பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: சுயம் Page 4 of 6

தந்தையர் தினம்.

தாய் பத்து மாதத்தோடு கருப்பையிலிருந்து குழந்தையை இறக்கி வைத்து விடுகிறாள். ஆனால் தந்தைகளோ, தன் ஆயுட்காலம் முழுவதும் குழந்தைகளை தோளில் சுமக்கிறார்கள்.நானெல்லாம் தந்தையின் சொல் பேச்சு கேட்காத ஊதாரி மகனாக ஊர் சுற்றித் திரிந்தவன். எப்போதும் அவர் சொல் பேச்சு கேட்காமல் எதிர்திசையில் பயணித்தவன். ஆனால் என் தந்தை வித்தியாசமானவர். நான் எந்த திசையில் பயணிக்கிறேனோ அந்த திசையில் தனது திசைக்காட்டியை திருப்பி வைப்பவர். திக்குத் தெரியாத இருள் சூழ்ந்த வனத்தில் நான் பயணித்தாலும் திசைகாட்டும் நட்சத்திரமாக அவர் நகர்ந்து கொண்டிருப்பார்.தோல்விகளால் நான் துவண்டு விழும் தருணங்களில் …. வெறும் சொற்களால் என்னை அவர் தேற்றியதில்லை. புத்தகங்களைக் கொண்டு என் உலகத்தை நிரப்பினார் அவர். அனைத்து துன்பத் துயர பூட்டுகளுக்கும் புத்தகங்களை சாவியாக நம்பினார் அவர். உண்மையில் பூட்டுகள் திறக்கத்தான் செய்தன.இந்த உலகில் தனியனாக பிரிந்த எனக்கு என் தந்தையின் உடன் இருப்பு வார்த்தைகளால் விவரிக்க முடிகிற புறத்துணை அல்ல. தனிமையின் பிசுபிசுக்கும் இருட்டை தகர்த்து, வெளிச்சக் காடாக என் அகத்தை மாற்ற என் விரல்களோடு கோர்த்துக்கொண்ட அவரது விரல்கள் சுடரொளி மிகுந்தவை.என் தந்தை நேர்மையானவர். கோபம் கொள்ளத் தெரியாதவர்.சக மனிதருக்கு துளியளவு கூட துன்பமோ துரோகமோ நினைக்க முடியாதவர். தன்னை எப்போதும் எளியவராக, முன்னிறுத்தி கொள்ளாத மனிதராக வாழ்பவர். அந்த வகையில் அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள பெற்றுக் கொள்ள ஏராளமான பொக்கிஷங்களை வைத்துக் கொண்டிருக்கிற அற உணர்வுகளின் புதையல் அவர்.வெறும் பெயருக்கு முன்னால் முன்னெழுத்து தருகிறவர் மட்டும் தந்தை அல்ல. அந்தத் பெயரின் அடையாளமாகவும், அந்தப் பெயரின் ஆதர்சமாகவும் மாறி, தன் வியர்வையால்துளித்துளியாக மகனை உருவாக்கி அவையத்து முந்தி இருக்க அனுப்புபவர்கள் தான் தந்தைகள்.இந்த உலகத்திற்காக தந்தைகள் எந்த மகனையும் தயாரிப்பதில்லை. ஆனால் மகன்களுக்காக தந்தைகள் ஒரு புது உலகத்தை தயாரிக்கிறார்கள். அப்படி இந்த உலகம் பல கோடி உலகங்களால் சூழப்பட்டு தந்தைகளால் தழைத்து செழிக்கிறது.”My father is a hero” என்ற ஆங்கில சொற்றொடர் உண்டு. எல்லா கதாநாயகர்களும் ஒரு தந்தையாக இருப்பார்களோ இல்லையோ… ஆனால் ஒவ்வொரு தந்தையும், ஒரு கதாநாயகன் தான்.எனக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. என் தந்தை எனக்கு இருந்த நேர்மையில்.. ஒரு பாதி அளவாவது என் மகன்களுக்காக நான் வாழ்ந்து விட வேண்டும் என்பது.என்னை அலைக்கழித்து, சுக்குநூறாக உடைத்து, என்னை வலிக்க வைத்து, கதற வைத்து, அலைய வைத்து, தொலைய வைத்து,இறுதியாக..இந்த வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்த ஒரு மாபெரும் உண்மை என்னவெனில்‌..தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

❤️

அனைத்து தந்தையர்களுக்கும், தந்தையாக போகிறவர்களுக்கும்..தந்தையாக மாற்றி இருப்பவர்களுக்கும்..தந்தையாக்கப் போகிறவர்களுக்கும்..இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

மல்லிகை நகரத்துப் பொழுதுகள்..

♥️

அந்த அறைக்கு வெளியே யாரோ நடப்பது போன்ற ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. இரவின் புதிரான அடுக்கொன்றின் விசித்திர முடிச்சியின் இடறலில் திடுக்கிட்டு விழித்த போது அருகிலே அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.என்னை தழுவி இருந்த‌‌ அவளது கரங்களை மெதுவாக எடுத்துவிட்டு, அறையின் ஜன்னல்களை திறந்தேன். உறங்கா அந்தப் பெரு நகரம் தன் வரலாற்றுப் பெருமித நினைவுகளில் லயித்து இருந்தது. இரவு ஒரு திரவமென முகிழ்ந்து அந்த முது நகரத்தின் மேனியில் வழிந்துகொண்டிருந்தது. பகலெல்லாம் வேறுமாதிரி காட்சியளிக்கும் அந்த நகரம்
இரவில் மட்டும் நாணமும், மென்மையும் உடைய ஒரு பெண்ணாகி விடுகிற மாயத்தினை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.

“என்னடா பண்ற” என்ற அவளது குரலில் திரும்பிப் பார்த்த நான் என்னை நோக்கி நீண்ட இரண்டு வெற்றுக்கரங்களை கண்டேன். அந்த அழைப்பினை என்னால் எப்போதும் தவிர்க்க முடிந்ததில்லை. அந்தக் கரங்களுக்குள் நான் நுழைந்தபோது மழை நிரப்பிய குளம் ஒன்றில் கால் நனைத்தது போல எப்போதும் அடைகிற ஒரு சிலிர்ப்பினை அடைந்தேன்.

“இந்த ஊர் ஒரு பெண்” என்றேன்.
“வர வர தென்படும் எல்லாவற்றிலும் பெண்ணை உணர்பவனாக.., தேடி அலைபவனாக நீ மாறிக்கொண்டே போகிறாய்..” என்றாள் அவள்.

இது போன்ற தருணங்களில் திக்கு தெரியாத, ஒரு திசையற்ற வெளியாய் அவளது உடல் மாறிப் போவதை நான் உணர்ந்து இருக்கிறேன். திசைகள் தெரியாமல் நான் கலைந்து, அலைவதைதான் பெரும்பாலும் என் கவிதைகளில் அவள் கண்டதாக சொன்னது ஏனோ எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

“எங்கேயாவது வெளியே போவோமா..?” என்று கேட்டாள்.

