பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 30 of 57

பூங்கதவுகளின் புராணம்..

 

மூடப்பட்ட கதவின்
மேல் கோபிக்காதே..

ஏனெனில் கதவுகள்
மூடுவதற்காகவே தான்
தயாரிக்கப்படுகின்றன.

மூடப்படுவதை
உன் நம்பிக்கை
கோபுரத்தின் மேல்
விழுந்த பேரிடியாக
கருதாதே..

அது..
இன்னொரு
திறப்பிற்கான வழி..

மூடப்படுவது உன்
முகத்தில்
உமிழப்பட்ட எச்சிலாக
கருதி உன்மத்தம்
கொள்ளாதே..

திறந்திருந்தால்
உன் கனவின் மீது
படியும் ஏமாற்ற
நிழலை எங்கே
கொண்டு புதைப்பாய்..??

மூடப்படுதல் ஓரு
வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி.

நீ எழுத இருக்கிற
காப்பியத்தின்
தொடக்கப்புள்ளி..

மூடப்படுதல்
ஒரு நிராசையின்
முடிவு.

இன்னொரு
விடியலுக்கான
துளிர்ப்பு..

ஒரு வேளை
மூடப்படாமலும்
திறக்கப்படாமலும்
காற்றின் திசைகளில்
கதவு அலைகின்றதா..??

யோசிக்காதே.
நீயே சாத்தி விட்டு நகர்.

ஏனெனில்
நகரும் உன்
காலடியில்தான்
உலகத்தின் கதவு
திறக்கிறது.

பெருந்தலைவருக்கு எதிரான பிழைப்புத்தனங்கள்

 

 

 

எப்போதும் தவறான,விஷமத்தனமான உரையாடல்களை உருவாக்குவது திராவிட பற்றாளர்களுக்கு கைவந்த கலை. கடந்த 2008-09 காலத்தில் கூட ஈழம் அழிவின் விளிம்பில் நின்ற பொழுதுகளில் கூட விடுதலைப்புலிகள் சகோதர யுத்தம் நடத்தியவர்கள் என்றெல்லாம் ஒரு விவாதத்தை திட்டமிட்டு உருவாக்கியது திமுக.எப்போதும் கருணாநிதியின் அறிக்கைகளில் இந்த சகோதர யுத்த புராணம் சற்று தூக்கலாகவே இருக்கும். இப்போதும் கூட தலைவர் பிரபாகரனைப் பற்றி அவ்வப்போது திமுக இணையத்தள அணியினர் விஷமத்தனமாக விமர்சனங்கள் வைப்பதும், அதை திமுக தலைமை ரசிப்பதும் அனைவரும் அறிந்ததே.

அதே போல இப்போதும் காமராசர் எதிர் பெரியார் என்கிற அபாயகரமான விவாதத்தினை பெரியார் திடல் தொடங்கியுள்ளது. காமராசரை ஒட்டுமொத்த தமிழினமும் தனது பெருமைக்குரிய சின்னமாக, நேர்மையான ஆட்சிமுறை/ மக்கள் நலன் சார்ந்த அரசியல் இவைகளின் அடையாளமாக காண்கின்ற இவ்வேளையில் அவருக்கு எதிராக பெரியாரை முன் நிறுத்துவது காமராசரின் புகழுக்கு எவ்வித களங்கமுமில்லை. இந்த விவாதம் பெரியாருக்குதான் இழுக்கினை ஏற்படுத்தும்.

கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழர் அரசியல் வேறு வடிவங்களில் மாறி இருக்கிறது. தமிழ்/தமிழர் என்கிற அடையாளங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. திராவிட இயக்கங்கள் ஒரு காலத்தில் எள்ளி நகையாடிய தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் தங்களது பெருமித நிலையை மறுபடியும் அடைந்திருக்கின்றன. சாட்சி : ஜல்லிக்கட்டு போராட்டம்.

மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமே என பேசிய பெரியார் இன்று தமிழின இளையோர்களால் மறுவாசிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். இந்த போக்கு பெரியாரை கடவுளாக்கி, திராவிடத்தலைவர்களை ஆதீனமாக்கி, அவர்களது மகன்களை இளைய ஆதீனமாக்கி திராவிடக்கட்சிகளை மடமாக்கி வழிபடும் திராவிடப்பற்றாளர்களுக்கு மிகுந்த பதட்டத்தை உண்டாக்கி இருக்கிறது. அந்த பதட்டமே ஐயா திருச்சி வேலுச்சாமி சொல்வது போல ஆட்டைக் கடித்து ,மாட்டைக் கடித்து, இன்றும் மனிதனையும் கடிக்கத் தொடங்கி இருக்கிறது.

பெருந்தலைவர் காமராசர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. காமராசரின் இந்திய தேசிய உணர்வு கடந்த பல காலங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் காமராசர் மறு வாசிப்பிற்கு உள்ளாகிற, விமர்சனங்களுக்கு நேருகிற ஒரு ஆளுமையாக என்றுமே இருந்திருக்கிறார். ஆனால் பெரியாரை புனித முக்காடு அணிவித்து பெரியாரைப் பற்றி எவ்விதமான விவாதங்களும் எழாமல் கவனம் காப்பதும், மீறி எழுப்புபவர்கள் மீது அவதூற்று பிரச்சாரங்களால் எகிறி தாக்குவதும் திராவிட ஆதரவாளர்களின் இயல்பாக உள்ளது. தன் வாழ்நாளில் எத்தனையோ எதிர் பிரச்சாரங்களை நேரிடையாக எதிர் கொண்டு நின்றவர் பெரியார். ஆனால் அவரது வாரிசுகளாக அறிவித்து கொள்கிறவர்கள் சகிப்பற்றத் தன்மையின் சின்னங்களாக மாறி இருக்கிறார்கள்.

