கடைசியாய்

உனக்கு

அனுப்பிய

இறுதிச் செய்தி

ஒன்று

எவ்வித பதிலும்

இல்லாமல்

கை விடப்பட்ட

நாய் குட்டி போல

பனி இரவுகளில்

முனகிக்

கொண்டே திரிகிறது.

ஒளி வெளிரும்

அலைபேசி திரையில்

அனாதைப் போல

உனக்கு அனுப்பிய

என் இறுதிச் செய்தி

பதில் இல்லாமல்

பரிதவித்து கிடக்கிறது.

பதிலற்று திரிகிற

என் இறுதி செய்தி

மூங்கில் காட்டில்

அலைகிற

ஊதற் காற்று போல

உள்ளுக்குள் இரைகிறது.

ஒரு மகத்தான

பிரிவின்

இறுதி அத்தியாயத்தை

மௌனத்தின் தூரிகை

கொண்டு

நீ வரைய தொடங்கி

இருக்கலாம்.

இருப்பினும்..

பிரிவின் மொழி

ஏதாவது சொற்களாலோ

சைகையாலோ

குறைந்தபட்சம்

சில

கண்ணீர் துளிகளாலோ

அல்லது

ஒரே ஒரு கவிதையாலோ

நிகழ்த்தப்பட்டிருந்தால்

கூட

நான் ஆறுதல்

அடைந்திருப்பேன்.

அல்லது

சில வசவுகள்

நிராகரிப்பின் நியாயங்கள்

துரோக குற்றச்சாட்டுகள்

கழிவிரக்க விளக்கங்கள்

இப்படி ஏதேனும் ஒன்றில்

எனது இறுதி செய்தி

உன்னால்

சிலுவையில் அடிக்கப்பட்டு

இருக்க வேண்டும்.

அந்த சிலுவைப்பாடு

ஒருவேளை

என் உயிர்த்தெழுதலுக்கான

வழியாக

இருந்திருக்கக்கூடும்.

ஆனால்

எப்போதும்

வெறுமையை

தருகிற

மழைக்கால

மதியப்பொழுது போல

உன்னால்

பதில் அளிக்கப்படாத

எனது இறுதி செய்தி

உறைந்து விட்டது.

தவறி

எங்கேனும்

காண நேர்ந்தால்

ஏன் பதிலில்லை

என ஒருபோதும்

நான் உன்னிடம்

கேட்க மாட்டேன்.

அதற்கும்

பதிலில்லை

என்றால்..??

என்னை நானே

தேற்ற

இன்னொரு

கவிதையை

இப்படி நான்

எழுத முடியாது.