பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜனவரி 2024

புலியின் உறுமல்.

அங்கே..

மக்கள் கடலுக்கு

நடுவே புரட்சிப் பதாகை

படபடக்க கொள்கைப்

படகாய் அவன் மிதந்து

கொண்டிருக்கிறான்.

இங்கே..

இருட்டு கரையின்

ஓரத்தில் சில

இறுமல்கள்.

புலியின்

உறுமல்

வெடித்து முழங்கும்

ஒரு

கணத்தில்..

இறுமாப்பு

இறுமல்களும்,

முகவரியற்ற

செறுமல்களும்

இல்லாமல் போகும்

காலமும் அவர்தான்.. களமும் அவர்தான்.

நாம் தமிழர் கட்சி வரலாற்றில் திருப்பூருக்கு என்றுமே தனி இடம் தான். 13 வருடங்களுக்கு முன்பாக ஒரு மழை நாளில் திருப்பூரில் அண்ணன் சீமான் கொட்டும் கொட்டும் மழையில் உணர்வு தீ கொதிக்க அனல் தமிழில் முழங்கிய ஆவேச பேச்சு இன்றும் நம் நினைவலைகளை விட்டு நீங்க வில்லை.

இன்றும் மழையின் மிரட்டலோடு நடந்த இந்த கூட்டத்தில் அண்ணன் சீமானின் பேச்சு இதுவரை இல்லாத மகத்துவம் நிறைந்த தனித்துவம். கூடி நின்ற மக்கட் பெருங்கடல் திரண்டு இருந்த அந்த மாபெரும் இடம் அண்ணன் சீமானின் கம்பீர தமிழுக்கு முன்னால் ஒரு மாபெரும் வகுப்பறையாக மாறிப் போனது. ஒரு தேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் போல புள்ளிவிபரங்களோடு, அவ்வப்போது துள்ளி வருகின்ற நகைச்சுவை கிண்டல்களோடு அவர் நடத்திய சூழலியல் பொருளாதார வகுப்பு கடல் போல் திரண்டு இருந்த ஒரு வெகுஜன கூட்டத்திற்கு மிக மிகப் புதிது.

ஒரு தலைமைத்துவம் நிறைந்த மாபெரும் பேச்சாளர் ஒருவர் “தற்சார்பு பொருளாதாரம்” என்ற மிகக் கடுமையான தலைப்போடு ஒரு வெகுஜன கூட்டத்தை அணுகுவது என்பது மிக மிக ஆபத்தானது. எந்த நேரமும் பேச்சு தன் அலைவரிசையில் இருந்து மாறி, மக்களின் ஆர்வத்தை தூண்டாமல், திசை மாறுமானால் அந்தக் கூட்டம் அப்படியே கலைகின்ற சங்கடமும் நிகழ்ந்துவிடுகிற சூழல்.

ஆனால் நம் அண்ணன் சீமான் தான் “சொல்வல்லான்” ஆயிற்றே. கட்டமைக்கப்பட்ட தேர்ந்த சொற்கள் மூலம் ஆங்காங்கே இடையில் தூவப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் மூலம் அந்த மக்கட்பெரும் கடலை தனது தன்னிகரற்ற மொழியாற்றலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கட்டிப்போட்டு வைத்திருந்தார் அவர்.

வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். பலர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். தங்கள் துயர் துடைக்க இறுதியாக பிறந்த நம்பிக்கையோடு காலங்காலமாய் வீழ்த்தப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் கைகோர்க்க தயாராகி வந்து நின்றார்கள்.

கூட்டத்தில் உணர்வு அலைவரிசையை அண்ணன் சீமான் தான் தீர்மானித்தார்.அவர் சிரித்தால் கூடியிருந்த மக்கள் கூட்டமும் சிரித்தது. அவர் கம்பீரமாய் கை உயர்த்தினால் அங்கே கூடி இருந்த அவ்வளவு பேரும் தங்கள் கைகளை உயர்த்தினார்கள். அவர் புள்ளி விவரங்களை துல்லியமாக அடுக்கிக் கொண்டே விவரிக்கும் போது முன்வரிசை மாணவன் போல ஒவ்வொருவரும் உன்னிப்பாக கவனித்தார்கள்.

