பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: அரசியல் Page 5 of 15

அழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..

 

 

 

சுய சாதியை குறித்து எந்தவித பெருமிதமும் கொள்ளாமல் அதை மிக இழிவான அடையாளமாக கருதுவதுதான் உண்மையான சாதிமறுப்பு.

மேலும் சாதியக் கட்டமைப்பினால் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிற உனது சக மனிதனை கை தூக்கி விடுவது போல பிறக்கிற எந்த ஒரு இலக்கியமும், திரைப்படமும் கொண்டாடத்தக்கவையே..

பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு நான் எல்லாம் தலைகுனிந்து இருக்கிறேன்.
எங்களது தாய்வழி பூர்வீக கிராமத்தில் எனது குடும்பத்து முன்னோர்கள் இந்த சாதி கட்டமைப்பினால் சக மனிதர்களை அடிமையாக நடத்திய விதம் குறித்து குற்ற உணர்வு கொண்டிருக்கிறேன். அருவருப்பு அடைந்திருக்கிறேன்.

என்னடா உங்கள் பெரிய மயிறு சாதி என்று செத்துப்போன எனது குடும்பத்து பெருசுகளை தோண்டி எடுத்து காறித் துப்பலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.

பரியேறும் பெருமாள், அசுரன் போன்ற கலைப்படைப்புகள் எண்ணற்ற எளிய மனிதர்களின் மனசாட்சியை தொட்டு எழுப்பி சாதிமறுப்பு மனநிலையை உண்டாக்கி இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவி சாதி குறித்த கேள்விகளை அவை எழுப்புகின்றன. அசுரன் படம் பார்த்துவிட்டு எனது மகன் இரண்டு மணி நேரம் சாதிய கட்டமைப்பு களைப்பற்றி அதன் கொடுமைகளை பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். இவை போன்ற படைப்புகள் தான் இப்போது தேவைப்படுவது.

பெற்றோர் பக்கத்திலிருந்து பார்ப்பதாக கூறி சாதி மறுப்பு திருமணங்களை மறுக்கிற அல்லது அவமானப்படுத்துகிற எந்த படைப்பும் தந்திரமாக சாதி நிலைகளுக்கு ஆதரவானதே.

அது என்ன ஒரு பக்கம் என்று கேள்வி கேட்பதே அவமானகரமானது. ஏனெனில் சாதிமறுப்பு நிலை என்பது நடுநிலையானது அல்ல. அது சாதி நிலைக்கு எதிரானது.பல்லாயிரம் ஆண்டுகளாக நுட்பமான சாதி கட்டமைப்பினால் இந்த சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இப்படித் தாழ்ந்து வீழ்ந்து கிடைக்கிற சகமனிதன் அதன் பிடியிலிருந்து வெளிவரத் துடிக்கும் போது உடனிருந்து கைப்பிடித்து தூக்கிவிட வேண்டியதும் ஆதரவாக நிற்க வேண்டியதும் மனிதனாக உணர்கிற ஒவ்வொருவரின் கடமை.

அதைவிட்டுவிட்டு மறுபக்கம் பேசுகிறேன், இன்னொரு பக்கம் பற்றி யோசியுங்கள் என்றெல்லாம் பேசுவது நேரடியாக சாதியை ஆதரியுங்கள் , அப்படித்தான் சகமனிதனை கீழ்மையாக நாங்கள் நினைப்போம் என்பதற்கு நிகரானது.

முதலில் வெளிவராத ஒரு திரைப்படத்திற்கு தந்திரோபாயமாக செய்யப்படும் இதுபோன்ற விளம்பர முயற்சிகளுக்கு நாம் பலியாகி விடக்கூடாது. இதை ஒரு விவாதமாக கூட மாற்றக் கூடாது. புறக்கணிப்பு மட்டுமே சரியான எதிர்வினை.

என்னைப் பொறுத்தவரையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதி நிலைகளை ஆதரிக்கிற எந்த ஒரு திரைப்படமும் அல்லது இலக்கியமும் சமூகத்தால் தீண்டத்தகாத அருவருக்கத்தக்க படைப்புகளே..

பயணங்கள் முடிவதில்லை..


————————————————–

ஒரு பொன் அந்திமாலையில் கரை ஓரத்தில் நின்றுகொண்டு அடர்ந்து படர்ந்து ஓடும் நதியைப் பார்ப்பதுபோல.. நான் இந்த வாழ்வை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எதன் பொருட்டும் அந்த நதி நிற்பதில்லை. யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எதனாலும் திசை மாறுவதில்லை. தன் கடன் பயணிப்பதே என்பதுபோல அது ஓடிக் கொண்டே இருக்கிறது.

இந்த முடிவிலியான பயணத்தில் சட்டென நிகழ்ந்துவிடுகின்றன நம்மோடு உயிரென நின்றவர்களின் இழப்புக்கள். அப்படித்தான் சமீபகாலமாக என் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களை நான் இழந்து விட்டு எதனாலும் கட்டுப்படாத வாழ்வின் குரூர ஓட்டத்தைப் பற்றி கண்கள் முழுக்க நீரோடு சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

உண்மையில் தம்பி கார்த்தி இறந்தபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நேற்று வரையில் என்னோடு பேசிக் கொண்டிருந்தான். நான் அவன் தோள் பிடித்து நடந்துக் கொண்டிருந்தேன். பல நம்பிக்கைகளை என்னுள் விதைத்துக் கொண்டிருந்தான். இருவரும் சேர்ந்து பல கனவுகள் கண்டோம். சட்டென பற்றிருந்த என் கையை உதறிவிட்டு அவன் தனியே சென்றுவிட்டான். என் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் போல தம்பி டக்கீலோ மணி இருந்தான். அடிக்கடி காணாமல் போய் கடையில் நின்று கொண்டிருக்கும் அவனை நான் திட்டி கொண்டே இருப்பேன். சிரித்துக்கொண்டே என் முன்னால் அவன் நின்று கொண்டிருப்பான். திடீரென நிரந்தரமாக காணாமல் போய்விட்டான்.

தூங்கி விழித்த பிறகு கலைந்து போகின்ற கனவு போல என்னுள் கலந்துவிட்ட என் தம்பிகள் காணாமல் போவது என்னால் எதனாலும் சகிக்கமுடியாத துயரமாக மாறிப்போனது. அதுவும் என்னோடு வயது குறைந்தவர்கள். நன்கு வாழ வேண்டியவர்கள். சட்டென போய்விட்டார்கள்.

அவர்களை இழந்து நிற்கின்ற அவர்களது குடும்பங்களுக்கு எந்த வார்த்தையும் சொல்லி என்னால் ஆறுதல் படுத்த முடியவில்லை. ஏனெனில் நானே ஆறுதல்படுத்த வேண்டிய நிலையில்தான் இருந்தேன்.
உடன் பயணித்தவர்கள் மரணித்துப் போனால் ஒரு மாலையை வாங்கி போட்டுவிட்டு மறு நொடியே தன் வேலையை பார்க்கப் போகிற இயல்பான அரசியல் கட்டமைப்பாக கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியை நாங்கள் உருவாக்கவில்லை.

தனியனாக அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சியை உருவாக்க தொடங்கியபோது.. முதன்முதலாக தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான கலந்தாய்வுக் கூட்டத்தை கும்பகோணம் தான் நடத்தியது. இனம் அழிந்த வலியில் கண் சிவந்து மண்ணை மீட்கிற புனிதப் பணியில் இறங்கிய அண்ணனை பின் தொடர்ந்து பயணிக்க இளைஞர் கூட்டம் ஒன்று இங்கு உருவாகி நின்றது.

நாங்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக்கொண்டோம். குடும்பமாக கூடி நின்று மகிழ நாம் தமிழர் என்ற பெயரில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழ்வது என முடிவு செய்துவிட்டோம். இன்பத்திலும் துன்பத்திலும் பிரியக்கூடாது என மனதிற்குள் உறுதி ஏற்றுக்கொண்டோம். ஒருவருக்கொருவர் எதனாலும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டோம். அப்படியேதான் பயணித்தோம். ஆனாலும் பயணத்தின் முடிவு பிரிவு தானே என்பதை உணர்த்துவது போல எதிர்பாராத சில நிறுத்தங்களில் எதிர்பாராமல் சிலர் இறங்கிச் சென்றுவிட்டார்கள். ஒவ்வொருவரும் பிரிந்து செல்லும்போது நாங்கள் பலவீனப்பட்டதாக உணர்ந்தோம். ஆனாலும் கைகோர்த்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். புதிதாக கைகோர்த்துக் கொண்ட பலரை இணைத்துக்கொண்டு எங்களது பயணம் தொடர்ந்தது.

அண்ணன் சீமான் ஓடிக்கொண்டே இருந்தார். அவரது வேகத்துக்கு நாங்களும் ஓட முயன்றோம். என்னோடு பயணித்து கொண்டிருந்த என் தம்பிகள் தங்களது கடும் உழைப்பினால் அண்ணன் சீமானிற்கு ஈடு கொடுக்கத் தொடங்கினார்கள்.

அப்படி ஓடியவன் தான் தம்பி மோ. கார்த்திக்.இரவு பகல் பாராமல் என்னோடு பயணித்தான். இருள் விலகா பொழுதுகளில் பனி அசையும் இரவுகளில் இளையராஜா பாடல்களோடு என்னோடு கண்கள் முழுக்க கனவுகளோடு பேசிக்கொண்டே வந்தான்.

திடீரென இறந்துவிட்டான். ஒருமாதிரியாக மனது வெறுத்துப் போய்விட்டது. வீட்டிலும் சூழ்நிலைகள் சரியில்லை. மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போனது உண்மையில் மனதை பலவீனப்படுத்தி விட்டது. இனி என்ன செய்வது என்பது போல தேக்கம்.

அப்போதுதான் தம்பிகள் ஆனந்தும், கார்த்தியும், லிங்கதுரையும் சாமிநாதனும், பூபேஷ் குப்தாவும் ,விஜியும், பிச்சுவா மணியும் அவர்களோடு கூடிநின்ற தம்பிகளும் நாங்கள் இருக்கிறோம் அண்ணா என்பதுபோல உழைக்கத் தொடங்கினார்கள். இறந்துபோன தங்கள் உடன் பிறந்தார்களின் குடும்பத்தினரை கைவிடாமல் காப்பாற்ற வேண்டுமென என்னிடத்தில் வற்புறுத்தினார்கள். என்னை தூக்கி நிறுத்தினார்கள். மீண்டும் ஒரு லட்சிய பயணத்திற்கு தயாராவோம் என்றார்கள். குறுகிய காலத்தில் ஒரு மீள் எழுச்சி.

எப்போதும் உயிராக என்னை நேசித்து என்னை அழைத்துச் செல்கிற அண்ணன் சீமானிடம் எனது உணர்வுகளை எப்படியும் கொட்டி விடுவேன். அவரைப்போல ஒரு அண்ணன் கிடைப்பது மிக அரிது. சின்ன சின்ன உணர்வுகளை கூட மிகச் சரியாக புரிந்து கொண்டு தம்பிகளின் வலி தீர்க்க உயிர் கசிந்து வாழ்ந்து கொண்டிருக்கிற அண்ணன் அவர். கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் துணிவாக இரு அண்ணன் வருகிறேன் என்றார் அவர்.

அனைவரும் உழைத்தோம் .ஓடினோம். இது வெறும் அரசியல் கட்சியல்ல. எதனாலும் பிரிக்கமுடியாத ஒரு குடும்பம் என்பதனை ஊருக்கும் உலகத்திற்கும் காட்டுவதற்கு முன்பாக.. எங்களுக்குள்ளாகவே உறுதிப்படுத்திக்கொள்ள நினைவேந்தல் நிகழ்வினை தயார் செய்தோம். நிறைய பொருளாதார சிக்கல்கள். எதிர்பார்த்த இடங்களில் எல்லாம் உதவிகள் கிடைக்காத சூழல்கள். ஆனாலும் தம்பிகள் தளராமல் உழைத்தார்கள்.

தம்பி கார்த்தி வீட்டில் தனித்திருக்கும் அவனது தாய் தந்தையர் அருகில் சென்று அமர்ந்து கொண்டோம். அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டோம்.

நேற்றைய தினம் அண்ணன் வந்தார். எதனாலும் கலங்காத அவரது விழிகள் கலைந்து போன கூடாக மாறிவிட்ட அவரது தம்பிகளின் வாழ்வினை நினைத்து கலங்கி விட்டன. பிள்ளைகளை இழந்து வாடும் தாய் தந்தையரை தனது இரு கரம் கொண்டு அண்ணன் இறுக்கி அணைத்துக் கொண்டார். மூத்த மகனாக நான் இருக்கிறேன் என்றார்.

தம்பி கார்த்தியின் நினைவேந்தல் நிகழ்வில் அண்ணன் பேசியபோது அவரது குரல் உடைந்து போனது. பின்னாலும் முன்னாலும் நின்றுகொண்டிருந்த நாங்கள் அனைவரும் அழுது விட்டோம். இறுதியாக தன்னை உறுதிப்படுத்திக்கொண்டு.. தம்பி கார்த்தியின் இலட்சியக் கனவை நிறைவேற்ற உழைப்போம் என உறுதி கூறி புகழ் வணக்கம் செலுத்தினார்.

நிகழ்ச்சி முடிந்து.. கார்த்தி வீட்டின் முன்னால் ஒரு நாற்காலியில் நான் அமர்ந்து இருந்தேன். பக்கத்தில் கார்த்தியின் அம்மா மெலிதாக விசும்பி கொண்டிருந்தார். இப்படி ஒரு வாழ்வை என்மகன் வாழ்ந்திருக்கிறானே என்று தழுதழுத்த குரலில் என்னிடம் சொன்னார். உண்மையில் அந்த நொடியில் நான் பெருமிதப்பட்டு போனேன். எத்தனையோ உன்னதங்கள் யாருக்கும் தெரியாமல் கரைந்து போகின்ற கால நதியின் கோர ஓட்டத்தில்.. தம்பிகள் கார்த்தி , மணி வாழ்ந்த குறுகியகால லட்சிய வாழ்க்கையை குறைந்தபட்சம் அவர்களது குடும்பத்தினருக்காவது புரிய வைத்து விட்டோம் என்பதுபோல நிறைவு எனக்குள் ஏற்பட்டது.

கண்கலங்க அமர்ந்திருந்த நான் அருகே புகைப்படமாக உறைந்திருந்த தம்பி கார்த்தியின் முகத்தைப் பார்த்தேன்.என்னை பார்த்து அவன் புன்னகைத்தது போல எனக்குத் தோன்றியது.

…. லிங்க துரை என்னை அழைத்து செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்து நின்றான். வண்டி புறப்பட்டது. தம்பிகள் ஆனந்த் கார்த்தி உள்ளிட்ட தம்பிகள் எதையோ நிறைவேற்றிய முகத்தோடு ஏதோ பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நான் கை உயர்த்தி அவர்களுக்கு வணக்கம் சொல்லியபோது அவர்களும் கண்கலங்க புரட்சி வணக்கம் கூற கையை உயர்த்தினார்கள்.

