
ஜனவரி 26 குடியரசு தினம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மையான நோக்கமாக மக்களின் நலன் சார்ந்த ஜனநாயகம் முன்னிறுத்தப்படுகிறது. உண்மையில் ஜனநாயகம் என்பது மிகச் சரியான ஒன்றா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மக்களின் பெரும்பான்மை கருத்து என்பதன் வாயிலாக கட்டமைக்கப்படும் ஜனநாயகம் ஆகப் புனிதமானது அல்ல. ஏனெனில் மக்களின் பெரும்பான்மை கருத்து என்பது எப்போதும் ஒட்டுமொத்த சமூகத்திற்கான நலன்களைச் சார்ந்தது அல்ல. அது அந்தந்தக் காலச் சூழல்களுக்கு உட்பட்டது. மக்கள் விரும்புகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் விருப்பம் ஒன்றையே சமூகத்தின் விளைச்சலாக கருதிக் கொள்ள வேண்டும் என எல்லோரும் முடிவெடுத்தால், இந்த சமூகம் அடைந்திருக்கும் எல்லா சீர்த்திருத்தங்களும் ஜனநாயகத்தின் அளவுகோல்களின் படி எதிர்க்கப்பட வேண்டியவையே..
ஏனெனில் மக்கள் பாதுகாப்பாக அந்த சூழ்நிலைக்கு, சுகமாக, வாழ்வதற்கு ஏற்ற ஒன்றையே விரும்புவார்கள். மக்களின் விருப்பத்திற்கு, எதிர்காலம் சார்ந்த ஒட்டுமொத்த நலன் சார்ந்த சிந்தனைகளோ/ கருத்துக்களோ இருப்பதில்லை.
ஜனநாயகத்தின் மிகப்பெரிய தீங்கு என்னவென்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த தமிழர்களுக்கு நன்கு புரியும். பெரும்பான்மையினர் விரும்புகிறார்கள் என்ற மலினக் காரணத்திற்காக, தீங்குகளை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கிற கேடு நமது மீது வழங்கப்பட்டிருக்கிற ஜனநாயகத்தின் வாயிலாக திணிக்கப்பட்டிருக்கிறது.
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மக்கள் விரும்பிய எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என்கிற மூன்று தீங்குகளால் தமிழகம் அடைந்திருக்கின்ற பின்னடைவுகள் ஒன்றல்ல, இரண்டல்ல. எம்ஜிஆர் ஒரு திரைப்பட நடிகர் , ஜெயலலிதா ஒரு திரைப்பட நடிகை, கருணாநிதி ஒரு வசனகர்த்தா என்பது போன்ற எளிய / ரசிக மனப்பான்மை சார்ந்த மலினமான காரணங்களுக்காக அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைத்த மக்கள் , இன்று திரையரங்க இருட்டினில் தங்கள் எதிர்காலத் தலைவர்களை தேடும் மனநிலையில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
இதுவரை உலகத்தில் பொன்னான ஆட்சி காலத்தை வழங்கியவர்கள் பலரும் தனது ஆட்சியின் ஒரு முறைமையாக சர்வாதிகாரத்தினை கையாண்டார்கள், என்பதுதான் மிக முக்கியமான செய்தி. முதன்முதலாக பொதுவுடமை அரசாங்கத்தை கட்டமைத்த ரஷ்யப் புரட்சி மற்றும் சீனப் புரட்சி என பல புரட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளையே பிரசவித்தன.
ரஷ்யப் புரட்சி முடிவில் புரட்சியாளர் லெனின் அமைத்த ஆட்சி மித சர்வாதிகார ஆட்சி என்றால் அவரது தொடர்ச்சியாக வந்த ஸ்டாலினின் ஆட்சி முழு சர்வாதிகார ஆட்சி. ஏனெனில் சர்வாதிகாரம் அல்லது முழுமையான உச்ச அதிகாரம் ஆகியவற்றால் தான் அதுவரை நிகழ்ந்து வந்த அனைத்து தீங்குகளையும் ஒழிக்க முடியும் என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. விடுதலைப் பெற்ற தமிழர் நிலம் எவ்வாறு அமைய வேண்டும் என நம் உயிர்த் தலைவர் தேசியத் தலைவர் மேதகு அவர்களிடம் கேட்டபோது, மிகுந்த தீர்க்கத் தரிசனத்துடன் புரட்சிகர சோசலிசக் குடியரசு நாடாக ஈழம் அமைய வேண்டும் என்கிற தனது விருப்பத்தினை தலைவர் பதிவு செய்தார்கள்.