“இந்த நள்ளிரவிலா..” என சிறகடிப்பின் விரிதலில் ஒரு வானத்தையே அளந்து பார்த்த ஒரு சிறு பறவை போல மாறி இருந்த நான் மென்மையாக கேட்டேன்.

“இது உறங்கா நகரம்.
ஏனெனில்..இந்த நகரத்தின் விழிகளுக்கு இமைகள் கிடையாது.” என்று அவள் சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை.

அப்படியே எழுந்து, கிடைத்த ஆடைகளை அணிந்துகொண்டு.. நாங்கள் காரில் பயணிக்கத் தொடங்கியபோது.. வளைவும், நெளிவும் உடைய அந்த பாதைகள் பெண்ணாக அந்த நகரத்தை நான் உணர்ந்த என் கணிப்பினை உறுதி செய்தன.

நாங்கள் சென்ற பாதையில் எதிர்ப்பட்ட ஒரு பெரிய கோபுரத்தின் வாசலுக்கு முன்னால் என்னை நிறுத்த சொல்லி.. விட்டு காரைவிட்டு இறங்கி,
அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் ஏதோ சிரித்து இவள் பேசிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இந்த பின்னிரவு நேரத்திலும் குளித்து, மஞ்சள் பூசி, நெற்றி நிறைத்து பொட்டிட்டு, பூ விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவிடம் புன்னகையை மட்டும் வாங்கிக்கொண்டு பூ வாங்காமல் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

மீண்டும் காரில் ஏறிக்கொண்ட அவளிடம் “என்ன அந்த அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாய்..?” எனக்கேட்டேன். “அந்த அம்மா பெயர் மீனாட்சி. நேற்று கோவிலில் பார்த்தேன்..” என்றாள் அவள்.
ஏன்.. அந்த அம்மா தோளில் பச்சைக்கிளி ஒன்றைக் காணவில்லை என எனக்குள் கேள்வி எழும்பியதை அவளிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

திடீரென ஏதோ நினைத்தது போல என் தோளில் சாய்ந்து என் இடது கரத்தினை இறுக அணைத்துக் கொண்டாள். ஒரு பெரிய தெப்பக் குளத்திற்கு முன்னால்.. நாங்கள் சென்று சேர்ந்தபோது.. அந்தக் குளத்தில் தண்ணீர் இல்லை. “மீன்கள் இல்லாத குளம்..” என்றேன் நான். எனது பின்னந்தலையை உன்னிப்பாக கோதியவாறே.. “அந்தக் குளத்தை பார்க்கின்ற எல்லோரது விழி பார்வைகளும் மீன்களாக மாறி உலவிக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது..” என்றாள் அவள்.
“ஆனால் இது தண்ணீர் இல்லாத குளம்” என்றேன். “ஒருவகையில் ஆடை இல்லாத பெண்..” என்றாள் அவள்.

“எப்போதும் எதிலும் முழு நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ள மனித மனம் ஏனோ விரும்புவதில்லை‌” என்று சொன்ன என்னை பார்த்து அவள் வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள்.

“உன் வெட்கம் எப்போதுமே ஒரு அல்லி மலரை தான் நினைவு படுத்துகிறது..” என்றேன். அவள் சற்று கடுமையாக
“ஆனால் இது மல்லிகையின் ஊர்.” என்றாள்.. ” ஓ அதனால்தான்
நீ அடிக்கடி பெருமூச்சு விடுகிறாயோ..?” என்று கேட்ட என்னை பார்த்து மெலிதாக சிரித்தாள்.

“சரி வா.. போவோம்” என்றவாறே அவள் திரும்பியபோது அவளது பின்னப்படாத கேசத்தில் சில நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.

மீண்டும் அறைக்கு நாங்கள் திரும்பியபோது அறையின் சுவர்களில் பாசியேறி, பசுமை நிறைந்த கொடிகள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு, படர்ந்திருந்தன. அறைக்குள் ஒரு கடல் உருவாகியிருந்ததையும், அதில் சில தங்க மீன்கள் உலவிக்கொண்டு இருந்ததையும் நாங்கள் கவனித்தோம்.
எங்கள் கட்டிலின் தலைமாட்டில் ஒரு பெரிய ஆலமரம் ஒன்று தழைத்து வளர்ந்து, கிளைகள் செழித்து, விழுதுகளோடு பூரித்து நின்றதை நாங்கள் கண்டோம்.

இதுவெல்லாம் எப்படி என்று நாங்கள் இருவருமே யோசிக்கவில்லை. அந்தக் மாய கணத்தின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அந்த பெருமரத்தில் மடியில் தலை சாய்ந்தோம். எங்களை சுற்றி அடர்வனம் ஒன்றின் சூரிய ஒளி படாத
தரையின் குளிர்ச்சி பரவத்தொடங்கியது.

“நழுவிக் கொண்டே போகும் உன் விரல்களின் நுனியில் மயிற்பீலி முளைத்திருக்கிறது” என்றாள் அவள். அப்போதுதான் சற்றே மூடியிருக்கும் அவளது விழிகளில் இருந்து சிறு பறவை ஒன்றின் இறகு ஒன்று பிரிந்து அந்தர வெளியில் மிதக்கத் தொடங்கியது.

எங்கிருந்தோ வந்த நிலவு எங்களது இருவர் கண்களிலும் நுழைந்ததை நாங்கள் உணர்ந்தோம். எப்போதும் அவள் அருகில் இருக்கும்போது மென்மையாக உணரும் தாழம்பூவின் வாசனை அன்று மட்டும் மல்லிகை பூ மணமாக நான் உணர்ந்தது குறித்து எனக்கு அப்போது எந்த வியப்பும் இல்லை.

…..

எப்போதோ வாழ்வின் எதிர்பாராத தருணங்களில், அவளை நான் நழுவ விட்ட பிரிதான, வெகு காலத்திற்குப் பிறகு..

தனித்து நான் அந்த முது நகரத்திற்கு சென்றபோது ஒரு நள்ளிரவில் பூ விற்ற அந்த அம்மாவைத் தேடி அலைந்தேன்.

எதிர்பார்த்தது போல அதே கோபுரம். அதே வாசல்.

அங்கே யாரோ ஒரு பெண் மூப்பேறாமல் இருந்த அதே அம்மாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறாள்.

அருகே யாரோ ஒரு இளைஞன் இதையெல்லாம் புன்னகையோடு கவனித்துக்கொண்டே நிற்கிறான்.

எனக்கு எதுவும் தோன்றாமல் நான் அறைக்குத் திரும்பியபோது.. நான் எதிர்பார்த்தது போல அந்த அறை ஒரு வனமாக மாறிவிடவில்லை என்பதுதான் அக்கணநேரத்து ஆறுதலாக எனக்கு அமைந்தது.

 

(நன்றி முத்தங்கள்.
இசைக்கு: இசைஞானி, காணொளி வடிவமைப்பிற்கு: கிருஷ் நடேஷ்)

பிரிவின் மழை..