உயர்ந்த கரங்களில் ஒளிரட்டும் வெளிச்சம்.

மணி செந்தில்.

உறங்கா உண்மைகளின் அடங்காப் பெருநெருப்பு..

——————————————–

ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது நீண்ட காலமாய் உறைந்திருக்கும் அந்த தொன்மை இன மக்களின் கலையாத கனவு மட்டுமல்ல.. அது காலங்காலமாய் தொடரும் உயிர்த் தாகம்.

உலகத்தில் நம்மை விட நிலப் பரப்பிலும், மக்கள் தொகையிலும் குறைவான எண்ணிக்கை கொண்ட எத்தனையோ தேசிய இனங்கள் தங்களுக்கென ஒரு நாடு அடைந்து தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழும் இக்காலத்தில்.. தமிழர் என்கின்ற தொன்ம தேசிய இனத்திற்கு மட்டும் உள்ளங்கை அளவு கூட ஒரு நாடில்லை என்கிற நிலை வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் பெரும் சோகமாய் தொடர்ந்து வருவதென்பது எதனாலும் சகிக்க முடியாத ஒன்று.

அடிமைப்பட்டு தாழ்ந்து விழுந்து கிடக்கிற ஒவ்வொரு இனமும் தனது விடுதலைக்கான ஆயுதத்தை அதுவே தயாரிக்கும் என்பதுதான் இத்தனை ஆண்டு காலமும் இயற்கை நமக்கு போதித்த பெரும் பாடம். அப்படி தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஆயுதமாக நம் இனத்தில் பிறந்த மாபெரும் தலைவர் எம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

எதிரிகளாலும் குறைகூற முடியாத கறைபடாத வாழ்விற்கு சொந்தக்காரர்.
எங்கள் தலைவர் பிரபாகரன் அவன் முருகனுக்கே நிகரானவன் என்ற அண்ணன் அறிவுமதியின் வார்த்தைகளில் நமக்கு காணக் கிடைப்பது.. தலைவர் பிரபாகரனின் பெருமைகள் மட்டுமல்ல.. மூத்தகுடி ஒன்றின் மரபின் வழி பிறந்த ஒப்பற்ற தலைவனாகவும் அவர் விளங்கி இருக்கிறார் என்பதுதான்.

அப்படிப்பட்ட தலைவர் பிரபாகரனை தன் ஆன்மாவில் சுமந்து.. அவரது சொற்களை.. அவரது கனவுகளை.. தன் நினைவோடு நிறுத்தி அவரின் தம்பியாக
தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் விடுதலையை நிகழ்காலத் தலைமுறைக்கு கடத்துகிற உன்னதப் பணியை அண்ணன் சீமான் அவர்கள் செய்து வருகிறார்.

ஆனால் நாங்கள் தான் தலைவருக்கு நெருக்கமானவர்கள்.. எங்கள் பேச்சை கேட்டு தான் தலைவர் நடப்பார்.. தலைவருக்கு மிகுந்த மதிப்பிற்குரியவர் நாங்கள்தான் என்றெல்லாம் பெருமைகள் பேசிக் கொண்டவர்கள்.. இனத்தைக் கொன்றவர்களோடு இன்முகம் காட்டி நிற்க.. அண்ணன் சீமான் மட்டும்தான் இந்த இனத்தையும், உயிரையும் தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கின்ற எளிய இளைஞர்களோடு களத்தில் நிற்கிறார்.

எத்தனையோ தலைவர்கள் ஈழ விடுதலையை ஆதரித்தார்கள். ஆனால் சீமானோ ஆதரிக்க பிறந்தவர் அல்ல. ஈழ விடுதலை என் விடுதலை என்று முழங்கினார். ஈழம் என்பது எங்கோ தூர இருக்கின்ற தேசம் என அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது.. ஈழம் தமிழர்களின் மற்றொரு தாய் நாடு என்று சீமான் முழங்கினார். மற்றவரெல்லாம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்தார்கள். ஆனால் சீமான் பிரபாகரன் தலைவர் உடன் பிறந்த என் அண்ணன் என்று முழங்கினார்.

இதுதான் அண்ணன் சீமானுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.இந்த வித்தியாசத்தை விடுதலைப்புலிகளும் உணர்ந்திருந்தார்கள். அண்ணன் சீமான் அவர்கள் தலைவரை சந்திப்பதற்கு முன்பாகவே.. உலகத்தின் பல நாடுகளில் இன விடுதலைக்கு அவர் முழங்கிய முழக்கம் தலைவருக்கு சென்று சேர்ந்திருந்தது.

இவர்களெல்லாம் சொல்வதுபோல திரைப்படம் எடுக்கதான் சீமான் ஈழத்திற்கு சென்றாரெனில்.. கடற்புலிகளின் தலைவர் சூசை எதற்காக சீமானை கடைசி நொடியில் கை காட்ட வேண்டும்..??

ஆம்.. சீமான் எளியவன் தான்.. வயதில் மற்றவர்களைவிட இளையவன் தான்.. தலைவராக அறியப்படுகிற பலருக்கு கீழே தரையில் அமர்ந்து இருந்தவர்தான்..

ஆனாலும்… தனக்கு யார் உண்மையாக இருப்பார் என தலைவருக்கு தெரியாதா என்ன.. அதனால் தான் இனத்தின் பெரும் கடமை சீமான் கரங்களுக்கு வந்து சேர்ந்தது.

உண்மையில் சீமான் பிரபாகரனைச் சந்தித்தாரா.. அங்கு என்னதான் நடந்தது… எது பற்றி பேசப்பட்டது.. என்பது பற்றி தெரிவிக்க உலகத்தில் இருவருக்கு மட்டுமே உரிமை உண்டு.

அந்த சந்திப்பில் இடம்பெற்ற தலைவருக்கும், அண்ணன் சீமானுக்கும் மட்டுமே அந்த தகுதி உண்டு. அவரவர் கற்பனைக்கு ஏற்றார்போல்.. சீமானை பொறாமையால் சீண்டுகிற சில்லறை வேலைகளை சிலர் தொடர்ச்சியாக இங்கே பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

எனவேதான் வெளிப்படையாக இது குறித்து பேச அண்ணன் சீமான் முதன்முதலாக குமுதம் ரிப்போர்ட்டர் மூலமாக ஒரு தளத்தை அமைத்திருக்கிறார்.

குமுதம் ரிப்போர்ட்டரில்.. அடங்கா பெரு நெருப்பு என்ற தலைப்பில் அண்ணன் சீமான் தன் நெருப்பு தமிழில் எழுதி வருகிற அந்த வரலாற்றுப் பெரும் தொடரில்… தலைவர் பிரபாகரனுக்கும் தனக்கும் உள்ள உறவை பற்றி.. அவர்களுக்குள் நடந்த சந்திப்பை பற்றி..
விரிவாக பேச இருக்கிறார்.

யார் பிரபாகரன் என தலைப்பிட்ட இந்த வாரத் தொடர்.. மறைந்திருந்த பல உண்மைகள் மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சமாய் ஒளிர்கிறது. பிரபாகரன் என்ற தனிமனிதன் ஒரு தேசிய இனத்தின் தலைவனாக எவ்வாறு அறியப்படுகிறார் என்பதைப்பற்றி பெருமித மொழியோடு அண்ணன் சீமான் அவர்கள் விவரிக்கும்போது.. நமது கண்கள் கலங்குகிறது.

தன் உயிராக நேசிக்கின்ற தன் அண்ணனைப் பற்றி.. தமிழ் தேசிய இனத்தின் மன்னனைப் பற்றி.. அண்ணன் சீமான் மிக ஆழமாக உணர்வுபூர்வமாக விவரித்து இருக்கின்ற அந்தக் கட்டுரை.. இவ்வார குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு தமிழனும்.. வாசிக்கவேண்டிய
வரலாற்றுப் பெரும் தொடர்

அடங்கா பெரு நெருப்பு.

உண்மை என்பது ஊழித் தீ. அதை வெறும் குப்பைகளைப் போட்டு அணைத்து விட முடியாது.

அடங்கா பெரு நெருப்பு .. பற்றி எரிகிறது.
சுற்றி பரவுகிறது.

அவசியம் படியுங்கள்.

மணி செந்தில்.

அண்ணன் கொளத்தூர் மணிக்கு..

 

 

திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு கொளத்தூர் மணி அவர்களுக்கு… வணக்கம்.

இதுபோன்ற ஒரு கடிதம் எழுத நேர்ந்த நிலைமைகளுக்காக உண்மையில் நான் வருந்துகிறேன். உங்களை ஒரு கதாநாயகனாக எனது கண்கள் பார்த்து இருக்கின்றன. உங்களை ஒரு தேவ தூதனாக கருதி எனது கரங்கள் தொழுதிருக்கின்றன. கனிவும் அன்பும் நிறைந்த உங்கள் சொற்களில் தான் அன்று எவ்வளவு உண்மையும் நேர்மையும் நிறைந்திருந்தன..??

அவர்தான் நீங்களா என்ற சந்தேகம் உங்களை உண்மையாக நேசித்த என்னைப்போன்ற ஒரு எளிய மனிதனுக்கு இன்று எழுந்திருப்பது என்பது வரலாற்றின் மாபெரும் அபத்தக் காட்சி.

ஆனால் காலம் தான் எவ்வளவு கொடுமையானது..??

ஒரு காலத்தில் நம் கண் முன்னால் கண்டு நேசித்த ஒரு உதாரண மனிதன் உயிரென கொண்டிருந்த இலட்சிய பற்றுகளை தவற விட்டுவிட்டு.. வரலாற்றின் வீதியில் அம்பலப்பட்டு நிற்பது எதனாலும் சகிக்க முடியாத பெரும் வீழ்ச்சி..

அப்படி ஒரு வீழ்ச்சியில் உங்களை நீங்களே சரித்துக்கொண்டு எதை தூக்கி நிறுத்தப் போகிறீர்கள் அண்ணா..??

இருந்த நாட்டை நசுக்கி, வாழ்ந்த இனத்தை அழித்ததை மறந்துவிட்டு.. இல்லாத திராவிடத்தை காக்க நிற்கிற உங்களது பரிதாபநிலை எதற்காக அண்ணா..??

உண்மையில் கடந்த சில நாட்களாக நீங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு எதிராக ஆற்றிவரும் எதிர்வினைகளை பார்க்கும் பொழுது.. பல்லாண்டு காலமாக அம்னிஷியாவில் தூங்கிக் கிடந்த நோயாளி ஓருவர் திடீரென எழுந்து காந்தியை சுட்டுட்டாங்களா.. ராஜீவ்காந்தியைக் கொன்னுட்டாங்களா.. என்று கேட்கும் காட்சிகளைப் போல இருக்கிறது.

அந்த கால கட்டங்களில் உங்களை அண்ணன் சீமான் மேடைகளில் அழைக்கும் முறையைப் பற்றி இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

என் அண்ணனுக்கும் அண்ணனாக விளங்கக்கூடிய என் உயிர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களே.. என்று அவர் அழைக்கும்போது மேடைக்கு கீழே நின்று கொண்டிருக்கின்ற என்னை போன்றவர்களுக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சிலிர்க்கும்.

ஆனால் அண்ணனுக்கு அண்ணனாக , ஈழ மன்னனுக்கு அண்ணனாக நின்றவர்
கோபாலபுரத்து தெருக்களில் திமுக தலைவரின் சந்திப்புக்காக காத்துக் கிடப்பார் என்று யாரும் கனவிலும் அப்போது நினைத்துப் பார்த்ததில்லை.

உண்மையில் உங்களுக்கு எதுவும் நினைவில் இல்லையா அண்ணா..

நமது மகன் பாலச்சந்திரனின் பிஞ்சு உடல் தோட்டாக்கள் பாய்ந்து சடலமாக காணப்பட்ட புகைப்படம் வெளியான காலகட்டத்தில்.. நாம் நேரடியாக சந்தித்தபோது கண் கலங்கி நின்று கொண்டிருந்த என்னை பார்த்து.. அதே விழிகள் கலங்க இந்தக் காங்கிரசை பற்றியும் திமுகவின் சதிகள் பற்றியும் நெஞ்சம் குமுற குமுற வகுப்புகள் எடுத்தீர்களே..??

எப்படி அண்ணா.. கோபாலபுரத்து படிக்கட்டுகளை உங்கள் பாதம் தீண்டியது..?? உங்களுக்கு கூச வில்லையா..??

தலைவரின் உடல் என காட்டப்பட்ட ஒரு உடலை முள்ளிவாய்க்காலில் வைத்து சிங்களன் காட்டிய போது.. அறிவு நம்ப மறுத்தாலும்.. தலை உடைக்கப்பட்ட அந்த உடலை காணும்போது மனம் கதறி உங்களிடத்தில் எடுத்துப் பேசினேனே..??

அப்போது நீங்கள் சொன்ன சொற்கள் ஞாபகம் இருக்கிறதா..

அழுது கோபத்தை தீர்த்துக் கொள்ளாதீர்கள். சேர்த்து வையுங்கள். பழிதீர்க்க நிறைய இருக்கிறது. இந்தக் காங்கிரஸ் என்ற கட்சியும் திமுக என்ற கட்சியும் இனி இருக்கவே கூடாது என்று ஆத்திரம் பொங்க நீங்கள் தானே சொன்னீர்கள்..??

நம் இனத்தை அழித்தவர்களோடு தத்துவக் கூட்டு வைப்பதாக நினைத்துக்கொண்டு.. திராவிடத்தை காப்பதாக சொல்லிக்கொண்டு.. கைகோர்த்து நிற்கிறீர்களே..??

எதன் பொருட்டு இதை சகிக்க இயலும்..??

இந்த ராஜீவ் காந்தி படுகொலையைப் பற்றி நீங்கள் பேசாததையா சீமான் பேசிவிட்டார்..?? இதே திமுக தலைமை பற்றி காங்கிரஸ் கட்சியை பற்றி மேடைகளிலும், எங்களைப்போன்ற தம்பிகளை சந்திக்கும் தனிப்பட்ட சந்திப்புகளிலும் எத்தனை வார்த்தைகளை எவ்வாறு உதிர்த்து இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு நினைவில்லையா..??

தலைவர் பிரபாகரனை வெறும் எட்டு நிமிடங்கள் தான் சீமான் சந்தித்தார் என்று இன்று வாய்கூசாமல் பேசுகிறீர்களே.. உங்களது மேடைகளிலேயே எத்தனை முறை அந்த சந்திப்பைப் பற்றி அண்ணன் சீமான் மிக விரிவாக பேசி இருக்கிறார்..அப்போதெல்லாம் பின்னால் உட்கார்ந்து கொண்டு கைதட்டி மகிழ்ந்து விட்டு இப்போது யாருக்கு சேவகம் செய்ய உங்கள் திருவாய் மலர்கிறது என்று சொல்ல முடியுமா..??

