பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: டிசம்பர் 2021

மருத்துவர் சித்தார்த்தன்-ஆயிரம் மலர்களில் மலர்ந்தவர்.

❤️

நாங்கள் மூணாறு சென்று சேர்ந்தபோது நடுநிசி ஆகிவிட்டது. இரவு உணவிற்கு முன் விடுதிக்குள் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்று நாங்கள் போட்டிருந்த திட்டம் கடுமையான மழைப் பொழிவினால் தாமதமாகிவிட்டது.அந்தக் காரை ஓட்டிக் கொண்டு வருபவர் பெரும் ரசனைக்காரர். பயணம் தொடங்கியதிலிருந்தே அருண்மொழியின் புல்லாங்குழல் களும், அலையலையாய் எழுந்த வயலின்களின் கூட்டு இசையும், பெண்களும் ஆண்களுமாய் கோரஸ் பாடிய சேர்ந்திசை பாடல்களும் , இளையராஜா என்கின்ற மாந்திரீகனால் எங்களுக்காக உருவாக்கப்பட்டதோ என சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு ஊடுருவிக் கொண்டிருந்த பாடல்கள் சதா அந்த காருக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அடிக்கடி அவர் “இந்த வரிகளை கேளுங்கள், இந்த வயலின் பிட்டை கேளுங்கள்” என சொல்லிக்கொண்டே காரை ஓட்டி வந்தார்.

ஆங்காங்கே மலைச்சரிவுகளில் காரை நிறுத்திவிட்டு அமைதியாக மழை பொழிவதை நாங்கள் பார்த்துக்கொண்டே நின்றோம்.”மழையும், இளையராஜாவும் ஒன்று தானே..” என்றார். இரண்டுமே அலுப்பதே இல்லை என்று அவரே மெல்லியக் குரலில் சொல்லிக் கொண்டார். இப்படிப்பட்ட ரசிக மனப்பான்மை கொண்ட ஒருவர் வழித்துணையாக கிடைக்கும் அந்தப் பயணம்தான் எப்படி கவித்துவமானது..??…..அந்தக் கவித்துவ பயணத்திற்கு முன்னாலிருந்த பல நாட்கள் மிகப் பொல்லாதவை.

ஏறக்குறைய ஒரு சரிவில் நானே உருண்டு கொண்டிருந்தேன். பற்றி ஏற எதுவும் இல்லை என்ற நிலையில், ஒரு அதல பாதாளத்திற்குள் நான் விழுந்து கொண்டிருந்தேன். என்னை சேர்ந்தவர்கள் தவித்துப் போனார்கள். எப்படியாவது மீண்டும் எழுப்பி முன் நிறுத்தி விட வேண்டும் என என்னை விரும்புபவர்கள் அனைவரும் துடித்துக் கொண்டிருந்தார்கள். எவருடைய சொற்களும் என் காதில் ஏறவில்லை. அப்போதுதான் அண்ணன் சித்தார்த்தன் வீட்டுக்குள் கசங்கிப்போன துணி போல, மூலையில் சுருண்டு கிடந்த என்னை சலவை செய்ய ஒரு மலை பயணத்திற்கு அழைத்துப்போனார்…..திடீரென வீட்டிற்கு முன் ஒரு நாள் காரில் வந்து இறங்கினார். “வாருங்கள்.. போவோம்” என்றார். எங்கே என்று நான் கேட்கவுமில்லை. அவரும் திருச்சி தாண்டும் வரை சொல்லவும் இல்லை.

வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என வீட்டில் சொல்லிவிட்டு என்னை அழைத்து வந்தார். ஏற்கனவே பயந்திருந்த எனது வீடு அவர் அழைக்கிறார் என்று தெரிந்தவுடன் உடனே அனுப்பி வைத்தது……திண்டுக்கல்லை தாண்டியவுடன் மழைப்பொழிவு தொடங்கியது. நாங்கள் தேனி வழியாக மூணாறு செல்ல திட்டமிட்டிருந்தோம். வழியெல்லாம் மழை. ஆனால் அவரோ காருக்குள் பாடிக்கொண்டு இருந்த பாடல்களின் சேர்ந்திசையாக மழையையும் மாற்றிவிட்டார். அவர் ஒரு அற்புதமான ஓட்டுனர். எந்தச் சரிவிலும், எந்த திருப்பதிலும் வண்டியை லாவகமாக திருப்ப கவிதை குறிப்புகள் போல அவரிடம் சில பிரத்தியோக நெகிழ்வுகள் இருந்தன…..”அலைபேசியை அணைத்து போடுங்கள்” என்றார்.

“கடந்த காலத்தைப் பற்றி எதையும் யோசிக்காதீர்கள்,எதிர்காலம் என்ற ஒன்று இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்,நிகழ்காலத்தில் இருப்பது ஒன்றே நிஜம் என்று நம்புங்கள்”.. எனச் சொன்னார். கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில் நிகழ்காலத்தை கவனிக்கத் தவறுகிற என் கண்களை அவர்தான் அந்த மழைப் பயணத்தில் திறந்துவைத்தார்…..சாதாரண நிலப்பரப்பில் பெய்யும் மழையை விட மலைப் பகுதிகளில் பெய்யும் மழை சற்றே உக்கிரமானது. இரு பக்கமும் தலைவிரித்து ஆடும் மரங்கள் மனதை ஏதோ செய்தன. ஆனாலும் இவர் ரசித்துக்கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டு மூணாறு நகரத்தைத் தாண்டி ஒரு காட்டுக்குள் இருந்த “Rain Forest” என்ற பகுதியிலிருந்த ஒரு விடுதிக்கு என்னை அழைத்துப் போனார். அந்த விடுதியின் பெயரும் “Rain Forest” தான்……நான் கொஞ்சம் இலகுவாகி இருந்தேன்.

மழையும், இயற்கையும் ஒருங்கிணைந்து என் முடிச்சுகள் ஒவ்வொன்றையும் அவிழ்த்துக் கொண்டே இருந்ததை நானே உணர்ந்து கொண்டே இருந்தேன். அது அவருக்கும் புரிந்திருக்கும் போல.. “Better ஆ feel.. பண்றீங்க போல” ..என கேட்டு விட்டு புன்னகைத்தார்….இரவு முழுக்க பேசிக்கொண்டே இருந்தார். கனவுகள் நிறைய சுமக்கும் ஆன்மா அவருடையது. அவரது ரசனைகள், விருப்பங்கள், தேர்வுகள் என ஒவ்வொன்றையும் என்னிடம் ஆழமாக விவரித்துக் கொண்டே சென்றார்.

நான் ஏதோ கொட்ட முயன்ற போதெல்லாம் அதை அலட்சியப்படுத்தி விட்டு நான் எழுதிய சில கவிதைகளை அவர் படித்துக் கொண்டிருந்தார்….மழை இரவு. குளிர் பொழுது. பயணக் களைப்பு. அப்படியே தூங்கி விட்டேன். காலையில் விழித்து பார்க்கும் போது என் மீது கனமான போர்வை ஒன்று போர்த்தப்பட்டு இருந்தது. அவர் வெளியே சென்று விட்டு புதிதாக விளைந்த கேரட்டுகளை வாங்கி வந்திருந்தார்.‌ காலை உணவாக பச்சை காய்கறிகளை உண்ணுவது மிக மிக நல்லது என சொன்னார்….அப்போதுதான் நான் மெதுவாக கேட்டேன். “எதற்காக என்னை அழைத்து வந்து இருக்கிறீர்கள்.. ?, இவ்வளவும் செய்து கொண்டு இருக்கிறீர்கள்..?” என கேட்டேன். இந்த கேள்விகளுக்கெல்லாம் என்னிடத்தில் பதில் இல்லை என்றார் அவர். பிறகு அவரே மெல்லிய குரலில்..”நான் தனிமைப்பட்டு துவண்ட போது எனக்கு யாரும் இல்லை. அப்போது நான் ஒரு முடிவு செய்து கொண்டேன். யாராவது காயப்படும் போது நான் அவர்களோடு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டுதான் உங்களோடு வந்திருக்கிறேன், காயப்படும் போது மருத்துவம் பார்ப்பது தானே மருத்துவன் கடமை…” என்றார்