 

[youtube]https://www.youtube.com/watch?v=3nisKz887rU[/youtube]

இரவின் சிறகுகளால் மூடப்பட்டிருந்த அந்த பேருந்து நிலையத்தில் நீயும் நானும் நின்று கொண்டிருந்தோம். அது ஒரு வழக்கம் போல ஒரு இயல்பான வழியனுப்பல் தான் என படபடத்து, துடிதுடித்து அலைமோதிக் கொண்டிருந்த நம் மனதிற்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டோம். அது ஒரு நிரந்தர பிரிவாக அமைந்து விடுமோ என்கின்ற பயத்தில் இருவருக்குமே பேச முடியவில்லை. பேச முடியா அந்த மௌனம் ஒரு இறுகிப்போன கனத்த ஒரு உலோகச் சுவராக நம்மிடையே அருவமாக எழுந்து நின்றது. ஏதோ பேச வேண்டும் என்பதற்காக “தண்ணீர் பாட்டில் வேண்டுமா” என நான் கேட்க..அவள் வேண்டாம் என்பதுபோல தலையசைத்தாள். அதைத்தாண்டி பேசுவதற்கு எதுவுமில்லை.அது சொற்கள் தீர்ந்த தருணம். எல்லாவற்றையும் இந்த வாழ்க்கையில் நாம் கொட்டி முடித்திருக்கிறோம். நாம் வாழ்ந்தது ஒரு வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்வதா.. அல்லது நிகழும் வாழ்க்கையில் இதுவும் நிகழ்ந்தது என உணர்ந்து கொள்வதா என்பதில் எப்போதுமே எனக்கு மனக்குழப்பம் உண்டு. ஆனாலும் அக்கணத்தில் நாம் சாகாமல் உயிர்ப்புடன் இருந்தோம் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஒரு கனவு போல நிகழ்ந்து விட்டிருக்கிறது என்றெல்லாம் நீயும், நானும் நிகழ்ந்தவைகள் அனைத்தையுமே ஒரு கனவாக கடந்துவிட முடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் கடக்கவே முடியாத ஒரு பெரும் பாலைவனமாக நம் நினைவுகள் மாறிவிட்டன என்பதை அக்கணத்தில் நாம் உணர்ந்தே இருந்தோம். ஆளரவமற்ற அந்தப் பாலைவனத்தில்.

அலைச்சலும் உளைச்சலும் நிரம்பிய இந்தக் கொடும் வாழ்வினை தணித்துக்கொள்ள ஒரு இசையமைதி வேண்டி நாம் அலையப் போகிறோம் என்பதுதான் நாம் எதிர்கொண்டிருந்த இந்த வாழ்வின் மீதான பெரும் அச்சம். உண்மைதான். உனது விழிகளில் நான் அடைந்த அந்த இசையமைதி இதுவரை நான் எங்கும் அடையவில்லை என்பதும்.. அதைத் தேடி அலைந்து திரிவதை தான் இந்த வாழ்க்கையின் கொடும் விதி என நான் அர்த்தப் படுத்திக் கொள்கிறேன் என்பதும் நான் அறிந்தது தான். என்னவோ தெரியவில்லை. அன்று நாம் எதிர்நோக்கியிருந்த அந்தப் பேருந்து வெகு நேரமாகியும் வரவில்லை. அந்தக் கால தாமதத்தை காலம் நமக்கு காட்டிய அன்பின் வரமா.. அல்லது ஈவு இரக்கமற்ற வாழ்வின் கடைசித்துளி கருணையா என்றெல்லாம் அப்போது என்னால் ஆராய முடியவில்லை. ஆனாலும் பேரவலம் நிறைந்த ஒரு நரகத்திற்குள் நாம் திரும்பிச் செல்வதற்காக கையறு நிலையில் நின்று கொண்டிருந்தோம் என்கிற ஒத்த மன உணர்வில் நாம் உறைந்திருந்தோம். எந்தவிதமான சம்பிரதாய விடைபெறுதல்களும் நமக்குள் அன்று நடைபெறவில்லை என்பது தான் இன்றும் நான் அடைந்திருக்கிற மிகப் பெரிய ஆறுதல். என்னை நீ பார்த்துக் கொண்டே இருந்தாய். நான் வேறு எங்கோ கவனித்துக் கொண்டிருப்பதாக உனக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அருகே யார் தோளிலோ தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். இடம்/ காலம்/ சூழல் மறந்த ஒரு குழந்தையின் உறக்கம் தான் எவ்வளவு புனிதமானது… இனி நமக்கு வாய்க்கவே போவதற்ற அந்த உறக்கம் தான் நான் அந்த நொடியில் கண்டடைந்த மகத்தான மானுட தரிசனம். இறுதியில் தாமதமாக போன அந்த பேருந்தும் வந்தது. மீண்டும் அதே கேள்வியை நான் கேட்டேன். “தண்ணீர் பாட்டில் வேண்டுமா…” எத்தனை முறை இதே கேள்வியை கேட்பாய் என்பதுபோல என்னை நீ நிமிர்ந்து பார்த்தாய். அந்த நிமிடத்தில் பொங்கி வருகின்ற எல்லாவற்றையும் ஏதோ ஒரு கேள்விக்குள் அடக்க முயலும் அபத்தம் எனக்கும் புரிந்தது. என்னிடமிருந்த உன் பையினை மெலிதாக வாங்கிக்கொண்டு தோளில் மாட்டிக் கொண்டாய். என் கையில் இருந்த பையை வாங்கும் அந்த நொடியில் உன் விரல்கள் எனது விரலோடு உரசி விடக்கூடாது என்கின்ற மிகுந்த எச்சரிக்கை உன்னிடம் இருந்தது குறித்து எனக்கு இதுவரையில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த ஒற்றை உரசல் போதும். அந்த சின்னஞ்சிறு தீப்பொறி உனக்கு அது வரை நிகழ்ந்த அனைத்தையும் ஒருமுறை திரைப்படமாக காட்டிவிடும் என்பதையும்… அந்தப் பொழுதில் தன் வாழ்வையே ஒரு திரைப்படமாக பார்க்க நீ அஞ்சினாய் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. செல்கிறேன் என்பது போல மெலிதாக தலையசைத்தாய். எனது கண்கள் கலங்கியிருந்தன. இனி மீளவே முடியாத ஒரு பாதையில் உன்னை அனுப்பி வைத்துவிட்டு இந்த வாழ்வு முழுக்க நான் தனியே வாழ வேண்டும் என்கின்ற பெரும் சாபம் வெயில் அடிக்கும் நிலத்தில் உயரப் பறக்கும் ஒரு கழுகின் நிழல் போல எனக்குள்ளும் துளிர்த்தது.