உண்மையில் நீங்கள் ஒரு மனசாட்சி உடைய மனிதராக இருந்தால்.. உங்களது மேடையில் சீமான் அன்று பேசும்போது அந்த நொடியிலேயே.. அந்த மேடையிலேயே.. உங்களது மறுப்பினை உடனே அல்லவா தெரிவித்திருக்க வேண்டும்..??

உங்களிடம் நேரடியாக சீமான் ஈழத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி எத்தனை முறை விளக்கியிருப்பார்.. அத்தருணங்களில் எல்லாம் நானே பலமுறை உடன் இருந்திருக்கிறேனே.. என் கண்ணால் நானே கண்டிருக்கிறேனே.. என் காதால் நானே கேட்டிருக்கிறேனே.. அப்போதெல்லாம் அமைதியாய் கேட்டுவிட்டு இப்போது எட்டு நிமிடம் தான் பார்த்தார், திரைப்படம் எடுக்கத்தான் சென்றார் என்று உள்ளுக்குள் உண்மைகளைப் புதைத்துவிட்டு வாய் முழுக்க பொய்களோடு வார்த்தைகளை வாரி இறைக்கிறீர்களே.. யாருக்காக..??
எந்த செஞ்சோற்றுக்கடன் உங்களை சேராத இடம் சேர்த்து வைத்திருக்கிறது..??

நீங்கள் சொல்வது போல திரைப்படம் மட்டும் எடுக்கச் சென்றவரைப் பற்றி சாவின் இறுதி நொடியில்.. கடற்புலிகளின் தலைவர் அண்ணன் சூசை எதற்காக பேச வேண்டும்..??

மனித மனம் எல்லாவற்றையும் மறந்து விடும்.. காலம் அனைத்தையும் கடத்தி விடும் , எல்லோரும் எல்லாவற்றையும் மறந்திருப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் அண்ணா..

எதையும் மறக்காமல் சிலர் இருக்கத்தான் செய்கிறோம்.

இந்த காங்கிரசை பற்றி, இந்த திமுகவைப் பற்றி இந்தக் கூட்டணி நிகழ்த்திய இன அழிப்பைப் பற்றி எங்களிடம் அணு அணுவாக விவரித்து போராட சொல்லிக்கொடுத்தது நீங்கள்தானே அண்ணா..??

இந்த கருணாநிதி யார்..?? அவர் செய்த அரசியல் துரோகங்கள் என்னென்ன..?? என்று அடுக்கடுக்காய் எங்களுக்கு வகுப்பு எடுத்துவிட்டு அறிவாலயம் வாசலில் வரிசைகட்டி நின்று கொண்டு இருக்கிறீர்களே அண்ணா..??

இனம் அழிந்தபோது காங்கிரசை வீழ்த்த, அந்த காலகட்டத்தில் ஈழம் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்த ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்கிற முடிவினை நீங்கள் தானே எடுத்தீர்கள்..??

இந்த நொடி வரை அண்ணன் சீமான் மீது ஒரு விமர்சனமாக வைக்கப்படுகிற அந்த முக்கிய முடிவினை எடுத்தது நீங்கள் தானே..??

உங்களிடமிருந்து அண்ணன் கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் பிரிந்தபோது ஏற்பட்ட சர்ச்சைகளில் எதுவெல்லாம் விவாதப் பொருளானது என்பது குறித்து இன்று நீங்கள் நினைத்து பார்க்க முடியுமா..??

அந்தக் காலகட்டத்தில் உங்களோடு அரணாக இருந்து தெருத்தெருவாக உங்களோடு அலைந்து, தொண்டை வலிக்க வலிக்க பேசி, வழக்கு செலவுகளுக்காக துண்டேந்தி எல்லோரிடம் வசூலித்து உங்களின் உடன்பிறந்தவனாக நின்றவர் இதே சீமான் தானே..??

நாம் தமிழர் என்கின்ற அமைப்பு இனத்தை அழித்த காங்கிரசையும் துணைபோன திமுகவையும் வீழ்த்த உருவாக வேண்டும் என்று முதன்முதலாக நினைத்தது நீங்கள் தானே அண்ணா..??

மதுரையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அறுத்தெறியும் வாரீர் என்கின்ற நாம் தமிழரின் முதல் நிகழ்ச்சிக்கு பனியன் அச்சிட்டு தந்தது, மேடை வடிவமைப்பை கண்காணித்தது, உள்ளிட்ட அனைத்தையும் நீங்கள் தானே அண்ணா செய்தீர்கள்..??

அதுதொடர்பாக மறைந்த இயக்குனர் அப்பா மணிவண்ணன் இல்லத்தில் நடந்த தொடர்ச்சியான கூட்டத்தில் எங்களுடன் நீங்கள் தானே அண்ணா கலந்து கொண்டு திட்டங்களை தீட்டியது நீங்கள்தானே அண்ணா..??

எல்லாவற்றையும் எங்களை திசைகாட்டி அனுப்பிவிட்டு நீங்கள் திசை மறந்து, திக்கற்று திரிந்து கொண்டிருப்பது எதனால் அண்ணா..??

“ராஜீவ் காந்தி கொலை என்பது சரிதான். ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதை விடுதலைப்புலிகள் செய்தாலும் அது யார் செய்தாலும் அது சரிதான். செய்யவில்லை என்றால் தான் நாம் கண்டனம் தெரிவித்து இருப்போம்”
என்று நீங்கள் மேடையில் பேசும்போது சீமான் உங்கள் பின்னால் தானே அமர்ந்திருந்தார்.. நீங்களும் ,சுப வீயும் அண்ணன் தொல் திருமாவளவனும் அவரை பின்னால் அமர வைத்துக்கொண்டு இதைத்தானே பேசியிருக்கிறீர்கள்.. சமூக வலைதளங்களில் பல காணொளிகள் உலவுகிறதே..நீங்களெல்லாம் கற்றுக் கொடுத்ததை தானே அவர் இன்று மேடையில் பேசினார்.. நீங்கள் அன்று பேசியது சரி என்றால் அவர் பேசியதும் சரிதானே..??

என்ன அண்ணா.. ஆளுக்கு ஆள் மாற இது என்ன திராவிடம் என்ற சொல்லின் வரையறையா..??

சீமான் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்கிறீர்கள். ஆனால் சீமானை பற்றி பேசி விளம்பரம் தேடி கொள்ளுமளவிற்கு நீங்கள் காணாமல் போய் விட்டீர்கள் அண்ணா..

அண்ணன் சீமான் வெகுஜன அரசியல் களத்தில் , தமிழக நலன் சார்ந்த போராட்ட களங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று மக்களோடு மக்களாக நின்று கொண்டிருக்கிறார். அவருக்கென தனிப்பட்ட விளம்பரம் எதுவும் தேவை இல்லை.

ஆனால் நீங்கள் கடைசியாக செய்த போராட்டம் என்ன அண்ணா..?? காஷ்மீரி களுக்காக, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, பாஜக அரசின் இந்துத்துவ திணிப்பை எதிர்த்து , தமிழக நலன் சார்ந்த போராட்டங்கள் ஏதாவது நீங்கள் கடைசியாக செய்த போராட்டம் என்ன அண்ணா..??

உங்களால் உருவாக்கப்பட்ட உங்கள் தம்பி சீமான் இன்றளவும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மக்கள் பிரச்சினைக்காக போராடி பேசி ஒவ்வொரு ஊரிலும் வழக்குகள் வாங்கிக்கொண்டு நீதிமன்றங்களிலும் போராட்ட களங்களிலும் தொடர்ச்சியாக நின்று கொண்டிருக்கிறாரே..

நீங்கள் எங்கே அண்ணா போனீர்கள்..??

நீங்கள் வாழ்ந்த வாழ்விற்கு.. இருந்த மரியாதைக்கு.. இதுபோன்ற உண்மைக்கு நெருக்கமானவற்றில் எதிர்கருத்து பேசி ஒவ்வாமை ஆகிவிடாதீர்கள் அண்ணா..இதிலிருந்து சில காலம் நீங்கள் ஒதுங்கி இருப்பது தான் சரியானது.

அண்ணன் சீமான் உங்களைப் போன்றவர்களால் எய்யப்பட்ட ஒரு அம்பு என்றாலும்.. தலைவர் துவக்கிலிருந்து உமிழப்பட்ட ஒரு தோட்டா என்றாலும் பாதை மாறாது இலக்கை நோக்கி மிகச்சரியாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நீங்களோ பாதை மறந்து இனத்தை அழித்தவர்களோடு இன்முகம் காட்டி.. தீர்ந்துபோன திராவிடக் குடுவையில் அமிர்தம் சுரக்கிறது என்று பாசாங்கு காட்டி கொண்டிருக்கிறீர்கள்.

உங்களால் பாதை காட்டப்பட்டு பயணிப்பவர்கள் சரியாக பயணித்துக் கொண்டிருக்கும்போது திசைக் காட்டி திசை மறந்துப் போனதுபோல.. சரியாக இருக்கும் உங்கள் தம்பி மீது உங்களுக்கு ஏற்படுகிற அந்த வஞ்சினம் தான் உங்களை இவ்வாறெல்லாம் பேச வைக்கிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

இன்றளவும் அவர் உங்களை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் இந்தக் கடிதத்தை எழுதுவது அவருக்குத் தெரிந்தால் என் மீது மிகுந்த வருத்தம் கொள்வார். அவர் அண்ணன் காயப்படும் எதையும் செய்ய எங்களை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.

ஆனாலும் நான் இதை செய்யத்தான் வேண்டியிருக்கிறது. கொளத்தூர் மணியின் தம்பி சீமான் அவர் அண்ணனுக்காக சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் சீமானின் தம்பி அமைதியாக இருக்க மாட்டான்.

ஏனெனில் அவன் உண்மை நிறைந்த ஒரு ஆன்மாவிற்கு அருகில் நிற்கிறான்.
அவ்வாறாகத்தான் அவன் கேள்விகள் கேட்பான்.

வணக்கங்களுடன்‌..
மணி செந்தில்.

ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம்- அண்ணன் சீமான் அதிரடி- பதிவுகள்

 

 

ராஜீவ் காந்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்றால்..

அண்ணன் சீமான் தமிழகத்தின் வருங்கால முதல்வர்.

போடா..

 

====================================================================================

ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லை. அதில் உள்நாட்டு வெளி நாட்டு சதிகள் அடங்கியிருக்கின்றன. என்று பலரும் வீதிக்கு வீதி கத்தி சொன்னபோது ஒருவர் கூட பேசவில்லை.

இன்று கடந்து குதிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி.. ராஜீவ் கொலையில் சுப்பிரமணியசாமிக்கு பங்கு உண்டு என்று உண்மையான காங்கிரஸ்காரர் ஆன திருச்சி வேலுச்சாமி புத்தகம் எழுதியபோது எங்கே போனார்..

தூங்கினாரா…??

அதேபோல அதே சுப்பிரமணியசாமி ராஜீவ் கொலையை செய்தது சோனியா காந்திதான் என்று சொன்னபோது, அன்று தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அதை வழிமொழிந்த போது இன்று குதிக்கின்ற ஒரு காங்கிரஸ்காரர் கூட அன்று ஏன் குதிக்கவில்லை..??

இதுவரை ஏன் ஜெயின் கமிஷனின் முழுமையான முடிவான அறிக்கை வெளிவரவில்லை என்று ஒரு காங்கிரஸ்காரர் கேள்வி எழுப்பி இருக்கிறாரா..??

ராஜீவ் கொலையைப் பற்றி பேச தகுதி உடைய ஒரு காங்கிரஸ்காரர் இந்த மண்ணில் உண்டா..??

ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களை அழித்து கொன்ற இந்திய அமைதிப்படையை அனுப்பியது இந்த ராஜீவ் காந்தி..

தேசபிதா காந்தியை போல பொம்மை செய்து.. சுட்டு விளையாடி கொண்டிருப்பவர்களை கூட இவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இப்போது மட்டும் என்ன‌ இருமல்..??

ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்று நாங்கள் கதறிய போது.. கேட்க யாருமில்லை.

ராஜீவ் காந்தியை தமிழர்கள் தான் கொன்றார்கள் என அறிவித்துவிட்டு அணுஅணுவாய் கட்டப்பட்ட தமிழீழ தேசத்தை அழித்த போதும்.. கேட்க யாருமில்லை.

எங்கள் பச்சிளம் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட போது..பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர்கூட உயிரோடு இருக்கக்கூடாது என்று கருணையற்ற வார்த்தைகள் காங்கிரஸ் தலைமையிலிருந்து வந்தபோது.. கேட்க யாருமில்லை.

அப்போதெல்லாம் கேட்காதவர்கள்..
இப்போது வந்து ஏன் கேட்கிறீர்கள்..

ராஜீவ் காந்தியை தமிழர்கள் கொன்றார்கள் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்..

சொல்லப்போனால் நீங்கள் சொன்னதை தானே நாங்களும் சொன்னோம்..

இப்போது மட்டும் என்ன எகிறிக் கொண்டு வருகிறீர்கள்..??

உங்களுக்கு ராஜீவ் காந்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர். ஒரு கட்சியின் தலைவர். அவ்வளவே.

எங்களுக்கு பிரபாகரன் எங்கள் உயிர் தலைவர். எம் தேசியத் தலைவர். உலகம் முழுதும் பரந்து வாழும் 12 கோடி தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்.

அவர் பாட்டுக்கு அவர் பேசிவிட்டு போயிருப்பார்.அதுவரை அது பலராலும் கவனிக்கப்படாமல் தான் இருந்தது.
தேவையில்லாமல் அவர் பேசியதை எடுத்து.. அவருக்கு எதிராக பயன்படுத்துவதாக என நினைத்துக் கொண்டு அவருக்கு மைலேஜ் ஏற்றி விடுவதில்.. கதர் கும்பலை அடித்து கொள்ள யாருமில்லை.
இதில் திராவிட ஜால்ரா வேற.

இப்ப பாருங்க.. தொலைக்காட்சி, இணையம் என சகலத்திலும் சீமான்தான்.

கடந்த பத்து நாளா விக்கிரவாண்டி வீதிகளில் நின்று காட்டுக் கத்தா கத்துறோம்.. ஒரு ஊடகம் எட்டிப் பார்க்கல..

இன்று திராவிட மேதைகளின் உதவியோடு ‌.. கதர் பெரியப்பா க்களின்
ஆட்டத்தால்.. இன்னிக்கு தான் நாங்கள் பேசப் படுறோம்.

இதிலென்ன பெரிய காமெடி என்றால்..
ராஜீவ் காந்தியை கொன்று விட்டார்கள் ராஜீவ் காந்தியை கொன்று விட்டார்கள் என்று இவர்கள்தான் கத்திக்கொண்டு இருந்தார்கள்.

