சமீபத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இளவரசு கதாபாத்திரம் மிக நுட்பமானது. கைலிக் கட்டிக்கொண்டு அரசு அதிகாரியிடம் தன்னை மதிக்கவில்லை என ஈகோ பார்த்து, தண்டவாளத்தில் ஒருவர் தலைவைத்து படுத்ததால் தான் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள் என்றெல்லாம் தத்துவம் பேசி, கடைசியில் வாத்தியார் கைதான செய்தி அறிந்த உடன் சட்டென “மைன்ஸ்” வேலைகளை ஆரம்பிக்கலாமா..?” எனக் கேட்கும் அந்த அமைச்சர் இளவரசு கதாபாத்திரம் தான் அக்மார்க் 100% திராவிட தலைவர்களின் தோற்றம். திரையரங்கில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தார் என்றவுடன் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் உடன்பிறப்புகள் மைன்ஸ் ஆரம்பிக்கலாமா என அதே கதாபாத்திரம் கேட்கும் போது அதை கண்டும் காணாமல் (!) இயல்பாக கடப்பது திராவிட அரசியல் ஆழமாக ஏற்படுத்தி இருக்கும் ஊழல் பிழைப்புவாத அரசியலின் உளவியல். ஊழலை இயல்பாக்கி மனிதனின் குணமாக்கி விட்டதுதான் திராவிடத்தின் சாதனை.
இந்த நுண்காட்சி வெளிப்படுத்தும் அரசியல் புரியாமல் தனக்கான அங்கீகாரமாக உபி க்கள் புளாங்கிதம் வேறு அடைவது சரியான காமெடி.
அதேபோல் விடுதலை திரைப்படத்தில் பயன்படுத்தப்படுகிற பெரியார் படம் ஒரு திருமண காட்சியில் மட்டும் காட்டப்படுகிறது. அது வாத்தியார் கதாபாத்திரத்தின் வசனங்களிலோ அல்லது அவர் படம் நெடுக பேசுகின்ற தத்துவ அரசியலிலோ எங்கும் வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் “பெண்கள் கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும்” என்ற பெரியாரின் பெண்ணுரிமை மொழிக்கு எதிராக கிராப் வெட்டிக் கொண்ட பெண் தனக்கு மதிப்புறு சுதந்திரம் தருகிற ஒரு ஆண்மகன் கிடைக்கும்போது முடியும் வளர்ப்பாள் என்கிற காட்சியின் அரசியல் தன்மைகள் தனியே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதேபோல் படத்தில் வருகிற திராவிட தொழிலாளர்கள் சங்கப்பதாகை. உண்மையில் தமிழ்த் தேசிய நக்சல் பாரிகளுக்கு என்றுமே திராவிட அரசியல் தலைவர்கள் ஆதரவாக இருந்தது இல்லை.திராவிட தத்துவத்தின் அரசியல் வடிவமான திமுக ஆட்சியில், அதன் நீட்சியாக வந்த அண்ணா திமுக ஆட்சிகளில் தான் தான் தனித்தமிழ்நாடு கேட்டுப் போராடிய தமிழ்த் தேசிய நக்சல் பாரிகள் கடுமையாக காவல்துறையால் வேட்டையாடி கொல்லப்பட்டார்கள்.
எனவே விடுதலை 2 என்ற திரைப்பட முன் வைக்கிற அரசியல் இப்போது இருக்கிற அறிவாலய அடிமைகளான கம்யூனிஸ்டுகளுக்கு கூட எதிரானது தான். புலவர் கலியபெருமாளும் தோழர் தமிழரசனும் ஒரு உன்னதமான காலத்தை உருவாக்க போராடி தங்களை இழந்தவர்கள். தமிழர் என்கின்ற இனம் ஒரு தேசிய இனம் என நிறுவுவதில் உறுதியாக நின்றவர்கள்.
இத்தனை ஆண்டு கால வரலாற்றில் தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை எந்த திராவிட அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஒத்துக்கொள்ளவில்லை என்பது மிக மிக முக்கியமான ஒரு கருத்தியல்.
ஏனெனில் திராவிடக் கருத்தியல் எப்போதும் தமிழ்/ தமிழருக்கு எதிரானது. வரலாற்றின் போக்கில் ஒரு தேசிய இனமாக உருவான தமிழரை ஒரு இனமாக வரையறுப்பதில் போலியாக ஒற்றைச் சொல்லின் மூலம் உருவாக்கப்பட்ட திராவிடத்திற்கு உள்ளார்ந்த ஆழமான எதிர்ப்பு உண்டு. எனவேதான் தமிழர் ஒரு தேசிய இனம் என ஒத்துக் கொள்வதில் திராவிட தலைமைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.
இத்தனை ஆண்டு காலத்தில் தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை சட்டமன்றத்தில் யாரும் பேசியதாக குறிப்புகள் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பல தேசிய இனங்கள்/ பல தேசங்கள் இணைந்து தான் யூனியன் ஆப் இந்தியா என்கின்ற நாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதை ஆரியத்திற்கு இணையாக திராவிடமும் மறுத்து தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை தொடர்ச்சியாக மறைத்து வருகிறது.
தங்கள் வாழ்க்கையே தமிழர் இனத்திற்காக இழந்த புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் உள்ளிட்ட எண்ணற்ற போராளிகள் நிறுவ விரும்பியது தமிழர் ஒரு தேசிய இனம் என்பதைத்தான். அதை மறுக்கிற எவரும் தமிழருக்கு எதிரானவர்களே.
அரங்கங்களைத் தாண்டி ” தமிழர் ஒரு தேசிய இனம்” என வரையறை செய்து வெகுஜன வாக்கு அரசியலில் பேசுகிற ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான். தமிழர் வரலாற்றில் வெகுஜன அரசியலில் தமிழர் ஒரு தேசிய இனம் என நிறுவுவது நாம் தமிழர் கட்சி செய்திருக்கிற மாபெரும் வரலாற்று புரட்சி.
மற்றபடி விடுதலை 2 பேசுகிற தேசிய சுய நிர்ணய உரிமை அரசியலைப் பற்றியும், அதன் நீட்சியாக வாத்தியார் கதாபாத்திரம் முன்வைக்கிற தேர்தல் அரசியல் பற்றியும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி வேலை சம்பந்தமாக கும்பகோணத்தில் புறவழிச் சாலைக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது..காரை நிறுத்திவிட்டு அலைபேசியில் யாரிடமோ நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எதிரே வந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் என்னை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருப்பது போல எனக்குத் தோன்றியது. நானும் அவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன். எங்கே என்றுதான் எனக்கு நினைவில்லை. அவர் தயங்கிவாறே அருகே வந்து “செந்தில் தானே நீங்க.. ? “எனக் கேட்டார். “மன்னார்குடி தானே..?” மறுபடியும் கேட்க என்றும் கேட்க, ஆமாம் என நான் தலையசைத்தேன். “என்னை தெரியலையா.. நான் தான்பா ராஜா” என்றார். ராஜா என்றால், நான் குழம்பிக் கொண்டிருந்த போது.. “அதான்பா மன்னார்குடி ஹவுசிங் யூனிட் ராஜா, ராக்கெட் ராஜா.. ” என சொன்னபோது நான் அப்படியே அதிர்ச்சியோடு வண்டியை விட்டு வெளியே வந்து விட்டேன்.
ஏனென்றால் ‘ராக்கெட் ராஜா’ எனது பதின் பருவத்து ஹீரோ. எங்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் GCC ( Gavaskar cricket club) என்ற ஒரு அணி இருந்தது. அண்ணன் ஸ்டீபன் தான் கேப்டன். அதில் அண்ணன் ராக்கெட் ராஜா வேகப்பந்துவீச்சாளர். கூடுதலாக கபில்தேவ் போல பேட்ஸ்மேன்.
இன்னும் எனக்கு நினைவிருக்கிறது அவர் வேகமாக ஓடிவந்து பந்தை வீசும் போது, பந்து சீறிப் பாய்கையில் .. உண்மையிலேயே அது ராக்கெட் தான்.
அண்ணன் ராக்கெட் ராஜாவும், அண்ணன் காவுக்கனியும் எங்கள் GCC அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள். முதல் இரண்டு ஓவர்கள் வீசும் போதே எதிரணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களை வந்த வேகத்தில் திருப்பி அனுப்பி விடுவார்கள். அவ்வளவு திறமையான வேகப் பந்துவீச்சாளர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் குடியிருந்த B-6 பிளாக்கிற்கு பின்னால் இருக்கின்ற மிகப்பெரிய வயல்வெளி கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.
மன்னார்குடியில் “பூவா” என்ற ஒரு அண்ணன் இருந்தார். அவர்தான் நடக்கின்ற கிரிக்கெட் போட்டியின் வர்ணையாளர். சுவாரசியமாக வர்ணனை செய்வார். ” ஹவுசிங் யூனிட் முனையை நோக்கி இதோ ராக்கெட் வருகிறது..” என்று பூவா அறிவிக்கும் போது ராஜா அண்ணன் பௌலிங் போட தயாராகி நிற்பார். நாங்கள் எல்லாம் பெரிய சத்தம் போட்டு ஆர்ப்பரிப்போம். இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
எங்களைப் பொறுத்த வரையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல. அது வாழ்வியலின் ஒரு அங்கம். நான் ஒரு நடக்க முடியாத மாற்றுத்திறனாளி என்றாலும் கூட,GCC அணி என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. குறிப்பாக அண்ணன்கள் ஸ்டீபன், ராஜா போன்றோரெல்லாம் அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க வந்த என்னை அழைத்து எனக்கு சுழற் பந்துவீச்சு கற்றுக் கொடுத்ததெல்லாம் என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. என் எதிர் பிளாக்கில் இருந்த விஜயகுமார் என்ற விஜி அண்ணன் தான் எங்கள் அணியின் விக்கெட் கீப்பர். அவர்தான் எனக்கு, என் நண்பர்கள் ராம்நாத், பாலு, சதனுக்கு கேட்ச் பிராக்டிக்ஸ் அளிப்பார். உடல் குறையை காட்டி என்னை எப்போதும் அவர்கள் ஒதுக்கியதே இல்லை.
என்னால் ஓட முடியாது எனத் தெரிந்து நடக்கும் பயிற்சி ஆட்டங்களில் என்னையும் சேர்த்துக்கொண்டு என்னை ஸ்லீப்பில் விஜி அண்ணன் நிற்க வைப்பார். அப்போது நான் நடப்பதற்கு இடது காலில் பித்தளையிலான காலிஃபர் அணிந்திருப்பேன். நான் நடக்க முடியாதவன் என்பதை அந்த வயதில் நான் உணர்ந்ததே இல்லை. ஏனெனில் அந்த அண்ணன்மார்கள் என்னை பறக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த உலகம் எவ்வளவு கருணையானது , வாழ்வின் பல தருணங்களில் என்னை காயப்படாமல் காப்பாற்றி இருக்கிறது என நெகிழ்வுடன் கருதி இன்றளவும் நான் நன்றியோடு இருப்பது எங்கள் GCC அணி அண்ணன்களை நினைத்துதான்.
ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சர்பட்டா பரம்பரை போல எங்கள் GCC அணிக்கு ஒரு பாரம்பரியம் உண்டு . பெரும்பாலும் எங்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்பத்தை சேர்ந்தவர்கள் தான் அதில் இடம்பெற முடியும். சில அபூர்வமான பிளையர்கள் வெளியே வந்தும் எங்கள் அணியில் விளையாடினார்கள்.
ஒருமுறை மன்னார்குடி நகரத்தின் உயரிய அணிக்கும், எங்களது GCC அணிக்கும் நடந்த இறுதிப் போட்டியின் போது, முன்னணி வீரர்கள் எல்லோரும் அவுட் ஆகி வெளியேறிய பிறகு, விக்கெட் கீப்பரான அண்ணன் விஜியும், பேட்ஸ்மேன் ஆன அண்ணன் ராக்கெட் ராஜாவும் களத்தில் இருந்தார்கள். கடைசி மூன்று பந்துகள். ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி. அண்ணன் விஜி விக்கெட் கீப்பர் என்பதால் தொடர்ந்து சிரமப்பட்டு கொண்டிருந்தார். எதிரணியின் வேகப்பந்துவீச்சாளர் அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்து மிரட்டிக் கொண்டிருக்கும்போது, இங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் எல்லாம் அழ ஆரம்பித்து விட்டேன். அருகில் நின்ற அணியின் கேப்டன் ஸ்டீபன் அண்ணன் ” விளையாட்டுல யாரு ஜெயிச்சா என்னடா.. நல்லா விளையாடுறவங்க ஜெயிப்பாங்க.. விடு. எப்போதும் நாமே ஜெயிக்கணும்னு நினைக்காதே..” எனச் சொல்லி என்னை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கிறார். அருகில் என் நண்பர்கள் ராம்நாத், சதன், பாலு, செந்தில் , மாரிமுத்து என பலரும் கண்கலங்கி அமர்ந்திருக்கிறார்கள். கடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளையும் அடிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் அண்ணன் விஜி திணற நாங்கள் எல்லாம் “விஜிண்ணே.. ஒரே ஒரு ரன் அடி” என்று கத்தியது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அதேபோல் மூன்றாவது பந்தில் அண்ணன் விஜி ஒரு ரன் எடுத்துக் கொண்டு ஓட, மறுபுறம் வந்த ராக்கெட் ராஜா அண்ணன் தன் அக்மார்க் ஸ்டைலில் ஸ்கொயர் கட்டில் ஒரு நான்கு அடித்து போட்டியில் வென்றது மறக்க முடியாத நினைவு.
