விமர்சனங்களில் பலவகை உண்டு.ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது, விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கற்பனை செய்து கதை எழுதுவது‌ என்பதான வகைகள் விமர்சனங்களில் உண்டு.குறிப்பாக நாம் தமிழர் மீது ஏவப்படும் விமர்சனங்களை கூர்ந்து கவனியுங்கள். கடந்த பத்தாண்டுகளாக விமர்சனங்களைத் தவிர வேறு எதையும் அடையாத நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயணம் என்பது அசாதாரணமானது.ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தபோது அதிமுகவோடு கூட்டணி வைக்கப் போகிறார் என ஒரு கூட்டம் அலறும்.சசிகலாவை போய் பார்த்து விட்டு நடராஜன் சாவிற்கு துக்கம் விசாரித்துவிட்டு வந்தால் சீமான் சசிகலாவின் ஆள் என ஏதோ ஒரு கூட்டம் பதறும். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியை சந்தித்து கோரிக்கைகள் வைத்து விட்டு வந்தால் இவர் அண்ணா திமுகவின் ஆள் இன்னொரு கூட்டம் சிதறும். திருமண விழாவில் எதிர்பாராமல் சந்தித்து விட்ட பொன் ராதாகிருஷ்ணனை பார்த்து ஒரு வார்த்தை பேசினால் உடனே பாஜகவின் ஆள் என்று ஒரு கூட்டம் பதறும். கமல் கட்சி தொடங்கும் போது அவர் அழைத்த காரணத்திற்காக நேரடியாக அண்ணன் சீமான் சந்திக்க போனதை கமலோடு கூட்டணி என கதை கட்டி மற்றொரு கூட்டம் கதறும்.

அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பது என்பது வேறு. தனிப்பட்ட முறையில் மனித மாண்போடு சக அரசியல் தலைவர்களை அணுகுவது, சந்திப்பது என்பது வேறு. எப்போதும் அண்ணன் சீமான் அதில் மிகச் சரியாக இருந்திருக்கிறார். தீவிரமாக எதிர்த்த திமுக தலைவர் கருணாநிதி சாவிற்கு கூட அண்ணன் சீமான் சென்று விட்டு தான் வந்தார். இதுபோன்ற செயல்பாடுகள் அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு.சக அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுவதால் அண்ணன் சீமான் என்றுமே தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதில்லை. கடந்தகால வரலாறு அதை கம்பீரமாக அறிவிக்கிறது.இன்று முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலினை 7 தமிழர் விடுதலை மற்றும் இதர கோரிக்கைகளுக்காக எங்கள் அண்ணன் சீமான் சந்தித்து விட்டு வந்திருக்கிறார்.

வழக்கம்போல கதற தொடங்கிவிட்டார்கள். 7 தமிழர் விடுதலை பற்றி எடப்பாடியிடம் இன்று பேச முடியாது. எடப்பாடி கூட ஸ்டாலினிடம் தான் இன்று கோரிக்கைகள் வைக்க முடியும்.‌ அந்நிலையில் தமிழகத்தின் மூன்றாவது மாபெரும் அமைப்பாக, உண்மையான எதிர்க்கட்சியாக உருக்கொண்டு நிற்கின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முதல்வரை சந்திப்பது என்பது ஒரு மிகச்சரியான எதிர்க்கட்சிக்கான பண்பியல்.எதற்கெடுத்தாலும் விமர்சிக்க வேண்டும், கதற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியை கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருக்கிற கண்றாவிகளைப் பற்றி நமக்கு கவலை இல்லை.

ஆனால் ஸ்டாலினை பார்த்துவிட்டு வந்து விட்டால் இனி திமுகவை விமர்சிக்க மாட்டார்கள் என நப்பாசையில் கூவும் சில 200 ரூபாய் ‘உபி’ களை பார்க்கும்போதுதான் உண்மையில் காமெடியாக இருக்கிறது.திமுகவை கொள்கை அடிப்படையில், கோட்பாட்டு எதிர்நிலையில் எதிர்ப்பது என்பது நாம் தமிழர் கட்சியின் அடிப்படை பண்புநலன். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.திமுக தலைவரை அண்ணா அறிவாலயத்தில் அண்ணன் சீமான் சென்று பார்க்கவில்லை. தமிழக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதல்வரை, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி மாபெரும் கட்சியாக இன்று உருவாகியிருக்கிற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அண்ணன் சீமான் தலைமைச் செயலகத்தில் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.

அடுத்து வருகிற ஐந்து வருடமும் உண்மையான எதிர்க்கட்சியாக, திமுக அரசு தவறு செய்தால் கடுமையாக விமர்சிக்கின்ற, எதிர்த்துப் போராடுகின்ற மக்களின் அமைப்பாக நாம் தமிழர் கட்சி உறுதியாக செயல்படும். எந்த புதிய அரசுக்கும் முதல் 100 நாட்கள் என்பது தயாரிப்புக்கான காலம். அதனால் எடுத்த எடுப்பிலேயே விமர்சித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய காலம் இருக்கிறது. நல்லது செய்தால் யாராக இருந்தாலும் நாங்கள் பாராட்டுவோம். அதே சமயம் எம் இனத்திற்கு என ஒரு தீமை விளைந்தால் எவராயினும் எதிர்த்து நிற்போம்.அந்த மன உறுதியோடு தான் நாங்கள் அரசியல் களத்தில் நிமிர்ந்து நிற்கிறோம்.வழக்கம் போல் கிளம்பியிருக்கிற புரிதலற்ற கூப்பாடுகளை புறம்தள்ளி நாம் முன் செல்வோம்.

இப்போது விமர்சிக்கிற எவரும் எப்போதும் நம்மை ஆதரித்ததில்லை. இனியும் ஆதரிக்கப் போவதுமில்லை. அவர்களுக்கு நாம் அசைந்தாலே குற்றம். அவற்றையெல்லாம் நாம் கணக்கில் எடுத்தால் நாம் எதுவும் செய்ய முடியாது.இதை நமது உறவுகள் கணக்கில் எடுத்துக் கொண்டு எதை ஏற்க வேண்டும், எதை புறந்தள்ள வேண்டும் என்ற புரிதலில் சிந்தித்தாலே போதுமானது.

நாம் தமிழர்.