….”ஊர் சுற்ற போவோமா..” என்று கேட்டேன். “வேண்டாம் ஒய்வெடுங்கள்” என்றார். “தோட்டத்தில் உட்கார்ந்து ஏதாவது எழுதிப் பாருங்கள்..” என்றார். நான் ஏதாவது எழுதுவோம் என நினைத்து அமரும்போது எழுத எனக்கு எதுவும் வரவில்லை. எதிரே அமர்ந்திருந்த அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் . “வந்த வேலை சரியாக நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் காலியாகி ( Empty) கொண்டிருக்கிறீர்கள்.” என்றார்

.‌‌…அண்ணன் மருத்துவர் சித்தார்த்தன் 2009 காலகட்டங்களில் எனக்கு பழக்கம். ஈழ ஆதரவு போராட்டங்களின் போது ஈழத்தில் மக்கள் படும் துயரங்களை, இனப் படுகொலைக் காட்சிகளை தாங்கிய சிடி தயாரிக்க எங்களுக்கு 1000 சிடி வாங்கிக் கொடுத்தார். மக்களிடம் பரப்புங்கள் என்றார். தஞ்சை வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை “மாவீரன் முத்துக்குமார்” ஆவணப்படம் தயாரித்து விட்டு தவித்துக் கொண்டிருந்த போது படத்தை வெளியிட பெருமளவு பணம் தேவையாக இருந்தது. அண்ணன் நல்லதுரை என்னிடம் என்ன செய்யலாம் என கேட்டபோது.. “அண்ணன் சித்தார்த்தனுக்கு படத்தைப் போட்டுக் காட்டுவோம். அவர் மூலமாக மருத்துவர்களிடம் பணம் வசூலிப்போம்..” என்று சொன்னேன். எங்கள் வீட்டில் படம் திரையிடப்பட்டது. படம் பார்த்துக்கொண்டிருந்த அண்ணன் சித்தார்த்தன் மாவீரன் முத்துக்குமார் தீ குளிக்கும் காட்சியில் கலங்கி அழத் தொடங்கிவிட்டார்.

படம் முடியும் வரை அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. படம் முடிந்த பின்னர் எங்கள் திட்டத்தை அவரிடம் சொன்னோம். “எந்த மருத்துவரிடமும் கேட்கத் தேவையில்லை, நானே முழு பணம் தருகிறேன்..” எனச்சொல்லி ஒரு பெரிய தொகையை அளித்து உதவி செய்தார். அதன் பிறகு நாம் தமிழர் உருவான காலகட்டங்களில் திமுக, திராவிட இயக்கம் என்றெல்லாம் பயணித்துக்கொண்டிருந்த அவர் நாம் தமிழரை மானசீகமாக நேசிக்கத் தொடங்கினார். அண்ணன் சீமான் மீது அளவற்ற அன்பு அவருக்கு. கும்பகோணத்தில் நடந்த ஒரு கலந்தாய்வு கூட்டத்தில் மேடையில் அண்ணனுக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்த அவர் அண்ணன் சீமானின் கரங்களை பற்றிக் கொண்டே இருந்த காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது.

சமூகத்திற்காக உழைக்க முன் வருபவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார்….ஏதோ ஒரு விசித்திர அலைவரிசை என்னையும் அவரையும் இறுக்கி கட்டிப் போட்டு வைத்து விட்டது. என் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் அவர் தானாக முன்வந்து இடம்பெறத் தொடங்கினார். எங்கே சென்றாலும் என்னையும் அழைத்துக் கொண்டு அலைவார்.என் எழுத்துக்கள் மீது அவருக்கு மிகுந்த விருப்பம். என் புத்தகங்கள் அனைத்தும் அவரிடம் இருக்கின்றன. படித்துவிட்டு அலைபேசியில் பல மணி நேரம் கொண்டாடித் தீர்ப்பார். நீங்கள் கொண்டாடும் அளவிற்கு அதில் எதுவும் இல்லை அண்ணா என சொன்னால்.. உனக்கு எழுத வருகிறது அதை விட்டு விடாதே என்றார்.திரைப்படத்திற்கு கதை ஒன்றை தயார் செய்து அவரிடம் காட்சி காட்சியாக நான் விவரித்தபோது ஆர்வமாக கேட்டவர் .. உடனே இதற்கு திரைக்கதையை தயார் செய்யுங்கள். ஒரு வருட காலத்திற்குள் நானே தயாரிக்கிறேன் என்றார்.

காரை ஓட்ட நான் கற்றுக் கொண்ட போது அவரை வைத்துக்கொண்டு கும்பகோணத்தை ஒரு வலம் வந்தேன். பெருமிதத்தால் என்னை கட்டிக்கொண்டு கண்கள் கலங்க “இது தான் நான் எதிர்பார்த்தேன்” என்றார். அந்த விழிகளின் ஈரம் தாய்மைக்கு நிகரானது

…..உடல்நிலையோ மன நிலையோ சரி இல்லையெனில் அவர் மருத்துவமனையில் போய் அமைதியாக அமர்ந்திருப்பேன். என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு கூடு. நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என என்னை நினைக்க வைக்கிற கூடு. அங்கே போனால் பேரன்பு சிறகுகளின் தாய்மை கதகதப்பு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. கடைசி சந்திப்பு வரை அந்த நம்பிக்கை பொய்த்ததே இல்லை….

எனக்காக மூணாறு வந்த அவர் ஐந்து நாட்களும் என்னை அமைதிப் படுத்துவதில், முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தனிமையிலே என்னை சிந்திக்க அனுமதித்தார். தலைகுனிந்து அமர்ந்திருக்கும் என்னை உற்று நோக்கியவாறே பல மணி நேரம் அமைதியாக எதிரில் அமர்ந்திருந்தார். இயற்கையும் அவரது பேரன்பும் என்னை குணப்படுத்த தொடங்கின. நானும் சிரித்து பேசி வழக்கமான மனிதனாக மாற தொடங்கினேன்.கடைசி ஒரு நாள் மட்டும் நீர்வீழ்ச்சிக்கு அழைத்துப்போனார். தேயிலைத் தோட்டங்களின் நடுவே இருந்த ஒரு மலை முகட்டில் காரை நிறுத்தி வைத்துவிட்டு ஜென்சியின் “ஆயிரம் மலர்களே மலருங்கள்” பாடலை இருவரும் கண்கள் பனிக்க கேட்டுக் கொண்டே இருந்தோம்…

.ஒவ்வொரு எனது அரசியல் முயற்சியிலும் அவர் இருந்தார். பக்கபலம் என்கின்ற சொல் மிக மிகக் குறைவு. அவர்தான் பிரதான பலமாகவே இருந்தார். அழுத்தம் திருத்தமாக ஆலோசனைகள் சொல்வார். “எதன் பொருட்டும் துவண்டு விடக்கூடாது, வேலைகள் நின்றுவிடக் கூடாது” என்பார். “இனத்திற்கான பணி, 60 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தை விடுதலை செய்வதற்கான பணி, வெறும் பணத்திற்காக முடங்கி விடக்கூடாது, நான் உதவுகிறேன்.” என்பார்….

அவர் அறை முழுக்க புத்தர் சிலைகள் நிறைந்திருக்கும். கடவுள் மறுப்பாளர். சாதி எதிர்ப்பாளர். கெட்ட பழக்கங்கள் கிடையாது. நிறைய படிப்பார். எளிய மக்கள் தேடி வரும் போதெல்லாம் மருத்துவத்தை செய்துவிட்டு பணம் வாங்காமல் அனுப்பி வைத்து விடுவார். எதையும் வெளியே சொல்ல மாட்டார். விளம்பரம் இல்லாமல் சேவைகள் செய்து வெளிச்சம் பாய்ச்சிய மனிதநேய விளக்கு அவர்…..மூணாறில் இருந்து திரும்பி வரும்போது, திருச்சியை தாண்டுகையில் ஒரு பிளாட்பாரத்தில் சிலர் படுத்திருப்பதை பார்த்துவிட்டு வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிப் போனார். சிறிது நேரம் கழித்து வந்தவரிடம் எங்கே போனீர்கள் என கேட்டேன். “நாம் வீட்டிற்கு தானே போகிறோம். கையில் 4000 பணம் இருந்தது. வண்டிக்கு எரிபொருளும் போட்டாகிவிட்டது. அதனால் அந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டு வந்து விட்டேன். நாளைய தினம் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்..” என்றார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

“ஏன் அண்ணா இப்படி..?” என்றேன்… “நமக்கு மனது சரியில்லை என்றால் மலைகளுக்கு சென்று சுற்றி வருகிறோம்.. அவர்கள் எல்லாம் எங்கே செல்வார்கள்..?” என கேட்டு விட்டு மீண்டும் இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டே வண்டி ஓட்ட தொடங்கிவிட்டார்……கடைசியாக அவரை நான் என் தம்பி ஆனந்தோடு கடந்த 07.05.2021 அன்று சந்தித்தேன். முகக் கவசம் எல்லாம் போட்டுக் கொண்டு மிகுந்த பாதுகாப்போடு இருந்தார்.நெஞ்சு பக்கமாக வலிக்கிறது என்றேன். இசிஜி எடுத்துப் பார்த்துவிட்டு “வலிமையான இதயம். ஒரு நோயும் இல்லை..” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். எதற்கும் பயப்படாதீர்கள். நான் இருக்கிறேன் என்றார்….அடுத்த சில நாட்களிலேயே கொரனா நோய்த்தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது.

