பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: டிசம்பர் 2021 Page 2 of 3

ஆசான் எனும் பெருவழி.

❤️

சூழ வரும் சூழ்நிலைகளால், பிழையாகி போன வாழ்க்கை முறைகளால் அலைக்கழிக்கப்படும் மனித உளவியலை நிலைநிறுத்த மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் காலம் காலமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.தியானம் என்றும் தவம் என்றும் அவரவருக்கு ஏற்ற ஒரு வடிவத்தை பயிற்சி செய்து பார்த்து, ஏதோ ஒரு வகையில் மனித மனம் அலைக்கழிப்பு எனும் பேரலையில் இருந்து விடுதலை பெறாதா என மனிதர்கள் ஏங்கிக் கொண்டும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஏறக்குறைய மெய்யியல் தேடலுக்கும் இதுதான் அடிப்படை என்றே கருதுகிறேன்.

தனக்குள்ளாக ஏற்படும் கொந்தளிப்புகளை ஏதோ ஒரு வகையில் அடக்கி விட வேண்டுமென மனிதர்கள் தத்தளிப்பதுதான் இறை தேடலுக்கும் மூலமாக நான் நினைக்கிறேன். உலகத்தில் பிறந்த அனைவரும் மனநோயாளிகள் தான் என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். மனநோய் என்பது ஒன்றுமே அல்ல. அதுவும் ஒரு மனம் என்கிறார் அவர். ஏன் இப்படி அலைகிறோம், தவிக்கிறோம் என்ற கேள்விகளுக்கெல்லாம் நம்மிடம் விடை இல்லை.எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பதிலும் தெளிவு இல்லை. பதட்டமும், குழப்பமும் நீக்கமற நிறைந்திருக்கும் நம் வாழ்வில் நிதானித்துப் பார்க்க நம்மிடத்தில் விழிகள் இல்லை.ஆசையே அழிவிற்கு காரணம் என போதித்தது பௌத்தம். நீ எல்லாவற்றிலும் இருந்து நீங்கி இரு என போதிக்கிறது சமணம்.

நீண்டகாலமாக பௌத்த, சமண வழிபாட்டுத் தத்துவங்களின் மீது எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உண்டு. அம்பேத்கரின் மாணவனாக நான் பவுத்தத்தை அணுகியபோது பவுத்தம் மிகப்பெரிய வசீகரம் கொண்ட காந்தம் போல என்னை இழுத்தது.‌ குறிப்பாக இந்து மதத்தின் மூடத்தனங்களிலிருந்து, சாதிய ஏற்றத்தாழ்வுகளில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள பவுத்தம் ஒரு மாபெரும் வழி என்றே எனக்குத் தோன்றியது.குறிப்பாக அம்பேத்கரின் “சாதியை ஒழிக்கும் வழி”(காலச்சுவடு வெளியீடு) என்கின்ற நூல் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் இருந்த தர்க்க மோதல்தான் இந்தியாவில் காலங்காலமாக நடந்து வருகிற சமூக முரண்களின் தோற்றுவாய் என நானே புரிந்து கொண்டதாக கருதினேன்.

ஒரு அம்பேத்கரியனாக என்னை நானே உணர்ந்து என் மகனுக்கு சிபி கௌதம் என பெயரிட்டேன். சிபி என்பது நான் சார்ந்து இருக்கின்ற தமிழ்த் தேசிய இனத்தின் கொடைப் புகழ் மன்னன் பெயர். கௌதம் என்பது தத்துவார்த்தமாக நான் தேடி அடைந்த புத்தத்தின் வழி நான் கண்டடைந்த பெயர்.இவ்வாறெல்லாம் சிந்தனைகளை வளர்த்துக் கொண்ட எனது வாழ்வில் 2009 இன அழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை நான் கொண்டிருந்த மெய்யியல் கோட்பாடுகளை ஏறக்குறைய மறுபரிசீலனை செய்யும் நிலைமைக்கு என் விழிகள் முன்னால் நிகழ்ந்த பெரும் இன அழிவு என்னை உந்தித் தள்ளியது.

மீண்டும் அமைதியற்ற இரவுகள் சூழ தொடங்கின. தனிப்பட்ட வாழ்விலும் எங்கெங்கோ அமைதி தேடி அலைந்து பல இடங்களில் தோற்றுப் போய் , சொல்லப்போனால் தீவிரமான மன அழுத்தத்திற்கு உள்ளாகி உறக்கத்திற்கான மாத்திரைகள் எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.உறக்க மாத்திரைகள் ஒரு தப்பிப்பு என நான் அறிவேன். ஆனாலும் அந்த தப்பிப்பு எனக்கு பிடித்திருந்தது. பகல் நேரத்திலும் மன பதட்டத்தை குறைக்கும் அல்ப்ராக்ஸ் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது எனக்கு வாழ்வியல் முறையாக மாறிப்போனது ‌. இசையிலும், திரைப்படங்களிலும், இலக்கியங்களிலும் முழுமையாக மனதை செலுத்த முயன்று கொண்டிருந்தேன். அதே சமயத்தில் அரசியல் கடமைகளும் சூழ எதிலும் நிறைவு இல்லாமல் உழன்று கொண்டிருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் தனிப்பட்ட அழுத்தங்களால் என் கவனத்தை திசை திருப்ப முயன்று நான் தோற்றுக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் மறக்க தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு இரவு பகல் பாராது அலைந்துகொண்டிருந்தேன்.என் மனதிற்கு மிக நெருக்கமானவர்கள் இதை உணரத் தொடங்கியதும் இன்னும் நான் பதட்டமானேன். அவர்களுக்குத் தெரியக்கூடாது என நினைத்து நான் கடுமையாக அலைச்சல்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த தவிப்பும், எனக்குள் ஏற்பட்ட போதாமையும் ஒரு அலை போல சூழ்ந்து கொண்டிருந்தபோதுதான் தற்செயலாக புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய “முதன் முறையாக மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை” என்கின்ற ஒரு சிறு நூல் எனக்குள் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அந்த நூலை எழுதியவரை நான் ஏற்கனவே அறிந்து இருந்தேன் ‌. 2009 இன அழிவு போராட்ட காலங்களில் எங்களோடு அவரும் களத்திலே நின்று இருந்தார். ஒருசமயம் தஞ்சாவூரில் ஒரு மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவரை நெருங்கி பார்க்கின்ற ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது. மிகவும் ஆவேசமான அதே சமயத்தில் சற்று அறிவுப்பூர்வமான ஒரு இளைஞன் அவர்.ஐயா மணியரசன் தலைமையிலான ஒரு மாநாட்டிலும் அவரை நான் கண்டிருந்தேன். அவரை ஐயாவின் மகன் என நான் அறியத் தொடங்கினேன்.

சில காலங்களுக்கு பிறகு அவரைப் பற்றியும் அவர் இயக்கிய “”பாலை” என்ற திரைப்படத்தை பற்றியும் நான் அறிந்திருந்தேன். நான் அறிந்திருந்த வகையில் அவர் தீவிரமான ஒரு அரசியல் களத்தில் ஒரு ஆளுமையாக வெளிப்படுவார் என்று அப்பொழுதுகளில் நான் நம்பினேன். சில வருடங்களுக்கு அவரைப் பற்றி எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒருமுறை ஆனந்தவிகடனில் அவரைப் பற்றிய சிறு செய்தி ஒன்றும், அவர் நடத்தி வருகிற செம்மைவனம் கூடல் பற்றிய செய்தி ஒன்றும் படித்தேன்.பிறகு ஆனந்த விகடனில் தொடர் ஒன்றை அவர் எழுதியபோது , படித்தேன். நிச்சயமாக அவர் நான் கண்ட ஆவேசமான இளைஞன் அல்ல. இவர் வேறொரு மனிதர் என நான் நினைக்க தொடங்கி இருந்தேன்.