அக்கணத்தில் ஏதோ சொல்ல நினைத்தாய் என இன்றளவும் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை நீ எதுவும் சொல்லவில்லை. போய் வருகிறேன் என்றோ, போய் எப்படியாவது தொடர்பு கொள்கிறேன் என்றோ , போய் அலைபேசியில் அழைக்கிறேன் என்றோ எந்த வாக்குறுதிகளும் இல்லாத ஒரு வெறுமை விடைபெறுதல் அது. ஏதாவது சொல்லி விட்டுப் போயிருந்தால். அந்த சொல்லையே பிடித்துக்கொண்டு நான் அலைந்து தீர்ப்பேன் என உனக்கும் தெரியும் தானே. படிக்கட்டுகளில் ஏறும் போது கலங்கி இருந்த என் கண்களின் ஊடாக எனக்குத் தெரிந்த காட்சி நீ என்னை திரும்பி பார்ப்பதான ஒரு தோற்றம். நீ உள்ளே ஏறி சென்று விட்டாய். பேருந்து நகரத் தொடங்கியது. நான் அதே இடத்தில் நின்று கொண்டே இருந்தேன். பேருந்து என்னை விட்டு விலக.. விலக.. பிரிக்க முடியாத என் ஆன்மாவின் ரத்தமும் சதையும் நிரம்பிய துண்டு ஒன்று என்னை விட்டு விலகுவது போன்ற வலி. மெதுவாக நான் காரில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். எனக்குச் சற்று முன்னால் அந்த பேருந்து சென்று கொண்டே இருந்தது. நானும் பின்னால் சிறிது நேரம் போய்க்கொண்டே இருந்தேன். சட்டென ஒரு வளைவில் அந்த பேருந்து எதிர்ப்புறம் பயணிக்க. நான் அப்படியே காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த முச்சந்தியில் இறங்கி நின்றேன்.

அந்த நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது எதேச்சையான ஒரு நிகழ்வு என இந்த நொடி வரை நான் நம்பவில்லை.

காதலின் விடியல்.

 

[youtube]https://www.youtube.com/watch?v=KZyn3KCMFI4[/youtube]

 

❤️

கார் அமைதியாக சென்று கொண்டிருந்தது. தோளில் சாய்ந்தவாறே அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். தோளில் சாயும் தருணங்களில் எல்லாம் குழந்தையைப் போல் ஆகி விடுகிறாள். அப்படி என்ன இருக்கிறது என் தோளில்… என நிறைய முறை கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் “நீ அமைதியா ஓட்டிக்கொண்டே போ. நான் தூங்கணும் டா” என சொல்லியவாறு தூங்கி விடுகிறாள். ஒரு கோடைகால பின்னிரவில் அந்த நெடும் வழிச்சாலையில் நானும் என்னுடன் நீண்ட நேரமாக பயணித்து வரும் ஒரு நிலவும், சில இளையராஜா பாடல்களும் தனித்து இருந்தோம். என்னைப் பார்த்தவுடன் ஏன் இப்படி ஆகிவிடுகிறாய் எனக் கேட்டதற்கு அவளிடம் ஒரு மர்மமான புன்னகை தான் மிஞ்சியது. நான் புரியாமல் அவள் முகத்தையே உற்றுநோக்கி கொண்டிருந்தபோது.. மென்மையான குரலில் சொல்கிறாள்.. “அது அப்படித்தான். நான் விளையாடுவதை ரசிக்க நீ மட்டும்தான் இருக்கிறாய். உன் கண்களில் நான் விழும் போதெல்லாம் சிவந்துக் கொண்டே போகிறேன்” என்கிறாள். இப்போதெல்லாம் பேசுவதைவிட உன்னுடன் எங்கோ போய்க் கொண்டிருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறாள். அந்த நெடுஞ்சாலை முடிந்து ஒரு மலைச்சாலையில் மீது கார் ஏற தொடங்குகிறது. எதிரே எந்த வாகனமும் வரவில்லை. எனக்கு முன்னால் பெரும்பெரும் பூதங்கள் போல மலைகள் அதனூடாக மலைக்காடுகள் என அந்தப் பின்னிரவு சற்று அச்சமாகத்தான் இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவளை அப்படியே மறுபுறம் சாய்த்து வைத்துவிட்டு காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த மலைச் சாலையில் தனியே நின்று கொண்டிருக்கிறேன். அடர் குளிர் இரவு. இதேபோன்ற எத்தனை இரவுகள் இந்த மலைகள் மீது நிழலாக படிந்திருக்கும் என விசித்திரமாக யோசித்தவாறு நின்று கொண்டிருக்கிறேன்.‌ ஒரு காதல் தரும் இரவு மிக விசித்திரமானது. பூக்களோடு வருகிற உதிரிகள் போல அந்த இரவு முழுக்க ஏகாந்த நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஒரு முறை அவளது கூந்தலை நான் இரவு என வர்ணித்த போது.. அதை கலைப்பதற்கு தான் விடியலின் முன் வெளிச்சச் சுடர்கள் போல உன் விரல்கள் இருக்கின்றனவே என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறாள். அடிக்கடி சிரிக்காதே. நீ அழகாகிக் கொண்டே போகிறாய் என்கிறேன். என் முன்னந்தலையை மெலிதாக கலைத்து ஓடி விடுகிறாள்.

❤️

பயணம் மீண்டும் தொடர்ந்தது. திருப்பங்களாலும் ஏற்றங்களாலும் நிரம்பிய அந்த மலைச்சாலை வளைந்து நெளிந்த பாம்பின் உடலைப் போல வசீகரமான ஒன்றாக எனக்கு தோன்றியது. அந்த மலைச்சாலை இறுதியில் ஒரு ஏரிக் கரையில் முடிவடைகிறது. தூங்கிக் கொண்டிருந்த அவளை மெதுவாக எழுப்பினேன். கண்களை கசக்கி நாம் எங்கே இருக்கிறோம் என்று கேட்கிறாள்.என்னால் எளிதாக சொர்க்கத்தில் என்ன சொல்லிவிட முடியும். ஆனால் நான் மௌனமாக கீழே இறங்கு என்று சொல்லிவிட்டு நானும் இறங்கினேன். இருவருக்கும் முன்னால் ஒரு படுத்திருக்கும் யானையை போல ஒரு ஏரி சாய்ந்து கிடந்தது.
அந்த அதிகாலை நேரத்தில் யாருமில்லா தருணத்தில் பனி போர்த்திய ஏரியை கண்ணிமைக்காமல் அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருக்கிறாள். “இப்படி ஒரு இடத்திற்கு என்னை அழைத்து வரவேண்டும் என உனக்கு எப்படித் தோன்றியது” எனக் கேட்கிறாள்.” சில எண்ணங்களுக்கு காரணங்கள் கேட்காதே. நீ என்னுடன் இங்கே வரவேண்டும் என எனக்குத் தோன்றியது. அழைத்து வந்திருக்கிறேன்.” *என் கையில் ஒரு விடியல் இருக்கிறது. அதை இன்னும் சற்று நேரத்தில் என் தேவதைக்கு பரிசளிக்க நான் காத்திருக்கிறேன்” என்கிறேன். இந்த விடியல் போல பரிசுத்தமானது உலகில் ஏதுமில்லை என நான் சொல்லிவிட்டு அவளை பார்க்கும் போது அவளது கண்கள் கலங்கியிருந்தன. தன்னை யாருமே இதுவரை இப்படி நேசித்தது இல்லை என நினைக்க வைப்பது தான் காதலின் அதிதீவிர ரசவாதம். பனியின் ஊடாக மெல்லிய வெளிச்சம் பரவத் தொடங்குகிறது. ஏரிக் கரையில் இருந்த மரங்களிலிருந்து பறவைகளின் சிறகடிப்புகள், கூவல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த விடியல் மழைத்துளி மண்ணில் கரைவது போல எங்களுக்குள் கரையத் தொடங்க .. நாங்கள் உருகத் தொடங்கி இருந்தோம். திடீரென என் கழுத்தில் மெல்லிய ஈரம் பதிய … நான் மெலிதாக புன்னகைத்துக் கொண்டேன். இதைவிட மேலான பரிசை அவளுக்கு நானும், எனக்கு அவளும் அளித்திருக்க முடியாது என்கிற நினைவில் அந்த நிமிடங்கள் உறைந்திருக்க..

