பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜூலை 2026

ஜனநாயகத் தீங்குகள்- குடியரசு நாள் சிறப்புக் கட்டுரை

ஜனவரி 26 குடியரசு தினம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மையான நோக்கமாக மக்களின் நலன் சார்ந்த ஜனநாயகம் முன்னிறுத்தப்படுகிறது. உண்மையில் ஜனநாயகம் என்பது மிகச் சரியான ஒன்றா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மக்களின் பெரும்பான்மை கருத்து என்பதன் வாயிலாக கட்டமைக்கப்படும் ஜனநாயகம் ஆகப் புனிதமானது அல்ல. ஏனெனில் மக்களின் பெரும்பான்மை கருத்து என்பது எப்போதும் ஒட்டுமொத்த சமூகத்திற்கான நலன்களைச் சார்ந்தது அல்ல. அது அந்தந்தக் காலச் சூழல்களுக்கு உட்பட்டது. மக்கள் விரும்புகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் விருப்பம் ஒன்றையே சமூகத்தின் விளைச்சலாக கருதிக் கொள்ள வேண்டும் என எல்லோரும் முடிவெடுத்தால், இந்த சமூகம் அடைந்திருக்கும் எல்லா சீர்த்திருத்தங்களும் ஜனநாயகத்தின் அளவுகோல்களின் படி எதிர்க்கப்பட வேண்டியவையே..

ஏனெனில் மக்கள் பாதுகாப்பாக அந்த சூழ்நிலைக்கு, சுகமாக, வாழ்வதற்கு ஏற்ற ஒன்றையே விரும்புவார்கள். மக்களின் விருப்பத்திற்கு, எதிர்காலம் சார்ந்த ஒட்டுமொத்த நலன் சார்ந்த சிந்தனைகளோ/ கருத்துக்களோ இருப்பதில்லை.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய தீங்கு என்னவென்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த தமிழர்களுக்கு நன்கு புரியும். பெரும்பான்மையினர் விரும்புகிறார்கள் என்ற மலினக் காரணத்திற்காக, தீங்குகளை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கிற கேடு நமது மீது வழங்கப்பட்டிருக்கிற ஜனநாயகத்தின் வாயிலாக திணிக்கப்பட்டிருக்கிறது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மக்கள் விரும்பிய எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என்கிற மூன்று தீங்குகளால் தமிழகம் அடைந்திருக்கின்ற பின்னடைவுகள் ஒன்றல்ல, இரண்டல்ல. எம்ஜிஆர் ஒரு திரைப்பட நடிகர் , ஜெயலலிதா ஒரு திரைப்பட நடிகை, கருணாநிதி ஒரு வசனகர்த்தா என்பது போன்ற எளிய / ரசிக மனப்பான்மை சார்ந்த மலினமான காரணங்களுக்காக அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைத்த மக்கள் , இன்று திரையரங்க இருட்டினில் தங்கள் எதிர்காலத் தலைவர்களை தேடும் மனநிலையில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

இதுவரை உலகத்தில் பொன்னான ஆட்சி காலத்தை வழங்கியவர்கள் பலரும் தனது ஆட்சியின் ஒரு முறைமையாக சர்வாதிகாரத்தினை கையாண்டார்கள், என்பதுதான் மிக முக்கியமான செய்தி. முதன்முதலாக பொதுவுடமை அரசாங்கத்தை கட்டமைத்த ரஷ்யப் புரட்சி மற்றும் சீனப் புரட்சி என பல புரட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளையே பிரசவித்தன.

ரஷ்யப் புரட்சி முடிவில் புரட்சியாளர் லெனின் அமைத்த ஆட்சி மித சர்வாதிகார ஆட்சி என்றால் அவரது தொடர்ச்சியாக வந்த ஸ்டாலினின் ஆட்சி முழு சர்வாதிகார ஆட்சி. ஏனெனில் சர்வாதிகாரம் அல்லது முழுமையான உச்ச அதிகாரம் ஆகியவற்றால் தான் அதுவரை நிகழ்ந்து வந்த அனைத்து தீங்குகளையும் ஒழிக்க முடியும் என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. விடுதலைப் பெற்ற தமிழர் நிலம் எவ்வாறு அமைய வேண்டும் என நம் உயிர்த் தலைவர் தேசியத் தலைவர் மேதகு அவர்களிடம் கேட்டபோது, மிகுந்த தீர்க்கத் தரிசனத்துடன் புரட்சிகர சோசலிசக் குடியரசு நாடாக ஈழம் அமைய வேண்டும் என்கிற தனது விருப்பத்தினை தலைவர் பதிவு செய்தார்கள்.

