நானறிந்தத

எதிரிக்கு

நானறிந்த

எதிரிக்கு

நாசூக்காக

சொல்வது

என்னவென்றால்..

????

நள்ளிரவு நடுக்கடலில்

மெல்ல அசைந்து

கொண்டிருக்கும்

தனிமை படகு நான்.

உன் புறக்கணிப்பின்

பாடல் என்னை

ஒன்றும் செய்யாது.

என் வானத்தில்

நீ அந்தி வரைய

முயற்சிக்காதே.

பல இரவுகளையும்

சில சூரிய சந்திரர்களையும்

ஒரு வேனிற் காலத்தையும்

குளிர் ஊதற் காற்றையும்

என் உள்ளங்கையில்

மறைத்து வைத்திருக்கிறேன்.

சட்டென அவைகளில்

ஏதேனும் ஒன்றை

அருகே இருக்கும் ஏரியில்

வீசி எனக்கான

பருவத்தை நானே

உருவாக்குவேன்.

கால தேச நழுவலின்

ஊடே எனக்கென்று

ஓர் உலகை

சமைக்க கற்றவன் நான்.

என்னை கைவிட்டதாக

கர்வம் அடையாதே.

நடுப்பகல் நேரத்து

பாலைவன ஓநாயின்

பசி கொண்ட

விழிகளை என்றாவது பார்த்திருக்கிறாயா ‌…??

அதுதான் என் வாழ்க்கை.

நீ யோசிக்கவே முடியாத

அந்தர வெளியில்

சில கழுகுகளோடு

நான் பறந்து கொண்டு

இருக்கிறேன்.

நீரில் தென்படும் என்

சலனத்தை பார்த்து

உன் கத்தியை

குத்தாதே.

நீ என்னை

வெள்ளைத்தாள்

என நினைத்துக் கொண்டு

வரைந்த வரம்பற்ற

கோடுகளால்

பலனேதுமில்லை.

ஒரு யுகத்தின் பக்கத்தில்

தங்க எழுத்துகளாய்

நான் மின்னிக் கொண்டு

இருக்கிறேன்.

என் முன்னால்

பெருமூச்சு விட்டு

ஆற்றாமையோடு நிற்கும்

உனக்கு ஒரு வார்த்தை..

என்னை கொல்ல

நீ சிகண்டியாய்

அடுத்த பிறவியில்

பிறந்து வா.

அது வரை

மரணமில்லா

பீஷ்மராய்

நான் இந்த

பெருவாழ்வில்

திளைத்திருக்கிறேன்.