நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் வெறும் அரசியல் கட்சியாக மட்டும் இது பயணித்து விடக்கூடாது என்பதில் அண்ணன் சீமான் மிகுந்த கவனமாக இருந்தார். ஒரு இனத்திற்கான விடுதலை என்பது மண் விடுதலை மட்டுமல்ல , சாதிமத பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற மானுட விடுதலை, தாய்மொழி மீட்சி, இழந்த உரிமைகளை போராடிப் பெறுவது, பல்வேறு ஊடுருவல்களால் சிதைந்துபோன இனத்தின் பண்பாட்டு மீட்டெடுப்பு போன்ற பல தளங்களில் நமக்கு வேலை இருக்கிறது என்று தீவிரமாக எங்களுக்கு அறிவுறுத்திய அவர் சில முடிவுகளை நடைமுறைப்படுத்த தொடங்கினார்.நடுகல் மரபினரான நம் இனத்தில் மூத்தோர் வழிபாடு , முன்னோர் வழிபாடு குலதெய்வங்கள், சிறுதெய்வ வழிபாடு என தமிழ்த் தேசியத்தின் பண்பாட்டு வேர்களை பலப்படுத்துவதற்கான பணிகளில் அவர் முழுமையாக ஈடுபட்டார்.
கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. வேல் தூக்கி விட்டார். இந்துத்துவா பக்கம் சென்று விட்டார் என்றெல்லாம் கட்டுரைகள் எழுதினார்கள். புத்தகம் போட்டார்கள். ஆனால் அண்ணன் சீமானோ இதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பல பணிகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.அதில் மிக மிக முக்கியப் பணி நம் இனத்தின் தொன்ம தெய்வமான முருகனை ஆரிய வடிவத்திலிருந்து மீட்பது. இரவு பகலாக அதுகுறித்து அவர் சிந்தித்துக்கொண்டே இருந்தார். பல வடிவமைப்புகளை பல எண்ணங்களை நாங்களெல்லாம் அவரோடு பகிர்ந்து கொண்டு இருந்தபோது அவர் வேறு மாதிரியாக சிந்தித்து கொண்டிருந்தார்.
சில நாட்கள் கழித்து எங்கள் அலைபேசியில் அவரிடத்தில் இருந்து ஒரு ‘முருகன்’ வந்திருந்தான்.அமுல் பேபி போல, செக்கச் செவேல் என்று கொழு கொழு என கடைந்தேடுத்த தயிர் பாலகன் போல ஓவியங்களில் காட்சியளித்த அக்ரகாரத்து முருகனை பார்த்துப் பழகிய எங்களது விழிகள் முதன்முறையாக பாட்டன் முருகனை கருமைநிற இளைஞனாக பார்த்தபோது மகிழ்ச்சியால் கலங்கின.ஆம் அசலான முருகன் அப்படித்தான் பிறந்தான். வலுவான உடற்கட்டு ,, கூரிய மீசை என அசலான தமிழ் முகத்தோடு வந்த முருகனை பார்த்துவிட்டு, ஏற்கனவே வீட்டுக்கு வீடு தொங்கிக் கொண்டு இருக்கிற அந்தக் கொழுகொழு முருகனை என்ன செய்வது அண்ணா என சந்தேகத்துடன் அவரிடம் கேட்டேன்.அண்ணன் சிரித்துக்கொண்டே ..” தம்பி அவன் நம்ம ஆளு இல்லடா.. அவன் வடநாட்டு சுப்பிரமணி. நம்ம தாத்தன் செகப்பா இருப்பானா.. சதை மெழுகி குண்டா இருப்பானா.. காடு மலைகளில், வெயில் மழை என பாராது, வேட்டையாடி, அலைந்து திரிந்து இருக்கிறான்.
அப்படி என்றால் உடல் எவ்வளவு வலுவாக இருந்திருக்கும் . யோசித்துப் பார். அதுதான் 6 pack வைத்து கருப்பாக களையாக கம்பீரமாக நம் பாட்டன் உருவாகி இருக்கிறான். இனிமேல் இந்த கருப்பன் தான்டா நம்ம முருகன் .” என்றார் அவர்.அன்றுமுதல் நம் முருகன் அசலான நம் பாட்டனாக, நம் உள்ளம் கவர்ந்த கருப்பனாக, மாறி போனான். பல இடங்களில் நம் கருப்பு முருகன் இன்று ஊடுருவி விட்டான். தனியார் பேருந்துகளில் பிரம்மாண்டமான ஓவியமாக மிளிர்கிறான். பல பொதுவான சுவரொட்டிகளில் நம் கருப்பு முருகன் கையில் வேலோடு ஒளிர்கிறான்.இப்படித்தான் சில வேலைகளை அதிரடியாக செய்ய வேண்டியிருக்கிறது. அதே போல் தான் நம் இனத்தின் பெருமைக்குரிய கலைஞன் இசைமேதை ஏ ஆர் ரகுமான் தன் தாய்மொழி உணர்ச்சியால் ஆஸ்கர் மேடையில் கூட எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் முழங்கியவர்.
வடநாட்டு கச்சேரிகளில் அலை பாய்ந்து வரும் எதிர்ப்புகளை புறக்கணித்துவிட்டு தமிழில் பாடல்களைப் பாடுபவர். தமிழ்நாட்டு மேடையில் ஆங்கிலம் ஒலிக்கும்போது தமிழில் பேசுங்கள் அப்போதுதான் மேடையில் இருப்பேன் என கம்பீரமாக சொல்பவர். ஆளப்போறான் தமிழன் என இசையமைக்கும் போது என் உள்ளுக்குள் ஏதோ ஒன்று என்னை ஆட்டி வைத்தது என பெருமிதப் படுபவர். கனடா நாட்டில் இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்கு மத்தியில் “உன் தேசத்தின் குரல் ” என கண் கலங்க பாடி நம்மை மெய்சிலிர்க்கவும் கலங்கவும் வைத்தவர்.சமீபத்தில் துபாயில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஒரு தமிழ் பாட்டு பாடுவோமா எனக் கேட்டுவிட்டு அப்படியே உணர்ச்சியில் ஊறி தமிழ் தமிழ் தமிழ் என முழங்கிக் கொண்டே நின்றவர். மூப்பில்லா மொழி எங்கள் மொழி என தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்பவர். அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு என்கின்ற ஓவியத்தை வெளியிட்டதற்கு சங்கிக் கூட்டம் வழக்கம் போல் துள்ளிக்குதித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.கூடுதலாக.. இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி என அமித்ஷா சொன்னதற்கு, தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனச் சொல்லி ஏற்கனவே வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டிருக்கின்ற சங்கிகளின் தலையில் ரகுமான் நெருப்பு அள்ளி வைத்திருக்கிற பரவசக் காட்சியை நாமெல்லாம் மகிழ்ச்சியோடு கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்று கொண்டிருக்கிறோம்.
நேற்று கூட தொழில் முனைவோர் மாநாட்டில் பேசிய இசைமேதை ஏ ஆர் ரகுமான் நம் நிறம் நமக்கு. தென்னிந்தியாவில் கருப்பான நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பு தாருங்கள் என நம் இனத்தின் நிறத்திற்கு ஆதரவாக மீண்டும் துணிவுடன் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ்த் தாயை கருப்பாக அசிங்கமாக வரைந்திருக்கிறார்கள், அதை இந்த ரகுமான் வெளியிடுகின்றார், என ஓநாய் கண்ணீர் வடிக்கிறது ஒரு கூட்டம். இவர்களைப் பொறுத்தவரையில் கருப்பு என்பது அழகின்மை.அருவெறுப்பு , அசிங்கம்.ஆனால்.. தமிழர்கள் நமக்கோ அதுதான் நிறம். அதுதான் அடையாளம்.நமது தாய் தமிழணங்கு. அவள் கருப்பாகதான் இருப்பாள். எங்கள் பாட்டன் முருகன். கருப்பாக தான் இருப்பான்.இதில் பத்ரி சேஷாத்ரி வகையறாக்கள், சங்கி மங்கி கூட்டங்கள் பதறுவதற்கு எதுவுமே இல்லை. எமது அழகை இவர்கள் வரையறை படுத்த எவ்வித உரிமையும் அற்றவர்கள். எம் இனத்தின் அடையாளம் கருப்பு. எங்கள் குலசாமி ஒன்றின் பெயர் கருப்பு.கருப்பு என்பது ஒருபோதும் எமக்குப் பெருமை குறைவல்ல. சொல்லப்போனால் அதுதான் எமது தகுதி. எமது பெருமை.கர்வமாக சொல்வோம்.இது கருப்பர் நாடு. காவியே ஓடு.இசைமேதை ஏ ஆர் ரகுமானுக்கு நெகிழ்ச்சியுடன் புரட்சி வணக்கம்.
சொல்லுக்குள் தன் மொழியை தன் நிலத்தை தமிழர் வாழ்வை சுருக்கி உட்புதைத்து தைத்த வித்தகனுக்கு... முதல் மரியாதை
❤️
வான்புகழ் கொண்ட தனி மொழி தமிழுக்கு தன் கறுப்பு மண்ணின் கரும்பு சாறெடுத்து கவிதை அமுதூட்டியவன்.
பூங்கதவின் தாழ் திறந்து அந்தி மழை பொழிகையில் ஆயிரம் தாமரை மொட்டுக்களில் பாயிரத் தமிழ்க் கும்மி அடித்தவன்.
சின்னச்சின்ன ஆசைகளோடு சிகரங்களை நோக்கி தமிழாற்றுப்படையோடு நடைபோட்டாலும் கள்ளிக்காட்டில் அமர்ந்து கருவாச்சி காவியம் கண்டவன்.
பழைய பனை ஓலைகளில் இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல என நேற்றுப் போட்ட கோலமாய் கல்வெட்டுகளில் உறைந்திருந்த தமிழுக்கு நிறம் கண்டு வடுகப்பட்டி முதல் வால்கா வரை எல்லா நதிகளிலும் தமிழ் ஓடங்களை மிதக்க விட்ட திருத்தி எழுதிய தீர்ப்புக்காரன்.
அவன் சொன்னால்.. பெய்யெனப் பெய்தது மழை.
அந்த குளத்தில் கல்லெறிந்தவர்களுக்கும்.. இதனால் சகலமானவர்களுக்கும்..
எப்போதும் மீண்டும் தன் தொட்டிலுக்கு திரும்பி விடத் துடிக்கும் அவன் தன் வாழ்வு மூலம் தெரிவித்துக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
வானம் தொட்டுவிடும் தூரம்தான்.
❤️
கவிப்பேரரசு அவர்களுக்கு..
இன்றைய நாளில் என் தம்பி என்னோடு தரையில் இருந்தால் உங்களுக்கோர் தமிழ்த் தோரணம் கண்டிருப்பான்.
துரை சிறையில் இருக்கிறான்.
அவன் சிந்தை முழுக்க நிறைந்திருக்கும் கவி தந்தை தங்களை.. அவன் எண்ண அலைகளோடு என்னையும் இணைத்து இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன்.