பெருந்தலைவர் காமராசர் போன்ற தமிழின அடையாளங்கள் மீது தகுதியற்ற விமர்சனங்களை வைத்தால் அது பெரியாருக்கு எதிராக திரும்பும் என்பது பெரியார் திடலுக்கு தெரியாதது அல்ல. அதையும் மீறி வைக்கிறார்கள் என்றால்.. பெரியாரைத் தாண்டியும் அவர்களுக்கு ஒரு அரசியல் உள் நோக்கம் இருப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

என்றுமே பெருந்தலைவர் காமராசர் பெரியாரின் புகழ் வெளிச்சத்தில் வெற்றிப் பெற்ற ஆளுமை அல்ல. சமகாலத்தில் இருவருமே புகழ்ப் பெற்ற தலைவர்கள். பெரியாரின் ஆலோசனைகளை காமராசர் கேட்டிருக்கக் கூடும். ஆனால் முடிவுகளை காமராசர் தன்னியல்பில் தான் எடுத்தார். ராஜாஜி போன்ற எதிர்முரணை தன் வரலாற்றில் மிக நெருக்கமாக வைத்துக் கொண்ட பெரியாரால் ராஜாஜியின் எதிரியான காமராசரை ஆதரிக்க மட்டுமே முடிந்தது. இந்த வித்தியாசமான முரண்புள்ளிகளை காமராசர் மிக நன்றாக புரிந்து வைத்திருந்தார். அதனால் தான் காமராசரது இறுதிக்காலத்தில் திமுகவோடும், இராஜாஜியோடும் மீண்டும் இணக்கமாகி இருந்த பெரியாரை காமராசர் வெகுவாக விமர்சிக்கவில்லை. எனவே காமராசர் மீது பெரியார் மிகுந்த ஆதிக்கத்தினை செலுத்தினார் என்பதும், பெரியாரின் ஆலோசனைகளை வைத்தே காமராசர் ஆட்சி நடத்தினார் என்பதும் வெகுவான மிகைப்புள்ளிகள்.

பெருந்தலைவர் காமராசரைப் பற்றி நிறைய தகவல்கள் நூல்கள் வாயிலாகவும், இணையத்தளங்கள் வாயிலாகவும் நமக்கு கிடைக்கின்றன. அவரது ஆட்சிக்காலமே தமிழகத்தின் மாபெரும் பொற்காலமாக திகழ்ந்திருக்கிறது. தன் செய்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு தங்கத்தலைவனுக்கு பாராட்டு விழா என்பதான அபத்த விளம்பரங்களை காமராசர் என்றுமே செய்துக் காட்டியதில்லை. சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?” என்று பெரியாரே வியந்துப் பாராட்டிய பெருமகனாக காமராசர் திகழ்ந்துள்ளார். பெரியார் தன் இயக்கத்திற்காக பெருச்சொத்தினை சேர்த்தவர். ஆனால் காமராசர் தன் கட்சியின் பெருஞ்சொத்தாக விளங்கியவர். திராவிட இயக்கங்கள் தமிழக அரசியலில் செய்த நலன்களை விட கேடுகளே அதிகம். அதில் மிக முக்கியமானது அரசியலில் இருந்த எளிமையை துடைத்து எறிந்தது. மக்களுக்காக உழைக்கிற அரசியலை ஒரு தொழிலாக மாற்றி, நிறுவனமாக மாற்றி கோடானுகோடி கொள்ளையடிக்கிற வணிகமாக மாற்றி ஆசியாவின் பெரும் பணக்காரர்களாக திராவிடத் தலைமைகள் மாறியது தமிழக அரசியலின் நேர்மை உணர்வை இல்லாதாக்கியது.

இவர்கள் விமர்சிக்கும் காமராசர் தான் இறக்கும் போது தன் தலையணைக்கு கீழே வைத்திருந்த சொற்ப பணத்தை (ரூ.160/-) தவிர வேறு எந்த சொத்தினையும் பொதுவாழ்க்கை மூலம் அடையாதவர். அவரின் குடும்பத்தினர்களோ, உறவினர்களோ அரசியலில் ஆதாயம் அடையாத அளவிற்கு சுய வாழ்க்கை சுத்தம் கொண்டவர். ஆனால் திராவிட அரசியல் வாதிகள்…????

பெரியாருக்கு எதிராக காமராசரை நிறுத்துவது அல்ல நமது நோக்கம். காமராசரை பெரியாருக்கு கீழே நிறுத்துவதை தடுப்பதே நமது நோக்கம். வரலாற்றினை தன் கொல்லைப்புற வாய்க்காலாக கருதி, அண்ணா அறிவாலயம் திசையில் மடைமாற்ற பிராயத்தனம் செய்யும் மதிமாறன் போன்றோரே பெரியாரின் கருத்தியலுக்கும், அவரது வாழ்க்கைக்கும் துரோகம் செய்கிறவர்களாக, பெரியாரை பலர் புறக்கணிக்கும் போக்கிற்கு காரணிகளாக திகழ்கிறார்கள்.

