சமகால தமிழக அரசியல் வரலாற்றில் அதிகம் விமர்சிக்கப்படுகிற, விவாதிக்கப்படுகிற ஆளுமையாக அண்ணன் சீமான் உருவாகி இருக்கிற உயரம் அவரே எதிர்பார்க்காத ஒன்று‌.அது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அல்லது நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட நிகழ்வு அல்ல. காலத்தின் கருவியாக தன்னை ஒப்புக் கொடுத்த ஒரு தனி மனிதனின் அசாத்திய மனப்பாங்கு.

தன் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்து யாரும் தொட தயங்குகிற ,பிற தலைவர்கள் அதுவரை தொட்டிராத வரலாற்றின் வீதியில் இறுக மூடப்பட்டு துருவேறிக் கிடக்கின்ற பல சர்ச்சைக் கதவுகளை தன் அனல் தமிழால் எட்டி உதைத்து
மூடப்பட்ட கதவுகளை திறக்கும் பேரொசையால் அரசியல் களங்களை நிறைத்தவன் அண்ணன் சீமான்.

எங்கோ தொலைதூரத்தில் இருக்கின்ற தீவின் பிரச்சனை என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, இல்லை.. இல்லை.. அது என் மற்றொரு தாய் நிலத்தின் விடுதலைப் போராட்டம் என முழங்கியவன் அவன்தான்.

விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என முழங்கிய தலைவர்கள் மத்தியில் புலிகள் எங்கள் உடன் பிறந்தவர்கள், தமிழர்கள் புலிகளின் புதல்வர்கள் என முழங்கியவன் அவன் தான்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் , அவர் வீரம் செறிந்தவர் என்றெல்லாம் பேசிய தலைவர்களுக்கு மத்தியில் பிரபாகரன் என் அண்ணன், என் உடன் பிறந்தான் என முழங்கி தமிழகத்து வீதிகளில் இன உணர்வு தீப்பற்ற வைத்தவன் அவன் தான்.

அவன் பார்க்காத விமர்சனம் இல்லை. அவன் சந்திக்காத எதிர்ப்பு இல்லை.

எம் இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சி, திமுகவோடு கூட்டணி கண்டு 63 இடங்களில் ஆர்ப்பரித்து நின்ற போது, இப்போது நிமிர்ந்து நிற்கும் நாம் தமிழர் கட்சி அப்போது இல்லை தான்.

ஆனாலும் தனி ஒருவன் அவன் அசரவில்லை. ஓயாமல் அவன் ஓடி ஓடி ஓங்கி அடித்த அடியில், அவன் போக முடியாத ஐந்து தொகுதிகளை தவிர, 58 தொகுதிகளில் காங்கிரஸ் காணாமல் போனது பழைய வரலாறு.

இயக்கமாக இருந்த போது இன்னும் சில காலம் இருப்பார்கள் சில்லறையாய் சிதறுவார்கள் என்றார்கள். கட்சியாய் மாறிய போது இதுவெல்லாம் சில காலம் தான்.. காணாமல் போய்விடுவார்கள் என்றார்கள். தேர்தலில் நின்ற போது பத்தோடு ஒன்று என்றார்கள்.திமுகவை எதிர்த்த போது இத்தோடு இது ஒன்று என்றார்கள். திராவிடத்தை எதிர்த்த போது பாஜகவின் B டீம் என்றார்கள்.பாஜகவை எதிர்த்த போது இதுவும் இன்னொரு திராவிடக் கட்சி தான் என்றார்கள்.

சாதி மறுப்பு பேசியபோது அதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்றார்கள். மதம் கடந்து தமிழராய் இணைத்த போது இதுவெல்லாம் ஆகாத வேலை என்றார்கள்.

கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல..

“அப்படி என்றால் அதுவும் தப்பு.. இப்படி என்றால் இதுவும் தப்பு..
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்.
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்.”

????

ஒவ்வொரு முறையும் முடிவெடுக்கும் போது அண்ணன் சீமான் விமர்சிக்கப்படுகிறார். ஆனால் தான் கொண்ட தத்துவத்திற்கு, தான் நிக்கிற லட்சியப் பாதைக்கு அவர் நேர்மையாக நிற்கிறார்.

அவர் அண்ணன் திருமாவளவனோடு எதில் இணைய வேண்டும் எதில் இணையக் கூடாது என்பதில் அண்ணன் சீமான் மிகத் தெளிவாக இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக தனியாக நின்று என்ன புடுங்க போகிறாய் என கேட்ட அண்ணன் திருமாவிற்கு ,எம் அண்ணன் சீமான் சொன்ன பதில் ” எனக்கு என்ன அவர்கள் போதித்தார்களோ அந்த பாதையில் தான், அவர்கள் விலகினாலும் நான் தொடர்ச்சியாக பயணிக்கிறேன். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பதக்கம் பெறுவதில்லை. கற்றுக் கொள்ளும் மாணவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள் பதக்கம் பெறுகிறார்கள்.”

இந்தப் பக்குவம் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் செய்து தன்னிச்சையாக உறுதியாக களத்தில் நிற்கிற அண்ணன் சீமான் இறுதியாக கண்டடைந்த நிலை.

தன் இலட்சியப் பயணத்தை பிறர் சொல்லியும் எச்சரித்தும் கேட்காமல் தொடங்கிய அவருக்கு அது எப்படி நடத்த வேண்டும் என்கிற புரிதல் உண்டு.

எனவே இங்கு போதனைகள் தேவையில்லை.

எத்துயர் வந்தாலும், எந்நிலை தாழ்ந்தாலும் அண்ணன் கரம் பற்றி தடம் மாறாமல் பயணிக்கும் பேராற்றல் சாதனைதான் வேண்டும்.

அந்த நம்பிக்கை தான் இந்த 12 வருடங்களில் தடம் மாறாமல், தடுமாறாமல் பயணித்து அவர் சம்பாதித்தது.

அழைத்துச் செல்லும் அண்ணன் சீமான் அறிவார் அனைத்தையும்.

அவர் உறுதியாய் வெல்வார் தமிழர் மனத்தையும்.

எனவே .
ஏன் அப்படி செய்கிறார், ஏன் இப்படி செய்கிறார் என்றெல்லாம் வினாக்கள் எழுப்பி அவர் பாதையில் நாம் திசைக் காட்டிகள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் அவர் பயணத்தில் அவரே பாதை. அவரே திசைக்காட்டி.

அமைதி கொள்க அனைவரும்.