மனித குணங்களில் வெறுப்பினை போல் விசித்திரமானது ஏதுமில்லை. உண்மையில் வெறுப்பு என்பது கொப்பளித்துக்கொண்டு இருக்கிற நீர்க்குமிழி போன்றது. சில வெறுப்புகளுக்கு காரணங்கள் தேவையில்லை. அப்படி காரணமில்லாமல் ஏதோ ஒன்றை வெறுக்க முடிகிற ஒரு உயிரி இந்த பிரபஞ்சத்தில் உண்டு என்றால் அது மனிதன் மட்டும்தான்.
சகமனிதனின் வெறுப்பு நெருப்பாய் நமது மீது கொட்டும்போது நாம் தவித்து விடுகிறோம். எதனால் இது நேர்ந்தது என்பது குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். நம்மை வெறுப்பவர் அனைவரையும் நாமும் வெறுக்க தயாராகிறோம். சொல்லப்போனால் ஒரு எதிர்வினை போல நமது உளவியல் அதற்கு தயாராகிறது. நாமும் அந்த நொடியே நம்மை வெறுத்தவர் போலாகி பிறரை வெறுக்க தொடங்கி விடுகிறோம். முடிவில்லா தொற்றுநோய் போல வெறுப்பு என்கின்ற குணாதிசயம் காலதேச வரையறைகளைத் தாண்டி எல்லோர் மனதிற்குள்ளும் ஊடுருவிக் கொண்டே இருக்கிறது.
வெறுப்பினை சாத்தான் மொழி என்கிறது பைபிள். பிறரை வெறுப்பது நம்பிக்கையாளர்களுக்கு உகந்ததல்ல என்கிறது திருக்குர்ஆன். பற்றிப் பரவும் நெருப்பை விட கொடியது வெறுப்பு என்று போதிக்கிறது புத்தம்.
சகமனிதர்களின் அர்த்தமற்ற வெறுப்பினை எவ்வாறு கையாளுவது என்று ஒருமுறை அண்ணன் சீமான் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்து அவரைப்போல் விமர்சனங்களை, வசவுகளை, வெறுப்பினை எதிர் கொண்ட மனிதர்கள் மிகமிகக் குறைவு. சமகாலத்தில் அவர் மீதான விமர்சனங்கள் தான் அவர் மீதான ஈர்ப்பிற்கு மூலதனமாக அமைகிறது.
எப்படி அர்த்தமற்ற வெறுப்பினை எதிர்கொள்கிறீர்கள் என அவரிடம் கேட்டபோது.. “நான் ஒருபோதும் வெறுப்பினை எதிர்கொள்வதில்லை. தவிர்த்து விடுவேன் என்றார். மற்றொன்று இன்னொருவரின் வெறுப்பினை எதிர்கொள்வது எனது வேலை அல்ல..” என்றும் கூறினார். இது எனக்கு சுவாரசியமாக இருந்தது.
அவரிடம் நான் பொருட்படுத்த மாட்டேன் என்பது போன்ற பதிலைத்தான் எதிர்பார்த்திருந்தேன். எனக்கு புரூஸ்லி பற்றி நினைவிற்கு வந்தது.
புரூஸ்லீயை பற்றி ஒரு தகவல் கேள்விப்பட்டிருக்கிறேன். தன் மீதான தாக்குதலை பெரும்பாலும் அவர் தவிர்க்கும் மொழியைத்தான் தனது கராத்தே கலையின் முக்கிய அம்சமாக கருதுவதாக அவர் கூறுகிறார். காற்றைக் கிழித்து எதிரியின் பலம் பொருந்திய முஷ்டி நம் தாடையை உடைக்க வேகமாக வரும் போது அதை எவ்வாறு தவிர்ப்பது என்பதில் தான் தன் கவனம் இருப்பதாக சொல்கிறார். இமைக்கும் ஒரு நொடியில் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாக இருக்கும் தன் உடலை மிகக் குறைந்த அங்குலம் நாசூக்காக நகர்த்திக் கொள்வதன் மூலமாக எதிரியின் தாக்குதல் உடலில் படாமல் வீணாகிறது. அந்தத் தாக்குதல் நிறைவேறாமல் போவதில் எதிரி ஏமாற்றம் அடைகிறான். பதட்டம் கொள்கிறான். பலவீனம் அடைய தொடங்குகிறான். இதைத்தான் தனது யுக்தி என்கிறார் புரூஸ் லீ.
அவர் எதிரியின் தாக்குதலை பொருட்படுத்தாமல் இருப்பதில்லை. ஆனால் தவிர்த்து விடுகிறார். அந்தத் தவிர்ப்பு நிலைதான் அவரது மேதைமை.
தவிர்ப்பது என்பது வேறு/ பொருட்படுத்தாமல் போவது என்பது வேறு.
அண்ணன் சீமானும் அப்படித்தான் தன்மீதான நேர்மையற்ற விமர்சனங்களை தவிர்க்க கற்றிருக்கிறார் .அதைத் தன் மீது அன்பு பாராட்டும் உறவுகளும் கடைபிடிக்க வேண்டும் என எண்ணுகிறார். ஆனால் நாம் யாரும் அவ்வாறு இருப்பதில்லை.
அண்ணன் சீமான் பற்றிய ஒரு அவதூறு காணொளி வரும்போது அவர் மீது அன்பு பாராட்டும் எண்ணற்ற தம்பி தங்கைகள் அந்தக் காணொளிக்கு பதில் சொல்ல தயார் ஆவதற்காக அந்த காணொளியை பார்க்கின்றனர். பலரும் பதில் சொல்ல வேண்டும் என நினைத்து அவர்களே பரப்புகின்றனர். இது ஒரு வகையில் அவதூறு காணொளி வெளியிட்டவர் நோக்கத்திற்கு உதவி செய்வது போல் ஆகிவிடுகிறது.
அண்ணன் சீமான் பற்றி ஏதேனும் அவதூறு அல்லது வசவு போன்ற அம்சங்களைக் கொண்ட காணொளி வெளியிடுகிற பலருக்கு மிக முக்கிய நோக்கமே தங்கள் காணொளியை பலரும் பார்க்க வேண்டும் என்பதுதான். கண்டிப்பாக இதற்கு பதில் சொல்ல சீமான் தம்பி/ தங்கைகள் வருவார்கள் என்ற நோக்கத்தில்தான் அவர்கள் இதுபோன்ற காணொளிகளை வெளியிடுகிறார்கள். சொல்லப்போனால் அந்தக் காணொளியை எதிர்க்க வேண்டி பார்க்கின்ற பார்வையாளர்கள் கூட்டம் தான் அந்த காணொளிக்கான விளம்பரம். அதன் மூலம் வருமானம்.
அண்ணன் சீமான் குறித்து அவதூறு பரப்புகிற காணொளியை நாம் தீவிரமாக எதிர்க்கிற அரசியல் கட்சியினர் கூட அதிகம் பார்ப்பதில்லை. ஆனால் நமது ஆட்களோ அதில் என்ன இருக்கிறது பதில் சொல்ல வேண்டும் என்ற பரபரப்பில் அந்தக் காணொளியை அதிகம் பார்வையாளர்கள் பார்த்து காணொளியாக மாற்றி விடுகிறார்கள். பார்வையாளர்கள் வருகை அதிகம் இருக்கும்போது அந்த காணொளிக்கான வருவாய் கூடுகிறது.
எனவேதான் இதுபோன்ற காணொளிகளை வெளியிடுவதில் அதன் மூலமாக விளம்பரம் ஆகி பொருளீட்ட பலரும் துணிகிறார்கள். இந்த இடத்தில் அந்த காணொளியை நாம் தவிர்க்க கற்றுக் கொண்டு விட்டோமானால் காணொளி வெளியிட்டவர் நோக்கம் வெற்றி பெறாமல் ஏமாற்றம் அடைவார்.
அண்ணன் மீது நாம் கொண்டிருக்கிற பேரன்பு நம் எதிரிக்கு சாதகமாக மாறத் தொடங்குகிற விசித்திரமான புள்ளி அது. எனவேதான் எதை ஏற்பது, எதைத் தவிர்ப்பது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என நம் அண்ணன் சீமான் வலியுறுத்துகிறார்.
மறைந்த எனது மூத்த வழக்கறிஞர் பலராமன் ஒருமுறை அவசரமாக நீதிமன்றத்திற்கு கிளம்பிச் செல்லும்போது அவரது வீட்டு வாசலில் குடித்துவிட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தவரை கவனிக்காமல் கடந்து போனது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அவர் ஒருமுறை அதட்டி இருந்தால் அந்த குடிகாரன் அங்கிருந்து போயிருப்பான் இப்படி கேட்காமல் கடந்து போகிறாரே என்று நினைத்து நீதிமன்றத்திற்கு வந்த பிறகு அவரிடம் கேட்டேன். அவர் என்னை உற்று நோக்கிவிட்டு எந்த பதிலும் எனக்குச் சொல்லவில்லை.
மீண்டும் நாங்கள் வீட்டிற்கு திரும்பிய போது அந்தக் குடிகாரன் சாக்கடை ஓரம் விழுந்து கிடந்தான். என்னை பார்த்து சிரித்த அவர் “இவனிடம் சண்டை போடுவதா நமது வேலை.. இன்று காலை நாம் சண்டை போட்டிருந்தால்.. ஒருவேளை அவன் ஏதாவது எதிர்த்துப் பேசி இருந்தால்.. நாம் அடித்து இருக்க வேண்டியிருக்கும். ஏதாவது பெரிய அளவில் தகராறு ஏற்பட்டு இருந்தால்.. நீதிமன்றத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் போயிருக்கும். இன்று பார்த்த எந்த வேலையும் நம்மால் பார்த்திருக்க முடியாது. எனவே சில இடங்களில் தவிர்த்துவிட்டு முன்னகர்ந்து விடுவதுதான் அறிவுத்தனம்” என்றார்.உண்மைதான். நான் உணர்ச்சி வசப்பட்டது போல அவரும் பட்டிருந்தால் உண்மையில் அந்த நாள் அன்று வீணாகி இருக்கும்.
வெற்று விமர்சனங்களுக்கு பதிலளித்து பதிலளித்து எத்தனை பக்கங்களை நாம் வீணாக்குகிறோம் .. நேரத்தை செலவழிக்கிறோம் என்று நினைத்தால் உண்மையில் அச்சமாக இருக்கிறது. அந்த வீணாய் போன விமர்சனங்களுக்கு நாம் பதில் அளிப்பதால் விமர்சிப்பவர்கள் அடங்கப் போவதில்லை. அவர்கள் மாறப் போவதுமில்லை. எனவே இதுபோன்ற விமர்சனங்களை தவிர்க்கக் கற்றுக்கொள்வது தான் நீண்ட நெடிய இந்த அரசியல் பயணத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை குணாதிசயம்.
நம்மை அழிக்க நினைக்கும் சிலரை வாழ்க்கையில் பெயர் சொல்லாமல் கடப்பது ஒருவகையான நிறைவு என்றால்.. அவர்களை நினைக்காமல் வாழ்வதென்பதுதான் முழுமையான வெற்றி.
எதை ஏற்பது என்பதைவிட எதைத் தவிர்ப்பது என்பதில் தான் வாழ்வின் முழுமை அடங்கி இருக்கிறது.
கவிப்பேரரசு வைரமுத்து செல்வது போல..
“ஊரார் வாய்களை தைப்பது கடினம். உங்கள் செவிகளை மூடுவது சுலபம்.”
