காதல் என்றால் என்ன..?இளமைத் தீ பற்ற வைத்த நெருப்பா, உணர்ச்சிகளின் விளையாட்டா, ஹார்மோன்களின் சதியா, வாழ்க்கை விதித்த தவிர்க்க முடியா விதியா.. என்றெல்லாம் யோசித்தால் குழம்பி விடுகிறோம்.”செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே” என்கிறது குறுந்தொகை.”விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.”காதல் கூட கடவுள் மாதிரி தான். காதல் என்னும் ஈர அலைகள் அடித்துக் கொண்டிருப்பதால் தான் இன்னும் இந்த பிரபஞ்சம் ஈரமாகவே இருக்கிறது” என்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
சிறைச்சாலை திரைப்படத்தில் என்றோ சிறையிலேயே மரணித்துப் போன தன் கணவனுக்காக தொடர்வண்டி நிலையத்தில் காத்து நிற்கின்ற தபுவின் கதாபாத்திரம் , கபாலி திரைப்படத்தின் தன் கணவனுக்காக காத்திருக்கும் ராதிகா ஆப்தே கதாபாத்திரம் போன்றவை சுட்டுவது போல காதல் என்பது தீவிரமான காத்திருத்தலா என்றெல்லாம் வினாக்கள் நம் நெஞ்சாழத்தில் சிறகு விரிக்கின்றன.ரஷ்யப் புரட்சியாளர் லெனின் வாழ்க்கையில் நதேழ்தா குரூப்கயாவின் பங்கு பற்றி லெனின் விவரிக்கும் போது “அவர் என் ஈடு இணையற்ற தோழர்” என்கிறார்.சகல காலத்திலும் புரட்சியின் குறியீடாக மாறி இருக்கும் சேகுவேராவை பற்றி அவரது காதலி அலெய்டா குறிப்பிடும்போது .. “சே வின் மினுக்கும் கண்களில் தான் தான் வாழ்வதற்கான நம்பிக்கையை” பெற்றதாக சொல்கிறார்.
என்றோ ஊரை விட்டு ஓடிப்போன என் நண்பனின் சித்தப்பா ஒரு மன நோயாளியாக மும்பை தாண்டி புனே அருகில் கண்டுபிடிக்கப்பட்ட போது அவர் சேர்த்து வைத்திருந்த பெரும் குப்பைகளில் பள்ளியில் அவர் படித்த போது உடன் படித்த மாணவியின் புகைப்படம் ஒன்றை வைத்திருந்ததாக ஆச்சரியமாக சொன்ன செய்தி இன்னும் என் நினைவில் இருக்கிறது.மனப் பிறழ்வின் போது கூட மறக்காத நினைவுகள் காதல் என்ற தீவிரத்தால் மட்டுமே சாத்தியம் என நினைக்கும்போது சிலிர்ப்பாக இருக்கிறது.என்னோடு சட்டக் கல்லூரியில் உடன் படித்த வகுப்புத் தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தபோது எப்போதும் அவளோடு திரிந்து அவள் அவனைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்த அவளது மாமன் மகன் அங்கே இல்லாததை பார்த்த போது எங்களுக்கு மனம் என்னவோ போலிருந்தது.
சில காலத்திற்குப் பிறகு எங்கள் ஊருக்கு அருகே ஒரு கோவிலில் அவனை சந்தித்தபோது என்னை பார்த்தவுடன் தவிர்த்து விட்டு ஓடிய அவனை தடுத்து நிறுத்தி ஏன் என்னவாயிற்று எனக் கேட்டேன்.”அவள் நன்றாக இருக்கிறாள் சார் ..” என சொல்லிவிட்டு வேக வேகமாக போய்விட்டான்.அவனைப் பொறுத்த வரையில் அவன் காதல் என்பது .. “அவனது காதலி, இன்று இன்னொருவனின் மனைவியாக நன்றாக வாழ்கிறாள்..” என்பதுதான்.
என்னை மகனாகப் பெற்றெடுத்த போது என் அம்மாவிற்கு பதினேழு வயது. பிறந்த பத்தாவது மாதத்திலேயே போலியோ வினால் நான் பாதிக்கப்பட்டபோது தன்னுடைய 18வது வயதில் இருந்து மருத்துவமனை மருத்துவமனையாக தன் நோயுற்ற மகனை தூக்கிக்கொண்டு அலைவது தான் என் தாய்- தந்தைக்கு வாழ்வாக மாறிப் போனது. அந்த காலகட்டத்தில் பெரும்பாலான தீபாவளி -பொங்கல் பண்டிகைகள் கூட எங்கள் மூவருக்கும் மருத்துவமனையில்தான். ஒரு கிராமத்தில் எந்த அறிமுகமும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே வளர்ந்த ஏறக்குறைய வளர்ந்த சிறுமி போல இருந்த என் அம்மாவை, என்னோடு மருத்துவமனையில் தனியே விட்டுச் செல்லும் போது தனது கலங்கும் கண்களை காட்டாமல் வேறெங்கோ பார்ப்பது போல துடைத்துக்கொண்டே தளர்வாக ஜோல்னாப் பையோடு நடந்து சென்ற என் தந்தையை கண்டபோது இதுவும் காதல் தான் என்று அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அம்மாவின் உடல் நலம் ஒரு முறை கடினமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்பட்ட தருணம் ஒன்றில் .. “அவள் என்னை விட்டு போய் விட மாட்டாள். அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.” என கனிந்த விழிகளோடு சொன்ன அப்பாவின் நம்பிக்கைதான் காதல் என்று அப்போது என்னால் வகைமைப் படுத்த முடியவில்லை.
சமீபத்தில் தீவிர கொரனா நோயால் என் தந்தை பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டும். ஏறக்குறைய நினைவில்லை. அம்மா நானும் உடன் போகிறேன் என்று சொன்னபோது.. “எந்த மருத்துவமனையும் அனுமதிக்க மாட்டார்கள் அம்மா..” என்று நான் சொன்னதை அவர்கள் ஏற்கவே இல்லை.”இது உயிர் கொல்லும் நோய். கூட இருப்பவர்களுக்கும் பரவும் மிகு அபாயம் கொண்ட தொற்று ..” என்றெல்லாம் என் அம்மாவுக்கு எவ்வளவோ எடுத்து சொன்னபோதும் கூட, அம்மா பிடிவாதத்தை தளர்த்தவில்லை.பிறகு என் நண்பர்களிடம் விசாரித்து ஒரு மருத்துவமனையில் தனி அறையில் அம்மாவுக்கு உரிய பாதுகாப்போடு தங்க வைக்க முயன்ற மறுநாள் அம்மாவுக்கும் நோய் பரவியிருந்தது.
நான் மனம் வெறுத்துப் போனேன்.அம்மா புன்னகையோடு அப்பாவுடன் இணைந்து தங்கிக் கொண்டார்.அவரை கவனித்துக் கொள்வது, எங்களுகெல்லாம் வீடியோகால் மூலம் தகவல் சொல்வது போன்றவற்றை மகிழ்வாக செய்து வந்தார்.நம்பிக்கை சொற்கள் மூலம் என் அப்பாவை உயிர்ப்பித்து, பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வந்து இன்றளவும் ஒரு குழந்தையைப்போல பார்த்துக் கொள்ளும் அவருடைய அசராத தீவிரம் உண்மையிலேயே எனக்கு அச்சம் அளித்தது.
உயிர் கொல்லும் தொற்று நோயால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற போதும் கூட சாகத்தூணியும் அந்த பேதமை கூட காதல் தான் என உணரும் பக்குவம் இந்த வயதில் தான் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
இப்போதும் அவர்கள் ஏதோ மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மெல்லிய புன்னகையோடு கசியும் கண்களோடு அவர்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.இந்த முடிவற்ற உரையாடல் வாழ்வு முழுக்க ஒரு இசை போல இசைந்து கொண்டே இருக்கிறது.ஒருவருக்கொருவர் அதைக் காதல் என்றெல்லாம் அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை.அவர்களைப் பொறுத்தவரையில்இந்த வாழ்தல் என்பதே காதல் தான்.
சட்டென அந்தக் கேள்வியை என் மகன் கேட்டு விட்டான். “உனக்கு ஏன் இளையராஜாவை அவ்வளவு பிடிக்கிறது..?”உண்மையில் அந்தக் கேள்வியை நேர்மையாக எதிர்கொள்ள எனக்கு பயமாக இருந்தது. அதை அப்படியே வார்த்தைகளால் நான் விவரித்தாலும் அவனால் புரிந்துகொள்ள முடியாது.இளையராஜாவை கேட்பது என்பது எனது அந்தரங்க உணர்வு போல, நான் மட்டும் ஆத்மார்த்தமாக உணர்ந்து ரசித்து உள் வாங்குகிற சுய நிகழ்வு. அதை எப்படி இவனுக்கு விவரித்து உணர்த்துவது..?எல்லாவற்றையும் மகனிடம் கொட்டிவிட கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. மழை போல எப்போதும் இளையராஜா இசை அபூர்வமானது தான். சலிப்பற்றதுதான்.அவரின் 80, 90 களின் ஒவ்வொரு பாடலும் எனக்கு ஒவ்வொரு காலத்தை, நான் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் ஒரு திரைப்படக் காட்சியை போல நேரடியாக பார்த்துவிடுகிற அபாயத்தை கொண்டிருந்தாலும், அந்த மாய விளையாட்டை எப்போதும் நான் மறக்காமல் விளையாடிக் கொண்டே இருந்தேன். சில பாடல்கள் கேட்கும்போது அம்மாவின் மடி வாசனை நினைவுக்கு வருகிறது. சில பாடல்கள் கேட்கும்போது கழுத்தோரம் வியர்வை வடிய வடிய, ஒரு உச்சி வெயிலில் மாடிப்படி இடுக்கில் நழுவிய காலத்துளி ஒன்றில் கழுத்தோரம் பெற்ற முதல் காதல் முத்தம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பசித்திருந்த இரவுகளில் பாடல்களை மட்டும் புசித்திருந்த பொழுதுகள் இன்னும் நினைவில் இருக்கின்றன.
