❤️

நேற்று மாலை என்னுடைய‌ மகன்களோடு 2020 க்கு பிறகான திரைப்படங்களில் சமீபத்திய மிகச்சிறந்த இசைப் பாடல்கள் எவை எவை என பேசிக் கொண்டிருந்தோம். ஒரு பிளே லிஸ்ட்டையும் தயார் செய்தோம். 20 பாடல்களுக்கு மேலாக எனது மகன்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். சில பாடல்களை சேர்த்துக் கொள்ளலாம் என காம்ப்ரமைஸோடு சொன்னார்கள். இந்த சில பாடல்களில் தமிழ் வரிகள் நன்றாக இருக்கும் என்றார்கள். முடிவில் ஒரு ஐந்து வருடங்களில் 25 பாடல்களுக்கு மேலாக சிறந்த பாடல்களின் பட்டியலை மேலாக தயாரிக்க முடியவில்லை.

அப்படியே அவர்கள் கைப்பிடித்து எங்களின் 80களின் நினைவு வீதிக்கு அழைத்துச் சென்றேன்.

அந்த வீதியில் ஒரே ஒருவரின் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் வானொலிகளில் இசைத்தட்டுக்களில் கேசட்டுகளில் ஒவ்வொரு வீடுகளில் சாலை ஓரக் கடைகளில் சலூன்களில் மக்கள் உழைத்துக் கொண்டிருக்கும் இடங்களில் சடங்கு கல்யாணம் கருமாதிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அந்த பிரம்மாண்டத்தின் பெயர் இளையராஜா.

இளையராஜாவுக்கான பிளே லிஸ்ட் என யாராலும் ஒட்டுமொத்தமாக தயாரித்து விட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இளையராஜா. எங்கள் தலைமுறையின் ஒவ்வொருவரின் ஒவ்வொரு உணர்வின் ஒத்திசைவிற்கும் இளையராஜா இசையமைத்திருந்தார். பல்லாயிரக்கணக்கான பாடல்களின் மடியில் கதகதப்பாக நாங்கள் சுருண்டுப் படுத்திருந்தோம். ஒரு பாடல் கேட்டு மயங்கி கிறங்கி தவித்துக் கொண்டிருக்கையில், பக்கத்திலேயே அடுத்த பாடல் குதித்து விடும். அந்தப் பாடலைக் கேட்டு ஆகா ஓகோ என கண்கள் சொருக.. ஏகாந்தித்துக் கொண்டிருக்கிற வேளையில்.. இன்னொரு பாடல் எங்கிருந்தோ வந்துவிடும்.. திகட்ட திகட்ட அமிர்தம் குடித்த நாட்கள் அவை.

இப்போதெல்லாம் வருகிற பாடல்கள் குறித்து பெரும்பாலும் இளையராஜாவின் ரசிகர்களுக்கு எந்த கருத்தும் இல்லை. ஒரு இசையமைப்பாளரின் எப்போதோ அபூர்வமாக வருகிற ஒரே ஒரு பாடலுக்காக நாம் பல பக்கங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இளையராஜாவின் பல்லாயிரக்கணக்கான பாடல்களில் உள்ள சிறந்த அம்சங்களை எழுதுவதற்கு‌ நமக்கு காகிதங்களில், கணினித் திரைகளில், அலைபேசி ஒளிர்வுகளில் பக்கங்கள் இல்லை.

வாழ்வின் ஓட்டத்தில் எப்படியோ கேட்டுவிடும் அந்தப் பெருமகனின் ஒரு இசைத் துளியில்.. உள்ளுக்குள் இருந்து கசிகிற விழியோர கண்ணீரில், ரகசியப் புன்னகையில், சின்ன ஒரு வலியில், இன்னும் ஏகப்பட்ட உணர்வுகளில் அவரின் பாடலுக்கான பாராட்டு உரை எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அவருக்கென எவ்வளவு பாராட்டு விழா நடத்தினாலும் அது போதுமானதாக இல்லை என்கிற குறை பலருக்கும் இருக்கிறது.

இளையராஜா என்ற தனி மனிதன் எங்கள் தலைமுறைக்கு வழங்கிய கடனை, கொடையை, அருளை எதைக் கொண்டு ஈடு செய்து விட முடியும்…??

அவரைப் பார்க்கும்போதும், கேட்கும்போதும் அடைகிற சிலிர்ப்பும், தொண்டை அடைக்கும் விம்மலும், உணர்ந்தே இருக்கின்றன.

ஒரு தலைமுறையின் யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாத அவரவர் ரகசிய வாழ்வின் பொன் ஒளி வீசும் பக்கங்களுக்கு. பால்ய காலத்து எழில் பூசி உலவும் புன்னகை நாட்களுக்கு. இளமையின் துடிப்பேறிய காதலின் பூத்தலுக்கு. எங்கே துளிர்க்கிறது எனத் தெரியாமல் அரும்பரும்பாய் மலர்ந்து கிளர்ந்த காமத்தின் வாசனைக்கு, பிரிவின் துயருக்கு, அவமானத்தின் காயத்திற்கு, முகத்தில் அறையப்பட்ட புறக்கணிப்பிற்கு, தனிமையின் சிலுவை ஆணிகளுக்கு , தாய் அன்பிற்கு, பசி இரவுகளுக்கு, வேலையற்ற பகல் பொழுதுகளுக்கு, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. அவை அனைத்திற்கும்..

இசை இளையராஜா.

❤️

இனிய பிறந்தநாளில் இதயம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

நீடு வாழ்க.!

❤️