ஜனநாயகம் பிரசவிக்கின்ற பெரும்பான்மைக் கருத்துக்கள் என்பதன் மகத்தான தீமை என்னவெனில், ஆட்டு மந்தையாக இருக்கின்ற மக்களின் விருப்பங்கள் அப்படியே நிறைவேறுதான்.

எனவேதான் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை என்பது அன்பான சர்வாதிகாரமாக இருக்கும் என்பதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் விவரித்தார். இதை நீட்சி தான் அவர் விவரிக்கின்ற தாய்மைப் பொருளாதாரம்.

அது என்ன அன்பான சர்வாதிகாரம் … அதற்கும் அவரே பதில் சொன்னார். உடல் காச்சலால் பாதிக்கப்படும் போது ஊசி போடுவதை எந்த குழந்தையும் விரும்பாது. ஆனால் ஊசிப் போட்டால் தான் உடல் நலன் பாதுகாக்கப்படும் என்று வரும்போது குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக ஊசி போடுவது தான் அன்பான சர்வாதிகாரம் என எளிய மொழியில் அண்ணன் சீமான் விளக்கினார்.

உண்மையில் இது சாத்தியமா..?? இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதற்கான வழிவகைகளை கொண்டிருக்கிறதா என்பதை எல்லாம் பற்றி யோசித்தால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பில்

“இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை, இறையாண்மையுள்ள, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக நிலைநிறுத்தவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும்:

சமூக, பொருளாதார, அரசியல் நீதி;

எண்ணம், வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் சுதந்திரம்;

தகுதிப்பாடு, வாய்ப்புநலம் இவற்றில் சமத்துவம்

ஆகியவற்றை எய்திடவும், அவர்களிடையே தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மற்றும் உடன்பிறப்புரிமை (சகோதரத்துவம்) ஆகியவற்றை உறுதிப்படுத்தவும்,

எங்களது, அரசியலமைப்பு நிர்ணய சபையில், 1949, நவம்பர் 26 ஆகிய இந்நாளில், இந்த அரசியல் அமைப்பினை ஏற்று, இயற்றி, எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொள்கிறோம்”.

எனக் காணப்படுகிறது.

ஆனால் முகப்புரையில் உள்ள “சமதர்மம் ,சமய சார்பற்ற தன்மை, சமூக அரசியல் மற்றும் பொருளாதார நீதி, தகுதிப்பாடு, வாய்ப்பு நலம் இவைகளை ஜனநாயக ரீதியில் நிறைவேற்ற முடியுமா என்கிற கேள்வி எழும்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் நம் நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் பதிலாக இருக்கிறது.

ஏனெனில் இங்கே பெரும்பான்மை என்பது சமயச் சார்புள்ளதாக, சமூக அரசியல் மற்றும் பொருளாதார நீதிக்கு எதிராக, சமதர்மத்திற்கு எதிராகத்தான் இருக்கிறது என வரும்போது இங்கே ஜனநாயகம் என்பதே மாபெரும் தீங்காக மாறிவிட்டது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் சமமற்ற/ பயிற்றுவிக்கப்படாத பலவீனமான மக்கள் கூட்டத்தை வைத்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நாமே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே ஜனநாயகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய சிந்தனைகள் நமக்குத் தேவையாக இருக்கின்றன. சூழலியல், மக்கள் நலன், சமூக நீதி போன்றவற்றிற்கான அரசியலை ஒருபோதும் ஜனநாயகத்தின் வாயிலாக வென்றெடுக்க முடியாது.

உலகத்தில் பெரும்பான்மை பிரசவித்த அரசியல் தத்துவங்கள் என்று எதுவும் இல்லை. தனிமனிதர்கள் சிந்தித்த சிந்தனையில் இருந்து தான் ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலன் தருகிற தத்துவங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் பிறந்திருக்கின்றன. எனவே எதிர்காலத் தலைமுறை மற்றும் மக்கள் மண்ணின் நலம் போன்றவற்றை தாய்மை உள்ளத்தோடு சிந்திக்கின்ற தனிநபர் சர்வாதிகாரத்தோடு கூடிய ஆட்சி முறைமைதான் இங்கே தேவையாக இருக்கிறது.

உண்மையில் குடியரசு நாளில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை என்னவெனில்.. நமக்காக நாமே உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாம் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதுதான்.

உமர் முக்தார்- பாலைவனச் சிங்கம்.

