இன்றைய தினம் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களை விடுவிக்க அதிகாரம் தமிழக அரசுக்கு பிரிவு 161 ன் வாயிலாக உண்டு என்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.

மற்றொன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 யை ரத்து செய்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. 1860 ஆம் ஆண்டு மெக்காலே பிரபு அந்த கால சூழலுக்கு ஏற்ப இங்கிலாந்து ராணி குடும்ப விசுவாசத்திற்கு உட்பட்டு இங்கிலாந்து நாட்டின் அதிகாரம் ஆட்சி செய்யும் நிலங்களில் நீக்கமற பரவ வேண்டும் என்ற நோக்கத்தோடு இயற்றப்பட்ட மிகப் பிற்போக்குத்தனமான சட்டம் தான் இந்திய தண்டனை சட்டம். இந்த சட்டம் காலப்போக்கில் ஏற்பட்ட பல மாறுதல்களை உள்வாங்கி பல திருத்தங்களை கண்டு வருகிறது. ஆனாலும் நீண்ட நெடிய நாட்களாக பிரிவு 377 யை தடை செய்யக் கோரும் போராட்டங்கள் இந்திய அறிவுலக சமூகத்தினராலும் ,முற்போக்குச் சிந்தனையாளர்களாலும்,மாற்று பாலினத்தவர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 என்ன சொல்கிறது என்பதை நாம் ஆழமாக கவனிக்க வேண்டும்.

அது இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யும் சட்டமாக மேலோட்டமாக கருதப்பட்டாலும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகக் கொடுமையானவை. இதன்படி மாற்றுப் பாலினத்தவர்கள் இணைந்து வாழ முடியாத நிலைமையும், மாற்று பாலினத்தவரோடு பிறர் இணைந்து வாழ முடியாத நிலைமையும் நீடிக்கிறது. மேலும் சாதாரண மனிதர்களின் சில பாலுறவு முறைமைகளையும் இது தடை செய்கிறது. பாலுறவு தேர்வு என்பது தகுதி வாய்ந்த வயதையும் , விருப்பத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர இந்திய தண்டனைச் சட்டத்தின் பக்கங்களில் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக பிரிவு 377 யை எதிர்த்து போராடி வருகிற முற்போக்காளர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களின் கருத்து.

மேலும் ஒரே பாலின திருமண முறையான தன்பாலின உறவு திருமணத்துக்கு இதுவரை 25-க்கும் மேலான நாடுகள் அனுமதி அளித்துள்ளன. குறிப்பாக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், பின்லாந்த், பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பெர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா, உருகுவே போன்ற நாடுகள் அனுமதி அளித்துள்ளன.இந்நிலையில் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

இப்பிரிவின் கீழ் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்ற மாற்று
பாலினச் சொந்தங்கள். காலம் காலமாக அவர்கள் மீது சுமத்தப்படுகிற இழிவிற்கும், நிகழ்த்தப்படுகிற அடக்குமுறைகளுக்கும் இன்றைய தினம் ஒரு விடிவு பிறந்திருக்கிறது என்றே கொள்ளலாம்.

இந்த பிற்போக்குத் சட்டப்பிரிவை கொண்டுவந்த இங்கிலாந்து அரசு கூட பிரிவு 377 யை 60 களிலேயே திரும்பப் பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்ளிட்ட மத ஆதிக்கங்கள் உடைய சில நாடுகளில் மட்டுமே இச் சட்டம் போன்ற சில பிரிவுகள் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தை எழுதிய மெக்காலே மத நம்பிக்கைகள் அதிகம் உடைய இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக விசுவாசமானவர். அவர் கடவுளின் விருப்பத்திற்கு மாறானது என மத நம்பிக்கைகளை சார்ந்து இப்பிரிவை ஏற்படுத்தினார்.அதனாலேயே மத நிறுவனங்கள்,மத ஆதரவு அமைப்புகள் போன்றவை பிரிவு 377 யை தடை செய்ய எதிராக இருக்கின்றன. இதில் இந்து,கிருத்துவம், இஸ்லாம் என்றெல்லாம் பேதமில்லை.

ஆனால் நவீன உலகில் ஒடுக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஆதரவாக பல உரிமைக் குரல்கள் எழுந்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி கூட சென்ற முறை சட்டமன்றத் தேர்தலில் திருநங்கை ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்து வரலாற்றின் பொன்னேடுகளில் தன் பெயரை பதித்துக் கொண்டது.மேலும் தன் உறுப்பினர் சேர்க்கையில் ஆண்/பெண் என்பதோடு மட்டும் நில்லாமல் மூன்றாம் பாலினத்திற்கும் உரிய இடத்தை நாம் தமிழர் கட்சி வழங்கி இருக்கிறது.

பிரிவு 377 என்பது ஓரினச்சேர்க்கையை தடை செய்த சட்டம். அது நீக்கப்பட்டு விட்டதால் இனி நாடு முழுக்க ஓரினச்சேர்க்கை பரவும் என்பதான விடலைத் தன சிந்தனைப் பதிவுகளை நம்மால் காண முடிகிறது. சமூக தளங்களில், கல்வியறிவு கொண்ட மட்டங்களில் கூட மாற்றுப் பாலினம் அல்லது மூன்றாம் பாலினம் குறித்து இன்னும் பிற்போக்குத் தனமான சிந்தனைகள் நிலவுவது வேதனையானது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நாஸ் பவுண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடுத்த மனுவின் அடிப்படையில் நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய இந்திய அரசியலமைப்பு சட்ட அமர்வு பிரிவு 377 யை தடைசெய்து இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அவமானத்திலும், இழிவிலும் ,கூனிக் குறுகி நின்று ..கூனிக்குறுகி ..இத்தனை ஆண்டு காலம் பிச்சை எடுத்து ,பாலியல் தொழில் செய்து ..காவல்துறைக்கு கப்பம் கட்டி.. இழிபிறவிகளாக கேலி செய்ய படுபவர்களாக நடத்தப்படும் மாற்றுப் பாலின உறவுகளின் வாழ்வில் இத்தீர்ப்பு புதிய நம்பிக்கைகளை உண்டாக்கி இருக்கிறது. வலியும்,மானக்கேடும் இல்லாத ஒரு சகதர்ம வாழ்வு அவர்களுக்கு அமையட்டும்.

வாழ்த்துகள்.