….வெகுகாலம் கழித்து கும்பகோணத்தில் நடந்த உழவர் பாதுகாப்பு மாநாட்டின் கருத்தரங்கில் அவர் ஒரு பேச்சாளராக கலந்து கொண்டார். அப்போது அவர்‌ ஒரு சூழலியல் போராளியாக உருவாகி வருகிறார் என நம்பினேன்…..வெகு காலம் கழித்து ஐயா மணியரசன் அவர்களின் தாயார் இறப்பிற்கு சென்றபோது மீண்டும் அவரைப் பார்த்தேன்.‌‌….இந்த முறை நிறைய மாறுதல்கள். அண்ணன் சீமானோடு நான் சென்றிருந்தபோது ஐயாவை சுற்றியும் ,அண்ணனை சுற்றியும் நிறையக் கூட்டம் ‌. இந்தக் கூட்டத்தில் எல்லாம் சிக்கி விடாமல் அவர் தனியாக அமர்ந்திருந்த அந்த விசித்திர காட்சி என்னை மிகவும் ஈர்த்தது. நானும் அவரோடு சேர்ந்து அமர்ந்து கொண்டேன். கொஞ்சமாக பேசினார். நிறைய கேட்டார்.

அதுவே வெகுவாக என்னை ஈர்த்தது….பிறகு சில நேரங்களில் சில அலைபேசி உரையாடல்களை தவிர, அண்ணன் சீமான் அவர்களுக்கு அவர் சொல்ல விரும்பும் செய்தியை என் மூலமாக கடத்தும் ஒரு கருவியாக பயன்பட்டதை தவிர, பெரிய நெருக்கமில்லை…..தம்பி செந்தில்நாதன் தொடங்கிய “தமிழம்” வலையொளி யூடியூப் சேனலில் அவரது உரை ஒன்றை கேட்க நேர்ந்தபோது இதுவரை இல்லாத, எனக்குள் நிகழாத ஏதோ ஒரு சிறிய அதிர்வு எனக்குள் நிகழத் தொடங்கியது. கடைசியில் அலைக்கழிப்புகளுக்கு மத்தியில் துடுப்பு கிடைத்துவிட்டதாக உள்மனம் சொன்னது.மனதிற்குள் நானே ஒரு முறை அழுத்தந்திருத்தமாக சொல்லிக்கொண்டேன்.

“ஆசான்”…..

குறிப்பாக ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைகள் ஏற்பட்ட போது ஐயா மணியரசன் அவர்கள் ஆதாரங்களோடு கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தார். அவர் வழியை பின்பற்றி அண்ணன் சீமான் அவர்களும் எதிர்வினை ஆற்ற தயாராகி கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் தான் ஆசான் செந்தமிழன் அழைத்தார்.அவதூறுகளுக்கு எதிர்வினை ஆற்றுவது என்பது அவதூற்றுகளை பலமாக்கும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். அண்ணன் சீமான் இதுபோன்ற கருத்துகளுக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றும், ஐயா மணியரசன் பதிலளித்தது கூட தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அழுத்தம் திருத்தமாக ஆசான் தெரிவித்தார்.

சொல்லப்போனால் அவதூறுகள் முகவரி அற்றவை என்றும் ,நமது எதிர்வினைகள் தான் அதன் முகவர்களாக மாறத் தொடங்குகின்றன என்றும் , அண்ணன் சீமான் இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாமென்றும் ஆசான் கேட்டுக்கொண்டார்.அதை நான் அண்ணனிடம் தெரிவித்தேன். தம்பி சொல்வது சரிதான். நாம் இராசராசனை கொண்டாடுவோம். போற்றுவோம். இதுபோன்ற அவதூறுகளுக்கு பதில் சொல்லாமல் புறக்கணிப்போம் என்று அவரும் ஆசான் கருத்தை வழிமொழிந்தார்…..இன்னும் நெருக்கமாகி இருந்தோம்.

ஆசானது காணொளி இல்லாத குரல் பதிவுகள் ஒவ்வொன்றையும் தேடிப்பிடித்து கேட்கத் தொடங்கி இருந்தேன். நள்ளிரவில் விளக்குகளை அணைத்துவிட்டு ஆசான் குரலோடு அமைதியாக எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து செவி எடுக்க கற்றுக் கொண்டிருந்தேன். ‌பேசுவதை குறைத்து கேட்க கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.‌…மீண்டும் சென்னையில் நடந்த “தமிழரா திராவிடரா” கருத்தரங்கிற்கு ஆசான் வந்தபோது ஈடு இணையற்ற அவரது பேராற்றல் என்னை முழுவதுமாக இழுத்துக் கொண்டதை உணர்ந்தேன் ‌. தம்பி செந்தில்நாதன், தம்பி லிங்கதுரை ஆகியரோடு ஆசானை செம்மை வனத்தில் சந்தித்து உரையாடி கொண்டிருந்த அந்த ஒரு நாள் என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியது.

ஆசான் எழுதிய அனைத்து நூல்களையும் வாங்கிக்கொண்டு படிக்கத் தொடங்கியபோது முற்றிலுமாக வேறு உலகத்திற்கு ஆசான் கைப்பிடித்து அழைத்துச் செல்வதை உணர்தேன்……அந்த மென்மையான குரலில், எதையும் எளிமைப்படுத்தும் வலிமை இருந்தது. புரிந்துகொள்ளவே சிக்கலாக இருக்கின்ற செய்திகளைக் கூட எளிமையாக்கி தருகிற வித்தையை ஆசான் பெற்றிருந்தார்.ஒரு மனஅழுத்தம் மிகுந்த ஒரு நாளில் ஆசானுக்கு அழைத்தேன்.

வெகுநேரம் நான் தான் பேசிக்கொண்டு இருந்தேன். சின்ன சின்ன வார்த்தைகளில் ஆசான் எனக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.மூடிக்கிடந்த கதவுகள் ஒவ்வொன்றாய் திறந்து கொண்டே வந்தன.ஒரு கடற்கரை ஓரம் ஜன்னல்கள் அதிகம் வைத்து கட்டப்பட்ட ஒரு மாடி அறை போல மனம் மாறத் தொடங்கியது. ஆசான் கதவுகளைத் திறக்க தொடங்கினார். அதுவரை நம் மீது படாத காற்று நம்மீது பட்டு உடல் சிலிர்க்கத் தொடங்கியது. நம்மீது படாத வெளிச்சம் நமக்குள் ஆழத் தொடங்கியது…..ஒட்டுமொத்தமாக ஆசான் என்ன சொல்ல வருகிறார் என புரிந்து கொள்ள முயன்றபோது அவர் எதுவும் சொல்ல வரவில்லை என்பதாகவே நான் புரிந்து கொண்டேன். மாறாக ஒரு கடல் போல அவர் இருந்தார். அவரை பின்பற்ற தொடங்கியவர்கள்தான் அவரிலிருந்து எடுக்க தொடங்கினோம். அந்த ஆழ் கடல் எடுக்க எடுக்க தீராத புதையல்களை கொண்டது என உணரத் தொடங்கிய கணத்தில் தான் ஆசான் என் அருகில் இருந்தார்……

நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற வீரத்தமிழர் முன்னணியின் நாங்கள் தமிழர்கள் ஏன் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள ஆசான் வந்திருந்தார். “தமிழரா திராவிடரா” என்ற தலைப்பில் ஏற்கனவே நாங்கள் நடத்திய கருத்தரங்கின் தலைப்பின் மீது அவருக்கு உடன்பாடில்லை. தேவையில்லாததை பற்றி ஏன் வினா எழுப்பி அதை அடையாளப் படுத்துகிறார்கள் என்று எங்களிடம் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த முறையும் எனக்கு அந்த அச்சம் இருந்தது….ஆசான் வந்திருந்தார். குடும்பத்தோடு வந்திருந்தார். வழக்கம்போல் அவர் ஓரமான ஒரு இருக்கையில் அமைதியாக அமர சென்றார். நம்மவர்கள் அவரை விடவில்லை. அவர் யாரிடமோ நின்று பேசிக் கொண்டிருந்தார். தூரத்தில் இருந்து அவரை நான் பார்த்தேன். அவர் இடத்திற்கு நான் செல்லவேண்டும் என நினைக்க தொடங்கினேன். சற்று நேரத்தில் அந்த நினைவு தீவிரமடையத் தொடங்கியது. தம்பியிடம் சொல்லி அனுப்பினேன்.என்னைப் பார்த்ததும் ஆசான் கையை உயர்த்தி புன்னகைத்தார். ஆனால் மேடைக்கு நேர் எதிரே அமர்ந்திருக்கும் எனது அழைப்பை அவர் ஏற்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அவர் வரவில்லை என்றால் நாம் சென்றுவிடுவோம் என முடிவெடுத்தேன்.