ஏக இறைவனான அல்லாஹ் “தனது கருணையை எப்படி மனிதர்களுக்கு காட்டினார்..?” என்ற கேள்வியை “lion of the desert” (1981) என்ற திரைப்படத்தில் உமர் முக்தர் தனது மாணவர்களிடத்தில் கேட்பதாக ஒரு காட்சி வரும்.

ஒரு மாணவன் ‘பேச்சு’ என்று சொல்லுவான். அவர்களுக்கு உமர் முக்தார் அதை விளக்க முயற்சிப்பார். “அல்லாஹ் மனிதர்களுக்கு தன் கருணையை தான் வழங்கிய சமநிலை மூலம் காட்டினார். சமநிலை தவறும் பட்சத்தில் எதுவும் கீழே விழுந்துவிடும்..” என விளக்கும் உமர் முக்தார் லிபிய நாட்டின் ஆகச்சிறந்த புரட்சியாளர்.

ஆம்.. சமநிலை தவறிய சமூகத்தில் தான் புரட்சி வெடிக்கும்.

உமர் முக்தார்.

இத்தாலியின் ஆதிக்கத்திற்கு எதிராக லிபியா நடத்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளம் அவர்.

அதே லிபியா அவரது மரணத்திற்குப் பிறகு போராடி விடுதலை அடைந்த பிறகு, கடந்த 2009ல் லிபிய நாட்டின் அதிபராக இருந்த மம்மர் கடாபி அரசு முறை பயணமாக இத்தாலியின் தலைநகரம் ரோமிற்கு சென்றபோது, தனது சட்டையின் முகப்பில் உமர் முக்தாரின் படத்தை வைத்துக்கொண்டு, உமர் முக்தாரின் வயதான மகனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

எந்த இத்தாலியின் ஆதிக்கத்திற்கு எதிராக உமர் முக்தார் தன் வாழ்நாள் முழுக்க போராடினாரோ, அதே இத்தாலியின் தலைநகரத்தில், லிபிய நாட்டின் தலைவர் தன் சட்டை பையின் முகப்பில் தன் நாட்டின் ‘புரட்சிகர பெருமித அடையாளமான’ உமர் முக்தாரை சுமந்து சென்றதும், உமர் முக்தாரின் மகனை கூடவே அழைத்து சென்றதும் உலகத்தின் விழிகளை பிரமிக்கச் செய்தன.

அதே லிபிய நாட்டு அதிபர் மம்மர் கடாபிக்கு எதிராக உள்நாட்டு கலகப் படைகள் போராட்டம் நடத்திய போது அந்தப் படைகளின் ஒரு படைப் பிரிவிற்கு பெயர் “உமர் முக்தார் படையணி”.

இதுதான் வரலாற்றின் விசித்திரம்.

ஆதிக்கம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்த்து போரிடும் ஆற்றல்களுக்கு திரு உருவாக உமர் முக்தார் மாறி இருந்தார்.

உமர் முக்தாரின் இறுதி கால வாழ்க்கையை பற்றி தயாரிக்கப்பட்ட படம் தான் “பாலைவனச் சிங்கம்” என தமிழில் அழைக்கப்படும் ” lion of desert ” . இந்தப் படத்தை இயக்கியவர் மௌஸ்தபா அல் அக்காட் ( director Moustapha Akkad.) என்கிற புகழ்பெற்ற சிரியா நாட்டின் இயக்குனர். இவர் இறைத்தூதர் முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி” தி மெசேஜ் ” என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தையும் இயக்கியவர். கடந்த 2005 ல் ஜோர்டன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மெளஸ்தபா தன் மகளோடு கொல்லப்பட்டார்.

பாலைவனங்களைப் பற்றி நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான திரைப்படம் புகழ்பெற்ற இயக்குனர் டேவிட் லீன் இயக்கத்தில் 1962ல் வெளியான லாரன்ஸ் ஆப் அரேபியா. இந்தத் திரைப்படத்தை அந்த காலத்தில் திரையரங்குகளில் பார்த்தவர்கள் உண்மையிலேயே பாலைவனத்தில் இருப்பது போல உணர்ந்து மிகுந்த தண்ணீர் தாகத்தில் தவித்ததாக செய்திகள் உண்டு.

புனிதப் போராளிகளுக்கு எப்போதுமே இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த இடம் தருகிறது. சொந்தத் தாய் மண் மீது நிகழ்ந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிடும் மாவீரர்களுக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு என கூறும் புனித குர்ஆன் அது ஒவ்வொருவரின் கடமை என்றும் வரையறுக்கிறது.

