என்னுடைய பள்ளிப் பருவத்து நண்பர்களில் ஒருவனான சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்னை தொடர்பு கொண்ட போது அவனது குரல் உடைந்து இருந்தது. “என்னடா என்ன பிரச்சனை..?” என்று கேட்டபோது “அப்பா வந்திருக்கிறார்டா. ” என உடைந்து சொன்னான். எனக்கு ஒரே ஆச்சரியம். சிறுவயதிலேயே அவனது அப்பா அவனையும் அவனது அம்மாவையும் கைவிட்டு விட்டு துறவறம் மேற்கொண்டு காசிக்கு போய் விட்டதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவனது அம்மா தான் அவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் பணிபுரிந்து வருகிறான். அவனது அம்மா சில வருடங்களுக்கு முன்பாக மரணம் அடைந்திருந்த போது அஞ்சலி செலுத்த நானும் சென்றிருந்தேன். அந்த சாவுக்கு கூட அவனது அப்பா வரவில்லை. தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொன்னான். பிறகு சென்னைக்கு குடிமாறி சென்று விட்ட அவனை காணாமல் போன அவனது அப்பா எப்படி தேடி கண்டுபிடித்தார் என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம். சேகர் அவனது பெரிய அப்பாவோடு தொடர்பில் இருந்தான். சொந்த ஊரில் இருக்கும் தன் அண்ணனை கண்டுபிடித்த சேகரின் அப்பா, சேகரின் முகவரி வாங்கிக்கொண்டு சென்னைக்கு வந்து விட்டார். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் வாழ்க்கையில் இல்லாத ஒருவர் திடீரென வயதான தோற்றத்தில் தன் முன்னால் நான் தான் உன்னுடைய அப்பா என்று சொல்லிக் கொண்டு அமர்ந்திருக்கும் விசித்திரம் ஏன் தன் வாழ்வில் நடக்கிறது என அவன் என்னிடம் கேட்டபோது என்னிடத்தில் பதில் இல்லை. “சரி..இப்போ என்ன பிரச்சனை ?” என நான் கேட்டதற்கு சேகர் “டேய் !அவர் என்னோடு நிரந்தரமாக தங்குவதற்காக வந்திருக்கிறார். அதற்கான வசதிகளோ இவரை கவனித்துக் கொள்வதற்கான நேரமும் எனக்கு இல்லை. எனவே உனக்குத் தெரிந்த ஏதாவது முதியோர் இல்லம் இருந்தால் சொல் . சேர்த்துவிடலாம்..” என பேசிக் கொண்டிருந்தான்.” சரி. அவர் அங்கே இருக்கட்டும். சென்னையில் இருக்கும் எனக்கு தெரிந்தவரிடம் சொல்லி ஏதாவது முதியோர் இல்லம் பார்க்க சொல்கிறேன்..” எனச் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தேன்.

எனக்கு இருந்த வேலையில் அதை மறந்தே போனேன். சில நாட்கள் கழித்து சேகர் அழைத்தான். அவன் அப்பாவோடு காசியில் இருப்பதாக சொன்னான். சில நாள் பயணமாக காசி வந்திருக்கும் அவர்கள் பனி லிங்கம் தரிசிப்பதற்காக இமயமலை செல்ல இருப்பதாகவும் கூறினான். அவன் திட்டமிட்டது போல அவன் அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடியாமல்.. அவனுடைய அப்பா அழைக்க காசிக்கு அவன் போயிருப்பதாக சொன்னான். சில வருடங்கள் கழித்து அவனை சந்தித்தபோது உலகப் பயணம் ஒன்றுக்காக தயாராகிக் கொண்டிருப்பதாகவும், அப்பா காசியில் தற்போது இருப்பதாகவும் அடிக்கடி சென்று பார்ப்பதாகவும் அவன் கூறிய போது நான் முன்னர் சந்தித்த சேகர் இவன் இல்லை என புரிந்து கொண்டேன். அவன் அப்பா அவனுக்கு பயணத்தைப் பழக்கப்படுத்தி விட்டார். பயணத்தின் சுவை அறிந்த அவன் இப்போது ஊர் சுற்ற கிளம்பி இருக்கிறான். அவனை சந்தித்த அந்த இரவில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது அப்பாவை தான் தவறாக புரிந்து கொண்டு விட்டதாகவும் , அவர் சிறகு உள்ள மனிதன் எனவும், அவரால் பறக்காமல் இருக்க முடியாது எனவும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். நான் சற்று கோபமாகி “அப்படி என்றால் உன் அம்மா பட்ட கஷ்டங்கள் எல்லாம்.. ” “என் அம்மாவிற்கு சிறகு இல்லை. சிறகை வெட்டும் கத்தரியாக நானும் அவளது சூழல்களும் இருந்தோம். கூட்டிலேயே வாழ்ந்து விட்டாள். நீயும் பயணப்படு. நீண்ட நாட்களாக தனக்கு இருந்த மன அழுத்தம் தற்போது இல்லை எனவும், ஏதாவது நோய் இருந்தால் ஊர் சுற்ற கிளம்பு .. புதிய மனிதர்களின் முகங்களை பார். புதிய இடங்களை பார். உலகம் எவ்வளவு பெரிது என உனக்குத் தெரியவரும். பிறகு அனைத்தும் சரியாகிவிடும் ..” என என்னிடம் சொல்லிவிட்டு போன போது என்னால் அவன் சொன்ன விளக்கத்தோடு ஒத்துப் போக முடியவில்லை. நான் சற்றே கடுப்பாகி..அவன் காலில் ஏதேனும் சிறகுகள் இருக்கிறதா என பார்த்தேன் .