ஆனால் எப்போதும் தனித்திருந்து ஓரமாக அமரும் அவர் ஏதோ ஒன்று உணர்ந்து அவரே என்னை நோக்கி வர தொடங்கினார். மெதுவாக வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். என்னை ஆசான் உணர்ந்திருக்கிறார் என நினைக்கும்போது நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.அக்கணத்தில் தான் இதுவரை வாழ்வில் நாம் கண்டவர்கள், பழகியவர்களை விட மிக நெருக்கமான ஒருவரோடு நாம் அமர்ந்திருக்கிறோம் என்கின்ற ஒரு நிதானம் எனக்குள் மலரத் தொடங்கியது. எனக்குள் எப்போதும் வர மறுக்கிற பாதுகாப்பு உணர்வு ஆசான் அருகில் இருக்கும்போது நான் அடைய தொடங்கியிருந்தேன். சொல்லப்போனால் மிகவும் லேசாகி இருந்தேன்.தம்பி செந்தில்நாதனும் இதே போன்ற அனுபவங்களை அடைந்திருந்ததால் அவன் கண்கள் மினுக்க என்னை பார்த்துக் கொண்டிருந்தான்.அண்ணன் சீமான் வந்தவுடன் தன் தம்பியை இறுக்க அணைத்துக் கொண்டார் ‌. தன் தம்பியை பற்றி நிறைய பெருமிதம் அவருக்கு.

எங்களிடம் எப்போதும் ஆசானைப் பற்றி பெருமிதம் பட்டுக்கொள்ள அவருக்கு நிறைய காரணங்கள் இருந்தன…..ஆசான் பேச தொடங்கினார்.அமைதியாக. அதேசமயத்தில் உள்ளுக்குள் உரத்த குரலில்.நாம் நம்பிக் கொண்டிருந்த எல்லா நம்பிக்கைகளையும் மறு பரிசீலனை செய்ய வைக்கின்ற செய்திகளோடு அவர் பேசத் தொடங்கினார்.

இந்த முறையும் அவர் தலைப்பில் முரண்பட்டார். நாம் தமிழர்கள் தான். ஏன் என்ற விளக்கம் யாருக்கும் அளிக்க தேவையில்லை என்றார் உறுதியான குரலில்.பவுத்தம் குறித்தும் சமணம் குறித்தும் அவர் பேசியபோது புழுதி படர்ந்த இருட்டு அறையில் எப்போதும் படராத வெளிச்சப் புள்ளிகள் விழத் தொடங்கின.எந்தவிதமான புகழ்ச்சியும் இகழ்ச்சியும் என்னை பாதிக்காது என்றார் ஆசான். அவைகள் அல்ல நான் என்றார்.

இந்தப் பதிவு கூட அப்படித்தான்.

இது அவர் அல்ல . ஆனால் இதிலும் அவர் இருக்கிறார்

…….ஆசான் பேசிக்கொண்டிருந்தார்.எனக்குள் நான் மலரத் தொடங்கி இருந்தேன்…..அதே போல் பலரும் இருந்தார்கள் என நான் நினைக்கிறேன்.

ஒருவேளை இதற்கு அப்பாலும் இருக்கலாம்.

அந்தக் கணத்தில் அந்த இடம் ஒரு பூந்தோட்டமாக மாறத் தொடங்கியிருந்தது என்பதை மட்டும் நான் அறிந்திருந்தேன்.

புரிய வேண்டிய புரிதல்கள்..

⚫

வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என பல கொள்கை வழிகள் பார்ப்பனிய ஆரிய மதமான இந்து மதத்திற்கு எதிரான கலகக் குரல்கள் மட்டுமல்ல, மாற்று பண்பாட்டு வழி தீர்வுகள்.

கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழ்த் தேசிய அரசியல் உருவான காலகட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்ப்பனிய ஆரிய இந்து மதத்தின் ஆதிக்க நிலை உச்சத்தில் இருந்ததை உணர்ந்தோம். எனவே தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இந்துக்கள் அல்லர் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய ஒரு நிலைக்கு நாங்கள் உந்தப்பட்டோம்.மேலும் தமிழரின் பல பண்பாட்டு விழுமியங்களை அடையாளங்களை ஆரிய இந்து மதம், செரித்து உள்வாங்கி தனது அடையாளங்களாக வெளிப்படுத்துகிற வரலாற்றுத் திரிபுகளை அடித்து நொறுக்க வேண்டும் என இந்த மண்ணின் பூர்வ குடிமக்கள் முடிவெடுத்தோம்.லிங்காயத்துகள் போல சீக்கியர்கள் போல நாங்களும் இந்துக்கள் அல்ல என நாம் தமிழர் என்கின்ற வெகுஜன அரசியலாக கட்டமைக்கப்படுகிற இனத்திற்கான அரசியலின் ஊடாகவே தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதையும் நாங்கள் கொள்கை முடிவாக அறிவித்தோம்.

இந்தக் கொள்கை முடிவை எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்ற எல்லா இடங்களிலும் முழங்குகிறோம். தமிழர்கள் ஏன் இந்துக்கள் அல்ல என்கின்ற கேள்வி இருந்து தமிழர்கள் யார் என்பதான அறிவுத்தேடல் பிறக்கும் என நாங்கள் நம்புகிறோம். அப்படி தமிழர்கள் யார் என தேடுகிற அறிவுத்தேடல் மூலம் தமிழர் என்கின்ற தேசிய இனம் வலிமையற்ற உதிரிச் சமூகமாக மாறுகின்ற அபாயம் தடுக்கப்படும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.எனவே தொன்ம இனமான தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் பண்பாட்டை மீட்க காலப்புழுதியில் புதைந்து கிடக்கும் எம் இனத்தின் மெய்யியல் சிந்தனைகளை மீண்டும் இந்த மண்ணிலே விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்களது பயணம் அமைகிறது.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒரு மதம் என்ற அடிப்படையில் அதற்கான அடிப்படைத் தகு நிலைகளை கொண்டிருக்கின்றன. ஆனால் சர் வில்லியம் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேய அதிகாரி உருவாக்கிய சொல்லான “இந்து” என்பது ஒரு மதத்தின் பெயர்ச்சொல் அல்ல. அது இந்த மண்ணை ஆண்ட ஆங்கிலேயர் தனது வசதிக்காக உருவாக்கிக் கொண்ட அரசியல் நிர்வாகச் சொல்.இஸ்லாமும் கிறிஸ்தவமும் தங்களுக்கென தனித்த வழிபாட்டு முறைகளை கொண்டிருக்கின்றன. அதற்கென தனித் தனியாக புனிதநூல்கள் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்து என்று ஆங்கிலேயரால் கட்டமைக்கப்பட்ட மதம் இதுபோன்ற ஓர்மைக் கூறுகளை கொண்டிருக்கவில்லை என்பதோடு மட்டுமில்லாமல், ஒரு மதம் என்கிற முறைமையில் ஆய்வாளர்கள் வரையறுக்கிற காரணிகளோடு இந்து மதம் ஒத்துப் போவதில்லை.

யார் இந்துக்கள் என்கின்ற கேள்விக்கு இந்து என்கின்ற சொல்லை இந்த நிலத்தில் வாழக்கூடிய கோடிக்கணக்கான மக்களுக்கான பொதுச் சொல்லாக மாற்றிய சர் வில்லியம் ஜோன்ஸ் அளித்த பதில் மிக விசித்திரமானது.யார் இஸ்லாமியர்கள் இல்லையோ, யார் சீக்கியர்கள் இல்லையோ, யார் கிறிஸ்தவர்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என போகிற போக்கில் வரையறுத்த விபரீதத்தை தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.ஏற்கனவே தமிழர் நிலத்தில் சைவம்,மாலியம், பௌத்தம் சமணம் என பல்வேறு நம்பிக்கைகள் இங்கே இருந்தன. மேலும் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பாகவே இருந்த ஆரிய புராதான வைதீக பார்ப்பனிய மதத்திற்கு எதிராக , வருணாசிரம கோட்பாடுகளுக்கு எதிராக தமிழர் மண் உளவியலாகவே எதிர்ப்பு நிலையை கொண்டிருந்தது. ஆனால் ஆங்கிலேயர் தனது நிர்வாக வசதிக்காக இந்து என்கின்ற பொது அடையாளத்துக்குள் தமிழர்களின் அனைத்து விதமான நம்பிக்கைகளையும் அடைத்து ஏற்கனவே இருந்த ஆரிய வைதீக மதத்திற்கு வலுவை சேர்த்தனர்.