கடந்த 16.05.2021 நான் பதறிப்போய் அவருக்கு அலைபேசியில் அழைத்தேன். நீண்டநேரம் ஒலித்த அந்த அலைபேசியை எடுத்து சற்று இருமலோடு பேசினார். தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சொன்னார். ஆக்சிஜன் உதவியோடு இருப்பதாக சொன்ன அவர், ” வேறு யார் அழைத்தாலும் இந்த சமயத்தில் எடுத்து இருக்க மாட்டேன், நீ அழைக்கிறாய். இனி பேச முடியுமோ முடியாதோ என தெரியவில்லை. அதுதான் பேசிவிட வேண்டும் என எடுத்தேன்..” என்றார். நான் கலங்கி விட்டேன். “அண்ணா உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நாம் மீண்டும் மூணாறு போகிறோம் , ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலை மலைமுகட்டில் நின்று கேட்கிறோம்” என்று சொன்னேன். இருமலோடு அவர் சிரித்த ஒலி எனது காதில் கேட்டது. “நான் வராவிட்டாலும், நீயாவது போய்விட்டு வா..” என்று சொன்னார்.

“கண்டிப்பாக நீங்கள் வருவீர்கள்” என நான் சொல்லிக் கொண்டிருந்தபோது “என்னால் அதிகம் பேசமுடியவில்லை. உடலைப் பார்த்துக் கொள், எழுதுவதை விட்டு விடாதே..” என்று சொல்லி சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்தார்.நான் கலங்கிய கண்களோடு அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தேன்….இன்று காலை 10:45 மணிக்கு அவர் கொரனா நோய் முற்றி இறந்து விட்டார். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் இடுகாட்டிற்கு வரும்போது இடுகாட்டின் வாசலில் நானும் தம்பி ஆனந்தும், தம்பி சாமிநாதனும் நின்று கொண்டிருந்தோம்.

வேகமாக வந்த ஆம்புலன்ஸ் எங்களை கடந்து சென்றது. அவர் முகத்தை எல்லாம் பார்க்க முடியாது என்று சொல்லி எங்களை திருப்பி அனுப்பினார்கள்.

…..மகத்தான அந்த மனிதனிடமிருந்து ஒரு விடைபெறுதல் கூட பெற முடியாத சாபத்தை என்ன சொல்லி நொந்து கொள்வது..??

எதுவுமற்ற என்னிடம் இருந்தது இறுதியான ஒரே ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் வீதியில் என்னை நிறுத்தி வைத்துவிட்டு, ஆம்புலன்சில் வேகமாக என்னை கடந்து இடுகாட்டிற்குள் சென்று விட்டது. …

கடைசியாக நாங்கள் மூணாறு போனபோது தேயிலை தோட்ட காடுகளின் நடுவே அந்த மலைமுகட்டில் ஒலித்த “ஆயிரம் மலர்களே மலருங்கள்..” என்ற அந்த காவியப்பாடல் காற்றில் கரையாமல் உறைந்திருக்கும். அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கத்தான் அவர் மூணாறு சென்றிருக்கிறார் என நான் இந்த நொடியில் நினைத்துக் கொள்கிறேன்….

என்றாவது நான் மூணாறு சென்றால் .. தேயிலைத் தோட்ட காடுகளுக்கு நடுவே, பனி சுமக்கும் அந்த மலை முகட்டின் மீது நான் நிற்கும் அப்பொழுதில் “ஆயிரம் மலர்களே மலருங்கள்..” என்ற அந்தப் பாடல் தானே ஒலிக்கத் தொடங்கும், அவர் அருவமாய் என் அருகில் நின்று கொண்டு என் தோளை பிடித்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்…..

(மருத்துவர் சித்தார்த்தன். குடந்தை நகரத்து எளிய மக்களின் மருத்துவர். வயது 53. சுருதி மருத்துவமனையின் நிறுவனர். ஆகச்சிறந்த தமிழ் உணர்வாளர். கும்பகோணம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை உணர்வுபூர்வமாக நடத்திட உயிராய் நின்றவர். கும்பகோணம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மகத்தான வலிமையாக திகழ்ந்தவர்.24.05.2021 அன்று கொரனா நோய்த்தொற்றின் காரணமாக தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மரணமடைந்தார்.)

….https://youtu.be/S5ZD5CDBTxA

சாதி மறுப்பில் இருந்து அயோத்தி தாசர் வரை.

வைதீக இந்து மதம் அல்லது வர்ணாசிரம தர்மம் என்பது நான்கு வர்ணங்கள் ஏறக்குறைய நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகள் என கொடூர அடுக்குகளால் நுட்பமாக கட்டப்பட்ட ஒரு அசாதாரணமான கோபுரம்.

பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் அவருக்கு கீழாக அதி சூத்திரர் என்று அழைக்கக்கூடிய தொட்டால் பார்த்தால் தீட்டு , நிழலைத் தீண்டுவது கூட பாவம் என்ற வகையில் அடக்கி ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் என இந்த வரிசை உச்சி முதல் கீழ் வரையிலான கொடுங்கோன்மையின் விசித்திர அடுக்கு.தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்களுக்கு கீழாகவும் ஒரு அடுக்கு, அதற்கு கீழேயும் ஒரு அடுக்கு என்கின்ற அடுக்குமுறை தனக்குக் கீழாக ஒருவன் இருக்க வேண்டும் என்கின்ற மனித உளவியல் மேலாதிக்கத்தை சார்ந்து அல்லது பயன்படுத்தி வர்ணாசிரம தர்மம் உச்சபட்ச அறிவாற்றலோடு படைக்கப்பட்ட சுரண்டல் வாத மோசடி அமைப்பு.

இந்த அமைப்பை சிதைக்க பன்னெடுங்காலமாக பண்பாட்டுத் தளங்களில் பல புரட்சிகள் நடந்து வருகின்றன. பௌத்த சமண எழுச்சி முதல் வள்ளலார் வரையிலான எண்ணற்ற தாக்குதல்கள் வர்ணாசிரம தர்ம அநீதிக் கோட்டையின் மீது நிகழ்த்தப்பட்ட கொண்டே இருக்கின்றன. இன்றளவும் சாதாரண இயல்பு வாழ்க்கையில் சாதியின் இருப்பு வலிமையாக இருப்பதன் காரணம் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய சுரண்டல் வாத மேலாதிக்க குணாதிசயத்தை அது பெற்றிருப்பதே ஆகும்.

சாதியின் பெருமையை காப்பாற்ற நாமெல்லாம் ஒரே சாதி என்கின்ற நுட்பமான கூட்டுணர்வு மற்றும் அது தருகிற பாதுகாப்பு போன்றவை மிகப்பெரிய உதவியாக இருக்கின்றன. சாதியை பொறுத்தவரை நிலத்தை போல பெண்ணும் ஒரு பொருள்தான். பெண்ணை வைத்து தான் சாதி சார்ந்த உரையாடல்கள் நிகழ்த்தப்படுவதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.”எங்கே சார் சாதி இருக்கு.. இப்பல்லாம் யார் சாதி பார்க்கிறா..?” என்பதான கேள்விகளை வெகு சாதாரணமாக நம்மால் எதிர்கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு அரசு அலுவலகத்திலோ, ஒரு நீதிமன்றத்திலோ, பள்ளி கல்லூரி வளாகத்திலோ புதிதாக வருகின்ற அலுவலர் அல்லது மாணவர் என்ன சாதி என்பதை தெரிந்துகொள்ள இன்றளவும் கடுமையாக முயற்சிகள் நடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.எந்த சாதி அந்த இடத்தில் அதிகமாக இருக்கிறதோ, அதற்கு எதிராக பிற சாதிகள் ஒன்றிணைவது இயல்பாக நடக்கிறது. எதுவாக இருந்தாலும் சாதி தன்னை தக்கவைத்து தகவமைத்துக் கொண்டே இருக்கிறது. அதுதான் சாதி கட்டமைப்பின் மிகப்பெரிய நுட்பம்.சாதி சார்ந்த மனநிலையிலிருந்து மீறுவது என்பது சாதாரண செயல் அல்ல. என் தம்பி ஒருவன் சாதிமறுப்பு மனநிலை கொண்டவன்.