ஆழ்ந்த இஸ்லாம் பற்றுள்ள, குர்ஆன் பேரறிஞராக திகழ்ந்த உமர் முக்தார் ஏறக்குறைய 20 ஆண்டுகள் இத்தாலி அரசதிகாரத்திற்கு கடுமையான போராட்டங்களை நடத்தியவர். அவருக்கு லிபிய நாட்டு பாலைவனம் என்பது இத்தாலி நாட்டு ராணுவம் சிக்கிக் கொள்கிற பொறி. இத்தனைக்கும் ஒரு எளிய ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு மிக ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்த உமர் முக்தார் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியை தன் அளப்பரிய வீரத்தால் நிம்மதி இழக்கச் செய்தவர்.

இயக்குனர் மெளஸ்தபா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் தமிழர் தேசிய இனம் தொடர்பு அடைவதற்கான பல செய்திகள் உண்டு. குறிப்பாக போராடிக் கொண்டிருக்கின்ற போராளி இயக்கங்களை சர்வாதிகாரம் எப்படி தந்திரமாக கையாளும் என்பதற்கு இந்த திரைப்படம் பல செய்திகளை விவரிக்கிறது. முதலில் அதிகாரம் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள போராளிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். அந்தப் பேச்சுவார்த்தையில் போராளிகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்த அவர்களை மரியாதை குறைவாக கருத வைக்கிற முடிவுகளை அவர்கள் மீது திணிக்க முயற்சிக்கும். அவர்கள் இதைப் புரிந்து கொண்டு மறுக்கும் காலத்திற்குள்ளாக சர்வாதிகாரம் தனது பலத்தை அதிகரித்துக் கொண்டு போராளிகளுக்கு எதிரான இறுதிப் போரை தொடங்கும்.

எப்படி 2000 -2002 காலகட்டங்களில் அமைதி பேச்சு வார்த்தை என்ற பெயரில் தமிழின போராளிகளை திசை திருப்பிவிட்டு, பலவீனமாக கருதப்பட்ட தனது பலத்தை சிங்கள பேரினவாதம் உலகம் எங்கும் சென்று எப்படி அதிகரித்துக் கொண்டதோ அதேபோல தந்திரத்தை தான் காலம் காலமாக சர்வாதிகார அரசுகள் செய்து வருகின்றன.

அசலான போராளித் தலைவர்கள் சில அடிப்படையான தகுதிகளை கொண்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் சரணடைய மாட்டார்கள். தங்களது சுய வாழ்வைப் பற்றி ஒருபோதும் அவர்கள் ஒருபோதும் எண்ண மாட்டார்கள். இறுதிவரை உறுதியாக நின்று கொண்ட லட்சியத்திற்காக போராடுவார்களே ஒழிய ஒரு போதும் எதிரியிடம் சமரசம் அடைய மாட்டார்கள்.

உமர் முக்தாரின் வாழ்க்கையும் அவ்வாறே அமைந்தது. பாலைவனச் சிங்கம் என தமிழில் youtube இல் கிடைக்கின்ற இந்த திரைப்படத்தில் உமர் முக்தார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்ற அந்தோணிக் குயின் ஒரு மாபெரும் நடிகர். அந்த கதாபாத்திரமாகவே மாறி நமக்கு உமர் முக்தாரை ரத்தமும் சதையுமாக காட்டியவர். புகழ்பெற்ற நடிகர் ஆலீவர் ரீடு இத்தாலி நாட்டு தளபதியாக நடித்து உமர் முக்தாருக்கு மதிப்பு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமரசம் இல்லாமல் மரணத்திற்கு முன்னால் சிறிதும் அஞ்சாமல் போரிடுகிற உமர் முக்தாரின் வாழ்க்கை நமக்கு நம் தேசியத் தலைவர் மேதகு அவர்களின் வாழ்க்கையை நினைவூட்டுகிறது. உமர் முக்தாரின் வாழ்க்கை எப்படி எதிரிகளால் கூட மதிக்கப்பட்டதோ, அதேபோல நம் தலைவரின் வாழ்க்கையும் எதிரிகளால் மதிக்கப்பட்டது. இன்றளவும் சிங்கள பேரினவாத அரசால் ஒரு குற்றச்சாட்டு கூட நம் தலைவருக்கு எதிராக சொல்ல முடியாத அளவிற்கான உன்னத வாழ்க்கையை அந்த அறம் வழி நின்ற சான்றோன் வாழ்ந்தார்.