இந்து மதத்தை பரப்புவதற்காக சாமி விவேகானந்தர் தமிழகத்திற்கு வந்திருந்தபோது எங்களை இந்துக்கள் என்று நீங்கள் எவ்வாறு அடையாளப் படுத்தலாம் என பேரறிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை வினா எழுப்பினார்.எனவே தமிழர்களின் தொன்ம அடையாளங்களை அழிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட இந்து என்கின்ற பொது அடையாள சொல்லை தமிழர்கள் நாங்கள் நிராகரிக்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல என பேரறிவிப்பு செய்கிறோம்.தமிழர்கள் எத்தனையோ மதங்களை சார்ந்து வாழ்கிறார்கள்.அயலில் இருந்து இறக்குமதியான இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களின் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை தாய் மதத்திற்கு திரும்பி வாருங்கள் என்று நாம் அழைக்கவில்லை. அது தேவையும் இல்லை. சொல்லப்போனால் வர்ணாசிரம அடுக்கை, ஆரிய இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகளை வெறுத்த தமிழர்கள்தான் இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் ஏற்றார்கள். வர்ணாசிரம கோட்பாட்டை வலியுறுத்துகிற இந்து மத எதிர்ப்பு புள்ளியில் அவர்கள் எங்களோடுதான் நிற்கிறார்கள்.

இந்தப் புரிதலோடு தான் இந்து என்கின்ற அடையாளத்தில் இருந்து தமிழர்கள் வெளிவர வேண்டும்‌ என்கிற அழைப்பினை தான்‌ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அழைப்பு விடுக்கிறார்.நாம் தமிழர் கட்சியில் எத்தனையோ இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் கட்சியின் உயர் நிர்வாக பொறுப்பில் இருக்கின்றார்கள்.

அண்ணன் சீமானின் கருத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அண்ணனோடு பயணிக்கிறார்கள். இஸ்லாமிய மக்களை பாதிக்கின்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒவ்வொரு பள்ளிவாசலிலும் போராடிய இஸ்லாமிய தமிழர்களோடு களத்தில் நின்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். அதன் காரணமாக தமிழகத்தில் வழக்கு பெற்ற ஒரே ஒரு அரசியல் தலைவர் அண்ணன் சீமான் மட்டும்தான்.

இதைப் புரிந்து கொண்டு , வெகு காலத்திற்குப் பிறகு இஸ்லாமிய, கிறிஸ்தவ இளைஞர்கள் திராவிட கட்சிகளை விட்டு தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டு நாம் தமிழர் கட்சியை நோக்கி நகருகின்ற காட்சிகளை பொறுக்க முடியாமல் தான் இதுபோன்ற வெட்டி ஒட்டி அவதூறுகளை பரப்ப வேலைகளை திராவிட ஆதரவாளர்கள் திட்டமிட்டு செய்கிறார்கள்.

எங்களுக்கு முன்னால் இருந்த முன்னோர்கள் வள்ளலார் வழி வைகுண்டர் வழி என்றெல்லாம் கட்டமைத்து விட்டு இந்து மதத்தில் சங்கமித்து விட்டார்கள் என தீவிர திராவிட ஆதரவாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.எங்களை அவர் எச்சரிக்க தேவையில்லை. தன் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் தான் இருக்கிறார்கள் என இந்து மதத்தை நம்புகிற திமுக தலைவரை அவர் எச்சரித்தால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது.ஏனெனில் திராவிடம் தான் ஆரியத்தை தமிழக நிலத்தில் விதைத்த, காப்பாற்றுகிற, கூட்டணி அரசியல் செய்கிற வேலையை திறம்பட செய்து வருகிறது.இதை தெளிவாக புரிந்து கொண்டு, அண்ணன் சீமான் அவர்களது கருத்தை வெட்டி ஒட்டி அவதூறு பரப்புவர்களின் அரசியல் பிழைப்பு தனத்தை அம்பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காலை,மாலை,இரவு என மூன்று வேளையும் சீமான் போபியா பிடித்து அலையும் அறிவாலயத்து அடிமைகளை பார்க்கும்போது ஒருபுறம் வேதனையாகவும், மற்றொருபுறம் இப்படி இவர்களை நிம்மதியில்லாமல் எட்டு திசையிலும் கட்டி அடிக்கிறாரே அண்ணன் என்பதான மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

அவர் சாதாரணமாக பேசுவதில் கூட‌ எங்கே உள்ளே புகுந்து பொரணி பேசலாம் என்கின்ற கேடுகெட்ட மனநிலை உச்சத்தில் நின்று ஆடுகின்ற காலம் இது.குமரி மாவட்ட கனிமவளம் கொள்ளை போவது அவர்களுக்கு பிரச்சனை இல்லை. சாட்டை துரைமுருகன் திட்டி விட்டார் என்பதுதான் அவர்களுக்கு பிரச்சனை. நீட் தேர்வை இதுவரை நீக்க முடியவில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு பிரச்சனை இல்லை.

சீமான் இன்று என்ன பேசினார் என்பது தான் அவர்களுக்கு பிரச்சனை.இப்படி மண்டை முழுக்க அவர்களுக்கு பைத்திய சுமை ஏறி 24/7 ஒரே சிந்தனையில்‌ சீமான், நாம் தமிழர் என அவர்கள் கிறுக்கு பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.நெருங்கி நின்று என்ன பேசுகிறார்கள் என கவனித்து விடாதீர்கள். கடித்து வைத்து விடுவார்கள் கவனம்.

இன்று பனைத் திருவிழா தொடங்கிவைத்து அண்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பேசிய சில கருத்துக்களை திசைதிருப்பி வழக்கம்போல் சில வில்லங்க பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கியுள்ளனர்.தமிழர்கள் இந்துக்களே இல்லை, தமிழர்களை இந்துக்கள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை என்பதுதான் அண்ணன் சீமான் சொன்னது,

உடனே செய்தியாளர் இடைமறித்து கிறித்துவ, இஸ்லாமிய சமயங்களை நோக்கி ஏன் கேள்வி எழுப்புமாட்டேன் என்கிறீர்கள் என்றதற்கு , அவை வெளியிலிருந்து வந்த சமயங்கள்தானே, ஒன்று ஐரோப்பிய சமயம், மற்றொன்று அரேபிய சமயம்தானே என்று கூறிவிட்டு,மீண்டும் விட்ட பதிலை தொடர்கிறார்.. அதாவது மர செக்கு எண்ணெய்க்கு திரும்புவதுபோல் தமிழர்கள் தங்கள் சமயங்களின் மீது பூசப்பட்ட இந்து என்ற அடையாளத்தை விடுத்து சைவம் , மாலியம் என்று மீண்டு வாருங்கள் என்று சொல்லி அந்த பேட்டியை நிறைவு செய்கிறார்.ஆனால் முன்பாதியை வசதியாக மறைத்துவிட்டு திராவிடத் திருடர்கள் வழக்கம்போல் தங்கள் வெட்டி ஒட்டும் வழக்கமான வேலையின்படி, செய்தியாளர் இடைமறித்து கேட்ட கேள்விக்கான பதிலையும், நாங்கள் இந்துகள் அல்ல என்பதற்கு கொடுத்து வந்த பதிலின் தொடர்ச்சியின் மீதத்தையும் சேர்த்துசீமான் இந்து மதத்திலிருந்து மீண்டு சைவம், மாலியத்திற்கு மீண்டு வாருங்கள் என்று சொன்னதை இஸ்லாம், கிறித்துவத்திலிருந்து மீளச்சொன்னதுபோல் கேடுகெட்ட அவதூற்றுப் பொய்ப் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்கிறார்களாம். வாங்கிய 200 ரூபாய்க்கு என்ன வேலை பார்த்தீர்கள் என ஓனர் கேட்கின்ற கேள்விக்கு திராவிட பஜனை கோஷ்டியினர் பதிலளிக்க எப்படியெல்லாம் குட்டிக்கரணம் அடிக்க வேண்டி இருக்கிறது..??இந்தப் கேடு கெட்ட பொழப்பிற்கு..!

