கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இயக்குனர் வ. கீரா அவர்கள் எழுதிய குமரி என்ற புதினத்தைப் பற்றி அண்ணன் இயக்குனர் களஞ்சியம் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு, அந்த நூலைப் பற்றி ஆர்வமாக விசாரித்த போது உடனே அண்ணன் களஞ்சியம் அவர்கள் மறுநாளே குமரியை அனுப்பி வைத்துவிட்டார்.
அந்த சமயத்தில் மிக நெருக்கமானவர்களின் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த காரணத்தினால் மனநிலையில் பெரு பாதிப்பு. தொடர்ந்து துயர இருட்டில் தத்தளித்து கொண்டிருந்த போதுதான் அண்ணன் களஞ்சியம் அவர்கள் மீண்டும் தொடர்பு கொண்டு குமரி நூலுக்கான திறனாய்வு அரங்கம் நடக்க இருப்பதாகவும் அதில் நான் பேச வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதனால் தொடர்ந்து சில நாட்கள் குமரியில் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஏறக்குறைய அந்த முதுநிலத்தின் மகனாக மாறிப் போய் உணர்வேறி திரிந்தேன் . உடலில் போர்த்தியிருந்த துயரத்தினை குமரியின் வாசிப்பு மது கொண்டு ஆற்றினேன்.
புத்தகக் கண்காட்சியில் கடந்த 12ஆம் தேதி இரவு தம்பி சாட்டை துரைமுருகனை சந்தித்து இந்த புத்தகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவனும் இதே போன்ற ஒரு மனநிலையில் இருப்பதை அறிந்து வியந்தேன்.
மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில், உணர்வுவயப்பட்ட சூழலில், தமிழ்த் தேசிய நவீன இலக்கியத் தொடக்கத்தை குமரி நிகழ்த்தி விட்டது என்பதை உணர்ந்து மிக்க மகிழ்வோடு ஆற்றிய உரை இது.
தமிழ்த் தேசியர்களின் மீது நவீன தீண்டாமையை கடைபிடித்து வரும் “திராவிட அறிவு ஜீவி குழு கும்பலிடம் ” இருந்து நவீன தமிழ் இலக்கியத்தை மீட்டெடுக்கின்ற அறிவுப் பணி இனி தொடர்ந்து நடக்கும்.
இதில் அண்ணன் இயக்குனர் சோழன் களஞ்சியம் அவர்களுக்கும், படைப்பாளர் எழுத்தாளர் வ.கீரா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. கூடுகை இலக்கிய வட்டத்திற்கும் அதன் உறவுகளுக்கும் மனமார்ந்த பாராட்டு. பேரன்பு.
நேற்றைய தினம் இந்தக் கூட்டம் முடிவடைந்து டிஸ்கவரி புக் பேலஸ் கடைக்கு சென்றிருந்தபோது நண்பர் வேடியப்பன் அவர்களை பார்த்தோம். தொடர்ந்து புத்தகங்களை வைத்து இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதர் மீது அநீதியாக விதிக்கப்பட்ட தடை அம் மனிதனை பெருமளவில் பாதித்திருப்பதை உணர்ந்து மனம் வருந்தினேன்.
தற்போது அண்ணன் களஞ்சியம் அழைத்து புத்தகம் வெளியிட்ட டிஸ்கவரி புத்தக பேலஸ் கடையில் “குமரி” புத்தகங்கள் நேற்றைய கூட்டத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரவேற்பு அடைந்து புதிய உச்சங்களை அடைந்திருப்பதாக தெரிவித்தார்.
இதைவிட என்ன பேறு இருக்கிறது..?? அதையும் தாண்டி இதைவிட என்ன முக்கியமான வேறு வேலை இருக்கிறது..??
மறக்க முடியாத பொன்மாலைப் பொழுதாக நேற்றைய பொழுதை மாற்றிய மாமனிதர்களுக்கு நன்றி..!
வழக்கம் போல முதல் நாளில் 12-01-2026 என் மைத்துனர் பாக்கியராசன் நண்பர் சரவணன் தங்கப்பா மகன் சிபி கௌதம் உள்ளிட்ட பலரின் உதவியோடு புத்தகங்களை வாங்கினேன்.
முதல் நாள் இரவில் புத்தக கண்காட்சியில் என்னுடைய மைத்துனர் பாக்கியராசன், என்னுடைய தம்பிகள் சாட்டை துரைமுருகன் மற்றும் இரும்பாவனம் கார்த்திக் , சந்தோஷ் மகிழன் உள்ளிட்டவர்களோடு நேரம் செலவிட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது.
எதிர்பாராத விதமாக சந்தித்த அண்ணன் அறிவுமதி, நாட்களாக நான் சந்திக்க விரும்பி சந்தித்த பவா செல்லதுரை அவர்களின் மனைவி எழுத்தாளுமை சைலஜா.. மற்றும் பல நண்பர்கள்.
அன்புச் சகோதரர் எழுத்தாளுமை வாசு முருகவேல் நேரடியாக என்னை சந்தித்து அவர் எழுதியிருக்கிற “மணி பல்லவம்” நாவலை அளித்து பேரன்புச் செய்தார்.