……
1983 கிரிக்கெட்டில் இந்தியா உலகக் கோப்பை வென்ற பிறகு கிரிக்கெட் என்ற விளையாட்டு இந்திய பெருநிலத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்தது. எண்பதுகளில் ட்ரான்சிஸ்டர் ரேடியோக்கள் மூலமாக கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்கிற ஒரு புதிய தலைமுறை உருவானது. கொஞ்சம் சிரமமான ஆங்கிலம் தான். ஆனாலும் கண்டிப்பாக உற்றுக் கேட்டால் 4, 6, அவுட் போன்றவற்றை புரிந்து கொள்ளலாம். பொங்கல் விழாவின்போது பெரும்பாலும் சென்னை சேப்பாக்கத்தில் ஏதோ ஒரு நாட்டோடு இந்திய அணி கிரிக்கெட்டில் மோதும். அப்போதெல்லாம் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகள் தான். சென்னையில் கிரிக்கெட் நடக்கும் போது மட்டும் தமிழில் வர்ணனை கேட்கலாம். “வாலாஜா சாலை முனையில் இருந்து கபில்தேவ் பந்து வீச வருகிறார்..” என தொடங்கும் போது இன்பத் தேன் வந்து நம் காதுகளில் சத்தியமாக பாயும். பிறகு தொலைக்காட்சிகள் வந்து எல்லாம் மாறிப்போனது.
எண்பதுகளின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் தமிழகத்தின் எல்லா தெருக்களிலும் கிரிக்கெட் விளையாடக்கூடிய அணிகள் இருந்தன. அப்படித்தான் எங்களது GCC அணியும் மன்னார்குடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தோன்றியது. அதன் வெற்றிக்கு அங்கே குடியிருந்த ஒவ்வொரு குடும்பமும் வேண்டுவார்கள். என் அம்மா மற்றும் எதிர் வீட்டில் இருந்த திலகவதி அத்தை, அதேபோல் எதிர்பிளாக்கில் இருந்த லதா அக்கா எல்லோரும் மாடியில் நின்று மேட்ச் பார்ப்பார்கள். இங்கே அணி வெற்றி பெறும் போதெல்லாம் அவர்கள் மாடியில் இருந்து கைத்தட்டி ஆர்ப்பரிப்பது எல்லாம் ஒரு கனவு காட்சி போல இருக்கின்றன.
….
சமீபத்தில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்த “லப்பர் பந்து” பார்த்தேன். அதில் வருகின்ற “கெத்து” தினேஷ் எனக்கு பல ஹவுசிங் யூனிட் அண்ணன்களை நினைவூட்டினார். இசைஞானி இசையில்” நீ பொட்டு வைத்த தங்க குடம்..” எனப் பாட்டு ஒலிக்கும் போது தினேஷ் நடந்து வருகிற அந்தக் காட்சி எங்கள் தலைமுறையில் நாங்கள் அடிக்கடி எங்கள் கண்களால் பார்த்து சிலிர்த்த காட்சி. உண்மையில் எங்கள் அண்ணன்கள் கெத்து தினேஷ் போலத்தான் கதாநாயகர்களாக இருந்தார்கள். நாங்கள் எல்லாம் அவர்களது ரசிகர்கள்.
எங்கள் நிலங்களான மன்னார்குடி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்ட “களவாணி” திரைப்படம் மிக முக்கியமான பண்பாட்டு வாழ்வியல் ஆவணம். அதற்குப் பிறகு “லப்பர் பந்து” போல தமிழ் நிலத்தின் மிக முக்கியமான “விளையாட்டு” என்கிற ஒரு பண்பாட்டுக் கூறினை எடுத்துக்கொண்டு இவ்வளவு சுவாரசியமாக அடையாளப்படுத்திய திரைப்படம் வேறு எதுவும் இல்லை.
எளிய மனிதர்களில் மின்னக்கூடிய விளையாட்டு வீரர்கள் அந்தப் பகுதியில் கதாநாயகர்களாக இருந்தார்கள் என்பதை “லப்பர் பந்து” ஆவணப்படுத்தி இருக்கிறது. அவர்களால் Pad கட்ட முடியாது. ஒழுங்கான ஆடைகள் இருக்காது. ஆனால் அடிக்கிற அடி ஒவ்வொன்றும் இடிதான்.
குறிப்பாக கதாநாயகியாக வருகிற கெத்து தினேஷ் மனைவி கதாபாத்திரம் மிக நுட்பமாக வரையப்பட்டிருப்பது வியக்க வைக்கிறது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு மனைவியை தாயாக நேசிக்கின்ற குணம் பெருகுவதை பலரும் உணர்கிறார்கள். ஊரில் கதாநாயகனாக இருந்தாலும், வீட்டின் நான்கு சுவர்களுக்கு உள்ளாக அவன் அன்பின் அடிமை. குறிப்பாக இந்த திரைப்படத்தில் “மாமியார் -மருமகள்” இடையிலான உறவு இவ்வளவு அழகாக கலாபூர்வமாக வேறு எந்த திரைப்படத்திலும் இதுவரை காட்டப்பட்டதில்லை. அதேபோல் எப்போதும் முட்டித்திரியும் “மாமனார்-மருமகன்” உறவும் அவ்வாறுதான்.ரசனையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
படம் சாதி அரசியலுக்கான அனைத்தையும் கொண்டிருந்தாலும், எதையும் போதிக்காமல் வாழ்வின் ஓட்டத்தோடு சாதி மறுப்பியலை உளவியலாக மாற்றுகிற வித்தையை ஒரு கவிதை போல நிகழ்த்தி இருக்கிறது. உண்மையில் திரைமொழியின் அழகு இதுதான்.
திரைப்படம் என்பது ஒரு காட்சி மொழி ஊடகம். அங்கே வார்த்தைகளுக்கு வேலை இல்லை. மாறாக கலையம்ச காட்சிகளின் மூலமாக கதாபாத்திரங்கள் ஊடாக கதையை நிகழ்வாக மாற்றி சொல்வது என்பது பல பிரம்மாண்ட திரைப்படங்களில் தவறும் சவால்.
ஆனால் “லப்பர் பந்து” இதை அனாசியமாக தூக்கி போடுகிறது. ஒரு எளிய கதையின் மூலம் , எத்தனை திரை மொழி அடுக்குகளையும் (Screen Play layers) சுவாரசியமாக உருவாக்க முடியும் என்பதற்கு சமீபத்திய வெற்றிகரமான உதாரணம் “லப்பர் பந்து”. படத்தில் ஒரு காட்சி கூட தேவையற்ற காட்சி இல்லை. Editor வித்தைக்காரர். ஒளிப்பதிவும் அப்படித்தான். ஒரு திரில்லர் படம் போல ஒவ்வொரு காட்சியிலும் இருக்கை நுனியில் நம்மை அமர வைத்து அட்டகாசம் செய்து விடுகிறார்கள். இதற்கு நடுவில் சாதி மறுப்பு /பெண்ணியம்/அரசியல் என அனைத்தையும் போகிற போக்கில் சொல்லி அதற்கான தீர்வுகளையும் சொல்லி, ஆனால் எதையும் போதிக்காமல், நதியோட்டம் போல இயல்பாக கடத்துகிறார்கள்.இசை ஷான் ரோல்டன். அளவான அழகான எளிய இசை. அதுதான் சமீப காலங்களில் இல்லாதது.
இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் கெத்து தினேஷ் மனைவியாக நடித்த சுவாசிகா என்பவரின் நடிப்பு. மிரட்டி இருக்கிறார். தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் கதாநாயகனை துரத்திக் கொண்டு ஓடும் வழமை கதாநாயகி அல்ல அவர். அவர் மலையாளத்தில் நடித்த “சதுரம்” என்கின்ற ஒரு சுமாரான திரைப்படத்தை ஏற்கனவே நான் பார்த்திருக்கிறேன். அதையும், இதையும் ஒப்பிட்டால் இது அசுரப் பாய்ச்சல். ஏறக்குறைய பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த் வருவது போல இதில் சுவாசிகா வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கம் அதிர்கிறது. அன்பு பாசம் நெகிழ்ச்சி காதல் கோபம் தாய்மை கண்டிப்பு என அனைத்தையும் கலந்து கட்டி பிரித்து மேய்ந்து இருக்கிறார் சுவாசிகா.
அட்டக்கத்தி தினேஷ் என்கின்ற ஒரு அற்புதனை “கெத்து தினேசாக” “லப்பர் பந்து” மாற்றிவிட்டது. இதுவரை அவரது வாழ்க்கையில் திறக்காத பல கதவுகள் இனி திசையெல்லாம் திறக்க கூடும். அதேபோல் ஹரிஷ் கல்யாண், சஞ்சனா என யாரும் ஒரு சிறிய தவறை கூட செய்யாமல் முழுமையான ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார்கள்.
எனக்கெல்லாம் லப்பர் பந்து பார்த்துவிட்டு இரவு தூங்க முடியவில்லை . காதெல்லாம் பூவா அண்ணன் கமெண்ட்ரி பண்ணுவது போல எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. ஸ்டீபன் அண்ணன் பேட்டிங் செய்வது போலவும், ராஜா அண்ணன் ரன்னர் அப் நிற்பது போலவும் பலவிதமான காட்சிகள் நினைவில் தோன்றி கொண்டே இருந்தன.
எங்கள் தலைமுறையில் “என்றும் அன்புடன்” என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் “துள்ளித் திரிந்ததொரு காலம்” என்ற கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடல் உண்டு. அதன் பல்லவி இப்படி வரும்.
“அன்னை மடி தனில் சில நாள், அதை விடுத்தொரு சில நாள் திண்ணை வெளியினில் சில நாள், உண்ண வழியின்றி சில நாள், நட்பின் அரட்டைகள் சில நாள்,”
…. என நீளும் அந்தப் பல்லவி,
“ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள்.. பூங்கொடியே …!”
என இவ்வாறு முடியும்.
கால ஓட்டத்தைப் பற்றி ஒருவித வலியோடு “வேறு என்ன செய்ய முடியும்..” என்பதான பெருமூச்சுதான் அந்தப் பாடல்.
அது போல நம் வாழ்வும் ஏதேதோ புரியாத நம்பிக்கைகளோடு கொண்டே இருக்கிறது. நாமும் பெருமூச்சோடு அதன் ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அசாத்திய அந்த ஓட்டத்தில் எங்கோ காயம் பட்டு நாம் கலங்கி நிற்கும் போதெல்லாம், இளைப்பாறுதல் தருவது கடந்த கால நினைவுகளே..!
நம் நினைவோடையில் கடந்த காலம் ஒரு செம்பருத்தி மலராக மிதந்து கொண்டிருக்கிறது. அதைவிட அழகான மலர் உலகில் வேறு உண்டா என்ன..?!
படம் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் நினைவோடையின் செம்பருத்தி பூ ஒன்றினை தருகிறது “லப்பர் பந்து.”
அதற்காகவே படத்தை இயக்கிய தமிழரசனுக்கு பரவசத்தோடு தரலாம் பேரன்பின் பூங்கொத்து.
அடங்கா நதிப் போல ஓடிக் கொண்டிருக்கின்ற காலத்தை ஒரு மாய விசைப் புள்ளியில் தடுத்து நிறுத்துகிற வல்லமை இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டும் தான் உண்டு. ஒன்று புத்தகங்கள். மற்றொன்று திரைப்படங்கள்.
நல்ல புத்தகங்களை, நல்ல திரைப்படங்களை தேடி கண்டுபிடிப்போரை நான் கவனித்து இருக்கிறேன். எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணனை சந்திக்கும்பொழுதெல்லாம் ஏதோ ஒரு புத்தகத்தை அல்லது ஒரு திரைப்படத்தை அவர் பரிந்துரை செய்து கொண்டே இருப்பது அவரது தன்னியல்புகளில் ஒன்றாக இருப்பதை நினைத்து வியந்து இருக்கிறேன்.
அதேபோல் அண்ணன் சீமான்.
இறுகியத் தன்மை உள்ள அரசியல் தோற்றம் கொண்ட அவருக்கு இருக்கின்ற இலக்கியத் தாகமும், கலை முகமும் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்குபவை. அரசியலுக்கு அப்பாற்பட்டு எழும் உரையாடல்களில் அவர் என்னிடத்தில் புத்தகங்களைப் பற்றியும், திரைப்படங்களைப் பற்றியும் பேசுவது தான் அதிகம். அதேபோல் நல்லத் திரைப்படங்களை பரிந்துரைத்து அதை நாம் தவற விடாமல் பார்த்திருக்கிறோமா என்பதையும் உறுதி செய்துக் கொள்கிற அவரது பேரன்பு அக்கறை தனித்துவமானது.
கடந்த இரண்டு நாட்களாக அண்ணன் சீமான் அலைபேசியில் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார். ஒரு திரைப்படம். அதை நான் பார்க்க வேண்டும் என்பது அவரது ஆழமான விருப்பம். இதை அவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிற மனிதர் அல்ல. முன்பொரு முறை ஞானவேலின் ” ஜெய் பீம்” திரைப்படத்திற்கும், அதேபோல பா ரஞ்சித்தின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்திற்கும் இதே போல் அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. இந்த முறையும் அதுதான் எனக்கு நடந்தது. எப்போது எடுத்தாலும் “படத்தைப் பார்த்து விட்டாயா..” என்பதுதான் முதல் கேள்வி.
அப்படி அவர் நான் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் என பரிந்துரைத்தது இரா. சரவணன் இயக்கத்தில், வெளிவந்துள்ள “நந்தன்”.