சூழ வரும் சூழ்நிலைகளால், பிழையாகி போன வாழ்க்கை முறைகளால் அலைக்கழிக்கப்படும் மனித உளவியலை நிலைநிறுத்த மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் காலம் காலமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.தியானம் என்றும் தவம் என்றும் அவரவருக்கு ஏற்ற ஒரு வடிவத்தை பயிற்சி செய்து பார்த்து, ஏதோ ஒரு வகையில் மனித மனம் அலைக்கழிப்பு எனும் பேரலையில் இருந்து விடுதலை பெறாதா என மனிதர்கள் ஏங்கிக் கொண்டும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஏறக்குறைய மெய்யியல் தேடலுக்கும் இதுதான் அடிப்படை என்றே கருதுகிறேன்.
தனக்குள்ளாக ஏற்படும் கொந்தளிப்புகளை ஏதோ ஒரு வகையில் அடக்கி விட வேண்டுமென மனிதர்கள் தத்தளிப்பதுதான் இறை தேடலுக்கும் மூலமாக நான் நினைக்கிறேன். உலகத்தில் பிறந்த அனைவரும் மனநோயாளிகள் தான் என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். மனநோய் என்பது ஒன்றுமே அல்ல. அதுவும் ஒரு மனம் என்கிறார் அவர். ஏன் இப்படி அலைகிறோம், தவிக்கிறோம் என்ற கேள்விகளுக்கெல்லாம் நம்மிடம் விடை இல்லை.எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பதிலும் தெளிவு இல்லை. பதட்டமும், குழப்பமும் நீக்கமற நிறைந்திருக்கும் நம் வாழ்வில் நிதானித்துப் பார்க்க நம்மிடத்தில் விழிகள் இல்லை.ஆசையே அழிவிற்கு காரணம் என போதித்தது பௌத்தம். நீ எல்லாவற்றிலும் இருந்து நீங்கி இரு என போதிக்கிறது சமணம்.
நீண்டகாலமாக பௌத்த, சமண வழிபாட்டுத் தத்துவங்களின் மீது எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உண்டு. அம்பேத்கரின் மாணவனாக நான் பவுத்தத்தை அணுகியபோது பவுத்தம் மிகப்பெரிய வசீகரம் கொண்ட காந்தம் போல என்னை இழுத்தது. குறிப்பாக இந்து மதத்தின் மூடத்தனங்களிலிருந்து, சாதிய ஏற்றத்தாழ்வுகளில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள பவுத்தம் ஒரு மாபெரும் வழி என்றே எனக்குத் தோன்றியது.குறிப்பாக அம்பேத்கரின் “சாதியை ஒழிக்கும் வழி”(காலச்சுவடு வெளியீடு) என்கின்ற நூல் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் இருந்த தர்க்க மோதல்தான் இந்தியாவில் காலங்காலமாக நடந்து வருகிற சமூக முரண்களின் தோற்றுவாய் என நானே புரிந்து கொண்டதாக கருதினேன்.
ஒரு அம்பேத்கரியனாக என்னை நானே உணர்ந்து என் மகனுக்கு சிபி கௌதம் என பெயரிட்டேன். சிபி என்பது நான் சார்ந்து இருக்கின்ற தமிழ்த் தேசிய இனத்தின் கொடைப் புகழ் மன்னன் பெயர். கௌதம் என்பது தத்துவார்த்தமாக நான் தேடி அடைந்த புத்தத்தின் வழி நான் கண்டடைந்த பெயர்.இவ்வாறெல்லாம் சிந்தனைகளை வளர்த்துக் கொண்ட எனது வாழ்வில் 2009 இன அழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை நான் கொண்டிருந்த மெய்யியல் கோட்பாடுகளை ஏறக்குறைய மறுபரிசீலனை செய்யும் நிலைமைக்கு என் விழிகள் முன்னால் நிகழ்ந்த பெரும் இன அழிவு என்னை உந்தித் தள்ளியது.
மீண்டும் அமைதியற்ற இரவுகள் சூழ தொடங்கின. தனிப்பட்ட வாழ்விலும் எங்கெங்கோ அமைதி தேடி அலைந்து பல இடங்களில் தோற்றுப் போய் , சொல்லப்போனால் தீவிரமான மன அழுத்தத்திற்கு உள்ளாகி உறக்கத்திற்கான மாத்திரைகள் எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.உறக்க மாத்திரைகள் ஒரு தப்பிப்பு என நான் அறிவேன். ஆனாலும் அந்த தப்பிப்பு எனக்கு பிடித்திருந்தது. பகல் நேரத்திலும் மன பதட்டத்தை குறைக்கும் அல்ப்ராக்ஸ் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது எனக்கு வாழ்வியல் முறையாக மாறிப்போனது . இசையிலும், திரைப்படங்களிலும், இலக்கியங்களிலும் முழுமையாக மனதை செலுத்த முயன்று கொண்டிருந்தேன். அதே சமயத்தில் அரசியல் கடமைகளும் சூழ எதிலும் நிறைவு இல்லாமல் உழன்று கொண்டிருந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் தனிப்பட்ட அழுத்தங்களால் என் கவனத்தை திசை திருப்ப முயன்று நான் தோற்றுக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் மறக்க தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு இரவு பகல் பாராது அலைந்துகொண்டிருந்தேன்.என் மனதிற்கு மிக நெருக்கமானவர்கள் இதை உணரத் தொடங்கியதும் இன்னும் நான் பதட்டமானேன். அவர்களுக்குத் தெரியக்கூடாது என நினைத்து நான் கடுமையாக அலைச்சல்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த தவிப்பும், எனக்குள் ஏற்பட்ட போதாமையும் ஒரு அலை போல சூழ்ந்து கொண்டிருந்தபோதுதான் தற்செயலாக புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய “முதன் முறையாக மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை” என்கின்ற ஒரு சிறு நூல் எனக்குள் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அந்த நூலை எழுதியவரை நான் ஏற்கனவே அறிந்து இருந்தேன் . 2009 இன அழிவு போராட்ட காலங்களில் எங்களோடு அவரும் களத்திலே நின்று இருந்தார். ஒருசமயம் தஞ்சாவூரில் ஒரு மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவரை நெருங்கி பார்க்கின்ற ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது. மிகவும் ஆவேசமான அதே சமயத்தில் சற்று அறிவுப்பூர்வமான ஒரு இளைஞன் அவர்.ஐயா மணியரசன் தலைமையிலான ஒரு மாநாட்டிலும் அவரை நான் கண்டிருந்தேன். அவரை ஐயாவின் மகன் என நான் அறியத் தொடங்கினேன்.
சில காலங்களுக்கு பிறகு அவரைப் பற்றியும் அவர் இயக்கிய “”பாலை” என்ற திரைப்படத்தை பற்றியும் நான் அறிந்திருந்தேன். நான் அறிந்திருந்த வகையில் அவர் தீவிரமான ஒரு அரசியல் களத்தில் ஒரு ஆளுமையாக வெளிப்படுவார் என்று அப்பொழுதுகளில் நான் நம்பினேன். சில வருடங்களுக்கு அவரைப் பற்றி எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒருமுறை ஆனந்தவிகடனில் அவரைப் பற்றிய சிறு செய்தி ஒன்றும், அவர் நடத்தி வருகிற செம்மைவனம் கூடல் பற்றிய செய்தி ஒன்றும் படித்தேன்.பிறகு ஆனந்த விகடனில் தொடர் ஒன்றை அவர் எழுதியபோது , படித்தேன். நிச்சயமாக அவர் நான் கண்ட ஆவேசமான இளைஞன் அல்ல. இவர் வேறொரு மனிதர் என நான் நினைக்க தொடங்கி இருந்தேன்.
….வெகுகாலம் கழித்து கும்பகோணத்தில் நடந்த உழவர் பாதுகாப்பு மாநாட்டின் கருத்தரங்கில் அவர் ஒரு பேச்சாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் ஒரு சூழலியல் போராளியாக உருவாகி வருகிறார் என நம்பினேன்…..வெகு காலம் கழித்து ஐயா மணியரசன் அவர்களின் தாயார் இறப்பிற்கு சென்றபோது மீண்டும் அவரைப் பார்த்தேன்.….இந்த முறை நிறைய மாறுதல்கள். அண்ணன் சீமானோடு நான் சென்றிருந்தபோது ஐயாவை சுற்றியும் ,அண்ணனை சுற்றியும் நிறையக் கூட்டம் . இந்தக் கூட்டத்தில் எல்லாம் சிக்கி விடாமல் அவர் தனியாக அமர்ந்திருந்த அந்த விசித்திர காட்சி என்னை மிகவும் ஈர்த்தது. நானும் அவரோடு சேர்ந்து அமர்ந்து கொண்டேன். கொஞ்சமாக பேசினார். நிறைய கேட்டார்.
அதுவே வெகுவாக என்னை ஈர்த்தது….பிறகு சில நேரங்களில் சில அலைபேசி உரையாடல்களை தவிர, அண்ணன் சீமான் அவர்களுக்கு அவர் சொல்ல விரும்பும் செய்தியை என் மூலமாக கடத்தும் ஒரு கருவியாக பயன்பட்டதை தவிர, பெரிய நெருக்கமில்லை…..தம்பி செந்தில்நாதன் தொடங்கிய “தமிழம்” வலையொளி யூடியூப் சேனலில் அவரது உரை ஒன்றை கேட்க நேர்ந்தபோது இதுவரை இல்லாத, எனக்குள் நிகழாத ஏதோ ஒரு சிறிய அதிர்வு எனக்குள் நிகழத் தொடங்கியது. கடைசியில் அலைக்கழிப்புகளுக்கு மத்தியில் துடுப்பு கிடைத்துவிட்டதாக உள்மனம் சொன்னது.மனதிற்குள் நானே ஒரு முறை அழுத்தந்திருத்தமாக சொல்லிக்கொண்டேன்.
“ஆசான்”…..
குறிப்பாக ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைகள் ஏற்பட்ட போது ஐயா மணியரசன் அவர்கள் ஆதாரங்களோடு கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தார். அவர் வழியை பின்பற்றி அண்ணன் சீமான் அவர்களும் எதிர்வினை ஆற்ற தயாராகி கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் தான் ஆசான் செந்தமிழன் அழைத்தார்.அவதூறுகளுக்கு எதிர்வினை ஆற்றுவது என்பது அவதூற்றுகளை பலமாக்கும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். அண்ணன் சீமான் இதுபோன்ற கருத்துகளுக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றும், ஐயா மணியரசன் பதிலளித்தது கூட தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அழுத்தம் திருத்தமாக ஆசான் தெரிவித்தார்.
சொல்லப்போனால் அவதூறுகள் முகவரி அற்றவை என்றும் ,நமது எதிர்வினைகள் தான் அதன் முகவர்களாக மாறத் தொடங்குகின்றன என்றும் , அண்ணன் சீமான் இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாமென்றும் ஆசான் கேட்டுக்கொண்டார்.அதை நான் அண்ணனிடம் தெரிவித்தேன். தம்பி சொல்வது சரிதான். நாம் இராசராசனை கொண்டாடுவோம். போற்றுவோம். இதுபோன்ற அவதூறுகளுக்கு பதில் சொல்லாமல் புறக்கணிப்போம் என்று அவரும் ஆசான் கருத்தை வழிமொழிந்தார்…..இன்னும் நெருக்கமாகி இருந்தோம்.