வலி ஏமாற்றம் காதல் நோய் பிரிவு துயர் காமம் பசி பிணி தனிமை கொண்டாட்டம் என என் வாழ்வில் எதை எடுத்துக்கொண்டாலும் அவரின் இசை அதில் கலந்தே இருக்கிறது. இப்போதுகூடஎத்தனையோ நள்ளிரவுகளில் அவரின் சில பாடல்களை கேட்கும் போது ஆளரவமற்ற சாலையை வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்று விடுகிறேன். “வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்..” என பாடும் போது இந்த வாழ்வு ஒரு கொடும் சாபம் என கலங்கி விடுகிறேன். ” காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே, தேரு வரும் உண்மையிலே, சேதி சொல்வேன் கண்ணாலே..” என கேட்கும் போது இந்த வாழ்வு எப்படிப்பட்ட வரம் என சிலிர்த்து இருக்கிறேன். சகல வாழ்வையும் கணக்கு,வழக்கோடு சரி பார்த்தால்..வரத்தையும், சாபத்தையும் அவர்தான் எப்போதும் தீர்மானிக்கிறார்.
ஒரு பாடல் கேட்கும் போதே அந்த காலத்திற்குள் உள்ளே நுழைந்து அக்காலத்து அனுபவத்தை இக்காலத்திலும் மீளப்பெறுவது என்பது அவரது இசையின் ஊடாக மட்டும்தான் என உணரும்போது அந்த இசை எக்காலத்திற்கும் நம்மை கடத்தி செல்லும் ஒரு பிரம்மாண்டமான கால இயந்திரம் என உணர்ந்து வியந்திருக்கிறேன்.
ஒரு பாட்டு நம்மை என்னவெல்லாம் செய்யும் என்பதை எல்லாம் தாண்டி இந்த உலகத்தில் இத்தனை கோடி நபர்களுக்கு மத்தியில் எனக்கான ஆறுதலையும் , எனக்கான வலியையும், எனக்கான அழுகையையும், எனக்கான ரகசியப் புன்னகையையும் வர வைக்கிற உள்ளீடு அப்பாடல்களில் எப்படி ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் யோசித்து யோசித்து கடவுள் நம்பிக்கை போல புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்.
300க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் முழுக்க அவரது இசையாய் சேர்த்துவைத்து கொண்டாடிய காலகட்டங்களிலும் சரி, ஏறக்குறைய 4000 பாடல்களை ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்து நினைத்தபோதெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்திலும் சரி, எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்களில் அதே சரண அடுக்குகளில், ராக வளைவுகளில் அதே கிறக்கம்.. அதே மயக்கம்.. அதே தொலைதல்.
இத்தனை ஆண்டு வாழ்க்கையில் அவரது இசை போல நெருங்கிய துணை எதுவும் இல்லை. போகுமிடமெல்லாம் கைபிடித்து அழைத்துச் செல்லுகிற சகா போல அவரது பாடல்கள் நாற்புறமும் நம்மை அழைத்து சென்று கொண்டே இருக்கின்றன. வாழ்வெனும் ஏற்றத்தாழ்வு ஊசலாட்டத்தில் சிக்கி பல உளவியல் சிக்கல்களால் சிதைந்த என்னைப் போன்ற பலரை நிதானமாக்கி வாழ வைத்திருப்பது அவரது இசை தான். அந்த தூய விதியில் அவர் சிறிது பிசகி இருந்தாலும் பலரின் தற்கொலைஇங்கே தவிர்க்கப்பட்டு இருக்காது.
அந்த வகையில்.. அவர் ஒரு மீட்பர்.
காதுகளால் சுவாசித்து வாழ்ந்த ஒரு தலைமுறையை உருவாக்கித் தந்தஇசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
நாங்கள் மூணாறு சென்று சேர்ந்தபோது நடுநிசி ஆகிவிட்டது. இரவு உணவிற்கு முன் விடுதிக்குள் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்று நாங்கள் போட்டிருந்த திட்டம் கடுமையான மழைப் பொழிவினால் தாமதமாகிவிட்டது.அந்தக் காரை ஓட்டிக் கொண்டு வருபவர் பெரும் ரசனைக்காரர். பயணம் தொடங்கியதிலிருந்தே அருண்மொழியின் புல்லாங்குழல் களும், அலையலையாய் எழுந்த வயலின்களின் கூட்டு இசையும், பெண்களும் ஆண்களுமாய் கோரஸ் பாடிய சேர்ந்திசை பாடல்களும் , இளையராஜா என்கின்ற மாந்திரீகனால் எங்களுக்காக உருவாக்கப்பட்டதோ என சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு ஊடுருவிக் கொண்டிருந்த பாடல்கள் சதா அந்த காருக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அடிக்கடி அவர் “இந்த வரிகளை கேளுங்கள், இந்த வயலின் பிட்டை கேளுங்கள்” என சொல்லிக்கொண்டே காரை ஓட்டி வந்தார்.
ஆங்காங்கே மலைச்சரிவுகளில் காரை நிறுத்திவிட்டு அமைதியாக மழை பொழிவதை நாங்கள் பார்த்துக்கொண்டே நின்றோம்.”மழையும், இளையராஜாவும் ஒன்று தானே..” என்றார். இரண்டுமே அலுப்பதே இல்லை என்று அவரே மெல்லியக் குரலில் சொல்லிக் கொண்டார். இப்படிப்பட்ட ரசிக மனப்பான்மை கொண்ட ஒருவர் வழித்துணையாக கிடைக்கும் அந்தப் பயணம்தான் எப்படி கவித்துவமானது..??…..அந்தக் கவித்துவ பயணத்திற்கு முன்னாலிருந்த பல நாட்கள் மிகப் பொல்லாதவை.
ஏறக்குறைய ஒரு சரிவில் நானே உருண்டு கொண்டிருந்தேன். பற்றி ஏற எதுவும் இல்லை என்ற நிலையில், ஒரு அதல பாதாளத்திற்குள் நான் விழுந்து கொண்டிருந்தேன். என்னை சேர்ந்தவர்கள் தவித்துப் போனார்கள். எப்படியாவது மீண்டும் எழுப்பி முன் நிறுத்தி விட வேண்டும் என என்னை விரும்புபவர்கள் அனைவரும் துடித்துக் கொண்டிருந்தார்கள். எவருடைய சொற்களும் என் காதில் ஏறவில்லை. அப்போதுதான் அண்ணன் சித்தார்த்தன் வீட்டுக்குள் கசங்கிப்போன துணி போல, மூலையில் சுருண்டு கிடந்த என்னை சலவை செய்ய ஒரு மலை பயணத்திற்கு அழைத்துப்போனார்…..திடீரென வீட்டிற்கு முன் ஒரு நாள் காரில் வந்து இறங்கினார். “வாருங்கள்.. போவோம்” என்றார். எங்கே என்று நான் கேட்கவுமில்லை. அவரும் திருச்சி தாண்டும் வரை சொல்லவும் இல்லை.
வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என வீட்டில் சொல்லிவிட்டு என்னை அழைத்து வந்தார். ஏற்கனவே பயந்திருந்த எனது வீடு அவர் அழைக்கிறார் என்று தெரிந்தவுடன் உடனே அனுப்பி வைத்தது……திண்டுக்கல்லை தாண்டியவுடன் மழைப்பொழிவு தொடங்கியது. நாங்கள் தேனி வழியாக மூணாறு செல்ல திட்டமிட்டிருந்தோம். வழியெல்லாம் மழை. ஆனால் அவரோ காருக்குள் பாடிக்கொண்டு இருந்த பாடல்களின் சேர்ந்திசையாக மழையையும் மாற்றிவிட்டார். அவர் ஒரு அற்புதமான ஓட்டுனர். எந்தச் சரிவிலும், எந்த திருப்பதிலும் வண்டியை லாவகமாக திருப்ப கவிதை குறிப்புகள் போல அவரிடம் சில பிரத்தியோக நெகிழ்வுகள் இருந்தன…..”அலைபேசியை அணைத்து போடுங்கள்” என்றார்.
