
உன்னை பறவை
என்று அழைப்பது
எனக்கு பிடித்தம்.
நினைத்த நொடியில்
வெட்ட வெளியில்
உன்னால்
எங்கும் பறந்து விட
முடிகிறது என்பதோடு
மட்டுமில்லாமல்
எப்போதும் எனக்கென
தனித்துவமாக
தயாரிக்கப்பட்ட
சொற்களால் வேய்ந்த
சிறகுகளை
என் தோளில் எளிதில்
பொருந்துகிறாய்.
நம் முன்
மேகங்கள் அலையாத
நிர்மூலமான
வெள்ளை வானம்
யாருமின்றி
வரையறை அன்றி
விரிந்து கிடக்கிறது.
கால இசை
தவறிய ஒரு கணத்தில்
திசைகளற்ற வெளியில்
இலக்கினை அழித்து
இலேசாகி பறக்கத்
தொடங்கிறோம்.
நம் அடிவயிறு
குளிரும்போது
பாசிகள் அடர்ந்த
வனக்குளத்தை நாம்
கடந்தோம்.
நம் பின்னந்தலை
வியர்க்கும் போது
மணல் காட்டில்
ஓங்கி உயர்ந்த
ஒற்றை பனையை
அப்போதுதான்
கடந்திருப்போம்.
நீலம் பாவித்த
கடலை கடக்கும்
போது என்
தலைக்கு மேலே
நீ கண் சொருகி
மிதந்து கொண்டு
இருந்தாய்.
சட்டென திசைமாறி
அந்தரத்திலிருந்து
கடல் நோக்கி
கவிழ்ந்து
சல்லென கிழிறிங்கி
நீலப் பரப்பினை
முத்த மிட்டு
நீ
மேலெழும்பிய
நொடியில் தான்
நான் உணர்ந்தேன்.
உன் கூர்
அலகினில்
சிக்கிய மீன்
நான் தான்
என்று.