பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: பிப்ரவரி 2018

மீண்டும் ..

637c68ba0dba902e1d117843e63c048a--trippy-quotes-acid-trip

 

அமில
மழைத்துளிகள்
கொட்டி சிதறும்
என்
எண்ண முற்றத்தில்..

எப்படியாவது
துளிர்த்திட
துடிக்கிறது
என் ரோஜா..

அமைதியான
ஒரு உதிர
சொரிதலுக்கு
பின்..

அமிலத்தை
மிஞ்சியும்..
முளைத்தே
விடுகிறது மலர்..

அமிலம்
முள்ளாய்..
ரோஜாவினடியில்
தேங்கி இருப்பதை
உணர்ந்தாலும்..

முள்ளை
பொருட்படுத்தாது
தீண்ட நீளுகின்ற
என் கனவின்
விரல்கள் தயாராகவே
இருக்கின்றன..

இன்னொரு உதிர
சொரிதலுக்கு..

தூரிகைப் போராளிக்கு புகழ் வணக்கம்.

 

19961232_322073331550875_5509818354733020721_n

அண்ணன் இராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான…
நான் எழுதிய விடுதலைக்கு விலங்கு நூலுக்கான அட்டைப்படம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்ட போது..

சீமான் அண்ணன் தான் அய்யாவிடம் தர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.

எனக்கு டிராஸ்கி மருதுவின் மேலதான் மயக்கம்.

இருந்தாலும் அண்ணன் சொல்லி விட்டாரே என சற்று ஒவ்வாமையோடுதான் அவரை சந்திக்க போனேன்.

ஒரே ஒரு ஈர்ப்பு..மனுசன் எங்க ஊர்க்காரர்.

வைகறை என அழைக்கப்படும் அவரது வீட்டில் நிகழ்ந்தது எங்கள் முதல் சந்திப்பு.

ஒரு டிராயரோடு உட்கார்ந்து எனது புத்தகத்தை படிக்க தொடங்கினார்..

சில பக்கங்களை படித்த பிறகு..அவரது கண்கள் கலங்க தொடங்கின..

புத்தகத்தை மூடி வைத்து விட்டு நீ போய் வா.. என்று அனுப்பி வைத்து விட்டார்.

என்ன இவர் ஒன்றுமே சொல்லாமல் அனுப்பிட்டாரே என்று ஏமாற்றம்.

பிறகு மறுநாள் நான் சந்தித்த போது மனசே சரியில்லப்பா.. இரவெல்லாம் தூங்கல.. படிச்சி முடிச்ச உடனே வரைஞ்சிட்டேன் என அவர் அளித்த ஓவியம் தான் அந்நூலுக்கு உயிரானது.

அதன் பின்னர் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றப் பணிகளில் சந்தித்த போது விடுதலைக்கு விலங்கு பற்றி பேசாமல் இருக்க மாட்டார்.

தலைவர் பிரபாகரன் பற்றி இது வரை வெளிவராத ஒரு புதிய கோணத்தில் நான் எழுத விருந்த திட்டத்தை அவரிடம் ஒரு முறை விவரித்தேன்.

கண்கள் மினுக்க சொன்னார்..

இதுக்கும் நான் தாண்டா அட்டைப்படம்.

கடைசியாக என் அண்ணன் அறிவுமதி மகள் எழிலின் திருமணத்தில் பார்த்தும் இதே பேச்சு.

நானும் எழுத வில்லை.

அவரும் போய்விட்டார்.

என்றாவது அந்த நூலை நான் எழுதும் போது..

காற்றோடு கரைந்து மிதந்து வரும் அவரது மாயக்கரம் சுமந்த மந்திரத் தூரிகை அந்த அட்டைப்படத்தை வரையும்.

போய் வா போராட்டக் கிழவா..

நாங்கள் இடும் முழக்கங்களில்லாம்..நீ ஊறிக்கொண்டே இருப்பாய்..

