தமிழ்ச் சமூகத்தின் ஓர்மைக்கு எப்போதும் சாதி ஒரு மாபெரும் தடையாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே தான் சாதி முரண்களை திராவிடம் கடுமையாக பாதுகாத்து தமிழர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. இதை இன அழிவு காலங்களில் நுட்பமாக கவனித்த தமிழின இளைஞர்கள் இனி சாதியை துறந்த தமிழர்களின் பெரும் திரள் அரசியலே தமிழ்த்தேசிய அரசியல் என்பதை தெளிவாக வரையறுத்துக் கொண்டு தான் நாம் தமிழர் என்கின்ற ஒரு மாபெரும் அமைப்பைத் தொடங்கினோம்.

ஆனால் கால ஓட்டத்தில் எங்களோடு அவர்களாகவே வந்து இணைந்த சிலர் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப.. தழைக்க விரும்பிய தமிழ்த்தேசிய கருத்தியலை தங்களது சாதிய உணர்வுகளுக்கு ஏற்ப வளைக்க விரும்பினர். ஆனால் தொடர்ச்சியாக நாம் தமிழர் தனது மேடைகளில் இந்துமத ஆதிக்கங்களுக்கு எதிராக.. சாதி முரண்களுக்கு எதிராக தீவிரமாக முழங்கி வந்தது. இதனால் கடும் எரிச்சலுற்ற அந்த குறிப்பிட்ட கூட்டம் சாதி எதிர்ப்பு கருத்தியலில் தீவிரமாக செயல்படுகிறவர்களை கடுமையாக ஏசி மிரட்டியது.

சாதியை பார்த்து தான் தமிழர்கள் யார் என்று கண்டறிய வேண்டும் என இந்த மனநிலை தவறிய கூட்டம் சுயசாதிப் பித்தம் தலைக்கேறி உளரத் தொடங்க.. சாதியை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் இளையோர்கள் கடுமையாக சமூக வலைதளங்களில் எதிர்வினை செய்தார்கள். சாதி உணர்விற்கு எதிரான இளையோர் கூட்டம் நாம் தமிழர் என திரளத் தொடங்கியதை சகிக்க முடியாமல் மாறுபட்டு கருத்து தெரிவிப்பவர்களை எல்லாம் தெலுங்கர் என்றும் வந்தேறி என்றும் பட்டம் கட்டியது இந்த கூட்டம் தான் . (என்னையெல்லாம் சவுராஷ்டிரா (?) ஆகிட்டாங்க)

யார் எதை எழுதினாலும் பேசினாலும் சாதி சான்றிதழை கேட்பதை தமிழ்த் தேசியம் என இவர்கள் வரையறுத்துக் கொண்டதுதான் உச்சபட்ச காமெடி. யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் எந்த சாதியின் சான்றிதழையும் சில ஆயிரங்களில் பெற முடிகிற ஊழல் நிர்வாகச் சூழலில்.. அதுதான் இவர்களுக்கு உச்சபட்ச ஆவணம்.

இவர்களுக்கு யாரையும் பற்றி எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவர்களால் முடியாது. எல்லா விவரங்களும் போகிறபோக்கில் அடித்து விடப்படுவது தான். எதிர்த்து எழுதினால் அவர் தெலுங்கர் வடுக வந்தேறி சௌராஷ்டிரா இன்னும் பல. மீறி கேட்டால் சாதி சான்றிதழ் காட்டு என மிரட்டல்.

வந்தேறி என்ற சொல்லை நாம் தமிழர் பயன்படுத்தாத சூழலில் நாம் தமிழர் போர்வையில் இந்த கூட்டம் செய்த வேலைகளால் பல விமர்சனங்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிட்டது.

ஒரு கட்டத்தில்.. இந்த கூட்டத்தின் தவளைக் குரல்களை நாம் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நிலையில்.. அந்தக் கூட்டம் ஒருவழியாக கலைந்து அந்தந்த சாதி சார்ந்த அரசியல் கட்சிகளை ஆதரிக்க பிரிந்துவிட்டது.

இந்தக் கூட்டத்தைப் பற்றி என்னைப் போன்றவர்கள் தொடக்கத்தில் இருந்து நாம் தமிழர் கட்சி உறவுகளிடம் தீவிரமாக எச்சரித்து வந்தோம். அண்ணன் சீமான் அவர்கள் இதை அறிந்து ஒவ்வொரு மேடையிலும் சாதி முரண்களுக்கு எதிரான தனது நெருப்புக் கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்து வந்தார். ஆனாலும் சில நாம் தமிழர் தம்பிகள் ஆர்வக் கோளாறினால் இந்தக் கூட்டத்தின் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிப்பது, பகிர்வது போன்ற வேலைகளை பின் விளைவுகள் தெரியாமல் செய்து வந்தனர்.