இறுதியாக இந்த திரைப்படத்தில் உமர் முக்தார் தூக்கில் இடுவதற்கு முன்பாக தன் தாய் நிலத்தின் உயர்ந்த மலை சிகரங்களை அவர் மிகுந்த கனிவோடு பார்க்கின்ற அந்தக் காட்சி நெகிழ வைக்கக் கூடியது. தாய் நிலத்தின் விடுதலைக்காக போராடிய நம் இனத்துப் போராளிகள் பின்னால் இறுக்கிக் கட்டப்பட்ட தங்களது உள்ளங்கைகளில் தாய் மண்ணை இறுக்கிப் பிடித்து வைத்திருந்த அதே உணர்வு.

பலமுறை இந்த திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். எண்பதுகளில் சென்னையில் திரையரங்கில் இந்த திரைப்படத்தை முதன்முதலாக பார்ப்பதற்கு என் தந்தை அழைத்துச் சென்றார். எத்தனை முறை பார்த்தாலும் அதே உணர்ச்சியை அந்த திரைப்படம் மானுடச் சமூகத்திற்கு வழங்கிக் கொண்டே இருப்பது தான் அதன் செவ்வியல் தன்மை.

படம் பார்த்து முடித்து விட்ட பின்னரும் பாலைவன மண் புழுதி பறக்க குதிரைகளில் பாய்ந்து வருகிற அந்தப் போராளிகளின் உரத்த குரல் காதுகளில் கேட்டுக் கொண்டே இருப்பது சிலிர்க்க வைக்கக்கூடியது.

எதிரிகளால் மன்னிக்கக் கூடிய வாழ்க்கையை எந்த வீரனும் விரும்ப மாட்டான். ஆனால் எதிரிகளால் கூட மதிக்கப்படும் வாழ்க்கையை தகுதி வாய்ந்த வீரன் தன் வாழ்நாளில் பெற்றே தீருவான்.

அதற்கு திரையில் “உமர் முக்தார்”

அசலில் நம் தேசியத் தலைவர் “மேதகு”.

யூட்யூபில் இலவசமாக தமிழில் காணக்கிடக்கிறது. அவசியம் காணுங்கள்.

“குமரி” நூல் திறனாய்வுக் கூட்டம். – மறக்க முடியாத பொன்மாலைப் பொழுது.

❤️

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இயக்குனர் வ. கீரா அவர்கள் எழுதிய குமரி என்ற புதினத்தைப் பற்றி அண்ணன் இயக்குனர் களஞ்சியம் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு, அந்த நூலைப் பற்றி ஆர்வமாக விசாரித்த போது உடனே அண்ணன் களஞ்சியம் அவர்கள் மறுநாளே குமரியை அனுப்பி வைத்துவிட்டார்.

அந்த சமயத்தில் மிக நெருக்கமானவர்களின் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த காரணத்தினால் மனநிலையில் பெரு பாதிப்பு. தொடர்ந்து துயர இருட்டில் தத்தளித்து கொண்டிருந்த போதுதான் அண்ணன் களஞ்சியம் அவர்கள் மீண்டும் தொடர்பு கொண்டு குமரி நூலுக்கான திறனாய்வு அரங்கம் நடக்க இருப்பதாகவும் அதில் நான் பேச வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதனால் தொடர்ந்து சில நாட்கள் குமரியில் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஏறக்குறைய அந்த முதுநிலத்தின் மகனாக மாறிப் போய் உணர்வேறி திரிந்தேன் . உடலில் போர்த்தியிருந்த துயரத்தினை குமரியின் வாசிப்பு மது கொண்டு ஆற்றினேன்.

புத்தகக் கண்காட்சியில் கடந்த 12ஆம் தேதி இரவு தம்பி சாட்டை துரைமுருகனை சந்தித்து இந்த புத்தகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவனும் இதே போன்ற ஒரு மனநிலையில் இருப்பதை அறிந்து வியந்தேன்.

மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில், உணர்வுவயப்பட்ட சூழலில், தமிழ்த் தேசிய நவீன இலக்கியத் தொடக்கத்தை குமரி நிகழ்த்தி விட்டது என்பதை உணர்ந்து மிக்க மகிழ்வோடு ஆற்றிய உரை இது.

தமிழ்த் தேசியர்களின் மீது நவீன தீண்டாமையை கடைபிடித்து வரும் “திராவிட அறிவு ஜீவி குழு கும்பலிடம் ” இருந்து நவீன தமிழ் இலக்கியத்தை மீட்டெடுக்கின்ற அறிவுப் பணி இனி தொடர்ந்து நடக்கும்.