⚫

வழக்கறிஞர் மணி செந்தில்.நாம் தமிழர் கட்சி.

59தமிழ வேள், பொன்வாசிநாதன் விஜயரெங்கன் and 57 others2 comments27 sharesLikeCommentShare

2 comments

இது நம் காலம்.

❤️

சம காலத்தில் திராவிட/தேசிய தத்துவங்களை சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும் எதிராக நிற்பது என்பது உண்மையில் சற்றே திமிர் கலந்த பெருமிதமாகத்தான் இருக்கிறது. இவர்கள் நம்மை பார்த்து பதற பதற நமக்கு ஆர்வம் கூடுகிறது. பதற்றத்தோடு நம் மீது அவதூறுகளை அள்ளி வீசி அழித்துவிடுவோம், முடித்து விடுவோம், தனித்து விடுவோம் என இவர்கள் துள்ளி குதிக்கும் போது நமக்கு பரவசம் கூடுகிறது. இவர்கள் எதிர்க்கும் போதெல்லாம் மனம் உற்சாகம் அடைந்து உயிர் கொள்கிறது.வரலாற்றில் நம்மைப்போன்ற உறுதி கொண்ட ஒரு கூட்டத்தை தமிழக அரசியல் இப்போதுதான் எதிர்கொள்கிறது.

இந்த மன உறுதி இன அழிவினால் ஏற்பட்ட அறிவினால் உண்டானது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் உண்டானது. 60 ஆண்டு காலமாய் நாம் ஏமாற்றப்பட்டதன் பின்னால் உள்ள அவமானத்தால், காயத்தால், வலியால், உண்டானது.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 2009 டிசம்பர் மாதத்தில் நாம் தமிழர் மிகச்சிறு அமைப்பாக ஊருக்கு ஊர் முளைவிடத் தொடங்கிய காலகட்டத்தில்.. அண்ணன் சீமான் உள்ளிட்ட நாங்கள் பலரும் ஊர் ஊராய் அலைந்து கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் உணர்வாளர்களை ஒன்று திரட்டிய காலக்கட்டம் அது. அப்போதுதான் பெரம்பலூர் கலந்தாய்வு கூட்டத்தில் அண்ணன் சீமான் தீர்க்கதரிசி போல ஒரு கருத்தை வெளியிட்டார்.”கடந்த 50 ஆண்டு கால அரசியல் என்பது கருணாநிதி வாழ்க, கருணாநிதி ஒழிக என்கிற இரண்டு மட்டும் தான்.

அடுத்து வருகிற 50 ஆண்டுகால அரசியல் என்பது நாம் தமிழர் வாழ்க, நாம் தமிழர் ஒழிக என்கிற இரண்டு மட்டும்தான்.”இப்போது அதுதான் நடக்கிறது. எல்லோருக்கும் நாம் எதிரி. ஆனால் நாமோ இவர்களில் 99 சதவீதத்தினரை பொருட்படுத்துவது கூட இல்லை. அண்ணன் சீமான் சொன்னது போல “எங்களை எதிர்பபவர் எல்லாம் எங்கள் எதிரியல்ல ‌. நாங்கள் யாரை எதிர்க்கிறோமோ அவர் மட்டுமே எங்கள் எதிரி.”இந்த மண்ணில் தமிழ்த்தேசியம் என்ற கருத்துரு ஒரு சிறு குழுவாக எழுந்து,இருந்து முடிந்துவிடும் என இவர்கள் நம்பினார்கள்.

கடந்த கால வரலாறும் அப்படித்தான். எங்களுக்கு முன்னால் இருந்த எத்தனையோ தமிழ்த்தேசிய மூத்தவர்கள் கூட தமிழ்த்தேசியம் ஒரு வெகுசன கருத்தியலாக மலராது என நம்பினார்கள். ஏனெனில் திராவிடம் என்ற மகா பூதம் காலம் காலமாய் தமிழ்த் தேசியம் என்ற மலரத் துடித்த இனமான உணர்ச்சியை ஒவ்வொரு காலகட்டத்திலும் விழுங்கி செரித்துக் கொண்டிருந்தது.ஆனாலும் விடாப்பிடியாக அண்ணன் சீமான் இந்த முறை வழமை விதியை மாற்றி எழுத தொடங்கினார். அசாத்திய உழைப்பினால் இவர்களது நம்பிக்கையை பொய்ப்பித்தார். தன்னம்பிக்கை கொண்ட ஒரு மனிதனின் தனி வரலாறு அது.இவர்கள் எல்லோரும் இத்தனை ஆண்டுகாலம் கேள்வி கேட்க முடியாத புனித பிம்ப முகங்களோடு உலா வந்தார்கள். ஊடகங்களில் எல்லாம் தாமே என்று படம் காட்டினார் கள். ஆனால் உலகம் உள்ளங்கையில் அலைபேசி வழியாக வந்து உட்கார தொடங்கும்போது பேருந்து செல்லாத கிராம வீதிகளில் கூட அண்ணன் சீமான் அலைபேசி திரைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்.

எங்கிருந்தோ வந்த எதிர்பாராத தொழில்நுட்ப வளர்ச்சி தமிழ்த்தேசிய எழுச்சிக்கு உரம் இட்டது.இனி இவர்கள் இறுதியாக நம்பியது, நம்புவது அவதூறு என்கின்ற ஆயுதத்தை மட்டுமே. இளைஞர்கள் வெகுவாக உள்ள சமூக வலைதளங்களை ஏறக்குறைய தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற அமைப்பாக நாம்தமிழர் எழத் தொடங்கியபோது இவர்கள் அவதூறு ஆயுதங்களைக் கொண்டு பொய்களை வீசத் தொடங்கினார்கள். எதிர்வினை ஆற்ற இளைஞர்கள் எழுந்தபோது இவர்கள் கட்டுப்பாடற்றவர்கள், திட்டுகிறார்கள், கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றெல்லாம் கத்தி கூப்பாடு போட்டார்கள். கூட்டம் சேர்க்க முயன்று சோர்ந்தார்கள். கடைசியில் தாங்களே ஒரு கூட்டம் என தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக் கொண்டார்கள்.

ஆனாலும் ஒரு புறம் நாம் தமிழர் இவர்கள் கண்ணெதிரே வளர்ந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய இளைஞர்கள். ஒவ்வொரு ஊரிலும் புலிக் கொடி மரங்கள்.இவர்களும் நம்பிக்கை இழக்காமல் அவதூறு சளி பிடித்து இருமிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் இளைஞர்களோ, ஒவ்வொரு நாளும் பல்கி பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.முடிவாக நாம் உணர்வது இதுதான்.இவர்கள் எதிர்க்கவில்லை என்றாலும் நாம் வளர்வோம். எதிர்த்தாலும் நாம் வளர்வோம்.

ஏனெனில் இது நம் காலம்.

நாம் தமிழர் காலம்.

உறையாத நினைவோடை.

ஏதோ நகர்த்தலில் என்றோ , யார் பெயரிலோ

சேமித்து வைத்திருக்கும்

உன் அலை பேசி எண்ணை

கால நழுவலின் பிசகிய நொடி ஒன்றில்

என்னை அறியாது பார்த்துவிட்டேன்.

அது ஒரு குழந்தையைப் போல

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது.

எப்போது வேண்டுமானாலும் விழித்து விடுகிற அபாயத்துடனும்,

அலறி காட்டிக் கொடுத்துவிடும் ஆபத்துடனும்.

