சமூக வலைதளங்களிலும், அரசியல் பரப்புகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்பற்ற இரண்டை ஒப்பிட்டு விவாதப் பரப்பு ஏற்படுத்துவது இப்போதெல்லாம் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த வகையில் இப்போது
இதுவும் ஒன்று.

விஜய்யின் வருகையால் நாம் தமிழருக்கு பாதிப்பா..???

முதலில் நாம் தமிழர் அரசியலையும், நடிகர் விஜய் அரசியல் வருகையையும் ஒப்பீடு செய்யப்படுவது அர்த்தமற்றது.

2009 ல் நடந்த இனத்தின் அழிவு தாங்காமல், தொடர்ச்சியான நம் இனம் அடைந்து வருகிற இழிவு பொறுக்காமல், கொதிப்படைந்த இளைஞர் கூட்டம் நாம் தமிழரை உருவாக்கியது.

வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, மெய்யியல், சூழலியல், என பல்துறை சார்ந்த இனத்தின் எழுச்சி நாம் தமிழர் வருகைக்குப் பின்னால் இந்த மண்ணில் நிகழ்ந்தது. அதுவரை பேசப்படாத பொருட்கள் பல பேசு பொருளாக மாறியது. இந்த 13 ஆண்டுகளில் நாம் தமிழர் நம் மண்ணில் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. இதற்குப் பின்னால் உறக்கத்தை தொலைத்து உழைப்பை மட்டுமே கொண்டு தனது குரலால் வீதிக்கு வீதி கொள்கை முழக்கம் செய்து கொண்டிருக்கின்ற அதிமனிதன் அண்ணன் சீமானும், அவர் பின்னால் சாதி மத வேற்றுமைகளுக்கு எதிராக தமிழர் ஓர்மை அடைந்து , திரண்ட தன்னிகரற்ற தம்பி, தங்கைகளின் தமிழ்த்தேசிய பற்றுறுதி போன்ற கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மிக உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன.

தோன்றும்போதே வெடித்து கிளம்பியது போன்ற வரலாற்று பெருவெடிப்பு நாம் தமிழர் கட்சிக்கு நிகழ்ந்தது. ஒரு பக்கம் ஊடகப் புறக்கணிப்புகள் மறுபக்கம் அரசு அதிகாரத்தின் தடைகள் மற்றும் வழக்குகள் இதற்கெல்லாம் முகம் கொடுத்து அண்ணன் சீமான் தலைமையில் எளிய இளைஞர்கள் திராவிட/தேசிய அரசியலுக்கு மாற்றாக புதிதான தமிழ் தேசிய அரசியல் உருவாக்கியது இந்த மண்ணில் நிகழ்ந்துவிட்ட புரட்சி. குறிப்பாக படித்த இளைஞர்கள் /இளம் பெண்கள் அறிவாயுதம் ஏந்தி வீதிகளில் திரண்டது தமிழக அரசியல் பரப்பில் இதுவரை பாராதது.

நடிகர் ரஜினிக்கு வந்தால் உங்களுக்கு பாதிப்பா என்று அன்று கேட்டார்கள். இன்று நடிகர் விஜய் வந்தால் உங்களுக்கு பாதிப்பா என்று கேட்கிறார்கள். யார் வந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை. ஏனெனில் எங்களது இலக்கும், பயணத்தின் பாதையும் தியாகமும், தீரமும் மிக்க எங்களது இன முன்னோர்களால், மாவீர தெய்வங்களால் வடிவமைக்கப்பட்டது. தமிழர் நிலத்தில் தமிழர் ஆட்சி. தூய தமிழ் மொழி வழியில் தமிழ் வீதிகள். தமிழர் நிலத்தில் தமிழுருக்கே முதல் உரிமை. எங்கிருந்தோ வந்தவர்கள் இங்கே நலத்துடன் வாழ, இங்கிருந்தவர்கள் வரலாற்றின் வீதியில் எங்கோ தொலைய என்கின்ற திராவிடப் போக்கு தொலைந்து தீந்தமிழர் ஆட்சியில் எல்லா உயிருக்குமான நலம். கல்வி அறிவியல், சூழலியல், கனிம வள பாதுகாப்பு, நீர்நிலைகள் மீட்டெடுப்பு, ஊழலற்ற ஆட்சி முறை , தற்சார்பு தாய்மைப் பொருளாதாரம் என ஒரு லட்சம் கனவுகளை உள்ளுக்குள் தேக்கி அதிகாரத்தை நோக்கி நாங்கள் அடி எடுத்து வைக்கும் பயணம் மற்றவர்கள் போல் அல்ல.

ஒரு தேசத்தை புதிதாக கட்டுமானம் செய்ய முயல்கிற புரட்சியின் பொறியாளர்கள் நாங்கள். திரைத் துறையை சேர்ந்த அண்ணன் சீமான் அவர்களை நாங்கள் திரை வசீகரத்தில் தேடிக் கண்டடைந்தவர்கள் அல்ல. இன அழிவின்போது சகிக்காமல் பெருங்குரலெடுத்து அழுது துடித்த எங்கள் குருதி தேய்ந்த ஆன்மாவின் மனித வடிவம் அவர். அடக்க முடியாத எங்களது கோபத்தை அவர் மேடையிலே வெளிப்படுத்திய போது ஒத்த உள்ள அலைவரிசைகள் ஒன்றாய் இணைந்து ஒரு புரட்சிகர பயணத்திற்கு எங்களை அணியமாக்கியது.

தமிழினத்தில் பிறந்த புகழ்பெற்ற திரைக்கலைஞன் என்கின்ற முறையில் நடிகர் விஜய் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும், பேரன்பும் என்றும் உண்டு.

மற்றபடி வருங்காலத்தில் அவர் முன் வைக்க இருக்கிற அரசியல் அவர் யார் என்று காலத்தின் வீதியில் கணக்கிட்டு காட்டும். அதன் பொருட்டு எம் ஆதரவும்/ எதிர்ப்பும் அமையும்.

அவர் மட்டுமல்ல, இன்னும் திரைத்துறையில் இருந்து யார் வந்தாலும் எங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. எங்கள் முன் திரள்பவர்கள் நிச்சயமாக இன்னொருவர் பின்னால் நிற்க கூட முடியாது. விசித்திரமான இந்த நிலை நாங்கள் முன்வைக்கின்ற லட்சியங்கள் கொண்டிருக்கிற தனித்த வசீகரம். மாய ஈர்ப்பு.

இந்த நிலமும் இந்த அதிகாரமும் எங்களுக்கு தேவைப்படுகின்றன.

இந்த நிலத்திற்கும், இந்த மக்களுக்கும் நாங்கள் என்றும் தேவைப்படுகிறோம்.

இந்த நிலை மற்ற எவருக்கும் இல்லை எனும் போது மற்றவர் வருகை குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

தனித்துவமான எங்களது லட்சியப் பயணம், எங்களது அண்ணன் சீமான் தலைமையில் அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும். பயணம் நகர, நகர.. பாதை விரிய, விரிய உலகின் மூத்த தமிழ்க் குடி அடிமை விலங்கொடித்து உரிமைகளோடு சிறக்கும்.

நாம் தமிழர்.

🟥