படம் தொடக்கத்திலேயே ” இந்தக் காலத்திலும் இப்படி நடக்குமா என யாராவது நினைத்தீர்களானால், வாருங்கள் உங்களை அழைத்துச் சென்று காட்டுகிறேன்.” என்கிற அறிவிப்பிலேயே ஏதோ மிக முக்கியமான ஒன்றை படம் பேசப்போகிறது என்பதை அறிவித்து விடுகிறார் சரவணன். குறிப்பாக படத்தின் முதல் காட்சியிலேயே காட்டப்படும் செருப்புகளின் நெருக்கக் காட்சி ( Closeup Shot) காட்ட முனையும் குறியீட்டு தளங்கள் ஆழமான சிந்தனைகளை ஏற்படுத்துபவை.
சாதியைப் போல் இந்த பெருநிலத்தில் மிக ஆழமாக வேரூன்றிய ஒன்று வேறு எதுவும் இல்லை. ஒவ்வொருவர் மனதுக்குள்ளாகவும் , மரபணுவிலும் ஊடுருவி வாழ்விலும், பண்பாட்டிலும், மொழியிலும், உணவிலும் , உடையிலும் இரண்டற கலந்துவிட்ட கொடும் மனநோயாக சாதி இன்றளவும் இருக்கிறது என்பதைத்தான் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக வலியோடும், அதே சமயத்தில் பார்ப்பவரை உணர வைத்து திருத்தும் உணர்வோடும் பேசி முடிக்கின்றான் ‘நந்தன்’.
” தனக்கு கீழாக ஒருவன் இருக்க வேண்டும் என்கிற மனித உளவியலை அடிப்படையாகக் கொண்டு வர்ணாசிரம தர்மம் கட்டமைக்கப்பட்டிருப்பதால் தான் அது இத்தனை நூற்றாண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது” என்கிறார் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.
கூழ்பானை என்ற அம்பேத்குமார் என்கின்ற கதாபாத்திரத்தில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்திருக்கிற சசிக்குமார் தன் கலை வாழ்வின் மிக முக்கியமான பத்திரமாக இதை உணர்ந்திருப்பார். கதையின் நாயகியாக வரும் சுருதி பெரியசாமி கணவனின் சுயமரியாதையை காப்பாற்றும் துணையாக கண்களால் பேசி நெகிழ வைக்கிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ஒவ்வொரு அசைவிலும் சாதித் திமிர் தாண்டவமாடுவது படத்தை வலிமைப்படுத்துகிறது.
ஒரு சிறிய கதை தான். ஆனால் அது தரும் வலி மிக ஆழமானது. இந்த மண்ணின் தொன்மக்குடி மக்கள் சாதியின் பெயரால் இந்தக் காலத்திலும் அடிமையாக நடத்தப்படுவதையும், நசுக்கப்படுவதையும் நினைத்து காண்போரை காட்சிகள் மூலம் கலங்க வைக்கிறார் சரவணன். ஊராட்சித் தலைவராக சுதந்திர தினத்தில் கொடியேற்ற வரும் அம்பேத்குமார் தனது உறவினர்களுக்கு முன்னால் படுகின்ற அவமானத்தை திரைமொழியில் மிக நேர்த்தியாக நிகழ்த்தி அந்த அவமானம் ஒவ்வொருவரும் தனக்கு ஏற்பட்டதாக உணர வைப்பதில் சரவணன் வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் ஊராட்சி மன்ற தலைவர் பெயர் அறிவிப்பு பலகையில் எழுதப்படும் காட்சி. தன் கணவனின் பெயர் மீது அடிக்கப்பட்ட சாணியை தன் புடவையால் ஆங்காரத்தோடு துடைக்கின்ற சுருதியின் உடற்மொழியும், வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் மிக முக்கியமானவை.
நிறைய நுட்பமான காட்சிகள். நாற்காலியை நோக்கி நகரத் துடிக்கும் அம்பேத்குமாரை, வேலைக்கு ஏவும் கோப்புலிங்கம் சாதி வழியாக எப்படி அதிகாரம் கட்டமைக்கப்படுகிறது, கடத்தப்படுகிறது என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம். இதுதான் திரை மொழிக்கான வலிமை. நாம் எழுத்தில் பக்கம் பக்கமாக எழுதி வடிப்பதை ஒரே ஒரு எளிய காட்சி மூலம், உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்ற அதிகாரத்தின் வடிவமான நாற்காலியை ஏக்கமாக பார்க்கின்ற அம்பேத்குமாரின் விழிகள் மூலமாக உணர்த்துவது என்பது வலியின் அழகியல்.
நம்மைப் போன்ற சக மனிதனை இழிவாகப் பார்க்கின்ற சாதி உணர்ச்சியை சாகடிக்காமல் இங்கே எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. சுயசாதி பெருமிதம் என்கின்ற கொடிய மனநோயை உள்ளுக்குள்ளாக வைத்து கழுத்து அறுத்து சாகடிக்க வேண்டிய சிந்தனையை “நந்தன்” தருகிறான்.
அதேபோல் படத்தின் இறுதிக் காட்சி. இது போன்ற படங்களை முடிக்கும்போது இயக்குனர் கையில் இருக்கின்ற எல்லாவிதமான சாத்தியங்களையும் அவர் பயன்படுத்தி பார்த்திருப்பார். ஆனால் முடிவு என்பது ஏதோ ஒன்றின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதில் சரவணன் காட்டியிருக்கக் கூடிய கவனம் உண்மையில் அற்புதமானது.
இதுபோன்று படத்தில் நிறைய அற்புதத் தருணங்கள் இருக்கின்றன. படத்தின் காட்சி அமைப்புகளை, கதை ஓட்டங்களை நான் விரிவாக இதில் எழுதவில்லை. அதை ஒவ்வொரு பார்வையாளரும் பார்த்து உணர்ந்து நெகிழ்ந்து அனுபவிக்க வேண்டிய பேரனுபவம்.
படத்தில் குறைகளே இல்லையா என்கிற கேள்வி இந்த பதிவை படிக்கின்ற உங்களுக்கு எழலாம். எத்தனையோ ஆடம்பர ஆட்டங்களை, கொஞ்சமும் சமூக உணர்ச்சி இல்லாத பிரம்மாண்ட குப்பைகளை, கலை அழுக்குகளை, எல்லாம் திரைப்படங்களாக பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் ” நந்தன்” கொண்டிருக்கின்ற மிகச்சிறிய குறைகள் , இந்தக் கலை வடிவத்தின் உயர்ந்த மேன்மையான நோக்கங்களால் இல்லாமல் போய்விடுகின்றன.
நந்தன் மிக முக்கியமான ஒரு திரைப்படம். அவசியம் அனைவரும் காணுங்கள்.
அன்பு நண்பர் இயக்குனர் சரவணன் அவர்களுக்கு எனது பேரன்புத் தழுவல்கள். ஏற்கனவே இரண்டு படங்கள் அவர் எடுத்திருந்தாலும் இதுதான் அவருக்கான கதவாக நான் பார்க்கின்றேன்.
அவருக்கான ராஜபாட்டை தொடங்கி விட்டதாகவே நான் உணர்கிறேன்.
எப்போதும் சிறப்பானதை எனக்கு பரிந்துரைக்கும் என் அண்ணன் சீமானுக்கு அன்பு முத்தங்கள்.
என்னை சக மனிதனாக பார்க்கும் விழிகளைக் காணும் போது தான் நான் நிம்மதி அடைகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். சாதி என்கின்ற கொடும் பேய் சாத்தான் போல அவரை துரத்தி துரத்தி வேட்டையாடிய ரத்தப்பக்கங்களை அவரது சுயசரிதையில் படிக்கும் போது எவராலும் கண்ணீர் சிந்தாமல் கடக்க முடியாது.
ஏனெனில் சாதி பன்னெடுங்காலமாக இந்த நிலத்தில் உணர்வாக/பண்பாடாக/செயலாக /வழிபாடாக/ உணவாக/ உடையாக .. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவி உள்ள அநீதியாகும்.
அதைத்தான் தனது தீவிர திரை மொழி மூலம் மாமன்னன் ஆக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.
மிக மிக சாதாரண “மண்”ணாக இருந்தவர் எப்படி மாமன்னனாக மாறினார் என்பதுதான் இத்திரைப்படத்தின் ஒரு வரி சுருக்கம்.
தனது முந்தைய திரைப்படங்களைப் போல சாதியை மறைமுகப் பொருளாக வைத்து உரையாடல்களை நிகழ்த்தாமல் நேரடியாக சாதியின் நுட்பமான உணர்ச்சி படிமங்களை காட்சி மொழியாக்கி இருக்கின்ற இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணனில் தனக்கு சாத்தியப்பட்ட தனக்கே உரிய திரை மொழி வசீகரத்தை மாமன்னன் திரைப்படத்தில் இழந்துவிட்டது போல ஒரு உணர்ச்சி.
சாதி முரண்பாடுகளைப் பற்றிய ஒரு உரையாடலை இரண்டு தேனீர் கோப்பைகள் ஊடாக தொடங்குவோம் என்றது பரியேறும் பெருமாள். சாதியை பற்றி மிக நுட்பமாக பேசும் அந்தத் திரைப்படத்தில் அதி உச்ச அழகியல் எது என்றால் சாதி என்ற சொல் அந்த திரைப்படத்தில் எங்கும் பயன்படுத்தப்படாமல் இருந்தது தான்.
கர்ணனும் அப்படித்தான். அடுக்கடுக்கான படிமங்களால் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்கள் சிந்திக்க நிறைய ஊடு பொருள்களை புதைத்து வைத்து சாதி உணர்ச்சியின் கோரத்தை ரத்தமும் சதையுமாக நம்மை அனுபவிக்க வைத்திருப்பார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
அதே வித்தை மாமன்னனிலும் சாத்தியமாகி இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது. அதில் என்ன வருத்தம் என்றால் மாமன்னன் போன்ற சாதி மறுப்பு உளவியலை திரை மொழியாக கொண்ட திரைப்படங்கள் கலை நேர்த்தியில் மிளிர வேண்டும் என்கின்ற விருப்பம் தானே ஒழிய வேறொன்றுமில்லை.
ஆனாலும் வடிவேல் என்கின்ற ஒரு உச்ச கலைஞன் தன் கலை வாழ்வின் சிகரத்தை தொட்டு நம்மை நோக்கி திரும்பிப் பார்த்த அனுபவத்தை மாமன்னன் நமக்கு ஏற்படுத்துகிறான்.
உதயநிதி ஸ்டாலினுக்கு இதுதான் கடைசி படம் என்றார்கள். ஆனால் இதுதான் அவருக்கு முதல் படம். உணர்வுகளை முகத்தில் உறைய வைப்பதற்கான வாய்ப்புகளை இந்த திரைப்படம் தான் அவருக்கு வழங்கியிருக்கிறது.
படத்தை இந்த இருவருக்கும் இணையாக தாங்குவது பகத் பாசில் என்கின்ற நடிப்பு அரக்கன் தான். மூவரும் இருக்கும் காட்சியில் பகத் பாசில் மிக எளிதாக வடிவேலு மற்றும் உதயநிதியை ஓவர் டேக் செய்து திரையை ஆதிக்கம் செய்வது என்பது அவரது கலை மேதமை.
மற்றபடி இந்தத் திரைப்படம் பேசியிருக்கும் அரசியல் வழக்கமான மாரி செல்வராஜ் திரைப்படங்களில் தென்படாத பிரச்சார நெடி சொல்ல வருகிற மிக முக்கியமான கருத்தினை பலவீனப்படுத்துகிறது.
காட்சி அமைப்புகளில் வலிந்து திணிக்கப்பட்டுள்ள திமுக சார்பு நிலை ,புத்தர் சிலைகள் ,அம்பேத்கர் ஓவியம் ,பன்றி குட்டி டாட்டூ இவை எல்லாம் மாமன்னனுக்கு எந்த வலிமையும் சேர்க்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதி சற்றே நீண்டு ஏதாவது நடத்தி திரைப்படத்தை முடியுங்கள் என பார்வையாளர்கள் நினைக்கும் அளவிற்கு திரை மொழி சீரமைப்பு இல்லை.
திமுகவின் கருப்பு சிவப்பு சாயலில் வடிவமைக்கப்பட்ட கொடியை கொண்ட அரசியல் கட்சி கட்சியின் தலைவராக வருகின்ற மலையாள நடிகர் லால் பேசுகிற சமூக நீதி வசனங்கள் ஒருபோதும் திமுகவிற்கு பொருந்தாது என்பதுதான் கடந்த கால வரலாறு.
திராவிட இயக்கங்கள் சமூக நீதி அரசியலில் வெற்றி பெற்றிருந்தால் இன்று வரை ஒரு மாமன்னன் திரைப்படம் எடுப்பதற்கான தேவை இந்த மண்ணில் எழுந்திருக்காது. திராவிட இயக்கங்கள் தனது வரலாற்று வழிப் பாதையில் செய்து கொண்ட அப்பட்டமான சமரசங்கள், பிழைப்புவாதங்கள் போன்றவைகளால் தான் இன்னும் இங்கே சாதிய இருப்பு வலிமையாக கட்டமைக்கப்பட்டு எழுந்து நிற்கிறது.
எனவே சமூக நீதி அரசியல் என்றால் அது திமுக தான் என மாமன்னன் திரைப்படம் கட்டமைக்கின்ற போலிபிம்பம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதிக்காக மிகச் செயற்கையாக கட்டமைக்கப்பட்டது என்பதை எவ்வித உணர்ச்சியும் கடத்தாத அரசியல் பேசும் காட்சிகள் காட்டி விடுகின்றன.