ஆமா.. ராஜீவ்காந்தியை கொன்னுட்டோம் னா சண்டைக்கு வருகிறார்கள். உலகத்தில் ஒருவர் பேசியதை இன்னொருவர் ஒத்துக் கொண்டால் கூட சண்டை வருவது இதுதான் முதல் முறை. ????????????

ராஜீவ் காந்தியை நாங்கள் கொலை செய்யவில்லை என்று நாங்கள் கதறிய போதும் சண்டைக்கு வந்தார்கள்.
சரி சண்டைக்கு வருகிறார்களே.. இவர்கள் சொல்வதை ஒத்துக் கொள்வோம் என்று ஆமாம் ராஜீவ் காந்தியை கொன்று விட்டோம் என்று சொன்னால் போதும் சண்டைக்கு வருகிறார்கள்.

சும்மா இருந்தவர்களை சொறிஞ்சி விட்டுட்டானுகளே.. என ராஜீவ் காந்தியின் ஆன்மா கூட அலறுகிற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

================================

ராஜீவ் காந்தி படுகொலை நடந்து … வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றம் வரை நடைபெற்று இறுதித் தீர்ப்பு வெளியாகி விட்டது. அதன் பிறகு தூக்குத்தண்டனையாக இருந்த முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாகவும் மாற்றப்பட்டுவிட்டது.

வழக்கு முடிந்துவிட்டது. தண்டனை வழங்கப்பட்டு விட்டது. தண்டனைக் காலத்தை ஏறக்குறைய 28 வருடங்கள் ஏழு தமிழர்களும் அனுபவித்து விட்டார்கள். அதன்பிறகு தமிழக சட்டமன்றம் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஒருமனதாக தீர்மானம் இயற்றி அந்தத் தீர்மானம் ஆளுனர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

ஏறக்குறைய அனைத்தும் முடிந்துவிட்ட ஒரு வழக்கு அது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி படுகொலையை பற்றி பேசினால் எழுவர் விடுதலை பாதிக்கப்படும் என்று உளறுவது அப்பழுக்கற்ற 100 சதவீத முட்டாள்தனம்.

ராஜீவ் காந்தி படுகொலை பற்றி அண்ணன் சீமான் பேசிய கருத்திற்கும் எழுவர் விடுதலைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

எழுவர் விடுதலை என்பது ஆளுநர் கரத்தில் நிலுவையில் இருக்கின்ற ஒரு கோப்பு. முடிந்துபோன வழக்கொன்றில் தண்டனை முழுமையாக அனுபவித்த குற்றஞ் சாட்டப்பட்டவர்களின் விடுதலை நடவடிக்கை.

அரசியல் உரையாடல்கள் பாதிப்பை ஏற்படுத்தாத அலுவலகம் சார்ந்த நடவடிக்கைகளை கொண்ட விவகாரம் அது.

ஏற்கனவே அண்ணன் சீமான் மீது இருக்கின்ற எக்கச்சக்க வெறுப்பினை தீர்த்துக்கொள்ள திராவிட கும்பல் இந்த விஷயத்தையும் இவ்வாறாகவே இழிவாக கையாளும் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுதான்.

பொம்மை காந்தியை நிற்க வைத்து
ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கும்பல் சுட்டு கோட்சேவுக்கு ஜே போட்டபோது.. இந்த அறிவுரை திலகங்கள் நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.

வரலாறு அனைத்தையும் மாற்றும்.. காலம் அனைத்தையும் கடத்தும் என்றக் கருத்தில் காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் காரர்கள் வரிசையாக உட்கார்ந்து கொண்டு ஆமா காந்தியை நாங்கள் சுட்டோம் என்று சொன்னபோது..

நாங்களும் சொல்லிவிட்டுப் போகிறோம்.
ராஜீவ் காந்தி நாங்கள்தான் கொன்றோம் என்று.

இதைத்தான் அண்ணன் சீமான் பேசினார்.

உடனே பாய்ந்து கொண்டு இவர்களைத் தடை செய்ய வேண்டும் ,கைது செய்ய வேண்டும் என்று கதர் கூட்டம் ஒருபக்கம்
தாவித் தாவி குதிக்க..

மறுபக்கம் திராவிட கும்பல் இவர்களால் 7 தமிழர் விடுதலைக்கு சிக்கல் வந்துவிட்டது என்று தவ்வி தவ்வி குதிக்க..

இன்னா நாடகம் டோய்..

அப்புறம் என்ன ……. க்கு 7 தமிழரை விடுதலை செய்யக்கூடாது என கேட்கும் காங்கிரசோடு.. திராவிடக் கும்பல் கூட்டு வைத்திருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா..??

அது வேறு இது வேறு என்றால்..
இதுவும் வேறுதான்.

தமிழர்களான எங்களை நோக்கியே எப்போதும் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.

நாங்களும் குற்ற உணர்வுடன் தலையை ஆட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

எங்களது இன்னொரு தாய் நாடு தரிசாக அழிந்தாலும்.. எங்களது சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டாலும் இந்த குற்ற உணர்வால் நாங்கள் பேசக்கூடாது.

ஏனெனில் நாங்கள் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்.

இதை காட்டி காட்டித்தான்.. நாங்கள் அனைத்தையும் இழந்தோம்.

ஏனெனில் நாங்கள் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்.

28 வருடங்களாக மீண்டும் மீண்டும் இதே குற்றச்சாட்டு.. மறுத்தாலும் அதே நிலைதான். ஏற்றாலும் அதே விலைதான்..

ஏற்று விட்டே போகிறோம்.

இப்போதுதான் வரலாற்றில் முதல்முறையாக குற்ற உணர்வால் குனிந்த கூட்டம் நிமிர்ந்து பதிலளிக்க தொடங்கியிருக்கிறது.

ஆமா.. அதுக்கு என்ன இப்போ..???

===============================================================================

ஆமாம்.. அவன் பேசினான்..

கடந்த 28 வருடங்களாக தமிழர்களை ராஜீவ் காந்தியை கொன்று விட்டார்கள்.. ராஜீவ்காந்தி கொன்றுவிட்டார்கள்.. என்று ஒரு இனத்தை அழித்து ,ஒரு நாட்டை அழித்து, ஒரு தேசிய இனத்தை அரைநூற்றாண்டு காலமாக குற்ற உணர்விற்கு உள்ளாக்கி இழிவு படுத்தியவர்களை நோக்கிய அறச்சீற்றம் அது.

அடிக்க அடிக்க அடி வாங்கி குனிந்து கிடக்கிற ஒரு அடிமை தேசிய இனத்தின்
மீள் எழுச்சி எல்லோரும் சொல்வது போல நாசுக்காக.. நாகரீகமானதாக எல்லாம் இருக்காது தான்..

சிலவற்றை மோதிதான் உடைக்க வேண்டி இருக்கிறது. இனி தமிழரை நோக்கி எவராவது ராஜீவ் காந்தியை கொலை செய்து விட்டீர்கள் என்று சொன்னால்‌‌.. ஆமாம்.‌ அதற்கு என்ன இப்போ.. என்று கேட்டுவிட்டு கடந்து போக ஒரு காலம் உண்டாகி விட்டது.

இப்படித்தான் பிரபாகரனை பற்றி பேசவோ , எழுதவோ அவர் படத்தை வைத்துக் கொள்ளவோ உரிமை இல்லாத ஒரு காலம் இருந்தது.

அவன் வந்தான்.

மற்றவரெல்லாம் ஈழநாடு எங்கோ தூரத்தில் இருக்கும் தீவு போல.. ஈழ விடுதலையை ஆதரித்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவனோ ஈழ விடுதலை என் விடுதலை… என் இனத்தின் விடுதலை என்று முழங்கினான்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்றெல்லாம் எதுகை மோனையில் பலரும் முழங்கிக் கொண்டிருக்க..

அவனோ பிரபாகரன் என் அண்ணன்.. என் தலைவன் என்று முழங்கினான்..

வீட்டுக்கு வீடு புகைப்படமாய், சட்டை படமாய், பதாகை படமாய் தமிழனின் திருவுருவாய் தலைவர் மாறிப்போனார்.

தமிழ்நாட்டில் திராவிடன் ,இந்தியன், என்றெல்லாம் ஆயிரத்தெட்டு கொள்கை குழப்பங்கள்,கோட்பாட்டு குடைசல்கள்..

வந்தான் அவன்.

நாம்தமிழர் என்று முழங்கினான். அவன் வருகைக்குப் பின்னால் திராவிடத்தின் பேரில் இங்கு கட்சி என்ன.. ஒரு குச்சி கூட முளைக்கவில்லை.

அதே போலத்தான்..

ராஜீவ் கொலையாளிகள் என்று யாரும் பேச முடியாத ஒரு காலகட்டம் இருந்தது.

திமுக ஆட்சி காலத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில்.. ஆறு மாதம் அவன் சிறையில் அவர்களோடு இருந்தான்.

வெளியே வந்து அவன் தான் முதன்முதலில் முழங்கினான்.

7 தமிழர் விடுதலை.. எம் இனத்தின் விடுதலை என்று.

அவன் தான் இன்று பெரும் சீற்றமாய்
வெடித்திருக்கிறான்.

தண்ணீரில் அழுத்தப்படும் பந்து எப்படி மேல்நோக்கி திமிறி எழுமோ.. அப்படிப்பட்ட திமிறல் அது.

ஆமாம்.. அதற்கு என்ன இப்போ.. என்று மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகுபவனின் உச்சகட்ட கொதிப்பு அது..

அப்படித்தான் அவன் அன்றும் பேசினான்.
இன்றும் பேசுகிறான்.

தடைகளை உடைக்க.. தளராமல் அவன் பேசிக் கொண்டு இருக்கிறான்.

செந்தமிழன் சீமான் என்பது பெயர் அல்ல.

நிகழ மறுக்கும் பொற்காலத்தை
கட்டி இழுத்து வந்து
நிகழ்காலத்திலேயே நிகழ்த்திக்
காட்டும் தமிழரின் எதிர்காலம்.

================================================================================================

தமிழ்த் தேசியவாதியா.. பெரியார்..??

எப்போதும் இல்லாத அளவிற்கு திராவிட கருத்தாக்கம் வலுவான எதிர் தாக்குதலை தனது வரலாற்றில் முதன்முதலாக எதிர்கொள்கிறது. திராவிடம் ஆரியத்தை எதிர்த்த கதை என்பது.. ஏறக்குறைய தடவிக் கொடுத்தது போல.. மென்மையான ஏசல், கேலி ,கிண்டல் போன்ற அளவில் ராஜாஜி- பெரியார் இடையிலான உறவு போன்ற நட்பு முரண்களோடு இருந்தது.

காலப்போக்கில் ஆரியம் திராவிடத்தை செரித்துக் கொண்டதையும், திராவிடம் மிக எளிமையாக ஆரியத்தை உள்வாங்கி கொண்டதையும் ஒளிவு மறைவின்றி வரலாற்றின் ஓட்டத்தில் காண முடிகிறது.

ஆனால் தமிழ்த்தேசியக் கருத்தாக்கமோ தன் இயல்பிலேயே ஆரிய வைதிக எதிர்ப்பை மரபுவழியில் கொண்டிருக்கிறது. தமிழ்த்தேசியர்கள் நவீன அரசியல் களத்தில் ஆரியத்தையும், திராவிடத்தையும் சமமான தராசுத் தட்டில் வைத்து தகர்த்து வருகிறார்கள்.

ஆரிய- இந்துமத எதிர்ப்பில் விளைந்ததாக கூறப்படும் திராவிட கருத்தாக்கத்தின் மாபெரும் அரசியல் அமைப்பான திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் தனது கட்சியில் 90% இந்துக்கள் என பேசுகிறார். மதிமுகவின் தலைவர் வைகோ 99% கோவிலுக்கு போகிறார்கள் என்று பெருமிதம் கொள்கிறார்.

ஆனால் சமகால தமிழ்த் தேசிய அரசியல் அமைப்பான நாம் தமிழர் கட்சி தமிழர்கள் இந்துக்கள் அல்ல என தீர்மானம் இயற்றுகிறது.

திராவிடத்தை பொறுத்தவரையில் இந்து என்பது மாபெரும் அடையாளமாக, பெருமிதமாக மாற்றப்பட்டு விட்டது. திராவிடத் தலைவர்களின் குடும்பத்தினர் அத்திவரதரை பார்க்க வரிசைக் கட்டி அணிவகுத்து நின்றதை அனைவரும் பார்த்தோம். இந்து மத எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு ,கடவுள் மறுப்பு போன்ற முனைகளில் திராவிடத்தின் முனைகள் மழுங்கி .. வலுவிழந்து, வழக்கொழிந்து போய்விட்டது.திராவிடக் கட்சிகளுக்கு பெரியாரே ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வாகவும், பலசமயங்களில் தர்மசங்கடம் ஏற்படுத்துகிற தத்துவத் தொந்தரவாகவும் கருதப்படுகிறார்‌.

முன்னுக்குப் பின்னான கருத்தியல் முரண்களாலும், அரசியல் சமூக வெளிகளில் சுயநலம் சார்ந்த சமரசங்களாலும் பலமுனைகளில்.. தத்துவப் போதாமை ஏற்பட்டு தள்ளாடுகிற திராவிடக் கருத்தாக்கத்தை தூக்கி நிறுத்த கலைஞர் டிவியின் திருமாவேலன் போன்றோர் கிளம்பி இருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. இது வழக்கமான செஞ்சோற்றுக்கடன் என்றாலும் வரலாற்றை மாற்றி எழுதுகிற வழக்கமான திராவிட யுக்தியை திருமாவேலனும் செய்யத் துணிந்திருக்கிறார். .. முழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில்.. விளக்கு ஏற்றுகிற வில்லங்க வேலையை விபரீதமாக செய்திருக்கிறார்.

அவர் எழுதுகிற எழுத்துக்களே அவருக்கே எதிராக அமைகிற.. பெரியாருக்கு பெரியாரையே எதிராக நிற்க வைக்க முயல்கிற வில்லங்க பதிவு ஒன்றை.. சமீபத்தில் அவர் பேசியிருக்கிறார்.22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இணையதளங்களில் கிடைக்கிறது.

திராவிடம் என்றாலே தமிழ் தானாம்.அப்படிதான் பாவாணர் சொன்னாராம். பாவாணர் சொன்னதையாவது ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று திருமாவேலன் பரிதாபமாக கேட்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் தொடக்க காலங்களில் திராவிடப் பண் என்றெல்லாம் எழுதி திராவிட இயக்கங்களுக்கு தன்னுடைய மகத்தான ஆதரவை வழங்கியவர். அதே பாவேந்தர் தான் இறுதிகாலத்தில் முழுமையான தமிழ்த் தேசியராக மாற்றமடைந்து திராவிடம், திராவிடர் என்பதான சொற்களை நீக்கி தன் கவிதைகளில் தமிழ், தமிழர் என்ற சொற்களை இணைத்து நாம் தமிழர்.. நாம் தமிழர் என்று முழங்கியவர்.