விடியத் தொடங்கியிருந்தது.

 

காற்றில் கரைந்த கார்த்தி…

 

நினைத்துப் பார்ப்பதற்குள் கார்த்தி காற்றோடு காற்றாய் கலந்து விட்டான்.

அவனை முதன்முதலாக பார்த்த அதே மகாமகக் குளக்கரையில் அவனை இடுகாட்டில் வைத்துவிட்டு வந்து தனியே இந்த அந்தியில் நின்று கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக என்னைச் சுற்றி சூழ்ந்துக் கொண்டிருக்கிற மரணங்கள் என்னை முற்றிலுமாக உருக்குலைத்து போட்டிருக்கின்றன. இரவு நேரங்கள் மிகக் கொடியதாக நீண்டதாக சகிக்க முடியாத துயரம் நிரம்பியதாக மாறிவிட்டன.

என் வாழ்வில் என்னோடு அனைத்திலும் இணைந்து இயங்கியும், ரசித்தும், சிரித்தும், மகிழ்ந்தும், சிந்தித்தும், கலங்கியும் கலந்து இருந்தவன் கார்த்தி. நான் நம்பிக்கையோடு திரும்பிப் பார்க்கும் தருணங்களில் எல்லாம் கார்த்தியின் புன்னகை என்னை தொடர்ந்து வந்த நாட்களில் நான் வென்ற வண்ணம் இருந்திருக்கிறேன். எது குறித்தும் இதுவரை நான் அச்சப்பட்டதில்லை. எல்லா இடமும் நான் தொடக்கூடிய உயரத்தில் தான் இருக்கிறது என்று எனக்கு ஒரு உன்மத்தம் உண்டு. ஆனால் ஒரு மரணத்தின் மூலம் அனைத்து சமன்பாடுகளையும் சரித்துப் போட்டுவிட்டு சாய்ந்து விட்டான் கார்த்தி.

எப்போதும் அவன் மேடையில் நின்றதில்லை. திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்தவன் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அந்தப் பொறுப்பை அன்று ஏற்று நடத்திய ஆசைத்தம்பியோடு இணைந்து அனைவருக்கும் இறுதிவரை பரிமாறிக் கொண்டு இருந்தான்.

இறுதிவரை என்றால்.. கார்த்தியைப் பொறுத்தவரை இறுதிவரை தான். நடுவில் ஏதோ காரணம் காட்டி நகர மாட்டான். ஒரு வழியாக அனைவருக்கும் சாப்பாடு போட்டு விட்டு பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு.‌. அவன் வேர்வையும் அழுக்குமாக திரும்பி வந்தபோது என்னிடம் சொன்னது.. சீமான் அண்ணனுக்கு என் கையால் சாப்பாடு போட்டேன் அண்ணா என்று பெருமைப்பட்டுக் கொண்டான்.

அவன் ஒரு முழுமையான சீமான் தம்பி. தத்துவமோ, கொள்கை முடிவுகளோ, அரசியலோ எதுவாக இருந்தாலும் அவனுக்கு அண்ணன் சீமான் சொன்னால் அதுதான் வேதவாக்கு. அண்ணன் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை. அதைக் கூட பழகும் தம்பிகளிடமும் அவன் விதைத்துக் கொண்டே இருப்பான்.

எங்களது கும்பகோணம் நாம் தமிழர் கட்சி எத்தனையோ சரிவு களையும் உயர்வுகளையும் கண்டிருக்கிறது. உடன் இருந்த பலரை இந்த பயணத்தில் நாங்கள் இழந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை நாங்கள் இழப்பிலிருந்து, கட்சியில் அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் சரிவுகளிலிருந்து மீள் வர துடித்து எழுந்திருக்கிறோம். சரிந்து விழுந்த தருணங்களில் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் கைகோர்த்துக்கொண்டு மீண்டும் எழுந்து நிற்க துணிவோம். அவ்வாறு நாங்கள் எழுந்து நிற்க துணியும்போதெல்லாம் முதலில் எங்களில் எழுவதற்காக உயரே நீளுகின்ற கை கார்த்தியினுடையது.
எல்லா சரிவிலிருந்து கட்சியை காப்பாற்றி அதை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய ஒரு காலத்தை நோக்கி அழைத்துச் சென்றவன் கார்த்தி.
ஆனால் கொடுங் காலம் எங்களுக்கு இழைத்துவிட்ட இத்தருணத்து சரிவிலிருந்து நாங்கள் எப்படி மீளப் போகிறோம் என்று எங்களுக்கே தெரியவில்லை.

கட்சி தொடங்கிய நாளிலிருந்து.. தனி நபர்கள் மீது.. தனிநபர்கள் சார்ந்து அமைக்கப்படும் அணிகள் மீது.. நம்பிக்கையற்று அண்ணன் சீமானின் சொல் எங்கே இருக்கிறதோ அங்கே இருந்தவன் கார்த்தி. நான் இங்கே இருக்கும் யாரையும் பார்த்து கட்சிக்கு வந்தவன் அல்ல அண்ணா.. நான் சீமான் அண்ணனைப் பார்த்து வந்தவன். அவர் எங்கு இருக்கிறாரோ அங்கே நான் இருப்பேன் என்று தனது நிலைப்பாட்டை நிர்ணயித்து உறுதிப்படுத்திக் கொண்டவன் கார்த்தி.

நிறைய என்னோடு பயணித்து இருக்கிறான். என்னிடம் கேட்டு கேட்டு ரசனைகளை உருவாக்கிக் கொள்வான். மகேந்திரன் படங்களாக பார்த்து கொண்டு இருக்கிறேன் அண்ணா.. ஒருநாள் அவன் என்னிடம் சொன்ன போது ஆச்சரியமாக பார்த்தேன். கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் வந்தாளே அல்லிப்பூ என்ற பாட்டைப் பற்றி சிலாகித்து ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மறுநாள் எங்கோ அந்தப்பாடலை தேடி எடுத்து தேர்ந்த ஒலித் தரத்தில் மறுபதிப்பு செய்து எனக்கு வந்து பரிசளித்துவிட்டு போனான்.

