
காலையிலிருந்து இந்த புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஷீகான் உசைனி எங்கள் தலைமுறையின் மகத்தான தற்காப்புக் கலை பயிற்சியாளர். தற்காப்புக் கலை, கராத்தே, வில்வித்தை போன்றவை மிகவும் பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களுக்கு மட்டுமே என்கிற நிலையை மாற்றி, பாலின வேறுபாடுகளைத் தகர்த்து அதை வெகுசனப்படுத்திய தற்காப்புக் கலை கலைஞர்களில் உசைனி முக்கியமானவர்.
பத்ரி உள்ளீட்ட சில திரைப்படங்களில் நடித்து, திடீரென சமையற்கலை நிபுணராக தோன்றி வேக வேகமாக சமைத்து, பாத்திரங்களை, கரண்டிகளை தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டமாக அவர் பேசிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 90களில் பிரபலம். சிற்பியாகவும் முத்திரை பதித்தவர்.
என் மகன்கள் இருவரும் அவருடைய பயிற்சி வகுப்பில் இணைந்து இருந்தவர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் “தரப்படுத்துதல்” என்கிற வகுப்பில் ஈடுபட கும்பகோணம் வந்திருந்த போது கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளி வளாகத்தில் அவரை என்னுடைய தம்பியும் அவருடைய தலைசிறந்த மாணவர்களில் ஒருவரான கும்பகோணம் நகரத்தின் மகத்தான கராத்தே மாஸ்டர் “தம்பி வினோத்” அவர்கள் என்னை ‘சீமான் தம்பியாக’ அறிமுகப்படுத்திய போது ” எனது சிறந்த நண்பர் சீமான், அவருடைய தமிழ் உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்” எனச் சொல்லி கை குலுக்கினார். அவரது கரங்களை பற்றி கொடுக்கும் போது இரும்புக்கை மாயாவியின் கரங்களை குலுக்கியது போன்ற ஒரு உணர்வு. அவ்வளவு உறுதி.
திடீரென ஒரு நாள் அவருக்கு அபூர்வமான புற்றுநோய் வந்திருக்கிறது என சொல்லி முகநூலில் வீடியோ போட்ட போது இதையும் அவர் “100 கார்களை கைகளில் ஏற்றுகின்ற சவால்” போல வென்று வந்துவிடுவார் என நான் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தமிழகமே நம்பியது.
ஏனெனில் அவர் அவ்வாறு தான் தன்னைப் பற்றிய தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார். தன்னம்பிக்கையும், எதையும் சாதிக்கும் உறுதியும் கொண்ட அந்த இரும்பு மனிதனுக்கு எதுவும் ஆகாது என்று நாமெல்லாம் நினைத்தது அந்த மனிதன் நமக்குள் தனது அளப்பரிய ஆற்றலால் விதைத்த பொதுப்புத்தி.
ஆனாலும் மரணம் கருணையற்றது தானே.. மரணத்திற்கு எந்த காரணமும் தேவையில்லை. மரணத்திற்கான காரணங்கள் மனிதர்களுக்காக தயாரிக்கப்படுபவை. மரணம் குறித்து சொல்லப்படும் காரணங்கள் மனிதர்களை சமாதானப்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்டவை. அதை உசைனியும் நிரூபித்து விட்டு சென்றிருக்கிறார்.
அவருக்குப் பின்னால் அவரது மாணவர்கள் ஒவ்வொரு ஊரிலும் அவருடைய கலையை, எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்த்து அவரை என்றென்றும் நினைவு கூர வைப்பார்கள்.
எனது உயிருக்கினிய இரண்டு தம்பிகள் மாஸ்டர் வினோத் அவனுடைய மாணவனும், கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் போராளியுமான விக்கி ஆகிய இருவரும் மாஸ்டர் உசைனி கும்பகோணம் நகரத்திற்கு வழங்கிய கொடைகள். அடுத்தடுத்த இழப்புகளில் சிக்கித் தவிக்கும் என் தம்பி வினோத் இதிலிருந்தும் மீண்டு வர வேண்டும். அவன் மீண்டு வருவான். ஏனெனில் அவன் உசைனி மாணவன்.
இப்படி ஒவ்வொரு ஊரிலும் தமிழ் உணர்வும், தற்காப்பு கலை நிபுணத்துவமும் வாய்ந்த தம்பிகளை மாஸ்டர் உருவாக்கி விட்டு சென்றிருக்கிறார்.
அவர் நீடித்து வாழ்வதற்கான எல்லா காரணங்களையும் அவர் மரணத்திற்கு முன்பே செய்துவிட்டு மறைந்திருக்கிறார்.
அவருக்கு என் கண்ணீர் வணக்கம்.

துயர் மரணத்தின் நிழல் பேரிருளாய் சூழ்ந்திருக்கும் இந்த இரவை இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்படி கடப்பாரென்று நினைத்துப் பார்த்தாலே மனம் கனத்துப் போகிறது. மாஸ்டர் ஷிகான் ஹீசைனிக்காக இரங்கல் பதிவு எழுதிவிட்டு மாலையில் மௌனமாக அமர்ந்திருந்த போது இயக்குனரும் நடிகருமான மனோஜ் இறந்த செய்தி வந்து சேர்ந்தது.
அவரது மரணச் செய்தி கேட்டு பலரும் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு ஊடகங்களில் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். முக்கியமாக நடிகர் தம்பி ராமையா அவர்கள் கொடுத்த பேட்டி என்னவோ மனதை ஏதோ செய்தது. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்.