காமராசர் தான் கொண்ட இந்திய தேசிய உணர்வால் ஏமாற்றப்பட்டார். . ஆனால் அவரின் தியாகமும், சேவையும் ,இம்மண்ணுக்கேரிய ஒரு தூயத் தமிழனின் அப்பழுக்கற்ற சமூகப் பணி. அக்குணம் பாழ்படுத்தப்படாத ஒரு பச்சைத் தமிழனின் மரபியல் சார்ந்த பரம்பரைக்குணம். அதை குறை சொல்ல இம்மண்ணை கொள்ளையடித்தவர்களுக்கு, அடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, அடிக்கத் துடிப்பவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

நான் ஏற்கனவே சொன்னதுதான் . காமராசரை ஆதரிக்கவே பெரியாருக்கு உரிமை உண்டு. அதை புரிந்துக் கொண்டு அவர் ஆதரித்தார். எதிர்க்க இவர்களில் யாருக்கும் தகுதி இல்லை.

பெரியார் தன்னை கன்னடன் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். இந்த மண்ணை ஆளும் உரிமை தனக்கில்லை என வெளிப்படையாக ஒத்துக் கொண்டவர். அது பச்சைத்தமிழன் காமராசருக்கே இருக்கிறது என அறிவித்தவர். பெரியாரின் வாரிசுகள் என அறிவித்துக் கொள்ளும் இவர்கள் தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்கிற பெரியார் ஆதரித்த ஒரு முழக்கத்தை எதிர்ப்பதுதான் திராவிட அரசியல்வாதிகளின் பிழைப்புத்தனமாக இருக்கிறது.

பிழைத்து விட்டு போங்கள்.

ஆனால் எங்களுக்காக உழைத்த காமராசர் மீது பெரியாரை காட்டி கறைப்படுத்தாதீர்கள்.

அது உங்களையே வீழ்த்தும். ஏற்கனவே தடுமாறிக்கொண்டு இருக்கிற உங்களது கட்டுமரங்களும், கப்பல்களும், காமராசரை தமிழின அடையாளமாக உணர்ந்து எழுந்து வருகிற தமிழ்த்தேசிய உணர்வு என்கிற பேரலையால் முழ்கடிக்கப்படும்.

காமராசரைப் பற்றி அறிய:

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D

காமராசரைப் பற்றியும்,
இச்சர்ச்சைப்பற்றியும்
திருச்சி வேலுச்சாமி அவர்களின்
எதிர்வினை

https://www.youtube.com/watch?v=_olmNq7mcm4

பிரிவொன்றின் மழை..

இறுதியாக
பிரிதலுக்காக
நீயே மழை ஒன்றை
தயாரிக்கிறாய்‌.‌.

வெறுமைக்
காரணங்களையும்..
வலிந்து
திணித்த
போலி
நியாயங்களையும்
கொண்டு தயாராகிறது
மழை..

நேசிப்பின்
மேகங்களை
வெறுப்பின்
கருமைக் கொண்டு
இருளாக்க மறதிக்
காலம் ஒன்று
அவசரத் தேவையாக
ஆம்புலன்சில் வருகிறது.

விழியோரம்
கனவொன்று சட்டென்று
கசிந்து விடக்கூடாது
என்கிற கவனம்
விரிய காத்திருக்கும்
பிரிய குடை ஒன்றை
மடித்து வைக்கிறது..

நிலாக்கால
நினைவுகளின்
ஏக்கப்பெருமூச்சுகள்
பெருங்காற்றாய்
வீச..
பிரிவின் மழை
மேகம் கலையுமோ
என அஞ்சுகிறாய்.

பிறகு நீயே
அலட்சிய புன்னகை
ஒன்றினால்
நிராசைத் தூறல்களை
தூவ வைக்கிறாய்‌.

உதிரம் கசியும்
ஒரு வயலினையும்

இருளடர்ந்த
ஒரு வனத்தையும்

சில கண்ணீர்த்
துளிகளால்

நீயே உருவாக்கிறாய்.

பொழியத் தொடங்குகிறது
மழை.

நான் நனையத்
தொடங்குகிறேன்.

நதியற்ற பாவம்.

 

 

 

நதிகளில்
தொலைக்க
பாவங்கள்
இருக்கின்றன..

பாவம்.
நதிகள் தான்
தொலைந்திருக்கின்றன.

மிகைற்ற சினமும்..நேசிப்பின் ரணமும்

திராவிடத் தத்துவம் தனக்குத்தானே மதிப்பிழந்து,அம்பலப்பட்டு நிற்கிறது. நிகழ்கால அரசியலில் தத்துவ தலைமையில்லாமல் காவி அரசியலோடு கலந்து விட துடிக்கிறது. பெரியாரை கேடயமாகக் கொண்டு தனக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கொள்ள எத்தனிக்கிறது. இம்முயற்சி கேடயத்தையும் சேர்த்தே வீழ்த்தும் என்பது தெரிந்தும் பிரபாகரன் என்ன கடவுளா என கேள்வி கேட்டு திசை திருப்புகிறது. இதற்கு எதிர்வினையாக அப்படி என்றால் தெருவிற்கு தெரு சிலைகள் கொண்ட பெரியார் என்ன கடவுளா என்ற கேள்வி எழும்பும் என்பது தெரிந்தும்..பிரபாகரன் vs பெரியார் என்கிற விளையாட்டில் திராவிடத் தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

பாவம் அவர்கள். தர்க்க ரீதியான எந்த கேள்விக்கும் அவர்களது நடைமுறை முரண்களே பதிலாகிப் போனதால் சீமானை சீண்டிப்பார்க்கிறார்கள்.

