22310419_354474694977405_8608714965574738064_n

தேர்ந்தெடுக்கப்பட்டு
உருவாக்கப்பட்ட
பொன்னிற மாலை ஒன்றில்..
அந்த சிவப்பு கம்பளம்
விரிக்கப்பட்ட மேசையின்
முன்
அவர்களெல்லாம்
அகம் மகிழ ஒன்று
கூடி இருந்தார்கள்..

கனிவு நிரம்பிய
ஒருவன்
விழிகளை
பிடுங்கிதான்
அம் மேசையின்
மெழுகு வர்த்தி
கொளுத்தப்பட்டிருந்தது.

நம்பிக்கை இறந்த
அவனது
ஆன்மாவின் உதிரத்துளிகள்
அவர்களது கண்ணாடிக்
கோப்பையை செந்நிற மாய்
நிறைக்க…
ஆரம்பித்தது அவன்
எழுதிய கவிதை
ஒன்றின் மேல்…
வன்ம வெறுப்புணர்வின்
வண்ணம் பூசும் வேலை..

காவியமாய் மலரத் தொடங்கிய
கவிதையை அவரவர் தங்கள்
அழுக்குகளுக்கு ஏற்ப
அதை மலிந்த ஓவியமாய்
மாற்றிக்கொண்டிருந்தார்கள்.

வெட்டப்பட்ட அவனது
ஆழமான நம்பிக்கைகள்
ஆங்காங்கே
அந்த அறை முழுக்க
மாமிசத்துணுக்குகளாய்
சிந்திக்கிடக்கின்றன..

அவரவரின் துரோகங்களுக்கு
அவனின் சொற்களை
தூக்கிலேற்றி
தங்கள் சொற்களின்
மேல் புனித பூச்சு
நிகழ்த்தினார்கள்.

ஏதோ தருணத்தில்
அவர்களுக்காக
அவன் சிந்திய
கண்ணீரின்
வெப்பத்தில் தான்
அவர்கள்
மாலை நேர
மயக்கத்து குளிர்
காய்ந்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது காலணி
இடுக்குளில் இடறப்பட்ட
அவனது
களங்கமற்ற நேசத்தின்
வண்ணச்சிறகுகள் மீது
எளிதில் எச்சில் துப்பி
தூரப் போனார்கள்.

அவனது இறப்பில்
மகிழ்ந்திருந்த அவர்களுக்கு
தெரியாது..

அவரவர்களுக்கு என்று
ஒரு செந்நிற மேடை
தயாராகி காத்து இருக்கிறது
ஒரு பொன்மாலை விருந்திற்காக..