என் வாழ்வில் நேற்று மாலை தான் ( ஆகஸ்ல் 25/ 2019)அவரை முதன்முதலில் நேரில் பார்த்தேன்.

பிறந்தது முதல் இருந்த வாழ்நாள் கனவு அது.

அவரது பாடல்களைக் கேட்டிருக்கிறேன். சிலிர்த்திருக்கிறேன். தனியே அழுதிருக்கிறேன். ஒன்றுமே செய்யாமல் மௌனமாய் இருந்திருக்கிறேன்.

ஒரு இசை இப்படியெல்லாம் வேதியியல் மாற்றம் செய்யுமா .. என்றெல்லாம் வியந்திருக்கிறேன்.

என் வாழ்வினை பற்றி யாராவது கேட்டால்.. நான் இளையராஜா பாடல்களை வைத்துதான் என் வாழ்வினை ஒரு பிளாஷ்பேக் போல சொல்ல முடியும்.

இந்த பாடலை கேட்டு கொண்டு செல்லும்போதுதான் நான் பள்ளியில் சேர்ந்தேன். அந்தப் பாடல் திருவிழாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் போது..நான் விளையாடப் போக முடியாமல் என் அம்மா மடியில் படுத்து இருந்தேன். இந்தப் பாடல் ஒலிக்கும்போதுதான் என் கல்லூரிக்கு செல்ல முதன்முதலாக கிளம்பிக் கொண்டிருந்தேன். என் மகன் பிறந்த பின்னர் நான் உடனே செய்த வேலை இந்த பாடலை கேட்டது தான்.

 

 

எங்கோ தேனீர் கடையில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போது தான் அவளை சந்தித்தேன். அவளை ஒரு பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக பிரிந்து வரும் வேளையில் ஒரு பேருந்தில் இந்த பாடல்தான் ஒலித்துக் கொண்டிருந்தது. என் திருமணத்திற்கு முந்தைய தின இரவில் இந்த பாடலை கேட்டு தான் அழுது கொண்டிருந்தேன்.
என் மனைவியின் முதல் பிறந்த நாளில் இந்தப் பாடலோடுதான் அவளுக்கு வாழ்த்து சொன்னேன்.

சரிந்து விழுந்த தருணத்தில் என்னை நேசித்தவர்களோடு இணைந்து அப்பாவும் அம்மாவும் என்னை நிமிர்த்த முயன்ற கணங்களில்.. இந்தப் பாடலை தான் கேட்டுக்கொண்டு இருந்தேன்.

நள்ளிரவு களில், பயணங்களில், காலை பொழுதுகளில், மாலை மயக்கங்களில், மதிய தனிமைகளில் எப்போதும் அவரது பாடல்கள்தான் என்னோடு இருக்கின்றன.

இப்படி என்னைச் சுற்றி எங்கும் அவரது பாடல்கள்தான்.

அப்படிப்பட்ட என் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கிற அவரைத்தான் நேற்று முதன்முதலாகக் கண்டேன்.

கண்டவுடன் ஒரு கடவுளை நேரில் பார்த்த பரவசம். அது ஒரு மெய் மறந்து உலகம் மறந்து கண்கலங்கி சிலிர்த்த சூழல்.

அவரைச் சுற்றி அவராகவே போர்த்திக் கொண்ட ஆன்மீக போர்வைகளை எல்லாம் தாண்டி..

அவரைச்சுற்றி அவரின் அனுமதியோடு நிகழ்ந்த ஆச்சார்ய அரசியலை எல்லாம் தாண்டி..

நேர்மையாக சொல்வதென்றால்.. எனக்கு பிடிக்கவே பிடிக்காத எதிர் நிலைகளில் அவர் நின்றிருந்த நிலைகளை எல்லாம் தாண்டி…

உண்மையில்.. அவர் என்னை மட்டுமல்ல.. அங்கு கூடியிருந்த அனைவரையும் ஆட்கொண்டார்.

அந்த இசை தான் அவரை நோக்கி என்னை ஈர்த்தது. அதை அவர் பாகுபாடில்லாமல் ஒரு அருவி போல கொட்டித் தீர்த்தார்.

மற்றபடி அவரிடம் நான் அரசியலை எதிர்பார்த்து செல்லவில்லை. அவர் வைத்திருக்கிற அரசியலும் எனக்கு உவப்பானது இல்லை.

எது வேண்டினேனோ அது கிடைத்தது.

 

இந்த அருமையான வாய்ப்பினை எங்களுக்கு ஏற்படுத்தி தந்த நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மாநிலச் செயலாளர் அருமை நண்பர் அரிமா நாதன் Arima nathan அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. உண்மையில் அவர் செய்த உதவி அவரை எங்கள் வாழ்வின் மறக்கமுடியாத ஒரு மனிதராக மாற்றிவிட்டது. இனி நான் இளையராஜாவை பற்றி யோசிக்கும் போதெல்லாம்.. உண்மையாக
அரிமாநாதனும் நினைவுக்கு வருவார். நன்றி தலைவா.

பிறகு.

காடு மலை மேடு பள்ளம் மாடி உயரம் உச்சம் என நான் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம்.. சுமையென கருதாது வாழ்வின் சுவை என கருதி நிறைவான மகிழ்வோடும், கொண்டாட்டங்களோடும் என்னை சுமந்து செல்லும் என்னுயிர் தம்பிகளான ஆசை துரை துருவன் சாரதி உள்ளிட்ட அனைவருக்கும்.. நான் என்ன தனியே நன்றி சொல்வது..

அவர்களாலேயே நான்.

நேற்றைய தினம் மாலை போல.. ஒரு மழை பெய்த இசை மாலை இனி ஒரு முறை என் வாழ்வில் வாய்க்குமா என ஏங்க வைத்ததுதான் இளையராஜா என்ற அமிர்தத்தின் நிறை தளும்பலில் கூட நின்றாடும் போதாமை.