இதில் அண்ணன் இயக்குனர் சோழன் களஞ்சியம் அவர்களுக்கும், படைப்பாளர் எழுத்தாளர் வ.கீரா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. கூடுகை இலக்கிய வட்டத்திற்கும் அதன் உறவுகளுக்கும் மனமார்ந்த பாராட்டு. பேரன்பு.

நேற்றைய தினம் இந்தக் கூட்டம் முடிவடைந்து டிஸ்கவரி புக் பேலஸ் கடைக்கு சென்றிருந்தபோது நண்பர் வேடியப்பன் அவர்களை பார்த்தோம். தொடர்ந்து புத்தகங்களை வைத்து இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதர் மீது அநீதியாக விதிக்கப்பட்ட தடை அம் மனிதனை பெருமளவில் பாதித்திருப்பதை உணர்ந்து மனம் வருந்தினேன்.

தற்போது அண்ணன் களஞ்சியம் அழைத்து புத்தகம் வெளியிட்ட டிஸ்கவரி புத்தக பேலஸ் கடையில் “குமரி” புத்தகங்கள் நேற்றைய கூட்டத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரவேற்பு அடைந்து புதிய உச்சங்களை அடைந்திருப்பதாக தெரிவித்தார்.

இதைவிட என்ன பேறு இருக்கிறது..?? அதையும் தாண்டி இதைவிட என்ன முக்கியமான வேறு வேலை இருக்கிறது..??

மறக்க முடியாத பொன்மாலைப் பொழுதாக நேற்றைய பொழுதை மாற்றிய மாமனிதர்களுக்கு நன்றி..!

❤️

மணி செந்தில்.

2026 சென்னை புத்தகக் கண்காட்சி – பங்கேற்பு அனுபவக் குறிப்புகள்..

வழக்கம் போல முதல் நாளில் 12-01-2026 என் மைத்துனர் பாக்கியராசன் நண்பர் சரவணன் தங்கப்பா மகன் சிபி கௌதம் உள்ளிட்ட பலரின் உதவியோடு புத்தகங்களை வாங்கினேன்.

முதல் நாள் இரவில் புத்தக கண்காட்சியில் என்னுடைய மைத்துனர் பாக்கியராசன், என்னுடைய தம்பிகள் சாட்டை துரைமுருகன் மற்றும் இரும்பாவனம் கார்த்திக் , சந்தோஷ் மகிழன் உள்ளிட்டவர்களோடு நேரம் செலவிட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

எதிர்பாராத விதமாக சந்தித்த அண்ணன் அறிவுமதி, நாட்களாக நான் சந்திக்க விரும்பி சந்தித்த பவா செல்லதுரை அவர்களின் மனைவி எழுத்தாளுமை சைலஜா.. மற்றும் பல நண்பர்கள்.

அன்புச் சகோதரர் எழுத்தாளுமை வாசு முருகவேல் நேரடியாக என்னை சந்தித்து அவர் எழுதியிருக்கிற “மணி பல்லவம்” நாவலை அளித்து பேரன்புச் செய்தார்.

மறுநாளில் 13-01-2026 எழுத்தாளுமைகள் என்னுடைய தம்பிகள் அகர முதல்வன், லட்சுமி சரவணகுமார் உதவியோடு பல புத்தகங்களை வாங்கினேன்.

நூல்வனம் அரங்கிற்கு சென்று இலக்கிய நாட்காட்டி தாஸ்தாவெஸ்கி திருவுருவப்படம், குறிப்பேடுகள் ஆகியவைகளோடு பல புத்தகங்களை தம்பி அகரமுதல்வன் வாங்கி அளித்தார்.

நூல்வனம் உரிமையாளர் புத்தக வடிவமைப்பாளர் மணிகண்டனின் மகள் ரமணி நேற்று மாலை இறுதி நேரத்தில் எனக்கு உதவிகள் செய்து என் மகளாகவே மாறி போனார். அதேபோல் நண்பர் மணிகண்டனின் மனைவி அன்பு சகோதரி அவரின் பேரன்பும் தனித்துவமானது. அன்பு மயமான குடும்பம். நீடு வாழ்க.!

தம்பி லட்சுமி சரவணகுமார் விஷ்ணுபுரம் அரங்கில் “கடல்” வாங்கி அளித்தார். “குலுங்கா நடையான்” என்ற அரங்கு அவ்வளவு அழகாக இருந்தது.