“கடந்த காலத்தைப் பற்றி எதையும் யோசிக்காதீர்கள்,எதிர்காலம் என்ற ஒன்று இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்,நிகழ்காலத்தில் இருப்பது ஒன்றே நிஜம் என்று நம்புங்கள்”.. எனச் சொன்னார். கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில் நிகழ்காலத்தை கவனிக்கத் தவறுகிற என் கண்களை அவர்தான் அந்த மழைப் பயணத்தில் திறந்துவைத்தார்…..சாதாரண நிலப்பரப்பில் பெய்யும் மழையை விட மலைப் பகுதிகளில் பெய்யும் மழை சற்றே உக்கிரமானது. இரு பக்கமும் தலைவிரித்து ஆடும் மரங்கள் மனதை ஏதோ செய்தன. ஆனாலும் இவர் ரசித்துக்கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டு மூணாறு நகரத்தைத் தாண்டி ஒரு காட்டுக்குள் இருந்த “Rain Forest” என்ற பகுதியிலிருந்த ஒரு விடுதிக்கு என்னை அழைத்துப் போனார். அந்த விடுதியின் பெயரும் “Rain Forest” தான்……நான் கொஞ்சம் இலகுவாகி இருந்தேன்.
மழையும், இயற்கையும் ஒருங்கிணைந்து என் முடிச்சுகள் ஒவ்வொன்றையும் அவிழ்த்துக் கொண்டே இருந்ததை நானே உணர்ந்து கொண்டே இருந்தேன். அது அவருக்கும் புரிந்திருக்கும் போல.. “Better ஆ feel.. பண்றீங்க போல” ..என கேட்டு விட்டு புன்னகைத்தார்….இரவு முழுக்க பேசிக்கொண்டே இருந்தார். கனவுகள் நிறைய சுமக்கும் ஆன்மா அவருடையது. அவரது ரசனைகள், விருப்பங்கள், தேர்வுகள் என ஒவ்வொன்றையும் என்னிடம் ஆழமாக விவரித்துக் கொண்டே சென்றார்.
நான் ஏதோ கொட்ட முயன்ற போதெல்லாம் அதை அலட்சியப்படுத்தி விட்டு நான் எழுதிய சில கவிதைகளை அவர் படித்துக் கொண்டிருந்தார்….மழை இரவு. குளிர் பொழுது. பயணக் களைப்பு. அப்படியே தூங்கி விட்டேன். காலையில் விழித்து பார்க்கும் போது என் மீது கனமான போர்வை ஒன்று போர்த்தப்பட்டு இருந்தது. அவர் வெளியே சென்று விட்டு புதிதாக விளைந்த கேரட்டுகளை வாங்கி வந்திருந்தார். காலை உணவாக பச்சை காய்கறிகளை உண்ணுவது மிக மிக நல்லது என சொன்னார்….அப்போதுதான் நான் மெதுவாக கேட்டேன். “எதற்காக என்னை அழைத்து வந்து இருக்கிறீர்கள்.. ?, இவ்வளவும் செய்து கொண்டு இருக்கிறீர்கள்..?” என கேட்டேன். இந்த கேள்விகளுக்கெல்லாம் என்னிடத்தில் பதில் இல்லை என்றார் அவர். பிறகு அவரே மெல்லிய குரலில்..”நான் தனிமைப்பட்டு துவண்ட போது எனக்கு யாரும் இல்லை. அப்போது நான் ஒரு முடிவு செய்து கொண்டேன். யாராவது காயப்படும் போது நான் அவர்களோடு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டுதான் உங்களோடு வந்திருக்கிறேன், காயப்படும் போது மருத்துவம் பார்ப்பது தானே மருத்துவன் கடமை…” என்றார்
….”ஊர் சுற்ற போவோமா..” என்று கேட்டேன். “வேண்டாம் ஒய்வெடுங்கள்” என்றார். “தோட்டத்தில் உட்கார்ந்து ஏதாவது எழுதிப் பாருங்கள்..” என்றார். நான் ஏதாவது எழுதுவோம் என நினைத்து அமரும்போது எழுத எனக்கு எதுவும் வரவில்லை. எதிரே அமர்ந்திருந்த அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் . “வந்த வேலை சரியாக நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் காலியாகி ( Empty) கொண்டிருக்கிறீர்கள்.” என்றார்
.…அண்ணன் மருத்துவர் சித்தார்த்தன் 2009 காலகட்டங்களில் எனக்கு பழக்கம். ஈழ ஆதரவு போராட்டங்களின் போது ஈழத்தில் மக்கள் படும் துயரங்களை, இனப் படுகொலைக் காட்சிகளை தாங்கிய சிடி தயாரிக்க எங்களுக்கு 1000 சிடி வாங்கிக் கொடுத்தார். மக்களிடம் பரப்புங்கள் என்றார். தஞ்சை வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை “மாவீரன் முத்துக்குமார்” ஆவணப்படம் தயாரித்து விட்டு தவித்துக் கொண்டிருந்த போது படத்தை வெளியிட பெருமளவு பணம் தேவையாக இருந்தது. அண்ணன் நல்லதுரை என்னிடம் என்ன செய்யலாம் என கேட்டபோது.. “அண்ணன் சித்தார்த்தனுக்கு படத்தைப் போட்டுக் காட்டுவோம். அவர் மூலமாக மருத்துவர்களிடம் பணம் வசூலிப்போம்..” என்று சொன்னேன். எங்கள் வீட்டில் படம் திரையிடப்பட்டது. படம் பார்த்துக்கொண்டிருந்த அண்ணன் சித்தார்த்தன் மாவீரன் முத்துக்குமார் தீ குளிக்கும் காட்சியில் கலங்கி அழத் தொடங்கிவிட்டார்.
படம் முடியும் வரை அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. படம் முடிந்த பின்னர் எங்கள் திட்டத்தை அவரிடம் சொன்னோம். “எந்த மருத்துவரிடமும் கேட்கத் தேவையில்லை, நானே முழு பணம் தருகிறேன்..” எனச்சொல்லி ஒரு பெரிய தொகையை அளித்து உதவி செய்தார். அதன் பிறகு நாம் தமிழர் உருவான காலகட்டங்களில் திமுக, திராவிட இயக்கம் என்றெல்லாம் பயணித்துக்கொண்டிருந்த அவர் நாம் தமிழரை மானசீகமாக நேசிக்கத் தொடங்கினார். அண்ணன் சீமான் மீது அளவற்ற அன்பு அவருக்கு. கும்பகோணத்தில் நடந்த ஒரு கலந்தாய்வு கூட்டத்தில் மேடையில் அண்ணனுக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்த அவர் அண்ணன் சீமானின் கரங்களை பற்றிக் கொண்டே இருந்த காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது.
சமூகத்திற்காக உழைக்க முன் வருபவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார்….ஏதோ ஒரு விசித்திர அலைவரிசை என்னையும் அவரையும் இறுக்கி கட்டிப் போட்டு வைத்து விட்டது. என் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் அவர் தானாக முன்வந்து இடம்பெறத் தொடங்கினார். எங்கே சென்றாலும் என்னையும் அழைத்துக் கொண்டு அலைவார்.என் எழுத்துக்கள் மீது அவருக்கு மிகுந்த விருப்பம். என் புத்தகங்கள் அனைத்தும் அவரிடம் இருக்கின்றன. படித்துவிட்டு அலைபேசியில் பல மணி நேரம் கொண்டாடித் தீர்ப்பார். நீங்கள் கொண்டாடும் அளவிற்கு அதில் எதுவும் இல்லை அண்ணா என சொன்னால்.. உனக்கு எழுத வருகிறது அதை விட்டு விடாதே என்றார்.திரைப்படத்திற்கு கதை ஒன்றை தயார் செய்து அவரிடம் காட்சி காட்சியாக நான் விவரித்தபோது ஆர்வமாக கேட்டவர் .. உடனே இதற்கு திரைக்கதையை தயார் செய்யுங்கள். ஒரு வருட காலத்திற்குள் நானே தயாரிக்கிறேன் என்றார்.
காரை ஓட்ட நான் கற்றுக் கொண்ட போது அவரை வைத்துக்கொண்டு கும்பகோணத்தை ஒரு வலம் வந்தேன். பெருமிதத்தால் என்னை கட்டிக்கொண்டு கண்கள் கலங்க “இது தான் நான் எதிர்பார்த்தேன்” என்றார். அந்த விழிகளின் ஈரம் தாய்மைக்கு நிகரானது
…..உடல்நிலையோ மன நிலையோ சரி இல்லையெனில் அவர் மருத்துவமனையில் போய் அமைதியாக அமர்ந்திருப்பேன். என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு கூடு. நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என என்னை நினைக்க வைக்கிற கூடு. அங்கே போனால் பேரன்பு சிறகுகளின் தாய்மை கதகதப்பு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. கடைசி சந்திப்பு வரை அந்த நம்பிக்கை பொய்த்ததே இல்லை….
எனக்காக மூணாறு வந்த அவர் ஐந்து நாட்களும் என்னை அமைதிப் படுத்துவதில், முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தனிமையிலே என்னை சிந்திக்க அனுமதித்தார். தலைகுனிந்து அமர்ந்திருக்கும் என்னை உற்று நோக்கியவாறே பல மணி நேரம் அமைதியாக எதிரில் அமர்ந்திருந்தார். இயற்கையும் அவரது பேரன்பும் என்னை குணப்படுத்த தொடங்கின. நானும் சிரித்து பேசி வழக்கமான மனிதனாக மாற தொடங்கினேன்.கடைசி ஒரு நாள் மட்டும் நீர்வீழ்ச்சிக்கு அழைத்துப்போனார். தேயிலைத் தோட்டங்களின் நடுவே இருந்த ஒரு மலை முகட்டில் காரை நிறுத்தி வைத்துவிட்டு ஜென்சியின் “ஆயிரம் மலர்களே மலருங்கள்” பாடலை இருவரும் கண்கள் பனிக்க கேட்டுக் கொண்டே இருந்தோம்…
.ஒவ்வொரு எனது அரசியல் முயற்சியிலும் அவர் இருந்தார். பக்கபலம் என்கின்ற சொல் மிக மிகக் குறைவு. அவர்தான் பிரதான பலமாகவே இருந்தார். அழுத்தம் திருத்தமாக ஆலோசனைகள் சொல்வார். “எதன் பொருட்டும் துவண்டு விடக்கூடாது, வேலைகள் நின்றுவிடக் கூடாது” என்பார். “இனத்திற்கான பணி, 60 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தை விடுதலை செய்வதற்கான பணி, வெறும் பணத்திற்காக முடங்கி விடக்கூடாது, நான் உதவுகிறேன்.” என்பார்….