அதேபோலத்தான் பாவாணரும்.. திராவிடத்திற்கு ஆரம்பகாலத்தில் சில ஆதரவு பதிவுகள் செய்தாலும்.. இறுதி காலத்தில் திராவிடம் என்பதையே ஒழிக்க வேண்டும் என்றும், திராவிடத்தை கடைபிடித்தால் தமிழ் தாழும் என்றும் தமிழியற் கட்டுரைகள் எழுதியவர். பாவாணரின் சிந்தனைப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள் அவரது நூல்கள் முழுக்க பரவிக்கிடக்கின்றன. தமிழின உணர்வோடு திராவிட எதிர்ப்போடு தமிழியல் கட்டுரைகளை எழுதிய பாவாணரை சுட்டிக்காட்டுவதும், மேற்கோள் காட்டுவதும் திருமாவேலன் சொல்ல வந்த கருத்திற்கு எதிராக அவரே மாறக்கூடிய அபாயம் இருக்கிறது.

மறைமலை அடிகள் சொன்னார்.., பாவாணர் சொன்னார்.. என்றெல்லாம் சாட்சிக்கு ஆள் கூப்பிட்டு வந்து வலுவில்லாத வழக்கை வலுக்கட்டாயமாக திருமாவேலன் நடத்தி பார்க்கிறார். மறைமலை அடிகளின் ஆரிய எதிர்ப்பு புத்தகம் பெரியார் இயக்கத்தவர்களின் கூட்டத்தில் தான் அதிகம் விற்றது என்று மறைமலை அடிகள் மகிழ்ச்சி அடைந்தாராம். நல்ல வேளை அவர் அப்போதே இறந்துவிட்டார்.
அவர் ஆரிய எதிர்ப்பு புத்தகம் ஜெயலலிதாவுக்கு தி.க சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்த கூட்டத்திலும், பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து திமுக நடத்திய பல்வேறு கூட்டங்களிலும் விற்கப்பட்டதா என்பதைப் பார்க்க அவர் இல்லை.

முதலில் தேசியம், மொழி, இனம் குறித்து பெரியார் சொன்ன கருத்துக்களை சுட்டிக்காட்டி பெருமித கதையாடல்கள் பேசுவது என்பது மிகுந்த ஆபத்தானது. ஏனெனில் பெரியாரே அவைகளிலிருந்து கடுமையாக முரண்பட்டு எழுதியும் பேசியும் இருக்கிறார்.

பெரியாரின் கருத்துக்கள் ஐயா ஆனைமுத்து அவர்கள் தொகுத்தளித்த பெரியார் சிந்தனைகள் தொகுப்புகள் மூலம் நமக்கு கிடைக்கின்றன. பெரியார் தன் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் மேடைகளில் பேசியும், விடுதலை, குடியரசு போன்ற அவரது இதழ்களில் எழுதியும் தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். அவை அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு நமக்கு காணக் கிடைக்கின்றன.

பெரியாரை அறிதல் என்பது நமக்கு பல தன்மைகளில் நிகழ்கிறது. தலைவர்கள் அறிஞர்கள் பேச்சின் ஊடாக, பெரியாரின் சிந்தனைகள் தொகுப்பு நூல்கள் மூலமாக, பெரியாரைப் பற்றி பலர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்கள் மூலமாக பெரியாரை அறிதல் நமக்குள்ளாக நிகழ்கிறது.

எனவே தெரிந்ததை வைத்து பெரியாரை ஒரு சட்டகத்துக்குள் அடக்க துணிவது என்பது பெரும்பாலும் பிழையாகவே முடிந்திருக்கிறது. இதுபோன்ற மயக்கங்கள்/விபத்துகள் எனக்கும் நிறைய நடந்திருக்கின்றன.நானும் இதே மயக்கங்களோடு பல நூறு பக்கங்கள் இவ்வாறெல்லாம் எழுதி இருக்கிறேன். ஆனால் பெரியாரின் தொடர்ச்சியாக வாசிக்கும்போது தான் பெரியார் கட்டமைக்கப்பட்ட எதற்கும் எதிராக இருந்திருக்கிறார் என்பதும் மதம், சாதி, கிராமம், இனம், குடும்பம் ,மொழி, தேசியம் போன்ற பல கட்டமைப்புகளை பெரியார் பகிரங்கமாக எதிர்த்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

சாதி ஒழிய கிராமம் ஒழிய வேண்டும் என்ற பெரியார், பெண்ணடிமை தீர குடும்பம் என்ற அமைப்பு அழிய வேண்டும் என்றார். ஒரு கட்டத்திற்கு அதிகமாக சென்று பெண்கள் தங்கள் அடிமை நிலை ஒழிய தங்கள் கருப்பைகளை நீக்கிக்கொள்ள வேண்டும் என்றும் முழங்கினார்.

மொழி இனம் தேசியம் போன்ற கருத்துக்களில் தனது நம்பிக்கையின்மையை பெரியார் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

திராவிட கருத்தாக்கத்தின் தந்தை என அழைக்கப்பட்டவரை தமிழ்த்தேசியத்தின் மூலவர் என கலைஞர் டிவியின் திருமாவேலன் திடீர் பட்டம் சூட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கெல்லாம் என்ன பயம் என்றால்.. எங்கே உதயநிதியை தமிழ்தேசிய தத்துவத்தின் இளவரசர் என்று திருமாவேலன் சொல்லி விடுவாரோ என்றுதான்..

எதற்காக எந்த விபரீத முயற்சி என்று யோசித்தால்.. வலுவிழுந்து கிடக்கும் திராவிட தத்துவத்தை நிமிர்க்கும் வேலை இல்லை இது.. எந்தப்பக்கம் வலுவாக இருக்கிறதோ.. அந்தப் பக்கம் வான்டட் ஆக வண்டியில் ஏறுகிற வாய்ச்சாங்குளி வேலை.

இது தான் பெரியார் மண் ஆயிற்றே.. இங்கே தமிழ் தேசியம் எல்லாம் எடுபடாதே.. திராவிட தீரர் வைகோ சொல்வதுபோல தமிழ் தேசியம் என்ற பெயரில் சிலர் வருகிறார்கள் அது இங்கே எடுபடாது என்ற வகையில் எதற்காக இந்த வீண் வேலை என்று திருமாவேலனிடம் சர்வ யோக்கியதை அம்சங்கள் உள்ள எந்த திராவிடராவது கேட்பாரா என்பது தனிக் கேள்வி.

இன்னும் இதை ஆழமாக கேட்க வேண்டும் என்றால் ஒரே ஒரு கேள்வி தான் நினைவுக்கு வருகிறது.

பயமா இருக்கா குமாரு..??

*********

மொழி பற்றி பெரியார் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.அவர் குறிப்பிட்ட கருத்துக்களிலியே அவர் முரண்பட்டு இருக்கிறார்.

மொழி என்பது உரையாடுவதற்கான கருவி மட்டுமே என்றும் அதில் பெருமிதம் கொள்ளவோ பெருமையடையவோ எதுவுமே இல்லை என்றும் பெரியார் பல இடங்களில் பேசி இருக்கிறார்.

திமுக முதன்முதலில் ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறது. பதவி ஏற்பதற்கு முன் திமுக தலைவர் அண்ணா அவர்கள் தனது அரசியல் குருவான பெரியாரை தனது அமைச்சரவை யோடு நேரடியாக சந்தித்து இந்த ஆட்சியே உங்களுடையதுதான் என்று சொல்லி ஆசி பெற்று பதவி ஏற்கிறார்

அண்ணா ஆட்சிக்காலத்தில் 1968-ம் வருடம் ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் உலக தமிழ் மாநாடு நடந்தது. மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அறிஞர்கள் சிலைகள் அந்த மாநாட்டில்தான் நிறுவப்பட்டன.

அந்த மாநாடு குறித்து.. 15.12.1967 தேதிய விடுதலை நாளேட்டில் பெரியார்..
உலகத் தமிழ் மாநாடாம்.. வெங்காய மாநாடாம்.. இது எதற்கு.. கும்பகோணம் மாமாங்கத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்க போகிறது என்று மிகக்கடுமையாக சாடி அறிக்கை விட்டார்

மொழி பற்றி பெரியாரின் கருத்துக்கள் திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழும் தமிழரும் என்ற நூலின் வாயிலாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூல் முதன்முதலாக வெளியிடப்பட்டபோது இதன் தலைப்பு தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்.. எப்படி..?? .. பிறகுதான் இந்த நூலின் தலைப்பு தமிழும் தமிழரும் என்று மாற்றப்பட்டது.

அந்த நூலில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன. தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என கடந்த 40 வருடங்களாக கூறி வருகிறேன் என பெரியார் தன்னிலை விளக்கம் அளித்து அதற்கான தர்க்கத்தை பல்வேறு பத்திகளில் விவரிக்கிறார்.

தமிழை விலக்கி தமிழருக்கு என்ன நஷ்டம்.. வேற்று மொழியை ஏற்றுக் கொள்வதால் என்ன பாதகம் வந்துவிடப்போகிறது என்றெல்லாம் கடுமையாக தாக்கி இருக்கிறார்.

மொழி என்ற ஒரு தேசிய இனத்தின் அடிப்படை பண்பினை பெரியார் ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கிறார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதை கடுமையாக விமர்சித்த பெரியார் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

மொழியின் மீது ஒரு நாடு எதற்காக பிரியவேண்டும்.. மொழியினால் பெருமை சிறுமை லாப நஷ்டம் ஒன்றுமே இல்லை.. சாதியின் மீது மதத்தின் மீது இனத்தின் மீது பிரிவதாக இருந்தால் கூட அதற்கு அர்த்தம் உண்டு.ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட பொருத்தமற்ற ஒற்றுமையற்ற கொள்கைகள் திட்டங்கள் உண்டு. மொழிகளில் அப்படி கொள்கையோ, திட்டமோ, அனுபவமோ, கலாச்சாரமோ, பழக்கவழக்கமோ, மாற்றமாய் இருக்கும்படி நமக்குள் எந்த மொழியுமே இல்லை. ஆதலால் இதை காரணம் காட்டி பிரிந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை.(பெரியார் சுயமரியாதை சமதர்மம் எஸ்விஆர் பக்கம் 824)

தன்னுடைய தமிழ் ஆதரவு பற்றியும் இந்தி எதிர்ப்பு பற்றியும் மிகத்தெளிவாக பெரியார் ஒரு கருத்தினை முன் வைக்கிறார்.

எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்காகவோ தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல என்பதை தோழர்கள் உணர வேண்டும். மற்றெதற்கு என்றால் ஆங்கிலமே பொதுமொழியாக ,அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

ஆகையால் தமிழர் தோழர்களே..! உங்கள் வீட்டில் மனைவியுடன் குழந்தைகளுடன் வேலைக்காரிகள் உடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள் பேசப் பழகுங்கள்.(27.01.69 விடுதலை)

தமிழை காட்டுமிராண்டி மொழி என 40 ஆண்டுகளாக கூறி வருகிறேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும் அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன். என பெரியார் தெளிவாக தெரிவிக்கிறார்.

நம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளை தமிழில் நடத்துகிறோம். சமயத்தை ,சமய நூல்களை, இலக்கியத்தை தமிழில் கொண்டிருக்கிறோமே..! சரி ..இதற்கு மேல் சரியான தமிழுக்கு என்ன வேண்டும்..(ஈவேரா சிந்தனைகள் பாகம் 2 பக்கம் 985)

தான் ஒரு தேசியவாதியாக அல்ல ஒரு சீர்திருத்தவாதியாகவே அழைக்கப்பட விரும்புகிறேன் என பகிரங்கமாக அறிவித்தவர் பெரியார். அவரைப் பொறுத்தவரையில் எல்லாவற்றையும்விட சமூக சீர்திருத்தமே முதன்மையான கருப்பொருளாக இருந்தது.

பெரியார் தன் வாழ்வில் தன் கருத்துக்களில் நிறைய முரண்பட்டு இருக்கிறார். அதை அவர் ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்.

நான் மாறுதல் அடைந்து விட்டேன் என சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. இந்தமாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும் நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற் போல் நடந்து தான் தீரும். நாளை நான் எப்படி மாறப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால் நான் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
-குடியரசு 11.10.1931.

பெரியார் தன் வாழ்வில் மூன்று நிலைப்பாடுகளை அவ்வப்போது எடுத்திருக்கிறார். 1930 களில் தொடங்கி ஏறத்தாழ 1938 வரையிலான காலங்களில் தமிழ்நாடு தமிழருக்கே என்றார். 1939 தொடங்கி 1957 வரையிலான காலகட்டங்களில் திராவிடநாடு என்ற முழக்கத்தை முன் வைத்தார். 1958 ல் இருந்து தன் வாழ்நாள் முடிய தனித்தமிழ் நாடு, தமிழ்நாடு தமிழருக்கே போன்ற முழக்கங்களை முன்வைத்தார்.

இவை ஒவ்வொன்றும் பெரியாரிடம் புறச்சூழல் சார்ந்து ஏற்பட்ட சிந்தனை மாற்றங்களாகும். மொழி இனம் தேசியம் ஆகியவை குறித்து நிரந்தரமான கொள்கை முடிவு எதையும் பெரியார் தன் வாழ்வில் எடுத்ததில்லை.

பெரியாரை அவரது கருத்துக்கு மூலமாகவே அணுகவேண்டுமே ஒழிய, அவரவர் கருத்திற்கேற்ப பெரியாரை மொழிபெயர்ப்பது என்பது பெரியாருக்கே எதிரானது.

எனக்கு எந்த மொழி இனம் மீதும் பெரியப் பற்றில்லை.
ஒரு கட்டத்தில் நான் உலகளாவிய மனிதனாக மாறி விடுவேன் என்று சொன்ன பெரியாரை தான் திருமாவேலன் தமிழ்த்தேசியத்தின் மூலவராக அமர வைக்க முயற்சிக்கிறார். எவ்விதமான அரசியல் சுயநல கணக்குகள் இன்றி பெரியாரை மிகச்சரியாக வாசித்தவர்களுக்கு திருமாவேலனின் இந்த முயற்சி அடிப்படையிலேயே எவ்வளவு பிழையானது என்று நன்கு புரியும்.

நம்மால் ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது. மிகத்தீவிர திராவிட ஆதரவாளர் திருமாவேலனுக்கு கூட பெரியாரையும் தமிழ்த் தேசியராக அடையாளப்படுத்தவே விருப்பம் இருக்கிறது.