வேட்பாளர் தொடங்கி மாவட்ட செயலாளர் ,ஒன்றியச்செயலாளர்,வட்டச் செயலாளர் வரை சாதி பார்த்து மிகச்சரியாக ஆதிக்க சாதிக்கு பொறுப்பளிக்கின்ற திராவிட இயக்க அரசியல்தான் மாமன்னன் மற்றும் அதிவீரன் போன்றவர்கள் அனுபவிக்கின்ற அத்தனை கொடுமைகளுக்கும் மூல காரணம் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜின் கலை ஆன்மா உணர்ந்திருக்கும் தான். ஆனாலும் அதை அவரால் ‘செஞ்சோற்றுக் கடனுக்காக’ வெளிப்படையாக பேச முடியவில்லை.
இதையெல்லாம் தாண்டி மாமன்னனில் சில அற்புத தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த மலைமுகட்டில் வடிவேலு தனது இயலாமையை எண்ணி கைப் பிசைந்து கண்கலங்கி நிற்கின்ற அந்தக் காட்சி இதுவரை தமிழ் திரைப்பட வரலாற்றில் உணர்வுபூர்வமாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் அதி உச்சமானது. அதேபோல் ஒவ்வொரு முறையும் ஆபத்துகளை உள்ளுணர்வால் உதயநிதி உணர்கிற தருணங்கள். தந்தை மகனுக்கு இடையே இருக்கின்ற நேசமிக்க கணங்கள் போன்ற காட்சிகளில் இயக்குனர் மாரி செல்வராஜின் திறமை பளிச்சிடுகிறது.
சாதியின் நுட்பமான புள்ளிகளை வலிமையாக பேச வந்த திரைப்படம் இடைவேளைக்குப் பிறகு அரசியல் அதிகாரப் போட்டி தேர்தல் என்றெல்லாம் திசை மாறி அலைகழிவது இயக்குனர் மாரி செல்வராஜ் கதை அமைப்பில் கொண்டிருந்த தடுமாற்றங்களை அப்பட்டமாக காட்டுகிறது.
மிக மிக முக்கியமான ஒரு திரைப்படமாக மாமன்னன் இருக்கும் என எதிர்பார்த்து செல்பவர்களை தவிர மற்றவர்களுக்கு மாமன்னன் ஒரு புதுவிதமான திரைப்பட அனுபவத்தை தரும் தான். ஆனால் ஒரு இயக்குனராக தன் படைப்பாக்க உச்சத்தின் அனுபவத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் அனுபவித்தாரா என்பது சந்தேகமே.
சமீபத்தில் வெளியாகி இருக்கின்ற விடுதலை திரைப்படத்தைப் பற்றி பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடப்பதை சமூக வலைதளங்கள் மூலமாக அறிகிறோம். குறிப்பாக இது தமிழ்த்தேசிய அரசியலை பேசுகிறது என்று ஒரு கருத்தை தமிழ் தேசியர்கள் முன் வைக்கும் போது திராவிடக்கூடாரத்தில் இருந்தும் ,முற்போக்கு வகையறாவிடம் இருந்தும் கடுமையான வசவுகளும், பதட்டம் நிறைந்த சொல்லாடல்களும் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
விடுதலை திரைப்படம் அந்த வகையில் மாபெரும் வெற்றி அடைந்து விட்டது என்பதை அது அடைகிற எதிர்வினைகள் மூலம் தெளிவாக புரிகிறது.
…..
திரைப்படக்கலை பற்றி அறிந்தோர், பல் மொழி பேசுகிற திரைப்படங்களை தொடர்ச்சியாக கவனித்து பார்த்து ரசித்து வருவோர் என பலரும் அறிந்த விஷயம் யாதெனில் , திரைப்படங்கள் கற்பனையாக கதை ஒன்றை உருவாக்கி அதை திரை மொழியாக உருவாக்கி திரைப்படமாக மாற்றுவது இது ஒரு வகை. அசலான மனிதர்களைப் பற்றி அப்படியே நகலெடுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சமும் மாற்றாமல் திரை மொழியாக்கி திரைப்படமாக மாற்றுவது. தான் நாம் ஆவண படங்களாக பார்த்து வருகிறோம் .
இந்த இரண்டு வகைகளையும் தாண்டி மூன்றாவது வகையாக அசலான வரலாற்று நிகழ்வுகளில் இருந்து தாக்கம் பெற்று அதன் மூலமாக புனைவு வெளி ஒன்றை உருவாக்கி வரலாற்றையும் /கற்பனையும் கலந்த கதைகளை திரை மொழியாக்கி திரைப்படங்களாக மாற்றுவது.
எடுத்துக்காட்டாக கீழ்வெண்மணி பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய “ராமையாவின் குடிசை”. இது அச்சு அசலான ஆவணப்படம்.
இந்த கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கம் பெற்று பல திரைப்படங்களின் காட்சிகள் உருவாகி இருக்கின்றன. 90களில் வெளியான சரத்குமார் பார்த்திபன் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமான “அரவிந்தன்”திரைப்படம், இதே வெற்றிமாறன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்”திரைப்படம் போன்றவை கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கத்தினால் உருவான காட்சி அமைப்புகளை கொண்டவை .இது போன்ற பல நிகழ்வுகளை அந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் உருவான திரைப்படங்களை படங்களை நாம் உதாரணமாக காட்டிக் கொண்டே போகலாம்.
அதுபோன்ற அசலான வரலாற்று மாந்தர்களையும் கற்பனைக்கே உரிய சுதந்திரத்துடன் தாண்டி மறக்கப்பட்ட புரட்சியாளர்களைப் பற்றி இத்தலைமுறையினர் தேடி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கின்ற ஆழமான சமூக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் “விடுதலை”.
வரலாற்றில் நடந்த எந்த நிகழ்வின் ஊடாக எவரும் தாக்கம் அடைந்து விடக்கூடாது என சொல்வதற்கு இங்கே யாருக்கும் உரிமை இல்லை. தாக்கம் அடைந்தவர் தனது புனைவு மற்றும் கற்பனை மூலமாக ஒரு திரை மொழி அமைக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட உரிமை. அதை இங்கே யாரும் கேள்வி கேட்க முடியாது.
விடுதலை திரைப்படத்தின் தொடக்கத்திலேயே இக்கதை மூலம் காலம் /கதை /மாந்தர் அனைத்தும் கற்பனையானது என அறிவிப்பு வெளியிட்டு விட்டே மிக கவனத்துடன் விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஊடாக வரும் செய்திகளை தனக்கு சார்ந்ததாக காட்டிக் கொள்ளும் எவரும் இந்த அறிவிப்பினை கண்டும் காணாதது போல் நடித்து எந்த நபரும் சுயமாக சிந்திக்கவே கூடாது என மூர்க்கத்துடன் இந்த திரைப்படத்தின் மீதாக எதிர்வினை ஆற்றி வரும் சில உரையாடல்கள் உண்மையிலேயே அலுப்பு ஊட்டுகின்றன.
குறிப்பாக திராவிடம் சார்ந்து கொந்தளிப்போர் திடீரென இடதுசாரி பக்கம் எகிறி குதித்து அவர்கள் சார்பாக இவர்கள் பேசுவது போல பாவனை செய்து திரைப்படம் தகவல் பிழை/கருத்துப் பிழை கொண்டது என செய்திகள் பரப்பி வருவதை தமிழ்த்தேசியம் சார்ந்து எவ்வித உரையாடலும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதான அவர்களது நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
இதே போல இடதுசாரிகள் பக்கத்தில் இருந்தும் சோளகர் தொட்டி எழுதிய வழக்கறிஞர் பாலமுருகன் தரப்பிலிருந்தும் வருகின்ற விமர்சனப் பார்வைகளை திராவிடத் தரப்பு கூச்சல்கள் போல அணுக கூடாது என்றாலும் படைப்பாளியின் நியாயப் பாடுகளை எடுத்து வைப்பது நமது கடமை.
விடுதலை திரைப்படம் இரண்டு கூர்மையான கருத்தாக்கங்களை முன்வைக்கிறது. ஒன்று காவல்துறை அடக்குமுறைகள் மீதான காத்திரமான காட்சி மொழியாக்கம், மற்றொன்று தமிழ் தேசிய பார்வையுடன் கூடிய மனிதநேய புரட்சியாளர்கள் பற்றிய பிம்ப உருவாக்கம். இந்த இரண்டிலும் விடுதலை திரைப்படம் முழு வெற்றி அடைந்திருக்கிறது.
குறிப்பாக தமிழ் தேசிய புரட்சிக் களத்தில் ஆயுதம் தாங்கி தமிழர் நிலத்தில் தாக்கம் செலுத்திய புரட்சியாளர்களான மாமனிதர் புலவர் கலியபெருமாள் மற்றும் மாபெரும் தமிழ்த் தேசிய புரட்சியாளர் தமிழரசன் ஆகியோர் பற்றிய உரையாடல்களை தமிழ் தேசிய கருத்தாக்கம் கூர்மை அடைந்திருக்கிற இந்த காலகட்டத்தில் மீண்டும் இந்த திரைப்படம் உருவாக்கி இருக்கிறது. எளிய திரைப்பட பார்வையாளன் கூட யார் கலியபெருமாள் , யார் தமிழரசன் என வாசிக்க புத்தகங்கள் தேடுவதும் பார்க்க காணொளிகள் தேடுவதும் இத்திரைப்படத்தின் மூலமாக கைகூடி இருக்கிறது. திரைப்படம் என்கிற வலிமையான சாதனத்தின் வெற்றி அதுதான்.
இதைத்தான் இயக்குனர் வெற்றிமாறன் தனது நோக்கமாக கொண்டிருக்கக் கூடும் என்பதை அவர் முன்வைத்த திரைமொழியே நமக்கு தெரிவிக்கிறது. எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு அவர் நடிகர்களை தேர்ந்தெடுத்தது முதல், உரையாடல்களில் காட்சிகளில் ஆங்காங்கே தென்படும் குறியீடுகள் மூலமாக இந்த திரைப்படத்தை தமிழ்த் தேசியம் சார்ந்த உரையாடல்களை எழுப்புகிற ஒரு கருவியாக வெற்றிமாறன் மாற்றி இருக்கிறார். வள்ளலாரை வணங்குகிற கதையின் நாயகன் திரையில் இதுதான் முதன் முதல் என நான் கருதுகிறேன்.
திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமாக வருகின்ற பெருமாள் வாத்தியார் தனது இரண்டாம் பாகத்தில் மொழிக்கும் மரபிற்கும் கொடுக்கின்ற முக்கியத்துவம் சார்ந்த வசனங்கள் இந்தத் திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் என்பது புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக இருவர் திரைப்படத்தில் அண்ணா மற்றும் பெரியார் ஆகிய இருவரையும் ஒருவராக காட்டிய நாசர் கதாபாத்திரம் போல விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
புலவர் கலியபெருமாள் வாழ்க்கை வரலாற்றை பற்றி நாம் அறிந்து கொள்ள இன்று நமக்கு கையில் இருக்கின்ற ஒரே ஒரு மகத்தான ஆதாரம் அவரது சுய வரலாற்று நூலான “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்கின்ற நூல் மட்டுமே. அந்த நூல் பற்றி திராவிட தரப்பிலிருந்து யாருமே எந்தக் கருத்தையும் குறிப்பிடாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நூல் திராவிட ஆட்சியாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி ஆட்சிமுறை குறித்தான கடுமையான விமர்சனங்களை, அந்தக்கால திமுக ஆட்சியின் ஒடுக்கு முறைகளை அந்த நூல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. பல பக்கங்களில் அதற்கான செய்திகள் அந்த நூலில் இருக்கின்றன அது பற்றி நாம் தனியே ஒரு கட்டுரையில் காண்போம்.
60களின் இறுதியில் எழுந்த வசந்தத்தின் இடி முழக்கம் என வழங்கப்பட்ட நக்சல் பாரி இயக்கத்தின் தலைவர் சாரு மஜும்தார் அவர்களின் அழைப்பின் பேரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளை விட்டு புரட்சி செய்ய கிராமங்களை நோக்கி விரைந்த போது தான் கோவை பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த துடிப்பான கல்லூரி மாணவரான தமிழரசனும் அழித்தொழிப்பு வேலைகளுக்காக கிராமங்களை நோக்கி நகர்கிறார். இவரோடு புலவர் கலியபெருமாள் சேர்ந்தது தமிழ்இன வரலாற்றில் முக்கியமான ஒரு இணைவு ஆகும். மேற்கண்ட இருவரும் மக்கள் யுத்த குழுவோடு முரண்பட்டு தேசிய இன விடுதலை சார்ந்து இயங்கிய போது தான் தமிழ்நாடு விடுதலைப் படை உருவானது.
எனவே தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மை குறித்தும் சுய நிர்ணய உரிமை குறித்தும் மேடைகளை தாண்டி களத்தில் செயல்பட முனைந்தவர்கள் புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் போன்றோர். இவர்களை எந்த வகையில் திராவிட ஆட்சியாளர்களான கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஒடுக்கினார்கள் என்பது தான் திராவிடத்தரப்பிலிருந்து மறைக்க முயல்கிற வரலாறு.
புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகியோர் தமிழ் தேசிய உணர்வின் மூலங்கள் என்பதை இத்தனை ஆண்டு காலம் திராவிடத்தரப்பு வரலாற்று திரிபுகளை வைத்துக்கொண்டு மண்மூடி மறைத்து வைத்திருந்ததைத்தான் விடுதலை திரைப்படம் மீண்டும் நினைவூட்டி இளைஞர்களை சிந்திக்க வைக்கிறது. அதனால்தான் திராவிடத்தரப்பிலிருந்து கடுமையான பதட்டக் கருத்துக்களை விடுதலை திரைப்படம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
மற்றொன்று வீரப்பன் தேடுதலின் போது மலைவாழ் ஆதிகுடிகளை காவல்துறை எவ்வாறு கொடுமைப்படுத்தியது என்பதையும் இந்த திரைப்படம் பயன்படுத்தி இருக்கிறது என பலரும் உரிமை கொண்டாடுவது உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது. நடந்தவை அனைத்தும் வரலாறாய் உறைந்து கிடக்கின்றன. இயக்குனர் வெற்றிமாறன் உறைந்துப் போன காலத்தின் நெருப்பு பொறியில் இருந்து தனக்கான கங்கை பற்ற வைத்துக் கொண்டு விட்டார். அது அவரது படைப்பாக்க சுதந்திரம்தான். வரலாறும், பதிக்கப்பட வேண்டிய அடக்குமுறைகளும் யாருக்கும் சொந்தமானது இல்லை. இன்னும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவது என்பது படைப்பாளியின் படைப்பாக்க வரம்பினை நாம் நிர்ணயிக்கிற ஆபத்தை உண்டாக்கிவிடும்.
இவையெல்லாம் தாண்டி இந்த விடுதலை திரைப்படம் ஒரு மகத்தான உரையாடல் வெளியை தோற்றுவித்திருக்கிறது என்பதுதான் நடந்திருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் நடவடிக்கை. இந்தத் திரைப்படம் இரண்டாவது பாகம் வெளிவரும்போது வேறு வடிவம் கொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது சற்று ஏறக்குறைய சில காட்சிகள் மூலமாகவே இந்த படம் பேசுகிற அரசியல் குறித்து யார் யார் பதட்டம் அடைகிறார்கள் என்பதை அவர்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கவனத்தையும் இந்த படத்தின் திரை மொழி நமக்கு உருவாக்கித் தந்துள்ளது.
இது போன்ற உரையாடல்களை ஏற்படுத்துகிற திரைப்படத்தை படைக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒரு படைப்பாளனின் கடமை. அந்த கடமையை வெற்றிமாறன் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார்.
“ஒரு படைப்பிற்குப் பிறகு அந்த படைப்பாளன் இறந்து விடுகிறான் ” என்கின்ற புகழ்பெற்ற மேற்கோளுக்கு விடுதலை திரைப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் விதிவிலக்கு அல்ல. இனி வெளிச்சம் படவேண்டியது வெற்றிமாறன் மீது அல்ல விடுதலை திரைப்படத்தின் மீது
அதன்படி நமக்கு முன்னால் விடுதலை திரைப்படம் இருக்கிறது .
அது செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
வெற்றிமாறன் மட்டுமல்ல தமிழ் தேசியர்களான நாமும் மகிழ்ச்சியோடு அதை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் .
திரை உலகை கனவுத் தொழிற்சாலை என வரையறுத்தார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா . நம் கண்முன்னால் விரிகிற திரை நமக்கும் , நம் கனவிற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியை அழிக்க முயன்று கொண்டே இருக்கிறது. இந்த முயற்சியை தான் நாம் திரைப்படம் என்கிறோம். ஒரு நல்ல திரைக்கதை “ஹைக்கூ” வடிவம் போன்றது என்கிறார் காட்பாதர் , அபாகலிஸ் நெள போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ. அவரே சொல்கிறார் , “ஒரு கலை வடிவத்தின் உச்சத்தை அடைவதற்காக துணிச்சலான முடிவுகளை எடுங்கள். அது வெல்லலாம், தோற்கலாம்.. ஆனால் துணிச்சலான முடிவுகள் தான் எப்போதும் கலை வடிவத்தின் உச்சங்களை வெளிப்படுத்துகின்றன”.
ஒரு திரைப்படத்தின் ஆன்மாவாக அதன் திரைக்கதை விளங்குகிறது. சிறந்த கதையாக அறியப்பட்டவைகள் திரைக்கதையாக வேதியியல் மாற்றம் அடையும்போது பல சூழ்நிலைகளில் தோல்வி அடைந்திருக்கின்றன. நல்ல கதைகளுக்கு எப்போதுமே நல்ல திரைக்கதைகள் தேவைப்படுகின்றன. ஆனால் நல்ல திரைக்கதைகளுக்கு ஓரளவு போதுமான வழக்கமான கதை இருந்தால் வென்று விடலாம். அவ்வாறாகத்தான் மாநாடு வென்றிருக்கிறது.
ஒரு திரைப்படத்தை அறிவியலாக புரிந்து கொள்வதும், கலை மொழியில் அறிந்து கொள்வதும் வெவ்வேறானது. திரையரங்கில் அமர்ந்திருக்கும் ஒரு எளிய பார்வையாளன் திரையில் விரிகிற காட்சியோடு ஒன்றுபட்டு தானும் அதில் ஒரு பகுதியாக உணர தலைப்படும் போது தான் கலையின் அழகியல் வெளிப்படுகிறது. ஒரு திரைப்படம் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பார்வையாளனின் சகலவிதமான நினைவுகளிலிருந்து அவனை திசை திருப்பி , தான் விவரிக்கும் கதையில் அவனை ஒன்ற வைத்து , அவனது கால ஓட்டத்தை மெலிதாக அவன் மறக்க வைக்கிற அந்த உணர்வுப் புள்ளியை தான் தனது வெற்றியாக கருதுகிறது.
அந்த கால ஓட்டத்தை தான் ஒரு கதைக் கருவாகக் கொண்டு மாநாடு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவருடைய முந்தைய திரைப்படங்கள் வணிக ரீதியிலான அனைத்து சமரசங்களுக்கும் உட்பட்டு , வெகு மக்களுக்கான தமிழ்சினிமாவின் சகலவிதமான இலக்கணங்களுக்கு உட்பட்டவை தான். அவர் இயக்கிய முதல் படமான சென்னை 28 (2007) தெருவில் நடக்கும் கிரிக்கெட் பந்தயத்தை அடிப்படையாக கொண்டது. மாபெரும் திறமை உள்ள விளையாட்டு வீரர்களை விதந்தோதும் படங்களுக்கு மாற்றாக தெருவோரம் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை பற்றிய அத்திரைப்படத்தின் எளிய வகையிலான திரைக்கதை அனைவரையும் கவர்ந்தது. தெரிந்தோ தெரியாமலோ வெங்கட்பிரபு தான் கட்டமைத்த நண்பர்கள், கேளிக்கைகள், விளையாட்டுகள், காதல், கடத்தல் இவற்றில் எழுகின்ற துரோகங்கள், வழக்கமான கதாநாயகத்தனம் போன்ற குறிப்பிட்ட வகையிலான சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் சில ரசனை மிகுந்த தந்திரங்களை அவரால் செய்ய முடிந்தது. அவரது உச்சபட்ச வணிக வெற்றியை கொடுத்த மங்காத்தா திரைப்படம் கூட இவ்வாறானதே. வழக்கமான நன்மை/தீமை இடையிலான யுத்தமாக ஒரு திரைப்படத்தை வடிவமைக்காமல், ஒரு திரைப்படத்தில் அனைவரும் கெட்டவர்களாக இருந்து, யார் இதில் அதிகம் கெட்டவர் என்கின்ற போட்டி நடத்தி, அந்தப் போட்டியையும் மக்களை ரசிக்க செய்து அதிகம் தீயவர் எவரோ, எவர் அதிகம் வில்லத்தனம் செய்கிறாரோ அவர்தான் கதாநாயகன் என வழமையான கோடுகளில் இருந்து மாற்றி வரைந்தது மங்காத்தாவின் திரைக்கதை அமைப்பு. முதல் முறையாக “வெங்கட்பிரபு அரசியல்”( A Venkat Prabu Politics) என தலைப்பிடப்பட்டு மாநாடு என்கின்ற திரைப்படத்தை அவர் அறிவித்தபோது நிச்சயமாக இது தீவிரமான அரசியல் திரைப்படமாக இருக்காது என அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தவர்கள் கண்டிப்பாக கணித்து இருப்பார்கள். அந்தக் கணிப்பு சரியானது தான். மாநாடு அரசியல் படமல்ல. அரசியலைப் பற்றிய படமும் அல்ல.
நழுவி ஓடும் கால ஓட்டத்தின் இடுக்குகளில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் சிம்பு மற்றும் வில்லன் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவர் விளையாடும் பரமபத கதையே மாநாடு. எல்லோரையும் விட இந்த திரைப்படம் நடிகர் சிலம்பரசனுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் சமீப காலத்தில் தன் மீது எழுந்திருந்த எல்லா விமர்சனங்களுக்கும் அவர் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தார். அவருக்கு ஒரு வெற்றி தேவையாக இருந்தது. இந்த இரண்டில் அவர் மீது எழுந்து இருந்த எல்லா விமர்சனங்களுக்கும் இத்திரைப்படத்தின் மூலம் அவர் பதில் சொல்லிவிட்டாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவரது இரண்டாம் தேவையான படத்தின் வெற்றி அவருக்கு கிடைத்துவிட்டது.
அரசியல் என்ற சொல்லை பயன் படுத்தி விட்டதால் கதாநாயகன் ஒரு இஸ்லாமியனாக உருவாக்க பட்டிருப்பதை தாண்டி , இஸ்லாமியர்கள் என்பதாலேயே அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்கின்ற செய்தி இந்த திரைப்படத்தின் மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிற ஆறுதல் நமக்கு இருந்தாலும் அது வலிமையாக சொல்லப்பட்டிருக்கலாம் என்பதும் ஒரு மத பெரும்பான்மையினர் வசிக்கும் நாட்டில் மதச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை பற்றி இத்திரைப்படம் இன்னும் விரிவாகப் பேசி இருக்கலாம் என்பது ஒரு குறையே. “Time Loop” பற்றி ஏற்கனவே பல ஆங்கிலத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்த ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் என்னவென்று சிந்தித்தால்”காலச்சுழி” என்பது சரியாக இருக்கும் என்றே கருதுகிறேன். இந்தக் கருத்தோடு காலத்தின் முன்னாலும் பின்னாலும் பயணிக்கிற ‘டைம் மிஷின்’ விவாகரங்களை பொருத்திப் பார்த்துக் கொண்டால் இன்னும் இந்த விஷயம் புரியும்.
புத்திசாலித்தனமாக மாநாடு திரைப்படத்திலேயே” Time loop” திரைப்படங்கள் குறித்த அறிமுகங்களை கதாநாயகனே கொடுத்து விடுவதால் அந்த திரைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று என பார்வையாளர்களை இயக்குனர் நம்ப வைத்து விடுகிறார். தமிழிலும் ஏற்கனவே இதுபோன்ற முயற்சிகள் நடந்துள்ளன. மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவா இயக்கிய 12 B( 2001) இதுபோன்ற திரைப்பட வகைமைகளுக்கு தமிழில் நமக்கு கிடைக்கின்ற ஒரு முன்னோடி திரைப்படம். அதேபோல் சூர்யா நடித்து விக்ரம் கே குமார் இயக்கிய 24 (2016), அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளிவந்த கேம் ஓவர் (2019) சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கன்னியும் 3 களவாணிகளும் (2014) போன்ற சில படங்களும் இதே போன்று கால நழுவலின் கண்ணியில் சிக்கிக்கொண்ட நிகழ் மனிதர்களின் கதைகள் தான். டைம் மெஷின் பற்றிய திரைப்படங்களை தனி பட்டியலாக வே கூறலாம்.
படத்தில் எதிர்மறை கதாபாத்திரமாக வருகிற ஒய் ஜி மகேந்திரன் தனது வசனத்தில் போகிற போக்கில் கிறிஸ்டோபர் நோலனின் “டெனட்” ( Tenet) திரைப்படத்தை குறிப்பிடுவதும் படம் குறித்த புரிதலை பார்வையாளருக்கு ஏற்படுத்தும் முயற்சி தான்.
இவ்வளவு முன் தயாரிப்புகளை சொல்லியும் பார்வையாளர்களுக்கு “Time Loop” பற்றி புரிகிறதோ புரியவில்லையோ, ஆனால் திரைக்கதை வடிவமைப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு செய்திருக்கிற திறமையான “எளிமை” இந்தத் திரைப்படத்தின் மூல கருத்தினை புரிந்துகொள்ளாத எளிய பார்வையாளர்களுக்கு கூட , திரைக்கதையின் சுவாரஸ்யத்தை சென்று சேர்த்துவிடுகிறது. அதற்காகவே வழக்கமான தமிழ் திரைப்படங்களுக்கு உரிய கதாநாயகன் -வில்லன் மோதலாக இந்த திரைப்படத்தை வடிவமைத்துக் கொண்டது இயக்குனரின் புத்திசாலித்தனம். இந்த வழமையான சட்டகத்திற்குள் Time Loop சற்றே குழப்பமான வடிவத்தை பொருத்தி , அதற்கு இந்திய திரைப்பட பார்வையாளனுக்கு தேவைப்படும் புராணீக நியாயம் சேர்ப்பதற்காக காலபைரவர் கதையையும் இணைத்து இயக்குனர் வெங்கட்பிரபு விவரிக்க முயன்றிருக்கிறார்.
இந்த முயற்சிகள் படம் பார்ப்பவர்களை சிந்திக்க வைப்பதற்கு முன் ,எஸ் ஜே சூர்யா வின் அசாத்திய உடல்மொழியோடு கூடிய தவிப்பிலும்,” தலைவரே தலைவரே..” என அவர் புலம்பும் புலம்பலிலும், இத்திரைப்படம் பார்வையாளனுக்கு வெகு சுவாரசியமாக மாறிவிடுகிறது. அந்த வகையில் எஸ் ஜே சூர்யா தான் இந்தப் படத்தின் மாபெரும் வலிமை.
படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் படத்தின் படத்தொகுப்பு. படத்தொகுப்பாளர் பிரவீனுக்கு இது நூறாவது படம் என்பதனால் தன்னுடைய பங்களிப்பு தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக உழைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். காட்பாதர் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளர் என அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருது வாங்கிய “வால்டர் முர்ச்” சிறந்த படத்தொகுப்பிற்கு 1. உணர்ச்சி 2.கதை 3. ரிதம் 4. கண் பார்வையை தொடர்தல் 5. திரையின் இருபரிமாண இடம் 6. முப்பரிமாண வெளி என ஆறு விதிகளை வகுக்கிறார் ( மாண்டேஜ் -தமிழில் தீஷா, பேசாமொழி பதிப்பகம் வெளியிடு). இந்த விதிகளில் ஒன்று பிசகினாலும் திரைப்படம் தான் தெரிவிக்க வந்த மூல கருத்திற்கு அப்பால் விலகிச் சென்றுவிடும் எனவும் அவர் எச்சரிக்கிறார். இந்த விதிகளை மாநாடு திரைப்படத்தின் படத்தொகுப்பில் பொருத்திப் பார்த்தால் ஏறக்குறைய பொருந்திப் போவது ஆச்சரியம்தான்.
மாநாடு திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரவீன் தனது கடந்த 99 திரைப்படங்கள் வழங்கிய அனுபவத்தினை வைத்து எது பார்வையாளர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதில் வெற்றி கண்டுள்ளார். படத்தின் இன்னொரு பலம் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை. மற்றபடி காட்சிக்கு காட்சி வேறுபடும் கதாநாயகன் சிம்புவின் உடல்வாகு படத்தின் போக்கினை பாதிக்கிறது. வேக வேகமாக நகரும் திரைக்கதையில் குறிப்பிட்ட சில காட்சிகளே மீண்டும் மீண்டும் வருவதால் பார்வையாளர்கள் களைப்படைந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு முறையும் சில புதிய விஷயங்களை சேர்த்து இணைத்து வழங்கி இருப்பது படத்திற்கு பலம் என்றாலும், அது ஒவ்வொரு முறையும் நடக்கும் போது கொஞ்சம் அயர்ச்சியாக இருக்கிறது. ஒரு திரைக்கதையாக இந்தப் படத்தை இயக்குனர் விவரிக்கும்போது அதை புரிந்து கொண்டு தயாரிக்கும் திரை அறிவு கண்டிப்பாக திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு அவசியம் தேவை. “மிக மிக அவசரம்”(2019) என்கின்ற மிக முக்கியமான ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்கிய சுரேஷ் காமாட்சி இந்தத் திரைக்கதையின் அடிப்படையை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு தயாரித்திருக்கிறார். நீண்ட காலமாக படம் தயாரிப்பு நிலையிலேயே இருந்தது பல காட்சிகளில் தெரிந்தாலும், படத்தின் திரைக்கதையின் போக்கு அதை முறியடிக்கிறது.
படம் வெளிவருவதற்கு முன்பாக வழக்கம்போல் தடைகள் ஏற்பட்டன. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்கின்ற முறையில் பணம் போட்டு ஒரு படைப்பை உருவாக்கி வைத்துக்கொண்டு அதை சரியாக மக்களின் பார்வைக்கு கொண்டு போய் சேர்ப்பது என்பது மிக மிக சவாலான ஒரு விஷயம். அந்த சவாலில் திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெற்றி பெற்றிருக்கிறார். வழமையான கதையில் புதுமையான திருப்பங்களோடு கூடிய, விறுவிறுப்பான திரைக்கதையால் மாநாட்டிற்கு கூட்டம் கூடுகிறது.
அந்தவகையில் மாநாடு தன் வழக்கமான திரைக்கதையின் போக்கில் வலிந்து பொருத்திக்கொண்ட “கால விசித்திரத்தால்” தமிழில் கவனிக்கத்தக்க திரைப்படமாக மாறியிருப்பது ஒரு வெற்றிக்காக காத்து நின்ற இயக்குனர் வெங்கட்பிரபுவிற்கும், நடிகர் சிலம்பரசனுக்கும் மகிழ்ச்சியை அளித்து இருக்கக்கூடும்.
வரலாற்றின் பக்கங்கள் பெரும்பாலும் பேரரசர்களின் பெருமித கதைகளால் நிரம்பி வழிகின்றன. மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், ராஜ பேரிகைகளும், அந்தப்புர அழகிகளும், புகழ்ச்சி வர்ணனைகளும் நிரம்பி இருக்கிற வரலாற்றின் ஏடுகளில் எளிய மனிதர்களுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. இந்திய நிலத்தில் மக்களின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
ஆனாலும் தலைமுறை தலைமுறைகளாக மக்களிடையே பிறந்து அவர்களுக்காக போராடி, மாமனிதனாக திகழ்ந்து, பெருமைமிக்க திரு உருவாக மாறி இருக்கின்ற பழைய எளிய மனிதர்களின் கதை.. வாய்மொழிப் பாடல்களாக,தெருக் கூத்து நாடகங்களாக, கதை சொல்லிகளின் கதைகளாக காலந்தோறும் கடத்தப்படுவதை நாம் அறிந்திருக்கிறோம். இதுபோன்ற கதைகளும், கால நதியின் பயணத்தில் எதிர்ப்படும் அனுபவங்களுமே புனைவிலக்கியதிற்கான கதவுகளாக திகழ்கின்றன.
இலக்கியம் என்பது என்ன.. அது மனிதர்கள் அடைந்த வாதைகளின் வசீகர விவரிப்பு தானே.. என்கிறார் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் தாஸ்தாவெஸ்கி. மனித வாழ்வில் இழப்புகளைப் பற்றி பேசுவதற்கும், வரிகளைப் பற்றி பேசுவதற்கும் இலக்கியத்தை விட சிறந்த வழி இருக்கிறதா என்ன.. இலக்கியம் ஒரு கண்ணாடியாக மனிதவாழ்வின் பாடுகளை பிரதிபலிக்கிறது. கலையின் நோக்கமும் அதுதான். தெருக்கூத்து விலிருந்து தொடங்கி திரைக்கலை வரைக்குமான பல்வேறு நிகழ் கலைகள் சகலவிதமான உணர்ச்சிகளுக்கும் ஆட் படுகின்ற மனிதவாழ்வின் சாரத்தை தான் மூலமாகக் கொண்டிருக்கின்றன.
எனவேதான் திரைப்படத்திற்கும் இலக்கியத்திற்கும் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. பல இலக்கிய வடிவங்கள் உலக திரைப்படங்களாக எடுக்கப்பட்டு புகழ் அடைந்திருக்கின்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் பல மொழிகளில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு இருக்கின்றன. உலகளாவிய அளவில் ஏதேனும் ஒரு இலக்கியப் பிரதியை அல்லது ஏதேனும் நாவலை அல்லது யாரேனும் எழுத்தாளர் எழுதிய கதையை மூலமாக வைத்து திரைப்படம் எடுப்பதென்பது மிக மிக இயல்பான ஒன்று.
ஒரு இலக்கியப் பிரதி திரைப்படம் ஆவது தமிழ் திரை உலகிற்கும் கூட புதிதல்ல. புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற குறுநாவலை இயக்குனர் மகேந்திரன் உதிரிப்பூக்கள் என்ற புகழ்பெற்ற திரைப்படமாக உருவாக்கினார். ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978), , சில நேரங்களில் சில மனிதர்கள்(1977), உன்னைப்போல் ஒருவன்(1965), யாருக்காக அழுதான்(1966) போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. நீல பத்மநாபனின் தலைமுறைகள் மகிழ்ச்சி என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய விக்ரம்,ஒரே ரத்தம் (நாடோடித்தென்றல்), போன்ற கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.
அண்மைக்காலங்களில் மிகச்சிறந்த தமிழின் நவீன இலக்கிய உலகின் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளையும் வசனங்களையும் மூலமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் எழுத்தாளர்களுக்கும் திரை உலகிற்கும் உள்ள உறவு மிக நெருக்கமானது.
எளிய மனிதர்களின் வாதைகளை, உணர்ச்சிகள் கொந்தளிக்கும் அபூர்வ தருணங்களை தன் எழுத்து மூலமாக 50 வருட காலமாக தமிழ் இலக்கிய உலகில் பதிவு செய்து வருகிற மிக முக்கியமான எழுத்தாளர் பூமணி அவர்கள்.
அவர் எழுதிய வெக்கை என்ற நாவல் தான் புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக வெளிவந்திருக்கிறது.
நாற்பதாண்டுகளுக்கு முன் வந்த சுமார் 160 பக்கங்களுக்கு மிகாத ஒரு குறுநாவலை திரைப்படமாக உருவாக்க முனைந்த இயக்குனர் வெற்றிமாறனின் துணிச்சலுக்கு உண்மையில் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து தான் ஆகவேண்டும்.
நூல்வடிவில் வெளிவந்த வெக்கை என்கின்ற குறு நாவலின் கதை மிக எளிமையானது. தனது அண்ணனை பகையின் காரணமாக கொலை செய்த உள்ளூர் பெரிய மனிதரை பதின்ம வயது கொண்ட சிறு இளைஞன் கொலைசெய்து பழித்தீர்க்கிறான். அந்தக் கொலையை அந்த இளைஞனின் தந்தையும் அவனது குடும்பமும் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதுதான் கதை. அந்த ஊர்ப் பெரிய மனிதனின் வயலுக்கு மிக அருகே இருக்கிற சிறு துண்டு நிலத்தை கொடுக்க மறுக்கிற அந்த எளிய குடும்பத்தின் மூத்த வாரிசை கொடூரமாக கொலைசெய்து அந்த சிறு குடும்பத்தின் எளிய வாழ்வை அழித்து முடிக்கிறது பண்ணையார்த் தனத்தின் பேராசை. குடும்பத்தின் மையப்புள்ளியாக இருந்த வனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த குடும்பம் தவிக்கிறது. நிம்மதியற்ற இரவுகள். உறக்கமற்ற பொழுதுகள். இரவு பகலாக பகைமை ஒரு ஆழ்ந்த பசியாக அந்த குடும்பத்தை வருத்துகிறது. பகை முடித்து பழி தீர்க்க அனைவரும் ஒரு தருணத்திற்காக காத்திருக்க.. அந்த சிறிய இளைஞன் முந்திக்கொண்டு தன் அண்ணனின் உயிர் பறித்தவனை கொலைசெய்து பழி தீர்க்கிறான். இதைத்தான் அப்படியே வைக்காமல் திரைமொழியில் சமூக சீர்திருத்த காட்சிகளோடு கூடிய பதிவுகளை வைத்து கூடுதலான கதை சேர்க்கை அம்சத்துடன் இத்திரைப்படத்தை வெற்றிமாறன் உருவாக்கியிருக்கிறார்.
வழக்கமாக பூமணி நாவல்களில் காணப்படும் அதே உணர்ச்சிப் படிமங்கள் இந்த நாவலிலும் நாம் காணலாம். நெல்லை வட்டார வழக்குகள் மிகுந்திருந்தாலும் பூமணியின் எழுத்துக்கள் சமூக உணர்ச்சி கொண்டவை.
வெக்கை நாவலை பொறுத்தவரையில் ஆழ் நெஞ்சுக்குள் அறுக்கும் பகைமை எப்படி பழித் தீர்த்து பசியாற்றி கொள்கிறது என்பதைதான் பூமணி மிக நுட்பமாக எழுதி இருப்பார்.
எழுத்து வடிவில் வாசிப்பு அனுபவத்தில் நாம் கண்டடைந்து வியந்த பூமணியின் நுட்பத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக திரையில் பார்த்த போதும் கண்டடைந்தது தான் இப்படத்திற்கான வெற்றி.
நாவலை அப்படியே கதையாக்காமல் தந்தை கதாபாத்திரத்திற்கு கீழ் வெண்மணி மற்றும் பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டங்கள் ஆகிய சம்பவங்களை முன்வைத்து ஒரு பிளாஷ்பேக் வைத்திருப்பதும், எண்பதுகளில் நடைபெறுகிற கதையில் தென்படுகிற சாதிப் படிநிலையின் நுண்ணரசியல் காட்சிகள் அசுரன் திரைப்படத்தை அரசியல் அசுரனாக காட்டுகிறது.
இத் திரைப்படத்தின் முத்தாய்ப்பு அதன் இறுதி காட்சி. பகைமை. அதைத்தொடர்ந்த இருபக்கமும் நிகழ்ந்த கொலைகள் என தொடர்கின்ற போது.. ஒரே மொழி பேசுறோம்.. ஒரே நிலத்தில் வாழ்கிறோம்.. இனியும் இது தொடரக்கூடாது என இன ஓர்மை பேசுகிற அந்த இறுதிக் காட்சி தான் வெற்றிமாறன் அசுரன் திரைப்படம் மூலம் நிகழ்த்த விரும்பும் அரசியல்.
ஒரு எளிய குடும்பத்தை தாங்குகின்ற தந்தை எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பான் என்பதை நுட்பமாக அசுரன் விவரிக்கிறது. தனது இளைய மகன் அடிபட்டு விழும் போதெல்லாம் தாக்கவரும் கழுகுவிடமிருந்து தனது குஞ்சினை காப்பாற்ற போர்க்குணம் கொண்டு போராடும் தாய்க்கோழி போல உக்கிர பார்வையோடு தனுஷ் தோன்றும் போதெல்லாம்.. திரையரங்கம் அதிர்கிறது .