தொலைக்காட்சியில் இதை கவனித்துக் கொண்டிருந்த என் தந்தை மூத்த தமிழ் பேராசிரியர் முனைவர் ச.மணி மிகுந்த வியப்புக்கு உள்ளானார். அவர் சுமார் 45 வருடங்கள் பேராசிரியராக, கல்லூரி முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஒரு பேராசிரியருக்கு இருக்கும் பெரும் சவாலே வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களோடு ஒத்த அலைவரிசையில் தொடர்பாவதுதான். அந்த அலைவரிசை சிறிது பிசகினாலும் மாணவர்கள் வெறுக்கத்தக்க வகுப்பாக அந்த வகுப்பு மாறிவிடும் என்பது மட்டுமில்லாமல் அந்தப் பேராசிரியரும் தங்களுக்கான நம்பிக்கையை இழந்து விடுகின்ற துயரமும் நேர்வது உண்டு என அவர் சொன்னார்.

ஆனால் சீமானுக்கு அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களோடு தனிப்பட்ட முறையில் ஒத்த உணர்வு அலைவரிசையில் எளிதாக தொடர்பானது ஒரு பேராசிரியர் என்கின்ற முறையில் அவருக்கு மிகுந்த வியப்பாக இருந்தது என்று சொன்னார். அது வெறும் கூட்டமல்ல. மாநாடு போல மக்கள் திரண்டு இருந்த அந்த இடம் தன்னைப் பொறுத்தவரையில் ஒரு வகுப்பறையாக நினைத்துக் கொண்டுதான் சீமான் அங்கே தற்சார்பு பொருளாதாரம் என்கின்ற தலைப்பில் பொருளாதார வகுப்பு எடுக்கிறார் என அவர் நுட்பமாக சொன்ன போது ஒரு அரசியல் மேடையை வகுப்பறையாக மாற்றிக் கொண்ட ஒரு நம்பிக்கை தலைவன் நம்மிடையே பிறந்து விட்டான் என்கின்ற பெரு மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.

குறிப்பாக மறைந்த பொருளாதார மேதை ‘ஜே சி குமரப்பாவின் தாய்மை பசுமை பொருளாதார கொள்கையை’ மிக மிக நுட்பமாக அதே சமயத்தில் எளிமையாக விளக்கிய அவரது தமிழ்

மேதமை நிறைந்தது.

இத்தனைக்கும் அவரைச் சுற்றி ஆயிரத்தெட்டு விமர்சனங்கள், அவதூறுகள் என பொய்மையும், சூழ்ச்சியும் நிறைந்த ஏச்சுபேச்சுகள் படையெடுக்கின்ற காலம் இது. நம்பிக்கை கொண்ட அந்த மனிதனை இது போன்ற வெறும் விமர்சனங்களால் வீழ்த்தி விட முடியாது என ‘திராவிடத் திருவாளர்’ ஒருவரே கட்டுரை ஒன்றை எழுதியிருந்த காட்சியையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

அவரது கண்கள் முழுக்க அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் மீள் எழுச்சிக்கான நம்பிக்கை மிகுந்த துடிப்பினை மட்டுமே காண முடிந்தது. இந்த பயணத்தில் முதல் இரண்டு நாட்கள் நானும் அவரோடு இருந்த அந்த நேரத்தில் கூட உணவு உண்ணும் பொழுதுகளில் கூட அரசியலை மட்டுமே பேசிக்கொண்டே இருந்தார். அவர் பேச்சில் அவர் சொல்வது போல அவரது எண்ணம் செயல் மூளை அனைத்திலும் இன நலன்/ இன மீட்சி போன்றவை நிறைந்து இருந்து அவரை உறங்கவிடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றன.

