நேற்று காலை கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய பதிவு ஒன்று என்னை மிகவும் பாதித்தது.

https://www.facebook.com/share/p/1D5A5tTmjP

திமுகவை சேர்ந்த அவரது அரசியல் நிலைப்பாடுகள் எனக்கு முற்றிலும் எதிர்ப்பானவை. அந்த நிலைப்பாடுகளை பொருத்தவரையில் அவர் எனக்கு எதிரி. அவரது கடுமையான ஆவேசமும் படபடப்பும் எனக்கு உவப்பானவை அல்ல. இவரா இது போன்ற கவிதைகளை, படைப்புகளை எழுதுகிறார் என்று நானே வியந்திருக்கிறேன்.

ஆனால் அவரது உடல்நிலை குறித்தும், தன் எண்ணங்களுக்கும் தன் உடல் குறைபாடுகளுக்கும் இடையே நடக்கின்ற போராட்டங்கள் குறித்து அவர் எழுதுகிற பதிவுகளை நான் மிக உன்னிப்பாக வாசிப்பேன். ஏனெனில் அதே அவஸ்தைகளை நானும் அனுபவித்து வருகிற காரணத்தினால் அவை கொஞ்சம் எனக்கு நெருக்கமானவைகளாக இருக்கும். அதேபோல் அபிலாஷ் எழுதிய “கால்கள்” நாவல் தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான பதிவு.

உண்மையில் நடக்க முடியாதவர்களுக்கு மிகப்பெரிய துயரம் அவர்கள் கொண்டிருக்கின்ற முதுகு வலி தான். குனிந்து பிடித்து நடப்பது அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது போன்றவை எல்லாம் அந்த முதுகு வலிக்கு மூலமான காரணங்கள்.முதுகு வலியின் மிகப்பெரிய தந்திரமே உங்களை தூங்க விடாது என்பதுதான். எப்படி புரண்டு படுத்தாலும் முதுகு வலிக்கும். எனவே உங்களால் தூங்க முடியாது. பின்னிரவு ஏறக்குறைய விடியற்காலை மூன்று மணிக்கு முதுகு வலி தாங்க முடியாமல் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஒவ்வொரு நாள் இரவும் ஏற்படும்போதெல்லாம் நான் மனுஷ்ய புத்திரனை பற்றி நினைத்துக்கொள்வேன். என்னை விட மோசமான நிலைமை அவருக்கு. அவர் சக்கர நாற்காலியில் நீண்ட காலமாக பயணித்து வருகிறார். அவருக்கு வருகின்ற பிரச்சனைகளை நானும் எதிர்கொண்டு வருவதால் அவருடைய பதிவுகள் எப்போதுமே எனக்கு ஒரு முன்னறிவிப்புகள் தான். அதற்காக நானும் மனதளவில் தயாராகி விடுவேன்.

இதுபோன்று போலியோவால் பாதிக்கப்படுபவர்கள் இளம் வயதை எளிதாக கடந்து விடுவார்கள். ஆனால் வயதாக வயதாக கீழே விழும் ஆபத்து அதிகரித்துக் கொண்டே போகும். எனவே நடப்பதை பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அதில் மிக முக்கியமான பிரச்சனை என்னவெனில் இதனால் எடை கூட தொடங்கும். எடை கூட கூட முற்றிலுமாக நடை தடைப்படத் தொடங்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சக்கர நாற்காலியை நோக்கி பயணம் தான்.

குவைத் செந்தமிழர் பாசறை பயணத்திற்கு நான் சென்றிருந்தபோது நான் உபயோகிப்பதற்காக உறவுகள் எனக்கு சக்கர நாற்காலி ஒன்று வாங்கி அளித்திருந்தார்கள். உண்மையில் அது எனக்கு பெரும் வசதியாக இருந்தது. கொஞ்சம் முதுகு வலி குறைந்தது போல எனக்கும் தோன்றியது. இதனால் அதை நான் இந்தியாவுக்கும் எடுத்து வந்து விட்டேன். இங்கே வந்தவுடன் என் தம்பி ஆனந்த் ( வழக்கறிஞர் மோ.ஆனந்த் ) அதைக் கோபமாக எடுத்து மேலே கட்டி வைத்து விட்டான். என் அம்மாவும் அதை விரும்பவில்லை.

என்னை மிகவும் விரும்புகிறவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே, எனக்கு இருக்கும் சிக்கல் மற்றும் வலி போன்றவை எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பதுதான். அவர்களிடம் கேட்டால் நான் அவ்வாறு நினைக்கக் கூடாது, நினைக்க உரிமையற்றவன் என்பதுதான் அவர்களின் பதிலாக இருக்கும்.

