15589743_1841866926060445_62583702408759883_n
(நாம் தமிழர் கட்சியின் சோழ மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் .அ.நல்லதுரை அவர்களின் பிறந்தநாளுக்காக எழுதியது .20-12-2016)
 
 
அண்ணனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த பெயர் பெற்ற அந்த மருத்துவமனைக்குள் நுழைவதற்கே சற்று அச்சமாக இருந்தது. அண்ணன் கம்பீரமான மனிதர். உரத்தக் குரல். யாரையும் அதிகாரம் செய்யும் தோரணை என்றெல்லாம் பழக்கமாகி இருந்த அவரை ஒரு மருத்துவமனையில் உள் நோயாளியாக சந்திப்பதென்பது என் வாழ்நாளில் ஒரு கடின நிலை. அண்ணி வாசலில் சற்றே கலங்கியும், சோர்ந்தவாறு நின்றிருந்தார்கள். வழக்கமாக என்னைப் பார்த்த உடன் புன்னகைக்கும் அதே நிலையை ஏற்படுத்த முயற்சித்து தோற்ற அண்ணி..மெல்லிய குரலில் உள்ளே போய் பாருங்கள் என்றார்..
 
வாசலில் நின்றிருந்த செவிலியர் உள்ளே செல்ல முயன்ற என்னிடம் யாரை பார்க்க வேண்டும் என்பதான விபரங்களை கேட்டுக் கொண்டு உள்ளே அனுப்பினார். ஒரு பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கே உரிய கெடுபிடிகள். ஆங்காங்கே மானிட்டர் பெட்டிகளின் முணுமுணுப்புகள். ஒரு ஐந்தாறு நோயாளிகள் ஆழ்ந்த அமைதியில் இருந்தார்கள். வலது பக்க மூலையில் அந்த நெடிய உருவம் படுத்திருந்தது. அண்ணனை அக்கோலத்தில் பார்க்க என்னால் முடியவில்லை. ஆனால் அங்கே அழுதால் அண்ணனும் உளவியலாக பாதிக்கப்படுவார் என்ற அச்சம். எனவே கட்டுப்படுத்திக் கொண்டு அருகே சென்றேன். உடலெங்கும் ஆங்காங்கே குழாய்கள் பொருத்தப்பட்டு சற்று சோர்வாக உறங்கிக் கொண்டு இருந்தார், நான் அவர் அருகிலேயே நின்றிருந்தேன்.
 
எப்பேர்பட்ட மனிதர்..ஈழ ஆதரவு போராட்டத்தினை தஞ்சைத் தரணியில் தலைமையேற்று நடத்திய ஆளுமை. அனுதினமும் போராட்டக்களங்களில் முழங்கி முழங்கியே தன் உடல்நலனை இழந்தவர். தஞ்சை நகர வீதிகளில் எங்கு போராட்டம் நடக்கிறதோ..அங்கெல்லாம் இவரைக் காணலாம். எம்மைப் போன்ற அனுபவமற்ற..சற்றே உணர்ச்சிவசப்படுகிற நபர்களை கையாளுவதில் அவர் வித்தகர். தனிப்பட்ட முறையில் என் தந்தையின் மூத்த மகனாகவே அவரும் வரித்து, என் தந்தையும் நினைத்து வாழுகிற பேரன்பின் வடிவம். அண்ணி,முருகு,பாப்பா என்றெல்லாம் ஏதோதோ நினைத்து நான் கலங்கிக் கொண்டிருந்த வேளையில் தான் அவர் கண்விழித்தார்.
 
ஒரு சிறிய புன்னகை. அண்ணே.. என்ற உடன்..கேட்ட கேள்வி.. ஏண்டா தம்பி இங்கெல்லாம் சிரமப்பட்டு வர்ற..கட்சி வேலையெல்லாம் போகுதா.. நான் படுத்த உடனே நிறுத்திட்டீங்களா..
 