தூரிகைப்போராளி வீர.சந்தானம்
அவர்களுக்கு எம்
புகழ் வணக்கம்.

 

வேண்டாம் அண்ணா இது..வேண்டும் அண்ணா நீங்கள் ..

19424553_312465879178287_6778200899699480212_n

என்னுயிர் அண்ணனுக்கு..

கலங்கும் என் விழிகளுக்கு முன்னால் மங்கலாய் நீங்கள் தமிழக முதல்வருக்கு எழுதிய கடித வரிகள் இந்த கணிணித் திரையில் ஒளிர்ந்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் ஒருமுறை எனக்குள் அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த கடிதத்தை பயஸ் அண்ணா எழுதி இருக்க மாட்டார்.

ஏனெனில் நான் உங்களோடு வாழ்ந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில்..உங்களில் ஒருவனாய்…சில சமயங்களாய் நீங்களாக கூட நான் வாழ்ந்திருக்கிறேன். விடுதலைக்கு விலங்கு எழுதப்பட்ட காலங்களில் இரவு-பகல் பேதமறியாது உள்ளூரிலேயே ஒரு விடுதி அறை எடுத்துக் கொண்டு உங்கள் வலிகளை எழுத்தாக மாற்ற முயன்ற காலத்தில்.. உங்களை அடிக்கடி என் மனக்கண்ணில் தரிசிக்க வேண்டிய சூழல்கள் உண்டு . உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ..வேறு எந்த சக மனிதனுக்கும் நடந்திருக்கக் கூடாத மானுட வாழ்விற்கு மிஞ்சிய கொடுமையான நிகழ்வுகளை உங்களது பார்வையிலேயே எழுத நேர்ந்த அக்காலக்கட்டத்தில் கூட நீங்கள் நம்பிக்கை மினுக்கும் விழிகளோடுதான் அண்ணா… எனக்கு தோன்றியிருக்கிறீர்கள்.காலையில் நான் கண் விழிக்கும் எனது பொழுது தூரிகையினால் நீங்கள் தொட்டு எழுதிய தலைவரின் ஓவியத்தில் இருந்துதானே தொடங்குகிறது..?

குறைந்த நேர சந்திப்புகளில், இறுக்கமான அணைப்புகளில், புன்னகைக்கும் விழிகளில் எங்குமே உங்களுக்குள் அவநம்பிக்கை நிழலை நான் சந்தித்ததில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மூவர் தூக்கு உறுதி செய்யப்பட்ட நேரம் அது. பேரறிவாளன்,முருகன், சாந்தன் அண்ணன்களை சந்திக்க நான் வேலூர் சிறைக்கு வந்திருந்தேன். தங்கை செங்கொடி தீக்கு தன்னை தின்னக் கொடுத்து மூன்று அண்ணன்களை காத்திட உயிரை ஈந்து விட்டு அங்கே காஞ்சிபுரத்தில் வெந்த உடலோடு காத்திருந்த நேரம். எந்த நேரமும் அண்ணன்களை தூக்கில் போட்டு விடுவார்களோ என்ற அச்சம் நம் ஒவ்வொரு ஆன்மாவிற்குள்ளும் பேயாய் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான்.. மறுநாள் தூக்கிற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற நேரம். அந்த நேரத்தில் தான் நான் வேலூர் சிறைச்சாலைக்குள் வருகிறேன். நான் அண்ணன்மார்களை சந்தித்து விட்டு அந்த பிரத்யோக பகுதியிலிருந்து வெளியேறுகையில் உணர்ச்சி வசப்பட்டு கதறித் தீர்த்த என்னை நம்பிக்கையூட்டும் சொற்களால் நலமுட்டினீர்கள்.
எதை எதையோ இழக்க கூடாதவற்றை எல்லாம் இழந்த இனம் டா தம்பி.இதற்கெல்லாம் கலங்கிடாதே.. என்று நீங்கள் சொல்லிய சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அப்படி நம்பிக்கை விதைகளின் நாற்றாங்காலாய் இருந்த உங்களிடத்தில் தான் இப்படிப்பட்ட சொற்களோடு இந்த கடிதமா..?