அண்ணன் சீமான் ஈழம் சென்று விட்டு திரும்பி அடுத்த நான்கு வருடம் இதே பெ.தி.க மேடைகளில் தன் ஈழப் பயணம் குறித்து நிறைய செய்திகளை பகிர்ந்து இருக்கிறார். அப்போதெல்லாம் பக்கத்தில் இருந்து பல்லிளித்த இதே தலைவர்கள் இன்று பாய்ச்சலாய் பாய்வதன் காரணம் அணையப் போகிற திராவிடத் தீபத்தை எதை கொண்டாவது சுடர் விட வைக்கும் தந்திரமே.

திராவிடபிழைப்புவாதங்களை,
பித்தலாட்டங்களை,தமிழின துரோகங்களை இன்றைய இளைஞர்கள் இணையம் வழி கேள்வி எழுப்புகிறார்கள் ‌. எள்ளி நகையாடுகிறார்கள். இந்த எழுதலுக்கு காரணம் சீமான் என திராவிடத் தலைமைகள் நம்புகிறார்கள்.
அதனால் ஏற்பட்ட சினம் தான்
சீமான் மீது வன்மமாய் கவிழ்ந்துக் கிடக்கிறது.

ஈழத்திற்கு சென்று வந்து கொளத்தூர் மணி அவர்களிடம் சீமான் மூலமாக என்னென்ன தகவல்கள் பரிமாறப்பட்டன என அருகிலிருந்து கவனித்தோர் எல்லாம் இன்னும்,இன்றும் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டு, அக்காலக்கட்டத்தில் பல செய்திகள் பெரியார் தி.க மேடைகளில் கொளத்தூர் மணி அவர்கள் முன்னிலையில் சீமான் அண்ணனால் பகிரப்பட்டன என்பதையும் மறைத்து இன்று கொளத்தூர் மணி திடீரென தோன்றி காந்தியை சுட்டுட்டாங்களா என்கிற ரீதியில் பேசுவதுதான் மிகையாக தோன்றுகிறது. சீமான் சொல்வதெல்லாம் மிகை என்றால்..அன்றே கொளத்தூர் மணி மறுத்து இருக்கலாம். தங்க ஊசி என்றாலும் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா..என்றளவிற்காவது எதிர்வினை ஆற்றி இருக்கலாம். அதற்கு பிறகு கூட சீமானோடு நெருக்கமாய் இருந்த காலக்கட்டங்கள் இருந்தன என்பதை மணி அண்ணன் மறந்திருக்கலாம். நாங்கள் மறக்கவில்லை. அப்போதெல்லாம் ஆற்றாத எதிர்வினை இப்போது எகிறி வந்து விழுகிறது என்று சொன்னால்..சொல்லப்பட்டவை எதுவும் மிகை அல்ல.. இப்போது கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றும் எதிர்வினைகளே மிகை.

இன்று படிக்காதவராய் மணி அவர்களால் அடையாளம் காட்டப்படும் சீமான் தான் அன்று தெருத்தெருவாக சென்று பெரியாரை பரப்ப பயன்படுத்தப்பட்ட ஆயுதம். இந்தப் படிக்காத சீமான் தான் அன்று கொளத்தூர் மணி கைது செய்யப்பட்ட போது துண்டேந்தி வசூல் செய்ய பயன்படுத்தப்பட்ட கருவி‌. இந்த படிக்காத சீமான் தான் அன்று பெரியாரைப் பற்றிப் பேசும்போது கொளத்தூர் மணியை உச்சி மோர வைத்த பரவசம். என்ன செய்வது.. சமீப காலமாக ஸ்டாலின் போன்ற மெத்த படித்த அறிவாளிகளோடு ஏற்பட்ட சகவாசம் சீமானை படிக்காதவராய் பார்க்கத் தோன்றுகிறது போலும். ஒத்துக் கொள்ள வேண்டியதுதான். ஸ்டாலின் மேதையாக,மீட்பராக,காப்பராக தோன்றும் விழிகளுக்கு சீமானை படிக்காதவராக தான் தோன்றும்.

அண்ணன் கொளத்தூர் மணி மீது நானெல்லாம் பெரு மதிப்புக் கொண்டவன். திமுக வெறுப்பினை அவர் மூலமாகவே அடைந்தவன். அவர் இன்று எளிதாக ஸ்டாலினைப் பார்த்து ,வீரமணியை சந்தித்து சமாதானமாகிக் கொள்கிறார். எங்களால் ஆக முடியவில்லை. அவ்வளவுதான்‌. அவரால் உண்டாக்கப்பட்டவர்கள் தான் நாங்கள். ஆனால் வரலாற்றின் போக்கு விசித்திரமானது. அவர் மீது நாங்கள் கொண்ட நேசிப்பே இன்று அவருக்கே ரணமாகி இருக்கிறது.

எம் இனத்தை வீழ்த்திய திராவிட கருத்தியலை சமரசமற்ற அரசியலால் வீழ்த்தி முடிப்போம் என முடிவு செய்தோம் . செய்கிறோம். அதே சமயத்தில் இந்துத்துவ காவி அரசியலுக்கு நேரடி எதிரியாக,சாதி முரண்களை கொண்டு காலங்காலமாய் எழுப்பப்படும் அரசியலுக்கு எதிராக …எம்மின படுகொலைகள் தந்த அனுபவங்களை உள்வாங்கி நிற்கிறோம்.