சமீபகாலமாக அமைதியாக இருப்பது போல காட்சியளித்த இந்த கூட்டம் தேர்தல் காலத்தில் தன்னெழுச்சியாக நிகழ்ந்த நாம் தமிழர் கட்சியின் மாபெரும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தாங்கள் ஆதரித்து வருகிற என்பது சாதி சார்ந்த அரசியல் அமைப்புகள் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில்.. எங்களைப் பற்றிய அவதூறுகளை மீண்டும் பரப்பத் தொடங்கினர். அதில் ஒன்றுதான் கடந்த இரண்டு நாட்களாக பரப்பப்படும் அந்த அலைபேசி குரல் பதிவு.

அதில் பேசுகின்ற நபர் இந்தக் கூட்டத்தில் ஒருவர். அவரோடு உரையாடுகிற எம் அமைப்பை சேர்ந்த எங்கள் தம்பியிடம் வேண்டுமென்றே சீண்டி ஆபாச சொற்கள் மூலம் உரையாடலை தொடங்கி அதை பதிவு செய்து பொது வெளியில் வெளியிட்டிருக்கிற அந்த குறிப்பிட்ட நபர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம்.

இழிவான குணங்களோடும் வக்கிர மனநிலையோடும் உலா வருகின்ற இதுபோன்ற நபர்களோடு எவ்வித தொடர்பும் நம் உறவுகள் வைத்துக் கொள்ளக்கூடாது என பல முறை நாங்கள் எச்சரித்தும் சிலர் அவர்களோடு வைத்திருந்த தொடர்பினால்தான் இன்றைய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டம் எப்போதும் நமக்கு எதிரானவர்கள் என்பதை நமது உறவுகள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

எப்போதும் சாதி நிலைகளை ஆதரிக்கிறவர்கள் தமிழர்களின் ஒற்றுமையை விரும்பாதவர்கள். தங்களின் சாதி பெருமித உணர்விற்காக சாதியை மறுத்து கூடுகின்ற நாம் தமிழர் என்கின்ற இந்த இளையோர் அமைப்பினை தகர்க்க எதையும் செய்வார்கள்.

இதில் மிகப் பெரிய காமெடி என்னவென்றால்..நம்மால் அதிகம் காயம்பட்டு உள்ள திராவிடக் கூட்டம் இந்த அலைபேசி உரையாடலை பரப்புவதில் காட்டுகிற ஆர்வம் தான். மதுரை திமுக பகிரி குழுமததி்ல் மிகப் பெரிய ஆதாரம் போல இந்த அலைப்பேசி உரையாடல் பரப்பப்பட்டு வருவதை எங்கள் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். முற்போக்கு வெங்காயங்களுக்கு, ராட்சசன் திகில் பரிசுப்பொட்டிகளுக்கு இதைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டிருக்கிற பரசவம் கொஞ்ச நஞ்சமல்ல.

சாதி முரண்களைக் களையக் கூடாது என்பதில் திராவிடமும் வறட்டு சாதி தேசியமும் ஒரே அலைவரிசையில் ஒன்றாக நிற்கிறது ‌. சாதி சார்ந்த அரசியல் அமைப்புகள் இதை திட்டமிட்டு பரப்பி வருகின்றன.

அரசியலில் நம் எதிரிகள் கூட பேசத் தயங்கும் வசவுச் சொற்களை மிக எளிதாக இந்த வறட்டு சாதி தேசியவாத கூட்டம் கையாளுகிறது என்றால்.. இந்தக் கூட்டம் நம்மீது கொண்டிருக்கின்ற வன்மத்தின் அளவு குறித்து நமது உறவுகள் சிந்திக்க வேண்டும்.

இரண்டு நபர்கள் பேசிக்கொள்ளும் ஒரு சாதாரண வசவு உரையாடல் என்பது எல்லா அமைப்புகளுக்கு உள்ளும் புறமும் நடக்க கூடியது. இதையெல்லாம் ஒரு ஆதாரமாக வைத்துக் கொண்டு ஒரு அமைப்பினை வீழ்த்திவிடலாம் என கருதுபவர்களை காணும்போது தான் எங்களின் வளர்ச்சி எங்களுக்குப் புரிகிறது.

இடுப்பை பிடித்து கிள்ளியவர்கள், ரோட்டு பக்கமாக வரச்சொன்னவர்கள் , டோக்கன் போட்டு ஓட்டு கேட்டவர்கள், போன்றவர்களெல்லாம் ஏதோ மகத்தான ஆதாரம் கிடைத்து விட்டதாக மகிழ்ந்து கொண்டாடுவது எங்கள் மீதான அளவுக்கதிகமான அச்சம் என்பதனை உணர்கிறோம்.

அந்த அச்சத்தின் அளவு உயர உயர நாங்கள் வளர்கிறோம்.

நாம் தமிழர்.