இனி திராவிடம் என்பது இல்லாத அழிந்துப்போன ஒரு தத்துவமாக தகர்ந்து விட்டது. இனி திராவிடத்தின் மூலவராக பெரியாரை காட்டி எந்த அரசியல் ஆதாயம் பெற முடியாது என்ற காரணத்தினால் .. தற்காலத்திய இளைஞர்களின் மாபெரும் ஈர்ப்பான பூர்வகுடிகளின் அரசியல் தத்துவமான தமிழ்த்தேசியத்தின் மூல இருக்கையில் பெரியாரை அவரது உளமார்ந்த கருத்தியல் அம்சங்களுக்கு விரோதமாக அமர்த்தி விட முயற்சிக்கிறார்.

பெரியாரின் சமூக பங்களிப்பு என்பது வேறு. பெரியாரின் மொழி, தேசிய இன சிந்தனைகள் என்பது வேறு. முன்னது போற்றத்தக்கது. பிந்தையது புறக்கணிக்கத் தக்கது.

தமிழர் என்ற சொல் எவ்வாறு தமிளொ த்ரமிள த்ரமிட திராவிட என திரிந்து திராவிடர் ஆனது என்கின்ற கால்டுவெல்லின் பழைய பஞ்சாங்கத்தை பாவாணரை மேற்கோள்காட்டி திருமாவேலன் பயன்படுத்தி இருப்பது அவலச்சுவையானது. மொழி அறிஞர் கால்டுவெல் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்ந்து ஒப்பிட்டு ஆய்வு நடத்தி திராவிட இனம் என்கின்ற ஒன்றை புதிதாக கண்டறிந்தார். வரலாற்றில் அதற்கு முன்பாக திராவிட இனம் என்ற ஒன்று இல்லவே இல்லை. அதே பாவணர் தான் தமிழுக்கு திராவிடம் தீது என்றவர்.

மொழிகளுக்கு அடிப்படையே இருக்கக்கூடிய ஒற்றுமைகளை வைத்துக்கொண்டு வரலாற்றையும் இனத்தையும் முடிவு செய்வதென்பது கற்பனையானது என்று மொழி அறிஞர் தாமஸ் டிரவுட்மன் தெரிவித்திருக்கிறார்.

கால்டுவெல் காலத்தில் சுமார் 12 மொழிகள் திராவிட மொழிகள் என அடையாள படுத்தப்பட்டன. கால்டுவெல் முறைமையிலேயே மொழி ஒப்பியல் ஆராய்ச்சி நடைபெற்று தற்காலத்தில் ஏறத்தாழ 85 மொழிகளை திராவிட மொழிக் குடும்பத்தில் மொழி அறிஞர்கள் இணைத்துள்ளனர்.

அதைத்தான் பாவாணர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்..

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும் , தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடுகூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.

(பாவாணர் 1959)

ஏறக்குறைய 85 மொழிகள் பேசுபவர்கள் அனைவரையும் திராவிடர்களாக மாற்றிவிட்டோம் என்றால்.. அண்ணா அறிவாலயம் அகிலத்தின் அறிவாலயம் ஆக மாறிவிடும் இல்லையா.. திருமாவேலனின் எஜமானர்கள் ஏறக்குறைய அரைவாசி உலகத்தின் தலைவர்களாக ஆகிவிடுவார்கள் இல்லையா.. அதைத்தான் திருமாவேலன் தமிழ் என்றால் திராவிடம் ..திராவிடம் என்றால் தமிழ் ..என்றெல்லாம் எழுதியும் பேசியும் புலம்பியும் வருகிறாரோ.. (?)

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழர் என்கின்ற தனித்த தேசிய இனம் தனது அடையாளங்களை காப்பாற்றிக்கொள்ள எழும்பி வருகிறது.
அந்த மீளெழுச்சிக்கு வலுவூட்ட கீழடி போன்ற முதுபெரும் தமிழின அடையாளங்கள் பெருமித வலிமையை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை திராவிடத்தின் பெயராலும் அதன் அரசியலின் பேராலும் தமிழர்கள் வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டதை நினைத்து விழித்துக்கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். இந்த விழிப்பு தான் பிழைப்புவாதிகளான திராவிட அரசியல் தலைகளுக்கு சாவு மணியாக அலாரம் அடிக்க தொடங்கியிருக்கிறது.
அதனால் தான் தனக்கு சேவகம் செய்கிற திருமாவேலன் போன்ற சேவகர்களை வைத்து இல்லாததையும் பொல்லாததையும் பேசியும் எழுதியும் அற்று விழும் திராவிடத்தை கட்டி எழுப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள்.

அது திருமாவேலனால் மட்டுமல்ல..இனி எவராலும் முடியாது.

இனி திராவிடர்களுக்கு சொல்வதற்கு உண்மை ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.

முடிந்துவிட்டது. கிளம்புங்கள்.

கீழடி ஆய்வும், திராவிடப்புலம்பலும்..

 

கீழடியில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து விட்டன என்றவுடன்… திராவிட கும்பலுக்கு உடலெங்கும் வியர்த்து கொட்டத் தொடங்கி விட்டது.

எங்களின் மொழித் தொன்மை, இலக்கிய இலக்கண வளமை, பற்றி எந்த செய்தி வந்தாலும் உடல் நடுங்கி, நாக்கு குழற உளரத்தொடங்குவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

நாங்கள் சொல்வது மிக எளிது.

பூர்வகுடிகள் நாங்கள். மூத்தோர் வழிபாடும்,நாகரிகமும், கல்வியறிவும் கொண்ட ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்.
நாங்கள் தனித்த தேசிய இனம். நாங்கள் திராவிடர் இனம் அல்ல. நாங்கள் தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் மக்கள். எமக்கென கலை பண்பாடு நாகரிகம் கல்வி என்ற பல காரணிகளின் வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. பண்பாட்டு செழுமை இருக்கிறது.

அதைத்தான் கீழடி உறுதி செய்கிறது.

இதுவரை… புற அரசியல் செயல்பாடுகளை வைத்துக்கொண்டு தமிழ் தேசிய இனத்தின் வரலாற்று மூலங்களை மறைத்து பொய் வரலாறு எழுதிய திராவிடத்தின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.

திராவிட இயக்கத்தின் வளர்ச்சியால் தான் தமிழர்கள் அனைத்தும் அடைந்தார்கள் என்ற பொய்க்கதை கீழடி போன்ற உண்மைகள் வெளிவருவதால் இன்றைய இளைய தலைமுறை தமிழர்களால் எள்ளி நகையாடப்படுகிறது.

கல்வியறிவு என்பதை இவர்கள் கையெழுத்து போடுவது மட்டும் தான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பண்பாட்டின் தொடர்ச்சி மூலம், வரலாற்று செழுமை மூலம் அடைந்த அறிவும் ..கல்வியறிவே. அவ்வகையில் தமிழர்கள் தங்கள் வாழ்வியல் மூலமாக அடைந்திருந்த வானியல், வேளாண்மை, பொருளாதாரம், உணவு முறை, மெய்யியல் என பல துறைகளின் உச்சம் திராவிடர்கள் சுட்டிக்காட்டுகிற கல்வி அறிவை விட உயர்ந்தது. அதைத் தமிழர்கள் தங்கள் மரபின் தொடர்ச்சி யிலேயே இயல்பாக பெற்றிருந்தார்கள்.

இடையில் வந்த ஆரியர்கள் எம் இனத்தின் வரலாற்றை மாற்றி எழுதி தங்கள் வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்ட.. எமது வழிபாட்டை பண்பாட்டை நாகரீகத்தை கொள்ளையடித்தார்கள்.

ஆனாலும் நாங்கள் சித்தர் மரபில் இருந்து ஆரிய எதிர்ப்பை மிகச் சரியாக கடைப்பிடித்து வருகிறோம். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை எங்கள் மன்னனாக கொண்டோம். ஆரிய மன்னர்கள் கனக விசயன் தலையில் கல் எடுத்து வந்து கண்ணகிக்கு கோவில் கட்டினோம். ஆரிய எதிர்ப்பு என்பது எங்களது மரபு. உதிரத்தோடு கலந்தது.

அதை எந்த திராவிடமும் எங்களுக்கு கற்பிக்கவில்லை.

எங்களது பல்வகை அறிவு வளர்ச்சியின் தொடக்கம் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னதாக நிகழ்ந்திருக்கிறது என்பதைத்தான் கீழடி ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.

எங்களது பண்பாட்டு வரலாற்று மூலத்தை நினைத்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம். எங்களது வேர் 5000 வருடத்திற்கு முந்தையது என எண்ணி பெருமையடைகிறோம்.

 

சரி.

அதை நினைத்து திராவிடம் ஏன் பதற வேண்டும்..??

காரணங்கள் இருக்கின்றன.

இப்படிப்பட்ட இனப் பெருமிதம் உருவாவது திராவிடத்திற்கு ஆபத்து. இனப் பெருமை உண்டானால் திராவிடத் துணையோடு ஆரியம் கட்டியெழுப்பி இருக்கிற சாதி வேறுபாடுகளுக்கு ஆபத்து எழும். இனப் பெருமை ஏற்பட்டால் தமிழன் சாதி மதம் கடந்து இன ஒர்மை கொள்வான். இன ஓர்மை நடந்துவிட்டால்.. இங்கே திராவிடம் என்ற பெயரில் ஆண்ட ஆள துடிக்கிற பிறமொழியாளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.

திராவிடத்தை ஆதரிக்கிற தமிழர்களுக்கும் இதே சிக்கல். தன் மகன் செத்தால் கூட பரவாயில்லை. மருமகள் கணவனை இழக்க வேண்டும்..(தாலி ..பிரச்சனை வேற..சே..????????). தாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற திராவிடம் இப்படி இடிந்து தரைமட்டமாவது கண்டு சற்றே.. பதற்றம் அடைகிறார்கள்.

எனவேதான் இதுபோன்ற வசவுகள் கிண்டல் கேலி அனைத்தும்..

நாங்கள் மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்.

எதற்கெடுத்தாலும் பெரியாரை முன்னிறுத்துவது.. தங்களது பலவீனத்தை காட்டுவதாக திராவிடர்கள் உணர வேண்டும்.

எங்களது சமூக நீதிப் போராட்டம், கல்வி உரிமைக்கான போராட்டம் எதுவும் பெரியாரிடம் இருந்து தொடங்கியது அல்ல..

பெரியாரும் தமிழினத்தின் சமூக நீதிக்காக கல்வி உரிமைக்காக பெண்ணிய விடுதலைக்காக போராடினார். அவரது பங்களிப்பை போற்றுகிறோம். அவ்வளவே.

ஆனால் அனைத்தையும் மறந்துவிட்டு.. பெரியாரை ஏக ரூப பிரம்மாவாக காட்டுவதென்பது… தொன்மைவாய்ந்த ஒரு தேசிய இனத்தின் வரலாற்றினை இழிவு செய்வது. மாற்றி எழுத முயற்சிப்பது.

திராவிடத்திற்கு எப்போதும் சர்வரோக நிவாரணி ஒன்று தேவைப்பட்டு கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் நீதிக்கட்சி தலைவர்கள், பின் பெரியார், பிறகு அண்ணா இன்னொரு காலத்தில் கலைஞர்.. என இவர்கள் தனிநபர்களை முன்னிறுத்தி தத்துவங்களாக மாற்ற நிகழ்த்த முயற்சிப்பார்கள்.

ஆனால் தமிழ்த் தேசியம் அவ்வாறெல்ல. அது ஒரு இனத்தின் தேசிய உணர்வு.இறையாண்மை கொண்ட,தொன்மை வாய்ந்த வாழ்வியல் மூலமாக விளைந்த .. வரலாற்றின் போக்கில் அதன் தொடர்ச்சியில் விளைந்த.. உரிமை முழக்கம்.

தனிநபர்கள் தமிழ்த் தேசியத்தின் மூலவர்கள் அல்ல. ஆதிமனிதன் தொடங்கி, சித்தர் வழிபாட்டில் இருந்து செழுமை பெற்று, அகத்தியம் தொல்காப்பியம் திருக்குறள் என பண்டைய இலக்கிய வளங்களால் நிறைந்து.. சைவ, வைணவ, பௌத்த சமண ஆசிவக என பல்வகைப்பட்ட மெய்யியல் கோட்பாடுகளால் வளர்ந்து.. ஒவ்வொரு காலகட்டத்தின் அரசியல் புறச் சூழ்நிலைகளால்.. உருவாகி கொண்டே போவதுதான் தமிழ்த் தேசியம்.

தமிழராகிய எங்கள் உதிரத்தில் ஊறி கிடக்கிற ஆதிமனிதனின் மரபணு தனது முதுபெரும் வரலாற்று தொடர்ச்சியை நினைத்து
பெருமை கொள்ளத்தான் செய்யும்.

அது இயல்பு.

அதைப் பார்த்து திராவிடர்களால் பொறுக்க முடியவில்லை என்றால்.. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

ஏற்கனவே தத்துவத்தின் போதாமை திராவிடத்தின் தோல்வியாக வெளிப்பட்டு கொண்டிருக்கின்ற சூழலில்.. அரசியல் வலிமை மட்டுமே இன்று திராவிடத்தின் கைகளில் இருக்கிறது.

அதையும் அடைய ஒரு இளம் தமிழர் கூட்டம் முன்னேறி பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

அந்த வெறி பாய்ச்சல் சற்றே நாகரிகக் குறைவானது தான். இதுவரை இருந்த இலக்கண விதிகளுக்குள் அடங்காது தான்..

ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்காமல்.. நடுவில் வந்து நின்று மறித்தால் ஓடி வருகிற கூட்டம் மிதித்து விட்டு தான் ஓடும்.

எனவே திராவிடம் அனைத்தையும் மூடிக்கொண்டு.. கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டிய காலம். இல்லையேல் மனுஷ்யபுத்திரன் வகையறாக்கள் போல்.. புலம்பத்தான் வேண்டியிருக்கும்.

கவனம்.

அவரை உங்களுக்கு தெரியுமா ‌…??

அவரை இதுவரை நான் பார்த்ததில்லை.

ஒரு நாள் அலைபேசியில் பேசினார். கட்சியில் இணைய வேண்டும் என்று சொன்னார். சரி . இணைந்து கொள்ளலாம். உங்களை நேரில் சந்திக்க வேண்டுமே என்றேன். இல்லை இல்லை.. எனக்கு வேலை இருக்கிறது.. நான் அதிகம் நேரில் வர முடியாது என்றார்.

சரி .உங்கள் அலைபேசி எண், புகைப்படம், உங்கள் முகவரி ஆகியவற்றை தாருங்கள். நாங்கள் உங்களுக்கு உறுப்பினர் அட்டை தருகிறோம் என்றேன்.

அனைத்தையும் அவர் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைத்தார். எனக்கும் முகநூலில் நட்பு கோரிக்கை அனுப்பினார். சரி. நம் கட்சியை சேர்ந்தவர் ஆயிற்றே‌.. இணைத்துக் கொள்வோம் என இணைத்துக் கொண்டேன். அதிலிருந்து என் முகநூல் பக்கங்கள் எல்லாம் அவரே நிறைய தொடங்கினார். நிறைய கட்சி பதிவுகள். அண்ணன் சீமான் புகைப்படங்கள். தலைவரைப் பற்றி நெகிழவைக்கும் பதிவுகள்.. பல கட்சி உறவுகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவுகள் என்றெல்லாம் அவர் மிக பிஸியாக இருந்தார்.

கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்தோம். அவர் அலுவலக வேலையாக வெளியூரில் இருப்பதாக சொன்னார். கட்சி போராட்டங்களில் தம்பிகள் கைதாகி இருக்கிறார்கள். கொஞ்சம் நேரில் வாருங்கள். அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்வோம் என்று அழைத்தோம். முக்கியமான பணியில் இருப்பதாக சொன்னார்.
கட்சி கட்டமைப்பு கூட்டத்திற்கு அழைத்தோம். அவர் வேலையாக இருப்பதாக சொன்னார். இருந்தும் முக்கிய பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வதாக சொன்னார்.
கொடியேற்ற நிகழ்வுக்கு அழைத்தோம். அவர் கொஞ்சம் பிஸியாக இருப்பதாக சொன்னார். இங்கே அருகில் இருக்கும் தஞ்சையில் நடக்கும் மாவீரர்தின கூட்டத்திற்கு அழைத்தோம். மழை வருவது போல இருக்கிறது. மழை தனக்கு ஒத்துக்கொள்ளாது என்று சொல்லிவிட்டார்.

ஆனால் முகநூல் வழியாக யாரோ கூட்டத்தை நேரலை செய்ய.. அதைப் பார்த்துவிட்டு.. மேடையை வேறு மாதிரி போட்டு இருக்கலாம்.. என்று விமர்சித்து ஒரு பதிவு போட்டார்.

இதன் நடுவில் கட்சி உறவுகள் பல பேருக்கு அவர் தோழமை யாகவும் மாறிப்போனார். முகம் தெரியாத முகநூல் பதிவாளர்களிடம் ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவிற்கு நெருங்கி நட்பு பாராட்டினார். யார் யாரையோ திட்டினார். அவ்வப்போது நடுநடுவே அண்ணன் சீமான் பற்றி இரண்டு இரண்டு பதிவுகள்.

கட்சியைப் பற்றி யாரேனும் விமர்சித்து பதிவு போட்டால் முதல் ஆளாக என்ன நடந்தது என்று இவராக போய் கேட்பார். விமர்சித்து பதிவு போட்டவர் ஏதேனும் குறைகள் சொல்ல.. ஆமாம்.. ஆமாம்.. அப்படித்தான். இங்கு எல்லாம் தவறுதான் என்று பதில் சொல்வார். விமர்சித்தவருக்கு இவர் யார் என்று தெரியாது. இவருக்கும் அவரை யார் என்று புரியாது. ஆனால் அந்தப் பதிவை படித்து பார்ப்பவர்களுக்கு முகம் காட்டாத நமது ஆளும் (?) கட்சியில் முக்கியமான ஆள் என்று நினைக்கும் அளவிற்கு கேள்விகளும் பதிலும் அமைந்திருக்கும்.

ஒரு நாள் அவராகவே எங்களுக்கு அழைத்தார். கட்சி பதாகையில் தனது புகைப்படம் இல்லை என்று கோபப்பட்டார். யார் பதாகை வைத்தார்களோ அவர்கள் படம் மட்டும்தான் இருக்கிறது.. இது எவ்வளவு பெரிய அநீதி என்றெல்லாம் பொங்கினார். கொஞ்சம் நேரில் வாருங்கள். பேசுவோம் என்றேன். தற்போது வெளியூரில் இருப்பதால் பிறகு வருகிறேன் என்று கோபத்தோடு சொல்லிவிட்டு அலைபேசியை பேசி வைத்து விட்டார்.

மீண்டும் ஒரு நாள் எடுத்தார். கட்சிப் பொறுப்பாளர்கள் தங்கள் சாதிப் பெயரை பின்னால் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் யார் எனத் தெரியும் என்றார். நேரில் வாருங்கள் .விவாதிப்போம் .என்றேன் . சென்னையில் இருந்து வந்தவுடன் குலம், குடி, இனக்குழு இவற்றைப் பற்றி எல்லாம் உங்களோடு பேசுகிறேன் என்றார். சரி வாருங்கள் என்றேன் .

அன்று இரவே என்னை தமிழர் இல்லை என்று முகநூலில் கடும் கோபத்தோடு பதிவு போட்டு அதற்கு ஆதாரங்கள் (?) கிடைத்திருப்பதாக எழுதினார்.

இதன் நடுவே கதிராமங்கலம் போராட்டத்திற்காக அழைத்தேன். நீங்கள் பெரியாரிய வாதியா என்று கேள்வி கேட்டார். அதைப் பிறகு பேசிக் கொள்ளலாம். அவசியம் நாளை நடக்க இருக்கும் போராட்டத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தேன். அவசியம் அடுத்த வாரத்தில் நேரில் வருகிறேன் எனச் சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்து விட்டார்.

ஒருநாள் அண்ணன் சீமான் எங்கள் ஊருக்கு வந்தார். அண்ணன் சீமான் வருகிறார். வந்து பாருங்கள் என்று இவருக்கு அழைப்பு விடுத்தோம். இவரும் அண்ணன் சீமானோடு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். சரி நேரில் வாருங்கள். உங்களை இதுவரையில் பார்த்ததில்லை. நாங்களும் அறிமுகமாகி கொண்டு அண்ணன் சீமானோடு உங்களை அறிமுகம் செய்வதாக சொன்னோம். அப்போதும் வரவில்லை. பிறகு கேட்டதற்கு தனக்கு உடல்நிலை சரியில்லை.. அதனால் வர முடியவில்லை என்றார்.

அண்ணன் சீமான் கூட்டத்திற்கு செல்லும் அவசரத்தில் சில தம்பிகளோடு புகைப்படங்கள் எடுக்க முடியாத சூழல். அந்த தம்பிகளும் நிலைமையை புரிந்து கொண்டு அமைதியாக இருக்க.. இதனை எப்படியோ கேள்விப்பட்ட இவர் கட்சியில் சர்வாதிகாரம் என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டார்.

அந்த பதிவில் யார் யாரோ வந்து பேசினார்கள். எல்லோரையும் பெரியப்பா சித்தப்பா அண்ணா மாமன் மச்சான் பங்காளி அத்தாச்சி என்றெல்லாம் இவர் உறவுப் பெயர் வைத்து உரிமையோடு அழைத்துக் கொண்டிருந்தார். மேலும் அந்த பதிவில் இவரே கேள்வி கேட்டு, பதில் சொல்லி.. கட்சிப் பொறுப்பாளர்களை எல்லாம் ஏக வசனத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.

அதிலிருந்து கட்சியைப் பற்றி ஏக வசனத்தில் திட்டி பல்வேறு பதிவுகள்.
பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் பணிகளுக்காக அவரை அழைத்தோம். தனக்கு காலில் சுளுக்கு எனவும்.. சுளுக்கு சரியான பிறகு பிரச்சாரத்திற்கு வருவதாகவும் சொன்னார்.

நம் கட்சி வாங்கிய ஓட்டுக்களை பார்த்துவிட்டு.. திட்டமிட்டு‌ உழைத்திருந்தால் இன்னும் ஓட்டு வாங்கி இருக்கலாம் என்றெல்லாம் அறிவுரை கூறி ஒரு பெரிய பதிவு போட்டார். அவர் போட்டுக்கொடுத்த எந்தத் திட்டத்தையும்(?) பொறுப்பாளர்கள் மதிக்கவில்லை என்று சாடினார்.

அவரது பதிவுகளை எல்லாம் எதிர்க்கட்சியினர் மாற்றுக் கட்சியினர் நம்மீது வேறுபாடு கொண்டோர் என அனைவரும் பரப்ப… பதிவு மேல் பதிவாக போட்டு பரபரப்பானார். இதன் நடுவே வேலூர் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யப் போகிறோம் வாருங்கள் என்று அழைத்தோம். அடுத்த முறை(?) கண்டிப்பாக வருகிறேன் என்று சொன்னார்.

ஒருநாள் வெளியூரிலிருந்து நமது கட்சி தம்பி ஒருவர் எங்களுக்கு அழைத்தார். நமது முகநூல் போராளி தன்னிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு திருப்பித் தரவில்லை வாங்கி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்

எங்களுக்கெல்லாம் ஒரே ஆர்வம்.அவரை நேரில் பார்த்து இருக்கிறீர்களா என்று அந்த வெளியூர் தம்பியிடம் கேட்டோம். இல்லை முகநூல் வழியாக தான் பழக்கம். இன்டர் நெட் பேங்க் மூலமாகத்தான் பணம் அனுப்பினேன் என்றார்.

அது குறித்து அவரிடம் கேட்க அலைபேசியில் தொடர்பு கொண்டபோது மிகவும் கோபப்பட்டு பேசினார். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றார். உள்கட்சி கட்டமைப்பு போதாது என்றார். குழு அரசியல் இருக்கிறது என்றார். சரி அந்த தம்பியின் பணம். .. என தயங்கியவாறே கேட்டதற்கு.. சட்டென அலைபேசி துண்டித்துவிட்டார்.

மறுநாள் கட்சியின் உள்கட்டமைப்பு இல்லை ஜனநாயகம் இல்லை.. பாவிகளா நீங்களெல்லாம் நன்றாக இருப்பீர்களா என்றெல்லாம் சாபம் விட்டு பதிவு போட்டுவிட்டு கட்சியில் இருந்து விலகப்போவதாக முகநூலில் அறிவித்தார். யார் யாரோ அப்பதிவில் வந்து நீங்கள் கட்சியை விட்டு விலகினால் கட்சியை யார் காப்பாற்றுவது என்றெல்லாம் கதறினார்கள். கட்சிக்கு கடுமையாக உழைத்த தங்களுக்கே இந்த நிலையா என ஆளாளுக்கு கதற.. முகநூலே அன்று கண்ணீரால் மிதந்தது.

கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு தம்பி என்னிடத்தில் அமைதியாய் கேட்டான்.

யார் அண்ணா அவர்…??

அவன் கேள்விக்கு என்னிடத்திலும் பதில் இல்லை.

தெரியவில்லை என்றேன் அமைதியாக.

தம்பி விசித்திரமாக பார்த்தான்.

உண்மையில் எனக்கும் அவர் யார் என்று தெரியாது.

உங்களுக்கு யாராவது அவரைப் பற்றி தெரியுமா..???

அண்ணன் உதயகுமாருக்கு..

பாசமிக்க. அண்ணனுக்கு.நேசத்துடன்

சில வார்த்தைகள்..

கடந்த சில நாட்களாக மதிப்பிற்குரிய அண்ணன் எஸ்.பி உதயகுமாருக்கு.. நமது மீது ஏதோ கோபம். சரி நமது அண்ணன் தானே போகட்டும் என்று கடந்து போக பார்த்தால்..

இன்று நம்மை பாசிசம்.. கம்போடியாயிசம் என்றெல்லாம் திட்டி இருக்கிறார். அட இது என்ன திராவிட வாசனை என்று யோசிக்கும்போது..
சரி கனிமொழிக்கு ஓட்டு கேட்டவர் ஆச்சே.. சகவாச தோஷம் போல.. என்று நினைத்து விட்டு விடலாம் என்று பார்த்தால்..

ஏன் நாம் தமிழர் மீது அவ்வளவு காண்டு.. சவுண்ட் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே … என்று யோசித்துப் பார்த்தால்..

அண்ணனின் வரலாறு அப்படி.

இதே நம் அண்ணன் தான் இன்று காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு ஆதரவாக செயல்படும் இந்துத்துவ ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொண்டு தொப்பி போட்டுக் கொண்டு எல்லாம் திரிந்தார். தொப்பி பொருந்தவில்லை. பிறகு வெளியே வந்து பச்சைத் தமிழ் தேசியம் என்ற புத்தகத்தை எழுதினார். அதே பெயரில் புதுக் கட்சி எல்லாம் தொடங்கினார். பிறகு அண்ணன் சட்டமன்ற தேர்தலில் தனியே தனித்து நின்றார். சில நாட்கள் முகவரியை தேடும் அளவிற்கு முடங்கிப் போனார். பிறகு திடீரென வந்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிறகு தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை ஆதரித்து வாக்குகள் கேட்டார்.

ஆனால் இவை எதையுமே நாம் கேள்வி கேட்டதில்லை. அண்ணன் சீமானோ,நாம் தமிழர் கட்சியினரோ இது குறித்து எதுவும் எழுதியதில்லை ‌. விமர்சிக்க வில்லை. அது அவரது விருப்பம். அவர் தலை. அவர் தொப்பி.தொப்பி தன் தலையில் சரியாக பொருந்துகிறதா இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். அது பற்றி நாம் கேள்வி கேட்க என்ன இருக்கிறது..??

அதேபோல நாங்கள் எங்கே நிற்க வேண்டும் என்பது நாங்கள் முடிவு செய்ய வேண்டும். என்றாவது நாங்கள் அண்ணன் உதயகுமாரோடு நிற்க போகிறோம் என்று அறிவித்திருக்கிறோமா.. எந்த கட்சியாவது அழைத்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள், கூட்டணி வையுங்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறோமா..

தனித்து நிற்பது என்பது எங்கள் அமைப்பின் தொடக்கத்திலேயே நாங்கள் இறுதியாக உறுதியாக எடுத்த முடிவு. ஏனெனில் எங்களுக்கு முன்னவர்களாக இருந்தவர்களின் வரலாற்றுப் பிழைகளை பார்த்து வலி தாங்கமுடியாமல் பிறந்தவர்கள் நாங்கள்.
மீண்டும் அதே பிழையை இனி ஒரு போதும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்ற புலிக் கூட்டம் இது.

சரி. அதனால் அண்ணன் உதயகுமாருக்கு என்ன பிரச்சனை என்று பார்த்தால்… அவர் செய்யப் போகின்ற அரசியல் முயற்சிகளுக்கு நம்மை அழைக்க மாட்டாராம்.

மிகவும் நன்றி. அதற்கு ஏன் திட்டுகின்றீர்கள்.

முதலில் அண்ணன் அணு உலை போராட்டம் மூலமாகத்தான் அறிமுகம். அணுவுலை போராட்டம் தாண்டி அண்ணன் உதயகுமார் உக்கிரமாக பங்கேற்ற இதர போராட்டங்களின் விவரங்கள் ‌.. ஏதேனும் இருந்தால் எவரேனும் சொல்லுங்கள். 10 பேரில் அண்ணனும் ஒருவராக இருந்து போராடுகின்ற சம்பிரதாய போராட்டங்களை இந்தப் பட்டியலில் கொண்டு வந்து சங்கடப் படுத்தாதீர்கள்.

