கடந்த 8 வருடங்களாக நாம் தமிழர் என்கின்ற இந்த பெரும் பயணம் எண்ணற்ற அனுபவங்களை வாரி வழங்கியிருக்கிறது. நாம் தமிழராய் இணைகின்ற ஒவ்வொரு இளைஞனும் பொற்கால எதிர்காலம் ஒன்றை உருவாக்க லட்சிய தாகம் உடைய தனித்துவனாய் மாறுவதை நான் பெருமிதத்துடன் கவனித்து வருகிறேன்.

அதுவரை ஆங்கிலம் கலந்து பேசுகிற அவனது உதடுகள் வலுக்கட்டாயமாக தமிழில் பேச முயற்சிப்பதை கண்டு நான் வியந்திருக்கிறேன் ‌. பிரபாகரன் என்பது தனி மனிதனின் பெயர் அல்ல. அது ஒரு தத்துவம் வாழ்வியல் கோட்பாடு தனிமனித ஒழுங்கு என்றெல்லாம் அவரவருக்கு புரிந்த அளவில் அர்த்தப்படுத்திக் கொள்கிற கூட்டத்தில் அவனும் ஒருவனாக இணைவதை கண்டிருக்கிறேன். இனம் அழிந்த கதையை எப்போதும் மறக்காமல் சினத்தை கொள்கையாக தேக்கி உலவுகிற லட்சிய மனிதனாய் அவன் படிப்படியாக மாறுவதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

எதை செய்தாலும் அந்த இளமைக்கே உரிய கேலி கிண்டல்களுடன் கூடிய துள்ளல் தொனியோடு காற்றாய் திரியும் அவனது வாலிபம் கூடி செயல் செய்வதை ஒரு இயல்பாகக் கொண்டிருப்பதை கண்டு நான் ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை உறுதிமொழி எடுக்கும் போது , வீரவணக்கம் செலுத்தும் போதும் அடங்க முடியாத உணர்ச்சி அலைகளோடு அவன் போராடுவதை நான் நுட்பமாக அறிந்திருக்கிறேன்.

அணிந்திருக்கும் கருப்புச்சட்டை வேர்வைத் துளிகளால் பூத்து வெளுக்க‌.. உரத்த முழக்கத்தோடு வீதிகளிலேயே திரியும் அவன் பிற கட்சிகளின் மத்தியில் … அவர்கள் கண்டு வியக்கிற.. சொல்ல தயங்குகிற… உலவும் இளம் புலி.

அப்படித்தான் இன்றைய இரவும் இரண்டு இளைஞர்கள் வந்தார்கள். அவர்கள் கையில் துண்டறிக்கைகள் நிரம்பிய பெரிய பைகள் .

சமீபகாலமாக அவர்களை நான் கவனித்து வருகிறேன். எதையாவது செய்து சமூகத்தின் மீது படிந்திருக்கிற கரைகளில்/குறைகளில் ஏதேனும் ஒரு புள்ளியில் மட்டுமாவது அழித்துவிட முடியாதா என்கிற ஏக்கத்தோடு திரியும் இளைஞர்கள் அவர்கள். அண்மையில் எங்கள் ஊரில் பனை விதைகள் நடும் முகாமை வெற்றிகரமாக அந்த இரு இளைஞர்களும் தான் செய்து முடித்தார்கள்.

இந்த இளம் வயதில் இப்படிப்பட்ட லட்சிய வேகம் கொண்ட இளைஞர்கள் ஒரு தத்துவத்தின் பால் இழுக்கப்பட்டு ஒன்றாக கூடி பெரும் அரசியலை இந்த மண்ணில் நிகழ்த்த முயற்சிப்பது கண்டு பல பெரும் கட்சிகள் அதிர்ச்சியுற்று இருக்கின்றன.

இளம் வயதில் பரிமாறிக் கொள்ள எத்தனையோ கனவுகளும் / காதல்களும் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் மீறி மண்ணை நேசிப்பது அரசியலை ஒரு புனிதக் கடமையாக எண்ணி நிறைவேற்ற முயல்வது என்பதெல்லாம் சமகால இளைஞர்கள் மத்தியில் காண்பது மாபெரும் நம்பிக்கையை தருகிறது.

