.

நாங்கள்

தோற்றவர்கள் தான்.

ஆனாலும்..

அனல் வீசும்

பொழுதுகளில்

நாங்கள் சளைக்காமல்

சண்டையிட்டவர்கள்.

ஆன்மாவின்

குருதியோடு

கலந்துவிட்ட

லட்சியத்திற்காக

ஒரு வாழ்வினையே

விலையாக கொடுத்து

எதிர்காலக் கனவிற்காக

தளராமல் நின்றவர்கள்.

எங்களது மூத்தோர்

தங்கள் மரணத்தின்

இறுதிப் பொழுதில்

உதிர்த்த

கடைசிச் சொல்லுக்காக

எதையும் இழக்கத் துணிந்த

எங்களது தோல்வியின்

வரலாறு ,

எந்த விலையும்

கொடுக்கப்படாமல்

மலிவாக கிடைத்த

உங்கள் வெற்றியின்

பெருமிதப் பாடலை விட

கம்பீரமானது.

அதோ..

யார் யாரோ

ஓடி வருகிறார்கள்.

புற்றீசல் போல.

மினுக்கும் வெற்றியின்

கதகதப்பான குடைக்குள்

ஒளிந்துக் கொள்ள.

வெற்றிகளின் கதை

அப்படித்தான்.

ஈர்க்கும்.மினுக்கும்.

பாம்பின் நாவாய்

அலையும்

அதிகாரத்தின்

சுவைக் காட்டி

மயக்கும்.

ஆனால்

தோற்றவர்களின்

வரலாறு

அப்படியல்ல.

வலிகளோடு

பிறக்கும்

ஒரு பெருமூச்சுக்குப் பிறகு,

நாங்கள் குருதித் தோய்ந்த

ஆயுதங்களை

மீண்டும் இறுகப்பற்றுகிறோம்.

இதோ..

ஒரு யுகத்தின் கனவை

சுமந்துக் கொண்டு

இதோ..

நாங்கள் காயங்களோடு

தயாராக இருக்கிறோம்.

அடுத்த போராட்டத்திற்காக.