அவர் அறை முழுக்க புத்தர் சிலைகள் நிறைந்திருக்கும். கடவுள் மறுப்பாளர். சாதி எதிர்ப்பாளர். கெட்ட பழக்கங்கள் கிடையாது. நிறைய படிப்பார். எளிய மக்கள் தேடி வரும் போதெல்லாம் மருத்துவத்தை செய்துவிட்டு பணம் வாங்காமல் அனுப்பி வைத்து விடுவார். எதையும் வெளியே சொல்ல மாட்டார். விளம்பரம் இல்லாமல் சேவைகள் செய்து வெளிச்சம் பாய்ச்சிய மனிதநேய விளக்கு அவர்…..மூணாறில் இருந்து திரும்பி வரும்போது, திருச்சியை தாண்டுகையில் ஒரு பிளாட்பாரத்தில் சிலர் படுத்திருப்பதை பார்த்துவிட்டு வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிப் போனார். சிறிது நேரம் கழித்து வந்தவரிடம் எங்கே போனீர்கள் என கேட்டேன். “நாம் வீட்டிற்கு தானே போகிறோம். கையில் 4000 பணம் இருந்தது. வண்டிக்கு எரிபொருளும் போட்டாகிவிட்டது. அதனால் அந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டு வந்து விட்டேன். நாளைய தினம் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்..” என்றார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.
“ஏன் அண்ணா இப்படி..?” என்றேன்… “நமக்கு மனது சரியில்லை என்றால் மலைகளுக்கு சென்று சுற்றி வருகிறோம்.. அவர்கள் எல்லாம் எங்கே செல்வார்கள்..?” என கேட்டு விட்டு மீண்டும் இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டே வண்டி ஓட்ட தொடங்கிவிட்டார்……கடைசியாக அவரை நான் என் தம்பி ஆனந்தோடு கடந்த 07.05.2021 அன்று சந்தித்தேன். முகக் கவசம் எல்லாம் போட்டுக் கொண்டு மிகுந்த பாதுகாப்போடு இருந்தார்.நெஞ்சு பக்கமாக வலிக்கிறது என்றேன். இசிஜி எடுத்துப் பார்த்துவிட்டு “வலிமையான இதயம். ஒரு நோயும் இல்லை..” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். எதற்கும் பயப்படாதீர்கள். நான் இருக்கிறேன் என்றார்….அடுத்த சில நாட்களிலேயே கொரனா நோய்த்தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது.
கடந்த 16.05.2021 நான் பதறிப்போய் அவருக்கு அலைபேசியில் அழைத்தேன். நீண்டநேரம் ஒலித்த அந்த அலைபேசியை எடுத்து சற்று இருமலோடு பேசினார். தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சொன்னார். ஆக்சிஜன் உதவியோடு இருப்பதாக சொன்ன அவர், ” வேறு யார் அழைத்தாலும் இந்த சமயத்தில் எடுத்து இருக்க மாட்டேன், நீ அழைக்கிறாய். இனி பேச முடியுமோ முடியாதோ என தெரியவில்லை. அதுதான் பேசிவிட வேண்டும் என எடுத்தேன்..” என்றார். நான் கலங்கி விட்டேன். “அண்ணா உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நாம் மீண்டும் மூணாறு போகிறோம் , ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலை மலைமுகட்டில் நின்று கேட்கிறோம்” என்று சொன்னேன். இருமலோடு அவர் சிரித்த ஒலி எனது காதில் கேட்டது. “நான் வராவிட்டாலும், நீயாவது போய்விட்டு வா..” என்று சொன்னார்.
“கண்டிப்பாக நீங்கள் வருவீர்கள்” என நான் சொல்லிக் கொண்டிருந்தபோது “என்னால் அதிகம் பேசமுடியவில்லை. உடலைப் பார்த்துக் கொள், எழுதுவதை விட்டு விடாதே..” என்று சொல்லி சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்தார்.நான் கலங்கிய கண்களோடு அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தேன்….இன்று காலை 10:45 மணிக்கு அவர் கொரனா நோய் முற்றி இறந்து விட்டார். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் இடுகாட்டிற்கு வரும்போது இடுகாட்டின் வாசலில் நானும் தம்பி ஆனந்தும், தம்பி சாமிநாதனும் நின்று கொண்டிருந்தோம்.
வேகமாக வந்த ஆம்புலன்ஸ் எங்களை கடந்து சென்றது. அவர் முகத்தை எல்லாம் பார்க்க முடியாது என்று சொல்லி எங்களை திருப்பி அனுப்பினார்கள்.
…..மகத்தான அந்த மனிதனிடமிருந்து ஒரு விடைபெறுதல் கூட பெற முடியாத சாபத்தை என்ன சொல்லி நொந்து கொள்வது..??
எதுவுமற்ற என்னிடம் இருந்தது இறுதியான ஒரே ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் வீதியில் என்னை நிறுத்தி வைத்துவிட்டு, ஆம்புலன்சில் வேகமாக என்னை கடந்து இடுகாட்டிற்குள் சென்று விட்டது. …
கடைசியாக நாங்கள் மூணாறு போனபோது தேயிலை தோட்ட காடுகளின் நடுவே அந்த மலைமுகட்டில் ஒலித்த “ஆயிரம் மலர்களே மலருங்கள்..” என்ற அந்த காவியப்பாடல் காற்றில் கரையாமல் உறைந்திருக்கும். அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கத்தான் அவர் மூணாறு சென்றிருக்கிறார் என நான் இந்த நொடியில் நினைத்துக் கொள்கிறேன்….
என்றாவது நான் மூணாறு சென்றால் .. தேயிலைத் தோட்ட காடுகளுக்கு நடுவே, பனி சுமக்கும் அந்த மலை முகட்டின் மீது நான் நிற்கும் அப்பொழுதில் “ஆயிரம் மலர்களே மலருங்கள்..” என்ற அந்தப் பாடல் தானே ஒலிக்கத் தொடங்கும், அவர் அருவமாய் என் அருகில் நின்று கொண்டு என் தோளை பிடித்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்…..
(மருத்துவர் சித்தார்த்தன். குடந்தை நகரத்து எளிய மக்களின் மருத்துவர். வயது 53. சுருதி மருத்துவமனையின் நிறுவனர். ஆகச்சிறந்த தமிழ் உணர்வாளர். கும்பகோணம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை உணர்வுபூர்வமாக நடத்திட உயிராய் நின்றவர். கும்பகோணம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மகத்தான வலிமையாக திகழ்ந்தவர்.24.05.2021 அன்று கொரனா நோய்த்தொற்றின் காரணமாக தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மரணமடைந்தார்.)
தம்பி குடவாசல் மணிகண்டனின் திருமணத்திற்கு திருவாரூர் வரை என் அம்மா சென்று வந்தது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்களுக்கு இந்தத் திருமணம் குறித்து உள்ளூர ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார்கள் என நான் அறிந்தே இருக்கிறேன். அவன் சக்கர நாற்காலியில் நாம் தமிழர் கூட்டத்திற்கு பாடுவதற்காக வரும் போதெல்லாம் அம்மா அருகில் சென்று நின்று கொள்வார்கள். ஒருபோதும் அவனுக்காக நான் எந்த சகாயமும் செய்ததில்லை. அவன் வருவான். பாட அனுமதி கேட்டு வற்புறுத்துவான். பிடிவாதம் பிடித்து பாடியும் விடுவான்.
கால் நடக்க முடியாதவர்களுக்கு , மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பெண் கிடைப்பதில்லை. உடல் குறைபாடுள்ள பெண்கள் நிலை இன்னும் மோசம். நானும், தம்பி மணிகண்டனும் கொஞ்சம் அதில் விதிவிலக்கு. மனதைப் பார்த்து காதலியுங்கள் என்றெல்லாம் புத்தகத்தில் வரிகள் மின்னும் போது நானெல்லாம் சிரித்துக் கொள்வேன். அப்படி எல்லாம் எந்த காதலும் பிறக்காது. அப்படி பிறந்தால் அது குறுகிய கால அனுதாபமாகத்தான் இருக்கும் என்பதை என்னை ஒத்த பலர் வாழ்வில் நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.
