

கைவிடப்பட்ட
தனிமை
என் முன்னால்
மழையில் நனைந்த
நாய்க்குட்டி போல
நடுங்கிக்கொண்டு
அமர்ந்து இருந்தது.
மிகுந்த பரிவோடு
மினுக்கும் அதன்
மீச்சிறு கண்களை
பார்த்துக் கொண்டே
இருந்தேன்.
தனிமை
சிணுங்கியது.
அந்த மழை பெய்யும்
நள்ளிரவில்
தூரத்தில் எங்கோ
கேட்ட குழந்தையின்
அழுகை ஓசை
எனக்கு முன்னால்
அமர்ந்திருந்த
தனிமையை
பதட்டப்படுத்தியது.
இரு.. இரு..
நம் இருவரோடு
யாரோ இன்னொருவர்
இருக்கிறார் என்று
மெல்லிய குரலில்
நான் சொன்ன போது
தனிமை ஆசுவாசப்பட்டது.
சில நொடிகள்
அமைதிக்கு பிறகு..
நானும்
என் தனிமையும்..
” இது மௌனமான
நேரம்..”
என்ற பாடலை
எங்களது கிசுகிசுப்புக்
குரலில் பாடத்
தொடங்கினோம்.
ஏதோ புகை எங்களை
சூழவே ..
நான் திரும்பிப்
பார்த்தபோது …
எனக்குப் பின்னால்
இருந்த
ஒரு பார் ஸ்டூலில்
அமர்ந்து கொண்டு
கடவுள் சிகரெட்
பிடித்துக் கொண்டிருந்தார்.

மறுமொழி இடவும்