பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவம் சமூகத்தில் பல சிந்தனைகளை, விவாதங்களை உருவாக்குகின்ற குறியீடாக மாறி இருக்கிறது.

பொள்ளாச்சி நடைபெற்ற அந்த சம்பவங்கள் வெறும் ஒரு ஊரும்,சில இளைஞர்களும் சம்பந்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த சமூகமே தங்களைத் தாங்கள் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய நிலையை இச்சம்பவம் உருவாக்கி இருக்கிறது. சாதி முதல் குழந்தை வளர்ப்பு வரை அனைத்தையுமே நாம் இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

காதலித்து விடக்கூடாது. சாதி மாறி காதலிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்,நாடகக் காதல் , ஜீன்ஸ் காதல் என்றெல்லாம் குமறியவர்கள் எல்லாம் இச்சமயத்தில் மெளனமாக இருக்கிறார்கள். கவனிக்க.

விளம்பரங்களில் வரும் குழந்தைகள் கூட மதங்கள் கிழித்திருக்கும் கோடுகளை தாண்டி விடக்கூடாது என்று பதறியவர்கள் எல்லாம் மெளனமாக இருக்கிறார்கள்.கவனிக்க.
…..

சாதி ஆணவக் கொலைகளால் உயிரிழந்த இளைஞர்கள் தாங்கள் நேசித்த பெண்களுக்காக தண்டவாளங்களில் பிணமாக கிடந்தார்கள். அவர்கள் இவர்கள் போல் அல்ல. அழைத்து வந்த பெண்ணை முறைப்படி மணந்தார்கள். வாழ முயற்சித்தார்கள்.

நம்பி வந்த பெண்ணுக்காக உயிரையும் கொடுத்து நேர்மையாக நின்றார்கள்.

அவர்கள் காதலை காட்டி யாரையும் ஏமாற்றவில்லை.நண்பர்களை வைத்துக் கொண்டு யாரையும் கற்பழிக்கவில்லை.
…..

இத்தனை பெண்கள் பாதிக்கப் பட்ட பிறகும் கூட ஏன் அந்தப் பெண் அங்கே போனாள்.. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி முடியும்‌. என்றெல்லாம் பேசுகிற ஆட்களின் பின்புலத்தினை கவனித்து வையுங்கள்.. சாதி மதம் போன்றவற்றின் பாதுகாவலர்களாக அவர்கள் இருப்பார்கள்.பெண் கல்வியை மறுப்பவர்களாக.. பெண்களின் மீதான வன்முறை நிகழும் போதெல்லாம் அந்த பெண் ஏன் அப்படி உடை அணிந்தாள் .. அவள் ஏன் செல்போன் பயன்படுத்தினாள் என்று பேசுபவர்களாக.. இருப்பார்கள்.

பெண்கள் மீதான வன்முறைக்கு சாதி மதம் எல்லாம் வரையறைக்கோடுகள் அல்ல. சொல்லப்போனால் சாதி – மதம் போன்ற அடிப்படை வாதங்கள் தான் இதுபோன்ற கேடுகளை பராமரிக்கும். பாதுகாக்கும்.

இதில் ஊடகங்கள் நிகழ்த்துகின்ற அரசியலையும் நாம் கவனிக்க வேண்டும். செய்தியை யார் முந்தித் தருவது, பரபரப்பை யார் தூண்டுவது, என்கிற போட்டியால் பொறுப்பற்ற முறைமையில் ஊடகங்கள் செயல்பட தொடங்கி விட்டன. ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் உண்மைக்கு தாண்டிய உள் நோக்கங்கள் இருக்கின்றன என்பதை கடந்த காலங்களில் ஊடகங்கள் வெளிப்படுத்தியே வருகின்றன.

குற்றம் செய்த இளைஞர்களை தாண்டி அவர்களது குடும்பத்தினரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளிவருவது என்பது இன்னொரு கொடுமை. அந்த குடும்பத்தினரின் பொறுப்பற்ற தன்மை தான் இந்த குற்றவாளி இளைஞனை உருவாக்கியிருக்கிறது என்றாலும் கூட.. தற்போது தலைகுனிந்து இருக்கின்ற அந்த குடும்பத்தினரை நாம் மேலும் காயப்படுத்துவது என்பது சரியல்ல என்றே நான் கருதுகிறேன்.

…..

இதையெல்லாம் தாண்டி ஆண் குழந்தைகளை பெற்று வளர்க்கின்ற பெற்றோராகிய நமக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.

மகன்களோடு உரையாடுதல். ஆண் உடல் போன்றே பெண் உடலும் என்ற புரிதலை ஏற்படுத்துதல். பெண் சமூகத்தின் சக உயிரி என்ற மதிப்பீட்டை உருவாக்குதல். வீட்டில் இருக்கின்ற பெண்களை மதிப்புடன் நடத்துதல். சமூகப் பார்வையோடு சமூக கேடுகளுக்கு எதிரான உணர்ச்சிகளோடு பிள்ளைகளை வளர்த்தல்.
.
இதுவரை மகன்களோடு வெளிப்படையாக உரையாடாத பெற்றவர்கள் யாரேனும் இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது. தோழமை மிகுந்த அறிவுறுத்தல்களே நம் மகன்களை மிருக நிலையிலிருந்து காப்பாற்றும்.

நான் என் மகன்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள்..??

மணி செந்தில்.