ஆதி காலமொன்றில்

அதுவாகவே தழைத்திட்ட

பெரும் அடர்வனக் காட்டின்

பசுமையேறி இருள் வெளியில்

கிறங்கிப் பறக்கும்

ஒற்றை மின்மினி போல..

எல்லையற்ற நேசத்தின்

மது அருந்தி காலமெல்லாம்

உனதன்பின் மேகத்தில்

மிதந்து கொண்டிருக்கிறேன்.

உனக்குப் பிடித்ததெல்லாம்

எனக்கும் பிடிக்கும் என்பது போக

எனக்குப் பிடித்ததெல்லாம்

உனக்கும் பிடித்தது என்பதாகி

உனக்கும் எனக்கும் பிடித்தது யாதெனில் உனக்கு என்னையும். எனக்கு உன்னையும் தான்.

இதற்கு மேல் இந்த கவிதையை விவரித்து சொல்ல முயன்றால்

அலைவரிசை பிசகக் கூடும். ஏனெனில் சொற்களுக்கு அப்பால்

நாம் மட்டுமே உணர்ந்து கொள்கிற

இந்த வாழ்க்கை வார்த்தைகளை எல்லாம் தாண்டிய நம் பேரன்பின்

சாரல் நனைந்தது.

நனைந்துக் கொண்டே

இருப்போம்.

எதனாலும் விலகாத

தனித்து தெரியாத

ஒற்றை ஆறு

வரையும் நீர் ஒழுங்கின்

இரு துளிகள் நாம்.

அடுத்தடுத்து மீட்டப்பட்டாலும்

அலைவரிசை தப்பா

அதிரும் வீணையின்

பிரிக்க இயலா

உதிரும் இசை வரிசை நாம்.

….

திரியும் ஞாலமெல்லாம்

திசை சேர்ந்திருப்போம்.

வாழும் காலமெல்லாம்

கை கோர்த்திருப்போம்.

….

அன்பு முத்தங்கள் தல.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.