
திராவிடம் எதிர் தமிழ்த்தேசியம் என்ற விவாதம் உச்சநிலையை அடைந்து திராவிடத்தின் மூலவர் ஐயா ஈவேரா அவர்களின் முரண்பாடான கொள்கை முடிவுகளை, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றது போல உரைக்கப்பட்ட பிழைப்புவாத கோட்பாட்டுக் கருத்துக்களை இளம் தமிழ்த் தேசியர் பலரும் அம்பலப்படுத்தி வருகிற நிலையில், தன்னை பலவீனத் தரப்பாக உணர்ந்த திராவிடம் மிகப்பெரிய சதி வேலைகளை தொடங்கியுள்ளது.
அதில் பிரதானமாக தமிழ்த்தேசிய கருத்தியலின் பெருமித அம்சங்களை தவறாக சித்தரிப்பது/ இழிந்துப் பேசுவது போன்ற வேலைகளை திராவிட தரப்பிலிருந்து பேசும்போது அதன் சதி வலையை நாம் அம்பலப்படுத்தி வருவதால் , தமிழ்த்தேசிய இனத்திலிருந்தே ஒருவரை வைத்து இந்த வேலைகளை திராவிடத் தரப்பு திட்டமிட்டு செய்யத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக தமிழர் இனத்தின் தேசியத் தலைவர் மேதகு பற்றி அவர் தவறான கருத்துக்களை பேசுகிறார் என அயலகத் தமிழ் உறவுகள் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், மூவேந்தர்களைப் பற்றி தற்போது அவர் பேசி வருகிற காணொளிகள் பரப்பப்படுகின்றன.
மதிப்பார்ந்த நம் அண்ணன் திருமாவளவன் திராவிடத் தரப்பிற்கு ஆதரவாக நிற்கின்ற நிலைமை விசித்திரமானது அல்ல. 2009 இனம் அழிந்த காலத்திலேயே இனமழித்த காங்கிரஸ் மேடையிலேயே நின்று அப்போது காங்கிரஸ் தலைவரான “சோனியா வாழ்க” என முழக்கம் போட்டு நாம் தலைக்குனிந்தத் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. எனவே அவர் நிலைமை குறித்து நமக்கு எந்த ஆச்சரியமும் வியப்பும் வெறுப்பும் இல்லை. அவர் அப்படித்தான்.
பல நேரங்களில் தமிழ்த் தேசியம் குறித்தும் தமிழ்த் தேசிய தலைமைகள் குறித்தும் மிக மோசமான வசை மொழிகளோடு விமர்சனங்கள் அவர் வைத்த போதும் கூட நாம் எதிர்வரும் விமர்சனம் ஏதும் வைக்காமல் அமைதியாக கடந்து போனது திராவிடத்தின் சதி வேலைகளை புரிந்து கொண்ட பட்டறிவின் காரணமாகத்தான்.
திராவிடம் இது போன்ற வேலைகளை செய்வதில் கெட்டிக்காரத்தனமானது. நம் உடன் பிறந்தார்களையே நமக்கு எதிராக நிற்க வைத்து, நம்மை மோதிக் கொள்ள வைத்து அதன் மூலமாக ஆதாயம் பெற முயற்சிக்கின்ற மிக இழிவான வேலையை திராவிடத் தரப்பு செய்யும். எப்படி வட மாவட்டங்களில் வன்னியர்/ஆதித்தமிழர் மோதலை தக்கவைத்து திராவிடம் அதிகாரத்தின் உச்சத்தில் எப்போதும் நிலைத்திருக்கிறதோ அதேபோன்ற வேலையை எல்லா இடங்களிலும் செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அண்ணன் திருமாவளவன் கூட தற்போது அறிவித்திருக்கிறார் அசலான (?) தமிழ்த் தேசிய மாநாடு ஒன்றை தான் நடத்தப் போவதாக. அதற்கு நம் வாழ்த்துக்கள். அதை எழுந்து வருகிற தமிழ்த் தேசிய உணர்ச்சிக்கு கிடைத்திருக்கிற வெற்றியாக நாம் கருதுவோம். அதே சமயத்தில் கருத்தியல் தளத்தில் பலவீனம் அடைந்து கோமா நிலையில் கிடக்கும் திராவிடத் தரப்பிற்கு வலு சேர்க்கிற வேலையாக அந்த மாநாட்டினை அண்ணன் உருவாக்கி அதில் தமிழ்த் தேசிய தலைமைகளை விமர்சிக்கின்ற ஒரு தளமாக மாற்றுவார் , திராவிடத் தரப்பு மாற்ற வைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதில் நாம் செய்ய வேண்டியது “அமைதியுடன் கூடிய அறிவார்ந்த புறக்கணிப்பு”.
எனவே ஒரே இனத்திற்குள்ளாக மோதி ரத்தம் குடிக்க வைக்கிற திராவிடத் தரப்பின் சதிகளை உணர்ந்து, அண்ணன் திருமாவளவன் முன் வைக்கின்ற ஆதாரமற்ற செய்திகளை நாம் புறக்கணித்து , மேலும் வலிமையாக தமிழ்த் தேசிய கருத்துக்களை நேர்மறை எண்ணத்தோடு பரப்பி வருவதே தமிழ்த் தேசியப் பணி என உணர்வது நலம். அவருக்கு பதில் சொல்லி அல்லது அவருக்கு எதிர்வினை ஆற்றி திராவிடத் தரப்பு எதிர்பார்க்கிற உள்குழு மோதலை ஏற்படுத்தாமல் “அறிவார்ந்த புறக்கணிப்போடு” அமைதியாய் கடப்பது ஆகச்சிறந்தது.
அதற்கு ஈடு செய்யும் விதமாக தமிழ்த் தேசிய அரசியலின் எழுச்சியின் வடிவமாக திருச்சியில் நடக்கும் “மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026” செய்திகளைப் பரப்புவது மற்றும் சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாற்றுப் பங்களிப்புகளை, தமிழ் தேசிய பெருமித நிலைகளை இன்னும் வலிமையாக பேசி அல்லது எழுதி பரப்புரை செய்வதுதான் சூழ்ச்சி சூழ்நிலைகளைப் புரிந்து கொண்ட தமிழ்த் தேசியர்களின் வேலை.
தமிழ்த்தாய் வாழ்க ! தலைவர் மேதகு வாழ்க !
மறுமொழி இடவும்