அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..

வருகிற மார்ச் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நம் உயிர் அண்ணன் சீமான் அவர்கள் கட்சியின் ஆட்சி செயல்பாடு வரவையும் வெளியிட்டு வரலாற்று பேருரை ஆற்ற இருக்கிறார்கள்.மகத்தான இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தமிழ்நாடெங்கும் நாம் தமிழர் உறவுகளாகிய நீங்கள் தயாராகி வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

இந்தப் பயணம் குறித்தான சில எண்ணங்களை திறந்த மனதோடு உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. தொலைவிலிருந்து வரும் உறவுகள் குறித்த நேரத்தில் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.

2. ஆறு மணி நேரம் மட்டும் பயணநேர‌ தொலைவில் இருக்கின்ற ஊரிலிருந்து புறப்படுகின்ற உறவுகள் மட்டும் அதிகாலையில் புறப்படுங்கள். மற்றவரெல்லாம் முதல் நாள் இரவே புறப்பட்டு விடுவது நல்லது

.3. 234 வேட்பாளர்களும் மதியம் மூன்று மணிக்கு முன்னதாகவே ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வந்து விடுவது நல்லது. கடைசி நேர போக்குவரத்து நெரிசலில் வேட்பாளர் சிக்கிக் கொள்வதை இதன்மூலம் தவிர்த்துவிடலாம். வேட்பாளர்கள் மற்றவர்களோடு இணைந்து வருகின்ற பயணத்திட்டத்தை தவிர்த்துவிட்டு முன்னதாகவே தனி வாகனத்தில் சில பேரோடு புறப்பட்டு வருவது இன்னும் சிறந்தது. மற்றவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் போது வந்தால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் வேட்பாளர்கள் முன்னதாக அரங்கில் இருப்பதே சிறந்தது. வேட்பாளர்கள் இன்று தலைமை கேட்டிருக்கிற வேட்பாளர் விபரக் குறிப்புகளை மின்னஞ்சலில் உடனே அனுப்பி வைத்து விடுங்கள்.

4. அதிகாலை புறப்படும் உறவுகள் காலை, மதிய உணவை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது. செலவும்/நேரமும் இதனால் மிச்சப்படும். இன்னும் வாய்ப்பு இருக்கிற உறவுகள் சென்னையில் இருக்கின்ற தங்களுக்கு வேண்டியவர்களிடம் எளிய இரவு உணவிற்கான ஏற்பாட்டினை அளித்து விட்டால் ‌ குறைவான செலவில் இரவு உணவை தயாரித்து விடலாம். வரும் வழியில் இருக்கின்ற உணவகங்களில் உணவின் விலை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இதைப்பற்றி உறவுகள் சிந்திக்கலாம்.

5. செங்கல்பட்டு தொடங்கி ராயப்பேட்டை வரையிலான சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருக்கிறது. அதிகாலையில் புறப்படுகின்ற உறவுகள் செங்கல்பட்டை பகல் 12 30 மணிக்குள் கடப்பது போல பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டால் இறுதிநேர பரபரப்பைத் தவிர்த்துவிடலாம் .

6. தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் உறவுகள் தங்களில் பொறுப்பான ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஓட்டுனருக்கு அருகே அமர வையுங்கள். இரவு பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர் களைப்பாக இருந்தால் வண்டியை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுனருக்கு போதிய ஓய்வு அளித்து பிறகு பயணத்தை தொடருங்கள்.

7. அனைவரும் முகக் கவசம் அணிவதை தவிர்த்து விடாதீர்கள். கையில் சிறிய அளவிலான சானிடைசர் பாட்டில் ஒன்று வைத்துக்கொள்வது சிறந்தது. வீட்டிலேயே காய்ச்சிய குடிநீரை போதியளவு எடுத்துக்கொண்டு கிளம்பினால் வழியில் தேவையற்ற குடிநீர் செலவு மிச்சமாகும். மேலும் வழியில் பாதுகாப்பான குடிநீருக்கு உத்தரவாதமில்லை

8.குழந்தைகளை அழைத்து வரும் உறவுகள் அவர்களுக்கான அவசர மருந்துகள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல மாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கிறது. அதற்கான ஆடைகளையும் எடுத்து வாருங்கள்.

9. எல்லாவிடத்திலும் சாலை விதிகளைக் கடைபிடியுங்கள். பெரும்பாலும் வேகமாக செல்வதை தவிருங்கள். மகிழுந்துகளில் வருகின்ற உறவுகள் இடைவார் அணியுங்கள். மகிழுந்தில் வருகின்ற உறவுகள் ஏழாம் தேதி இரவு சென்னையில் தங்க முடிந்தால் தங்கி விடுங்கள். இரவு நேர பயணத்தை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள்.

10. வண்டியில் வரும் அனைவரது அலைபேசி எண்களையும் வண்டிக்கு பொறுப்பேற்கிறவரிடம் ஒப்படையுங்கள். சாலைகளை கடக்கும்போது கவனமாக இரு புறமும் பார்த்துவிட்டு கடங்கள். 11. நேர மேலாண்மையை சரிவர பின்பற்றினால் பாதுகாப்பான பயணம் உறுதி.‌ கூட்டம் முடிந்தவுடன் அவசர அவசரமாக கிளம்பாமல் பொறுமையாக புறப்படுங்கள். அது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும்

.கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கான ஒரு அரசியலை உருவாக்க கடுமையான இடையூறுகளுக்கு/ தடைகளுக்கு மத்தியில் அண்ணன் சீமான் தலைமையில் நாம் போராடி வருகிறோம்.‌ வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியடைய முன்னெழுத்தாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அமைய இருக்கிறது.தவிர்க்காமல் அனைவரும் வந்து விடுங்கள். எந்தக் காரணத்தையும் சொல்லாமல் ஓடி வந்து விடுங்கள்.

பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பயணத் தகவலை தெரிவித்து விடுங்கள். வண்டி புறப்படும் நேரத்தையும், இடத்தையும் தெளிவாக அறிவியுங்கள். அலைபேசியில் உங்கள் குரல் மூலம் தெரிவியுங்கள். வெறும் செய்தி அனுப்பினால் போதாது. மிக மிக முக்கியமான அழைப்பு என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றாக திரள்வோம்.நம் ஒவ்வொருவருக்காகவும் அண்ணன் சீமான் ‌ காத்திருக்கிறார் என்பதை உணர்ந்து ‌ பாதுகாப்பான பயணத்தோடு நாம் கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்புவோம்.

அன்றைய ஒருநாள் நாம் 11 ஆண்டுகளாக உழைத்து வரும் இலட்சித்திற்கான நாள் என உணர்ந்து சென்னையிலே திரள்வோம்.வாருங்கள்.. சென்னையிலே சந்திப்போம்.

வழக்கறிஞர் மணி செந்தில்

நாம் தமிழர் கட்சி