வரலாற்றுத் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியலை தாழ்த்தப்பட்டவர்களே தான் முன்னெடுக்க வேண்டும் எனவும்.. அவர்களின் கலையை, இலக்கியத்தை, திரைப்படத்தை அவர்கள்தான் சரியாக, நேர்மையாக இருக்க முடியும் எனவும் இருந்த அனைத்து சமன்பாடுகளையும் வெற்றிமாறன் தனது உச்சபட்ச கலை வெளிபாட்டால் கலைத்துப் போட்டு இருக்கிறார். சாதி ஏற்றத்தாழ்வு பார்த்து செருப்பு போடக்கூடாது என்றவனை செருப்பாலயே அடித்து கட்டிப் போடுகிற அந்த கம்பீரக் காட்சி சாதிக்கு எதிராக வெற்றிமாறன் உபயோகப்படுத்தி இருக்கிற மாபெரும் ஆயுதம். ஒரு தந்தையின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படமொன்றில் சாதி உணர்வுக்கான சாட்டையடி காட்சிகளை வெறும் பிரச்சாரமாக துருத்தாமல் பொருத்தமாக பொறுத்தி இருப்பதுதான் வெற்றிமாறனின் சாதனை.
தனுஷ் மஞ்சு வாரியர் பசுபதி பிரகாஷ் ராஜ் , சிவசாமியின் மகனாக நடித்து இருக்கிற அந்த இரண்டு இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு வாழ்நாள் சாதனையாக அமைய எடுக்கிற ஒரு திரைப்படத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்கின்ற உள்ளார்ந்த வேட்கையில் அவர்கள் நடித்திருப்பது நமக்குப் புரிகிறது.
ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக எடுக்கப்படும்போது பிழைகள் நேருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதற்கு மிகச்சரியான உதாரணம் தி ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல். வாசிக்கும்போது மாபெரும் வாசிப்பனுபவத்தை தருகிற அந்த நாவல் ஞானராஜசேகரன் இயக்கி திரைப்படமாக காணும்போது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இத்தனைக்கும் இளையராஜா அந்த திரைப்படத்தில் மிக அற்புதமான இசையை வழங்கியிருந்தார்.
அதுபோன்ற பிழைகள், விடுதல்கள் எதுவும் அசுரனுக்கு நேரவில்லை. கதை நடக்கும் களத்தையும், காலகட்டத்தையும் மிக கவனமாக சித்தரித்த விதம் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கதாநாயனாக சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற தனுஷ் சிறுசிறு முகபாவங்களில் கூட கவனம் செலுத்தி திரைப்படத்திற்கு நேர்மை செய்திருக்கிறார். இசை ஜீ.வி பிரகாஷ். இதுபோன்ற ஒரு காலகட்டத்தை விவரிக்கின்ற திரைப்படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிக சவாலான ஒன்று. அந்த சவாலை மிக அற்புதமாக கையாண்டிருக்கிற ஜீ.வி பிரகாஷுக்கு இத்திரைப்படம் அவர் திரை வாழ்க்கையில் ஒரு பூச்செண்டு.
இயக்குனர் வெற்றிமாறனின் நிரந்தர ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் என்று வலுவான அணியினர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி மாபெரும் அசுரத்தனம் காட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை தயாரிக்கவே ஒரு துணிச்சல் தேவையாக இருக்கிறது. அதை மிகச்சரியாக கலைப்புலி தாணுு சாத்திய ப்படுத்திருக்கிறார்.இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் அண்ணன் ஜெகதீச பாண்டியன் பணியாற்றி இருப்பது நமக்கெல்லாம் கூடுதல் மகிழ்ச்சி.
ஊருக்குள் ஆயிரத்தெட்டு சாதிகள்.. தலைமுழுக ஒரே ஆறு.. என்பதான அண்ணன் அறிவுமதியின் கவிதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
அதைத்தான் தனது அசுரன் திரைப்படம் மூலமாக மிக அழுத்தமாக வெற்றிமாறன் வெற்றிகரமாக கூறியுள்ளார்.
அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்த்து கொண்டாட வேண்டிய சமூக செய்திகளை உள்ளடக்கிய சிறந்த திரைப்படமாக அசுரனை இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட அவரது குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள்.
அவர்களது கடும் உழைப்பிற்கு காட்சிக்கு காட்சி திரையரங்குகளில் கைதட்டல்களே சாட்சி.
ஆல்பர்ட் ஹிட்சாக் திரைப்படங்களைப் பார்த்திருப்பவர்கள் ஒரு சம்பவத்தை ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி திரைப்படம் முடியும் போது அதை தொடங்கிய புள்ளியிலிருந்து முற்றிலுமாக வேறுபடுத்தி வேறொரு புள்ளியில் முடிக்கின்ற யுக்தி குறித்து அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கக்கூடும். மனித உளவியலுக்கேயுரிய இயல்பாக இருக்கின்ற இந்த முரணை மூலதனமாகக் கொண்டுதான் சஸ்பென்ஸ் திரில்லர் என்ற வகையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழில் இதுபோன்ற பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. எனக்குத் தெரிந்து தமிழில் வெளிவந்த சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் அதே கண்கள் (1967).
ஆனால் நவீனகால சினிமா அறிவியலுடன் நேரடியாக தொடர்புடைய காரணியாக மாறி இருப்பதால் திரைக்கதைகள் கடுமையான உழைப்பை கோரி வருகின்றன.
செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பது, ஹேக் செய்வது, மனிதனை கட்டுப்படுத்தும் அறிவியலை மனிதன் தன் அறிவால் கட்டுப்படுத்துவது ..போன்ற பல யுத்திகளை தனது திரைக்கதையில் பயன்படுத்தி பார்வையாளர்களை கவர இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
அப்படி ஒரு முயற்சிதான் இமைக்கா நொடிகள். உண்மையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இம் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகின்ற திரைப்படம். திரைக்கதையின் சுவாரசியத்தால் அந்த மூன்று மணி நேரத்தை மிக எளிதாக இயக்குனர் கடக்க வைத்திருக்கிறார். இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு விறுவிறுப்பு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். வெகு நாட்களுக்குப் பிறகு திரை அரங்கம் நிரம்பி வழிகிற காட்சி இமைக்கா நொடிகளில் தான் நான் காண நேர்ந்தது.
சமூகத்தில் உயர்வான பொருளாதார வசதியோடு இருக்கின்ற ஹை க்ளாஸ் குடும்பத்தின் வாரிசுகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் எல்லா பெற்றோர்களிடமும் 2 கோடி கேட்டு மிரட்டி வாங்கிக்கொண்டு கொலையும் செய்து விடுகிறான். அடுக்கடுக்காக நிகழும் இந்த கொலையை விசாரிக்கும் சிபிஐ அதிகாரியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் உச்சநட்சத்திரம் நயன்தாரா. இந்தப் படம் அவருக்கானது. ஏறக்குறைய அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் அவரது தம்பியான அதர்வா. இந்த இருவரையும் தாண்டி படம் முழுக்க ஆக்கிரமிப்பது வில்லனாக வருகின்ற புகழ்பெற்ற இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப். படத்தில் இருக்கின்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. புகழ்பெற்ற நடிகர் முரளியின் மகன் அதர்வா இப்படத்தில் தன்னை மிகவும் மெருகேற்றி இருப்பது ஆச்சரியமான ஒன்று. வில்லன் விடுக்கிற சவால்களை கதையின் நாயகி எதிர்கொண்டு சமாளிக்க முயல்கிறார். பலமுறை அதில் தோற்கிறார். வில்லனுக்கும் நயன்தாராவுக்கும் நடக்கிற அந்த கழுதைப்புலி -சிங்கம் உரையாடல் மிக சுவாரசியமாக இருந்தது. சின்ன சின்ன அசைவுகளிலும் வில்லன் அனுராக் காஷ்யப் மிரட்டியிருக்கிறார் . நயன்தாரா தமிழ்நாட்டின் ஏஞ்சலினா ஜூலி. அதை நிரூபித்தும் இருக்கிறார். குறிப்பாக அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான உறவில் நெகிழ்ந்து உருகுவது அழகாக இருக்கிறது. ஏறக்குறைய அனைவருமே சரிசமமான பங்கு இருப்பது போன்ற திரைக்கதை வடிவமைப்பு இயக்குனரின் திறமை.
படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள். ஆனாலும் அனுராக் காஷ்யப், நயன்தாரா ,அதர்வா ஆகியோர் தங்களது மேம்பட்ட திறமையால் இமைக்கா நொடிகளை இமைக்காமல் பார்க்க வைக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் இரவு நேர காட்சிகளில் தான் யார் என காட்டியிருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இரண்டு பாடல்களில் தெரிகிறார். வேகமெடுத்து ஓடும் திரைக்கதையால் படத்தின் குறைகள் எதுவும் அதிகம் உறுத்தாமல் கவனித்துக் கொண்டது இயக்குனரின் திறமையே.. பாராட்டுக்கள் அஜய்.
இப்படத்தின் தயாரிப்பில் என் தம்பிகள் அருண்குமாரும் அரவிந்தும் பங்கு பெற்றிருக்கிறார்கள். அருமைக்குரிய சகோதரர் விஜய் சார் இப்படத்தினை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். படம் வெற்றியடைந்து விட்டது. புன்னகை தவழ இருக்கிற அந்த முகங்களை காண விரைவில் சென்னைக்கு செல்ல வேண்டும்.
இமைக்கா நொடிகள் குடும்பத்துடன் ஒரு மாலையை பொழுதுபோக்காக , விறுவிறுப்பாக கழிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கின்ற திரைப்படம் .
கடந்த சில வருடங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி தயாரித்து “வ-குவார்ட்டர்,கட்டிங்” என்ற திரைப்படம் வந்த போது அதன் தலைப்பு சார்ந்து, உள்ளடக்கம் சார்ந்து கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டன. மதுக்குடி ஒரு பொழுதுப் போக்கு என்கிற நிலை மாறி, மதுக்குடி ஒரு தீவிர நோயாக உருமாறிக் கொண்டிருக்கிற இச்சமூகத்தில் தான் மதுக்குடியை கொண்டாட்டத்தின் வடிவமாக, உணர்ச்சியின் வடிகாலாக , காட்டி நியாயப்படுத்தும் திரைப்படங்கள் வெளியாகின்றன. அத்திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த வா.ச.ஒ.ப ( ஆங்கிலத்தில் வி.எஸ்.ஓ.பியாம்- மதுபான வகையொன்றின் பெயர். )
காதலிப்பது,குடிப்பது மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்யும் கதாநாயகன், அவன் வெறுப்பேற்ற, அவன் காதலுக்கு உதவ அவனைப் போன்ற ஒரு நண்பன், இவர்களை நேசிக்க எந்த தார்மீக காரணமும் இல்லை என்பது புரிந்தும் காதலிக்கும் இவர்களை போன்ற பொறுப்பற்ற கதாநாயகிகள் , இவர்களை சார்ந்த உப கதாபாத்திரங்கள் என வைத்துக்கொண்டு, கதை என்கிற முக்கிய கருப்பொருள் இல்லாமல், எவ்வித உண்மைத்தன்மை இல்லாமல் திரையில் எது சொன்னாலும், எது காட்டினாலும் மக்கள் சிரித்து விடுவார்கள் என்கிற மகத்தான (?) நம்பிக்கைகளோடு தயாரிக்கப்படும் பல நூறு திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த வா.ச.ஒ.ப. வழக்கமான இயக்குனர் ராஜேஷின் அதே கதை. அதே குடி.