மற்றபடி..மதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்களின் சொற்களை எல்லாம் கூராய்வு செய்ய வேண்டியதில்லை. இருக்கும் இடத்திற்கு ஏற்றாற் போல அவரெல்லாம் பேச மாட்டார் என கருதினோம். பேசி விட்டார். சிறு புன்னகையோடு கடப்போம்.

அவர்கள் கற்பித்தார்கள்.
நாங்கள் நடக்கிறோம்..

அவர்கள் விட்டு விட்டார்கள்.
நாங்கள் தொடர்கிறோம்.

நேற்றிருந்தவர்களின் கதை.

 

நேற்றிரவு
அவர்கள்
இருந்தார்கள்..

நேற்றிரவு
இந்த நொடியில்
அவர்கள்
உறங்கியும்
இருந்தார்கள்..

கண் மூடி
கதகதப்பாய்..
நாளையும்
இப்படிதான்
உறங்கப்
போகிறோம்
என்ற
நம்பிக்கைகளோடு..

நேற்றிரவு
குளிர்மையாய்
உறைந்திருந்த
சில தோட்டாக்கள்
அச்சமயம்
புன்னகைத்ததை
அவர்கள்
அறியவில்லை..

…….

புற்றில்லாத
உடலோடு
நஞ்சற்ற
நிலத்தில்
வாழ்தலென்ற
கனவோடு
அவர்கள்
காலை
விழித்தார்கள்..

அதிகாரத்தை
அரிதாரமாக
பூசி இருக்கும்
அரச துவக்குகள்
ஏற்கனவே
வேதாந்தா வீசிய
எலும்புத்
துண்டுகளுக்காக
நாய்களாக மாறிய
கதை தெரியாமல்..

எதிர்காலம்
என்பதை
இருத்த…
விதி ஒன்றை
மாற்ற அவர்கள்
வீதிகளிலே
போனார்கள்..

ரூபாய் நோட்டுகள்
செருகப்பட்ட
செவிகளில்
நெஞ்சடைத்து
அவர்கள் இடும்
முழக்கங்கள்
கேட்கட்டும் என
அவர்கள் நடந்தார்கள்..

ஏதோச்சதிகார
துவக்கின்
நாவிலிருந்து
உமிழப்பட்ட
தோட்டாக்களில்
அவர்களின்
பெயர்
எழுதப்பட்டிருப்பதை
அறியாமல்..
நெஞ்சத்தை
துளைக்கும்
முதல்
நொடி வரை
நம்பினார்கள்..

இது ஒரு நாடென..

பேய் அரசாண்டால்
மட்டுமல்ல..
பேயின் நாய்
அரசாண்டால் கூட
பிணம்தான்
தின்னும்
சாத்திரங்கள்..

நேற்றிரவு அவர்கள்
இருந்தார்கள்..

நாளை விடியும்
என்ற நம்பிக்கையோடு..

நேற்றிரவு அவர்கள்
இருந்தார்கள்..

 

கடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.

 

கால்கள் இழந்தும் கண்,கைகள் சிதைவடைந்தும்

சித்தம் குழம்பிப்போய்

சிரித்தும் அழுதுக் கொண்டும்

ஊனமாய் போய்விட்ட ஒரு பெரும் சமுதாயம்

கத்தி அழுதபடி

காரிருளில் அங்குமிங்கும்

வாழ்ந்த மண்ணை

வாயினிலும் தலையினிலும் அள்ளி எறிந்து

ஆவிகளாய் அலைந்தபடி.

ஒப்பாரி வைக்கின்ற ஓலத்தை

என் வாழ்வில் எப்படிதான் நான் மறப்பேன்.

என் சகியே..

                          -திரு.

எனக்கு முன்னால் அமர்ந்திருந்த சரவணன் தலைகவிழ்ந்து அமைதியாய் இருந்தார். என்ன.. என்று தளர்ந்த குரலில் கேட்டேன். நிமிர்ந்த சரவணனின் கண்கள் கலங்கி இருந்தன. கவிஞரை இரண்டு நாளா காணோம் ..என்றார்.

எங்கே போனாருன்னு தெரியல ..

எங்களால் கவிஞர் என அழைக்கப்பட்ட விழியன் என்னும் அந்த நண்பனின் முகம் ஒரு நொடி கண் முன் தோன்றி மறைந்தது இன்னும் பதட்டமாக இருந்தது.

ஏன்..ஏதாவது பிரச்சனையா ..

 இல்ல.. அவரு கொஞ்சம் நாளா தூங்கல..பத்திரிக்கையில வர்ற செய்திகள பாத்துட்டு நிறைய குடிக்க ஆரம்பிச்சிட்டாரு..திடீரென இப்ப காணோம்.

செய்தி சொல்லிக் கொண்டிருந்த சரவணனுக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

நல்ல வேளை அவரால காணாம போக முடிஞ்சது.. இல்ல சரவணன்..என்ற என் பதிலை அவரும் எதிர்பார்த்திருப்பார் போல..

தலையை மீண்டும் கவிழ்ந்துக் கொண்டார்.உரையாடல்கள் எதுவும் அற்ற ,சொற்கள் தீர்ந்த மனிதர்கள் இருவரும் அந்த அறையில் ஏறக்குறைய உறைந்த நிலையில் அமர்ந்திருந்தோம்.

