ஜீன் 3.
ராஜபக்சேவோடு
அவரை ஒப்பிடாதீர்கள்.
அதில் சிறு
ஒவ்வாமை
இருக்கிறது எனக்கு.
தமிழ் பேசவில்லை.
தமிழ் பேசி
தமிழினத் தலைவர்
என ஒருபோதும்
அவன் சொல்லிக்
கொண்டதில்லை.
தொல்காப்பியத்திற்கு
உரை எழுதுகிறேன்
என்று தொல்லை
செய்ததில்லை.
கண்ணகிக்கு
சிலை எடுக்கிறேன்
என்று சிந்தை
நெருடவில்லை.
பூம்புகாரில்
வசனம் எழுத
அவனுக்கு வாய்ப்பு
இருந்ததில்லை.
குறளோவியம்
படைக்கிறேன் என
கரகரப்பு குரலில்
கவிதை பேசவில்லை.
கடலிலே
தூக்கி போட்டாலும்
கட்டுமரமாக தான்
மிதப்பேன்
அதில் நீங்கள் மிதந்து
கரைசேரலாம்
என்று ஒருபோதும்
அவன் யார் மனதிலும்
நம்பிக்கை நட்டதில்லை.
போரை
நிறுத்துகிறேன்
என்று
காலை உணவிற்கும்
மதிய உணவிற்கும்
இடையே
சாகும்வரை
உண்ணாவிரதம்
இருந்ததில்லை.
முதுகில்
அறுவை சிகிச்சை
என மல்லாக்கப்
படுத்ததில்லை.
அவன்
அவன் இனத்திற்கு
நேர்மையாக நின்றான்.
நம்மைக் கொன்றான்.
அவனுடைய
தோட்டாக்கள்
எப்போதும்
குறி பார்த்து
நம்மை வீழ்த்தியவை.
நம் உயிர்
சிதறடித்தாலும்
அவனது
கொத்துக் குண்டுகள்
நாம் பழகியவை.
அவனோடு
மோதினோம்.
இனிமேலும்
மோதுவோம்.
ஆனால்
அழகுத் தமிழ்
பூசி
அடுக்குமொழி
பேசி
வந்தக் குரலில்
கண்கள் சொருகிய
தருணம் ஒன்றில்..
நடு முதுகில்
“நச்” என்று
நஞ்சு தடவி
குத்தப்பட்ட
இந்த துரோகத்தின்
கத்தியை
உருவுவதற்கு தான்
எம் கைகள்
எட்டாமல் போய்விட்டன.

*அன்பு நண்பன் Cartoonist Bala அவர்களுக்கு..
மறுமொழி இடவும்