தன்னை குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்தப் படுவதை மிகக் கேவலமாக உணர்பவன். என்னை சாதியாக அடையாளப் படுத்துவது‌ என் பிறப்பை இழிவுப்படுத்துவதற்கு சமம் என்று எப்போதும் கோபத்தோடு சொல்கிறான். தற்போது அவன் காதலிக்கிறான். சாதி மறுப்பு திருமணம் செய்ய ஒரு போதும் அவனது உறவினர்களிடத்தில் அனுமதி கிடைக்கப்போவதில்லை. ஆனாலும் மீறத் தயாராக இருக்கிறான்.அவன் தான் ஒருமுறை மிக அமைதியாக சொன்னான். “என் சாதியைப் பற்றி யாராவது பேசினால் எனக்கு அருவருப்பாக இருக்கிறது. நீ நம்மாள் தானே என்று எந்த உறவினனாவது கேட்கையில் அடித்து மண்டையை உடைக்க வேண்டும் என தோன்றுகிறது” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். சாதிய பெருமிதத்தின் மீது தீரா வெறுப்பு அவனுக்குள் ஏற்பட்டுவிட்டது. சொல்லப் போனால் சுய சாதிப் பெருமிதம் முற்றிலுமாக இழந்துவிட்ட மனநிலை அது. அந்த மனநிலை கொண்ட ஒரு கூட்டம் தான் இப்போது தேவைப்படுகிறது.

இன்றளவும் 85% துப்புரவு பணியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களாகவே ஏன் அமர்த்தப்படுகிறார்கள்‌ என்ற கேள்வியிலிருந்து நம் சிந்தனையை துவங்கலாம்.இந்திய ரயில்வே என்ற உலகிலேயே மாபெரும் அமைப்பில் இன்றளவும் தண்டவாளங்களில் சிதறிக்கிடக்கும் டன் கணக்கிலான மனித மலங்களை தூய்மைப்படுத்துபவர்கள் யாராக இருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். சமூகத்தின் நம்மைப் போன்ற சக மனிதர்களான ஒரு பிரிவினர் மீது மட்டும் சுமத்தப்படும் இந்த இழிநிலை எந்த தர்மத்தின் வாயிலாக கட்டப்பட்டிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.அது தர்மம் அல்ல சதி என்று உணர தொடங்கலாம்.

இந்த வர்ணாசிரம தர்மத்திற்கு எதிர் கலகமாக பௌத்த மரபை 18 ,19ஆம் நூற்றாண்டுகளிலேயே முன்னிறுத்திய நமது பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் இந்தியப் பெரு நிலத்திலேயே முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடு நடத்தியவர். நிலைநிறுத்தப்பட்ட கோரிக்கைகளை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முன்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக முன்வைத்தவர். மாபெரும் பௌத்தர். தன்னை தமிழனாகஉணர்ந்து “தமிழை அறிய முடியாமல் பௌத்தத்தை உணர முடியாது என்று அறிவித்தவர்”.1.12.1891 இல் நீலகிரியில் நடைபெற்ற மாநாட்டில் அயோத்திதாசர் இயற்றிய முதல் தீர்மானம் சொல்கிறது “பறையர் என்றழைத்து இழிவு செய்கிற இழிநிலையைப் போக்க சட்டம் வேண்டும்”. இன்னொரு தீர்மானம் “பொது இடங்களில் சாதாரணமாக சாதி வேறுபாடின்றி நுழைவதற்கான” தீர்மானம்.இந்தத் தீர்மானங்களை எல்லாம் இப்போது வாசித்துப் பார்க்கும்போது சாதி என்பது ஆழமான கொடும் நோயாக பல கோடி மக்களை வதைத்து வந்திருக்கிற துயரமாக வரலாற்றின் பாதையில் நீண்டு வந்திருக்கிற அநீதியாக உணர முடிகிறது.

சமீபத்தில் கூட கடலூரில் இருந்து ஒரு தம்பி எடுத்தார். உங்களை சௌராஷ்ட்ரா என்று சொல்கிறார்கள். நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும். உங்கள் பெரியப்பா எனது பக்கத்து வீட்டுக்காரர். நீங்கள் ஏன் உண்மையை சொல்ல மறுக்கிறீர்கள், உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதானே என்று உண்மையாகவே அவர் என் மீதான அன்பில் கேட்டார். ஏனென்றால் நான் என் சுய சாதியை வெறுக்கிறேன். அதை என் மீது படிந்திருக்கிற அழுக்காக உணர்கிறேன் என்பதை அவரிடம் சொல்லி புரிய வைக்க முயன்றேன். அந்த அழுக்கை எப்படி எனது அடையாளமாக நான் சொல்வது என்ற தயக்கம் எனக்கு இருக்கிறது என்று சொன்னேன்.

அந்த உடன்பிறந்தான் புரிந்து கொண்டார் என்றே நினைக்கிறேன்.உண்மையில் தூயத் தமிழனான என்னை இன்னொரு இனத்தானாக காட்டுவது இழிவானது என்றாலும் , அதைவிட இழிவானது ஒரு சாதிக்காரனாக நான் அடையாளப்படுத்தப்படுவது.அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் பலநூறு பக்கங்களை படித்துப் பார்க்கும்போது சாதி என்ற அநீதி இந்த சமூகத்தை பிளந்து போட்டிருக்கிற கொடுங்கோன்மை புரிகிறது.இந்த நுட்பத்தை தான் திராவிட இயக்கங்கள் மிகச்சரியாக புரிந்துகொண்டு தன்னை தமிழனாக முன்னிலைப்படுத்தி, சாதிமறுப்பு பேசி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்த நம் தாத்தா அயோத்திதாச பண்டிதரை முற்றிலுமாக வரலாற்றில் புறக்கணித்து இருந்தன.ஆனால் சமீப காலமாக பேரன்கள் நாம் நமது முன்னோர்களான அயோத்திதாசர் பண்டிதர் , இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்களை பற்றி அறிய தொடங்கியிருக்கிறோம்.

நிறைய தமிழ்த் தேசிய இளைஞர்கள் அயோத்திதாசர் பற்றி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை இணைந்து ட்விட்டர் ஸ்பெசில் நடத்திய நேற்றைய முன்தின கலந்துரையாடலில் கலந்துகொண்டார்கள்.

அயோத்திதாசரை பற்றி ஒரு எளிய அறிமுக உரையை 45 நிமிடங்கள் பேச எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. நமது தாத்தா அயோத்திதாசரின் மொழி உணர்வு மிக்க தமிழ் மைய வாதம் இன்றளவும் திராவிட அறிஞர்களுக்கு ஒவ்வாமையாகவும், தமிழ்த்தேசியர்களுக்கு ஊக்கமாகவும் இருக்கிறது. அவர் திராவிடர் என்ற சொல்லை கூட தமிழர் என்ற பதத்தில் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்.

அதையும் இறுதிக்காலத்தில் விட்டுவிட்டு 1907ல் “ஒரு பைசாத் தமிழன்” என்று தொடங்கி அந்த இதழை 1908ல் அதாவது மறு ஆண்டே “தமிழன்” என்று பெயர் மாற்றுகிறார். 1935 வரை அந்த இதழ் அவரது மறைவிற்கு பிறகும் வெளிவந்திருக்கிறது. அவரது படைப்புகள் தமிழ்த் தேசிய இனத்தின் அறிவுச்சேகரங்கள்.எனக்குத்தெரிந்து “தமிழன்” என்ற சொல்லை முதன்முதலாக அரசியல் சொல்லாக (political term) பயன்படுத்தியது நம் தாத்தா அயோத்திதாச பண்டிதர் தான்.ஒருபக்கம் டுவிட்டரில் “திராவிடத் தந்தை அயோத்திதாச பண்டிதர்” என சிலர் வலிந்து நம் தாத்தாவை திராவிடக் கூட்டத்திடம் அவர்கள் விரும்பாமலேயே திணித்துக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் தமிழ்- தமிழன் என்ற பரப்பில் தீவிரமாக இயங்கிய நம் தாத்தா அயோத்திதாசரை எந்த திராவிடத் தலைவரும் நினைவு கூரக் கூட விரும்புவதில்லை.