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் மேடையை வேறு திசைக்கு அண்ணன் சீமான் திருப்பி இருக்கிறார். கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று இனி உளற முடியாது. வெறும் துண்டு சீட்டை வைத்துக்கொண்டு “ஆக அந்த வகையிலே..” என பேசி வளர முடியாது.ஒவ்வொரு மேடையையும் அண்ணன் சீமான் போல வகுப்பறையாக மாற்றுகின்ற வல்லமை கொண்ட தலைவன் தான் இந்த மண்ணுக்கு தேவை. இதில் முக்கியமானது என்னவென்றால் சமகாலத்தில் அவர் மட்டும்தான் அவ்வாறு இருக்கின்றார். அவருக்கு போட்டியாக வாசிப்பறிவு கொண்டு மேடைகளை வகுப்பறைகளாக மாற்றி பேராசிரியராக முழங்க இங்கே யாருமே இல்லை.

இனி காலமும் அவர்தான். களமும் அவர்தான்.

இனி அவர் தீர்மானிக்கிற திசையில் தான் தமிழகத்து அரசியல் அமைய இருக்கிறது என்பதுதான் இன்றைய திருப்பூர் கூட்டம் மூலம் அண்ணன் சீமான் விடுத்திருக்கின்ற செய்தி.

சமூக வலைதளங்களில் சகல காலமும் வசிப்போருக்கு..

சமூக வலைதளங்களில் 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் சில பலரது பதிவுகளை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில் தங்கள் அலைபேசி திரைக்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். யாராவது நினைவூட்டினால் மறுத்துவிடுவார்கள்.

இதில் தான் அவர்களுக்கு சகலமும். நகைச்சுவை கிண்டல் கேலி கோபம் காதல் காமம் நட்பு உறவு பாராட்டு விலகல் புலம்பல் என சர்வ உணர்ச்சிகளின் சதிராட்டத்தை அலைபேசி திரைகளுக்கு உள்ளாகவே அவர்கள் அடக்கி விடுவார்கள்.

எங்கள் பகுதியில் அலைபேசியில் மட்டும் எங்கள் கட்சியில் இயங்கிய ஒருவர் இருந்தார். அவர் அலைபேசி வாயிலாகத் தான் கட்சியில் இணைந்தார். அலைபேசியில் தான் கருத்து சொல்வார். அந்த அலைபேசியிலேயே விமர்சனம் செய்வார். கட்சிக்காரர்கள் யாருக்காவது ஏதாவது குறை என்றால் இவர்தான் முதலில் சென்று அந்தக் குறை என்ன என கேட்டு தனக்கு யாரைப் பிடிக்கவில்லையோ அவரை அந்தக் குறையில் சம்பந்தப்படுத்தி திட்டுவார். நேரில் கலந்தாய்வு கூட்டத்திற்கு வாருங்கள் என்று அழைத்தால் ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை அன்றைய தினம் தான் ஊரில் இல்லை என்பார். போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் அன்று அவரது அலைபேசி அமைதியாகிவிடும். நாங்களும் முடிவு செய்து எப்படியாவது அவரை நேரில் பார்த்து விட வேண்டும் என பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. ஆனால் விமர்சன அலைகளுக்கு மட்டும் அவரிடத்தில் என்றும் குறை இருக்காது. ஒருமுறை அண்ணன் எங்கள் ஊருக்கு வந்தபோது இந்த முறையாவது அந்த “அலைபேசி நபரை” பார்த்து விடுவோம் என முயற்சித்து நேரில் வாருங்கள் அண்ணனை சந்திப்போம் என அழைத்தோம். ஆனால் தலைவர் ‘நைசாக’ எஸ்கேப் ஆகி வந்திருந்த ஒரு தம்பி அண்ணனோடு ஒரு புகைப்படம் எடுத்து பதிவு போட்டதில் சென்று “பலர் படம் எடுக்க முடியவில்லை” என இந்தப் பக்கமே வராத இவர்(!) குறை சொல்லி ‘இவர்கள் இப்படித்தான்’ என பொறுப்பாளர்களை திட்டி தன்னிச்சையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

பிறகு விசாரித்து பார்த்த போது தான் தெரிந்தது. அவருக்கு அலைச்சல் வெயில் மழை இரவு பயணம் போராட்டம் சிறை கட்சி என பலவற்றிலும் மிகுந்த அச்ச உணர்வு. அவர் எதற்கும் வர மாட்டார். வரவும் அவருக்கு அச்சம். ஆனாலும் கருத்து சொல்லியே ஆக வேண்டுமே.. அதற்குதான் அந்த அலைபேசி. இவர் போல எங்கள் அமைப்பில் மட்டுமல்ல. பல அமைப்புகளிலும் பல நபர்கள் இவ்வாறு இருக்கிறார்கள்.