என் உயிர் அண்ணன் சீமான் என் மீது எந்தவித அனுதாபத்தையும் காட்டாதவர்.எல்லோருக்கும் இணையாக சொல்லப்போனால் இன்னும் சிறப்பாக நான் பணியாற்ற வேண்டும் என்று என்னை வற்புறுத்துபவர். அது என்னால் முடியும் என நம்புபவர்.தாய்மைக்கு நிகரான அந்த கள்ளம் கபடம் அற்ற அந்த உச்ச உணர்விற்காகத்தான் உயிர் உள்ளவரை அவருக்கு நேர்மையாக இருக்கத் துடிக்கிறேன். என் அம்மாவிற்கும் அவருக்கும் ஒரே மாதிரியான மனநிலை. வலிகள், உடல் குறைபாடுகளை எல்லாம் தாண்டி நான் இந்த உலகத்தில் எல்லா சூழ்நிலைகளிலும் போராடி உயர வேண்டும் என்பதில் இருவருமே பிடிவாதமாக இருப்பவர்கள்.

பிறகு , என் ஆருயிர் மைத்துனர் பாக்கியராசன், என் தம்பிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி, செந்தில்நாதன், துருவன், போன்ற என்னை மிக ஆழமாக நேசிப்பவர்களுக்கும் இதே எண்ணம்தான். பெரிய பிரச்சினையே நான் அவர்களோடு அடிக்கடி எல்லா ஊர்களுக்கும் வர வேண்டும் என அவர்கள் நினைப்பதுதான். மிக ஆழமான அந்த அன்பிற்கு என்னிடத்தில் பதில் இல்லை . அவர்கள் மத்தியில் இருக்கும் போது நான் என்னையும் மறந்து என் வலியையும் மறந்து நிற்கிறேன் தான். அந்தப் பேரன்பில் நான் நிம்மதி அடைகிறேன் தான்.ஆனாலும் அவர்கள் உலகத்தில் நான் இருந்தே ஆக வேண்டும். எனக்கும் வருவதற்கு ஆசைதான். ஆனால் நீண்ட தூரம் வாகனத்தில் அமர்ந்து வரும்போது கடுமையான முதுகு வலியில் சிக்குவேன். எங்கேயாவது வெளியூர் சென்று விட்டு வந்தால் அடுத்த மூன்று நாட்கள் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. படுத்தே இருப்பேன். என்னை எப்போதும் பாதுகாப்பாக அழைத்து வரும் ஐயா மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்களுக்கு இந்த பிரச்சனை சற்று புரியும்.‌ அதேபோல் பெரும்பாலும் உடன் இருக்கும் அண்ணன் ஹீமாயூன் அவர்களும் இதைப்பற்றி புரிந்து வைத்திருப்பார்.

அந்த வலி போவதற்கு வலி நிவாரணிகளும் எடுக்க முடியாது. அதிகம் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்தால் சிறுநீரகம் பாதிக்கும் என்ற பயம். எனவே வலியை பொறுத்துக் கொள்ளல் என்பது வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவு கவுனி அரிசி கஞ்சி தான் பெரும்பாலான நாட்களில் எடுத்துக் கொள்கிறேன். மதியம் ஒருவேளை உணவு. இரவு 7 மணிக்குள்ளாக உணவு எனத் திட்டமிட்டாலும் பல நாட்களில் அதைப் பின்பற்ற முடிவதில்லை. சிறிய உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமாக பெரிய பலன்களை எதிர்பார்க்க முடியாது.

இனி இருக்கும் காலங்களில் நலமாக ஒவ்வொரு நொடியையும் வீணாக்கி விடக்கூடாது என அஞ்சுகிறேன். நேற்று காலை நாம் தமிழர் கட்சியின் குடந்தை வேட்பாளர் வழக்கறிஞர் தம்பி ஆனந்த் அழைத்து கும்பகோணம் திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக வைக்கப்பட்டிருக்கின்ற சாய்வுகள் மற்றும் ஏற்பாடுகள் சரிவர இல்லை என சொல்லி எல்லா திரையரங்கு உரிமையாளர்களை சந்தித்து அரசு அலுவலர்களை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக சொன்னார்.