ஆசானது காணொளி இல்லாத குரல் பதிவுகள் ஒவ்வொன்றையும் தேடிப்பிடித்து கேட்கத் தொடங்கி இருந்தேன். நள்ளிரவில் விளக்குகளை அணைத்துவிட்டு ஆசான் குரலோடு அமைதியாக எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து செவி எடுக்க கற்றுக் கொண்டிருந்தேன். பேசுவதை குறைத்து கேட்க கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.…மீண்டும் சென்னையில் நடந்த “தமிழரா திராவிடரா” கருத்தரங்கிற்கு ஆசான் வந்தபோது ஈடு இணையற்ற அவரது பேராற்றல் என்னை முழுவதுமாக இழுத்துக் கொண்டதை உணர்ந்தேன் . தம்பி செந்தில்நாதன், தம்பி லிங்கதுரை ஆகியரோடு ஆசானை செம்மை வனத்தில் சந்தித்து உரையாடி கொண்டிருந்த அந்த ஒரு நாள் என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியது.
ஆசான் எழுதிய அனைத்து நூல்களையும் வாங்கிக்கொண்டு படிக்கத் தொடங்கியபோது முற்றிலுமாக வேறு உலகத்திற்கு ஆசான் கைப்பிடித்து அழைத்துச் செல்வதை உணர்தேன்……அந்த மென்மையான குரலில், எதையும் எளிமைப்படுத்தும் வலிமை இருந்தது. புரிந்துகொள்ளவே சிக்கலாக இருக்கின்ற செய்திகளைக் கூட எளிமையாக்கி தருகிற வித்தையை ஆசான் பெற்றிருந்தார்.ஒரு மனஅழுத்தம் மிகுந்த ஒரு நாளில் ஆசானுக்கு அழைத்தேன்.
வெகுநேரம் நான் தான் பேசிக்கொண்டு இருந்தேன். சின்ன சின்ன வார்த்தைகளில் ஆசான் எனக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.மூடிக்கிடந்த கதவுகள் ஒவ்வொன்றாய் திறந்து கொண்டே வந்தன.ஒரு கடற்கரை ஓரம் ஜன்னல்கள் அதிகம் வைத்து கட்டப்பட்ட ஒரு மாடி அறை போல மனம் மாறத் தொடங்கியது. ஆசான் கதவுகளைத் திறக்க தொடங்கினார். அதுவரை நம் மீது படாத காற்று நம்மீது பட்டு உடல் சிலிர்க்கத் தொடங்கியது. நம்மீது படாத வெளிச்சம் நமக்குள் ஆழத் தொடங்கியது…..ஒட்டுமொத்தமாக ஆசான் என்ன சொல்ல வருகிறார் என புரிந்து கொள்ள முயன்றபோது அவர் எதுவும் சொல்ல வரவில்லை என்பதாகவே நான் புரிந்து கொண்டேன். மாறாக ஒரு கடல் போல அவர் இருந்தார். அவரை பின்பற்ற தொடங்கியவர்கள்தான் அவரிலிருந்து எடுக்க தொடங்கினோம். அந்த ஆழ் கடல் எடுக்க எடுக்க தீராத புதையல்களை கொண்டது என உணரத் தொடங்கிய கணத்தில் தான் ஆசான் என் அருகில் இருந்தார்……
நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற வீரத்தமிழர் முன்னணியின் நாங்கள் தமிழர்கள் ஏன் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள ஆசான் வந்திருந்தார். “தமிழரா திராவிடரா” என்ற தலைப்பில் ஏற்கனவே நாங்கள் நடத்திய கருத்தரங்கின் தலைப்பின் மீது அவருக்கு உடன்பாடில்லை. தேவையில்லாததை பற்றி ஏன் வினா எழுப்பி அதை அடையாளப் படுத்துகிறார்கள் என்று எங்களிடம் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த முறையும் எனக்கு அந்த அச்சம் இருந்தது….ஆசான் வந்திருந்தார். குடும்பத்தோடு வந்திருந்தார். வழக்கம்போல் அவர் ஓரமான ஒரு இருக்கையில் அமைதியாக அமர சென்றார். நம்மவர்கள் அவரை விடவில்லை. அவர் யாரிடமோ நின்று பேசிக் கொண்டிருந்தார். தூரத்தில் இருந்து அவரை நான் பார்த்தேன். அவர் இடத்திற்கு நான் செல்லவேண்டும் என நினைக்க தொடங்கினேன். சற்று நேரத்தில் அந்த நினைவு தீவிரமடையத் தொடங்கியது. தம்பியிடம் சொல்லி அனுப்பினேன்.என்னைப் பார்த்ததும் ஆசான் கையை உயர்த்தி புன்னகைத்தார். ஆனால் மேடைக்கு நேர் எதிரே அமர்ந்திருக்கும் எனது அழைப்பை அவர் ஏற்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அவர் வரவில்லை என்றால் நாம் சென்றுவிடுவோம் என முடிவெடுத்தேன்.
ஆனால் எப்போதும் தனித்திருந்து ஓரமாக அமரும் அவர் ஏதோ ஒன்று உணர்ந்து அவரே என்னை நோக்கி வர தொடங்கினார். மெதுவாக வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். என்னை ஆசான் உணர்ந்திருக்கிறார் என நினைக்கும்போது நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.அக்கணத்தில் தான் இதுவரை வாழ்வில் நாம் கண்டவர்கள், பழகியவர்களை விட மிக நெருக்கமான ஒருவரோடு நாம் அமர்ந்திருக்கிறோம் என்கின்ற ஒரு நிதானம் எனக்குள் மலரத் தொடங்கியது. எனக்குள் எப்போதும் வர மறுக்கிற பாதுகாப்பு உணர்வு ஆசான் அருகில் இருக்கும்போது நான் அடைய தொடங்கியிருந்தேன். சொல்லப்போனால் மிகவும் லேசாகி இருந்தேன்.தம்பி செந்தில்நாதனும் இதே போன்ற அனுபவங்களை அடைந்திருந்ததால் அவன் கண்கள் மினுக்க என்னை பார்த்துக் கொண்டிருந்தான்.அண்ணன் சீமான் வந்தவுடன் தன் தம்பியை இறுக்க அணைத்துக் கொண்டார் . தன் தம்பியை பற்றி நிறைய பெருமிதம் அவருக்கு.
எங்களிடம் எப்போதும் ஆசானைப் பற்றி பெருமிதம் பட்டுக்கொள்ள அவருக்கு நிறைய காரணங்கள் இருந்தன…..ஆசான் பேச தொடங்கினார்.அமைதியாக. அதேசமயத்தில் உள்ளுக்குள் உரத்த குரலில்.நாம் நம்பிக் கொண்டிருந்த எல்லா நம்பிக்கைகளையும் மறு பரிசீலனை செய்ய வைக்கின்ற செய்திகளோடு அவர் பேசத் தொடங்கினார்.
இந்த முறையும் அவர் தலைப்பில் முரண்பட்டார். நாம் தமிழர்கள் தான். ஏன் என்ற விளக்கம் யாருக்கும் அளிக்க தேவையில்லை என்றார் உறுதியான குரலில்.பவுத்தம் குறித்தும் சமணம் குறித்தும் அவர் பேசியபோது புழுதி படர்ந்த இருட்டு அறையில் எப்போதும் படராத வெளிச்சப் புள்ளிகள் விழத் தொடங்கின.எந்தவிதமான புகழ்ச்சியும் இகழ்ச்சியும் என்னை பாதிக்காது என்றார் ஆசான். அவைகள் அல்ல நான் என்றார்.
இந்தப் பதிவு கூட அப்படித்தான்.
இது அவர் அல்ல . ஆனால் இதிலும் அவர் இருக்கிறார்
…….ஆசான் பேசிக்கொண்டிருந்தார்.எனக்குள் நான் மலரத் தொடங்கி இருந்தேன்…..அதே போல் பலரும் இருந்தார்கள் என நான் நினைக்கிறேன்.
ஒருவேளை இதற்கு அப்பாலும் இருக்கலாம்.
அந்தக் கணத்தில் அந்த இடம் ஒரு பூந்தோட்டமாக மாறத் தொடங்கியிருந்தது என்பதை மட்டும் நான் அறிந்திருந்தேன்.
வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என பல கொள்கை வழிகள் பார்ப்பனிய ஆரிய மதமான இந்து மதத்திற்கு எதிரான கலகக் குரல்கள் மட்டுமல்ல, மாற்று பண்பாட்டு வழி தீர்வுகள்.
கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழ்த் தேசிய அரசியல் உருவான காலகட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்ப்பனிய ஆரிய இந்து மதத்தின் ஆதிக்க நிலை உச்சத்தில் இருந்ததை உணர்ந்தோம். எனவே தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இந்துக்கள் அல்லர் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய ஒரு நிலைக்கு நாங்கள் உந்தப்பட்டோம்.மேலும் தமிழரின் பல பண்பாட்டு விழுமியங்களை அடையாளங்களை ஆரிய இந்து மதம், செரித்து உள்வாங்கி தனது அடையாளங்களாக வெளிப்படுத்துகிற வரலாற்றுத் திரிபுகளை அடித்து நொறுக்க வேண்டும் என இந்த மண்ணின் பூர்வ குடிமக்கள் முடிவெடுத்தோம்.லிங்காயத்துகள் போல சீக்கியர்கள் போல நாங்களும் இந்துக்கள் அல்ல என நாம் தமிழர் என்கின்ற வெகுஜன அரசியலாக கட்டமைக்கப்படுகிற இனத்திற்கான அரசியலின் ஊடாகவே தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதையும் நாங்கள் கொள்கை முடிவாக அறிவித்தோம்.
இந்தக் கொள்கை முடிவை எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்ற எல்லா இடங்களிலும் முழங்குகிறோம். தமிழர்கள் ஏன் இந்துக்கள் அல்ல என்கின்ற கேள்வி இருந்து தமிழர்கள் யார் என்பதான அறிவுத்தேடல் பிறக்கும் என நாங்கள் நம்புகிறோம். அப்படி தமிழர்கள் யார் என தேடுகிற அறிவுத்தேடல் மூலம் தமிழர் என்கின்ற தேசிய இனம் வலிமையற்ற உதிரிச் சமூகமாக மாறுகின்ற அபாயம் தடுக்கப்படும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.எனவே தொன்ம இனமான தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் பண்பாட்டை மீட்க காலப்புழுதியில் புதைந்து கிடக்கும் எம் இனத்தின் மெய்யியல் சிந்தனைகளை மீண்டும் இந்த மண்ணிலே விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்களது பயணம் அமைகிறது.
இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒரு மதம் என்ற அடிப்படையில் அதற்கான அடிப்படைத் தகு நிலைகளை கொண்டிருக்கின்றன. ஆனால் சர் வில்லியம் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேய அதிகாரி உருவாக்கிய சொல்லான “இந்து” என்பது ஒரு மதத்தின் பெயர்ச்சொல் அல்ல. அது இந்த மண்ணை ஆண்ட ஆங்கிலேயர் தனது வசதிக்காக உருவாக்கிக் கொண்ட அரசியல் நிர்வாகச் சொல்.இஸ்லாமும் கிறிஸ்தவமும் தங்களுக்கென தனித்த வழிபாட்டு முறைகளை கொண்டிருக்கின்றன. அதற்கென தனித் தனியாக புனிதநூல்கள் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்து என்று ஆங்கிலேயரால் கட்டமைக்கப்பட்ட மதம் இதுபோன்ற ஓர்மைக் கூறுகளை கொண்டிருக்கவில்லை என்பதோடு மட்டுமில்லாமல், ஒரு மதம் என்கிற முறைமையில் ஆய்வாளர்கள் வரையறுக்கிற காரணிகளோடு இந்து மதம் ஒத்துப் போவதில்லை.