இப்படி அலைபேசி உரையாடல்களை உண்மை என நம்பி அதிலேயே வாழ்க்கையை தொலைத்த சிலரை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக முகநூல் ஆதிக்கம் பெருகிய போது இதுபோன்ற நபர்களும் உருவானார்கள். முகநூலிலேயே அவர்களுக்கு சொந்த பந்தங்கள் ஏற்பட்டன. அதிலேயே அன்பு.அதிலேயே விரோதம். அதிலேயே பிரிவு. இப்படி உலகம் அவர்களுக்கு அந்த அலைபேசி திரைக்குள்ளாகதான்.

ஏன் நேரில் வரவில்லை என யாரும் அவர்களை கேட்க முடியாது. ஏனெனில் அவர்கள் நேரில் வர மாட்டார்கள். ஒரு பொறுப்பு எடுத்து செய்யவும் அவர்களால் முடியாது. செய்பவர்களையும் அவர்களுக்கு பிடிக்காது. என்ன செய்வது.. தங்கள் கற்பனை படகில் ஏறி அலைபேசி முழுக்க புலம்பல்களை நிரப்பித் தள்ளுவார்கள்.

அமைப்புக்குள்ளாக இருக்கிற முரண்களை ஒரு அலைபேசி அழைப்பின் மூலமாக தனிப்பட்ட முறையில் அழைத்து பேசிவிட முடியும் தான். அப்படி பேசினால் அது இருவர் சம்பந்தப்பட்ட உரையாடல் மட்டுமே. அதற்கு வாய்ப்பு இருந்தும் பொதுவெளியில் பேசவும் எழுதவும் தான் அவர்களுக்கு விருப்பம்.

முகநூல் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் நம்மை, நம் திறமைகளை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான அல்லது நமது செய்திகளை, வாழ்த்துக்கள் , ஆழ்ந்த இரங்கல் போன்ற உணர்வுகளை குறிப்பிட்ட நோக்கில் பரப்புவதற்கான ஊடகங்கள் மட்டுமே. இந்த மெய்நிகர் ஊடகங்கள் மூலமாக நமக்கான வாசகர்கள் நமக்கான பார்வையாளர்கள் போன்றவற்றை எளிதில் பெறுகிறோம். அந்த ஒரு வசதியை தவிர இதில் வேறு எந்த புண்ணாக்கும் இல்லை.

கட்சிக்கு உழைப்பவர்கள் எப்படி இருந்தாலும் ஊர் ஊராக அலைந்து கொண்டு போராடிக் கொண்டு எங்கேயோ கொடியேற்றிக்கொண்டு பலரை சந்தித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களும் நிறை குறைகள் நிரம்பிய மனிதர்கள் தான். குறைகள் ஏதேனும் இருப்பின் ஒரு அலைபேசி உரையாடல் மூலம் எளிதில் சொல்லி அதை களைந்து விடலாம் தான். ஆனால் பொதுவெளியில் எழுதி அவர்கள் குறைகளை மட்டுமே ஊதிப் பெருக்குவதன் அரசியல் வன்மம் தனிப்பட்ட கோபம் போன்ற மனித உணர்ச்சிகளை எல்லாம் தாண்டி அது ஒரு உளவியல் கோளாறு.

அலைபேசியை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள 1008 வழிகள் இருக்கின்றன. அதை விடுத்து விட்டு புறம் பேசுவதையும் குறை கூறுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் அன்பர்களை காணும் போது உண்மையில் பாவமாக இருக்கிறது. இவர் அடுத்தவரைப் பற்றியே யோசிக்கிறாரே, தன்னிலை குறித்து என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்பாரா என சிந்திக்கும் போது பரிதாபம் மிஞ்சுகிறது.