உண்மையில் இது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. எனக்கு திரைப்படங்கள் பார்க்க பேராவல் உண்டு. ஆனால் திரையரங்கில் இருக்கின்ற படிகளை நினைத்து மிகுந்த அச்சப்படுவேன். ஒருமுறை “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்கு சென்னையில் தம்பி சாட்டை துரைமுருகன் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விட்டான். அங்கே போய் பார்த்த பிறகு தான் தெரிந்தது அந்த இருக்கை அந்த திரையரங்கில் உச்சத்தில் படிக்கட்டுகளின் மேலே இருந்தது. ஆனாலும் தம்பியின் பேரன்பு, திரைப்படங்களின் மீது இருக்கின்ற பெரும் காதல் இவையெல்லாம் தூண்டிவிட நானும் அவனை பிடித்துக் கொண்டு படி ஏறி விட்டேன். அன்று இரவு ஊருக்கு திரும்பிய பிறகு கடுமையான முதுகு வலி. அதற்குப் பிறகு கும்பகோணம் இயன்முறை மருத்துவர் தம்பி கார்த்தியிடம் ஒரு வாரம் மருத்துவம் எடுத்துக் கொண்டேன்.

இருப்பதிலேயே மிகப்பெரிய ஆபத்து படிக்கட்டுகள் தான். எல்லா திரையரங்குகளிலும் எல்லா திருமண மண்டபங்களிலும் சாய்வுத்தளம் வைக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது.ஆனால் அரசு விதிகளுக்காக பெயரளவில். வைக்கப்படும் சாய்வுத் தளங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத இடத்தில் வைக்கப்படுகின்றன. இவை பெயரளவில்தான் வைக்கப்படுகின்றன என்பதை கண்காணிப்பதற்கு எந்த அரசு அலுவலரும் இல்லை. கூடுதலாக அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் திருமண மண்டபங்கள் திரையரங்குகளில் பயன்படுத்தப்படும் மார்பிள்ஸ் டைல்ஸ் கிரானைட் போன்ற வழுவழுப்பான தரைதளங்கள். அதில் தங்க நேரிடும் சிறு மண் துகள்கள் கூட உடல் குறைபாடு கொண்டவர்களை வழுக்கி கீழே தள்ளிக் காயம் ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை.

இதில் என்னைப் போன்றவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். பேரன்பு குடும்பம். மிகச்சிறந்த நண்பர்கள். என் தம்பிகள் ஆனந்த் லிங்கதுரை அருண் போன்ற எண்ணற்றத் தம்பிகள் நான் மகிழ்வாக வாழ அவர்கள் தன்னையே அர்ப்பணித்து நிற்கிறார்கள்.
உயிருக்குயிராக நேசிக்கும் நாம் தமிழர் உறவுகள் என எனது குடும்பம் என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

என்னை தீவிரமாக அரசியலாகவோ தனிப்பட்ட முறையிலோ எதிர்க்கும் என் எதிரிகள் கூட என்னை ஆழமாக நேசிப்பவர்கள் தான். ஒருபோதும் என் உடல் குறைபாடுகள் அவர்கள் கண்களுக்கு படாமல் இருப்பது தான் எனக்கு ஆச்சரியம். அவ்வளவு தீவிரமாக எதிர்க்கும் அவர்களின் எதிர்ப்பைக் கூட நான் மிகவும் நேசிப்பது தான் நகை முரண்.

இது போன்ற சூழ்நிலையில் வாழாமல் எந்த ஆதரவும் இல்லாமல் தனித்து துன்பப்படும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் அடைகிற துன்பங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. குறிப்பாக பெண் மாற்றுத்திறனாளிகள் அடைகின்ற துயரங்களைப் பற்றி இதுவரை பெரிதாக பதிவில்லை என்பதே மிகப்பெரிய கொடுமை. மாதவிடாய் காலங்களில் பெண் மாற்றுத்திறனாளிகள் அடைகின்ற வேதனைகள் இதுவரை பேசாப் பொருள்.

அதேபோல மாற்றுத்திறனாளிகள் என்றால் உடல் குறைபாடுகள் கொண்டவர்கள் மட்டுமல்ல. செவித்திறன் சவால் கொண்டவர்கள், விழித்திறன் சவால் கொண்டவர்கள், பேச்சுத்திறன் சவால் கொண்டவர்கள், சிந்திக்கும் திறன் சவால் கொண்டவர்கள் என அது பல்வகை சவால் மனிதர்களை உள்ளடக்கிய சொல்.

எனது குடும்பத்திலேயே ஆட்டிசம் பாதிப்பில் ஒரு குழந்தையை நாங்கள் வைத்திருக்கிறோம். அவனைப் பாதுகாக்க, பராமரிக்க அவன் தாய், அவனது தாத்தா படுகிற பாடு, நான் அடைந்திருப்பதில் மிகப்பெரிய துயரம் அதுதான்.

ஒருமுறை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கம்பீரமாக அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சகோதரி சட்டென நாற்காலியில் இருந்து இறங்கி தவழ்ந்தவாறே கழிவறைக்கு போன காட்சி என்னை நிலைகுலைய வைத்தது. சில நொடிகளில் என்னை நானே தேற்றிக் கொண்டேன். பரவாயில்லை தங்கை அந்த அளவு கடும் உழைப்பினால் உயர்ந்திருக்கிறார் என.