எங்களுக்குத் தெரியும். எங்களைப் போல பலரும் அப்படித்தான் அந்நேரத்தில் உறைந்திருந்தார்கள் என..

.

அந்த அலைபேசி இலக்கத்தை கண்டாலே மனதிற்குள் பதட்டம் வந்து சேர்ந்துக் கொள்கிறது. வெளிநாட்டு எண். பேசுபவர் அயல் மண்ணான அமெரிக்காவில் இருந்து புதிது புதிதாக ஈழ யுத்தச் செய்திகளை சொல்லும் எனது நண்பர் பாக்கியராசன். கடந்த சில நாட்களாக எதுவும் பேசவில்லை. இப்படி பேசாமல் அவர் எப்போதும் இருந்ததில்லை. இது புதிது. இப்படி பேசாமல் இருந்தது கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது. ஏனென்றால் அப்போது எல்லாமும் முடிந்திருந்தது. நீண்ட தயக்கத்திற்கு பிறகு அழைப்பினை எடுத்தேன்.

சொல்லுங்க தல..

எதிர்முனையில் நீண்ட மெளனம்.

தல..

ம்ம்ம்..

என்னங்க..

ஒண்ணுமில்ல..

அமெரிக்காவில் இருந்து அலைபேசியில் அழைப்பவரிடத்தில் என்ன என்று கேட்டால் ஒன்றுமில்லை என்கிற பதிலைப் பெறுவது சற்று விசித்திரமானது என்றாலும் எனக்கு ஆச்சர்யமானது இல்லை. கிளிநொச்சி வீழ்ந்த போது கூட இயக்கம் பெரிய திட்டம் வைத்துள்ளது என்கிற நம்பிக்கையை என்னுள் விதைத்தவர் அவர். தற்போது சொற்களற்ற மனிதராய்.. ஏறக்குறைய சலனமற்ற மெளனத்தைப் போர்த்திக் கொண்ட மனிதராய் உலர்ந்துப் போனார்.

தோத்துட்டோம் தல. என்று அவர் தழுத்தழுத்த குரலில் சொல்லி முடிப்பதற்கு முன்னரே நான் இங்கே அழுது விட்டேன். செத்துட்டோம் தல என்று சொல்லியவாறே அந்த அழைப்பை துண்டித்தார். இனி அவரிடம் பகிர எந்த செய்திகளும் இல்லை.

எங்களுக்குத் தெரியும். எங்களைப் போல பலரும் அப்படித்தான் அந்நேரத்தில் உறைந்திருந்தார்கள் என..

.

ஈழத் தாயகத்தை இழந்ததும், அந்த விடுதலைப்போரில் நாம் தோற்றதும் வெறும் சரித்திர நிகழ்வுகள் அல்ல. அத் தோல்வி ஒரு வரலாற்றுச் சம்பவமல்ல. அந்த இழப்பு தாயகத் தமிழகத்தில் வாழ்ந்து வந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஆழ்ந்த உளவியல் காயம். அத் தோல்வி மாறவே மாறாத குற்ற உணர்ச்சி. ஒரு வகையிலான வலியும், கழிவிரக்கமும் நிரம்பிய உளவியல். அந்நாட்களில் ஒரு முத்துக்குமார் எரிந்து இறந்துப் போனான். பல முத்துக்குமார்கள் இறக்கமுடியாமல் அனுதினமும் எரிந்துக் கொண்டிருந்தார்கள்.

.

எதிரே நடந்து வருபவர்களைக் கூட ஏறெடுத்துப் பார்க்க இயலா காயத்தினை..முகத்தில் ஏற்பட்ட வடுவாய் ஈழத்தின் அழிவு உணர்வுள்ள ஒவ்வொரு தமிழின இளைஞனின் இதயத்திலும் ஆழமாய் ஏற்படுத்தி சென்று இருக்கிறது. 2009 மே மாதத்தில் விடுதலைப்புலிகள் பெரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்த போது ..அந்த பின்னடைவை வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருந்த கூட வேலைப் பார்த்த ஒரு சிங்களனை கொல்லத்தோணுகிறது என சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிற என் தம்பி ஒருவன் வெறித்தனமாக என்னிடம் அலைபேசியில் கதறியது இன்னமும் காதில் ஒலிக்கிறது. ஆம்..உலகம் முழுக்க தமிழின இளைஞர்கள் புலிகளின் பின்னடைவை தங்களது தோல்வியாக கருதி தங்கள் ஆன்மாவை காயங்களால் நிறைத்துக் கொண்டார்கள்.
கண்கள் சிவந்து..கை கால்கள் நடுங்கி..எங்கே அழுது விடுவோமா என்றெல்லாம் அஞ்சி..இனி வாழ முடியுமா என்றெல்லாம் மயங்கி ..தன்னிலை மறந்து ஒரு நாட்டினை அழியக் கொடுத்தோமே என்கிற குற்ற உணர்வில் சவமாய் திரிந்த நாட்கள் அவை.  தலைவரின் உடம்புப் போல ஒன்றை தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள் என்ற செய்தி வந்தவுடன் குலை நடுங்கி ..இது வரை கொண்ட நம்பிக்கைகள் நட்டாற்றில் போனது போல நா குழறி..உடல் வியர்த்து ..நினைவற்று கிடந்த அந்த கோர நாட்களின் துயர் நினைவுகளை இன்று நினைத்தாலும் உள்ளம் வலிக்கிறது.  அது ஒரு நம்ப முடியாத முடிவு. ஆம். நம்ப முடியாத முடிவு.