இப்போதும் அந்த இளைஞர்கள் கரங்களில் ஆயிரக்கணக்கான துண்டறிக்கை. என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டேன்..
வருகின்ற தீப ஒளி திருநாளில் ஏற்படுகிற சுற்றுச்சூழல் கேட்டினை விளக்கி அச்சிடப்பட்டிருக்கின்ற துண்டறிக்கையை கும்பகோணம் பள்ளி மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கலாம் என்று இருக்கிறோம் என்றார்கள்.

 

 

அந்த இருவரும் என் வீட்டில் இருந்த எனது மகன்கள் பகவலனுக்கும்,சிபிக்கும் துண்டறிக்கைகள் வழங்கி பணியை தொடங்கினார்கள். பட்டாசு வெடிக்கக் கூடாதா என்று தயங்கிய பகலவனிடம் அதற்கான காரணங்கள் விரிவாக விளக்கப்பட்டது ‌. ஒரு மாதிரியான அரைகுறை புரிதலோடு பகலவன் ஒத்துக் கொண்டான். தனக்கும் 54 துண்டறிக்கைகள் வேண்டும் (50 பள்ளிக்கு 4 கராத்தே வகுப்பிற்கு..) எனக் கேட்டு வாங்கிக்கொண்டான். எனது மூத்த மகன் சிபி அவன் அவனது சீமான் பெரியப்பாவின் பேச்சை கேட்டதிலிருந்து தீபாவளியை கொண்டாடுவதில்லை ‌. திரைப்படம் பார்ப்பதோடு சரி.

வந்த வேலை முடிந்தது அண்ணா என்றார்கள். ஊர் முழுக்க துண்டறிக்கைகள் கொடுக்க வேண்டும் என்றார்கள். நானும் தொகை தருகிறேன் ..
அடித்துக் கொள்ளுங்கள் என்றேன்.

அந்த துண்டறிக்கையை நான் வாசித்த போது தான் நுட்பமான ஒன்றினை கண்டறிந்தேன். அந்த துண்டறிக்கையில் இந்த மாபெரும் பணியை செய்கின்ற அந்த இளைஞர்களின் பெயரோ.. புகைப்படமோ எதுவும் இல்லை. தொடர்பிற்கான அலைபேசி எண்ணாவது அதில் இடம் பெற்றிருக்க வேண்டும் என நான் அவர்களை கடிந்து கொண்டேன். அவர்கள் அதற்கு அவர்களைக் உரித்த மெல்லிய குரலில் நோக்கம் போய் சேர்ந்தால் போதும் அண்ணா என்கிறார்கள்.

என் பெயரை ஏன் போடவில்லை/ ஏன் சொல்லவில்லை/ என்னை ஏன் மதிக்க வில்லை ..என்றெல்லாம் அரசியல் அநாகரிகங்கள் மிகுந்த இம் மண்ணில்தான் அந்த இரு இளைஞர்களும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். இது நாம் தமிழருக்கே உரிய தனித்துவ தன்னல மறுப்பு. தன்னை முன்னிறுத்தாமல் தத்துவத்தை முன்னிறுத்துகிற பெருங்குணம்.

இவர்கள் தான் நாம் தமிழரின் பெருமைமிக்க அடையாளங்களாக ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும்.. எங்கெங்கெல்லாம் தமிழன் வாழ்கின்றானோ அந்தந்த பகுதிகளிலும்..
இந்த இளைஞர்களைப் போல் பல்லாயிரக்கணக்கான தன்னல மறுப்பு இளைஞர் கூட்டம் ஒன்று தானே உருவாகி நிற்கிறது.

அவர்களிடம் கேளுங்கள்.
நாம் தமிழர் என்ற முழக்கத்திற்கான விளக்கத்தை..

அவர்கள் செயலால் உங்களுக்கு புரிய வைப்பார்கள்.

புரட்சி வாழ்த்துக்கள் இளையவர்களே.

Vicky Tamilan ( குடந்தை மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்)
Muthu Arun.(குடந்தை சுற்றுப்புற சூழல் பாசறை செயலாளர்)

உங்களுடன் நிற்பதுதான் எமக்கான
தகுதி.

வழக்கறிஞர் மணி செந்தில் ,
மாநில இளைஞர் பாசறை செயலாளர் ,
நாம் தமிழர் கட்சி.