ஆனால்‌ மறுபுறமோ அயோத்திதாசரது பேரன்கள் “தமிழ்த் தேசியத்தின் முன்னோடி” என அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.சாதி மறுப்பும், தமிழ்த் தேசிய உணர்வும் ஒருங்கே மலர்வதற்கான காலம் உருவாகிவிட்டது என்ற நம்பிக்கையை புதிய தமிழ்த் தேசியர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.சாதி மறுப்போம். தமிழர்களாய் தலை நிமிர்வோம்.

நினைவின் பக்கங்களில் மலரும் பூ..

தூசி படர்ந்த புத்தக அடுக்கில்

தவறி விழுந்த கதைப் புத்தகம் ஒன்றின்

சட்டென விரிந்த திறந்த பக்கம் ஒன்றில்

ஒட்டியிருந்த பழுப்பேறிய மல்லிகைப்பூ

அதுவாகவே எழுதத் தொடங்கியது.

நினைவின் பக்கங்களில்.

அதுவரை எழுதப்படாத

அழகிய கதை ஒன்றை.

❤️

மணி செந்தில்.

83தமிழ வேள், M.I. Humayun Kabir and 81 others29 comments2 sharesLikeCommentShare

29

விவேக் – சில நினைவுகள்

1991 ஆம் வருடம் என நினைக்கிறேன். புகழ்பெற்ற நடிகர் விஜய் அவர்களின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்களது இயக்கத்தில் நண்பர்கள் என்ற ஒரு திரைப்படம் வந்தது.

அக்கால கட்டத்தில் கவுண்டமணி-செந்தில் கூட்டணி நகைச்சுவை தளத்தில் உச்சத்தில் இருந்தது. பார்ப்பதற்கு அப்பாவித்தனமான, இயல்பு வாழ்க்கையில் நாம் அடிக்கடி எதிர்கொள்கிற அவசரக் குடுக்கை போன்ற கண்ணாடி போட்ட அந்த இளைஞன் “நண்பர்கள்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தான். அதற்கு முன் அந்த முகத்தை கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில் கண்டிருக்கிறேன்.

இரண்டு படத்திலும் சிறிய கதாபாத்திரங்கள் தான். தான் தோன்றும் இடங்களில் எல்லாம் பார்வையாளர்களிடம் வெடி சிரிப்பை வரவழைத்த அந்த இளைஞன் அடுத்த சில வருடங்களில்

உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மாறிப் போனான்.அந்த இளைஞன் தான் நடிகர் விவேக். திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் நடிகர் விவேக் தனித்துவமானவர். Body shaming என்று சொல்லக்கூடிய உருவக்கேலி என்பதை தன் நகைச்சுவைகளில் முதன்மை படுத்தாமல் தனது அப்பாவித் தனத்தை, வார்த்தை தடுமாற்றத்தை, நகைச்சுவை தளமாக மாற்றிக் கொண்டதில் நடிகர் விவேக் ஒரு முன்னோடி.கோபமாக கத்திக் கொண்டிருக்கிற கதாநாயகி ஒருகட்டத்தில் ஆத்திர உச்சியில் “Shut up” என்கிறாள். எதிரே நின்று கொண்டு இருக்கின்ற நடிகர் விவேக் எளிமையாக “Same to you” என சொல்வது ஒரு சிறிய காட்சி என்றாலும் அது தமிழ்த் திரைப்பட நகைச்சுவை காட்சி வரலாற்றில் ஏற்படத் தொடங்கிய மாற்றம்.

அவரைப் பற்றி அறிந்தவர்கள் நிறையப் படிப்பவர் என்று சொல்கிறார்கள். அவரால் எந்த கதாபாத்திரத்திலும் மிக எளிமையாக பொருந்த முடிந்ததன் காரணம், அவர் இயல்பிலேயே அவர் அடைந்திருந்த கலை மேதமை தான். இது எழுதிக் கொண்டிருக்கும் போதே பல காட்சிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.மின்னலே திரைப்படத்தில் விபத்துக்குள்ளான வண்டிக்கு முன்னால் விழுந்து கிடக்கும் விவேக் வண்டி முன்புறத்தில் தொங்கிக் கொண்டிருக்கிற எலுமிச்சை பழத்தை எடுத்து பிழிந்து சாறு குடித்துவிடுவார். கேட்டால்” கேறா இருந்துச்சி அதான்” என அப்பாவித்தனமாக பதிலளிக்கின்ற நடிகர் விவேக்கின் Classic தனமான காமெடி இல்லாத தமிழ்த்திரையை நினைத்து பார்க்கவே சற்று அச்சமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

சென்ற வருடத்தில் கூட அவரால் “வெள்ளைப் பூக்கள்’ என்கின்ற ‌ திரில்லர் வகை திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வழங்க முடிந்ததை நினைத்தால் நாம் எப்படிப்பட்ட மகத்தான கலைஞனை இழந்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.அவருடைய மரணத்திற்கு ஏதேதோ காரணம் சொல்கிறார்கள். ஆனால் அவரால் பலர் வாய்விட்டு சிரித்து தனது மன இறுக்கத்தைத் தளர்த்தி தன் மரணத்தை தள்ளிப் போட்டு இருக்கிறார்கள்.

அந்தப் பல கோடி புண்ணியம் அவரை காப்பாற்றியிருக்கலாம்.

போய் வாருங்கள் விவேக். நீங்கள் நட்டு வைத்திருக்கிற பல லட்சக்கணக்கான மரங்கள் உங்கள் பெயர் சொல்லி பலருக்கு மூச்சுக்காற்றை தாரைவார்த்து கொண்டிருக்கும்.

248தமிழ வேள், Raju Janu and 246 others15 comments39 sharesLikeCommentShare

15

The serpent-netflix series

1970-80 காலகட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கொலைகளை செய்து சீரியல் கொலைகாரன், பிகினி கில்லர் என்றெல்லாம் பெயர் பெற்றசார்லஸ் சோப்ராஜ் பற்றிய வாழ்க்கைத் தொடர் Netflix -ல் தலா ஒரு மணி நேரம் ஓடக்கூடிய எட்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது

.சார்லஸ் சோப்ராஜ் எண்பதுகள் காலத்திய கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல் போன்ற பல வழக்குகளில் சிக்குண்டு பலமுறை சிறை பட்டவர்‌. ஒவ்வொரு முறை சிறை படும் போதும் சிறையிலிருந்து தப்பிக்க முயல்பவர்‌. 1986 ல் தன் பிறந்தநாள் விழாவில் சிறை அதிகாரிகளுக்கு போதை மருந்து கொடுத்து திகார் ஜெயிலில் இருந்து தப்பித்து போன சுவாரசியமான ஆசாமி. இதேபோன்று தாய்லாந்து சிறையில் இருந்தும் தப்பித்து இருக்கிறார்.

தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே சிறைப்படுகிற ஆள் சார்லஸ். சிறுவயதில் பெற்றோரின் பிரிவினால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பினால் குற்றங்களை தயக்கம் இல்லாமல் செய்கிற உளவியல் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இப்போதும் நேபாளம் காத்மாண்டு சிறையில் ஆயுள் தண்டனை அடைந்து உயிருடன் இருக்கின்ற சார்லஸ் சோப்ராஜ் மீது இன்னும் பல நாடுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உலகத்தின் பல நாடுகளுக்கும் தப்பி ஓடிக் கொண்டிருந்த அவரது வாழ்க்கை “The Serpent” என்ற பெயரில் தொடராக வெளியாகியிருக்கிறது.கதை சொல்லல் முறையிலும் காட்சியமைப்பு முறையிலும் திரைப்படங்களை மிஞ்சக் கூடிய அளவிற்கு மிகுந்த தரமாக “சீரீஸ் (Series)”என்று அழைக்கப்படக்கூடிய பல தொடர்கள் நெட்பிளிக்ஸ் , அமேசான் பிரைம் போன்ற OTT தளங்களில் வெளியாகி அசத்துகின்றன.

