❤️

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இயக்குனர் வ. கீரா அவர்கள் எழுதிய குமரி என்ற புதினத்தைப் பற்றி அண்ணன் இயக்குனர் களஞ்சியம் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு, அந்த நூலைப் பற்றி ஆர்வமாக விசாரித்த போது உடனே அண்ணன் களஞ்சியம் அவர்கள் மறுநாளே குமரியை அனுப்பி வைத்துவிட்டார்.

அந்த சமயத்தில் மிக நெருக்கமானவர்களின் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த காரணத்தினால் மனநிலையில் பெரு பாதிப்பு. தொடர்ந்து துயர இருட்டில் தத்தளித்து கொண்டிருந்த போதுதான் அண்ணன் களஞ்சியம் அவர்கள் மீண்டும் தொடர்பு கொண்டு குமரி நூலுக்கான திறனாய்வு அரங்கம் நடக்க இருப்பதாகவும் அதில் நான் பேச வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதனால் தொடர்ந்து சில நாட்கள் குமரியில் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஏறக்குறைய அந்த முதுநிலத்தின் மகனாக மாறிப் போய் உணர்வேறி திரிந்தேன் . உடலில் போர்த்தியிருந்த துயரத்தினை குமரியின் வாசிப்பு மது கொண்டு ஆற்றினேன்.

புத்தகக் கண்காட்சியில் கடந்த 12ஆம் தேதி இரவு தம்பி சாட்டை துரைமுருகனை சந்தித்து இந்த புத்தகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவனும் இதே போன்ற ஒரு மனநிலையில் இருப்பதை அறிந்து வியந்தேன்.

மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில், உணர்வுவயப்பட்ட சூழலில், தமிழ்த் தேசிய நவீன இலக்கியத் தொடக்கத்தை குமரி நிகழ்த்தி விட்டது என்பதை உணர்ந்து மிக்க மகிழ்வோடு ஆற்றிய உரை இது.

தமிழ்த் தேசியர்களின் மீது நவீன தீண்டாமையை கடைபிடித்து வரும் “திராவிட அறிவு ஜீவி குழு கும்பலிடம் ” இருந்து நவீன தமிழ் இலக்கியத்தை மீட்டெடுக்கின்ற அறிவுப் பணி இனி தொடர்ந்து நடக்கும்.

இதில் அண்ணன் இயக்குனர் சோழன் களஞ்சியம் அவர்களுக்கும், படைப்பாளர் எழுத்தாளர் வ.கீரா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. கூடுகை இலக்கிய வட்டத்திற்கும் அதன் உறவுகளுக்கும் மனமார்ந்த பாராட்டு. பேரன்பு.

நேற்றைய தினம் இந்தக் கூட்டம் முடிவடைந்து டிஸ்கவரி புக் பேலஸ் கடைக்கு சென்றிருந்தபோது நண்பர் வேடியப்பன் அவர்களை பார்த்தோம். தொடர்ந்து புத்தகங்களை வைத்து இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதர் மீது அநீதியாக விதிக்கப்பட்ட தடை அம் மனிதனை பெருமளவில் பாதித்திருப்பதை உணர்ந்து மனம் வருந்தினேன்.

தற்போது அண்ணன் களஞ்சியம் அழைத்து புத்தகம் வெளியிட்ட டிஸ்கவரி புத்தக பேலஸ் கடையில் “குமரி” புத்தகங்கள் நேற்றைய கூட்டத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரவேற்பு அடைந்து புதிய உச்சங்களை அடைந்திருப்பதாக தெரிவித்தார்.

இதைவிட என்ன பேறு இருக்கிறது..?? அதையும் தாண்டி இதைவிட என்ன முக்கியமான வேறு வேலை இருக்கிறது..??

மறக்க முடியாத பொன்மாலைப் பொழுதாக நேற்றைய பொழுதை மாற்றிய மாமனிதர்களுக்கு நன்றி..!

❤️

மணி செந்தில்.