❤️

மனித வாழ்வின் ஓட்டத்தில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ, செய்த பாவங்களை தொண்டைக்குழிக்குள் உறுத்தும் முள்ளாக சுமந்தலையும் விழிகள் தனித்து தெரிபவை. மன்னிப்பை தேடி அலையும் அந்த ஈரமுள்ள ஆன்மாக்களின் கடைசிப் புகலிடம் கடவுள்.

” கடவுள் மிக மன்னிப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கிறான்” என்கிற வரிகள் கடவுளின் மொழியாக புனித நூல் குர்ஆன் கூறுகிறது. கடவுளின் மைந்தனாக தோன்றிய இயேசு பிரானும் ” அவர்கள் என்ன பாவம் செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்கிறார்கள். என் பிதாவே! அவர்களை மன்னித்து விடுங்கள்..” என்று கேட்டார் என புனித பைபிள் கூறுகிறது.

ஏறக்குறைய எல்லா அற நூல்களும் மன்னிப்பின் புனிதத்தை சதா போதித்துக் கொண்டே இருக்கின்றன.

நம் தலைமுறையின் மகத்தான கவிஞன் முத்துக்குமார் தனது கடைசி திரைப்படமான “தரமணி” யில் ஒரு மன்னிப்புப் பாடல் ஒன்றை மனமுருக எழுதியிருப்பார்.

“என்னை மன்னிப்பாயா

யா அல்லா ஓ

நஞ்சினைப்போல

நெஞ்சுக்குள் இருக்கும்

குற்றம் கொல்கிறதே

என் தொண்டைக்குழியில்

உறுத்தும் முள்

ஏதோ சொல்கிறதே

நீ இருக்கும் இடந்தான்

எது அல்லா

அது மன்னிக்கும் மனமே

யா அல்லா..”

மன்னிக்கும் மனதை கடவுளின் இருப்பிடமாக முத்துக்குமார் எழுதியிருப்பார்.

இறுதியாக எல்லா காயங்களையும் பாவங்களையும் தூக்கிக் கொண்டு கடவுளின் முன்னால் சரண் அடைந்திருக்கிற ஒரு ஆன்மாவின் அழுகையாக அந்தப் பாடல் இப்படி நீளும்.

“காயங்களை கட்டிக்கொண்டு

உன்னிடம் வந்துவிட்டேன்

என் பாவம் யாவும் தூயவனே

என்றோ மறந்துவிட்டேன்

லாயில்லாஹாயில்லல்லா

லாயில்லாஹாயில்லல்லா

முகம்மது ரசூலல்லா”

உண்மையில் “மன்னிப்பு என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நிம்மதி” என்கிறார் கவியரசர் கண்ணதாசன். “மன்னித்துவிடு. கொந்தளித்துக் கொண்டிருக்கும் உன் மனது அமைதியாகி விடும்” என்று சொல்லும்

அவரது வரிகள் மிக ஆழமானவை.

மன்னிப்பை மிக அதிகமாக பேசும் புனித பைபிளில் சில வாசகங்கள் நம்மை அதிரச் செய்கின்றன.

” பிரியமானவர்களே..! பழிவாங்குதல் எனக்குரியது.நானே பதிற் ( பதில்) செய்வேன்.”

-ரோமர் 12:19

மனிதனுக்கு மன்னிப்பைப் போதிக்கின்ற கடவுள் பழிவாங்குதலை தனக்குரியதாக மாற்றுகிறான். புனிதக் குர்ஆனிலும் ” கடவுள் கண்காணிப்பதிலும், கணக்குத் தீர்ப்பதிலும் விரைவானவன். ” என்ற வரிகள் உண்டு.

“பழிவாங்குதல் ஒரு பரிசுத்த உணர்வு” என்கிறது மகாபாரதம்.

….

என்னுடைய பதின் வயதுகளில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டங்களுக்கு நான் அடிக்கடி சென்றபோது பழக்கமான

மத ஊழியர் சகாயம். எப்போதும் பைபிளின் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு ஜெபமாலைகளின் மணிகளை உருட்டிக் கொண்டே இருக்கும் அவரை பைபிள் இல்லாமல் பார்க்க முடியாது. எல்லோரிடமும் அதிகம் பேசாத, அதே சமயத்தில் ஊழியக் கூட்டத்திற்கான எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கின்ற அவரிடம் வெறுப்புற்றவர் என்று யாருமில்லை.‌ அவருக்கென்று யாரும் கிடையாது என்றும், இளம் வயதில் திருமணம் செய்த மனைவி இரண்டு வாரங்களில் யாரோ ஒருவரோடு ஓடி விட்டதாகவும், இதே ஊரில் அந்தப் பெண்ணும் குடும்பம் சகிதமாக இருப்பதாகவும், இவர் யாரிடமும் பேசாமல் எப்போதும் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பதாகவும் அவரைப் பற்றி என் நண்பன் சாம் என்னிடம் கூறிய போது, பிறகு இவர் யாருக்காக பிரார்த்திக்கிறார் என எனக்கு தோன்றியது.