இது நடிகர் ஆர்யாவின் 25 வது திரைப்படம் என்ற அறிவிப்போடு படம் தொடங்குகிறது. தனது திரைவாழ்வின் முக்கியமான படமொன்றுக்கு ஆர்யா இது போன்ற கதையை தேர்வு செய்தது ஆச்சர்யமே. படம் முழுக்க பரவிக்கிடக்கும் மதுபானம் அருந்துகிற காட்சிகள் பார்வையாளர்களை முகம்சுளிக்க வைக்கிறது. மதுவிலக்கிற்கு ஆதரவான போராட்டக்குரல்கள் எழுந்திருக்கிற இக்காலக்கட்டத்தில் இத்திரைப்படம் வெளிவந்திருப்பது ஒரு நகைமுரண். தமிழகத்து இளைஞர்கள் என்றாலே எப்போதும் மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு ஏதோ ஒரு பொண்ணை காதலிப்பதற்காக வீதிவீதியாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கின்ற கருத்தை வலியுறுத்துகிற பல படங்கள் வரிசையில் இத்திரைப்படமும் இடம்பெறுகிறது. படத்தில் பெரிதாக கதை ஒன்றுமில்லை. சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த வாசு என்கிற சந்தானமும், சரவணன் என்கிற ஆர்யாவும் மிகநெருங்கிய நண்பர்கள். சந்தானத்திற்கு திருமணம் ஏற்பாடாகிறது. அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான பானுவிடம் தன் நண்பன் மீது கொண்ட அதீத அன்பாலும், அக்கறையாலும் ஒரு நேர்முகத்தேர்வு(?) நடத்துகிறார். ஆர்யாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மனம் வெறுத்துப்போன பானு தன் கணவன் சந்தானத்திடம், ‘உன் நண்பன் ஆர்யாவை கைவிட்டு வந்தால்தான் நமக்கு முதலிரவு’ என்று நிபந்தனை(?) வைக்கிறார். சந்தானமும் தனது நண்பன் ஆர்யாவும் தன்னைப்போலவே காதல் திருமணம் செய்துகொண்டால் நட்பு இயல்பாகவே ஒருகட்டத்தில் அறுந்து விடும் என்று கருதி, நண்பன் காதலிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறார். ஆர்யா, தமன்னாவை காதலிக்க அதுவும் பல்வேறு குழப்பங்களில் தடைபட்டுப்போக இறுதியில் வாசுவும், சரவணனும் ஒன்றாகவே இணைந்தார்களா? வாசுவுக்கு தனது மனைவியோடு முதலிரவு நடந்ததா? சரவணன் தனது காதலியோடு சேர்ந்தாரா? என்கின்ற கேள்விகளுக்கான விடைகளோடு திரைமொழி (?) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க பல நட்சத்திரங்கள் தோன்றி பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள். கவுரவ வேடத்தில்,படத்தின் இறுதிக்காட்சியில் காவல்துறை அதிகாரியாக வரும் விசாலும் இதைத்தான் செய்கிறார். இப்படத்திற்கென பெரிதான இசையோ,ஒளிப்பதிவு மேதமையை காட்டும் காட்சிகளோ தேவை இல்லை என்பதை இயக்குனர் முடிவு செய்து விட்ட பிறகு ..இடையில் நாம் யார்..? படத்திற்கு கதையே வேண்டாமென முடிவு எடுத்தவராயிற்றே அவர்…
இன்றைய தமிழ் திரைப்படங்களின் திரைமொழி விவரிப்பு என்பது வெகுவாக மாறியிருக்கிறது. இளம் இயக்குனர்கள் பலர் முன் வந்து நம்பிக்கை அளிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் ஜிகர்தண்டா,காக்கா முட்டை, சூதுகவ்வும் போன்ற பல்வேறு சோதனை முயற்சிகள் தமிழ்த்திரைப்படத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமகாலத்தில் தமிழ்த்திரைப்பட உலகம் போலவே மலையாளத் திரைப்பட உலகமும், இந்தி திரைப்பட உலகமும் பல்வேறு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை வெளியிட்டு வருகின்றன. பொதுவாக வெகுசன திரைப்பட ரசிகனின் ரசனை என்பது சமீபகாலத்தில் பெரும் மாற்றமடைந்திருக்கிறது. சமூகம் சார்ந்த, ரசனை சார்ந்த திரைப்படங்கள் கவனிக்கப்படும் இச்சூழலில் ‘வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ போன்ற திரைப்படங்கள் உண்மையாகவே திரைப்பட ரசனைக்கும், திரைக்கலைக்கும் ஏதாவது முன்னேற்றத்தை அளிக்கின்றனவா? என்பது குறித்து நாம் திவிரமாக சிந்தித்துதான் ஆக வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் பார்க்கின்ற, ரசிக்கின்ற ஊடகமாக திரைப்படம் இருக்கின்றது. திரையில் தோன்றும் கதாநாயகனை தனக்கு முன்மாதிரியாக கொண்டு வாழும் பல கோடி இளைஞர்களைக் கொண்ட சமூகமாக தமிழ்ச்சமூகம் விளங்குகிறது. எனவே, இயல்பாகவே தமிழ்த்திரையில் தோன்றுகின்ற கதாநாயகர்களுக்கு ஒரு சமூக பொறுப்புணர்ச்சி தேவையாக இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஏதோ குடித்துவிட்டு பெண்கள் பின் சுற்றுவதையே தமிழ் இளைஞர்கள் வேலையாகக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொதுக்கருத்தை இத்திரைப்படம் நிறுவ முயற்சித்திருப்பது உண்மையாகவே வருத்தமளிக்கிறது. குடிப்பது ஒரு குற்றமல்ல, அது சமூக இயல்பு என தனது திரைமொழியின் மூலம் இயக்குனர் நிறுவ விரும்புவது கண்டிப்பாக ஆபத்தானதே. மேலும் பெண்கள் ஆண்களை காதலிக்கதான் படைக்கப்பட்டவர்கள் என்பது போல இன்றளவும் நினைத்துக்கொண்டும், அதை திரைப்படமாக தயாரித்துக்கொண்டும் இருப்பது பிற்போக்குத்தனமானவை. திரைப்படங்கள் மூலம் பல்வேறு சமூகக்கருத்துகளைப் பரப்பிய நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற புரட்சியாளர்கள் இருந்த திரைப்படத்துறையில் நாமும் இருக்கிறோம் என்ற உணர்வு ஆர்யாவுக்கும், இயக்குனர் ராஜேசுக்கும் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். ஆனால், இதனையெல்லாம் கவலைகொள்ளாமல் சந்தானத்தின் இடைவிடாத நகைச்சுவைகளை முக்கியக் காரணியாகக் கொண்டு எந்த அடிப்படையும், வலுவும் இல்லாத கதையை வைத்துக்கொண்டு படம் முழுக்க மதுபானம் அருந்துகிற காட்சிகளை, அதுசார்ந்த உரையாடல்களைப் பொருத்திக்கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பது உண்மையாகவே தமிழ்த்திரைப்பட ரசிகனின் மனோபாவத்தை பெரிதும் பாதிக்கிற நடவடிக்கையாக நாம் கருதலாம். திரைப்படம் என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஊடகம்தானே? இதில் எதற்கு கருத்துக்கள்? என்று கேட்போர்க்கு, எது மகிழ்ச்சி…என்கிற சிந்தனை வயப்படுத்தும் வினாவை எழுப்ப கடமைப்பட்டவர்கள் நாம் என்பதை மறக்கக்கூடாது.
எனவே, திரைப்படம், எழுத்து, இலக்கியம், நுண்கலைகள் என கலைவடிங்களில் பங்குபெற்று உழைப்போர்க்கு கொஞ்சமாவது சமூக பொறுப்புணர்ச்சி தேவை என்பதைத்தான் ‘வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. திரையரங்க வாசலில் ஒரு சாதாரண பார்வையாளன் உதிர்த்த கருத்தொன்று எனக்கு இந்நேரம் நினைவுக்கு வருகிறது.’ வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்பதற்கு பதிலாக வாசுவும் சரவணனும், ஒண்ணா குடிச்சவங்க என்றே பெயர் வைத்திருக்கலாம்.
சம கால திரைப்படங்களில் வணிகப் படங்கள்-கலையம்சம் பொருந்திய படங்கள் என்ற இடைவெளியை தேடும் யாரும் மிகப் பெரிய ஆச்சர்யங்களுக்கு உள்ளாகாமல் இருக்க இயலாது. ஏனெனில் அந்த இடைவெளி மிக நுட்பமானவைகளாக சம கால திரைப்படங்கள் மாற்றி இருக்கின்றன. திரைப்படத்திற்கு கதை எழுதுவதே ஒரு திரைப்படமாக மாறி விட்ட சூழலில் பார்வையாளனின் ரசனைகளும் சட்டகங்களுக்குள் பொருத்த இயலா கணக்குகளோடு மாறி வருகின்றன. இந்த படம் ஓடும்-ஓடாது என்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாத சூழலில் அச்சறுத்தும் பேயும்,பிசாசும் நகைச்சுவை கதா பாத்திரங்களாக, கதாநாயகியாக மாறி விட்ட ஒரு காலக் கட்டத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் இசை வெளிவந்துள்ளது.
கதாபாத்திரங்களுக்கிடையிலான உளவியல் சிக்கல்களை திரைமொழியாக வடிப்பதில் எஸ்.ஜே.சூர்யா திறமையானவர். அவரது முந்தைய படங்களான வாலி,குஷி,நியூ,அ..ஆ என அனைத்துப்படங்களும் கதாபாத்திரங்கள் எதிர்க்கொள்ளும் உளவியல் முரண்களைப் பற்றிதான் பேசுகின்றன. அவ்வகையில் இசையும் ஒரே துறையில் திறமைப் படைத்த இரு பெரும் தனி மனிதர்களுக்கு இடையிலான போட்டி,பொறாமை,வஞ்சகம், சூழ்ச்சி போன்ற உளவியல் முரண்களைப் பற்றி பேசுகின்றன.
எஸ்.ஜே.சூர்யாவின் திரைமொழி சற்றே வித்தியாசமானவை. அதிகமான Close-up காட்சிகள், நீண்ட நேர உரையாடல்கள், கவர்ச்சி ததும்பும் காட்சியமைப்புகள் என தனித்தே தெரியும் அவரது திரைமொழி வடிவத்திற்கு இசை திரைப்படமும் விதிவிலக்கானதுஅல்ல. இரு பெரும் இசையமைப்பாளர்களுக்கு இடையிலான முரண்களை பேசும் திரைப்படம் ஆதலால் சமகாலத்தில் இருக்கும் இசையமைப்பாளர்கள் பார்வையாளருக்கு நினைவிற்கு வந்துதான் ஆகிறார்கள்.\
30 ஆண்டுகளாக அசைக்கவே முடியாத இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த வெற்றிச்செல்வன் தனது செருக்கால் ஒரு இயக்குனரை அவமானப்படுத்த , அந்த இயக்குனர் வெற்றிச்செல்வனின் உதவியாளராக இருக்கிற ஏ.கே.சூர்யாவை அறிமுகப்படுத்தி மாபெரும் வெற்றியை அடைகிறார். சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிகளால் வெற்றிச்செல்வன் தனது பிழைப்பு,வருமானம்,பேர்,புகழ் என அனைத்தையும் இழக்கிறார். மீண்டும் வெற்றியை அடையத்துடிக்கும் வெற்றிச்செல்வன் பல வித சூழ்ச்சிகளால் சூர்யாவை வெல்ல முயல்கிறார். தன்னைச்சுற்றி பின்னப்படுகிற சூழ்ச்சி வலைகளில் இருந்து அந்த இளம் இசையமைப்பாளர் மீண்டாரா ,இல்லையா என்பதுதான் கதை.
இத்திரைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா முதன் முதலாக இசையமைத்துள்ளார். முதல் திரைப்படம் என்பதால் பூங்கொத்து மட்டுமே. அடுத்தடுத்த முயற்சிகளில் சூர்யா தன்னை மேம்படுத்திக் கொள்வார் என நாம் வாழ்த்துவோம். இளம் இசையமைப்பாளர் ஏ.கே.சூர்யாவாக எஸ்.ஜே.சூர்யா கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரிசையாக வருகிற சிக்கல்களால் உளவியல் முரண்களுக்கு உள்ளாகி தடுமாறுவதை நன்றாகவே செய்திருக்கிறார். அதிலும் கழிவறைக்குள் உட்கார்ந்து வாய் பொத்தி அழும் காட்சியில் …எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் முன்னேறி இருக்கிறார் என்பதை உணர்த்துகிறார் . களைப்படைந்த கண்களோடு தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள முடியாத குழப்பமான சூழலில்…சோர்வான மனிதனாக உலா வரும் சூர்யாவிற்கு அக்கதாபாத்திரம் சரியாக பொருந்துகிறது.
இக்கதையினை தனது பண்பட்ட நடிப்பால் தூக்கி நிறுத்தி இருப்பவர் மூத்த இசையமைப்பாளர்,இசைவேந்தன் வெற்றிச்செல்வனாக நடித்துள்ள உங்கள்-எங்கள்-நமது சத்யராஜ். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல்கள் திரையரங்குகளை நிறைக்கின்றன. அதுவும் தோற்றுப் போன மனிதனாக, வேலையற்று ..தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் மனிதனாக சத்யராஜ் அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். தனது பணியாளராக வரும் கஞ்சா கருப்புவினை அவர் கையாளும் காட்சிகள் …சத்யராஜ் என்கிற மாபெரும் கலைஞனை அடையாளம் காட்டுகின்றன. ஓரக்கண்ணால் பார்ப்பது,குத்தலும், நையாண்டியாக பேசுவது, தனது வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வது என தோன்றும் காட்சிகளில் எல்லாம் தன்னை மாபெரும் கலைஞனாக நிருபித்துக் கொண்டே இருக்கிறார் சத்யராஜ். அவர்தான் கதையின் முதுகெலும்பாக இருந்து…ஒட்டுமொத்த திரைப்படத்தையுமே சுமக்கிறார் .
கதாநாயகியாக நடித்திருக்கும் சாவித்திரி(அறிமுகம் ) கவர்ச்சி காட்சிகளில் அதிகம் தென்படுகிறார். செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு காடுகளில் மின்னுகிறது. அந்த அருவியோர அமைப்பு மிலன் கலை ஆக்கத்தில்..அற்புதமாக படமாக்கி உள்ளார்கள்.
சாதாரணமாக வனத்தில் திரியும் ஒரு வண்டின் இசை அறிவுக்கு முன்னால் நாமெல்லாம் ஒண்ணுமே இல்ல சார் என்று சத்யராஜிடம் எஸ்.ஜே.சூர்யா பேசும் காட்சிகளில் வசனகர்த்தா எஸ்.சூர்யா கைத்தட்டல் பெறுகிறார் .
படத்தின் முடிவாக எஸ்.ஜே சூர்யா ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொள்வது அவரது துணிச்சலை காட்டுகிறது. ஒட்டு மொத்த படத்தையுமே ஒரு கனவாக நிலைநிறுத்த சூர்யா முயலுவது பார்வையாளர்களை அசதிக்குள்ளாக்குகிறது.
படத்தில் பல குறைகள். இருந்தாலும் ..நீண்ட காலத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவின் மறு வருகையும், சத்யராஜ் என்கிற மாபெரும் கலைஞனின் நடிப்புத்திறமையும் இசையை ஒரு தவிர்க்க இயலா திரைப்படமாக மாற்றுகின்றன.