ஆனால் சீமான் அண்ணன் அப்படி அல்ல.
அணு உலை தொடங்கி ஹைட்ரோகார்பன் வரையிலான போராட்டங்களில் பங்கேற்று தமிழ்நாடு முழுக்க வழக்குகள் வாங்கி நீதிமன்ற படிகள் ஏறி கொண்டிருப்பவர். ஒவ்வொரு போராட்டத்தையும் தனித்து நடத்தியிருக்கிறார். தேவைப்படும் பட்சத்தில் பிற அமைப்புகளின் மேடைகளில் ஏறி முழங்கியிருக்கிறார்.

சாதாரண உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்தில் இருந்து.. பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய மேடைகளில் ஒரு இளம் பேச்சாளனாக வளர்ந்து.. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று.. ஈழப்போராட்டத்தின் உச்சத்தில் ஐந்து முறை நெடுநாள் சிறைபட்டு..அதில் 3 முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைபட்டு.. தானே ஒரு அமைப்பினை உருவாக்கி.. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு.. 1.1 சதவீத வாக்குகள் பெற்று.. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அது ஏறக்குறைய 4 சதவீதமாக உயர்ந்து இன்று 16 1/2 லட்சம் வாக்காளர்களை ஈர்க்கின்ற ஒரு தலைவராக வளர்வது என்பது அண்ணன் உதயகுமார் போன்றவர்களுக்கெல்லாம் நம்பிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.

என்னவோ அண்ணனுக்கு எங்களது வளர்ச்சி சங்கடமாக இருக்கிறது. திமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்க தயாராகிவிட்ட அவரது கண்களுக்கு நாங்கள் சரியாக தெரிந்தால் தான் ஆபத்து.

அத்தோடு இல்லாமல் பாசிசம், நாசிசம் என திராவிடத்தின்‌ அதே பழைய பஞ்சாங்க கதையை அண்ணன் உதயகுமாரும் பேசுவது காலக் கொடுமையாக இருக்கிறது.

எப்போதும் அண்ணன் சீமான் உதயகுமார் போன்றவர்களை.. அவர்களது அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களைப் பற்றி பேசுவதே இல்லை. நாங்கள் யாராவது பேசினால்.. உனக்கு வேறு வேலை இல்லையா என ஏசுவார்.

உண்மையில் அண்ணன் உதயகுமாருக்கு தான் வேறு வேலை இல்லை போலும். முகநூலில் பதிவுகள் போட்டு கொண்டு..சீமான் சரியில்லை அவர் சரி இல்லை, இவர் சரியில்லை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.

எங்கள் முதுகை அவர் தேவையில்லாமல் சுரண்டுவது எங்களுக்குப் புரிகிறது. அது ஒருவகையில் எங்களுக்கு சுகமாக இருந்தாலும்.. அண்ணனின் விரல்கள் இதற்காகவா பயன்பட வேண்டும் .. என்று மனம் வருந்துகிறது.

உங்களால் முடிந்ததை செய்யுங்கள் அண்ணே..

சுழித்துக் கொண்டோடும் காலநதியில் நீந்த முடியாமல் திணறுபவை கரை ஒதுங்க தான் செய்யும். வல்லமை மிக்கவை நீந்திக் கடக்க தான் செய்யும்.

கரை ஒதுங்கிக் கிடக்கும் நீங்கள்.. கத்தி கூப்பாடு போடுவதால் எங்களது நீந்தும் வேகம் குறைய போவதில்லை.

பிறகு ஏன் தேவையற்ற கூச்சல்..??

மணி செந்தில்.

காக்கப்படட்டும் காஷ்மீரம்..

கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய் காஷ்மீர் ஸ்ரீநகருக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த வாஜ்பாய் அப்போது ஒரு கவிதையை எழுதினார்.

வசந்தம் விரைவில் திரும்பும்.
அழகிய பள்ளத்தாக்கில்
மீண்டும் மலர்கள் மலரும்.
நைட்டிங்கேல் பறவைகள் திரும்பும்..
மீண்டும் இசைத்துக் கொண்டே..

(Spring bill return to the beautiful valley Soon. The flowers will bloom again and the nightingales will return, chirping..)

ஆனால் கடந்த 5 8 2019 அன்று பாராளுமன்றத்தில் பாஜகவின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் அறிவிப்பு எப்போதும் காஷ்மீரில் அமைதி திரும்பாது என்பதை உறுதி செய்திருக்கிறது.

வரலாற்றின் ரீதியாக காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் துரோகங்களை சந்தித்து வருகிறார்கள். காஷ்மீர் இந்துக்கள் முஸ்லிம்கள் புத்த மதத்தவர் என மூன்று மதங்களை சேர்ந்த ஒரு தேசிய இன மக்கள் வாழ்கின்ற நிலம். இதன் மொத்தப் பரப்பளவு 2,22,870 சதுர கிலோமீட்டர்கள். இதில் பாகிஸ்தான் வசம் உள்ள ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிற நிலத்தின் பரப்பு 78114 சதுர கிலோமீட்டர்கள். மீதம் உள்ள நிலம் இந்தியாவின் ஆளுகைக்கு கீழே இருக்கிறது. காஷ்மீரில் ஏறக்குறைய 70 சதவீதத்தினர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் இந்து மற்றும் புத்த மதத்தை தழுவி வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி.. இந்துக்களாக இருந்தாலும் சரி.. தாங்கள் காஷ்மீரிகள் என தனித்த தேசியமாக அழைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்திய விடுதலையின் போது காஷ்மீர் இந்து மதத்தை சேர்ந்த ஹரி சிங் டோக்ரா என்கின்ற மன்னரால் ஆளப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் இந்தியா இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டபோது காஷ்மீர் எந்தப் பக்கமும் நினையாமல் தனித்து தன் தனித்துவத்தை காப்பாற்றிக் கொண்டு தனி நாடாக விளங்கியது.

அந் நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர் ஹரி சிங் தான் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையப் போவதில்லை என அறிவித்து இருந்தார். ஆனால் இந்தியாவோ காஷ்மீரை எப்படியாவது தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டுமென தொடர்ச்சியான பல முயற்சிகளை செய்து கொண்டிருந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு காஷ்மீர் மாநிலத்தில் பிறந்தவர். தான் பிறந்த மாநிலமான காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதையோ தனி நாடாக இயங்குவதை யோ அவர் விரும்பவில்லை.

அக்காலகட்டத்தில் காஷ்மீர் நிலத்தின் மாபெரும் மக்கள் தலைவராக விளங்கிய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா மன்னராட்சி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடி கொண்டிருந்தார். அவரும் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைவதை விரும்பாமல் சுதந்திர நாடாக இருப்பதையே தனது முழக்கமாக முன்வைத்து போராடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் காஷ்மீர் மீதான படையெடுப்பைத் தொடங்கியபோது அந்நிலத்தை ஆண்டுகொண்டிருந்த இந்து மன்னர் ஹரி சிங் இந்தியாவிடம் உதவி கேட்டார். அப்போது இந்திய அரசு மன்னர் ஹரி சிங் உடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தை ஷேக் அப்துல்லாவும் ஏற்றுக்கொள்ள.. இடைக்கால அரசு அமைக்க ஷேக் அப்துல்லாவை இந்திய அரசு கேட்டுக் கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி பாதுகாப்பு தகவல் தொடர்பு அயல் நாட்டு தூதரக உறவு ஆகிய மூன்று அதிகாரங்கள் மட்டுமே இந்திய மத்திய அரசு வைத்துக் கொள்ளவும் ஏனைய அதிகாரத்தை காஷ்மீர் அரசு வைத்துக் கொள்ளவும் போர்ச்சூழல் நீங்கிய பின்னர் காஷ்மீரத்து மக்கள் விருப்பப்படி இறுதி முடிவெடுக்க ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படவும் ஷரத்துகள் எழுதப்பட்டு அமலுக்கு வந்தன.

இந்திய அரசு இந்த நொடி வரை காஷ்மீரத்து மக்களின் விருப்பப்படி இறுதி முடிவு எடுக்காமல் காஷ்மீர் நிலத்தை ஆக்கிரமித்து இந்தியாவின் ஒரு சிறப்பு மாநிலமாக வைத்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மக்கள் இந்த வரலாற்று துரோகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் ஷேக் அப்துல்லா நேரு இடையிலான நட்பை பயன்படுத்தி இந்திய அரசு காஷ்மீரை எப்படியாவது வளைத்துக் கொள்ள பல முயற்சிகள் எடுத்தது. அதற்கு சம்மதிக்காத ஷேக் அப்துல்லாவின் அமைச்சரவையில் பல குழப்பங்களை தனது உளவுத்துறை மூலம் ஏற்படுத்திய இந்திய அரசு இறுதியில் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் நாள் ஷேக் அப்துல்லாவையே கைது செய்தது.

சிறிது சிறிதாக காஷ்மீர் அரசின் அதிகாரங்களை இந்திய அரசு பறிக்க தொடங்கியது. காஷ்மீர் மாநிலத்திற்கு என தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை ஏற்படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1963 ஆவுது வருடம் இந்திய அரசியலமைப்பின் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 16 ஆவது திருத்தத்தின் படி காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது.

இவை அனைத்தும் மன்னர் ஹரி சிங் கோடு இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்த ஷரத்துகள் எதிரானவை மட்டுமல்ல அந்த ஒப்பந்தத்தையே இல்லாமல் செய்வதற்கான தன்மைகளைக் கொண்டவை.

1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது இரண்டு அரசுகளும் காஷ்மீர் மக்களின் கருத்துக்களை கேட்காமல் சிம்லாவில் ஒப்பந்தம் செய்து கொண்டு எல்லைக் கோடு வரைந்து கொண்டன. காஷ்மீர் பிரச்சனை பொறுத்து மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லாமல் பேசித் தீர்த்துக் கொள்வது எனவும் முடிவு செய்து கொண்டன.

கடந்த 1975 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என தொடர்ச்சியாக போராடி வந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா ஏற்றுக்கொண்டார். ஆனாலும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி வழங்கக்கூடிய அரசியல் சட்டப் பிரிவு 370 தொடர்ந்து அமலில் இருக்கும் என்று இந்திய அரசு உறுதி அளித்தது.

இந்திய அரசின் தொடர்ச்சியான அதிகார அழுத்தங்களாலும், இந்தியா பாகிஸ்தான் என்ற இது வல்லாதிக்க நாடுகளின் அரசியல் விளையாட்டுகளாலும் படிப்படியாக உரிமைகளை இழந்த காஷ்மீர் நிலத்து மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக முறையிலும் ஆயுதங்கள் தாங்கிய முறையிலும் போராடிவருகிறார்கள். பாகிஸ்தான் இந்தியாவின் ஆளுகைக்குள் இருக்கின்ற ஜம்மு காஷ்மீரில் நடக்கின்ற தீவிரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது. அதேபோல இந்தியா பாகிஸ்தான் ஆளுகைக்குள் இருக்கின்ற ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படுகின்ற பகுதிகளில் நடக்கின்ற தாக்குதல்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது .

எதுவாயினும் இந்த வல்லாதிக்க அரசுகளின் சிக்கிக்கொண்டு தங்களது இறையாண்மை மற்றும் உரிமைகளை இழந்து காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியாக போராடி கொண்டு வருகிறார்கள். பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் மூலமாக காஷ்மீர் நிலத்தை தொடர்ச்சியாக பதட்டம் தணியாத பகுதியாக இந்திய அரசு பராமரித்து வருகிறது. எந்த நொடியிலும் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் சுட்டுக் கொல்லப்படலாம் என்கின்ற துயர நிலையில் மிகுந்த அச்ச சூழ்நிலைகளுக்கு மத்தியில் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தனக்கு கிடைத்த மாபெரும் பெரும்பான்மையை சாதகமாக வைத்துக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி பல ஜனநாயக விரோத சட்டங்களை எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றி வருகிறது. இந்துத்துவ கோட்பாட்டின் நீண்டகால வேட்கையான காஷ்மீர் நிலத்தை ஆக்கிரமித்தல் என்கின்ற விருப்பத்தை தனக்கு கிடைத்திருக்கும் மாபெரும் பெருமையை வைத்துக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறது.

அதன் அடிப்படையில்தான் கடந்த 5 8 2019 அன்று பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் அரசுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கக்கூடிய பிரிவு 370 யை நீக்குவதற்கு அரசு பரிந்துரை செய்யும் என அறிவித்து இருக்கிறார்.

இதன்படி காஷ்மீர் அரசு இந்தியாவின் சிறப்பு மாநிலம் என்கின்ற அந்தஸ்தை இழக்கும். மக்களுக்கு இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச உரிமைகளைக் கூட இழந்து காஷ்மீர் தேசிய இனத்திற்கான இருக்கின்ற இறையாண்மை உரிமையைக்கூட காஷ்மீர் மக்கள் இழப்பார்கள். மக்களின் விருப்பம் என்கின்ற ஜனநாயக விழுமியம் அழித்தொழிக்கப்பட்டு இந்திய ஏகாதிபத்தியத்தின் ஒரு மாநிலமாக காஷ்மீர் மாற்றப்படும்.

இதற்கான தயாரிப்பினை பாரதிய ஜனதா கட்சி ஜூலை இறுதி வாரத்தில் இருந்து செய்யத் தொடங்கிவிட்டது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் பாருக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். பல அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இணையம் தகவல் தொடர்பு அலைபேசி தொடர்பு என அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் ஒரு அறிவிக்கப்படாத பெரும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்தாலும் காஷ்மீர் நிலத்தில் இன்று ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழ்நிலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்குமே பொறுப்பாளிகள் ஆவார்கள்.

அன்று நைட்டிங்கேல் பறவைகள் இசையோடு திரும்பும் என கவிதை எழுதிய வாஜ்பாயின் பாரதிய ஜனதா அரசு தான் இன்று மனிதர்கள் கூட வாழ முடியாத நிலமாக காஷ்மீரை மாற்றி விட்டது என்பதுதான் துயர்நிலை.

தேர்தலில் கிடைத்திருக்கிற பெரும்பான்மையை வைத்துக்கொண்டு எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற மாபெரும் அதிகார வல்லாதிக்க உணர்வினை தான் பாரதிய ஜனதா கட்சியின் அரசு கொண்டிருக்கிறது என்பதைத்தான் காஷ்மீரத்து இன்றைய நிலைமை காட்டுகிறது.

இச்சமயத்தில் நமக்கு நமது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ.

எந்த வல்லாதிக்கமும் ஜனநாயக வேட்கை உடைய மக்கள் திரளால் எழுதப்படும் என்பதைத்தான் வரலாற்றின் பக்கங்கள் தொடர்ச்சியாக நமக்கு காட்டி வருகின்றன.

காஷ்மீர் நிலத்து மக்களின் துயர் நீங்க தமிழ் தேசிய இன மக்களாகிய நாமும் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்.

காஷ்மீர் காக்கப்படட்டும்.

மணி செந்தில்

Page 5 of 15

Powered by WordPress & Theme by Anders Norén