மறுநாளில் 13-01-2026 எழுத்தாளுமைகள் என்னுடைய தம்பிகள் அகர முதல்வன், லட்சுமி சரவணகுமார் உதவியோடு பல புத்தகங்களை வாங்கினேன்.
நூல்வனம் அரங்கிற்கு சென்று இலக்கிய நாட்காட்டி தாஸ்தாவெஸ்கி திருவுருவப்படம், குறிப்பேடுகள் ஆகியவைகளோடு பல புத்தகங்களை தம்பி அகரமுதல்வன் வாங்கி அளித்தார்.
நூல்வனம் உரிமையாளர் புத்தக வடிவமைப்பாளர் மணிகண்டனின் மகள் ரமணி நேற்று மாலை இறுதி நேரத்தில் எனக்கு உதவிகள் செய்து என் மகளாகவே மாறி போனார். அதேபோல் நண்பர் மணிகண்டனின் மனைவி அன்பு சகோதரி அவரின் பேரன்பும் தனித்துவமானது. அன்பு மயமான குடும்பம். நீடு வாழ்க.!
தம்பி லட்சுமி சரவணகுமார் விஷ்ணுபுரம் அரங்கில் “கடல்” வாங்கி அளித்தார். “குலுங்கா நடையான்” என்ற அரங்கு அவ்வளவு அழகாக இருந்தது.
புத்தகங்களின் நேர்த்தி அழகு அட்டைப்படம் அனைத்தும் கூடி இருக்கிறது. உள்ளடக்கம் வழக்கம் போல் இருக்கிறது. நிறைய மொழிப்பெயர்ப்புகள் விற்கப்படுகின்றன.
நான் புத்தகக் கண்காட்சியில் இருந்த நேரம் முழுக்க என்னோடு நண்பர் சரவணன் தங்கப்பா மற்றும் எனது மகன் சிபி கௌதம் இருவரும் உடனிருந்து இருந்து பல்வேறு உதவிகளை செய்தார்கள்.
மற்றபடி புத்தகக் கண்காட்சி திராவிட அடையாளங்களோடு வழக்கம் போல இருக்கிறது. புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று இருக்கிறார்கள். கழிவறை மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி ஊர்தி போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும். நடக்க முடியாதவர்கள் புத்தகக் கண்காட்சியை சுற்றி பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உள்ளே விற்கின்ற உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக வந்திருக்கின்ற புத்தகங்களை குறித்து தனிப் பட்டியல் ஒன்றினை அச்சிட்டு ஒட்டுமொத்தமாக வெளியிட்டால் பலரும் பயன்படுவார்கள்.
புத்தகக் கண்காட்சியில் நடக்க முடியவில்லை. முதல் நாள் இரவு மிகவும் கால் வலியோடு துன்பப்பட்டேன். என் மைத்துனர் பாக்கியராசனும் , என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் இல்லையென்றால் என்னால் நகர்ந்து இருக்க கூட முடியாது.
மறுநாள் சக்கர நாற்காலியை பயன்படுத்துவதற்கு தீவிரமாக என் மகன் சிபியும் என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் கும் எதிர்த்தார்கள் . ஆனாலும் இறுதியாக என் நிலையை பார்த்துவிட்டு எனது மகன் சிபியே எடுத்து வந்த அளித்தான். அதன் மூலம் ஆசான் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களை சந்திக்க முடிந்தது . விஷ்ணுபுரம் அரங்கிற்கும் செல்ல முடிந்தது . சக்கர நாற்காலி வசதியாக தான் இருக்கிறது. அதுவே பழக்கம் ஆகிவிடும் என என் மகனும், என் தம்பியும் எதிர்க்கிறார்கள். பெரிய இடங்களுக்கு செல்லும்போது நடக்க முடியவில்லை என்றால் சக்கர நாற்காலி பயன்படுத்துவது பிழையில்லை என்றே நான் உணர்கிறேன்.
நேற்று இரவு குமரி நூல் திறனாய்வுக் கூட்டம் முடிந்து டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர் வேடியப்பனை பார்க்க அண்ணன் களஞ்சியம் தலைமையில் அனைவரும் சென்றிருந்தோம்.
அங்கே அண்ணன் களஞ்சியம் அவர்கள் 1974 மாநில சுயாட்சி உள்ளிட்ட பல புத்தகங்களை வாங்கி பேரன்போடு அளித்தார்.
புத்தகங்களோடு பிறக்க இருக்கிறது தை முதல் நாள் -தமிழரின் புத்தாண்டு.
எப்போதும் என் மீது பேரன்புச் செய்பவர்கள் இம்முறையும் உடன் இருந்தார்கள். என்னைச் சுமந்தார்கள். கொண்டாடினார்கள்.
அந்த வகையில் நான் நிறைவானவன்.
இந்த வருடம் வாங்கியவை. /பெற்றவை.
1. சாதிப் பெருமை -மனோஜ் மிட்டா
2. இரவோடி- என் ஸ்ரீராம்.
3. பிணைப்பு- சர்தார்.
4. கடல் – ஜெயமோகன்
5. பொம்மைகளின் அரசன்-எஸ் ராமகிருஷ்ணன்.
6. நாவல் வாசிகள்-எஸ் ராமகிருஷ்ணன்.
7.எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள் முழு தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.