யார் இந்துக்கள் என்கின்ற கேள்விக்கு இந்து என்கின்ற சொல்லை இந்த நிலத்தில் வாழக்கூடிய கோடிக்கணக்கான மக்களுக்கான பொதுச் சொல்லாக மாற்றிய சர் வில்லியம் ஜோன்ஸ் அளித்த பதில் மிக விசித்திரமானது.யார் இஸ்லாமியர்கள் இல்லையோ, யார் சீக்கியர்கள் இல்லையோ, யார் கிறிஸ்தவர்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என போகிற போக்கில் வரையறுத்த விபரீதத்தை தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.ஏற்கனவே தமிழர் நிலத்தில் சைவம்,மாலியம், பௌத்தம் சமணம் என பல்வேறு நம்பிக்கைகள் இங்கே இருந்தன. மேலும் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பாகவே இருந்த ஆரிய புராதான வைதீக பார்ப்பனிய மதத்திற்கு எதிராக , வருணாசிரம கோட்பாடுகளுக்கு எதிராக தமிழர் மண் உளவியலாகவே எதிர்ப்பு நிலையை கொண்டிருந்தது. ஆனால் ஆங்கிலேயர் தனது நிர்வாக வசதிக்காக இந்து என்கின்ற பொது அடையாளத்துக்குள் தமிழர்களின் அனைத்து விதமான நம்பிக்கைகளையும் அடைத்து ஏற்கனவே இருந்த ஆரிய வைதீக மதத்திற்கு வலுவை சேர்த்தனர்.
இந்து மதத்தை பரப்புவதற்காக சாமி விவேகானந்தர் தமிழகத்திற்கு வந்திருந்தபோது எங்களை இந்துக்கள் என்று நீங்கள் எவ்வாறு அடையாளப் படுத்தலாம் என பேரறிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை வினா எழுப்பினார்.எனவே தமிழர்களின் தொன்ம அடையாளங்களை அழிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட இந்து என்கின்ற பொது அடையாள சொல்லை தமிழர்கள் நாங்கள் நிராகரிக்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல என பேரறிவிப்பு செய்கிறோம்.தமிழர்கள் எத்தனையோ மதங்களை சார்ந்து வாழ்கிறார்கள்.அயலில் இருந்து இறக்குமதியான இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களின் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை தாய் மதத்திற்கு திரும்பி வாருங்கள் என்று நாம் அழைக்கவில்லை. அது தேவையும் இல்லை. சொல்லப்போனால் வர்ணாசிரம அடுக்கை, ஆரிய இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகளை வெறுத்த தமிழர்கள்தான் இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் ஏற்றார்கள். வர்ணாசிரம கோட்பாட்டை வலியுறுத்துகிற இந்து மத எதிர்ப்பு புள்ளியில் அவர்கள் எங்களோடுதான் நிற்கிறார்கள்.
இந்தப் புரிதலோடு தான் இந்து என்கின்ற அடையாளத்தில் இருந்து தமிழர்கள் வெளிவர வேண்டும் என்கிற அழைப்பினை தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அழைப்பு விடுக்கிறார்.நாம் தமிழர் கட்சியில் எத்தனையோ இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் கட்சியின் உயர் நிர்வாக பொறுப்பில் இருக்கின்றார்கள்.
அண்ணன் சீமானின் கருத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அண்ணனோடு பயணிக்கிறார்கள். இஸ்லாமிய மக்களை பாதிக்கின்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒவ்வொரு பள்ளிவாசலிலும் போராடிய இஸ்லாமிய தமிழர்களோடு களத்தில் நின்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். அதன் காரணமாக தமிழகத்தில் வழக்கு பெற்ற ஒரே ஒரு அரசியல் தலைவர் அண்ணன் சீமான் மட்டும்தான்.
இதைப் புரிந்து கொண்டு , வெகு காலத்திற்குப் பிறகு இஸ்லாமிய, கிறிஸ்தவ இளைஞர்கள் திராவிட கட்சிகளை விட்டு தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டு நாம் தமிழர் கட்சியை நோக்கி நகருகின்ற காட்சிகளை பொறுக்க முடியாமல் தான் இதுபோன்ற வெட்டி ஒட்டி அவதூறுகளை பரப்ப வேலைகளை திராவிட ஆதரவாளர்கள் திட்டமிட்டு செய்கிறார்கள்.
எங்களுக்கு முன்னால் இருந்த முன்னோர்கள் வள்ளலார் வழி வைகுண்டர் வழி என்றெல்லாம் கட்டமைத்து விட்டு இந்து மதத்தில் சங்கமித்து விட்டார்கள் என தீவிர திராவிட ஆதரவாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.எங்களை அவர் எச்சரிக்க தேவையில்லை. தன் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் தான் இருக்கிறார்கள் என இந்து மதத்தை நம்புகிற திமுக தலைவரை அவர் எச்சரித்தால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது.ஏனெனில் திராவிடம் தான் ஆரியத்தை தமிழக நிலத்தில் விதைத்த, காப்பாற்றுகிற, கூட்டணி அரசியல் செய்கிற வேலையை திறம்பட செய்து வருகிறது.இதை தெளிவாக புரிந்து கொண்டு, அண்ணன் சீமான் அவர்களது கருத்தை வெட்டி ஒட்டி அவதூறு பரப்புவர்களின் அரசியல் பிழைப்பு தனத்தை அம்பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
காலை,மாலை,இரவு என மூன்று வேளையும் சீமான் போபியா பிடித்து அலையும் அறிவாலயத்து அடிமைகளை பார்க்கும்போது ஒருபுறம் வேதனையாகவும், மற்றொருபுறம் இப்படி இவர்களை நிம்மதியில்லாமல் எட்டு திசையிலும் கட்டி அடிக்கிறாரே அண்ணன் என்பதான மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
அவர் சாதாரணமாக பேசுவதில் கூட எங்கே உள்ளே புகுந்து பொரணி பேசலாம் என்கின்ற கேடுகெட்ட மனநிலை உச்சத்தில் நின்று ஆடுகின்ற காலம் இது.குமரி மாவட்ட கனிமவளம் கொள்ளை போவது அவர்களுக்கு பிரச்சனை இல்லை. சாட்டை துரைமுருகன் திட்டி விட்டார் என்பதுதான் அவர்களுக்கு பிரச்சனை. நீட் தேர்வை இதுவரை நீக்க முடியவில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு பிரச்சனை இல்லை.
சீமான் இன்று என்ன பேசினார் என்பது தான் அவர்களுக்கு பிரச்சனை.இப்படி மண்டை முழுக்க அவர்களுக்கு பைத்திய சுமை ஏறி 24/7 ஒரே சிந்தனையில் சீமான், நாம் தமிழர் என அவர்கள் கிறுக்கு பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.நெருங்கி நின்று என்ன பேசுகிறார்கள் என கவனித்து விடாதீர்கள். கடித்து வைத்து விடுவார்கள் கவனம்.
இன்று பனைத் திருவிழா தொடங்கிவைத்து அண்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பேசிய சில கருத்துக்களை திசைதிருப்பி வழக்கம்போல் சில வில்லங்க பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கியுள்ளனர்.தமிழர்கள் இந்துக்களே இல்லை, தமிழர்களை இந்துக்கள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை என்பதுதான் அண்ணன் சீமான் சொன்னது,
உடனே செய்தியாளர் இடைமறித்து கிறித்துவ, இஸ்லாமிய சமயங்களை நோக்கி ஏன் கேள்வி எழுப்புமாட்டேன் என்கிறீர்கள் என்றதற்கு , அவை வெளியிலிருந்து வந்த சமயங்கள்தானே, ஒன்று ஐரோப்பிய சமயம், மற்றொன்று அரேபிய சமயம்தானே என்று கூறிவிட்டு,மீண்டும் விட்ட பதிலை தொடர்கிறார்.. அதாவது மர செக்கு எண்ணெய்க்கு திரும்புவதுபோல் தமிழர்கள் தங்கள் சமயங்களின் மீது பூசப்பட்ட இந்து என்ற அடையாளத்தை விடுத்து சைவம் , மாலியம் என்று மீண்டு வாருங்கள் என்று சொல்லி அந்த பேட்டியை நிறைவு செய்கிறார்.ஆனால் முன்பாதியை வசதியாக மறைத்துவிட்டு திராவிடத் திருடர்கள் வழக்கம்போல் தங்கள் வெட்டி ஒட்டும் வழக்கமான வேலையின்படி, செய்தியாளர் இடைமறித்து கேட்ட கேள்விக்கான பதிலையும், நாங்கள் இந்துகள் அல்ல என்பதற்கு கொடுத்து வந்த பதிலின் தொடர்ச்சியின் மீதத்தையும் சேர்த்துசீமான் இந்து மதத்திலிருந்து மீண்டு சைவம், மாலியத்திற்கு மீண்டு வாருங்கள் என்று சொன்னதை இஸ்லாம், கிறித்துவத்திலிருந்து மீளச்சொன்னதுபோல் கேடுகெட்ட அவதூற்றுப் பொய்ப் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்கிறார்களாம். வாங்கிய 200 ரூபாய்க்கு என்ன வேலை பார்த்தீர்கள் என ஓனர் கேட்கின்ற கேள்விக்கு திராவிட பஜனை கோஷ்டியினர் பதிலளிக்க எப்படியெல்லாம் குட்டிக்கரணம் அடிக்க வேண்டி இருக்கிறது..??இந்தப் கேடு கெட்ட பொழப்பிற்கு..!
வழக்கறிஞர் மணி செந்தில்.நாம் தமிழர் கட்சி.
59தமிழ வேள், பொன்வாசிநாதன் விஜயரெங்கன் and 57 others2 comments27 sharesLikeCommentShare
சட்டென அந்தக் கேள்வியை என் மகன் கேட்டு விட்டான். “உனக்கு ஏன் இளையராஜாவை அவ்வளவு பிடிக்கிறது..?”உண்மையில் அந்தக் கேள்வியை நேர்மையாக எதிர்கொள்ள எனக்கு பயமாக இருந்தது. அதை அப்படியே வார்த்தைகளால் நான் விவரித்தாலும் அவனால் புரிந்துகொள்ள முடியாது.இளையராஜாவை கேட்பது என்பது எனது அந்தரங்க உணர்வு போல, நான் மட்டும் ஆத்மார்த்தமாக உணர்ந்து ரசித்து உள் வாங்குகிற சுய நிகழ்வு. அதை எப்படி இவனுக்கு விவரித்து உணர்த்துவது..?எல்லாவற்றையும் மகனிடம் கொட்டிவிட கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. மழை போல எப்போதும் இளையராஜா இசை அபூர்வமானது தான். சலிப்பற்றதுதான்.அவரின் 80, 90 களின் ஒவ்வொரு பாடலும் எனக்கு ஒவ்வொரு காலத்தை, நான் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் ஒரு திரைப்படக் காட்சியை போல நேரடியாக பார்த்துவிடுகிற அபாயத்தை கொண்டிருந்தாலும், அந்த மாய விளையாட்டை எப்போதும் நான் மறக்காமல் விளையாடிக் கொண்டே இருந்தேன். சில பாடல்கள் கேட்கும்போது அம்மாவின் மடி வாசனை நினைவுக்கு வருகிறது. சில பாடல்கள் கேட்கும்போது கழுத்தோரம் வியர்வை வடிய வடிய, ஒரு உச்சி வெயிலில் மாடிப்படி இடுக்கில் நழுவிய காலத்துளி ஒன்றில் கழுத்தோரம் பெற்ற முதல் காதல் முத்தம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பசித்திருந்த இரவுகளில் பாடல்களை மட்டும் புசித்திருந்த பொழுதுகள் இன்னும் நினைவில் இருக்கின்றன.
