2009 காலத்தில் இருந்து திருமுருகன் காந்தியை கவனித்து வருகிறேன். முதலில் தொடக்கத்தில் இருந்தே அவர் தமிழ் தேசியவாதி அல்ல. அவர் முன் வைப்பதும் தமிழ் தேசியம் அல்ல.மே 17 இயக்கத்தை தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்தது மன்னார்குடியில் என்னோடு படித்த என் பால்ய கால நண்பன் உமர். அவனது அறிவை, ஆற்றலைக் களவாடி திருமுருகன் காந்தி தனது செயல்பாடுகளாக காட்டிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. சொல்லப்போனால் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கான பொய்களை மற்றும் அவதூறுகளை பரப்புகிற கூலியாள் வேலையை தான் திருமுருகன் காந்தி செய்து வருகிறார்‌. அவர் யாருக்கும் நேர்மையாக இருந்த மனிதர் அல்ல. அவரோடு மே 17-ல் உழைத்த உமர், சரவணன் தங்கப்பா உள்ளிட்ட பல தோழர்கள் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்கும் திருமுருகன் பதில் அளித்தவர் அல்ல.திராவிட பிழைப்புத் தனத்திற்கு எதிராக தமிழ்த் தேசிய பரப்பு விரிவடைவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திராவிடத் தலைவர்களால் வளமூட்டி வளர்க்கப்பட்டவர் திருமுருகன்.திருமுருகன் யார் என்பதற்கு மிகப்பெரிய ஆவணம் உமர் எழுதிய நான் ஏன் மே 17 இருந்து விலகினேன் என்கிற பல பக்க கட்டுரை. தொடக்கத்தில் மே 17 இயக்கத்தில் உணர்வோடு இயங்கிய பலரும் திருமுருகனின் சுயநல போக்கினை, பிழைப்புவாத திராவிட ஆதரவு நிலையை கண்டு மனம் வெறுத்து அவரிடம் இருந்து விலகி விட்ட நிலையில், கையறு நிலையில் இப்போது வெறி கொண்டு அண்ணன் சீமான் மீதும், நாம் தமிழர் கட்சி மீதும் பாய்ந்திருக்கிறார். தன் மேடையில் அண்ணன் சீமானைப் பற்றி, நாம் தமிழர் கட்சியை பற்றி அவதூறாக மதிப்பு குறைவாக முகவரி அற்றவர்களை எல்லாம் ஒன்றாக திரட்டி ஒருமையில் ஏசி பேச வைத்து தன் தோல்வி காயங்களின் மீது மருந்து போட முயன்றிருக்கிறார் திருமுருகன். உண்மையில் அது அவரது மன நோய் சம்பந்தப்பட்டது.

இது போன்ற பல திருமுருகன் காந்திகள் பலரால் தயாரிக்கப்பட்டு எழுந்து வருகிற தமிழ்த் தேசியம் என்கின்ற வலிமையான தத்துவ உருவாக்கத்தின் மீது ஏவப்படுவார்கள். அவர்களையெல்லாம் போகிற போக்கில் இடது கையால் ignore செய்துவிட்டு மண்ணின் மைந்தர்களுக்கான பூர்வ குடிகளின் தத்துவ முழக்கம் வெற்றி பெற்றே தீரும்.

நமக்கு ஒரே ஒரு அச்சம் மட்டுமே இவ்வேளையில் இருக்கிறது. யாருக்கும் , எதற்கும் உபயோகமில்லாத திருமுருகன் போன்ற அடுத்தவர் அறிவை திருடி பிழைக்கின்ற அடிவருடிகளை நாம் எழுதி, பேசி பெரிய ஆட்களாக மாற்றி விடக் கூடாது என்பது மட்டும்தான்.

திருச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய மாவீரர் நாள் மாநாட்டில்

அண்ணன் சீமான் அறிவித்தது போல.. இத்துப்போனவைகளைப் பற்றி, நிறம் இழந்து உதிர்ந்தவர்களை பற்றி பேசுவதும் எழுதுவதும் வீணானது.

நாம் நம்மைப் பற்றி பேசுவோம்.

நம் வெற்றியை உலகத்திற்கு உரக்கச் சொல்வோம்.

அந்தக் கம்பீரத்தில் திருமுருகன் காந்தி போன்ற சில்லறைகள்

காணாமல் போவார்கள்.

நம் தேசியத் தலைவர் அவர்களை தீவிரமாக எதிர்க்கின்ற திமுகவினரை அவர்களது விமர்சனங்களை நாம் அறிவோம். கருணாநிதிக்காகவே அவர்கள் கனவு கண்ட “தமிழினத் தலைவர்” என்கின்ற லட்சியப் பட்டத்தை உச்சபட்ச தன் தியாகத்தால் அடைந்த அந்த அதிமனிதன் மீது திமுகவின் பாமரத் தொண்டன் என்கின்ற முறையில் அவர்களுக்கு இருக்கின்ற வெறுப்பு/பொறாமை /வயிற்றெரிச்சல் இன்னும் பல.

ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி தேசியத் தலைவர் அவர்களை பெரியாரோடு வைக்கிறேன் அம்பேத்கரோடு பொருத்துகிறேன் என்றெல்லாம் மாய்மாலம் பேசும் வேடதாரிகள் தான் அபாயகரமானவர்கள். அம்பேத்கர் அவர்களையும் பெரியார் அவர்களையும் கூட ஒரே தட்டில் பொருத்துவது என்பது ஏற்கத்தக்கதல்ல. அண்ணல் அம்பேத்கர் அனைத்தையும் தான் கண்டடைந்த பேரறிவு மூலம் உணர்ந்து தெளிந்து அறிவித்தவர். பெரியார் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் எடுத்தவர். இருவருமே வெவ்வேறானவர்கள். இதன் நடுவில் தேசிய தலைவரைப் பொருத்துகிறேன் என்ற திருமுருகன் காந்தி போன்றோரின் நாடகம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமானப்படுத்தக் கூடியது.

ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக படைக்கட்டி போராடிய தலைவரை முற்றிலுமாக வேறு காலத்தில் வாழ்ந்த தலைவர்களோடு ஒப்பிடுவது என்பது ஒப்பிட்டு குறைபாடு மட்டுமல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆயுத வழி போரின் மூலம் சோசலிச குடியரசு நாட்டை கட்டி எழுப்ப களத்தில் நின்ற தேசிய இனத்தின் விடுதலை குறியீடு தலைவர் அவர்கள் தன் போராட்டத்தின் ஊடாக பெண்ணுரிமை சாதிய மறுப்பு மொழிப்பற்று சூழலியல் பாதுகாப்பு உள்ளிட்ட இலட்சிய கோட்பாடுகளை வென்றெடுத்தவர். தன்னை திராவிடர் என்றோ பெரியாரியவாதி என்றோ எங்கும் சொல்லிக் கொள்ளாத தலைவர் அவர்களை அவரவருக்கு விருப்பமான தத்துவ அடுக்குகளில் பொருத்துவது என்பது அப்பட்டமான சுயநலத்தனம்.

இந்த விஷயத்தில் இடதுசாரிகள் சற்றே தெளிவானவர்கள். பெரியாரையும், காரல் மார்க்ஸையும் ஒரே தட்டில் அவர்கள் வைக்க மாட்டார்கள்.

ஆனால் திராவிட திரிபுவாதிகள் பிழைப்புக்காக

எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்து கல்லா கட்ட முயற்சிப்பார்கள். அந்த முயற்சிகளுக்கெல்லாம் கல்லறை கட்டுவது தான் நமது வேலை.