மரண அவஸ்தையை விட கொடுமையான கால தாமதம் தான். நான் ஒத்துக் கொள்கிறேன். இரவு நேர சிறையில்..மங்கிய மேல் கூரையை பார்த்தவாறே உறங்காமல் கிடக்கிற உங்கள் பொழுதுகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது அண்ணா..

பால்நிலா இரவில் உங்கள் தாய்மண்ணில் உங்களது உறவுகளோடு நிம்மதியாக படுத்து உறங்க துடிக்கும் உங்களின் 26 வருடக் கனவின் கனலை எங்களால் உணர முடிகிறது..

ஒரு நாள் வீடு திரும்புவேன் என்கிற பெரு நம்பிக்கை சாதாரண அரசியல் சாக்கடைகளால் கானல் நீராய் மாறி விடுமோ என்கிற உங்களது கவலை புரிகிறது..

வலி மிகுந்த கடந்த காலமும், கடக்க முடியா அனல் வெளி பாலையாய் எதிர்காலமும், புயல் வெளி தோணியாய் அல்லாடும் நிகழ்காலமும் உங்களுக்குள் ஒரு வெறுமையை உண்டாக்கி இருக்கக் கூடும் அண்ணா.. புரிகிறது.

வாழ்வோ, சாவோ ..ஒரு நிச்சயக்கப்பட்ட வாழ்வினை கோருகிற உங்களது நியாயம் அர்த்தமானது தான்.

ஆனால்.. நீங்கள் சராசரி இல்லை அண்ணா . எங்களைப் போல்.
.
எதனாலும் நியாயப்படுத்த முடியாத உங்களின் தனிமை உங்களுக்குள் விதைக்கிற வலி மிகுந்த ஆற்றாமையை எங்களாக ஆற வைக்க முடியவில்லை என்கிற எங்களின் இயலாமையும் உங்களுக்குள் ஒரு வலியாக மிஞ்சி விட்டது குறித்து நாங்கள் உண்மையில் வெட்கப்படுகிறோம்.

உங்களது எந்த கேள்விக்கும் எங்களிடத்தில் மெளனத்தை தவிர வேறு பதிலில்லை.

ஆனால்..

உங்கள் தோளினை தொட்டு, கரங்களைப் பற்றி இனப்பற்றினை, தாய்மண் நேசத்தினை, மானுட வாழ்வின் நம்பிக்கைகளை இடம் மாற்றிக் கொண்ட எங்களால்.. உங்களை எதனாலும் இழக்க முடியாது அண்ணா.

இது ஒரு வகையான சுயநலம் தான். ஆனாலும் நீங்கள் வேண்டும் எங்களுக்கு அண்ணா.

ஒரு நாள் விடியும் அண்ணா. இருள் கிழிந்த அந்த வானில் விடுதலையின் சுடர் ஒளிரும். அந்த நாளில் நாங்கள் உங்களோடும், நீங்கள் எங்களோடும், நாமெல்லாம் நம்மோடும் இருக்கிற நன்னாள் பிறக்கும்.

உங்களை பெரியப்பா என அழைக்கிற ஒரு இளம் தலைமுறையினர் எங்கள் வீட்டில் வளருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். இப்போது நீங்களும் கூட.

இந்த உலகிற்கு நீங்கள் எப்படியோ ..ஆனால் அவர்களுக்கு நீங்கள் தான் அண்ணா.. மானுட வாழ்வின் நம்பிக்கைகளுக்கும், தளரா மன உறுதிக்கும் எடுத்துக்காட்டு.

அவர்களது பிஞ்சுக்கரங்களை உங்களது
கரங்களோடு இணைக்கிற நாள் வரை நீங்கள் எங்களுக்கு வேண்டும் அண்ணா..

வேண்டும்.

வேண்டாம் அண்ணா இது.

வேண்டும் அண்ணா..நீங்கள்..