மணிரத்தினம் இயக்கிய “குரு” திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தன்னை அதிகமாக விமர்சிக்கும் பத்திரிக்கைக்கு குருபாய் அதிகம் விளம்பரம் கொடுக்க சொல்வார். அது ஒரு வகையான எதிர்மறை செல்வாக்கு. (Negative publicity). மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த குணாதிசயம் அதிகம் இருப்பதாக சொல்வார்கள். பாராட்டோ விமர்சனமோ அது தன்னை சுற்றி தான் நடக்க வேண்டும் என திட்டமிட்டு சில வேலைகள் செய்வார் என்பார்கள். இது போன்ற மனிதர்கள் இணைய உலகிலும் உண்டு.இதில் ஒருவரை வெறுப்பேற்றுவதற்காக 24 மணி நேரமும் சிந்தித்து பக்கம் பக்கமாய் எழுதி விமர்சிப்பவர்களை பற்றி யோசித்துப் பாருங்கள். உண்மையில் விமர்சிக்கப்படுபவர் விமர்சிப்பவர்களை பயன்படுத்திக் கொண்டு வளர்ந்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறார். மற்றொருவரோ பதிவு போட்டுக் கொண்டு தனக்குத்தானே மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.இதில் யார் புத்திசாலி ‌‌…??

ஒருவரை எதிர்ப்பதற்காக பக்கம் பக்கமாக பதிவு பதிவாக போட்டு தள்ளும் பலரும் தங்களை அறியாமல் தாங்களே பலியாகிக் கொண்டிருப்பதை உணராமல் இருக்கிறார்கள்.

உண்மையில் நமது உணர்ச்சிகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அலைபேசி ஊடாக அடுத்தவர் கையில் அதற்கான பொத்தானை கொடுத்துவிட்டு அடுத்த பதிவு என்ன வருகிறது என வேடிக்கை பார்ப்பது போல பைத்தியக்காரத்தனமானது எதுவும் இல்லை.

நமது உள்ளூர்களில் விளம்பர செய்தி தாள்கள் இலவசமாய் வரும் இல்லையா… இங்கே வீட்டுமனை கிடைக்கும் இங்கே இந்த பொருள் கிடைக்கும் என்றெல்லாம் விளம்பரங்கள் நிறைய காணப்படும் அந்த செய்தித்தாள்கள் போலத்தான் இந்த முகநூல் மற்றும் சமூக வலைதளங்கள்.

அளவற்று அதில் மூழ்கி போய் உணர்ச்சிகளை கொட்டிக் கொண்டே இருப்பது என்பது.. ஒரு காலத்தில் அதிகம் குடித்துவிட்டு உடல் நலனை கெடுத்துக் கொண்டவர் பின்னர் இறுதி காலத்தில் வருத்தப்படுவது போல ஆகிவிடும்.

நமக்கு முன்னால் அலைபேசி தாண்டிய காலத்தின் ஒரு பியானோ இருக்கிறது. அதை இசைக்க அலைபேசியை தவிர்த்த ஒரு உளவியல் தேவை.ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவித்து உறவுகளோடு கொண்டாடி, சமூக அரசியல் பணிகளுக்கு வீதியில் நின்று வியர்க்க வியர்க்க போராடி அதையும் ரசித்து செய்து அனுபவிக்க 1008 உணர்ச்சிகள் நமக்கு இருக்கின்றன.

சுய மேதமையை போதிக்கும் அலைபேசி திரை சத்தியமாக போலியானது என உணரும் ஒவ்வொருவரும் தாங்கள் இதுவரை இதற்காக செலவு செய்த நேரத்தை யோசிக்கும் போது கண்டிப்பாக வருத்தப்படுவார்.

எமை காத்த எம் மூத்தவர்..