உண்மையில் மனோஜ் தன் வாழ்நாள் முழுக்க தன் தந்தை அடைந்த கலை உயரத்தில் பாதியாவது தொட்டுவிட வேண்டும் என போராடிக் கொண்டே இருந்தார். மாபெரும் ஆளுமைகளுக்கு மகன்களாகப் பிறப்பதும் ஒருவித சாபம்தான். எதற்கெடுத்தாலும் தன் தந்தையோடு அவர்களை ஒப்பிட்டு அவர்களின் சுயம் அழிக்கும் உலகம் தான் மனோஜ் போன்றவர்களை கொன்றுக் கொண்டே இருக்கிறது.
இன்று மாலை மனோஜ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த “தாஜ்மஹால்” படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மிகச்சிறந்த ஆல்பம் அது. கவிப்பேரரசு வைரமுத்து ஒவ்வொரு வரியையும் தனக்கு வாழ்வளித்த பாரதிராஜாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக எழுதி இருப்பார்.
படம் வெளியானபோது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அபூர்வமான ஒலிக் கோர்வைகளோடு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருந்த பாடல்கள் வேறு படத்தின் மீதான பரபரப்பை கூட்டி இருந்தன. இத்தனைக்கும் மணிரத்னத்தின் கதை திரைக்கதையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் அது.
சுவையான எல்லாவற்றையும் கலந்து, சுவையற்ற ஒன்றை தயாரித்தது போல ஆகிவிட்டிருந்தது படம். இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு திருப்பாச்சி அருவாளை தீட்டிக்கொண்டு வாடா வாடா என அறிமுகமானார் மனோஜ். ஆனால் வழக்கமான பாரதிராஜாவின் உயிர்ப்பும் உணர்வும் நிரம்பி வழியும் “பாரதிராஜாவின் கிராமம்” அந்தத் திரைப்படத்தில் இல்லை. செயற்கையான காட்சி அமைப்புகள், உடைகள் என படம் ஏதோ தெலுங்கு கிராமத்தை நகலெடுத்தது போல அமைய, மனோஜ் வெற்றி பெற முடியாமல் முடங்கத் தொடங்கினார்.
ஆனாலும் அவருக்குள் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டே இருந்தது. திரைப்படத்துறையோடு ஏதோ ஒரு வடிவத்தில் தொடர்பு கொண்டவாறு இருக்க முயற்சி செய்தார். சில முயற்சிகள் சிறு வெற்றிகள் அடைந்தாலும், பாரதிராஜா என்கின்ற மாபெரும் யானை அடைந்திருந்த உயரம் அந்த சிறு வெற்றிகளுக்கான அங்கீகாரங்களைக் கூட அவரை அடைய விடாமல் தடுத்தது.
அது ஒரு வகை சாபம்தான். ” காந்தி இஸ் மை ஃபாதர்” என்று ஒரு புத்தகம் உண்டு. காந்தியின் மூத்த மகன் ஹரிலால் தன் வாழ்வில் தன் தந்தையின் உயரத்தால் அடைந்த துயரின் கதை அது. இறுதியில் ஒரு குடிகாரனாக மாறி, காந்தியை எதிர்ப்பதற்காகவே மதமும் மாறி எல்லாவற்றையும் இழந்து கடைசியில் அனாதை போல அரசு மருத்துவமனையில் இறந்து போனார் தேசப்பிதாவின் அசல் மகன். அது திரைப்படமாக கூட வெளிவந்திருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர். ஆனாலும் அவருக்கும் இதே போன்ற சிக்கல்தான். தன் தந்தையை விட்டு கொஞ்சம் விலகி நின்ற யுவன் சங்கர் ராஜா அடைந்த வெற்றியை தந்தையின் நிழலில் நின்று கொண்டிருந்த கார்த்திக் ராஜா அடைய முடியவில்லை. இத்தனைக்கும் தன் அண்ணன் கார்த்திக் ராஜா தன்னைவிட மிகச் சிறந்த இசை அறிவு கொண்டவர் என யுவன் சங்கர் ராஜாவால் புகழப்பட்டவர் அவர்.
மனோஜ் தன் தனிப்பட்ட வாழ்வில் அனுதினமும் எதிர்கொண்ட அழுத்தங்கள் அவரை சாகும் வரை நிம்மதியாக இருக்க முடியவில்லை. எப்படியாவது தந்தைக்காக ஒரு வெற்றி அடைந்து விட வேண்டும் என போராடி தவித்த நல்ல மகன் அவர். சிறுநீரக பிரச்சனைகளுக்கு நடுவில் அவர் இயக்கிய “மார்கழித் திங்கள்” மோசமான தோல்வியை சந்தித்தது. நீண்ட நாட்களாக “சிவப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுத்து விட வேண்டும் என தவித்ததாக அவர் பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார்.
அரண்மனையில் இருந்தவர்தான். ஆனாலும் வீதியில் இறங்கி தனக்கென ஒரு தனிப்பட்ட அடையாளம் வேண்டும் என எல்லா கதவுகளையும் தட்டிப் பார்த்திருக்கிறார்.
ஒரே ஒரு கதவு தான் அவருக்காக திறந்திருந்தது.
அது மரணத்தின் கதவு.
மனோஜ் போய்விட்டார்.
கம்பராமாயணத்தில் தன் மகன் இந்திரசித்தை போரில் இழந்த ராவணன் “எனக்கு நீ செய்ய வேண்டியது எல்லாம் உனக்கு நான் செய்து கொண்டிருக்கிறேனே..” என அழுது புலம்பும் ஒரு துயர் கவிதைப் போல பாரதிராஜாவின் இந்த சோகம் மீதம் இருக்கும் அவரது சிறு வாழ்நாளில் பெரும் முள்ளாய் உறுத்தி உயிர்வாதை செய்துக் கொண்டே இருக்கும்.
அதுவும் அவர் துளித்துளியாய் அடையும் ஒருவகை மரணம் தான்.
… கண்ணீர் வணக்கம்.
மறுமொழி இடவும்