குறிப்பாக Money heist. ஒரு சீசன் பார்த்துள்ளேன். தமிழிலும் கிடைக்கிறது. அமேசான் பிரைமில் அரசியல் தொடரான “தாண்டவ்”‌ தற்போது பார்த்து வருகிறேன்.கடந்த சில நாட்களாக தேடிக்கொண்டிருந்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்கிற மலையாளப்படமும் அமேசான் பிரைமில் தற்போது கிடைக்கிறது.

குறிப்பாக The Serpent. திரைக்கதை வடிவமைப்பில் நிகழ்வுகளை முன்னும் பின்னுமாக சங்கிலி தொடர் போல மாற்றி மாற்றி அமைத்து இறுதியாக ஒரு புள்ளியில் குவிக்கின்ற திரைமொழி நம்மை வியக்க வைக்கிறது. இரவு தூங்கும் போது கூட சார்லஸ் சோப்ராஜாக நடித்த தாஹர் ரஹீமின் சலனமற்ற விழிகள் நினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது. அடுத்தது என்ன நடக்கும் என்பதுபோல அடுக்கடுக்காக காட்சியமைப்புகளை வைத்து ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்கள். சிறு உரையாடலைக் கூட கவனிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.

55Packiarajan Sethuramalingam, மு.முகம்மது சர்வத்கான் and 53 others2 sharesLikeCommentShare

0

சமூக வலைதள விமர்சனங்களை கையாளும் கலை.

❤️

எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொல்லி அலைந்து கொண்டிருப்பது நம் வேலை அல்ல.

வேலையற்றவன், வீணாகி போனவன், முகவரியற்றவன், முகம் தொலைந்தவன் போன்றவர்கள்தான் ஏதோ வயித்தெரிச்சலில் குறை பேசிக்கொண்டு குற்றம் கண்டுபிடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருப்பார்கள்.நமக்கு அது வேலை அல்ல. நம்மைப் பொறுத்த வரையில் முகநூல் என்பது ஒரு விளம்பர ஊடகம். செய்திகளைப் பரப்பும் கருவி. அதைத்தாண்டி முகநூல் ஒன்றுமில்லை.

முகநூல், டூவிட்டர் பதிவுகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. குறை சொல்பவர்களுக்கு குறை சொல்வது மட்டும்தான் வேலை‌. நமக்கோ குறை சொல்பவனையும் உள்ளடக்கிய இந்த சமூகத்திற்காக உழைக்கின்ற வேலை. பதிவுகளுக்காக பதறாதீர்கள்.அலட்சியப் படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். அது எளிதானதல்ல. அது ஒரு பயிற்சி. சொல்லப்போனால் அது ஒரு கலை.

நம் மனதிற்குள் எதைக் கொண்டு போக வேண்டும், எதைக் கொண்டு போகக் கூடாது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.‌ மற்றபடி கண்ணெதிரே நின்று கத்தினாலும், கதறினாலும் ஜஸ்ட் லைக் தட் என அலட்சியப் படுத்தி கொண்டு நகர்ந்து பாருங்கள். அதுதான் கத்திய கதறிய அந்த முகம் தொலைந்தவனுக்கு‌ நாம் அளிக்கும் தண்டனை.பூகம்பமே வெடித்தாலும் புன்னகை செய்வதை மறந்து விடாதீர்கள். எதுவும் நம்மை ஒன்றுமே செய்துவிடமுடியாது என்று நினைப்பவர்கள்தான் இதுவரை உலகத்தை ஆண்டிருக்கிறார்கள். எனவே சமூக வலைதளங்களில் வரும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது நமது பணி அல்ல. உங்கள் பதிவில் உங்களுக்கு வேண்டாத கருத்துக்களை, உங்களைப்பற்றி அவதூறான விமர்சனங்களை, நம் கட்சியை பற்றி தவறான விமர்சனங்களை எவனாவது முன் வைக்கிறானா .. உடனே அந்த பதிவை நீக்கிவிட்டு அவனை பிளாக் செய்து தடுத்து விடுங்கள்.

அந்த ஒரு நொடி தான் அவனுக்காக நாம் செலவு செய்த ‌ கடைசி நொடி ஆக இருக்க வேண்டும்.நமது வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் கொளுத்தும் வெயிலில் மக்களை சந்தித்து கட்சியையும் சின்னத்தையும் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேருங்கள்.

நீங்கள் நாம் தமிழர் கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் படங்களை பெருமிதமாக சமூகவலைதளங்களில் பரப்புங்கள்.விளம்பரம் செய்யுங்கள்.அதைத்தாண்டி முகநூல் அல்லது ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு பெரிய முக்கியத்துவத்தைத் தந்து நம்மை நாமே வீழ்த்திக் கொள்ள வழி ஆகிவிடக் கூடாது.மீண்டும் உறுதியாக சொல்கிறேன்.முகநூல் என்பது ஒரு விளம்பர ஊடகம். விவாத ஊடகம் அல்ல. கேள்விகளுக்கு பதில் சொல்லும் விடைத்தாள் அல்ல.

நம் கட்சிக்காக நாம் விளம்பரம் செய்வோம். பட்டித் தொட்டி எல்லாம் நாம் தமிழரை கொண்டுபோய் சேர்ப்போம். விவசாயி சின்னத்தை பரப்புவோம். அலைபேசி முழுவதும் அண்ணன் சீமானின் பேச்சுக்கள் பரவட்டும்.

வெல்லப் போறான் விவசாயி.❤️

558தமிழ வேள், Packiarajan Sethuramalingam and 556 others25 comments112 sharesLikeCommentShare

25

வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் 2021 வருவோர் கவனத்திற்கு..

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..

வருகிற மார்ச் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நம் உயிர் அண்ணன் சீமான் அவர்கள் கட்சியின் ஆட்சி செயல்பாடு வரவையும் வெளியிட்டு வரலாற்று பேருரை ஆற்ற இருக்கிறார்கள்.மகத்தான இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தமிழ்நாடெங்கும் நாம் தமிழர் உறவுகளாகிய நீங்கள் தயாராகி வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

இந்தப் பயணம் குறித்தான சில எண்ணங்களை திறந்த மனதோடு உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. தொலைவிலிருந்து வரும் உறவுகள் குறித்த நேரத்தில் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.

2. ஆறு மணி நேரம் மட்டும் பயணநேர‌ தொலைவில் இருக்கின்ற ஊரிலிருந்து புறப்படுகின்ற உறவுகள் மட்டும் அதிகாலையில் புறப்படுங்கள். மற்றவரெல்லாம் முதல் நாள் இரவே புறப்பட்டு விடுவது நல்லது

.3. 234 வேட்பாளர்களும் மதியம் மூன்று மணிக்கு முன்னதாகவே ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வந்து விடுவது நல்லது. கடைசி நேர போக்குவரத்து நெரிசலில் வேட்பாளர் சிக்கிக் கொள்வதை இதன்மூலம் தவிர்த்துவிடலாம். வேட்பாளர்கள் மற்றவர்களோடு இணைந்து வருகின்ற பயணத்திட்டத்தை தவிர்த்துவிட்டு முன்னதாகவே தனி வாகனத்தில் சில பேரோடு புறப்பட்டு வருவது இன்னும் சிறந்தது. மற்றவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் போது வந்தால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் வேட்பாளர்கள் முன்னதாக அரங்கில் இருப்பதே சிறந்தது. வேட்பாளர்கள் இன்று தலைமை கேட்டிருக்கிற வேட்பாளர் விபரக் குறிப்புகளை மின்னஞ்சலில் உடனே அனுப்பி வைத்து விடுங்கள்.

4. அதிகாலை புறப்படும் உறவுகள் காலை, மதிய உணவை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது. செலவும்/நேரமும் இதனால் மிச்சப்படும். இன்னும் வாய்ப்பு இருக்கிற உறவுகள் சென்னையில் இருக்கின்ற தங்களுக்கு வேண்டியவர்களிடம் எளிய இரவு உணவிற்கான ஏற்பாட்டினை அளித்து விட்டால் ‌ குறைவான செலவில் இரவு உணவை தயாரித்து விடலாம். வரும் வழியில் இருக்கின்ற உணவகங்களில் உணவின் விலை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இதைப்பற்றி உறவுகள் சிந்திக்கலாம்.