ஜனநாயகம் பிரசவிக்கின்ற பெரும்பான்மைக் கருத்துக்கள் என்பதன் மகத்தான தீமை என்னவெனில், ஆட்டு மந்தையாக இருக்கின்ற மக்களின் விருப்பங்கள் அப்படியே நிறைவேறுதான்.
எனவேதான் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை என்பது அன்பான சர்வாதிகாரமாக இருக்கும் என்பதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் விவரித்தார். இதை நீட்சி தான் அவர் விவரிக்கின்ற தாய்மைப் பொருளாதாரம்.
அது என்ன அன்பான சர்வாதிகாரம் … அதற்கும் அவரே பதில் சொன்னார். உடல் காச்சலால் பாதிக்கப்படும் போது ஊசி போடுவதை எந்த குழந்தையும் விரும்பாது. ஆனால் ஊசிப் போட்டால் தான் உடல் நலன் பாதுகாக்கப்படும் என்று வரும்போது குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக ஊசி போடுவது தான் அன்பான சர்வாதிகாரம் என எளிய மொழியில் அண்ணன் சீமான் விளக்கினார்.
உண்மையில் இது சாத்தியமா..?? இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதற்கான வழிவகைகளை கொண்டிருக்கிறதா என்பதை எல்லாம் பற்றி யோசித்தால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பில்
“இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை, இறையாண்மையுள்ள, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக நிலைநிறுத்தவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும்:
சமூக, பொருளாதார, அரசியல் நீதி;
எண்ணம், வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் சுதந்திரம்;
தகுதிப்பாடு, வாய்ப்புநலம் இவற்றில் சமத்துவம்
ஆகியவற்றை எய்திடவும், அவர்களிடையே தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மற்றும் உடன்பிறப்புரிமை (சகோதரத்துவம்) ஆகியவற்றை உறுதிப்படுத்தவும்,
எங்களது, அரசியலமைப்பு நிர்ணய சபையில், 1949, நவம்பர் 26 ஆகிய இந்நாளில், இந்த அரசியல் அமைப்பினை ஏற்று, இயற்றி, எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொள்கிறோம்”.
எனக் காணப்படுகிறது.
ஆனால் முகப்புரையில் உள்ள “சமதர்மம் ,சமய சார்பற்ற தன்மை, சமூக அரசியல் மற்றும் பொருளாதார நீதி, தகுதிப்பாடு, வாய்ப்பு நலம் இவைகளை ஜனநாயக ரீதியில் நிறைவேற்ற முடியுமா என்கிற கேள்வி எழும்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் நம் நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் பதிலாக இருக்கிறது.
ஏனெனில் இங்கே பெரும்பான்மை என்பது சமயச் சார்புள்ளதாக, சமூக அரசியல் மற்றும் பொருளாதார நீதிக்கு எதிராக, சமதர்மத்திற்கு எதிராகத்தான் இருக்கிறது என வரும்போது இங்கே ஜனநாயகம் என்பதே மாபெரும் தீங்காக மாறிவிட்டது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் சமமற்ற/ பயிற்றுவிக்கப்படாத பலவீனமான மக்கள் கூட்டத்தை வைத்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நாமே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே ஜனநாயகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய சிந்தனைகள் நமக்குத் தேவையாக இருக்கின்றன. சூழலியல், மக்கள் நலன், சமூக நீதி போன்றவற்றிற்கான அரசியலை ஒருபோதும் ஜனநாயகத்தின் வாயிலாக வென்றெடுக்க முடியாது.
உலகத்தில் பெரும்பான்மை பிரசவித்த அரசியல் தத்துவங்கள் என்று எதுவும் இல்லை. தனிமனிதர்கள் சிந்தித்த சிந்தனையில் இருந்து தான் ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலன் தருகிற தத்துவங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் பிறந்திருக்கின்றன. எனவே எதிர்காலத் தலைமுறை மற்றும் மக்கள் மண்ணின் நலம் போன்றவற்றை தாய்மை உள்ளத்தோடு சிந்திக்கின்ற தனிநபர் சர்வாதிகாரத்தோடு கூடிய ஆட்சி முறைமைதான் இங்கே தேவையாக இருக்கிறது.
உண்மையில் குடியரசு நாளில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை என்னவெனில்.. நமக்காக நாமே உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாம் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதுதான்.
மறுமொழி இடவும்