இந்த நொடியில் நினைத்துப் பார்த்தால் அப்படி ஒரு காலம் இருந்தது என யாராலும் சிந்திக்க முடியாது. ஏனெனில் அப்போது இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டிருந்தார். நாடெங்கிலும் பதற்றம். தமிழ் உணர்வு தடை செய்யப்பட்ட உணர்வாக மாறி அது தேசத் துரோகமாக கருதப்பட்ட காலம். தமிழர்கள் இந்திராவின் மகனை கொலை செய்து விட்டார்கள் என எல்லோரும் பழி சுமத்தி, ஒரு தேசிய இனத்தேயே தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கி தாழ்த்திய நேரம்.

அப்போதுதான் மதுரைக்குப் பக்கத்தில் திருபுவனம் வட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து சட்டம் பயின்று உயர்நீதிமன்றத்தை தனது தேர்ந்த ஆங்கிலப் புலமையினால் அதிர வைத்துக் கொண்டிருந்த ஒரு தமிழன் தலை நிமிர்ந்தான்.

உயரமான தோற்றம். தோற்றத்திற்கு ஏற்றாற் போல் இன உணர்வின் கொற்றம்.

சந்திரசேகர் என்கின்ற அவரது பெயருக்கு பின்னால் தடா சட்டத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றிய சட்ட மேதமை இணைந்ததால் அவர் தடா சந்திரசேகர் ஆனார். துணிச்சல் அவரது உடன் பிறந்த பெருங்குணம். இன உணர்வு அவரது உதிரத்தில் ஊறிக் கொண்டே இருக்கின்ற அருங்குணம். சீற்றமும் துணிச்சலும் சட்டப் புலமையும் நிறைந்த வாதங்களால் ராஜீவ் கொலை வழக்கில் சிக்குண்டு அன்று ஒட்டுமொத்த உலகமே கைவிட்டிருந்த தமிழர்களை காப்பாற்ற துணிந்தார்.

உலகமே கைவிட்டிருந்தபோது இருள் நிறைந்த குழிக்குள் விழுந்து கிடந்த 26 தமிழர்களுக்கு கிடைத்த ஒற்றை நம்பிக்கை அந்தப் பெருமனிதர் தடா சந்திரசேகர் தான். அக்காலங்களில் இயக்கப் பெயரை யாரும் பயன்படுத்த முடியாது. தலைவர் பெயரை யாரும் சொல்ல முடியாது ‌. காவல்துறை உளவுத்துறை மத்திய அரசு மாநில அரசு என எல்லா திசைகளிலும் நெருக்கடி. எதற்கும் அந்த மனிதர் அஞ்சியதில்லை. தடை செய்யப்பட்ட இயக்கம்.தடை செய்யப்பட்ட தலைவர். தடை செய்யப்பட்ட மனிதர்கள்.

ஆனாலும் அவர்தான் இயக்கத்தின் வழக்கறிஞர். தலைவரே மதிக்கின்ற சட்டத்தரணி.

தலைவரின் பெற்றோர் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்தபோது தேடி வந்துப் பார்த்த பெருந்தகை நமது மூத்தவர் தான். தலைவரின் குடும்பத்திற்கு அவ்வளவு நம்பிக்கை அவர் மேல். அதேபோல் அன்னை பார்வதி அம்மாள் இறந்த போது ஈழத்திற்கே சென்று இறுதிச்சடங்குகள் செய்ய உடன் இருந்தவர் நமது மூத்தவர் தடா சந்திரசேகர் அவர்கள்.

தமிழர்களின் ஆன்ம உணர்ச்சியான ஈழ விடுதலை உணர்வு என்பது என்றும் தமிழ்நாட்டில் மங்கி விடக் கூடாது அது சுடர் விட்டு பெரும் தீயாய் பரவ வேண்டும் என்ற நோக்கில் நாம் தமிழர் கட்சியை அண்ணன் சீமான் அவர்கள் உருவாக்கிய போது அதன் முதுகெலும்பாய் மாறி கட்சியின் பொதுச்செயலாளராய் வழிநடத்தியவர் நம் மூத்தவர்.