ஆனாலும் ஆழ்ந்து தூங்கும்

அந்த குழந்தையின் முகத்தில் தான் எத்தனை அழகு..??

❤️

ஆன்மாவின் வண்ணத்துப்பூச்சி

விடுபடவே முடியாத கால சுழற்சியின்

திடுக்கிடும் கணமொன்றில்

உலராது உறைந்திருக்கும்

உந்தன் முகம்..

ஒரு இசைக்குறிப்பு போல

என் இதயத்தில் ஆழ்ந்து கால நேர பேதம் அறியாமல்

ஒலித்து கொண்டே இருக்கிறது.

நிறைவேறாத கனவின்

தணியா தாகத்தை

பொன் மகரந்தங்களாக சுமந்து திரிகிறது

என் ஆன்மாவினுள் ஒரு வண்ணத்துப்பூச்சி.

❤️

மணி செந்தில்

35Raju Janu, மு.முகம்மது சர்வத்கான் and 33 others1 comment1 shareLikeCommentShare

1

குமிழி

வன் காற்றின் சிறகு மோதினாலும்

சிதையாமல்சற்றே விலகி

சிணுங்கிக் கொண்டே

உயர உயர பறக்கிறது

நம்பிக்கை முகத்தின்

புன்னகைக்குமிழி.

❤️

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

❤️

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதை என்னை பற்றி பேசும்

.உங்களையும் பற்றி பேசக் கூடும்.

உங்களுடையது என நீங்கள் உணரும்போது

கதை என்னுடையதாக இருப்பதை

நீங்கள் மறப்பீர்கள்..

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதையில் ஒரு காடு இருக்கிறது.

அந்தக் காட்டில் தான் நான் இருக்கிறேன்

.நீங்களும் இருப்பீர்கள்.

அந்தக் காட்டில் நீங்கள் இருப்பதை உணரும்போது

நான் இருப்பதை மறப்பீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் வெளிறிய மதிய நேரம் ஒன்று இருக்கிறது.

அப்போது நான் எதுவும் செய்யாமல்

எனக்கு முன்னால் இருக்கின்ற

ஜன்னல் கண்ணாடிக்கு அப்பால் இருக்கிற

வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒருவேளை நான் பார்த்துக்கொண்டிருப்பது

உங்களுடைய வானம் என்று

உங்களுக்கு கோபம் வரக்கூடும்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் சில நட்சத்திரங்களை கொண்ட

ஒரு இரவு இருக்கிறது.

இரவில் நிலவு இருக்கிறது.

நிலவில் ஒரு கனவும் இருக்கிறது.

அதே கனவு உங்கள் விழிகளில் மிதக்கும்போது

அந்த இரவு உங்களுடையது என்று நினைத்து

நான் எட்டிப் பார்த்ததாக நீங்கள் ஆவேசம் அடைவீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் நான் விலங்காக உலவி

சக ஆன்மாவை உலரா மாமிசமாக

குதறி இருக்கிறேன்.

அதே கதையில் கடவுளாக கண்ணீர் ததும்பி

கருணை கொண்டு காயம்பட்ட மனதிற்கு

மயிலிறகு தடவி இருக்கிறேன்.

அதே கதையில் நீங்களும் விலங்காக உலவி,

கடவுளாக கசிந்து இருக்கிறீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

பல தோல்விகள். மிகச்சில புன்னகைகள்.

பல முறிவுகள்.சில தோள்கள்.

பெரும்பாலும் தனிமை.

காலியான மேசை.

எதுவும் இல்லாத கண்ணாடி கோப்பை.

அந்த மேசையில் என் எதிரே

நீங்கள் அமர்ந்திருப்பதாக நான் உணர்கிறேன்.

உங்களுக்கும் அப்படித்தான்.

நான்தான் அமர்ந்திருப்பதாக

நீங்கள் நம்புகிறீர்கள்.

ஆக..

நம்மிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதையில் நாமும் இருக்கிறோம்.

❤️

காதல் என்பது யாதெனில்..

❤️

காதல் என்றால் என்ன..?இளமைத் தீ பற்ற வைத்த நெருப்பா, உணர்ச்சிகளின் விளையாட்டா, ஹார்மோன்களின் சதியா, வாழ்க்கை விதித்த தவிர்க்க முடியா விதியா‌.. என்றெல்லாம் யோசித்தால் குழம்பி விடுகிறோம்.”செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே” என்கிறது குறுந்தொகை.”விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.”காதல் கூட கடவுள் மாதிரி தான். காதல் என்னும் ஈர அலைகள் அடித்துக் கொண்டிருப்பதால் தான் இன்னும் இந்த பிரபஞ்சம் ஈரமாகவே இருக்கிறது” என்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

சிறைச்சாலை திரைப்படத்தில் என்றோ சிறையிலேயே மரணித்துப் போன தன் கணவனுக்காக தொடர்வண்டி நிலையத்தில் காத்து நிற்கின்ற தபுவின் கதாபாத்திரம் , கபாலி திரைப்படத்தின் தன் கணவனுக்காக காத்திருக்கும் ராதிகா ஆப்தே கதாபாத்திரம் போன்றவை சுட்டுவது போல காதல் என்பது தீவிரமான காத்திருத்தலா என்றெல்லாம் வினாக்கள் நம் நெஞ்சாழத்தில் சிறகு விரிக்கின்றன.ரஷ்யப் புரட்சியாளர் லெனின் வாழ்க்கையில் நதேழ்தா குரூப்கயாவின் பங்கு பற்றி லெனின் விவரிக்கும் போது “அவர் என் ஈடு இணையற்ற தோழர்” என்கிறார்.சகல காலத்திலும் புரட்சியின் குறியீடாக மாறி இருக்கும் சேகுவேராவை பற்றி அவரது காதலி அலெய்டா குறிப்பிடும்போது .. “சே வின் மினுக்கும் கண்களில் தான் தான் வாழ்வதற்கான நம்பிக்கையை” பெற்றதாக சொல்கிறார்.

என்றோ ஊரை விட்டு ஓடிப்போன என் நண்பனின் சித்தப்பா ஒரு மன நோயாளியாக மும்பை தாண்டி புனே அருகில் கண்டுபிடிக்கப்பட்ட போது அவர் சேர்த்து வைத்திருந்த பெரும் குப்பைகளில் பள்ளியில் அவர் படித்த போது உடன் படித்த மாணவியின் புகைப்படம் ஒன்றை வைத்திருந்ததாக ஆச்சரியமாக சொன்ன செய்தி இன்னும் என் நினைவில் இருக்கிறது.மனப் பிறழ்வின் போது கூட மறக்காத நினைவுகள் காதல் என்ற தீவிரத்தால் மட்டுமே சாத்தியம் என நினைக்கும்போது சிலிர்ப்பாக இருக்கிறது.என்னோடு சட்டக் கல்லூரியில் உடன் படித்த வகுப்புத் தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தபோது எப்போதும் அவளோடு திரிந்து அவள் அவனைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்த அவளது மாமன் மகன் அங்கே இல்லாததை பார்த்த போது எங்களுக்கு மனம் என்னவோ போலிருந்தது.

சில காலத்திற்குப் பிறகு எங்கள் ஊருக்கு அருகே ஒரு கோவிலில் அவனை சந்தித்தபோது என்னை பார்த்தவுடன் தவிர்த்து விட்டு ஓடிய அவனை தடுத்து நிறுத்தி ஏன் என்னவாயிற்று எனக் கேட்டேன்.”அவள் நன்றாக இருக்கிறாள் சார் ..” என சொல்லிவிட்டு வேக வேகமாக போய்விட்டான்.அவனைப் பொறுத்த வரையில் அவன் காதல் என்பது .. “அவனது காதலி, இன்று இன்னொருவனின் மனைவியாக நன்றாக வாழ்கிறாள்..” என்பதுதான்.