வலி ஏமாற்றம் காதல் நோய் பிரிவு துயர் காமம் பசி பிணி தனிமை கொண்டாட்டம் என என் வாழ்வில் எதை எடுத்துக்கொண்டாலும் அவரின் இசை அதில் கலந்தே இருக்கிறது. இப்போதுகூடஎத்தனையோ நள்ளிரவுகளில் அவரின் சில பாடல்களை கேட்கும் போது ஆளரவமற்ற சாலையை வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்று விடுகிறேன். “வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்..” என பாடும் போது இந்த வாழ்வு ஒரு கொடும் சாபம் என கலங்கி விடுகிறேன். ” காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே, தேரு வரும் உண்மையிலே, சேதி சொல்வேன் கண்ணாலே..” என கேட்கும் போது இந்த வாழ்வு எப்படிப்பட்ட வரம் என சிலிர்த்து இருக்கிறேன். சகல வாழ்வையும் கணக்கு,வழக்கோடு சரி பார்த்தால்..வரத்தையும், சாபத்தையும் அவர்தான் எப்போதும் தீர்மானிக்கிறார்.
ஒரு பாடல் கேட்கும் போதே அந்த காலத்திற்குள் உள்ளே நுழைந்து அக்காலத்து அனுபவத்தை இக்காலத்திலும் மீளப்பெறுவது என்பது அவரது இசையின் ஊடாக மட்டும்தான் என உணரும்போது அந்த இசை எக்காலத்திற்கும் நம்மை கடத்தி செல்லும் ஒரு பிரம்மாண்டமான கால இயந்திரம் என உணர்ந்து வியந்திருக்கிறேன்.
ஒரு பாட்டு நம்மை என்னவெல்லாம் செய்யும் என்பதை எல்லாம் தாண்டி இந்த உலகத்தில் இத்தனை கோடி நபர்களுக்கு மத்தியில் எனக்கான ஆறுதலையும் , எனக்கான வலியையும், எனக்கான அழுகையையும், எனக்கான ரகசியப் புன்னகையையும் வர வைக்கிற உள்ளீடு அப்பாடல்களில் எப்படி ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் யோசித்து யோசித்து கடவுள் நம்பிக்கை போல புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்.
300க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் முழுக்க அவரது இசையாய் சேர்த்துவைத்து கொண்டாடிய காலகட்டங்களிலும் சரி, ஏறக்குறைய 4000 பாடல்களை ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்து நினைத்தபோதெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்திலும் சரி, எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்களில் அதே சரண அடுக்குகளில், ராக வளைவுகளில் அதே கிறக்கம்.. அதே மயக்கம்.. அதே தொலைதல்.
இத்தனை ஆண்டு வாழ்க்கையில் அவரது இசை போல நெருங்கிய துணை எதுவும் இல்லை. போகுமிடமெல்லாம் கைபிடித்து அழைத்துச் செல்லுகிற சகா போல அவரது பாடல்கள் நாற்புறமும் நம்மை அழைத்து சென்று கொண்டே இருக்கின்றன. வாழ்வெனும் ஏற்றத்தாழ்வு ஊசலாட்டத்தில் சிக்கி பல உளவியல் சிக்கல்களால் சிதைந்த என்னைப் போன்ற பலரை நிதானமாக்கி வாழ வைத்திருப்பது அவரது இசை தான். அந்த தூய விதியில் அவர் சிறிது பிசகி இருந்தாலும் பலரின் தற்கொலைஇங்கே தவிர்க்கப்பட்டு இருக்காது.
அந்த வகையில்.. அவர் ஒரு மீட்பர்.
காதுகளால் சுவாசித்து வாழ்ந்த ஒரு தலைமுறையை உருவாக்கித் தந்தஇசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
வைதீக இந்து மதம் அல்லது வர்ணாசிரம தர்மம் என்பது நான்கு வர்ணங்கள் ஏறக்குறைய நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகள் என கொடூர அடுக்குகளால் நுட்பமாக கட்டப்பட்ட ஒரு அசாதாரணமான கோபுரம்.
பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் அவருக்கு கீழாக அதி சூத்திரர் என்று அழைக்கக்கூடிய தொட்டால் பார்த்தால் தீட்டு , நிழலைத் தீண்டுவது கூட பாவம் என்ற வகையில் அடக்கி ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் என இந்த வரிசை உச்சி முதல் கீழ் வரையிலான கொடுங்கோன்மையின் விசித்திர அடுக்கு.தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்களுக்கு கீழாகவும் ஒரு அடுக்கு, அதற்கு கீழேயும் ஒரு அடுக்கு என்கின்ற அடுக்குமுறை தனக்குக் கீழாக ஒருவன் இருக்க வேண்டும் என்கின்ற மனித உளவியல் மேலாதிக்கத்தை சார்ந்து அல்லது பயன்படுத்தி வர்ணாசிரம தர்மம் உச்சபட்ச அறிவாற்றலோடு படைக்கப்பட்ட சுரண்டல் வாத மோசடி அமைப்பு.
இந்த அமைப்பை சிதைக்க பன்னெடுங்காலமாக பண்பாட்டுத் தளங்களில் பல புரட்சிகள் நடந்து வருகின்றன. பௌத்த சமண எழுச்சி முதல் வள்ளலார் வரையிலான எண்ணற்ற தாக்குதல்கள் வர்ணாசிரம தர்ம அநீதிக் கோட்டையின் மீது நிகழ்த்தப்பட்ட கொண்டே இருக்கின்றன. இன்றளவும் சாதாரண இயல்பு வாழ்க்கையில் சாதியின் இருப்பு வலிமையாக இருப்பதன் காரணம் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய சுரண்டல் வாத மேலாதிக்க குணாதிசயத்தை அது பெற்றிருப்பதே ஆகும்.
சாதியின் பெருமையை காப்பாற்ற நாமெல்லாம் ஒரே சாதி என்கின்ற நுட்பமான கூட்டுணர்வு மற்றும் அது தருகிற பாதுகாப்பு போன்றவை மிகப்பெரிய உதவியாக இருக்கின்றன. சாதியை பொறுத்தவரை நிலத்தை போல பெண்ணும் ஒரு பொருள்தான். பெண்ணை வைத்து தான் சாதி சார்ந்த உரையாடல்கள் நிகழ்த்தப்படுவதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.”எங்கே சார் சாதி இருக்கு.. இப்பல்லாம் யார் சாதி பார்க்கிறா..?” என்பதான கேள்விகளை வெகு சாதாரணமாக நம்மால் எதிர்கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு அரசு அலுவலகத்திலோ, ஒரு நீதிமன்றத்திலோ, பள்ளி கல்லூரி வளாகத்திலோ புதிதாக வருகின்ற அலுவலர் அல்லது மாணவர் என்ன சாதி என்பதை தெரிந்துகொள்ள இன்றளவும் கடுமையாக முயற்சிகள் நடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.எந்த சாதி அந்த இடத்தில் அதிகமாக இருக்கிறதோ, அதற்கு எதிராக பிற சாதிகள் ஒன்றிணைவது இயல்பாக நடக்கிறது. எதுவாக இருந்தாலும் சாதி தன்னை தக்கவைத்து தகவமைத்துக் கொண்டே இருக்கிறது. அதுதான் சாதி கட்டமைப்பின் மிகப்பெரிய நுட்பம்.சாதி சார்ந்த மனநிலையிலிருந்து மீறுவது என்பது சாதாரண செயல் அல்ல. என் தம்பி ஒருவன் சாதிமறுப்பு மனநிலை கொண்டவன்.
தன்னை குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்தப் படுவதை மிகக் கேவலமாக உணர்பவன். என்னை சாதியாக அடையாளப் படுத்துவது என் பிறப்பை இழிவுப்படுத்துவதற்கு சமம் என்று எப்போதும் கோபத்தோடு சொல்கிறான். தற்போது அவன் காதலிக்கிறான். சாதி மறுப்பு திருமணம் செய்ய ஒரு போதும் அவனது உறவினர்களிடத்தில் அனுமதி கிடைக்கப்போவதில்லை. ஆனாலும் மீறத் தயாராக இருக்கிறான்.அவன் தான் ஒருமுறை மிக அமைதியாக சொன்னான். “என் சாதியைப் பற்றி யாராவது பேசினால் எனக்கு அருவருப்பாக இருக்கிறது. நீ நம்மாள் தானே என்று எந்த உறவினனாவது கேட்கையில் அடித்து மண்டையை உடைக்க வேண்டும் என தோன்றுகிறது” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். சாதிய பெருமிதத்தின் மீது தீரா வெறுப்பு அவனுக்குள் ஏற்பட்டுவிட்டது. சொல்லப் போனால் சுய சாதிப் பெருமிதம் முற்றிலுமாக இழந்துவிட்ட மனநிலை அது. அந்த மனநிலை கொண்ட ஒரு கூட்டம் தான் இப்போது தேவைப்படுகிறது.
இன்றளவும் 85% துப்புரவு பணியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களாகவே ஏன் அமர்த்தப்படுகிறார்கள் என்ற கேள்வியிலிருந்து நம் சிந்தனையை துவங்கலாம்.இந்திய ரயில்வே என்ற உலகிலேயே மாபெரும் அமைப்பில் இன்றளவும் தண்டவாளங்களில் சிதறிக்கிடக்கும் டன் கணக்கிலான மனித மலங்களை தூய்மைப்படுத்துபவர்கள் யாராக இருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். சமூகத்தின் நம்மைப் போன்ற சக மனிதர்களான ஒரு பிரிவினர் மீது மட்டும் சுமத்தப்படும் இந்த இழிநிலை எந்த தர்மத்தின் வாயிலாக கட்டப்பட்டிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.அது தர்மம் அல்ல சதி என்று உணர தொடங்கலாம்.