கம்பீரமான மனிதர் அவர். எந்த விமர்சனத்தையும் முகத்திற்கு நேராக சொல்வதற்கு அவர் என்றுமே தயங்கியதில்லை. அவரைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு கருத்துதான். அது தன் தம்பி சீமானின் நலம். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார். ராஜிவ் கொலை வழக்கில் சிக்குண்டு 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து தற்போது முகாமில் வதைப்பட்டு வருகிற அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்கள் பரோல் மூலம் வெளிவரும்போது ஈழ நாட்டவரான அவர் இங்கே தமிழ்நாட்டில் யார் வீட்டிற்கு செல்வது என சிந்தனை ஏற்பட்டபோது.. “உடன் பிறந்த அண்ணன் மூத்தவன் நான் இருக்கிறேன்.. வா தம்பி என் வீட்டிற்கு..” என அழைத்த எங்களது மூத்தவர் போல யார் உண்டு.. இனி எங்களுக்கு..

விடுதலைக்கு விலங்கு என்ற‌ அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதத் தொடங்கும் போது வழக்கு கோப்புகளை பெற அவரது அலுவலகத்திற்கு சென்ற போது முக்கியமான மனிதர்கள் அவருக்காக காத்திருந்தார்கள். சிறியவனான என்னை அழைத்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். “முக்கியமான நிறைய மனிதர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் மூத்தவரே..” என சொன்னபோது.. “அது பணத்திற்காக.. உன்னிடம் பேசுவது என் இனத்திற்காக . என் இனத்தை தாண்டி எனக்கு எதுவும் இல்லை..” என சொல்லிவிட்டு அவருக்கே உரிய கம்பீரமான சிரிப்பை சிரித்தார்.

வேலூர் சிறையில் அண்ணன் சீமான் அடைக்கப்பட்டு இருந்த காலத்தில் கட்சி தொடங்கி சில நாட்களே ஆகியிருந்தது. அண்ணன் இல்லாத சூழலில் இனி என்ன செய்வது என்கின்ற ஒரு கையறு நிலை. அந்த நேரத்தில் மூத்தவர் மீதுதான் அனைவரின் நம்பிக்கையும். அவரும் அண்ணனையும் மீட்டு கட்சியையும் காத்தார்.

அவர் அருகில் இருந்தாலே ஒரு பாதுகாப்பு உணர்ச்சி எங்களுக்கெல்லாம். அமைப்புத் தொடர்பாக மாநில பொறுப்பாளர்கள் யாரிடமாவது அண்ணன் சீமான் 10 சொற்கள் பேசினால் அதில் இரண்டு “மூத்தவரிடம் கேட்டு விடுங்கள்..” என்பது தான்.

அண்ணன் சீமானுக்கும் அவருக்குமான உறவை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. ‘மூத்தவர்’ என்று அண்ணன் சீமான் என்று அழைத்தாரோ தமிழ்நாட்டில் இருக்கின்ற லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அவர் ‘மூத்தவராக’ மாறிப் போனார்.

கம்பீரமான மனிதர் அவர். தோற்றமும் குரலும் எதிரே நிற்பவரை சட்டென சிறியவராக்கி காட்டும் கம்பீரம் அது.

ஈரோட்டில் கிழக்கு இடைத் தேர்தல் நடந்த நேரத்தில் பிரச்சாரப் பணிக்கு வந்திருந்த போது நானும் தம்பி ஆனந்தும் மூத்தவரை அவர் தங்கும் இடத்திற்கு சென்று விடுவதற்காக அழைத்துச் சென்ற அந்த இரவில் “என் பசங்கடா நீங்க‌..” என்று சொன்ன அந்த சொற்கள் இன்னும் காற்றில் மிதந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு நள்ளிரவில் தமிழின உணர்வாளர்களுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரை அலைபேசியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிளாசிக் ஆங்கிலத்தில் புரட்டி எடுத்து கேள்விகள் கேட்டு திகைக்க வைத்த அவர் ஆளுமை பார்த்து நான் எல்லாம் மிரண்டு போயிருந்தேன்.