புது வீடு கட்டினான். கனவு போல ஒரு வாழ்க்கையை அமைக்க உழைத்துக் கொண்டிருந்தான். எல்லோருடனும் கூடி வாழ ஒரு வாழ்க்கை.. மகிழ்வாக, அர்த்தமுள்ளதாக.. உருவாக்க ஓடிக்கொண்டிருந்தான். வெண்மை நிறமுள்ள அந்த வீடு இவ்வளவு சீக்கிரம் இருள் அடைந்து போகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவனுடன் பழகிய பல பேரை எனக்கு அறிமுகம் செய்திருக்கிறான். அவரில் பல பேருக்கு பிழைக்க ஏதோ ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கிறான்.
பார்ப்போரை எல்லாம் நாம் தமிழர் ஆக மாற்ற இடைவிடாது முயற்சிகள் செய்து கொண்டே இருப்பான்.

இன்று இடுகாட்டில் அவனது உடல் தகனம் செய்ய வைக்கப்பட்ட பொழுதில்… கட்சி முறைப்படி நாங்கள் அகவணக்கம் வீரவணக்கம் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். எங்கள் அனைவரின் மனதிற்குள்ளும் தாங்க முடியாத வலியும்.. எதிர்காலம் குறித்த இனம் புரியாத பயமும் நிறைந்திருந்தன. எங்கள் கண்கள் நீரால் நிறைந்திருந்த அப்பொழுதில்.. நாங்கள் ஒருவருக்கொருவர் கைகளை இறுக்க பற்றிக் கொண்டோம்‌ . அந்த உறுதியில் கார்த்தி இன்னும் உயிரோடு இருக்கிறான் என நாங்கள் நம்பத் தொடங்கிவிட்டோம்.

அவன் இல்லாத அரசியல் வாழ்வு ஒன்றை நாங்கள் அனைவரும் வாழ்ந்துதான் ஆகவேண்டும். இனி ஏதாவது ஒன்றென்றால் அலைபேசியில் அனிச்சையாக அவன் பெயரை தொடும் எனது விரல்கள் தட்டுத்தடுமாறி பழகிக்கொள்ள இன்னும் சில நாட்கள் ஆகும்.

இப்போதைக்கு அவன் நினைவுகள் மட்டும் தான் எங்கள் அனைவரின் மனதிலும் ததும்பிக் கொண்டே இருக்கிறது.

அதைத் தாண்டி ஏதாவது யோசித்தால்..

வெறும் இருட்டு.. இருட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை.

மறக்க முடியா மாமாலை.

 

என் வாழ்வில் நேற்று மாலை தான் ( ஆகஸ்ல் 25/ 2019)அவரை முதன்முதலில் நேரில் பார்த்தேன்.

பிறந்தது முதல் இருந்த வாழ்நாள் கனவு அது.

அவரது பாடல்களைக் கேட்டிருக்கிறேன். சிலிர்த்திருக்கிறேன். தனியே அழுதிருக்கிறேன். ஒன்றுமே செய்யாமல் மௌனமாய் இருந்திருக்கிறேன்.

ஒரு இசை இப்படியெல்லாம் வேதியியல் மாற்றம் செய்யுமா .. என்றெல்லாம் வியந்திருக்கிறேன்.

என் வாழ்வினை பற்றி யாராவது கேட்டால்.. நான் இளையராஜா பாடல்களை வைத்துதான் என் வாழ்வினை ஒரு பிளாஷ்பேக் போல சொல்ல முடியும்.

இந்த பாடலை கேட்டு கொண்டு செல்லும்போதுதான் நான் பள்ளியில் சேர்ந்தேன். அந்தப் பாடல் திருவிழாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் போது..நான் விளையாடப் போக முடியாமல் என் அம்மா மடியில் படுத்து இருந்தேன். இந்தப் பாடல் ஒலிக்கும்போதுதான் என் கல்லூரிக்கு செல்ல முதன்முதலாக கிளம்பிக் கொண்டிருந்தேன். என் மகன் பிறந்த பின்னர் நான் உடனே செய்த வேலை இந்த பாடலை கேட்டது தான்.

 

 

எங்கோ தேனீர் கடையில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போது தான் அவளை சந்தித்தேன். அவளை ஒரு பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக பிரிந்து வரும் வேளையில் ஒரு பேருந்தில் இந்த பாடல்தான் ஒலித்துக் கொண்டிருந்தது. என் திருமணத்திற்கு முந்தைய தின இரவில் இந்த பாடலை கேட்டு தான் அழுது கொண்டிருந்தேன்.
என் மனைவியின் முதல் பிறந்த நாளில் இந்தப் பாடலோடுதான் அவளுக்கு வாழ்த்து சொன்னேன்.

சரிந்து விழுந்த தருணத்தில் என்னை நேசித்தவர்களோடு இணைந்து அப்பாவும் அம்மாவும் என்னை நிமிர்த்த முயன்ற கணங்களில்.. இந்தப் பாடலை தான் கேட்டுக்கொண்டு இருந்தேன்.

நள்ளிரவு களில், பயணங்களில், காலை பொழுதுகளில், மாலை மயக்கங்களில், மதிய தனிமைகளில் எப்போதும் அவரது பாடல்கள்தான் என்னோடு இருக்கின்றன.

இப்படி என்னைச் சுற்றி எங்கும் அவரது பாடல்கள்தான்.

அப்படிப்பட்ட என் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கிற அவரைத்தான் நேற்று முதன்முதலாகக் கண்டேன்.

கண்டவுடன் ஒரு கடவுளை நேரில் பார்த்த பரவசம். அது ஒரு மெய் மறந்து உலகம் மறந்து கண்கலங்கி சிலிர்த்த சூழல்.

அவரைச் சுற்றி அவராகவே போர்த்திக் கொண்ட ஆன்மீக போர்வைகளை எல்லாம் தாண்டி..

அவரைச்சுற்றி அவரின் அனுமதியோடு நிகழ்ந்த ஆச்சார்ய அரசியலை எல்லாம் தாண்டி..

நேர்மையாக சொல்வதென்றால்.. எனக்கு பிடிக்கவே பிடிக்காத எதிர் நிலைகளில் அவர் நின்றிருந்த நிலைகளை எல்லாம் தாண்டி…

உண்மையில்.. அவர் என்னை மட்டுமல்ல.. அங்கு கூடியிருந்த அனைவரையும் ஆட்கொண்டார்.

அந்த இசை தான் அவரை நோக்கி என்னை ஈர்த்தது. அதை அவர் பாகுபாடில்லாமல் ஒரு அருவி போல கொட்டித் தீர்த்தார்.

மற்றபடி அவரிடம் நான் அரசியலை எதிர்பார்த்து செல்லவில்லை. அவர் வைத்திருக்கிற அரசியலும் எனக்கு உவப்பானது இல்லை.