தம்பி மணிகண்டன் திருமண புகைப்படங்களை பார்க்கும் போது எனக்கு எனது கடந்த காலங்கள் நினைவுக்கு வந்தன. திருமணத்தன்று நான் தடுக்கி விழுந்து விடக்கூடாது என திருமணத்திற்கு முதல் நாள் நான் மண்டபத்திற்கு சென்று என் அம்மா முன்னிலையில் ஒரு இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
ராஜபார்வை என்ற ஒரு படம் உண்டு. கமலஹாசனின் 100வது திரைப்படம். கண்பார்வை திறன் அற்றவராக கமல் அதில் திறம்பட நடித்திருப்பார். எந்த அனுதாபத்தையும் எதிர்பார்க்காத கண் பார்வைத் திறனற்ற ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் அது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் சரியாக போகவில்லை என்பார்கள். அந்தப் படத்தின் தோல்வியில் தான் கமல் வெறுப்பில் சில வணிக திரைப்படங்களில் நடித்ததாகவும் சொல்வார்கள்.
அந்தத் திரைப்படத்தில் கண் பார்வைத் திறனற்ற கமலஹாசனின் வீடு அவர் புழங்குவதற்கு ஏற்ப திட்டமிட்ட அடிகளில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். சிறிது இடம்மாறி போனாலும் அவர் தடுமாறி விடுவார். ஒருமுறை கதாநாயகி மாதவி வீட்டிற்கு வரும்போது சில பொருட்களை இடம் மாற்றி வைத்து விட, கமல் தடுமாறி விடுவார். இந்த நுட்பமான திரைப்படக் காட்சி எங்களைப் போன்றோரின் அனுதாபம் கோராத திட்டமிடலுடன் கூடிய ஒரு வாழ்வியலை ஆவணம் ஆக்கிய மிக முக்கியமான காட்சி. மாற்றுத்திறனாளிகளை போற்றுவதாக கூறிக்கொண்டு ராகவா லாரன்ஸ் போன்ற கோமாளிகள் எடுக்கின்ற முட்டாள்தனமான படம் அல்ல அது. படத்தின் முடிவு கூட மகிழ்ச்சியுடன் தான் இருக்கும். உடல் குறைபாடுள்ள சகமனிதனின் சுயமதிப்பை பற்றி ஆராய்கிற ராஜபார்வை தமிழின் மிக முக்கியமான ஒரு திரைப்படம்.
எந்த மாற்றுத்திறனாளியும் அனுதாபம் கோருவதில்லை. அவர்களுக்குத் தேவை அவர்களை இடையூறு செய்யாத ஒரு உலகம். ஆனாலும் உலகம் அவ்வாறு இல்லை தானே..
அன்பின் மிகுதியால் சிலர் எங்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு எங்களுடைய சமநிலை தவறுவது போல சில செயல்களை செய்து விடுவார்கள். குறிப்பாக எனக்கெல்லாம் வலது கையை பயன்படுத்தி இடதுகையை காலில் ஊன்றிக்கொண்டு நடந்து செல்லும் உடலமைப்பு. ஆனால் உதவி செய்ய வருபவர் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மாற்றி வேறு கையைப் பிடிக்கும் போது நான் தடுமாறி விடுகிறேன். அது அவர்களது பிழையல்ல. அது அன்பின் ஒரு பகுதி என்று நானும் உணர்ந்திருக்கிறேன்.
எங்கள் அமைப்பில் புதிதாக சேர்ந்த நண்பர் ஒருவர் என நேரடியாக அதுவரை பார்த்திராத ஒருவர், தஞ்சை கலந்தாய்வுக் கூட்டத்தில் என்னை முதன்முதலாக பார்த்தார். இன்று அவர் அலைபேசியில் என்னை அழைத்து இந்த உடல் சூழ்நிலையிலும் நீங்கள் கட்சி வேலை செய்கிறீர்கள், யூ ஆர் கிரேட் என்றெல்லாம் அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அதுகுறித்து நீண் ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் அமைப்பில் வேலை செய்வதுதான் என்னை சமநிலையில் வைத்திருக்கிறது என்பதை எப்படி அவரிடம் விளக்கி புரிய வைக்க முடியும் என்பதை பற்றி நான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்.
நான் உலகத்தில் அதிகம் விரும்பும் அனைவருமே என்னிடம் அனுதாபம் காட்டாதவர்கள். குறிப்பாக என் அம்மா. பிறகு அண்ணன் சீமான். பின்னர் என் மனைவி உள்ளிட்ட சில பெண்கள் என இவர்கள் யாருமே என்னிடம் அனுதாபம் காட்டியதில்லை. என்னை வெகுவாக விரும்பிய (disclaimer: அது மிக நீண்ட காலத்திற்கு முன்னால்…) ஒரு பெண் என்னிடம் சொன்னது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நீண்ட பயணத்தைக் கொண்ட ஒரு பணிக்கு என்னை அவள் அழைத்த போது என் உடல் நிலையை சிந்தித்து தான் இதை கேட்கிறாயா என நான் கேட்டதற்கு “உன்னால் ஒரு விஷயம் முடியாது என்று நான் இதுவரை நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் பார்வையில் இயல்பான மற்றவர்களைப் போலத்தான் நீயும் இருக்கிறாய். கிளம்பி வாடா”என்று அலட்சியமாகச் சொன்னாள்.
திருமணத்திற்காக நான் பெண் பார்க்கும்போது .. என் மனைவியிடம் நான் ஏதோ அறிவுரை சொல்வது போல பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம் எனவும் பிடித்திருந்தால் மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும், விளக்கமாக அறிவுரை கூறி என் உடல் இருக்கும் தகுதி குறித்து அவளிடம் விளக்கி பேசினேன்.
அதை எல்லாம் அமைதியாக கேட்டு விட்டு நான் பேசிய எதையும் பொருட்படுத்தாமல், அவள் அப்பாவிடம் போய் சென்று “எனக்குத் திருமணம் என்ற ஒன்று ஆனால் இவரோடு தான்” என்று பெரியோர்களால் பேசப்பட்ட சாதாரண திருமணத்தை ஒரு அழகான காதல் திருமணமாக என் மனைவி மாற்றி விட்டாள்.
இந்த வரிசையில் என்னை மிகவும் வெறுக்கும் என் அரசியல் எதிரிகளும் வருகிறார்கள். அவர்களை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்கள் வசவுகளை எத்தனையோ முறை நான் ரசித்து இருக்கிறேன். அவர்களுக்கு நான் இவ்வளவு தொந்தரவாக இருப்பது குறித்து மட்டுமே வருந்தி இருக்கிறேனே தவிர, என் உடல் குறைபாட்டினை குறித்து எதையும் பொருட்படுத்தாது, அனுதாபமோ, கருணையோ காட்டாது என்னை தீவிரமாக எதிர்க்கும் அவர்களது எதிர்ப்பு கூட நான் விரும்புகிற ஒன்றுதான்.
ஏனெனில் ஒரு உலகம் இவ்வாறு அமைய எங்களைப் போன்றோருக்கு மிக மிக அரிது. எனது மகன்களுக்கு என் அப்பாவால் எல்லாம் முடியும் என்கிற மகத்தான நம்பிக்கை இருக்கிறது. அது நான் கொடுத்தது இல்லை. அவர்களாகவே மனதில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் பல இடங்களுக்கு எனது மூத்த மகன் சிபி தான் என் உடன் வருகிறான். என் கட்சி உறவுகள் போலவே அவனும் கவனமாக என்னை அழைத்துச் செல்கிறான்.
அண்ணன் சீமான் எப்போதும் நான் மேடை ஏறும் போது பார்த்துக் கொண்டிருப்பதாக பலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். என்னை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். நான் தடுமாறி விடக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டு இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். சில சமயங்களில் தடுமாறும் போது அவரது சிறிய கணைப்பு போன்ற ஒரு ஒலி என்னை எச்சரித்து சுதாரிக்க வைத்திருக்கிறது. ஒருபோதும் என் அண்ணன் சீமான் எனக்கு எவ்வித சார்பும் செய்தததில்லை. உன்னால் முடியாது என்று அவர் எப்போதும் சொன்னதில்லை. இன்னும் உன்னால் முடியும் என்றுதான் என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அவர் என் அண்ணன்.
அந்த வகையில் என்னை மதிப்பு மிகுந்தவனாக இந்த உலகம் நடத்தியிருக்கிறது. தம்பி மணிகண்டனுக்கும் ஏறக்குறைய அப்படித்தான். நான் எல்லாம் அவனை கடுமையாக திட்டி இருக்கிறேன். அவனும் சளைத்தவன் அல்ல. கல்லூரி வாழ்க்கை தொடங்கி சகலத்திலும் அவன் சேட்டைக்காரன் தான். சிறந்த பாடகன். பாடிப் பாடியே காதலித்து மனதுக்குப் பிடித்தவளைக் கரம் பிடித்தும் விட்டான்.தம்பி குடவாசல் மணிகண்டனின் மணவாழ்க்கை என்னைப்போலவே மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் அமைய நான் மனதார வாழ்த்துகிறேன்.
திருமணம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய என் அம்மாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
அந்த மகிழ்ச்சியின் ஊடே நெடுங்காலமாய் சுமந்துவரும் ஒரு பெரும் வலியை அவர்கள் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நான் அந்த நேரத்தில் உணர்ந்தேன்.
அம்மா என்றால் அப்படித்தானே.. மணிகண்டனுக்கு திருமணம் நடந்தால் என்ன.. எங்களைப் போல வேறு யாருக்கு நடந்தால் என்ன..