.

ஏனெனில் ஈழத்தின் போர் வரலாறு நம்பவே முடியாத விசித்திரங்களைக் கொண்டது. ஆசியாவின் பெரும் வல்லாதிக்க நாடான இந்தியாவின் அமைதிப்படையை தோற்கடித்து ஒரு மாபெரும் தேசத்தை விடுதலைப்புலிகள் உருவாக்கி இருந்தார்கள்.  பல சாகசங்களை, பல வெற்றிகளை நம்பவே முடியாத அளவிற்கு பெற்று எதிலும் இருந்து மீண்டு வருவார்கள் என்கிற பொது உளவியலை தாயகத் தமிழர்களிடையே ஏற்படுத்தி இருந்தார்கள்.  புலிகளின் கடந்த காலம் புகழ்ப்பெற்ற மீள் எழுச்சிகளால் நிரம்பியது.

.

விடுதலைப்புலிகள் வெறும் ஆயுதங்கள் மீது பற்றுக் கொண்டு முரட்டுத்தனமான போர்களால் தங்கள் விடுதலைப்பாதையை சமைத்துக் கொண்டவர்கள் அல்ல. ஒரு தேசிய இனத்தின் பன்னெடுங்கால கனவினை தனது தியாகங்களால் நினைவாக்க முயன்ற ஒரு யுகத்தின் தலைவர் தயாரித்த தனித்த வார்ப்புகள். பூர்வக்குடி ஒன்றின் விடுதலைப்போராட்டதினை உலக வல்லாத்திக்கமே ஒற்றைக்குடையின் கீழ் நின்று எதிர்த்தது அதுதான் முதல் முறை. ஏனெனில் எதனாலும் விலைக்கு வாங்க இயலா மலையாக விடுதலைப்புலிகள் திகழ்ந்தார்கள். சமகாலத்தில் அறிவும், உணர்வும், ஆற்றலும் சமவிகிதத்தில் கலந்த அற்புத கலவையாக அவர்கள் விளங்கினார்கள்.

. ‘

ஒரு கனவு நாட்டினை அவர்கள் உதிரமும், உயிரும் கொண்டு கட்டினார்கள். களவு இல்லாத, கற்பழிப்பு இல்லாத, ஒரு துளி லஞ்சம் இல்லாத, சாதியற்ற, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிந்த ஒரு சமநிலை நாட்டை புலிகள் படைத்தார்கள். பெரும் பெரும் அறிவார்ந்த தலைவர்களால் கூட சாத்தியமற்ற ஒரு கனவினை பொடியன்கள் என்று அழைக்கப்பட்ட அந்த வசீகரம் மிக்க வாலிபத் தோள்கள் கட்டி எழுப்பின.  சீர் மிகுத் தமிழ்மொழியில் அறிவிப்புப் பலகைகள், உயர்படிப்பு வரை தாய்மொழிக் கல்வி என உள்ளங்கை அளவு நாட்டில் தங்கத் தமிழ்மகள் இதுவரை இல்லாத இன்முகத்தோடு ஆட்சிச் செய்தாள்.

.

தொடர்ச்சியான சிங்கள பேரினவாத தாக்குதல்கள்.. உலகம் முழுக்கத் தடை, மின்சாரமோ, அடிப்படை வசதிகளோ இல்லாத வாழ்க்கை,  என சகலவிதமாத தடைகளுக்கு மத்தியில் தமிழினத் தலைவர் மேதகு.பிரபாகரன் இப்பூமிப் பந்தில் தமிழர்களுக்கான ஒரு நாட்டை கட்டி எழுப்பியே விட்டார். எத்தனை நீண்ட கால தவம்.. எத்தனை உயிரிழப்புகள்…எத்தனைப் போராட்டங்கள்.. எத்தனைப் போர்க்களங்கள்…???

 பாரதியும், பாரதிதாசனும், பெருஞ்சித்திரனாரும், பாவாணரும், புலவர்  கலியபெருமாளும், தமிழரசனும், இன்னும் பலரும் கண்ட கனவினை நம் கண் முன்னால் நிஜமாக்கி காட்டினார். தமிழரின் தொன்ம அறத்தோடும், மரபு வழி பிறந்த மறத்தோடும் கூடிய தன்மானத் தலைமையாக தலைவர் பிரபாகரன் விளங்கினார்.

.