உங்களது தம்பி..

மணி செந்தில்
22-06-2017

(நிலாக் கால பக்கங்களில் இருந்து..)

 

 

19143414_307529129671962_6561639451854897152_n

இதய வீதியில் மலரென மலர்ந்திருக்கும் வேட்கைக்கும்…கனவில் ஒளிர்கிற நட்சத்திர ஆசைகளுக்கும் பிறந்த வாழ்வின் வானவில் பக்கங்களை தான் நான் எதார்த்த உலகின் அபத்தங்களுக்கு பலி இட்டு …கசிந்துருகிக் கொண்டிருக்கிற இப்பொழுதில் நிலா நாளொன்றில் நீ சொன்னது நினைவுக்கு வருகிறது..

கவிதையாய் விவரிக்க முடிகிற வாழ்வல்ல நாம் வாழ்ந்தது.. அது உயிரை உருக்கி வரையப்பட்ட காப்பியம்.

It s not just a life..we r lived together..it s an epic..

 

வாழ்வு- சபிக்கப்பட்ட வரம்.

 

18891713_305469093211299_1564591392787481116_o
நுரை ததும்பும்
அந்த ஒற்றைக்
கோப்பையின்
விளிம்பில்…

ஆலகாலமாய்
பூத்திருந்த
நஞ்சைக் கண்டு
சற்றே
சிரித்துக் கொண்டது..

சாத்தான்.

இதோ
வாழ்வெனும் அமிர்தம்.

காதலாகி
கசிந்துருகி..
மேனி துயர் கண்டு
மெலிந்து புண்பட..
ரணம் கண்டு
வதை பட்டு
சுகம் காண
வாழ்ந்து விட்டுப் போ
என்ற அலட்சியத்
தொனியில்
அறிவித்தவாறே..
பீடியை பற்ற
வைத்து இழுத்தான்
சாத்தான்.

புகைச் சுருள்
மேல் எழ
யாரோ ஒருவளின்
கூந்தல் நினைவு
எனக்கு வந்தது.

நட்சத்திரங்களில்
வசித்திருக்கிறாயா..
இல்லையெனில்
ஒரு இதயத்தை
வென்றெடு.

தோள்களில்
வானவில்
பூத்திருக்கிறதா…
இல்லையெனில்
சிறகடிக்கும்
விழிகளை தேடி
கண்டடை.

அதற்கு
இந்த அமிர்தத்தை
பருகு என்று பரவசம்
காட்டிய சாத்தானில்
கண்களில் பொய்யில்லை..

நடுங்கிய
கரத்தோடு
கோப்பையை
தழுவச் சென்ற
என் கரங்களை
கடவுள் சற்றே
பிடித்து இழுத்தார்.

வேண்டாம்..
இது உனக்கு பொருந்தாது..

கொந்தளிக்கும்
அலைகடலை
ஒரு கோப்பைக்குள்
அடக்கி வைத்து
அமிர்தம் என்கிறான்.

ஏமாறாதே..

எச்சரித்தார் இறைவன்.

இறைவனின் நிழலோடு
கரைந்து நழுவத்தொடங்கினேன்..

விசுவாசம் ஏற்ற
இறைவன் திரும்பி
நடக்க தொடங்கினார்.

சட்டென திரும்பி
ஒரே மடக்கில்
விழுங்கினேன்
கோப்பையில்
குடி இருந்ததை..

வாழ்வின்
வசீகரம்
சிறகுகளாய்
முளைத்த
தோள்களோடு..

பின் தொடர்ந்த
என்னில்
ஏற்கனவே அருந்தி
விட்டிருந்த நஞ்சு
மெல்லிய புன்னகையாய்
அதரத்தில் அமர்ந்திருந்தது..

காலியாய் இருந்த
கோப்பையை
உருட்டி விளையாடத்
தொடங்கி இருந்தான்
சாத்தான்..

இம்முறையும் ஏமாற்றப்பட்டான்
என விசனப்பட்டார் இறைவன்..