வெகு நாட்களுக்குப் பிறகு என் அலைபேசியில் நான் மறைத்து வைத்திருந்த ஒரு பெயரில் அவள் வந்தாள். ஒளிர்ந்துக் கொண்டே இருந்த அலைபேசியை, அதில் புலப்பட்ட அவள் பெயரை சற்றே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அது வெறும் அழைப்பல்ல. அது ஒரு சுழல்.
அந்த சுழலில் மீண்டும் சிக்கி சிதைந்து விடக்கூடாது என சுதாரித்தேன். சிதைந்தழிந்து மீண்டும் மீண்டும் மீள் எழுவதென்பது பழங்கால விக்ரமாதித்தன்-வேதாளம் கதை போல முடிவிலி என அறிந்து இருக்கிறேன். சில நொடிகள் அமைதியாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த அலைபேசி திரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு அனிச்சை போல, என்னையும் மீறிய ஒரு நொடியில் நான் அந்த அழைப்பை எடுத்து விட்டேன்.
எடுத்த ஒரு நொடியில் சட்டென சுதாரித்து விட்டு ஏதோ ஒரு வேலையில் இருப்பது போன்று காட்ட வேண்டுமென என்னை நானே தயாரித்துக் கொண்டு… குரலில் வலிந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் அவசரக் குரலில் நான் வேலை ஒன்றில் இருப்பதாக சொன்னேன். அவளோ.. அதை சற்றும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக.. “ஏன் நீண்ட நேரமாக ஒலித்துக்கொண்டே இருக்கும் அலைபேசியை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாய்..” என கேட்டாள்.
என்னைச் சுற்றி ஏதாவது கேமிரா இருக்கிறதா என நான் சுற்றிமுற்றிப் பார்த்தேன். அந்த மௌனத்தையும் அவளே உடைத்து..” உன்னை பின் தொடர எனக்கு எப்போதுமே நினைவுகள் போதும். கேமிரா தேவையில்லை..” என்றாள் அலட்சியமாக.நான் பதட்டமானேன்.அவளே மேலும்.. “உன்னை உன்னையும் விட நான் அறிந்திருப்பதை நீ தெரிந்திருப்பது தான் உன்னை பதட்டம் ஆக்கிக் கொண்டே இருக்கிறது..” என்றாள்.
உண்மைகளின் எடை அதிகரித்துக் கொண்டே போவதும், நான் சுற்றியிருந்த பொய்த் திரைகள் ஒவ்வொன்றாய் அவிழ்ந்துக் கொண்டே போவதுமான சூழலில்..கொஞ்சம் கெஞ்சலான குரலில்..”இப்போது உனக்கு என்னதான் வேண்டும்..?” எனக் கேட்டேன்.”என் மின்னஞ்சலின் கடவுச்சொல் எனக்கு மறந்துவிட்டது. என்னவென்று சொல்.” எனக் கேட்டாள். “அதெப்படி எனக்குத் தெரியும்..?” என கேட்டேன். “என்னையும் விட அதிக நேரம் என் மின்னஞ்சலை நோண்டிக் கொண்டு இருப்பது நீதானே..” என்றாள் சற்றே கிண்டலோடு.திடுக்கிட்டேன்.
என் விஷயத்தில் மட்டும் எப்படி இவ்வளவு சுதாரிப்பாக இருக்கிறாள் என வியந்துக் கொண்டே மெளனித்தேன்.”சொல்லு”.. என அதட்டினாள்.கொஞ்சம் தயக்கத்தோடு நான் உன்னை முதலில் பார்த்த தேதிதான் என்றேன்.அதுதான் எந்த தேதி..? எனக் கேட்ட அவளிடம்.அது அவளுக்கே மறந்துவிட்டது என்ற ஒரு நொடியில் எனக்கும் மறந்து விட்டது என அவளுக்கு உணர்த்த சற்றே மூர்க்கமான குரலில் “தெரியவில்லை” என கோபத்தோடு சொல்லி அழைப்பினை துண்டித்தேன்.
சில நிமிடங்கள் எனக்கு நரகமாக நகர்ந்தன. மாறி மாறி சுழன்ற கால அலைவரிசையில் ஏதோ ஒரு சின்ன புள்ளி மட்டும் பொருந்தாமல் எனக்கு உறுத்திக்கொண்டே இருந்தது.ஏதோ சிந்தித்தவாறே.. நான் அவசரம் அவசரமாக என் மடிக்கணினியை திறந்து அவளது மின்னஞ்சலை வழக்கமாக நான் பயன்படுத்தும் அவளை சந்தித்த அந்த நாளை கடவுச் சொல்லாக பதித்து திறக்க முயன்றேன்.ஏதோ தவறென கணினித் திரைகத்தியது.அந்த நொடியில் தான் அலைபேசியில் அவள் மீண்டும் ஒளிர்ந்தாள்.சின்ன சிரிப்போடு அவள் சொன்னாள்.”அந்த கடவுச்சொல்லை நான் மாற்றி விட்டேன்.”அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
முகத்தில் மெல்லிய வெப்பம் பரவ நான் கண் விழித்தேன். விடிந்திருந்தது. அருகில் நீ இல்லை.
எழுந்து பார்த்தபோது அறைக்கு வெளியே பால்கனியில் நின்று கொண்டு கையில் ஒரு தேனீர் குவளையோடு கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாய்.
இமைக்காத விழிகளோடு உறைந்திருந்த உன் பார்வை ஏதோ ஒரு இசை குறிப்பை எனக்கு நினைவூட்டியது. பெரும்பாலும் நீ கவனிக்காத பொழுதெல்லாம் உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இப்போதெல்லாம் இப்படித்தான். சாப்பிடும்போதும், தூரத்தில் எங்கோ நின்று கொண்டு திரும்பிப் பார்க்கும் போதும், சில சமயங்களில் நள்ளிரவு விழிப்பின் போதும் நீ பார்த்த பார்வைகளை எல்லாம் நான் இசைக்குறிப்புகளாக மட்டுமே சேமித்து வைத்திருக்கிறேன். அவை பின்னிரவு கனவுகளில் என் காதோரங்களில் கேட்பதாக உணருகிறேன்.
இப்போதெல்லாம் என் சட்டையை என்னை விட நீதான் அதிகம் அணிந்து கொள்கிறாய். என் இளநீல சட்டையை அணிந்துகொண்டு நீ கடலைப் பார்த்துக் கொண்டிருப்பது உன்னை என்னவோ கடலின் ஒரு பிரதியாக எனக்கு உணர்த்தியது.”என்ன.. காலையின் விடியலை பார்த்துக் கொண்டு இருக்கிறாயா..” என்று கேட்ட என்னை பார்த்து “இது காதலின் விடியல்” என்றாய்.
உன்னை பின்புறமாக அணைத்து கழுத்தில் முகம் புதைத்து கண் மூடினேன். “அதற்குள் உனக்கு இரவு வந்து விட்டது..” என்று சொல்லி சிரித்தாய். “ஆமாம்.. நிலா நட்சத்திரங்கள் கூட எனக்குத் தெரிகின்றன..” என்றேன் நான்.”ஒரு காலைப்பொழுதில் இரவை மிக எளிதாக கொண்டு வந்து விடுகிறாய்..” என்று சொல்லிக்கொண்டே என்னை விட்டு விலகி நின்றாய்.நீ கூடத்தான் நள்ளிரவில் கூட ஒரு விடியலை மிக எளிதாக கொண்டு வந்து விடுகிறாய் என நான் சிரித்துக்கொண்டே சொன்னதற்கு செல்லமாய் என் முடி கலைத்தாய்.
“ஏன்.. நமக்குள் பிரச்சனை.. நம்மைப் பொறுத்தவரை இரவும் இல்லை.. பகலும் இல்லை.. அவற்றை நாம் தான் உண்டாக்கிக் கொள்கிறோம்.” என்று நீ சொன்ன போதுஅந்த காலைப்பொழுதில் நிலாவும் ஒரே ஒரு நட்சத்திரமும் இருந்தது தற்செயலானதல்ல.
அந்த நாள் மட்டும் ஒரு மஞ்சள் நிற சுடிதாரால் இன்னும் நிறம் மங்காமல் அப்படியே சலவையோடு கசங்காமல் இருக்கிறது.
காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ அலைவுகளில் எதை எதையோ தவறவிட்ட நான் முதல்முதலாகப் பார்த்தபோது அந்தக் கதவு இடுக்கின் வழியாக தென்பட்ட அந்த மஞ்சள் நிற சுடிதாரின் அசைவினை மட்டும் மறக்க முடியவில்லை.
ஆனாலும் காலம் வலிமையானது தான். என்னையே மறக்கின்ற களைப்பினிலும், உச்சபட்ச களிப்பினிலும் சில நேரங்களில் அந்த மஞ்சள் நிற சுடிதார் கூட மரத்துப்போனதுண்டு.
ஆனாலும்..அவ்வப்போது ஏதேனும் நினைவுகள், அல்லது சில பாடல்கள், சில காட்சிகள், நீண்ட தூர பயணங்கள் என வாழ்வின் ரசனைமிக்க மயிலிறகுகள் ஆன்மாவை வருடும் போதெல்லாம் அந்த மஞ்சள் நிற சுடிதார் உயிர் பெற்று விடுகிறது.
