உன் நினைவின் துளி
என்னை தீண்டி விடக் கூடாது
என்பதற்காக
யாரும் அறியா இருட்
மனக்குகையில்
மௌனத்தின் விலங்கிட்டு
என்னை நான்
சிறை வைத்திருக்கிறேன்.

❤️

பின்னிரவு ஒன்றில்
காயாத கனவுகளின்
கயிற்றினை
பிடித்துக் கொண்டு
நான் அடைந்திருக்கும்
ஆழ் குகைக்குள் இறங்கி
என்னை நான்
பார்க்கும் போது
இமைகள் உதிர்த்த
விழிகளைக் கொண்டவன்
வெற்றுக் காகிதங்களை
பார்த்துக் கொண்டிருப்பதை
நான் பார்த்தேன்

❤️

எதற்காக
அந்த வெற்றுக் காகிதங்கள்
என நான் கேட்கலாம்
என நினைத்தபோது
இன்னும்
எழுதப்படாத கவிதைகள்
இந்தத் தாளில் தான் உள்ளது
என பதில் வந்தது.

❤️

அனலேறிய
அந்தக் கண்ணில்
இருந்து
சொட்டு விழி நீர்
ததும்பி விழுந்த போது
தாள் எங்கும்
பசுமை ஏறி
உன் நினைவின்
சின்னஞ்சிறு
அல்லி மலர்கள்
பூக்கத் தொடங்கின.

❤️

மறக்க வேண்டியதை
மறக்க…
இருக்க வேண்டும்
என்று நினைத்தேன்.
இல்லை
இறக்க வேண்டும்
என
உணர்ந்த கணத்தில்
இரண்டும் ஒன்றுதான்
என்பது போல
என்
பின்னங்கழுத்தில்
ஆழமாக சொருகப்பட்ட
அரூவ மாயக்கத்தி ஒன்றோடு
நான் அலைந்து கொண்டிருப்பதை தான்
அவரவர் மொழியில்
என் வாழ்க்கை
என அறிந்து வைத்திருக்கிறார்கள்.

❤️