ற சொல் இருக்கும் வரையில் அதற்கு எதிர்ப்பதமாக துரோகச் சின்னங்களாக “கருணாக்கள்” என்கின்ற பெயர்களும் உச்சரிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கும்.”நேர்மையாக இருந்து விடு.. நிம்மதியாக தூங்கி விடலாம்.”என்கிறது ஆப்பிரிக்க பழங்குடிகளின் பாடல் ஒன்று.அதே பாடலில் விசித்திரமாக ஒரு வரி வருகிறது.துரோகத்திற்கு இமைகள் இல்லை.அப்படி என்றால்.. துரோகம் கொண்ட ஆன்மா விழி மூடி தூங்க முடியாது, என்பதை தான் “இமைகள் இல்லை” என கவித்துவமாக சொல்லியிருக்கிறார்கள்.இறுதியாக என் துருவனின் “அடர்பச்சை” நூலிலிருந்து துரோகம் பற்றிய சில வரிகள்..”கொஞ்ச நேரம்கரையிலேயேநடந்திருந்தபோதுஉப்புக் காற்றில் அவன் முதுகுவலிக்கத்தொடங்கியது.அத்தனையும் கட்டிப் பிடித்தபடியேகுத்தப்பட்ட தழும்புகள்.”