header_essay-stormy-nationalgeographic_2474065

நள்ளிரவின்
நட்சத்திர மிதவைகளோடு
எனக்கு முன்
உயிர்ப்புடன்
உரையாடிக் கொண்டிருந்த
அந்த பெருங்கடலுக்குள்
சட்டென பாய்ந்தேன்..

எனக்குள்ளும்
ஆர்ப்பரித்து
கிடக்கிற அலைகளும்..
ஆசைகளாலும்
இருண்மைகளாலும்
இறுகிக் கிடக்கிற
சில நினைவுப் பாசிகள்
படிந்திருக்கிற
பாறைகளும் நிரம்பிக்கிற
கடலொன்று இருக்கிறது
என அறியாமலேயே
பெருங்கடல் என்னை
உள் வாங்கியது.

திணறிய மூச்சுக்கூட்டில்
சில கனவுக் குருவிகள்
கத்திக் கொண்டிருந்ததை
கவனிக்காத பாவனையோடு
மூழ்கி தீர தொடங்கினேன்..

உடைந்த மண்பானை
குடுவை என உடலம்
மாறிப் போனதாய்
உன்மத்தம் கொண்டேன்..

அடுக்கடுக்காய் சரிந்த
வாழ்வின் கசப்பு மீந்த
ஓலைகளில் இன்னும்
மங்காமல் தேங்கிற்று
என் பால்யத்தின்
புன்னகை ஓன்று.

என் விழிகளொடு
கசிந்தவை எல்லாம்
கடலோடு கலக்க..

என்னுள் மிஞ்சியவையும்
கடல் நீலமாய் மாற..

அந்த முழு நிலா இரவில்
நானே பெருங்கடலானேன்..

என்றேனும் உங்களில்
உணர்ச்சிகளின்
விளிம்பில் பேயாட்டம்
ஆடும்
யாராவது உணர்ந்துக்
கூட பார்க்க இயலும்..

சற்று முன் நீர்
தெளித்து
உங்கள் கண்ணீரையோ..
மாசற்ற புன்னகையையோ..
நனைத்து விட்டு
மீண்டும் கடலுக்கே
திரும்பிய அந்த
பேரலை…

நானாக இருப்பேன் என.