யாரிடமும் ஒரு அலைபேசி அழைப்பு மூலம் அவரால் ஆணையிட முடிகிற அளவிற்கு ஆளுமை. ஆனால் அண்ணன் சீமானிடம் மட்டும் எதையும் எதிர்பார்க்காத அடி மன ஆழமான அன்பு.

தனது சட்ட ஆற்றல் மூலம் தடுப்பு முகாமில் இருந்து எத்தனையோ தமிழர்களை மீட்டு புலம் பெயர் தேசத்திற்கு அவர்தான் அனுப்பி வைத்தார். தமிழின உரிமை களங்களில் தமிழர் யார் பாதிக்கப்பட்டாலும் அவருக்காக வாதாட “தடா சந்திரசேகர்” என்கின்ற நம்பிக்கை எப்போதும் நங்கூரமிட்டு அமர்ந்திருந்தது. அதுதான் இன்று இந்த இனத்திற்கு இல்லாமல் போய்விட்டது.

இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் இப்படித்தான் நம்மை தவிக்க விட்டு சென்றார். பிறகு தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது. இப்போது மூத்தவர்.

எங்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்ட மூத்தவர் அவர் உடல் நலனையும் கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்து இருக்கலாம். என்ன செய்வது.. இரக்கமற்ற கொடியவனாக இந்தக் காலம் நம் கழுத்தில் ஏறி நிற்கிறது.

மூத்தவரே சென்று வாருங்கள். உங்கள் உயிர் தம்பியோடு உயிருள்ளவரை நாங்கள் நேர்மையாக உடன் இருப்போம்.அதுதான் உங்களுக்கு நாங்கள் காட்டும் மரியாதை என்பதை அறிவோம்.

எந்தக் கனவின் மூலமாக எங்களுக்கு நீங்கள் மூத்தவரானீர்களோ அந்த விடுதலை கனவிற்காக எம் உடல் மண்ணில் சாயும் வரை உங்களைப் போன்றே புலிக்கொடி ஏந்தி போராடுவோம்.

கண்ணீர் வணக்கம்.

கொன்றை மரத்து கொலை வழக்கு

.

தூரமாக நீ செல்வதற்கு

முன்பாக

இறுதியாக

நின்று கொண்டிருந்த

கொன்றை மரத்திற்கு கீழே

இன்று வெற்று நிழலை தவிர

வேறு எதுவும் இல்லை.

அதைக் கடந்து விட்டேன்

அல்லது

கடந்து கொண்டிருக்கிறேன்

என நானே

கற்பித்துக் கொள்கிறேன்.

என் கழுத்து

திரும்பிப் பார்க்கும்

திசையில் அது இல்லாமல்

தொலைவில் மறைந்து விட்டது என

உறுதியாய் நம்புகிறேன்.

நம் பிரிவுக்கு

நீயே கற்பித்துக் கொண்ட

காரணங்கள்

காற்றின் உளி பட்டு

உடைந்து போன

வண்ணத்துப்பூச்சிகளின்

சிறகுகளாக

மிதந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாளும்

அந்த இடத்தைக்

கடக்கும் போது

மதிய நேரத்து

கோவில் குளம் போல

சலனம் அற்று இருக்க

முயற்சித்துக்

கொண்டே இருக்கிறேன்.

யாரும் அறியாத

ஓர் அந்தியில்

முகம் இறுகாமல்

முனகல் இல்லாமல்

விழியோர துளி

விழாமல்

அந்த கொன்றை மரத்தை

கடந்து விடுகிறேன்.

ஒரு உதிராத புன்னகை

உள்ளுக்குள்.

மறுநாள் காலை

அந்த கொன்றை மரத்தின்

கீழே விழுந்து கிடந்த

அந்த ஒற்றைப் பூ

நிச்சயம் உன்னுடையது அல்ல.

உனக்காகவும் இருக்கலாம்

என ஏனோ

என்னால் நினைக்க முடியவில்லை.

ஆக இப்படித்தான்

உலகத்தில்

சில பல

தற்கொலைகளும்/கொலைகளும்

இயல்பாக நடந்து

கொண்டிருக்கிறது

உறவுகளே..

Page 3 of 3

Powered by WordPress & Theme by Anders Norén