5. செங்கல்பட்டு தொடங்கி ராயப்பேட்டை வரையிலான சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருக்கிறது. அதிகாலையில் புறப்படுகின்ற உறவுகள் செங்கல்பட்டை பகல் 12 30 மணிக்குள் கடப்பது போல பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டால் இறுதிநேர பரபரப்பைத் தவிர்த்துவிடலாம் .

6. தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் உறவுகள் தங்களில் பொறுப்பான ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஓட்டுனருக்கு அருகே அமர வையுங்கள். இரவு பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர் களைப்பாக இருந்தால் வண்டியை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுனருக்கு போதிய ஓய்வு அளித்து பிறகு பயணத்தை தொடருங்கள்.

7. அனைவரும் முகக் கவசம் அணிவதை தவிர்த்து விடாதீர்கள். கையில் சிறிய அளவிலான சானிடைசர் பாட்டில் ஒன்று வைத்துக்கொள்வது சிறந்தது. வீட்டிலேயே காய்ச்சிய குடிநீரை போதியளவு எடுத்துக்கொண்டு கிளம்பினால் வழியில் தேவையற்ற குடிநீர் செலவு மிச்சமாகும். மேலும் வழியில் பாதுகாப்பான குடிநீருக்கு உத்தரவாதமில்லை

8.குழந்தைகளை அழைத்து வரும் உறவுகள் அவர்களுக்கான அவசர மருந்துகள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல மாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கிறது. அதற்கான ஆடைகளையும் எடுத்து வாருங்கள்.

9. எல்லாவிடத்திலும் சாலை விதிகளைக் கடைபிடியுங்கள். பெரும்பாலும் வேகமாக செல்வதை தவிருங்கள். மகிழுந்துகளில் வருகின்ற உறவுகள் இடைவார் அணியுங்கள். மகிழுந்தில் வருகின்ற உறவுகள் ஏழாம் தேதி இரவு சென்னையில் தங்க முடிந்தால் தங்கி விடுங்கள். இரவு நேர பயணத்தை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள்.

10. வண்டியில் வரும் அனைவரது அலைபேசி எண்களையும் வண்டிக்கு பொறுப்பேற்கிறவரிடம் ஒப்படையுங்கள். சாலைகளை கடக்கும்போது கவனமாக இரு புறமும் பார்த்துவிட்டு கடங்கள். 11. நேர மேலாண்மையை சரிவர பின்பற்றினால் பாதுகாப்பான பயணம் உறுதி.‌ கூட்டம் முடிந்தவுடன் அவசர அவசரமாக கிளம்பாமல் பொறுமையாக புறப்படுங்கள். அது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும்

.கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கான ஒரு அரசியலை உருவாக்க கடுமையான இடையூறுகளுக்கு/ தடைகளுக்கு மத்தியில் அண்ணன் சீமான் தலைமையில் நாம் போராடி வருகிறோம்.‌ வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியடைய முன்னெழுத்தாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அமைய இருக்கிறது.தவிர்க்காமல் அனைவரும் வந்து விடுங்கள். எந்தக் காரணத்தையும் சொல்லாமல் ஓடி வந்து விடுங்கள்.

பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பயணத் தகவலை தெரிவித்து விடுங்கள். வண்டி புறப்படும் நேரத்தையும், இடத்தையும் தெளிவாக அறிவியுங்கள். அலைபேசியில் உங்கள் குரல் மூலம் தெரிவியுங்கள். வெறும் செய்தி அனுப்பினால் போதாது. மிக மிக முக்கியமான அழைப்பு என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றாக திரள்வோம்.நம் ஒவ்வொருவருக்காகவும் அண்ணன் சீமான் ‌ காத்திருக்கிறார் என்பதை உணர்ந்து ‌ பாதுகாப்பான பயணத்தோடு நாம் கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்புவோம்.

அன்றைய ஒருநாள் நாம் 11 ஆண்டுகளாக உழைத்து வரும் இலட்சித்திற்கான நாள் என உணர்ந்து சென்னையிலே திரள்வோம்.வாருங்கள்.. சென்னையிலே சந்திப்போம்.

வழக்கறிஞர் மணி செந்தில்

நாம் தமிழர் கட்சி

சட்டமன்றத்தேர்தல் 2021 வேட்பாளர் அறிவிப்பு

பேரன்பு கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

கொஞ்சம் நீளமான கட்டுரை தான். ஆனாலும் நேரம் ஒதுக்கி படியுங்கள். முழுமையாகப் படியுங்கள். பலருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். பரப்புங்கள்.ஏனெனில் செய்தி முக்கியமானது.

எத்தனையோ அரசியல் கட்சிகள் தமிழக வரலாற்றில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒரு இன அழிவின் போது எதுவும் செய்ய முடியாத மன வலியில், எதற்காக தாய் மண்ணை, உறவுகளை இழந்தோம் என்ற சிந்தனையில் நாம் அனைவரும் ஒன்று கூடினோம்.அதுவரை இருந்த தமிழ்த் தேசிய அமைப்புகள் சிறு சிறு குழுக்களாக இருந்து அரங்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன. ஒவ்வொரு ஊரிலும் அதே கூட்டம். அதே நபர்கள். “இவ்வளவுதானா தமிழ்த் தேசியம்..” என சிந்திப்பது போல ஒரு சிலரது ஜோல்னாப் பைக்குள் சிக்கிக்கொண்ட புத்தகங்களாய் தமிழ்த் தேசியம் என்கின்ற கருத்தாக்கம் இருந்தது.நம் கண் முன்னால் நிகழ்ந்த சொந்த இனத்தின் அழிவு இந்த சிறு சிறு குழுக்களின் போதாமையை நமக்கு எடுத்துக் காட்டின. தமிழர் என்கின்ற தேசிய‌ இனத்திற்கு ஒரு அரசியல் வலிமை தேவைப்பட்டது.

இந்திய தேசியம்/ மதவாதம்/ இடதுசாரியம்/ போன்ற வெகுஜன அரசியல் கருத்தாக்கமாய் தமிழ்த்தேசியமும் மாற வேண்டும் என்கின்ற புரிதலை ஈழ அழிவுதான் நமக்குள் ஏற்படுத்தியது.நம் இனப்பிணங்களில் இருந்து பிரசவித்த புரிதல் அரசியலாய் மாறத் தொடங்கிய போது, நாம் தமிழர் பிறந்தது.ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கும் அரசியல் அதிகாரத்தை பெற்றுத் தரக்கூடிய ஒரு பெரும் திரள் வலிமைமிக்க மகத்தான அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் நாம் தமிழர் கட்சி உருவானது.

ஈழத் தாயகத்தின் விடுதலை மட்டுமின்றி, தாயகத் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிற திராவிடக் கட்சிகளின் ஊழல் மிக்க, சுயநல ஆட்சிகளால் நிகழ்ந்துவிட்ட அனைத்துக் கேடுகளில் இருந்து விடுதலைப் பெற உலகம் முழுதும் பரந்து வாழ்கின்ற 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களின் உரிமைக் குரலாய் ஒரு அமைப்பு வேண்டும் என்கின்ற புரிதலில் நாம் தமிழர் உருவாகி வளர்ந்தது.எத்தனையோ அடக்குமுறைகளுக்கும், ஊடகப் புறக்கணிப்புகளுக்கும், பொருளாதார சங்கடங்களுக்கும் மத்தியில், பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த அமைப்பை நாம் உயிரெனப் பாதுகாத்து வருகிறோம்.எத்தனையோ துரோகங்களை பார்த்துவிட்டோம். துரோகங்கள் செய்வதற்கு காரணங்கள் தயாரிக்கப்பட்டன. காரணங்களுக்காக துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. நாம் உயிரென நேசித்து போற்றி வளர்த்த அமைப்பினை உடைக்க ஒரு பெரும் கூட்டமே இறங்கி வேலை செய்கிறது.ஆனாலும் அதையும் மீறி தான் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு புலிக் கொடியோடு முன்னே சென்று கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு ஊரிலும் ஒரு கருஞ் சட்டை அணிந்த இளைஞன் புலிக்கொடி தூக்கிக்கொண்டு திரியத் தொடங்கி விட்டான். பள்ளிவாசலில் ஓட்டு கேட்கும்போதுதொழுதுவிட்டு திரும்பிய யாரோ ஒரு இளைஞன் எங்களோடு சேர்ந்து துண்டறிக்கை கொடுத்து ஓட்டு கேட்கின்றான். வீதியில் பேசிக் கொண்டிருக்கிற எங்களைப் பார்த்து மனம் கேட்காமல் ஒரு 51 ரூபாய் திருவாளர் பொது ஜனம் என்ற பெயரில் வழங்கி விட்டு கண் கலங்கிய கண்களோடு ஒரு எளியவர் நடக்கிறார்.