புத்தகங்களின் நேர்த்தி அழகு அட்டைப்படம் அனைத்தும் கூடி இருக்கிறது. உள்ளடக்கம் வழக்கம் போல் இருக்கிறது. நிறைய மொழிப்பெயர்ப்புகள் விற்கப்படுகின்றன.

நான் புத்தகக் கண்காட்சியில் இருந்த நேரம் முழுக்க என்னோடு நண்பர் சரவணன் தங்கப்பா மற்றும் எனது மகன் சிபி கௌதம் இருவரும் உடனிருந்து இருந்து பல்வேறு உதவிகளை செய்தார்கள்.

மற்றபடி புத்தகக் கண்காட்சி திராவிட அடையாளங்களோடு வழக்கம் போல இருக்கிறது. புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று இருக்கிறார்கள். கழிவறை மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி ஊர்தி போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும். நடக்க முடியாதவர்கள் புத்தகக் கண்காட்சியை சுற்றி பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உள்ளே விற்கின்ற உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக வந்திருக்கின்ற புத்தகங்களை குறித்து தனிப் பட்டியல் ஒன்றினை அச்சிட்டு ஒட்டுமொத்தமாக வெளியிட்டால் பலரும் பயன்படுவார்கள்.

புத்தகக் கண்காட்சியில் நடக்க முடியவில்லை. முதல் நாள் இரவு மிகவும் கால் வலியோடு துன்பப்பட்டேன். என் மைத்துனர் பாக்கியராசனும் , என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் இல்லையென்றால் என்னால் நகர்ந்து இருக்க கூட முடியாது.

மறுநாள் சக்கர நாற்காலியை பயன்படுத்துவதற்கு தீவிரமாக என் மகன் சிபியும் என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் கும் எதிர்த்தார்கள் . ஆனாலும் இறுதியாக என் நிலையை பார்த்துவிட்டு எனது மகன் சிபியே எடுத்து வந்த அளித்தான். அதன் மூலம் ஆசான் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களை சந்திக்க முடிந்தது ‌. விஷ்ணுபுரம் அரங்கிற்கும் செல்ல முடிந்தது . சக்கர நாற்காலி வசதியாக தான் இருக்கிறது. அதுவே பழக்கம் ஆகிவிடும் என என் மகனும், என் தம்பியும் எதிர்க்கிறார்கள். பெரிய இடங்களுக்கு செல்லும்போது நடக்க முடியவில்லை என்றால் சக்கர நாற்காலி பயன்படுத்துவது பிழையில்லை என்றே நான் உணர்கிறேன்.

நேற்று இரவு குமரி நூல் திறனாய்வுக் கூட்டம் முடிந்து டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர் வேடியப்பனை பார்க்க அண்ணன் களஞ்சியம் தலைமையில் அனைவரும் சென்றிருந்தோம்.

அங்கே அண்ணன் களஞ்சியம் அவர்கள் 1974 மாநில சுயாட்சி உள்ளிட்ட பல புத்தகங்களை வாங்கி பேரன்போடு அளித்தார்.

புத்தகங்களோடு பிறக்க இருக்கிறது தை முதல் நாள் -தமிழரின் புத்தாண்டு.

எப்போதும் என் மீது பேரன்புச் செய்பவர்கள் இம்முறையும் உடன் இருந்தார்கள். என்னைச் சுமந்தார்கள். கொண்டாடினார்கள்.

அந்த வகையில் நான் நிறைவானவன். ❤️

இந்த வருடம் வாங்கியவை. /பெற்றவை.

1. சாதிப் பெருமை -மனோஜ் மிட்டா

2. இரவோடி- என் ஸ்ரீராம்.

3. பிணைப்பு- சர்தார்.

4. கடல் – ஜெயமோகன்

5. பொம்மைகளின் அரசன்-எஸ் ராமகிருஷ்ணன்.

6. நாவல் வாசிகள்-எஸ் ராமகிருஷ்ணன்.

7.எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள் முழு தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.

8. அம்பறாத் தூணியில் அணியமாகும் அம்புகள்- இலரா மோகன்.

9. இஸ்ஸாவும்,பூசனும் -இரு ஜென் கவிகள்.

10. கடைசி புதிர்ப் பாதை.-அருண் ஜோஷி

11. திரெளபதி.-யார்லகட்ட லட்சுமி பிரசாத்-சாகித்திய அகாதமி வெளியீடு.