இனிமேல் தான் வாழப் போகிறான்
என குதூகலித்தான் சாத்தான்.

கோப்பைகளின் இரவு..

8

அந்த சிவப்பு
மேசையில்..

இரவு என்ற
பொல்லாத
மிருகமும்..
நானும்..
தனித்திருந்தோம்..

நினைவுகளை
கடித்துக் குதறிய
செந்நிற பற்களோடு
சிரித்த இரவோடு..

வாழ்வை ஒரு
மதுவாக்கி குடிக்க
நானும் தயாரானேன்..

இரவின் விரல்
இடுக்கில்
சிகரெட்டாய்
புகைந்துக்
கொண்டிருந்த
என் ஆசைகளின்
கங்கொன்றின்
நுனியில் மின்னியது
ஒரு நட்சத்திரம்.

கனவுகளும்..
நிராசைகளும்..
சம விகிதத்தில்
கலக்கப்பட்டு
கோப்பைகள்
தயாராகின..

தத்துவச்சாரங்களும்
மெளனமாக்கப்பட்ட
சொற்களும்..
இரண்டு பீங்கான்
தட்டுகளில் நிரம்பி
இருந்ததை
முரண்களே நமது
இன்றைய
side dish என
குதுகலித்தது
இரவு.

சியர்ஸ்
என்றவாறே
உரசிய
கோப்பைகளின்
அதிர்வில் சிந்தி
சிதறிற்று
ஆன்மாவில்
என்னையும் மீறி
ஒட்டியிருந்த
முத்தமொன்றும்..
அதிகாலை
அணைப்பொன்றும்..

செந்நிற திரவமாய்
என் கடந்த காலம்
அந்த கோப்பையில்
கொப்பளித்ததை
பார்த்ததை கண்ட
இரவு தன் மினுக்கும்
கண்களின் அலட்சியப்
மொழியில் சொன்னது.

தண்ணீய ஊத்துடா…

..அடங்கியது காலம்.

 

 

https://youtu.be/j-kKJKlufBQ

வேண்டுவன..மயக்கம்.

 

IMG_19700130_041755

 

எனது இரவே…

நீ துளித்துளியாக
நகர்வது …

யாரோ கழுத்தை
பொறுமையாக
அனுபவித்து
அறுப்பது போல…

ரண வேதனையாக
இருக்கிறது..

என்
விழிகளே..

சிவந்த
உங்களது
விழிப்பை மறந்து
சற்றே பொசுங்கி
எரிந்துப்
போங்கள்..

அது கொஞ்சம்
ஆறுதலானது.

உயிர்த்திருந்து
ரணம் கொள்ளும்
மனமே…
கொஞ்சம் மயங்கிப்
போ..

உன் நிலை மறந்து
கிறங்குவது மிக
நலம்.

ஆழ கொதித்து
துயர
வியர்வையால்..
எரியும் உடலமே…

நீ மரத்துப்போ.

அது மரித்துப்
போவதற்கு நிகராக
இருந்தாலும் கூட..

இறுதியாக சொல்வது
இதை தான்..

ஆற்ற முடியா
கொந்தளிப்பினை
கொல்ல…

அது உறக்கமாக
கூட இருக்க
தேவையில்லை…

சிறிது நேர
மரணமாக இருந்தாலும்..

இறுதிவிருந்தின் அவசியம்

 

18342769_294633877628154_5684090597137973115_n

அந்த சாலையின்
முனையில் அவனை
நீ சந்திக்கக் கூடும்..

நிலைக்காத பார்வைகளோடும்..
குழறிய சொற்களோடும்..
கலைந்த கவனத்தோடும்..
கசங்கிய ஆடையோடும்..

முணுமுணுப்புகளோடு
திரியும் அவனை
நீ நிராகரித்து கடக்கலாம்.

நேர்த்தியான உன் ஆடைக்கு..
மின்னுகிற உன் ஆபரணங்களுக்கு..
இன்பம் மிதக்கும் உனது
பயணத்திற்கு..
உண்மையின் கண்களோடு
காத்திருக்கும் அவன்
ஒரு உறுத்தல் தான்..