பண்டிகைக்கால துணிகள் எடுப்பதற்காக ஜவுளிக் கடைக்குப் போனபோது கலைத்துப்போட்ட பட்ட துணிகளில் ஒரு மஞ்சள் சுடிதாரை மட்டும் உறைந்த பார்வையால் நான் பார்த்துக்கொண்டிருந்தை பார்த்த கடைக்காரப் பெண் புரியாமல் விசித்திரமாக பார்த்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
யாருக்கு துணி எடுத்தாலும் நான் மஞ்சள் வண்ணத்தில் துணிகள் எடுப்பது குறித்து வீட்டில் இருப்போர் அனைவருக்கும் ஒரு சலிப்பு ஏற்படுவதுண்டு. “மஞ்சள் என்றால் உனக்கு அப்படி பிடிக்குமா அப்பா..? ” என புரியாமல் கேட்கும் என் மகனிடம் நான் எப்படி விளக்குவேன்…?
ஒரு மஞ்சள் நிற சுடிதாருக்கு பின்னால்..சில சூரிய சந்திரர்களும்,தாள கதியில் ஓடும் ஒரு நீரோடையும்,ஆர்ப்பரித்து கொட்டுகிற அருவியும்,நீலம் பாவித்து கிடக்கிற ஒரு கடலும்..பசுமை பூரித்து கிடக்கிற பச்சை வயலும்..பனி இரவுகளும்.. பவுர்ணமி பொழுதுகளும்..இதையெல்லாம் தாண்டி..இந்த வாழ்க்கை முழுக்க நான் நேசித்து பொத்தி வைத்திருக்கிற நினைவின் பசும் அடுக்குகளும் இருக்கின்றன..என்பதையும்,அதற்கான சாத்தியங்கள் என்னைப்போல பலருக்கும் இருக்கும் என்பதையும்..எப்படி விளக்குவேன்..?
இது.. ஒரு மஞ்சள் நிற சுடிதார்ஒரு புடவை ஆகி, சில காலங்கள் என் வாழ்வாகவும் ஆகி, என்னைக் கடந்து நடக்கின்ற ஒரு தென்றலாகவும் ஆகி,அப்படியே முழுமையாக ஆக்கிரமித்து,என்னை புரட்டி போட்டு விட்டு.. எவ்வித காரணமும் இன்றி ஒரு நிழலை போல கரைந்துப் போன கதை.
இரவினை போர்த்தியிருந்த அந்த இருட்டு விரல்களால் தொட்டுப் பார்த்து உணரும் அளவிற்கு பிசுபிசுப்பின் அடர்த்தியோடு இருந்தது. அனேகமாக அப்பொழுது நள்ளிரவு கடந்து பின்னிரவின் தொடக்கமாக இருக்கலாம். அப்போதுதான் கண்கள் சோர்வடைய தொடங்கி,கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில்..விழிப்புக்கும் உறக்கத்திற்கும் நடுவேயான ஒரு கனவு மயக்கத்தில் நான் புரண்டு கொண்டிருக்க, சற்றே அதிர்ந்து அடங்கிய என் அலைபேசியின் ஒலியற்ற அதிர்வொலி இரவின் மௌன இசைக்கு சுருதி பேதம் போல ராகம் தப்பி ஒலித்தது.
களைத்த கண்களுடன் எடுத்துப் பார்க்கையில் அவள் எண்ணிலிருந்து வந்த எந்த எழுத்தும் இல்லாத ஒரு வெற்றுச் செய்தி. இந்த நள்ளிரவில், எதற்காக.. எவ்விதமான எழுத்துக்களோ, வார்த்தைகளோ இல்லாத வெற்றுச் செய்தி என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒரு வேளை தவறி வந்திருக்கலாமோ என யோசித்துப் பார்த்தேன். அது எப்படி திசைமாறி காற்றில் அலைகிற பூ ஒன்று சரியாக என் மடியில் மட்டும் விழுகிறது..?
வேறு வகையில்தான் சிந்திக்க வேண்டும்.இன்னும் அலைபேசியில் என்னை அழிக்காமல் வைத்திருக்கிறானா என ஒரு வேளை.. நம்மை பரிசோதித்து பார்க்கிறாளோ, அல்லது இந்த நள்ளிரவில் உன் நினைவின் பாடலோடு உறங்காமல் விழித்துக் கிடக்கிறேன் என உணர்த்த எண்ணுகிறாளோ என்றெல்லாம் என் மனம் தனக்குத் தானே விசித்திர கோடுகளை வரைந்து பார்த்து வசீகர ஓவியங்களாய் மாற்றத் தொடங்க..ஒரு மாய விளையாட்டு அதுவாகவே நிகழத் தொடங்கியது.
அது வெறும் வெற்றுச் செய்தி. அந்த வெற்றுச் செய்தி அலைபேசியின் ஒளியூட்டப்பட்ட வெண்திரையில் காணும்போது, ஒரு எழுதப்படாத தாளைப் போல இருந்தது. அது ஒருவகையில் வரையப்படாத ஓவியம். நீண்டநாள் விரல்கள் படாது, புழுதியேறி கிடக்கும் பழுப்பேறிய பியானோ ஒன்றின், கருப்பு- வெள்ளை கட்டைகளில் வாசிக்கப்படாமல் உறைந்து கிடக்கும் ஒரு இசைத்துளி.
அது வெறும் ஒரு வெற்றுச் செய்தி என ஏற்றுக் கொள்ளாதே என உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.அந்த நொடியில் தான்..நலம் விசாரித்தல்கள் ,அக்கறையும் அன்பும் நிறைந்து வழிகிற சொற்கள்… என கற்பனையில் என் மனம் அதன் போக்கில் எழுதி பார்த்து ஏகாந்தம் கொள்ள.. தொடங்கியது.ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கம் போல..அது ஒரு எழுதப்படாத வசவுவாகக் கூட இருக்கலாம். இனி உன்னை சபிக்க சொற்களே இல்லை என்பதற்கான குறியீட்டு சாட்சியமாக கூட உணர்த்த விரும்பி இருக்கலாம் என்கிற எச்சரிக்கை உணர்வும் எட்டிப்பார்த்தது.ஆனாலும் அது ஒரு வெற்றுச் செய்தி.அதை எப்படி எடுத்துக் கொள்வது.. கால நதியின் கோர ஓட்டத்தில் மண்மூடி புதைந்துவிட்ட நினைவின் விதை ஒன்று வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்துவிட்டு இருக்கிற வெளிச்சத்துண்டால் உயிர்பெற்று துளிர்க்க முயல்கிறது என எடுத்துக் கொள்ளலாமா..அல்லது..உறுதியான முறிவொன்றினை வார்த்தைகளின்றி அறிவிக்க வருகிற மௌன மொழி பூசிய இறுதி அறிவிப்பு என எடுத்துக்கொள்ளலாமா…என்றெல்லாம் யோசித்து குழம்பிய வாறே.. அடைத்துக் கிடந்த என் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத சாலையை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான்.. “நினைவோ ஒரு பறவை” என ஒரு பாடல் தூரத்தில் எங்கோ கேட்டது.யாரோ வயதான தள்ளுவண்டிக்காரர் அவரது பண்பலை வானொலியில் அந்தப் பாடலை ஒலிக்க வைத்தவாறே அமைதியாக ஆளற்ற சாலையில் நியான் விளக்கொளியில் நடந்து செல்ல, எங்கிருந்தோ கசிந்த அந்தப் பாடலின் மர்ம முடிச்சுகளில் இதயம் இடறத் தொடங்கியது.”அதற்காகத்தான் அலைபாய்கிறேன் வந்தேன் தர வந்தேன் நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை நினைவோ ஒரு பறவை…”தள்ளுவண்டியோடு அந்தப் பாடலும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டே சென்று காற்றில் கரைந்து மௌனமாக.. மீண்டும் தனிமையின் போர்வை போர்த்தி தன்னை முடக்கிக் கொண்டது அந்த சாலை.
நான் ஏதோ வெறுமையுடன் என் மேசையின் மீதிருந்த அலைபேசியை உயிர்ப்பித்து அந்த வெற்றுச் செய்தியை எடுத்துப் பார்க்க தொடங்கினேன். அந்த ஒரு நொடியில் தான்..ஒரு நீல நிற சிறு பறவை ஒன்றுஅலைபேசி திரையில் இருந்து கிளம்பி, சிறகடித்தவாறே என் அறைக்குள் சில நொடிகள் சுற்றிசுற்றி பறந்து திறந்திருந்த என் ஜன்னலின் வழியே பறந்து போனது.அதன்பிறகு அலைபேசியை எடுத்துப் பார்க்க ஏனோ அச்சமாக இருந்தது.
அன்பே சுஷாந்த்..கண்ணீரை அடக்க முடியாமல் போன என் விழிகளினூடே நீ ஒரு புன்னகையோடு உறைந்து போன இரவு இது. வாழ்வின் சூட்சமங்களை குறித்து தான் நம் எவ்வளவு அறியாமையோடு இருக்கிறோம்..? யாருமே எதிர்பாராத திருப்பத்தில் ஒரு கணத்தில் நிகழ்ந்து விடுகிற எளிய நிகழ்வாக மட்டுமே மரணம் இருக்கிறது என்பதுதான் நம் அறிவெல்லைக்கு அப்பாலான பேரதிர்ச்சி.