❤️

என்னை மகனாகப் பெற்றெடுத்த போது என் அம்மாவிற்கு பதினேழு வயது.‌ பிறந்த பத்தாவது மாதத்திலேயே போலியோ வினால் நான் பாதிக்கப்பட்டபோது தன்னுடைய 18வது வயதில் இருந்து மருத்துவமனை மருத்துவமனையாக தன் நோயுற்ற மகனை தூக்கிக்கொண்டு அலைவது தான் என் தாய்- தந்தைக்கு வாழ்வாக மாறிப் போனது. அந்த காலகட்டத்தில் பெரும்பாலான தீபாவளி -பொங்கல் பண்டிகைகள் கூட எங்கள் மூவருக்கும் மருத்துவமனையில்தான். ஒரு கிராமத்தில் எந்த அறிமுகமும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே வளர்ந்த ஏறக்குறைய வளர்ந்த சிறுமி போல இருந்த என் அம்மாவை, என்னோடு மருத்துவமனையில் தனியே விட்டுச் செல்லும் போது தனது கலங்கும் கண்களை காட்டாமல் வேறெங்கோ பார்ப்பது போல துடைத்துக்கொண்டே தளர்வாக ஜோல்னாப் பையோடு நடந்து சென்ற என் தந்தையை கண்டபோது இதுவும் காதல் தான் என்று அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அம்மாவின் உடல் நலம் ஒரு முறை கடினமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்பட்ட தருணம் ஒன்றில் .. “அவள் என்னை விட்டு போய் விட மாட்டாள். அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.” என கனிந்த விழிகளோடு சொன்ன அப்பாவின் நம்பிக்கைதான் காதல் என்று அப்போது என்னால் வகைமைப் படுத்த முடியவில்லை.

சமீபத்தில் தீவிர கொரனா நோயால் என் தந்தை பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டும். ஏறக்குறைய நினைவில்லை. அம்மா நானும் உடன் போகிறேன் என்று சொன்னபோது.. “எந்த மருத்துவமனையும் அனுமதிக்க மாட்டார்கள் அம்மா..” என்று நான் சொன்னதை அவர்கள் ஏற்கவே இல்லை.”இது உயிர் கொல்லும் நோய். கூட இருப்பவர்களுக்கும் பரவும் மிகு அபாயம் கொண்ட தொற்று ..” என்றெல்லாம் என் அம்மாவுக்கு எவ்வளவோ எடுத்து சொன்னபோதும் கூட, அம்மா பிடிவாதத்தை தளர்த்தவில்லை.பிறகு என் நண்பர்களிடம் விசாரித்து ஒரு மருத்துவமனையில் தனி அறையில் அம்மாவுக்கு உரிய பாதுகாப்போடு தங்க வைக்க முயன்ற மறுநாள் அம்மாவுக்கும் நோய் பரவியிருந்தது.

நான் மனம் வெறுத்துப் போனேன்.அம்மா புன்னகையோடு அப்பாவுடன் இணைந்து தங்கிக் கொண்டார்.அவரை கவனித்துக் கொள்வது, எங்களுகெல்லாம் வீடியோகால் மூலம் தகவல் சொல்வது போன்றவற்றை மகிழ்வாக செய்து வந்தார்.நம்பிக்கை சொற்கள் மூலம் என் அப்பாவை உயிர்ப்பித்து, பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வந்து இன்றளவும் ஒரு குழந்தையைப்போல பார்த்துக் கொள்ளும் அவருடைய அசராத தீவிரம் உண்மையிலேயே எனக்கு அச்சம் அளித்தது.

உயிர் கொல்லும் தொற்று நோயால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற போதும் கூட சாகத்தூணியும் அந்த பேதமை கூட காதல் தான் என உணரும் பக்குவம் இந்த வயதில் தான் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

❤️

இப்போதும் அவர்கள் ஏதோ மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மெல்லிய புன்னகையோடு கசியும் கண்களோடு அவர்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.இந்த முடிவற்ற உரையாடல் வாழ்வு முழுக்க ஒரு இசை போல இசைந்து கொண்டே இருக்கிறது.ஒருவருக்கொருவர் அதைக் காதல் என்றெல்லாம் அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை.அவர்களைப் பொறுத்தவரையில்இந்த வாழ்தல் என்பதே காதல் தான்.

❤️

காலமெல்லாம் காதல் வாழ்க.

❤️

அப்பா-அம்மாவிற்கு 47 ஆவது மணநாள் வாழ்த்துகள்

ஸ்டாலின் – சீமான் சந்திப்பு

விமர்சனங்களில் பலவகை உண்டு.ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது, விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கற்பனை செய்து கதை எழுதுவது‌ என்பதான வகைகள் விமர்சனங்களில் உண்டு.குறிப்பாக நாம் தமிழர் மீது ஏவப்படும் விமர்சனங்களை கூர்ந்து கவனியுங்கள். கடந்த பத்தாண்டுகளாக விமர்சனங்களைத் தவிர வேறு எதையும் அடையாத நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயணம் என்பது அசாதாரணமானது.ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தபோது அதிமுகவோடு கூட்டணி வைக்கப் போகிறார் என ஒரு கூட்டம் அலறும்.சசிகலாவை போய் பார்த்து விட்டு நடராஜன் சாவிற்கு துக்கம் விசாரித்துவிட்டு வந்தால் சீமான் சசிகலாவின் ஆள் என ஏதோ ஒரு கூட்டம் பதறும். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியை சந்தித்து கோரிக்கைகள் வைத்து விட்டு வந்தால் இவர் அண்ணா திமுகவின் ஆள் இன்னொரு கூட்டம் சிதறும். திருமண விழாவில் எதிர்பாராமல் சந்தித்து விட்ட பொன் ராதாகிருஷ்ணனை பார்த்து ஒரு வார்த்தை பேசினால் உடனே பாஜகவின் ஆள் என்று ஒரு கூட்டம் பதறும். கமல் கட்சி தொடங்கும் போது அவர் அழைத்த காரணத்திற்காக நேரடியாக அண்ணன் சீமான் சந்திக்க போனதை கமலோடு கூட்டணி என கதை கட்டி மற்றொரு கூட்டம் கதறும்.

அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பது என்பது வேறு. தனிப்பட்ட முறையில் மனித மாண்போடு சக அரசியல் தலைவர்களை அணுகுவது, சந்திப்பது என்பது வேறு. எப்போதும் அண்ணன் சீமான் அதில் மிகச் சரியாக இருந்திருக்கிறார். தீவிரமாக எதிர்த்த திமுக தலைவர் கருணாநிதி சாவிற்கு கூட அண்ணன் சீமான் சென்று விட்டு தான் வந்தார். இதுபோன்ற செயல்பாடுகள் அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு.சக அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுவதால் அண்ணன் சீமான் என்றுமே தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதில்லை. கடந்தகால வரலாறு அதை கம்பீரமாக அறிவிக்கிறது.இன்று முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலினை 7 தமிழர் விடுதலை மற்றும் இதர கோரிக்கைகளுக்காக எங்கள் அண்ணன் சீமான் சந்தித்து விட்டு வந்திருக்கிறார்.

வழக்கம்போல கதற தொடங்கிவிட்டார்கள். 7 தமிழர் விடுதலை பற்றி எடப்பாடியிடம் இன்று பேச முடியாது. எடப்பாடி கூட ஸ்டாலினிடம் தான் இன்று கோரிக்கைகள் வைக்க முடியும்.‌ அந்நிலையில் தமிழகத்தின் மூன்றாவது மாபெரும் அமைப்பாக, உண்மையான எதிர்க்கட்சியாக உருக்கொண்டு நிற்கின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முதல்வரை சந்திப்பது என்பது ஒரு மிகச்சரியான எதிர்க்கட்சிக்கான பண்பியல்.எதற்கெடுத்தாலும் விமர்சிக்க வேண்டும், கதற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியை கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருக்கிற கண்றாவிகளைப் பற்றி நமக்கு கவலை இல்லை.

ஆனால் ஸ்டாலினை பார்த்துவிட்டு வந்து விட்டால் இனி திமுகவை விமர்சிக்க மாட்டார்கள் என நப்பாசையில் கூவும் சில 200 ரூபாய் ‘உபி’ களை பார்க்கும்போதுதான் உண்மையில் காமெடியாக இருக்கிறது.திமுகவை கொள்கை அடிப்படையில், கோட்பாட்டு எதிர்நிலையில் எதிர்ப்பது என்பது நாம் தமிழர் கட்சியின் அடிப்படை பண்புநலன். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.திமுக தலைவரை அண்ணா அறிவாலயத்தில் அண்ணன் சீமான் சென்று பார்க்கவில்லை. தமிழக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதல்வரை, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி மாபெரும் கட்சியாக இன்று உருவாகியிருக்கிற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அண்ணன் சீமான் தலைமைச் செயலகத்தில் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.