உன் விழி அசைவுகள்
அவன் மீது படாதவாறு
லாவகமாக கடப்பதில்
இருக்கட்டும் உன் கவனம்..

இன்று நீ
அணிந்திருக்கிற
புனைவுகளின் அடவு
தெரிந்த அவன் சற்று
ஆபத்தானவன் தான்..

எதிர்பாராமல் சந்தித்து
விட்டால் கூட..
அந்த நொடியை
உடைத்துப் போட்டு
யாரிவன் என்கிற
அலட்சியத்தை மட்டும்
உன் ஆன்மாவில்
சேமித்துக் கொள்.

சொற்கள் ஏதேனும்
மிச்சப்பட்டிருந்தால்
உச்சரித்துப் போவதில்
கூட..
ஒன்றும் ஆகி விடப்
போவதில்லை..

எங்கிருந்தோ
யாரோ உன்
மீது கொட்டிய..
உன் அடி
நாக்கில் சேமித்து
வைத்திருக்கும்
கசப்பினை
அவன் மீது
காறி உமிழ்தல்
மிக நலம்.

அக்கணத்தில்
சட்டென உன்
நினைவில் பூக்கும்
அவன் பொழிந்த
நேச மழையை
கவனிக்காமல்
மிதித்துக்
கடந்துப் போக
கண நேர
வெப்பம்
சுமக்கும் காலணிகளை
தயாரித்து வை.

உன்னிடம்
இல்லாவிட்டாலும்
கவலையில்லை ..
உன் மீது யாரேனும்
எக்கணத்திலாவது
துப்பிய வெறுப்பினை
கடன் வாங்கியாவது
அவன் மீது கக்கு..

காரணங்களை
ஒரு
விருந்தினைப் போல
நேர்த்தியாய்
தயாரி.

விதவிதமான
கதைகளோடும்..
உன் விழிகளில்
இதற்கென
ப்ரத்யோகமாக
தயாரித்திருக்கும்
துளிகளோடும்..

அந்த விருந்தினை
உனக்கு நீயே
பரிமாறிக் கொள்..

ஏனெனில்
அவனை நீதான்
கடவுள் என்றாய்..
அவன் சாத்தானாக
உனக்குள் மாற்றிக்
கொள்ள இந்த
இறுதி விருந்து
அவசியம்…

ஆனால்…
அவனுக்கோ..
இவையெல்லாம்
தேவையே இல்லை.

ஏற்கனவே
நிராகரிப்பின்
சொற்கள்
நஞ்சாய்
தடவிய கத்தி
ஆழ பின்
கழுத்தில்
குத்தப்பட்டிருக்கும்
அவனுக்கு
தேவை…

அவன் ஆன்மா
மட்டுமே உணரத்தக்க..
நேர்மையான..
கண்களின் ஈரம்
மினுக்கும்
மதிப்பு மிகுந்த

ஒரு மரணம்.

அன்பின் இழைகளினால் நெய்யப்பட்ட தஞ்சைப் பட்டு- அண்ணன் ஹீமாயூன்.

18300938_294063457685196_4340868929837052457_n

அவரை நான் முதன் முதலில் சந்தித்தப் போது வெக்கை நிறைந்த பாலையின் நடுவே நின்ற கள்ளிப் போல கடுகடுவென முள்ளாய் தெரிந்தார்.
அடுக்கடுக்காய் தெறித்து விழுந்த வார்த்தைகள், வேகமான நடை, உணர்ச்சிப் பிரவாகமான மொழி என எல்லாமே சற்றே தூக்கலாக தெரிந்ததால் நான் கொஞ்சம் அசெளகரியமாகதான் உணர்ந்தேன்.