12. எப்படி எழுதத் தொடங்கினேன்-கார் லோஸ் பியாண்டஸ்

13. இமயமலை -தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர். தமிழில் பாவண்ணன்

14. பகவான் புத்தர்-கோசம்பி.

15. பொந்திஷேரி- மூன்று நாவல்களின் தொகுப்பு- ரமேஷ் பிரேதன்.

16. அரைமஞ்சள் சூரியன்-சியாமந்தா எங்கோடி அடிச்சி.

17. இடைவெளி எஸ் சம்பத்

18. முமு-யுவான் துர்கனேவ்

19. யானை டாக்டர் கே.

20. ஜெயப்பிரகாஷ் நாராயண்

21 .காதலன் ரஷ்ய நாவல்

22. முதல் ஆசிரியர்-ரஷ்ய நாவல். அண்ணன் அறிவுமதி சிபிக்கு வாங்கி கொடுத்தது ‌

23. வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் -திருச்செந்தாழை

24. உருமாற்றம்- பிரான்ஸ் காப்கா

25. முள்ளம்பன்றியின் தன் வரலாற்று குறிப்பு.-அலேன் மபாங்க்கு.

26. பேரரசன் அசோகன். சார்லஸ் ஆலன்.

27. மணி பல்லவம்- வாசுமுருகவேல்

28. சாய்ந்தாடும் குதிரை- எஸ் ராமகிருஷ்ணன்.

29. மஞ்சள் தருணங்கள்-எஸ் ராமகிருஷ்ணன்.

30. குற்ற முகங்கள் -எஸ் ராமகிருஷ்ணன்.

31. பெரியார்- தலித்துகள் முஸ்லிம்கள் தமிழ்த் தேசியர்கள் -அ. மார்க்ஸ்

32. உதிரம் பொழியும் நிலவே-டெக்ஸ் மில்லர் காமிக்ஸ் ‌

33. எனது ஆண்கள் நளினி ஜமீலா.

34. பச்சையப்பன் இல் இருந்து ஒரு தமிழ் வணக்கம்.-நா முத்துக்குமார்.

35. முகாமுகம்.-நட்சத்திர செவ்வந்தியன்.

36. சோழ அரசும் சமூகமும்-சுப்பராய்லு.

37. கரைந்த காலத்தின் கனத்த சாட்சிகள்-ப திருமாவேலன்.

38. சட்டத்தோடு சடுகுடு-டெக்ஸ் வில்லர் காமிக்ஸ்.

39. புகழ்மிக்க விசாரணைகள். ஜே

பால் பாஸ்கர்

40. தீரமிகு புது உலகம். காலேஜ் ஓடு வெளியீடு.

41. என்னை சந்திக்க கனவில் வராதே நா முத்துக்குமார்.

42. சிலந்தி இலக்கியப் புனை கதைகள்.

43. டேங்கோ-சிவந்த மண்.

44. அம்பேத்கர் கடிதங்கள். நேர்காணல்கள் காலச்சுவடு வெளியீடு.

45. இரத்தம் மிகை அழுத்தமும் உங்கள் இதயமும்.

46. வாரண மௌனி- லாரன்ஸ் ஆண்டனி.

47. கொடுங்காற்றில் ஒரு விளக்கு லல்லாவின் கவிதைகள்.

48. காதலின் கொடும்வாள்- மீராவின் கவிதைகள்.

49. நடைவழி நினைவுகள் சி மோகன்.

50. அஸ்தினாபுரம்-ஜோடி குரூஸ்

51. தி அல்கிமெஸ்ட்- பாவ்லோ கோய்லா ஆங்கில நூல் சிபி வாங்கியது.

52. நெருப்பில் வளர்ப்பவை திருச்சந்தாழை.

53. நீல குண்டு பல்பு சங்கர் சுப்பிரமணியன்.

54. இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் தமிழில் ஆர் சிவக்குமார்.

55. பேசும் படம் செழியன்.

56. 1974 மாநில சுயாட்சி-ஆழி பதிப்பகம்

57. இந்திய எதிர்ப்பு போரில் ஈவேரா பித்தலாட்டம்-ஈழத்து சிவானந்த அடிகளார். தமிழம் வெளியீடு.

58. காவியம்-ஜெயமோகன்.

59. இசைப்பட வாழ்தல் -சஞ்சய் சுப்பிரமணியன்.

இயக்குனர் வ. கீரா அவர்களின் “குமரி” நூல் திறனாய்வுக் கூட்டத்தைப் பற்றி விரிவாக தணித்து எழுதுகிறேன்.

Page 3 of 3

Powered by WordPress & Theme by Anders Norén