ஒரு மலை முகட்டில் தன்னிச்சையாய் பூத்து, எங்கிருந்தோ விசி விடுகிற காற்றின் சிறகுகளால் சற்றே காயப்பட்டு உதிர்கிற பூ உதிர்தலைப் போல சட்டென நிகழ்ந்து விட்டது உன் மரணம்.யோசித்து பார்த்தால் , மரணம் தான் வாழ்வின் நிச்சயமென உணர்கிற இப்புள்ளியில் யாரையும் நேசிக்க முடியாமல் போகிற, இந்த வாழ்வின் சூதாட்டத்தில் சிக்கி உணர்ச்சிகளின் கரங்களால் உருட்டப்படும் பகடைக்காய்களாய் மாறிப்போகிற இவ் வாழ்வுதான் எவ்வளவு வெட்கக்கரமானது…?உன்னுடைய இறுதிப்படமான ” Dil bechara” (hot star) திரைப்படத்தையும் கூட நான் பார்க்க நேர்ந்தது கூட இவ்வாழ்வின் சூட்சம விதிகளுக்கே உரிய எதிர்பாரான்மையின் தரிசனமாகத்தான் நினைக்க வேண்டி இருக்கிறது .
உன் கண்களில் ஒளி இருந்தது சுஷாந்த். அப்படி ஒளியுடைய கண்கள் கொண்ட கலைஞர்கள் அரிதானவர்கள். நீ நடித்திருக்கும் “dil bechara” படத்தின் அசலான “The Fault in Our Stars” படத்தை விட உன் படம் இன்னும் உயிர்ப்புடன் இருக்க உன் மரணம் தான் காரணமாக இருக்கிறது என்பதுதான் வலி மிகுந்த உண்மை.எத்தனையோ முறை காதல் கதைகளை படிக்கிறோம் . திரைப்படங்களாக பார்க்கிறோம். ஒரு ஆணும், பெண்ணும் நேசித்துக் கொள்வதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கலையாக, இலக்கியமாக, கூத்தாக, திரைப்படமாக மானுட விழிகள் சலிக்காமல் ரசித்துக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை பார்த்தாலும் அதே காதல் தான். அதே நேசம் தான். அதே கண்ணீர்தான்.ஆனாலும் ஒவ்வொரு முறைப் பார்த்தாலும் காதல் புதிதாகவே தெரிவதற்கு எனக்கு காரணங்கள் புரியவில்லை.மிகச் சில இப்படித்தான். திரைப்படத்தில் உன் காதலியாக நடித்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் அவரவருக்கு ஏதேனும் பிடித்த முகங்கள் தோன்றலாம். எனக்கென்னவோ நான் மட்டுமே அறிந்த ஒரு உள்ளங்கைகளின் மென்மை மட்டுமே நினைவுக்கு வந்தது, அந்த உள்ளங்கைகளில் முகம் புதைத்து நான் கண் மூடிய போது அடைந்த ஆறுதலை தான் நான் இந்த வாழ்வெங்கும் தேடி அலைகிறேன்.மிகச் சாதாரண படம் தான். ஆனால் உன் மினுக்கும் கண்களால் அதை பிரகாசப்படுத்தி இருக்கிறாய் .அந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் நீயே அமர்ந்து உன் நினைவேந்தல் கூட்டத்தை பார்ப்பது போன்ற அந்த காட்சியில் உன் காதலியாக நடித்த அந்த பெண் சொல்வது போல.. புன்னகையால் வாழ்வினை மாற்றும் வல்லமையை நீ கொண்டிருந்தாய் சுஷாந்த்.அந்த திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் நிகழும் அதே ரசவாதம் எனக்கும் நிகழ்ந்தது,மிகுந்த நெருங்கிய நண்பனாகி விட்டாய்.அட..போடா.. சுஷாந்த்…நீ இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாம்,
கொரனா காலம் வழங்கியிருக்கிற முதன்மை பரிசு நமக்கு வாய்த்திருக்கிற தனிமை. இந்த தனிமை தான் நமது கடந்த காலத்தை பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறது.எவ்வளவு சரியாக நடந்து இருக்கிறோம் என்பதைத் தாண்டி எவ்வளவு தவறாக நடந்து இருக்கிறோம் என்பதுதான் ஆக்கிரமிக்கிறது. உண்மையில் தவறுகளும் மீறல்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொள்ள முடிகிறது.
யாரும் பூரணத்துவம் பெற்ற சரியான நபர்கள் என்று இதுவரை பிறக்கவில்லை. உங்களில் எவன் யோக்கியவானோ அவன் எடுத்து முதல் கல்லை அடியுங்கள் என தேவகுமாரன் கேட்டபோது கூட அப்போது தேடப்பட்ட அந்த முதல் கல் இப்போது வரை கிடைக்கவில்லை.எனவேதான் நாம் சரியானவர், நாம் சொல்கின்ற வார்த்தைகள் சரியானது என்றெல்லாம் நமக்கு நாமே நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் சக மனிதனின் மீது வன்மம் கொண்டு அலைய மனது தயாராகிறது. இந்த தனிமைப்பொழுதில் யார்மீதும் பெரிதாக கோபம் ஏற்படாமல் போவதை என்னுள் நிகழ்ந்திருக்கிற மாற்றம் என உணரத் தொடங்கி இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு என்கிற உணர்ச்சி மறந்துபோய்.. எதையும் சகித்து கடக்கும் மனநிலை தான் வசதியாக இருக்கிறது.வெறுப்பும், வன்மமும் உறுத்தலாகவே இருப்பதை தாண்டி உண்மையில் தொடர்ந்து பயணிக்க முடியாத பெரும் சுமையாக மாறி விடுகிறது.இங்கே யாரும் 100% சரியானவர்கள் இல்லை என்பதில் நானும் உள்ளடக்கம் என்றே நான் புரிந்து வைத்திருக்கிறேன்.அப்படி சரியாகவும் இருந்துவிட முடியாது. ஆனால் நான் சொல்வது தான் சரி, நான் தான் சரியானவன் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கும் போதுதான் வெறுப்பின் விதை ஊன்றப் படுகிறது.பலரை நம்மால் பார்க்க முடிகிறது. மனம் முழுக்க வெறுப்பினை சுமந்து, வார்த்தைகள் முழுக்க வன்மம் சுமந்துகொண்டு அலைகிற அவர்களது வெறுப்பின் பயணம் அவர்களையே துளித்துளியாக வீழ்த்திக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.
விட்டுக்கொடுத்து போனால்தான் என்ன.. என்ற கேள்விக்கு இங்கு வெறுப்பின் பாடலை முணுமுணுத்துக் கொண்டு இருப்பவர்களிடத்தில் எவ்வித பதிலும் இல்லை. விட்டுக் கொடுத்தவர்கள், மன்னித்தவர்கள் பலமாகி கொண்டே போவதையும், வெறுப்பையும் வன்மத்தையும் சுமப்பவர்கள் சுய வதைக்கு உள்ளாக்கி பலமிழந்து தவிப்பதையும் காணமுடிகிறது.நிகழ்ந்தது தானே என சிந்தித்து கடக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் கடலையும் கடந்துவிடலாம். வெறுப்பை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தால் நம் வீட்டை கூட தாண்ட முடியாது. அப்படியெல்லாம் வெறுப்பினை சுமந்துகொண்டு இந்த வாழ்வினை கடக்க முடியாது.சமீபத்தில் கூட நம்மை விட்டு பிரிந்த ஒருவர் நம்மைக் குறித்து பேசி வருகிற கருத்துக்கள் பற்றி ஒரு வலையொளித் தளத்தில் பதிலளிக்க என்னை அழைத்தார்கள் நான் மறுத்துவிட்டேன். அதில் பங்கேற்பது தரக்குறைவு என்பது மட்டுமல்ல, பதிலுக்கு நானும் அந்த வெறுப்பின் போர்வையைப் போர்த்திக் கொள்ள வேண்டும். ஏறக்குறைய அவரின் மனநிலைக்கு நானும் மாற வேண்டும். அது ஒருவிதமான தற்கொலை.உண்மையில் வெறுப்போடு அலைபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் தோற்றவர்களாக உணர்ந்திருக்கிறார்கள். ஏதோ இழந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவேதான் தங்களுக்குள் ஊறுகிற வெறுப்பை அடுத்தவர் மீது அள்ளி இறைத்து தங்களை ஆற்றுப்படுத்தி கொள்கிறார்கள். அதில் பதில் சொல்ல ஏதுமில்லை. அலட்சியப்படுத்தி நகரத்தான் நிறைய இருக்கிறது. எதையும் எளிமையாக கடக்க கற்று தேர்ச்சி அடைவது தான் உண்மையான ஞானம் என்கிறார்கள். நிதானித்து பார்க்கும் போதுதான் நாம் எல்லாம் இன்னும் கொஞ்சம் கவனமாக சற்றே பக்குவத்தோடு இந்த வாழ்க்கை அணுகி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இனிமேலாவது அவ்வாறு வாழ முயற்சி செய்வோம்.ஆதியிலிருந்து நாம் மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்கிற ஒரே பாடம்தான்..”எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.”இந்தப் பதிவு எழுத காரணமான ஒரு பதிவை எழுதிய என் அன்புத் தம்பி Vadivel Geevan க்கு என் உறக்கத்தை பறித்த என் சாபங்களும், என்னை சிந்திக்க வைத்த நன்றிகளும் ஒருசேர போய் சேரட்டும்.