எது வேண்டினேனோ அது கிடைத்தது.

 

இந்த அருமையான வாய்ப்பினை எங்களுக்கு ஏற்படுத்தி தந்த நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மாநிலச் செயலாளர் அருமை நண்பர் அரிமா நாதன் Arima nathan அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. உண்மையில் அவர் செய்த உதவி அவரை எங்கள் வாழ்வின் மறக்கமுடியாத ஒரு மனிதராக மாற்றிவிட்டது. இனி நான் இளையராஜாவை பற்றி யோசிக்கும் போதெல்லாம்.. உண்மையாக
அரிமாநாதனும் நினைவுக்கு வருவார். நன்றி தலைவா.

பிறகு.

காடு மலை மேடு பள்ளம் மாடி உயரம் உச்சம் என நான் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம்.. சுமையென கருதாது வாழ்வின் சுவை என கருதி நிறைவான மகிழ்வோடும், கொண்டாட்டங்களோடும் என்னை சுமந்து செல்லும் என்னுயிர் தம்பிகளான ஆசை துரை துருவன் சாரதி உள்ளிட்ட அனைவருக்கும்.. நான் என்ன தனியே நன்றி சொல்வது..

அவர்களாலேயே நான்.

நேற்றைய தினம் மாலை போல.. ஒரு மழை பெய்த இசை மாலை இனி ஒரு முறை என் வாழ்வில் வாய்க்குமா என ஏங்க வைத்ததுதான் இளையராஜா என்ற அமிர்தத்தின் நிறை தளும்பலில் கூட நின்றாடும் போதாமை.

மீரா-பாக்கியராசனின் மணநாள் வாழ்த்து 27-01-2019

எப்போதும் தன்னை சூழ வரும் வன்ம வெறுப்பின் கழுகுகளை
சட்டென பறந்து பின்மாயும் சிறு ஈசல்களாக மாற்றி ரசிக்கும்
ஒரு விசித்திரக்காரனின் காதற் கதை இது.
————————–—–

எவராலும் வெல்ல முடியாத
அவனது புன்னகைக்குப் பின்னால் ஒரு தேவதையின் காதல் நம்பிக்கையாக மின்னுகிறது.

சுற்றி வீசும் சொற்களின் அவதூற்று சூறைகாற்றுக்கெல்லாம் முகம் கொடுக்கும் அவனது அசாத்திய மனத்துணிவு, கனிவு மிக்க அவன் துணையின் தாய்மைக் கரங்களால் தயார் செய்யப்பட்டது.

அவள் அவனை தன் பேரன்பு கவசங்களால் போர்த்திக் களத்திற்கு
அனுப்புகிறாள்.

அவனோ தன்னை நோக்கி வரும் பொய்மையின் அம்புகளை தன் சிறு
புன்னகையால் தகர்த்து விடுகிறான்‌.

அவனது மகத்தான செயல்களுக்கும்,வசீகரப் புன்னகைகளுக்கும் பின்னால் அந்த மாதேவியின் தீரா உடனிருப்பு துணையெழுத்தாக தொடர்கிறது..

அந்த உயிர் எழுத்தின் வலிமையில் தான் அனைத்திற்கும் முகம் கொடுக்கிற ஆயுத எழுத்தாக அவன் மாறி நிற்கிறான்.

…….
…….
…….
எகிறி வரும் எல்லா வித சொற்களுக்கும் பதிலாய் பத்துக்கு நூறு மடங்காய் எதிர் வினை ஆற்றி விடலாம் தான்.. ஆனாலும் ஒரு நிதானம். ஒரு கண நேர அமைதி. பிறகு ஒரு புன்னகையோடு கிளம்பி விடுகிற எங்களது அசாத்தியங்களுக்கு பின்னால் தகர்க்கவே முடியாத ஆதி நேசப் பசுங் கொடிகள் நினைவுகளாய் போர்த்தி இருக்கிற ஒரு வனக் கோட்டை இருக்கிறது.

அந்த அரண்மனையின் மாதரசி, எம் சோழர்க்குல இளவரசி, என் தங்கை Meera Packiarajan க்கும், என் மைத்துனர் தலPackiarajan Sethuramalingam க்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்.

 — with Meera Packiarajan.

துருவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து

 

 

ஒவ்வொரு மனிதனுக்கும் பெரிய ஆசையாக எது இருக்கக்கூடும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..?

அவனுக்கென்று சில வசந்த காலங்கள் இருந்திருக்கக்கூடும். வாலிபத்தின் மஞ்சள் பூவாக அவன் மலர்ந்து நிற்கையில்.. அவனது இளமையின் மகரந்தத்தாளை ஒட்டி உரச ஒரு வண்ணத்துப்பூச்சி வந்து போயிருக்கக்கூடும். கண்கள் முழுக்க கனவோடு, நெஞ்சம் முழுக்க இசையோடு , இதயம் முழுக்க கவிதையோடு, திரிந்த அந்த நிலா காலத்திற்குத்தான் ஒவ்வொரு மனிதனும் திரும்ப ஆசைப்படுவான்.

ஏனெனில் அதுதான் அவனாகவே அவனை உணர்ந்து மகிழ்ந்து திரிந்த காலம். அசலாக நின்ற காலம். எவ்விதமான பூடகமும் இன்றி நிஜத்தின் அருகே நின்ற காலம் ‌.

ஏனெனில் ..அந்தக் காலம் தான் அவன்.

அப்படி நான் எனது கடந்த காலத்திற்குள் என்னை கடத்தி போகச் செல்ல விரும்பும் போதெல்லாம் எதிரே துருவன் நிற்பான்.

நான் எவ்வாறெல்லாம் இருந்தேனோ ,திரிந்தேனோ உணர்ந்தேனோ,. அதேபோல அதே லயத்தோடு..அதே தாளகதியில் அவனும் திரிகிறான்.

இந்த அலைவரிசை ஓர்மைதான் அவனுக்குள் என்னையும்.. எனக்குள் அவனையும் …ஒருங்கே பொருத்தி வைத்தது.

என் இளமைக்கால பெரும் கிளர்ச்சியின் நிகழ் வடிவம் அவன். எனவேதான் அவன் எப்போதும் என் இதயத்திற்கு அருகில் இருக்கின்ற இனிப்பாகிறான்.

எதிலும் கிளர்ச்சியின் உச்சம் தேடுகிற ஆகப்பெரும் கலகக்காரனாக தன்னை வடிவமைத்துக் கொள்வதில் அவன் ஒரு தேர்ந்த இசைஞன்.

யாராலும் நினைத்தே பார்க்க முடியாத வடிவங்களில் தன்னை தகவமைத்து ஒழுங்கமைத்துக் கொண்டே வருகிறான்.

எந்த உச்சத்தையும் ஒரு நொடியில் இழக்க துணிவான்.. அடுத்த நொடியில் அதைத் தாண்டி பறக்க முயல்வான்..

பறந்தும் விடுவான்.