ஆனால் சிறு உதவி, அவர்கள் இந்த உலகை சீராக அணுகுவதற்கான வசதி போன்றவை கூட அரசும் பொதுச் சமூகமும் இவர்களுக்கு செய்யவில்லை என்பது தான் இருப்பதிலேயே மிகப்பெரிய கொடுமை.

இந்த பதிவு கூட யாருடைய அனுதாபத்திற்கும் போடப்படுகின்ற பதிவு அல்ல. ஒரு சரிநிகர் சமுதாயத்தில் வாழ வேண்டும் சுதந்திர மனப்பான்மையோடு எல்லோரும் எல்லோரும் போல தாங்களும் பிறர் துணையின்றி உரிய மதிப்போடு வாழ வேண்டும் என நினைக்கின்ற கோடிக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் சிறிய பக்கத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

இந்த புரிதல் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் அருகில் இருக்கக்கூடிய உடல் குறைபாடு கொண்டவர்களை நேர்மையாக அணுகுவதற்கு உதவக்கூடும். உண்மையில் அவர்களுக்காக பேச யாருமே இல்லை. உலக சுகாதார நிறுவனம் கணக்கின்படி 130 கோடி பேர் உலகில் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதாவது மனித இனத்தில் ஆறு பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு குறைபாட்டுடன் வாழ நேரிடுகிற சூழல் நிலவுகிறது.

எனவே இதைப் பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது.வெளிநாடுகளில் மாற்றுத்திறனாளிகள் மிக இயல்பாக மற்றவர்கள் போல வாழ்வதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு நாடும் எவ்வளவு தாய்மை உள்ளதோடு செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நாம் வாழும் நாட்டின் மீது எதுபோன்ற மதிப்பு ஏற்படும் என்பதை நினைத்துப் பாருங்கள். அங்கே முடியாதவர்களுக்கென தனி நடை பாதைகள். உதவுவதற்கான நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள். தாழ்ந்த தளம் கொண்ட பேருந்துகள். படிக்கட்டுகள் இல்லாத அலுவலகங்கள். கண்ணியமாக நடத்தும் சமூகம், என மாற்றுத்திறனாளிகளுக்கு மேலைநாடுகள் சொர்க்கம் தான். இங்கே எளிதாக வசவு சொற்களில் கூட மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்துகின்ற உடல் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்ற சொற்களை மிக எளிதாக பயன்படுத்தி விடுகிறார்கள். இதுவும் சட்டப்படி குற்றமாக்கப்பட வேண்டும். எப்படி சாதியை சொல்லி சக மனிதனை இழிவாகப் பேசுவது குற்றமோ அதே போலத்தான் உடல் குறைபாடுகளை முன்வைத்து ஒரு மனிதனை வசை பாடுவது. இதற்கான சட்டத்திருத்தமும் இயற்றப்பட வேண்டும் . பொது வழக்கில் மிக எளிதாக பயன்படுத்தப் படும் உடல் குறைபாடுகளை முன்வைக்கிற சொற்கள் முற்றிலுமாக மனிதப் பழக்கத்தில் இருந்து அகல வேண்டுமெனில் உரிய சட்ட திருத்தம் இயற்றப்பட வேண்டும்.

முடிவாக சொல்வது இதுதான்.

.

கண்ணியமாகவும் மதிப்புடனும் ‌உரிமையுடனும் உங்களோடு எல்லா இடங்களுக்கும் வந்து சரிநிகர் சமமாக வலிகள் இல்லாமல் வாழ வேண்டும் என உங்கள் மத்தியில் வாழ்கின்ற சிலர் நினைக்கிறார்கள். அவர்களையும் உள்ளடக்கியதுதான் சமூகம். அவர்களும் மகிழ்வுடன் வாழ இந்த உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் இது போன்ற பதிவுகளின் நோக்கம்.

இது குறித்து இன்னும் விரிவாக போர்த்தொழிலில் பேசியிருக்கிறேன்.
அதற்கான இணைப்பையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

இதில் நான் பேசியுள்ள விவரங்கள் அனைத்தும் முக்கிய விவாதப் பொருளாக மாற வேண்டும் என விரும்புகிறேன். அதன் மூலமாக பல நல்ல மாற்றங்கள் நடக்கக்கூடும்.

அதன் முடிவில் சொன்னது தான் இதன் முடிவிலும்.

அவர்கள் கேட்பது அனுதாபம் அல்ல.உரிமை !!

( நேற்று முழுக்க இது குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் நேற்று டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம். )

♥️

மணி செந்தில்.