மின்னல் தெறித்து விழுந்த ஒரு நொடியில் அவர் என்னைக் கவனித்து விட்டார். அய்யாவின் மகனா…என்ற கணத்தில் தம்பி என தாவி அணைத்தார். சட்டென அக்கைகளுக்குள் சிக்கிக்கொண்ட நான் அதன் பிறகு மீளவே இல்லை.

பல பொழுதுகள்..நிறைய சொற்கள்…அனுபவங்கள்…பயணங்கள் என லயிப்பு நிரம்பிய மதுக்கோப்பையாய் அவர் எனக்குள் இறங்கிக் கொண்டே இருந்தார். சின்னஞ்சிறு சொற்களிலும், சில வரி பத்திகளிலும் விவரிக்க முடியா வாஞ்சை மிக்க உறவு வெளியொன்றில் இருவருமே அகப்பட்டு போனோம். சில சிக்கலான பொழுதுகளில் மென்மையாய் நல்ல மாற்றங்களை என்னுள் ஏற்படுத்தி அமைதியாய் என்னை கவனித்தார். மேடைகளில் ஏற்றினார். நிறைய பேச வைத்தார். அதற்காக என்னை தயாரித்தார்.

மாணவர்கள் மத்தியில் அவர் ஒரு கதாநாயகன். பேரை சொன்னால் போதும் …கைத்தட்டல்கள் வானைப்பிளக்கிற அளவிற்கு ஒலிக்க வைக்கத்தெரிந்த இதயம் கவர்ந்த வசீகரன். அண்ணன் சீமானை அச்சு அசலாக நகலெடுக்க தெரிந்த அழகன்.

அவரிடம் என்ன தான் நான் பேசவில்லை…அம்பேத்கரியம், பெளத்தம், இஸ்லாம், இளையராஜா, சூஃபி ஞானம்,மெளனராகம் கார்த்திக் ,என விரிந்துக் கொண்டே போகிற விசித்திர விண்ணகம் அவர்.

என் மகிழுந்து கல்லூரிக்குள் நுழையும் போதெல்லாம் அதன் கதவை திறந்து விடும் அவரின் எளிமை பொங்கும் அன்பை கணிக்கத்தவறிய தம்பி ஒருவன் சொன்னான்..

”என்ன அண்ணே… இவர் தான் 8 கல்லூரி உரிமையாளரா…. அப்படி நடந்துக்க மாட்டறாரே…”

இல்லடா இவர் அதுக்கும் மேலானவர் என்றேன் .

எப்படி..

அங்கே பயிலுகிற… பணிபுரிகிற… அவருடன் பழகுகிற.. நாம் தமிழராய் அவருடன் பயணிக்கிற பல்லாயிரம் இதயங்களின் உரிமையாளர்.

அதனால் தான் அவர் அப்படி இருக்கிறார் என..

ஒவ்வொரு முறையும் அவர் தோள் பிடித்துதான் நான் படியேறுகிறேன். அவரும் சொல்கிறார். இதை சீக்கிரம் சரி செய்யணும் டா…உனக்கு டீரிட்மெண்ட் எடுத்து காலிபர் போட்டு நடக்க வைக்கிறது என் வேலைடா …என கம்மிய குரலில் சொல்லும் அவரது கவலை எனக்கு புரிகிறது.

எனக்கென்னவோ அதெல்லாம் வேண்டாம் எனத் தோன்றுகிறது.

உங்கள் தோள் பிடித்து நடக்க …நான் இப்படியே இருந்து விடுகிறேனே..அண்ணா..

ஆகச்சிறந்த அன்பானவனுக்கு…
அண்ணன் ஹீமாயூனுக்கு…

அன்பு நிறைந்த முத்தங்களுடன்..இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

https://www.youtube.com/watch?v=Wh_v9SZSTJA

 — 

நினைவின் தனிமை..

 

17992209_289848791439996_7020550986337600879_n

 

இரவுப் பொழுதின்
மலை அருவி
போல …
யாரையும் நனைக்காமல்
போகிறது..
தனிமை
இசைக்கும்
என் நினைவு…

Page 4 of 4

Powered by WordPress & Theme by Anders Norén