19961232_322073331550875_5509818354733020721_n

அண்ணன் இராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான…
நான் எழுதிய விடுதலைக்கு விலங்கு நூலுக்கான அட்டைப்படம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்ட போது..

சீமான் அண்ணன் தான் அய்யாவிடம் தர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.

எனக்கு டிராஸ்கி மருதுவின் மேலதான் மயக்கம்.

இருந்தாலும் அண்ணன் சொல்லி விட்டாரே என சற்று ஒவ்வாமையோடுதான் அவரை சந்திக்க போனேன்.

ஒரே ஒரு ஈர்ப்பு..மனுசன் எங்க ஊர்க்காரர்.

வைகறை என அழைக்கப்படும் அவரது வீட்டில் நிகழ்ந்தது எங்கள் முதல் சந்திப்பு.

ஒரு டிராயரோடு உட்கார்ந்து எனது புத்தகத்தை படிக்க தொடங்கினார்..

சில பக்கங்களை படித்த பிறகு..அவரது கண்கள் கலங்க தொடங்கின..

புத்தகத்தை மூடி வைத்து விட்டு நீ போய் வா.. என்று அனுப்பி வைத்து விட்டார்.

என்ன இவர் ஒன்றுமே சொல்லாமல் அனுப்பிட்டாரே என்று ஏமாற்றம்.

பிறகு மறுநாள் நான் சந்தித்த போது மனசே சரியில்லப்பா.. இரவெல்லாம் தூங்கல.. படிச்சி முடிச்ச உடனே வரைஞ்சிட்டேன் என அவர் அளித்த ஓவியம் தான் அந்நூலுக்கு உயிரானது.

அதன் பின்னர் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றப் பணிகளில் சந்தித்த போது விடுதலைக்கு விலங்கு பற்றி பேசாமல் இருக்க மாட்டார்.

தலைவர் பிரபாகரன் பற்றி இது வரை வெளிவராத ஒரு புதிய கோணத்தில் நான் எழுத விருந்த திட்டத்தை அவரிடம் ஒரு முறை விவரித்தேன்.

கண்கள் மினுக்க சொன்னார்..

இதுக்கும் நான் தாண்டா அட்டைப்படம்.

கடைசியாக என் அண்ணன் அறிவுமதி மகள் எழிலின் திருமணத்தில் பார்த்தும் இதே பேச்சு.

நானும் எழுத வில்லை.

அவரும் போய்விட்டார்.

என்றாவது அந்த நூலை நான் எழுதும் போது..

காற்றோடு கரைந்து மிதந்து வரும் அவரது மாயக்கரம் சுமந்த மந்திரத் தூரிகை அந்த அட்டைப்படத்தை வரையும்.

போய் வா போராட்டக் கிழவா..

நாங்கள் இடும் முழக்கங்களில்லாம்..நீ ஊறிக்கொண்டே இருப்பாய்..

தூரிகைப்போராளி வீர.சந்தானம்
அவர்களுக்கு எம்
புகழ் வணக்கம்.