அண்ணன் சீமானின் அனல் மிக்க தமிழுக்கு பிறகு திமுக காரர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு கருணாநிதி என்ற பெயர் வைப்பதில்லை. ஆனால் வீட்டுக்கு வீடு பிரபாகரன்கள் பிறக்கிறார்கள். பிரபாகரன் என்று சொன்னால் தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட மண்ணில் இன்று அவரை தேசியத் தலைவராக கொண்டாடுகிற ஒரு கூட்டம் உருவாகி விட்டது. தூய தமிழில் பலரும் உரையாடுகிறார்கள்.எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அரசியலில் ஈடுபட்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மாறி இருக்கிறார்கள். பொதுத் தொகுதியில் ஆதித்தமிழர் நாம் தமிழர் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையோடு நாம் தமிழர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்.வீதிக்கு வீதி இளைஞர்கள் முழக்கம் இடுகிறார்கள். நாம் தமிழர் என்பது வெறும் கட்சியின் பெயர் அல்ல. அது ஒரு உணர்வு. உறவுகளை ஏற்படுத்தும் பெருங்குடும்பம். சொல்லப்போனால் நாம் தமிழர் என்பது ஒரு வாழ்வியல் என பலரும் புரிந்து கொண்டு விட்டார்கள்.அண்ணன் சீமான் போல பல 100 இளைஞர்கள் ஊருக்கு ஊர் உருவாகிவிட்டார்கள். அனல் பறக்கும் அவர்களது பேச்சில் சத்தியம் தெறிக்கிறது. அவர்கள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் கேள்விகளை தாங்கமுடியாமல் திமுக காரர்களும், அண்ணா திமுக காரர்களும், பாஜக- காங்கிரஸ் காரர்களும் தலை குனிந்தவாறு அமைதியாக கடக்கிறார்கள்.இது தமிழ்த் தேசியத்தின் பொற்காலம்.

இன உணர்ச்சி கொண்ட தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிட ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்ற இந்த நாட்களில்தான் வருகிறது மார்ச் 7ஆம் தேதி.

தேர்தல் என்ற யுத்தத்திற்கு அண்ணன் சீமானின் சொற்கள் மூலம் நாம் ஆயுதங்கள் தயாரிக்கிற நாள். போருக்குத் தயாராகும் நாள்.நாம் தமிழர் உறவுகளே.. பயணத்திற்குத் தயாராகுங்கள். உடனடியாக பேருந்து வாகனங்களை முன்பதிவு செய்யுங்கள். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுங்கள். யாரையும் விட்டு விடாதீர்கள். குடும்பம் குடும்பமாக சென்னையில் கூடுவோம்.சென்னை குலுங்க வேண்டும். நமது உயரும் கரங்களில் அந்த வானையே முத்தமிடுகிற நமது புலிக்கொடி காற்றை உரசி பறக்க வேண்டும். “எழுந்தது பார் ஒரு புதிய தலைமுறை.. தாய் மண்ணை காக்க ..” என எதிரிகளும், துரோகிகளும் ஒரே நேரத்தில் அச்சப்படும் அளவிற்கு. நாம் சென்னையில் திரள வேண்டும்.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சீமான் என்ற தனிமனிதன் சிந்திய வியர்வை, அவனது தம்பிகள் உழைத்த பெரும் உழைப்பு போன்றவைகளுக்கு உரிய மதிப்பு கிடைக்க சென்னையில் நாம் நிகழ்த்த இருக்கும் மகத்தான எழுச்சி மூலம்தான் கிடைக்கும் என்பதை நாம் உணர்வோம்.

234 வேட்பாளர்கள்.117 ஆண்கள்/ 117 பெண்கள்.ஒரே மேடையில்.இதற்கெல்லாம் மேல் நம் அணுவெல்லாம் ஊடுருவி நம்மைபுலிகளாக மாற்றும் அண்ணன் சீமானின் அனல் உரை.மார்ச்சு 7 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக நான்கு மணி. சென்னை ராயப்பேட்டை ,ஒய்எம்சிஏ மைதானம்.திரள்வோம்.. திரள்வோம்.பகை மிரளத் திரள்வோம்.பைந்தமிழ் இனத்தீரே..சென்னையில் சந்திப்போம்.

வழக்கறிஞர் மணி செந்தில்

நாம் தமிழர் கட்சி.

334தமிழ வேள், Lingadurai K and 332 others15 comments131 sharesLikeCommentShare

15

திருவாளர் பொதுஜனம் 51

பட்டீச்சுரம் என்பது கும்பகோணம் மற்றும் பாபநாசம் தொகுதிகளின் நடு எல்லையில் இருக்கின்ற ஊர். ராஜராஜ சோழன் சமாதி இந்த ஊருக்கு அருகிலுள்ள உடையாளூரில் இருக்கிறது. அண்ணன் சீமானைத் தவிர எந்த அரசியல் தலைவரும் அந்த இடத்திற்கு இதுவரை வந்ததில்லை. வந்தால் அரசியல் சரிவுகள் ஏற்படும் என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மூட நம்பிக்கைகள் உண்டு.மூடநம்பிக்கை என்றாலே திராவிடம் தானே.அதனால்தான் எந்த திராவிடத் தலைவர்களும் அங்கு வருவதில்லை.

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த இந்த மண்ணில்தான் இன்று கும்பகோணம் மற்றும் பாபநாசம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.சற்றே ஊர் எல்லைக்கு வெளியே தான் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அண்ணன் சீமானின் கூட்ட ஒலிபரப்பு தொடங்கிய உடன் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர தொடங்கினர்.கூட்டம் தொடங்கியவுடன் இளம் பேச்சாளர்கள் பேசத் தொடங்க ‌ அதன் பிறகு நான் பேசினேன். எனக்குப் பிறகு‌ வேட்பாளர்களான ‌ பெருந்தமிழர் கிருஷ்ணகுமாா் அவர்களும் வழக்கறிஞர் மோ ஆனந்தும் பேசினர்.நான் பேசிக் கொண்டிருக்கையில் ‌ நீண்ட நேரமாக ஒருவர் என்னை கவனித்துக் கொண்டே இருந்தார்.

நான் பேசியபோது திமுக, அண்ணா திமுக காரர்கள் போல அரசியல் என்பது எங்களுக்கு தொழில் அல்ல. காலையில் வேலைக்குப் போய்விட்டு மாலை தேர்தல் பணிகளுக்காக எங்கள் தம்பிகள் ஒவ்வொரு நாளும் வருகின்றார்கள். இனத்திற்காக தங்கள் பணத்தை செலவழித்து இன விடுதலைக்காக உறுதியாக நிற்கிறார்கள் என்று பேசினேன்.நீண்ட நேரமாக அவர் என்னை கவனித்துக் கொண்டே இருப்பதாக எனக்குத் தோன்றியது.எனக்குப் பிறகு ஐயா கிருஷ்ணகுமார் பேசிக் கொண்டிருக்கையில் தயங்கியவாறே அருகில் வந்தார்.என்ன நினைத்தார் என தெரியவில்லை.51 ரூபாய் பணமும் ஒரு சீட்டையும் தந்து விட்டு சென்று விட்டார். அதை பிரித்து பார்த்தால் திருவாளர் பொதுஜனம் 51 என எழுதி இருந்தது.

அதில் அவரை தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணும் எழுதியிருந்தது.அது வெறும் பணம் அல்ல. எளிய மனிதனின் நம்பிக்கை. அது அவருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நம்பிக்கை பிறந்த கணம். அது ஒரு பரஸ்பர நம்பிக்கை கொடை.அதே நபர் கூட்டம் முடிந்து நாங்கள் செல்லும் வரை ஓரமாக நின்று எங்களை கவனித்துக் கொண்டே இருந்தார்.‌‌ நாங்கள் அந்த இடத்தில் விட்டுக் கிளம்பும்போது நெஞ்சம் நிமிர்த்தி அவர் கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவரது பெயர்.திருவாளர் பொதுஜனம்.

Page 3 of 3

Powered by WordPress & Theme by Anders Norén