சுய சாதியை குறித்து எந்தவித பெருமிதமும் கொள்ளாமல் அதை மிக இழிவான அடையாளமாக கருதுவதுதான் உண்மையான சாதிமறுப்பு.

மேலும் சாதியக் கட்டமைப்பினால் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிற உனது சக மனிதனை கை தூக்கி விடுவது போல பிறக்கிற எந்த ஒரு இலக்கியமும், திரைப்படமும் கொண்டாடத்தக்கவையே..

பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு நான் எல்லாம் தலைகுனிந்து இருக்கிறேன்.
எங்களது தாய்வழி பூர்வீக கிராமத்தில் எனது குடும்பத்து முன்னோர்கள் இந்த சாதி கட்டமைப்பினால் சக மனிதர்களை அடிமையாக நடத்திய விதம் குறித்து குற்ற உணர்வு கொண்டிருக்கிறேன். அருவருப்பு அடைந்திருக்கிறேன்.

என்னடா உங்கள் பெரிய மயிறு சாதி என்று செத்துப்போன எனது குடும்பத்து பெருசுகளை தோண்டி எடுத்து காறித் துப்பலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.

பரியேறும் பெருமாள், அசுரன் போன்ற கலைப்படைப்புகள் எண்ணற்ற எளிய மனிதர்களின் மனசாட்சியை தொட்டு எழுப்பி சாதிமறுப்பு மனநிலையை உண்டாக்கி இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவி சாதி குறித்த கேள்விகளை அவை எழுப்புகின்றன. அசுரன் படம் பார்த்துவிட்டு எனது மகன் இரண்டு மணி நேரம் சாதிய கட்டமைப்பு களைப்பற்றி அதன் கொடுமைகளை பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். இவை போன்ற படைப்புகள் தான் இப்போது தேவைப்படுவது.

பெற்றோர் பக்கத்திலிருந்து பார்ப்பதாக கூறி சாதி மறுப்பு திருமணங்களை மறுக்கிற அல்லது அவமானப்படுத்துகிற எந்த படைப்பும் தந்திரமாக சாதி நிலைகளுக்கு ஆதரவானதே.

அது என்ன ஒரு பக்கம் என்று கேள்வி கேட்பதே அவமானகரமானது. ஏனெனில் சாதிமறுப்பு நிலை என்பது நடுநிலையானது அல்ல. அது சாதி நிலைக்கு எதிரானது.பல்லாயிரம் ஆண்டுகளாக நுட்பமான சாதி கட்டமைப்பினால் இந்த சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இப்படித் தாழ்ந்து வீழ்ந்து கிடைக்கிற சகமனிதன் அதன் பிடியிலிருந்து வெளிவரத் துடிக்கும் போது உடனிருந்து கைப்பிடித்து தூக்கிவிட வேண்டியதும் ஆதரவாக நிற்க வேண்டியதும் மனிதனாக உணர்கிற ஒவ்வொருவரின் கடமை.

அதைவிட்டுவிட்டு மறுபக்கம் பேசுகிறேன், இன்னொரு பக்கம் பற்றி யோசியுங்கள் என்றெல்லாம் பேசுவது நேரடியாக சாதியை ஆதரியுங்கள் , அப்படித்தான் சகமனிதனை கீழ்மையாக நாங்கள் நினைப்போம் என்பதற்கு நிகரானது.

முதலில் வெளிவராத ஒரு திரைப்படத்திற்கு தந்திரோபாயமாக செய்யப்படும் இதுபோன்ற விளம்பர முயற்சிகளுக்கு நாம் பலியாகி விடக்கூடாது. இதை ஒரு விவாதமாக கூட மாற்றக் கூடாது. புறக்கணிப்பு மட்டுமே சரியான எதிர்வினை.

என்னைப் பொறுத்தவரையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதி நிலைகளை ஆதரிக்கிற எந்த ஒரு திரைப்படமும் அல்லது இலக்கியமும் சமூகத்தால் தீண்டத்தகாத அருவருக்கத்தக்க படைப்புகளே..