அடுத்து வருகிற ஐந்து வருடமும் உண்மையான எதிர்க்கட்சியாக, திமுக அரசு தவறு செய்தால் கடுமையாக விமர்சிக்கின்ற, எதிர்த்துப் போராடுகின்ற மக்களின் அமைப்பாக நாம் தமிழர் கட்சி உறுதியாக செயல்படும். எந்த புதிய அரசுக்கும் முதல் 100 நாட்கள் என்பது தயாரிப்புக்கான காலம். அதனால் எடுத்த எடுப்பிலேயே விமர்சித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய காலம் இருக்கிறது. நல்லது செய்தால் யாராக இருந்தாலும் நாங்கள் பாராட்டுவோம். அதே சமயம் எம் இனத்திற்கு என ஒரு தீமை விளைந்தால் எவராயினும் எதிர்த்து நிற்போம்.அந்த மன உறுதியோடு தான் நாங்கள் அரசியல் களத்தில் நிமிர்ந்து நிற்கிறோம்.வழக்கம் போல் கிளம்பியிருக்கிற புரிதலற்ற கூப்பாடுகளை புறம்தள்ளி நாம் முன் செல்வோம்.

இப்போது விமர்சிக்கிற எவரும் எப்போதும் நம்மை ஆதரித்ததில்லை. இனியும் ஆதரிக்கப் போவதுமில்லை. அவர்களுக்கு நாம் அசைந்தாலே குற்றம். அவற்றையெல்லாம் நாம் கணக்கில் எடுத்தால் நாம் எதுவும் செய்ய முடியாது.இதை நமது உறவுகள் கணக்கில் எடுத்துக் கொண்டு எதை ஏற்க வேண்டும், எதை புறந்தள்ள வேண்டும் என்ற புரிதலில் சிந்தித்தாலே போதுமானது.

நாம் தமிழர்.

இளையராஜா – என்றொரு மீட்பர்.

சட்டென அந்தக் கேள்வியை என் மகன் கேட்டு விட்டான். “உனக்கு ஏன் இளையராஜாவை அவ்வளவு பிடிக்கிறது..?”உண்மையில் அந்தக் கேள்வியை நேர்மையாக எதிர்கொள்ள எனக்கு பயமாக இருந்தது. அதை அப்படியே வார்த்தைகளால் நான் விவரித்தாலும் அவனால் புரிந்துகொள்ள முடியாது.இளையராஜாவை கேட்பது என்பது எனது அந்தரங்க உணர்வு போல, நான் மட்டும் ஆத்மார்த்தமாக உணர்ந்து ரசித்து உள் வாங்குகிற சுய நிகழ்வு. அதை எப்படி இவனுக்கு விவரித்து உணர்த்துவது..?எல்லாவற்றையும் மகனிடம் கொட்டிவிட கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. மழை போல எப்போதும் இளையராஜா இசை அபூர்வமானது தான். சலிப்பற்றதுதான்.அவரின் 80, 90 களின் ஒவ்வொரு பாடலும் எனக்கு ஒவ்வொரு காலத்தை, நான் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் ஒரு திரைப்படக் காட்சியை போல நேரடியாக பார்த்துவிடுகிற அபாயத்தை கொண்டிருந்தாலும், அந்த மாய விளையாட்டை எப்போதும் நான் மறக்காமல் விளையாடிக் கொண்டே இருந்தேன். சில பாடல்கள் கேட்கும்போது அம்மாவின் மடி வாசனை நினைவுக்கு வருகிறது. சில பாடல்கள் கேட்கும்போது கழுத்தோரம் வியர்வை வடிய வடிய, ஒரு உச்சி வெயிலில் மாடிப்படி இடுக்கில் நழுவிய காலத்துளி ஒன்றில் கழுத்தோரம் பெற்ற முதல் காதல் முத்தம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பசித்திருந்த இரவுகளில் பாடல்களை மட்டும் புசித்திருந்த பொழுதுகள் இன்னும் நினைவில் இருக்கின்றன.

❤️

வலி ஏமாற்றம் காதல் நோய் பிரிவு துயர் காமம் பசி பிணி தனிமை கொண்டாட்டம் என என் வாழ்வில் எதை எடுத்துக்கொண்டாலும் அவரின் இசை அதில் கலந்தே இருக்கிறது. இப்போதுகூடஎத்தனையோ நள்ளிரவுகளில் அவரின் சில பாடல்களை கேட்கும் போது ஆளரவமற்ற சாலையை வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்று விடுகிறேன். “வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்..” என பாடும் போது இந்த வாழ்வு ஒரு கொடும் சாபம் என கலங்கி விடுகிறேன். ” காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே, தேரு வரும் உண்மையிலே, சேதி சொல்வேன் கண்ணாலே..” என கேட்கும் போது இந்த வாழ்வு எப்படிப்பட்ட வரம் என சிலிர்த்து இருக்கிறேன்‌. சகல வாழ்வையும் கணக்கு,வழக்கோடு சரி பார்த்தால்..வரத்தையும், சாபத்தையும் அவர்தான் எப்போதும் தீர்மானிக்கிறார்.

❤️

ஒரு பாடல் கேட்கும் போதே அந்த காலத்திற்குள் உள்ளே நுழைந்து அக்காலத்து அனுபவத்தை இக்காலத்திலும் மீளப்பெறுவது என்பது அவரது இசையின் ஊடாக மட்டும்தான் என உணரும்போது அந்த இசை எக்காலத்திற்கும் நம்மை கடத்தி செல்லும் ஒரு பிரம்மாண்டமான கால இயந்திரம் என உணர்ந்து வியந்திருக்கிறேன்.

❤️

ஒரு பாட்டு நம்மை என்னவெல்லாம் செய்யும் என்பதை எல்லாம் தாண்டி இந்த உலகத்தில் இத்தனை கோடி நபர்களுக்கு மத்தியில் எனக்கான ஆறுதலையும் , எனக்கான வலியையும், எனக்கான அழுகையையும், எனக்கான ரகசியப் புன்னகையையும் வர வைக்கிற உள்ளீடு அப்பாடல்களில் எப்படி ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் யோசித்து யோசித்து கடவுள் நம்பிக்கை போல புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்.

❤️

300க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் முழுக்க அவரது இசையாய் சேர்த்துவைத்து கொண்டாடிய காலகட்டங்களிலும் சரி, ஏறக்குறைய 4000 பாடல்களை ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்து நினைத்தபோதெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்திலும் சரி, எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்களில் அதே சரண அடுக்குகளில், ராக வளைவுகளில் அதே கிறக்கம்.. அதே மயக்கம்.. அதே தொலைதல்.

❤️

இத்தனை ஆண்டு வாழ்க்கையில் அவரது இசை போல நெருங்கிய துணை எதுவும் இல்லை. போகுமிடமெல்லாம் கைபிடித்து அழைத்துச் செல்லுகிற சகா போல அவரது பாடல்கள் நாற்புறமும் நம்மை அழைத்து சென்று கொண்டே இருக்கின்றன. வாழ்வெனும் ஏற்றத்தாழ்வு ஊசலாட்டத்தில் சிக்கி பல உளவியல் சிக்கல்களால் சிதைந்த என்னைப் போன்ற பலரை நிதானமாக்கி வாழ வைத்திருப்பது அவரது இசை தான். அந்த தூய விதியில் அவர் சிறிது பிசகி இருந்தாலும் பலரின் தற்கொலைஇங்கே தவிர்க்கப்பட்டு இருக்காது.

❤️

அந்த வகையில்.. அவர் ஒரு மீட்பர்.

❤️

காதுகளால் சுவாசித்து வாழ்ந்த ஒரு தலைமுறையை உருவாக்கித் தந்தஇசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

Page 2 of 3

Powered by WordPress & Theme by Anders Norén