இதற்கெல்லாம் என்னிடம் எந்த பதிலும் இல்லை. படுத்த படுக்கையிலும் இந்த ஆள் வேறு எதையோ பேசிக் கொண்டு இருக்கிறானே என்று கொஞ்சம் கோபமும் வந்தது. அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. செவிலியர் என்னை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறைதான். இன்னும் 48 மணி நேரம் ஆனால் தான் சொல்ல முடியும். அதுக்குள்ள பேசிகிட்டு..போங்க சார் …என்று அந்த பெண் எரிச்சலாக சொன்ன பிறகுதான் நிலைமையின் தீவிரத்தை நான் அறிந்தேன்.
 
வெளியே வந்த நான் அண்ணியை தேடினேன். அண்ணனைப் பற்றி தெரிந்த பலருக்கும் அண்ணியை தெரியாது. அண்ணனின் ஆன்ம பலம் அண்ணி. அவரை ஒரு ஆளுமையாக உலவ வைப்பதில் அண்ணியின் பங்கும், பணியும், தியாகமும் அளவற்றது. என்னை நிமிர்ந்து பார்த்து அவர்கள் சொன்னது கவலைப் படாமல் போங்க..அண்ணன் சீக்கிரமே உங்க கூட வருவார்…
 
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த நான் மனவலி பொறுக்க முடியாமல் …எப்போதெல்லாம் எனக்கு மனம் துயர் கொள்கிறதோ தேடி செல்லும் இடமான புழல் சிறைக்கு சென்றேன். அங்குதான் எனக்கான மருத்துவர் அண்ணன் இராபர்ட் பயஸ் இருக்கிறார்.
 
அவரை பார்த்து அண்ணன் நல்லதுரை படுத்த படுக்கையாய் ஆயிட்டார் அண்ணே.. என்று கலங்கியவாறு சொன்னேன். சற்றே மெளனமான அவர்.. தனக்கே உரிய தீர்க்கமான குரலில்…
 
தம்பி..அண்ணனுக்கு ஒண்ணும் ஆகாது. அவ்வளவு எளிதா நம்மை விட்டு போகமாட்டார்.அந்த ஆன்மா ஈழத்திற்காக உழைத்தது. கொலை செய்யப்பட்ட மக்களுக்காக கதறியது. எங்களுக்காக இரங்கி, துடித்த அந்த ஆன்மா அவ்வளவு எளிதாக போகாது. அவர் உயிரை அந்த மருத்துவமனையை சுற்றி காற்றாய் உலவிக் கொண்டிருக்கிற 50000க்கும் மேற்பட்ட மாவீரர்களின் மூச்சுக்காற்று காப்பாற்றும். கவலைப்படாதே என்றார்.
 
உண்மையில் அதுதான் நடந்தது. அண்ணனும் அந்த கொடும்பொழுதில் இருந்து மீண்டு வந்தார். நம் இன மாவீரர்கள் மகத்தான தெய்வங்கள் என்பதற்கு சாட்சி அண்ணன் நல்லதுரை.
 
இதோ.இன்றைய நாளில் அண்ணன் நல்லதுரை பிறந்தநாள் காண்கிறார். இன்னும் ..இன்னும் ..இந்த இனம் செழிக்க..அதன் விடுதலைக்கு..அவர் உழைக்க அவர் பல பிறந்தநாள்களை காண்பார்.
 
வாழ்த்துகள் என்பது அவர் தான் நமக்கு சொல்ல வேண்டும். நான் என் அண்ணிக்கும் , அப்போது என் அண்ணன் உயிரை காக்க உழைத்த …அரசியல் ரீதியாக முரண்கள் இருந்தாலும்..இன்றளவும் நான் நன்றிக்கடன் பட்டுள்ள மன்னை மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்களுக்கும் தான் நன்றி வாழ்த்துக்களை உரிதாக்குவேன்.
 
வேறென்ன…
 
ம்ம்ம்.. வழக்கம் போல எங்களை திட்டி, கத்தி
தலைமையா..நின்னு எங்களை அழைச்சிட்டு போங்க…
 
நாங்க இப்படித்தான்.. நீங்க திட்டணும் என்பதற்காகவே தவறு செய்கிற நாங்க இப்படித்தான்.
 
————————————–
 
உலகம் முழுக்க வாழ்ற நாம் தமிழர் குடும்பம் இன்று தன் மூத்த அண்ணனுக்காக கொண்டாடி மகிழ்கிறது.
 
-மணி செந்தில்