பல சிகரங்களின் நுனி தொட.. பெரும் பசி கொண்ட ஒரு வேட்டை கழுகு போல அவன் அமைதியாக காத்திருக்கிறான்.

அந்த சிகரங்களும் இவன் சிறகுகளின் நிழல் தீண்ட சிலிர்த்து காத்திருக்கின்றன.

அந்த சில கணங்களுக்காக.. அவன் தோள் பிடித்து நிற்கின்ற நானும் காத்திருக்கிறேன்.

அவனுக்கென பிரத்தியேகமான வாழ்த்துக்கள் எதுவும் தேவையில்லை என்னிடத்திலிருந்து..

அவன் நன்றாகத்தான் இருப்பான்.

இந்த வாழ்வை வேட்கையும் ருசியும் நிரம்பிய ஒரு கள்ளாக கருதி அவன் அருந்தியே தீருவான்.

அவன் அடிக்கடி சொல்லும் ஒரு சொல்..

தட்டித் தூக்கிடணும் குருநாதா..

தட்டி தூக்குடா ‌..

இளையராஜா என்கிற கால இயந்திரம்.

 

 

சன் தொலைக்காட்சியில் சற்று நேரத்திற்கு முன்பாக இசைஞானி இளையராஜாவின் சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அந்தப் பாடல்களை நாம் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறோம். அதே பாடல்கள்தான்.. அதே இசைதான். ஆனாலும் முதல் முறை கேட்ட போது எந்த உணர்ச்சியை நாம் பெற்றோமோ.. அதே உணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறை அந்த பாடலை கேட்கும் போதும் வருமே ..அதுதான் இளையராஜா.

எனக்கெல்லாம் இளையராஜா பாடல்களை கேட்கும்போது அந்த பாடலை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் கேட்ட பொழுதுகள் என் நினைவுகளில் நின்றாடுகின்றன..

ஆதி தாய் கிராமத்திற்கு திரும்பிய ஒரு ஊர் சுற்றி போல .. இளையராஜா பாடல்கள் என் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. அந்தப் பாடல்களின் கரம்பிடித்து ஒரு கை குழந்தை போல நான் நினைவின் வீதிகளில் அலைந்து கொண்டே இருக்கிறேன்.

என் வாழ்க்கையின் விசித்திரப்புள்ளிகளை நான் இளையராஜாவின் இசை கொண்டே கோர்த்து முடிக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்கத்தா விமான நிலையத்தில் சென்னை வரும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது அலைபேசியில் ஒரு இளையராஜா பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நொடியில் என் கண் முன்னால் தெரிந்த அனைத்து காட்சிகளும் மறைந்துவிட்டன. அந்நொடியில் நான் இளமையில் வசித்த மன்னார்குடியில் இருந்தேன். மன்னார்குடியில் நான் வசித்து வந்த ஹவுசிங் யூனிட் வீட்டில் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு மழை பொழுதொன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டின் சமையலறையில் என் அம்மா சமைத்துக் கொண்டிருந்த உணவின் வாசனையைக் கூட அந்த நொடியில் நான் உணர்ந்தேன். ஒரு நுட்பமான பேரனுபவம் அது. சிறு சிறு அசைவுகளையும் கூட உணர்கிற கடந்த காலத்தை நோக்கிய விசித்திர பயணம் அது.

அந்தப் பாடல் முடிவடைந்த பிறகே நான் கல்கத்தா திரும்பினேன்.

இளையராஜாவின் பாடல்கள் பயணிப்பது என்பது திக்குத் தெரியாத காட்டில் கண் தெரியாத ஒருவன் மாட்டிக்கொண்ட திகைப்பினையும், பொங்கி பிராவகித்து பொத்துக்கொண்டு ஊற்றுகிற அருவி ஒன்றில் தலை நுழைத்து மெய் நனைத்து அடைகிற சிலிர்ப்பினையும் ஒருங்கே அடைகிற அனுபவமாக.. கால நகர்வுகளை கடந்த ஒரு பயணமாகவே நான் கருதுகிறேன்.

அவருடைய இசைக்கு எந்த பாடகரின் உதவியும் அவருக்கு தேவைப்பட்டது இல்லை. சொல்லப்போனால் வரிகள் கூட இரண்டாம் பட்சம் தான். அவர் நம் ஆன்மாவின் மொழி அறிந்து அதன் அலைவரிசைக்கு ஏற்ப ஒருங்கிணையும் வித்தைக்காரர்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில்..

காதுள்ளவன் கேட்கக் கடவன். உணர்வுள்ளவன் உருகக் கடவன். மனது உள்ளவன் மயங்கக் கடவன்..

இளையராஜாவை உணர்பவன் இந்த மூன்றையும் எளிதாக அடையக் கடவன்.

*****தனி ஒருவன்******

நீ அந்தியின்
கரைகளில்
நின்று கொண்டு 
வெளிச்சங்களை
தன்னுள்
புதைத்தவனைப்
பற்றி புறம் பேசுகிறாய்..

முதுகில் குத்தும்
கத்தி ஒன்றை
கொண்டு
உலகை
உள்ளத்தால்
வென்றவன் ஒருவனை
எளிதாக வெல்ல
முயல்கிறாய்..

உன்னால்
புனையப்படும்
பொய்மையின்
தோற்றங்களின்
எல்லைகளுக்கு
அப்பால் நிற்கிற
பேரன் பின்
ஆதிச்சுழியை
அவதூறு பேசுகிறாய்..

அவன்
ரதகஜபடைகளோடு
களத்திலே நிற்கிறான்..
நீ வெறும்
வீட்டுத் திண்ணையில்
உட்கார்ந்துக் கொண்டு
அவனை வென்று விட்டதாக
வாயை மெல்கிறாய்…

அவன் காற்றின்
அலைவரிசை கோர்த்து
புத்தம் இசையை
புவி மலர இசைப்பவன்.

நீயோ முனக கூட
அடுத்தவனை எட்டிப்
பார்த்து நகல் செய்யும்
போலிகளின் போதாமை
புலிகேசி.

நீ ஏதேனும்
ஒரு சந்தில்
4 திருடர்களோடு
அவனைக்
கொள்ளையடிக்க
குழுமிய போது…
அவன் யுகத்தின்
சரித்திரத்தை
தன் புன்னகைத்
தூரிகையால் எழுதிக்
கொண்டிருக்கிறான்..

அவன் தனித்தவன்
என்றெண்ணி
அவன் நிழலை
உன் குரைப்பினால்
சீண்ட முனைந்தப்
போது…
அவன் புலிகளின்
கூட்டத்தின் நடுவே
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கிறான்..

அவனை வெல்ல
வேண்டுமெனில்..

ஒரே ஒரு வாய்ப்பு

நீ நிகரற்ற
அவனாகத்தான்
பிறக்க வேண்டும்.

ஏனெனில்..
அவனை மிஞ்ச
அவனாகத்தான்
ஆக வேண்டும்..

Page 4 of 6

Powered by WordPress & Theme by Anders Norén