……

இந்த மாத காலச்சுவடு இதழில் பிரேசில் நாட்டு இயக்குனர் வால்டர் செலஸ் பற்றி “கடந்த காலத்தின் அட்டூழியம் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு” என்ற தலைப்பில் ரதன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை வால்டர் இயக்கிய ஐ அம் ஸ்டில் ஹியர் என்கிற 2024 ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படத்தைப் பற்றியது. அதே கட்டுரையில் வால்டரின் புகழ்பெற்ற திரைப்படங்களான சென்ட்ரல் ஸ்டேஷன் மற்றும் மோட்டார் சைக்கிள் டைரிஸ் ஆகியவற்றைப் பற்றி குறித்தும் ரதன் எழுதியிருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே முக்கியமானவை.

சேகுவேராவின் இளம் வயது பயணங்களை முன்வைத்து அவர் இயக்கிய மோட்டார் சைக்கிள் டைரிஸ் (2004) எப்போது பார்த்தாலும் மனதை மிகவும் கவரக்கூடியது. சேகுவேரா அவரது வாழ்வில் அசலாக அவர் எந்தெந்த இடங்களுக்கு பயணம் மேற்கொண்டாரோ அதே இடங்களுக்கு சென்று படப்பிடிப்பை வால்டர் மேற்கொண்டு இருக்கிறார். எப்போதாவது தோன்றுகின்ற தன்னலமற்ற ஒரு புரட்சியாளன் எப்படி உருவானான் என்பதற்கு அந்த திரைப்படம் மாபெரும் சாட்சியாக விளங்குகிறது. என்றெல்லாம் எனக்கு மனச்சோர்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நான் ஒரு முறை “மோட்டர் சைக்கிளில் டைரிஸ்” பார்த்து விடுவேன். படம் முடிந்த பிறகு நான் தேடி வந்த புன்னகை என் முகத்தில் மலர்ந்திருக்கும். மோட்டார் சைக்கிள் டைரிஸ் 1952 ஆம் ஆண்டு சேகுவாராவும் அவரது நண்பர் கிரானடோவும் லத்தீன் அமெரிக்க நாடுகளை சுற்றிப் பார்க்க கிளம்பிய ஒரு பயணத்தைப் பற்றிய திரைப்படம். இந்தப் பயணம் நடக்கும் போது சேகுவேரா ஒரு கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்காத ஒரு மருத்துவ மாணவன். அவரது நண்பர் கிரானடோ 30 வயதை தொடப்போகும் நடுத்தர வயதுக்காரர். அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இருந்து தொடங்கும் அவர்களது பயணம் ஏறக்குறைய 14 ஆயிரம் கிலோ மீட்டர்களை தாண்டி வெனிசிலாவில் முடிவதற்கான திட்டத்தோடு கிளம்பும் அவர்கள் நடுவில் பல்வேறு இடர்பாடுகளை தாண்டி பல மனிதர்களை சந்தித்து சேகுவேரா என்ற இளைஞன் எப்படி சமூக விழிப்புணர்வு அடைந்தான் என்பதை நுட்பமான காட்சிகளில் விவரிக்கின்ற இந்த திரைப்படம் மிக அற்புதமான ஒன்று.

அதேபோல் சென்ட்ரல் ஸ்டேஷன். 1998 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வாழ்வில் சகல விதமான ஏமாற்றங்களையும் சந்தித்து சோர்வடைந்து இருக்கிற வேலையில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு முதிய பெண்ணிற்கும், ஒரு சிறுவனுக்கும் நிலவுகிற உறவைப் பற்றியது. தாயோடு தன் தந்தையை பார்க்க ரயில்வே ஸ்டேஷன் வருகிற சிறுவன் ஒரு விபத்தில் தாயை இழக்க அந்த சிறுவனோடு அவனது தந்தையை தேடி அந்த முதிய பெண்மணி மேற்கொள்கிற பயணமே சென்ட்ரல் ஸ்டேஷன்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே பயணத்தை அடிப்படையாகக் கொண்டவை. பயணத்தின் போது ஏற்படுகிற அனுபவங்களை திரைப்படங்களாக எடுக்கும் போக்கினை உருவாக்கிய இந்த இரண்டு திரைப்படங்களும் எப்போது பார்த்தாலும் நம் மனதுக்குள் ஓராயிரம் திறப்புகளை திறக்கக் கூடியவை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த திரைப்படங்களை மீண்டும் பார்த்த போது இப்போதுதான் புதிதாக பார்ப்பது போல தோற்றமளித்தது அந்தப் படங்கள் கொண்டிருக்கிற, எல்லா காலத்திற்கும் பொருந்துகிற செவ்வியல் தன்மை.

..

தன் அப்பாவின் மீது வெறுப்பை தன் வாழ்நாள் முழுக்க சுமந்து இருந்த சேகர் அப்பாவை போலவே பயணத்தை ஒரு பானமாக மாற்றி தனக்குள் பருகிப் பருகி ஒரு பயணக் குருவியாக மாறி இருக்கிறான். கொந்தளித்துக் கொண்டிருந்த அவனது ஆன்மா இறுதியாக பயணங்கள் மூலமாக அமைதியாக மாறி இருக்கிறது. பயணம் அவனுக்குள் கனிவை கருணையை சமாதானத்தை மன்னிப்பை இன்னும் பலவற்றையும் தந்திருக்கிறது. இவற்றை தானே நாம் எதிர்ப்படும் எல்லாவற்றிலும் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்..??

♥️