13925676_162271224197754_3264854279672705024_o

நிலா முழுகி
கிடந்த
கடலில்
நட்சத்திரங்கள்
துள்ளிக்கொண்டு
இருந்த அப்பொழுதில் தான்…

என் ஒற்றைப்படகில்
நான் தனித்திருந்தேன்..

மஞ்சள் வெளிச்சமும்,
இருண்மையும்
மாறி மாறி
பிரதிபலிக்கும்
இரவு பேருந்தின்
சன்னலோர முகத்தோடு
நீ லயித்திருந்த
பொழுதொன்று
ஆகாய அந்தர
வெளியில்
மிதந்துக்
கொண்டிருந்தது..

நிரம்பி ததும்பிய
அலைகளின் நுனியில்
நேற்றிரவு உன்
விழிகளில் மின்னிய
அதே சுடர்கள்..

காட்சி மயக்கத்தில்
தடுமாறி ஆழ் கடலில்
விழுந்த என் மேனி
எங்கும்பூத்து மலர்ந்தன
அல்லிகள்..

அப்படியே
என் இரு கரம் கொண்டு
வெது வெதுப்பான
கடலின் வயிற்றினை
திறக்க தொடங்கினேன்..

புற்றீசல் போல
தங்க மீன்கள்
வானவில் சிறகுகளோடு..

வானின் நீல வண்ண
படியேறி போன
ஒரு தங்க மீன்
தன் சிறகை அசைத்தவாறே
சொன்னது…

நீ அழகன் என..

நான் சிரித்துக் கொண்டேன்..

எப்போதும்
என் முகம் பார்க்கும்
கண்ணாடி நீயாக
இருந்தால்..

எப்போதும் எனை
பார்க்கும் விழிகள்
உனதாகி இருந்தால்..

நான்
அழகன்
தான்..

– மணி செந்தில்