இந்த வர்ணாசிரம தர்மத்திற்கு எதிர் கலகமாக பௌத்த மரபை 18 ,19ஆம் நூற்றாண்டுகளிலேயே முன்னிறுத்திய நமது பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் இந்தியப் பெரு நிலத்திலேயே முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடு நடத்தியவர். நிலைநிறுத்தப்பட்ட கோரிக்கைகளை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முன்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக முன்வைத்தவர். மாபெரும் பௌத்தர். தன்னை தமிழனாகஉணர்ந்து “தமிழை அறிய முடியாமல் பௌத்தத்தை உணர முடியாது என்று அறிவித்தவர்”.1.12.1891 இல் நீலகிரியில் நடைபெற்ற மாநாட்டில் அயோத்திதாசர் இயற்றிய முதல் தீர்மானம் சொல்கிறது “பறையர் என்றழைத்து இழிவு செய்கிற இழிநிலையைப் போக்க சட்டம் வேண்டும்”. இன்னொரு தீர்மானம் “பொது இடங்களில் சாதாரணமாக சாதி வேறுபாடின்றி நுழைவதற்கான” தீர்மானம்.இந்தத் தீர்மானங்களை எல்லாம் இப்போது வாசித்துப் பார்க்கும்போது சாதி என்பது ஆழமான கொடும் நோயாக பல கோடி மக்களை வதைத்து வந்திருக்கிற துயரமாக வரலாற்றின் பாதையில் நீண்டு வந்திருக்கிற அநீதியாக உணர முடிகிறது.
சமீபத்தில் கூட கடலூரில் இருந்து ஒரு தம்பி எடுத்தார். உங்களை சௌராஷ்ட்ரா என்று சொல்கிறார்கள். நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும். உங்கள் பெரியப்பா எனது பக்கத்து வீட்டுக்காரர். நீங்கள் ஏன் உண்மையை சொல்ல மறுக்கிறீர்கள், உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதானே என்று உண்மையாகவே அவர் என் மீதான அன்பில் கேட்டார். ஏனென்றால் நான் என் சுய சாதியை வெறுக்கிறேன். அதை என் மீது படிந்திருக்கிற அழுக்காக உணர்கிறேன் என்பதை அவரிடம் சொல்லி புரிய வைக்க முயன்றேன். அந்த அழுக்கை எப்படி எனது அடையாளமாக நான் சொல்வது என்ற தயக்கம் எனக்கு இருக்கிறது என்று சொன்னேன்.
அந்த உடன்பிறந்தான் புரிந்து கொண்டார் என்றே நினைக்கிறேன்.உண்மையில் தூயத் தமிழனான என்னை இன்னொரு இனத்தானாக காட்டுவது இழிவானது என்றாலும் , அதைவிட இழிவானது ஒரு சாதிக்காரனாக நான் அடையாளப்படுத்தப்படுவது.அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் பலநூறு பக்கங்களை படித்துப் பார்க்கும்போது சாதி என்ற அநீதி இந்த சமூகத்தை பிளந்து போட்டிருக்கிற கொடுங்கோன்மை புரிகிறது.இந்த நுட்பத்தை தான் திராவிட இயக்கங்கள் மிகச்சரியாக புரிந்துகொண்டு தன்னை தமிழனாக முன்னிலைப்படுத்தி, சாதிமறுப்பு பேசி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்த நம் தாத்தா அயோத்திதாச பண்டிதரை முற்றிலுமாக வரலாற்றில் புறக்கணித்து இருந்தன.ஆனால் சமீப காலமாக பேரன்கள் நாம் நமது முன்னோர்களான அயோத்திதாசர் பண்டிதர் , இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்களை பற்றி அறிய தொடங்கியிருக்கிறோம்.
நிறைய தமிழ்த் தேசிய இளைஞர்கள் அயோத்திதாசர் பற்றி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை இணைந்து ட்விட்டர் ஸ்பெசில் நடத்திய நேற்றைய முன்தின கலந்துரையாடலில் கலந்துகொண்டார்கள்.
அயோத்திதாசரை பற்றி ஒரு எளிய அறிமுக உரையை 45 நிமிடங்கள் பேச எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. நமது தாத்தா அயோத்திதாசரின் மொழி உணர்வு மிக்க தமிழ் மைய வாதம் இன்றளவும் திராவிட அறிஞர்களுக்கு ஒவ்வாமையாகவும், தமிழ்த்தேசியர்களுக்கு ஊக்கமாகவும் இருக்கிறது. அவர் திராவிடர் என்ற சொல்லை கூட தமிழர் என்ற பதத்தில் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்.
அதையும் இறுதிக்காலத்தில் விட்டுவிட்டு 1907ல் “ஒரு பைசாத் தமிழன்” என்று தொடங்கி அந்த இதழை 1908ல் அதாவது மறு ஆண்டே “தமிழன்” என்று பெயர் மாற்றுகிறார். 1935 வரை அந்த இதழ் அவரது மறைவிற்கு பிறகும் வெளிவந்திருக்கிறது. அவரது படைப்புகள் தமிழ்த் தேசிய இனத்தின் அறிவுச்சேகரங்கள்.எனக்குத்தெரிந்து “தமிழன்” என்ற சொல்லை முதன்முதலாக அரசியல் சொல்லாக (political term) பயன்படுத்தியது நம் தாத்தா அயோத்திதாச பண்டிதர் தான்.ஒருபக்கம் டுவிட்டரில் “திராவிடத் தந்தை அயோத்திதாச பண்டிதர்” என சிலர் வலிந்து நம் தாத்தாவை திராவிடக் கூட்டத்திடம் அவர்கள் விரும்பாமலேயே திணித்துக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் தமிழ்- தமிழன் என்ற பரப்பில் தீவிரமாக இயங்கிய நம் தாத்தா அயோத்திதாசரை எந்த திராவிடத் தலைவரும் நினைவு கூரக் கூட விரும்புவதில்லை.
ஆனால் மறுபுறமோ அயோத்திதாசரது பேரன்கள் “தமிழ்த் தேசியத்தின் முன்னோடி” என அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.சாதி மறுப்பும், தமிழ்த் தேசிய உணர்வும் ஒருங்கே மலர்வதற்கான காலம் உருவாகிவிட்டது என்ற நம்பிக்கையை புதிய தமிழ்த் தேசியர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.சாதி மறுப்போம். தமிழர்களாய் தலை நிமிர்வோம்.
1991 ஆம் வருடம் என நினைக்கிறேன். புகழ்பெற்ற நடிகர் விஜய் அவர்களின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்களது இயக்கத்தில் நண்பர்கள் என்ற ஒரு திரைப்படம் வந்தது.
அக்கால கட்டத்தில் கவுண்டமணி-செந்தில் கூட்டணி நகைச்சுவை தளத்தில் உச்சத்தில் இருந்தது. பார்ப்பதற்கு அப்பாவித்தனமான, இயல்பு வாழ்க்கையில் நாம் அடிக்கடி எதிர்கொள்கிற அவசரக் குடுக்கை போன்ற கண்ணாடி போட்ட அந்த இளைஞன் “நண்பர்கள்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தான். அதற்கு முன் அந்த முகத்தை கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில் கண்டிருக்கிறேன்.
இரண்டு படத்திலும் சிறிய கதாபாத்திரங்கள் தான். தான் தோன்றும் இடங்களில் எல்லாம் பார்வையாளர்களிடம் வெடி சிரிப்பை வரவழைத்த அந்த இளைஞன் அடுத்த சில வருடங்களில்
உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மாறிப் போனான்.அந்த இளைஞன் தான் நடிகர் விவேக். திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் நடிகர் விவேக் தனித்துவமானவர். Body shaming என்று சொல்லக்கூடிய உருவக்கேலி என்பதை தன் நகைச்சுவைகளில் முதன்மை படுத்தாமல் தனது அப்பாவித் தனத்தை, வார்த்தை தடுமாற்றத்தை, நகைச்சுவை தளமாக மாற்றிக் கொண்டதில் நடிகர் விவேக் ஒரு முன்னோடி.கோபமாக கத்திக் கொண்டிருக்கிற கதாநாயகி ஒருகட்டத்தில் ஆத்திர உச்சியில் “Shut up” என்கிறாள். எதிரே நின்று கொண்டு இருக்கின்ற நடிகர் விவேக் எளிமையாக “Same to you” என சொல்வது ஒரு சிறிய காட்சி என்றாலும் அது தமிழ்த் திரைப்பட நகைச்சுவை காட்சி வரலாற்றில் ஏற்படத் தொடங்கிய மாற்றம்.
அவரைப் பற்றி அறிந்தவர்கள் நிறையப் படிப்பவர் என்று சொல்கிறார்கள். அவரால் எந்த கதாபாத்திரத்திலும் மிக எளிமையாக பொருந்த முடிந்ததன் காரணம், அவர் இயல்பிலேயே அவர் அடைந்திருந்த கலை மேதமை தான். இது எழுதிக் கொண்டிருக்கும் போதே பல காட்சிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.மின்னலே திரைப்படத்தில் விபத்துக்குள்ளான வண்டிக்கு முன்னால் விழுந்து கிடக்கும் விவேக் வண்டி முன்புறத்தில் தொங்கிக் கொண்டிருக்கிற எலுமிச்சை பழத்தை எடுத்து பிழிந்து சாறு குடித்துவிடுவார். கேட்டால்” கேறா இருந்துச்சி அதான்” என அப்பாவித்தனமாக பதிலளிக்கின்ற நடிகர் விவேக்கின் Classic தனமான காமெடி இல்லாத தமிழ்த்திரையை நினைத்து பார்க்கவே சற்று அச்சமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
சென்ற வருடத்தில் கூட அவரால் “வெள்ளைப் பூக்கள்’ என்கின்ற திரில்லர் வகை திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வழங்க முடிந்ததை நினைத்தால் நாம் எப்படிப்பட்ட மகத்தான கலைஞனை இழந்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.அவருடைய மரணத்திற்கு ஏதேதோ காரணம் சொல்கிறார்கள். ஆனால் அவரால் பலர் வாய்விட்டு சிரித்து தனது மன இறுக்கத்தைத் தளர்த்தி தன் மரணத்தை தள்ளிப் போட்டு இருக்கிறார்கள்.
அந்தப் பல கோடி புண்ணியம் அவரை காப்பாற்றியிருக்கலாம்.
போய் வாருங்கள் விவேக். நீங்கள் நட்டு வைத்திருக்கிற பல லட்சக்கணக்கான மரங்கள் உங்கள் பெயர் சொல்லி பலருக்கு மூச்சுக்காற்றை தாரைவார்த்து கொண்டிருக்கும்.
248தமிழ வேள், Raju Janu and 246 others15 comments39 sharesLikeCommentShare
வருகிற மார்ச் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நம் உயிர் அண்ணன் சீமான் அவர்கள் கட்சியின் ஆட்சி செயல்பாடு வரவையும் வெளியிட்டு வரலாற்று பேருரை ஆற்ற இருக்கிறார்கள்.மகத்தான இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தமிழ்நாடெங்கும் நாம் தமிழர் உறவுகளாகிய நீங்கள் தயாராகி வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
இந்தப் பயணம் குறித்தான சில எண்ணங்களை திறந்த மனதோடு உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1. தொலைவிலிருந்து வரும் உறவுகள் குறித்த நேரத்தில் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
2. ஆறு மணி நேரம் மட்டும் பயணநேர தொலைவில் இருக்கின்ற ஊரிலிருந்து புறப்படுகின்ற உறவுகள் மட்டும் அதிகாலையில் புறப்படுங்கள். மற்றவரெல்லாம் முதல் நாள் இரவே புறப்பட்டு விடுவது நல்லது
.3. 234 வேட்பாளர்களும் மதியம் மூன்று மணிக்கு முன்னதாகவே ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வந்து விடுவது நல்லது. கடைசி நேர போக்குவரத்து நெரிசலில் வேட்பாளர் சிக்கிக் கொள்வதை இதன்மூலம் தவிர்த்துவிடலாம். வேட்பாளர்கள் மற்றவர்களோடு இணைந்து வருகின்ற பயணத்திட்டத்தை தவிர்த்துவிட்டு முன்னதாகவே தனி வாகனத்தில் சில பேரோடு புறப்பட்டு வருவது இன்னும் சிறந்தது. மற்றவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் போது வந்தால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் வேட்பாளர்கள் முன்னதாக அரங்கில் இருப்பதே சிறந்தது. வேட்பாளர்கள் இன்று தலைமை கேட்டிருக்கிற வேட்பாளர் விபரக் குறிப்புகளை மின்னஞ்சலில் உடனே அனுப்பி வைத்து விடுங்கள்.