ஒருமுறை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சற்று முன்னதாகவே சென்று விட்ட நிலையில், அந்த சிறு அரங்கில் கடவுளின் சிலுவைக்கு முன்னால் சகாயம் மண்டியிட்டு ஜெபமாலை உருட்டிக் கொண்டே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். ஜன்னலின் வழியே மாலை வெயிற்துளி கீற்றுப் போல உள்ளே பாய , அதன் ஒளியில் நின்று, நிழலின் ஆழத்தில் நின்றுக் கொண்டிருக்கும்‌ கடவுளின் சொரூபத்தை நோக்கி‌ மனமுருக பிரார்த்தித்துக் கொண்டிருந்த அவரின் கண்களில் பிரார்த்தனையின் போதே சாரை சாரையாக கண்ணீர் கசிந்து வழிந்துக் கொண்டிருந்தது.

நான் அமைதியாக காத்திருந்தேன். பிரார்த்தனை முடிந்து திரும்பியவர் என்னை பார்த்தவுடன் சற்றே அதிர்ச்சி அடைந்தார். அவரது தனிப்பட்ட பிரார்த்தனையை நான் பார்த்து விட்டதை கண்டு அவர் சற்று கூச்சப்பட்டார். என்னிடம் ஏதும் சொல்லாமல் விலகிப் போன‌ அவரை அதன் பிறகு தனியே எங்கும் பார்க்க முடியவில்லை. எங்களது பள்ளி தலைமையாசிரியர் ஜேம்ஸ் ரெல்டன் ஒருமுறை என்னிடம் தனியே பேசிக் கொண்டிருக்கும்போது சகாயத்தை பற்றி பேச்சு வந்தது.

அவன் யாருக்காக பிரார்த்திக்கிறான் என்று நினைக்கிறாய் என ஜேம்ஸ் சார் கேட்டபோது என்னிடம் எந்த பதிலும் இல்லை. அவன் ஓடிப் போன தன் பொண்டாட்டிக்காக பிராத்தித்து கொண்டிருக்கிறான் என்ற போது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. “மன்னிப்பதன் மூலமாக நிம்மதியை அடைகிறார் போல..” என நான் சொன்ன போது .. இல்லை இல்லை என மறுத்த ஜேம்ஸ் சார் அடுத்தது சொன்னது தான் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

“அந்த மன்னிப்பு அவன் அவளுக்கு கொடுக்கிற தண்டனை..” என்று அவர் சொன்னார். எப்படி என்று புரியாமல் நான் பார்த்தபோது..

” வழக்கமா பாதிக்கப்பட்டவன் சபிப்பான். ஆனா இவனோ யாரால பாதிக்கப்பட்டானோ, அவ நல்லா இருக்கணும்னு பிராத்திக்கிறான். அத, அவன் எழுதி பிரார்த்தனை கூடையில போட்ட பிரார்த்தனை ஓலை மூலமா பாதர் பீட்டருக்கு தெரிஞ்சி, அவர் ஒரு முறை அந்த பொண்ணுகிட்டயே இத பத்தி சொல்ல , அன்னைக்கு இவன் பிரார்த்திக்கிறத, அந்தப் பொண்ணு தூரத்திலிருந்து பாத்துட்டு , கதறி அழுதது இருக்கே.. நினைச்சு பாக்க கூட முடியல” என ஜேம்ஸ் சார் கண்கள் பனிக்க சொன்னது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது.

உண்மையில் சகாயம் மன்னித்தது தான் அந்தப் பெண்ணுக்கு வழங்கிய மாபெரும் தண்டனை என நினைக்கும் போது இன்றும் பயமாக இருக்கிறது .

ஜெயமோகன் எழுதிய “அமுதம்” என்ற நெடுங்கதை ஒன்றைப் படித்தேன். காட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட மாபெரும் தோற்றம் கொண்ட பசு ஊர் முழுக்க அனைவருக்கும் பால் சுரந்து பசியாற்றி ஊரை செழிக்க வைக்க, பால் குடித்த அனைவரும் உடல் பூரித்து வளமான உடல் அடைய, அந்த ஊருக்கே பாலூர் என பெயர் வந்ததாக நீளும் அந்தக் கதையில், இறுதியாக அந்தப் பசுவை துர்சக்தியாக கருதி ஊர் மக்கள் அவமானப்படுத்தி அடித்து துரத்தி காட்டில் வைத்து எரித்துக் கொள்ளும் அந்த சமயத்தில் அந்தப் பசு யாரையும் சபிக்காமல், பால் குடித்த அனைவரும் தனது பிள்ளைகள் எனக் கருதி, அனைவரையும் மன்னித்து, நிதானமாக நின்று அந்த மரணத்தை எதிர்கொள்ளும் காவியத் தருணத்தை ஜெயமோகனின் வரிகளில் படிக்கும் நொடிகளில் மகத்தான சிலிர்ப்பை ஊட்டுபவை.

“கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டவனின்

காலில் வந்து விழுகிறது

கோபுரத்தின் நிழல்.”

– மதிக்குமார் தாயுமானவன்.

கடவுளுக்கே குற்ற உணர்வு கொடுத்த மதிக்குமார் தாயுமானவன் எழுதிய இந்த கவிதைக்கு தலைப்பு

” பாவமன்னிப்பு.”

….

உண்மையில் ‌ வாழ்வின் ரகசிய சூத்திரம் என்னவென்றால்.. மன்னிப்பவர்களோ அல்லது பழி வாங்குபவர்களோ.. யாருமே நிம்மதியாக இல்லை என்பதுதான்.

பழிவாங்குதலை ஒரு தட்டிலும் மன்னிப்பதை இன்னொரு தட்டிலும் ஏந்தி மாயத் தராசு ஒன்று முன்னும், பின்னும் அசைந்தாடும் ஆட்டத்தை தான்

வாழ்வென நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

-மணி செந்தில்.