4. அதிகாலை புறப்படும் உறவுகள் காலை, மதிய உணவை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது. செலவும்/நேரமும் இதனால் மிச்சப்படும். இன்னும் வாய்ப்பு இருக்கிற உறவுகள் சென்னையில் இருக்கின்ற தங்களுக்கு வேண்டியவர்களிடம் எளிய இரவு உணவிற்கான ஏற்பாட்டினை அளித்து விட்டால் குறைவான செலவில் இரவு உணவை தயாரித்து விடலாம். வரும் வழியில் இருக்கின்ற உணவகங்களில் உணவின் விலை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இதைப்பற்றி உறவுகள் சிந்திக்கலாம்.
5. செங்கல்பட்டு தொடங்கி ராயப்பேட்டை வரையிலான சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருக்கிறது. அதிகாலையில் புறப்படுகின்ற உறவுகள் செங்கல்பட்டை பகல் 12 30 மணிக்குள் கடப்பது போல பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டால் இறுதிநேர பரபரப்பைத் தவிர்த்துவிடலாம் .
6. தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் உறவுகள் தங்களில் பொறுப்பான ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஓட்டுனருக்கு அருகே அமர வையுங்கள். இரவு பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர் களைப்பாக இருந்தால் வண்டியை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுனருக்கு போதிய ஓய்வு அளித்து பிறகு பயணத்தை தொடருங்கள்.
7. அனைவரும் முகக் கவசம் அணிவதை தவிர்த்து விடாதீர்கள். கையில் சிறிய அளவிலான சானிடைசர் பாட்டில் ஒன்று வைத்துக்கொள்வது சிறந்தது. வீட்டிலேயே காய்ச்சிய குடிநீரை போதியளவு எடுத்துக்கொண்டு கிளம்பினால் வழியில் தேவையற்ற குடிநீர் செலவு மிச்சமாகும். மேலும் வழியில் பாதுகாப்பான குடிநீருக்கு உத்தரவாதமில்லை
8.குழந்தைகளை அழைத்து வரும் உறவுகள் அவர்களுக்கான அவசர மருந்துகள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல மாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கிறது. அதற்கான ஆடைகளையும் எடுத்து வாருங்கள்.
9. எல்லாவிடத்திலும் சாலை விதிகளைக் கடைபிடியுங்கள். பெரும்பாலும் வேகமாக செல்வதை தவிருங்கள். மகிழுந்துகளில் வருகின்ற உறவுகள் இடைவார் அணியுங்கள். மகிழுந்தில் வருகின்ற உறவுகள் ஏழாம் தேதி இரவு சென்னையில் தங்க முடிந்தால் தங்கி விடுங்கள். இரவு நேர பயணத்தை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள்.
10. வண்டியில் வரும் அனைவரது அலைபேசி எண்களையும் வண்டிக்கு பொறுப்பேற்கிறவரிடம் ஒப்படையுங்கள். சாலைகளை கடக்கும்போது கவனமாக இரு புறமும் பார்த்துவிட்டு கடங்கள். 11. நேர மேலாண்மையை சரிவர பின்பற்றினால் பாதுகாப்பான பயணம் உறுதி. கூட்டம் முடிந்தவுடன் அவசர அவசரமாக கிளம்பாமல் பொறுமையாக புறப்படுங்கள். அது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும்
.கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கான ஒரு அரசியலை உருவாக்க கடுமையான இடையூறுகளுக்கு/ தடைகளுக்கு மத்தியில் அண்ணன் சீமான் தலைமையில் நாம் போராடி வருகிறோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியடைய முன்னெழுத்தாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அமைய இருக்கிறது.தவிர்க்காமல் அனைவரும் வந்து விடுங்கள். எந்தக் காரணத்தையும் சொல்லாமல் ஓடி வந்து விடுங்கள்.
பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பயணத் தகவலை தெரிவித்து விடுங்கள். வண்டி புறப்படும் நேரத்தையும், இடத்தையும் தெளிவாக அறிவியுங்கள். அலைபேசியில் உங்கள் குரல் மூலம் தெரிவியுங்கள். வெறும் செய்தி அனுப்பினால் போதாது. மிக மிக முக்கியமான அழைப்பு என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றாக திரள்வோம்.நம் ஒவ்வொருவருக்காகவும் அண்ணன் சீமான் காத்திருக்கிறார் என்பதை உணர்ந்து பாதுகாப்பான பயணத்தோடு நாம் கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்புவோம்.
அன்றைய ஒருநாள் நாம் 11 ஆண்டுகளாக உழைத்து வரும் இலட்சித்திற்கான நாள் என உணர்ந்து சென்னையிலே திரள்வோம்.வாருங்கள்.. சென்னையிலே சந்திப்போம்.
அந்த விடுதிக்குள் நான் நுழைந்த போது ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள். நல்ல வேளை விடுதியின் வலது மூலையில் அந்தக் கண்ணாடி ஜன்னலோர இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. அதே சிகப்புநிற நாற்காலிகள். அவள் எப்போதும் சுவரைப் பார்த்து இருக்கும் இருக்கையில்தான் அமர்வாள். சில சந்தர்ப்பங்களில் அந்த இருக்கையில் வேறு யாரோ அமர்ந்து இருந்தால்.. அந்த இருக்கை காலியாகும் வரை நின்றுகொண்டே காத்திருப்பாள்.
இது என்ன பழக்கம் என நான் கேட்டபோது .. நான் வராத நேரங்களில் அந்த இருக்கை எனக்காக காத்திருக்கிறது. அதற்காக நான் இப்போது காத்திருக்கிறேன் என விசித்திரமாக பதிலளித்தாள்.
இப்போதும் அந்த இருக்கை அவளில்லாமல் அவளுக்காக காத்துக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.
வழக்கமாக அமர்ந்தவுடன் எப்போதும் எனக்கு லெமன் சோடாவும், அவளுக்கு ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்கும் அவளே ஆர்டர் செய்வாள்.
அவள் இல்லாமல் தனியே வந்திருக்கின்ற நான் என்ன கேட்பது என யோசித்துக் கொண்டே நான் எப்போதும் அமரும் அதே நாற்காலியில் மெதுவாக அமர்ந்தேன். விடுதி முழுக்க ஏதோ ஒரு மெல்லிசை கேட்டுக்கொண்டே இருந்தது. இரண்டு வரிசைக்கு அப்பால் அமர்ந்திருந்த யாரோ ஒரு பெண்ணும் இளைஞனும் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
…. நான் சிரித்துக் கொண்டேன். சொற்களை இறைப்பதுதான் உரையாடல் என பலரும் நினைக்கிறார்கள். பேசிய பொழுதுகளை விட பேசாமல் இருந்த பொழுதுகளில் பேசியது தான் பல சமயங்களில் எங்களுக்குள் நிகழ்ந்திருக்கிறது.
என் முன்னால் வந்து நின்ற “சற்று வயதானவர் சார் நல்லா இருக்கீங்களா..” எனக் கேட்டார்.. ஓ.. ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து பார்த்த அதே ஆள்.
அதே கேள்வி. எங்கே அடுத்த கேள்வி அவர்கள் வரவில்லையா என கேட்டு விடுவாரோ என நான் அஞ்சிக் கொண்டே இருந்தேன்.
நல்லவேளை.. அவர் கேட்கவில்லை.
அமைதியாக என் எதிரே இருந்த அந்த செந்நிற இருக்கையை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். நம் எதிரே இருக்கும் எதுவும் காலியாக இருந்தால் தனிமையை உணர தொடங்கி விடுகிறோம். ஆளில்லாத சாலையில் நடப்பது போல.
ஆனாலும் இது தனிமை அல்ல. அவள் ஒரு முறை சொன்னது போல.. “நீ ஒரு போதும் தனிமையில் இருக்க வாய்க்கப் பெற்றவன் அல்ல. உன்னை தனித்திருக்கும் கோப்பையாக ஒருபோதும் நினைக்காதே. நான் எப்போதும் உன்னுள் நிரம்பி தளும்பிக் கொண்டே இருக்கிறேன்” என்றாள் அவள்.
ஒரு முறை சற்றே நான் கோபப்பட்டு.. “உன்னை எப்போதும் நினைப்பது மட்டும்தான் எனக்கு வேலையா..?” எனக் கேட்ட போது.. அவள் அலட்சியமாக சிரித்தாள்.
‘நீ என்னை நினைக்காத நேரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சமயங்களில் நான் உன் அருகில் இருக்கிறேன்..” என அலட்சியமாக சொன்னாள். ஏன் இவளுக்கு என்னை என்னைவிட நன்கு தெரிந்திருக்கிறது என்கின்ற கோபம் எனக்குள் எழுந்தது.
“அப்படி எல்லாம் இல்லை” என நானும் அலட்சியமாக சொல்லிவிட்டு நான் எங்கோ பார்ப்பதுபோல கண்ணாடிக்கு வெளியே சாலையில் போகும் வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.
❤️
சார்.. என்ற குரல் என்னை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.
“எப்போதும் நீங்கள் சாப்பிடுகிற ஐஸ் போடாத லெமன் சோடா..” என சொல்லி என் எதிரே சோடா நிரம்பிய கண்ணாடி கோப்பை ஒன்றினை வைத்தார்.
“இதையெல்லாம் நீங்கள் மறக்க வில்லையா..” என ஆச்சரியமாக கேட்டேன்.
“இல்ல சார்… சில விஷயங்களை மறக்க முடியாது. உங்களைப் போலத்தான் நானும். மாதம் ஒருமுறை பட்டீஸ்வரம் கோவிலில் போய் பிரகாரத்தில் அமர்ந்து விட்டு வருவேன்” என்றார் அவர்.
சே…சே.. நான் அதற்கெல்லாம் வரவில்லை. பசிப்பது போல இருந்தது. அதற்காக வந்தேன் என்று கண்களைத் தாழ்த்தியவாறு அவரிடம் சொன்னேன்.
அவர் அமைதியாக திரும்பி சென்று விட்டார்.
அவர் போன பிறகு ஒரு கொடும் வலி எனக்குள் எழுந்ததாக உணரத் தொடங்கினேன்.
தலையைக் கவிழ்த்து கண்களை மூடிக்கொண்டேன்.
ஏதோ சத்தம் கேட்டது.
அதே ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் ஒன்றை எடுத்து வந்து என் எதிரே இருந்த காலியான இருக்கையில் வைத்துவிட்டு அந்த பரிமாறுபவர் அமைதியாக சென்று கொண்டிருந்தார்.