எதற்கும் தலைவர் விலை போனதில்லை. தனித்தமிழ் ஈழம் என்கிற ஒற்றைப் புள்ளியிலிருந்து எந்த நொடியிலும் விலகியதில்லை. மாகாண முதலமைச்சர், துணை அதிபர் , வசதியான வாழ்க்கை, உச்சப்பட்ச பதவிகள், பணம் ,புகழ் என்றெல்லாம் பல்வேறு சலுகைகள் அவருக்கு முன்னால் மண்டியிட்டப் போதும் சமரசம் இல்லாத சரித்திரனாய் தலைவர் விளங்கினார். அவரும், அவரது படைகளும் நாம் நிஜ உலகில் பார்க்க இயலா அற்புதன்கள். யுத்தக் களத்தில் நின்ற போதும் பூக்களை மிதிக்காமல் சண்டையிட்டவர்கள். ஒரு  கையில் துவக்கு ஏந்திய போதிலும், மறுகையால் உலகை ஆரத்தழுவி நேசித்து கவிதைப் பாடிய காவிய மனசுக்காரர்கள். மனித நேயமும், கொள்கைப் பிடிப்பும் கொண்ட போராட்டக் காலமொன்றை அவர்கள் உருவாக்கினார்கள். திலீபனும், அங்கயற்கண்ணியும், மில்லரும், கிட்டுவும், குமரப்பாவும், புலேந்திரனும், பால்ராஜ்ஜீம், தமிழ்ச்செல்வனும் என பட்டியலிட்டால் எழுதிக் கொண்டும், புகழ்ந்துக் கொண்டும் போய்க் கொண்டே இருக்கலாம் என்ற அளவிற்கு வான்புகழ் கொண்டு வரிசையாய் தாய் மண்ணை முத்தமிட்டு தமிழ் அன்னைக்காக விண்ணையேறிய வானவில் போராளிகள் அவர்கள். ஆம் .‌நாம் கனவில் மட்டுமே காண முடிகிற அற்புதங்களை நிஜத்தில் செய்து விட்டு சென்றார்கள் அவர்கள்.

.

உண்மையில் நாம் இழந்தது ஈழம் என்கிற நம் தாய் மண்ணை மட்டுமா உறவுகளே..? அல்ல. அந்த மனிதர்களை.. கனிவு நிரம்பிய கண்களோடு, துணிவு நிரம்பிய நெஞ்சோடு உலவிய போர்க்களத்தில் பூத்த பூக்களை… அல்லவா நாம் இழந்திருக்கிறோம்..? இனி எக்காலத்தில் அவர்களை நாம் சந்திப்போம்..? திரைப்படங்களில் மட்டுமே சிந்திக்க முடிகிற அந்த கதாநாயகர்களை கண்டு எந்த நாளில்.. எவ்விடத்தில் …ஆரத்தழுவி அழப்போகிறோம்..??

காட்டுக்குள் இருந்தாலும் கம்பீரமாக விமானம் கட்டி பறந்து விண்ணை முத்தமிட்ட அந்த அறிவின் செறிவானவர்களை இனி எந்த செருக்களம் காணும்..?

.

இத்தனை இழப்பிற்கு பின்னரும் இன்னும் எதைக் கேட்டு ஈழத்து மண் தன் அடிமை விலங்கொடிக்க காத்திருக்கிறது..? .  நினைத்தாலே மனம் கனமாகி கண்கள் குளமாகின்றன. இனியொரு காலம் பிறக்கும். மீண்டும் பாலச்சந்திரன் பிறப்பான். மீண்டும் இசைப்பிரியா தன் குரலால் பாடுவாள். இன்னொரு முறை புதுவை அய்யா தனது புத்தொளிக் கவிதைகளால் புவிக்கு ஒளியூட்டுவார். இலட்சியம் மிக்க கண்களோடும், கலைந்த தலையோடும், வசீகரனாய் திலீபன் மீண்டும் யாழ்த் தெருக்களில் திரிவார்.  வெடி மருந்துத் தூள் படிந்திருக்கிற ஈழப் புல்வெளிகளில் மீண்டும் காந்தள் மலரும்..என்கிற நம்பிக்கை மனதின் ஏதோ மூலையில் மின்மினிப்பூச்சிப் போல சுடர்விட்டு அலைந்துக் கொண்டிருப்பதால் தான் பெருமூச்செறிதல்களோடு இந்த வாழ்வினை நம்மால் வாழ முடிகிறது.

.

ஒரு பத்தாண்டு கூட கடக்காத சூழலில் இதுவும் கடந்துப் போகும், இன்னமும் கடந்துப் போகும், இதற்கு மேலும் உடைந்துப் போகும் என்கிற எதிர்மறை மனநிலையோடு ஈழ விடுதலையை அணுக இயலாது. தேக்கி வைத்த கோபம்… தன் சொந்த சகோதரியின் பிறப்பு உறுப்பினை படம் எடுத்து சிங்களன் உலகத்தின் விழிகளுக்கு விருந்தாக்கி விட்டானே என்கிற அவமானம்.. தோல்வி தந்த வலி… தலைக்குனிவு.. சொந்த சகோதரனை பறிக் கொடுத்த வன்மம்..  நம் தாய் மண்ணின் மடியில் அன்னியன் கால்பதித்து திரிகிறானே என்கிற பழிவாங்கல் உணர்ச்சி.. சென்ற முறை இருந்த மறத்தோடு.. உலகத்தை தழுவிய பார்வைக் கொண்டு எழுகிற ராசதந்திர நகர்வு ..இன்னும் பல..இன்னும் பல கொண்டு நம் தாயக விடுதலையை..ஈழப்பெருந்தேச கனவினை சாத்தியப்படுத்த இந்த பூமிப்பந்தில் வாழ்கிற ஒவ்வொரு தமிழனும் ஆழ்மனதில் இருந்து உறுதியேற்கிற நாள் தான் இந்த இனப்படுகொலை நாள்.

இது இழப்பின் நாள் அல்ல. உயிர் மூச்சால் நம் உடன்பிறந்தவர்கள் காற்றில் கலந்து சுவாசமாய் நம்மை எழுப்புகிற நாள்.

எழுவோம். திருப்பி அடிப்போம். பகை முடிப்போம்.

இருள் விலக்கி விடுதலைச்சூரியனின் சுடர் பிடிப்போம்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.

— மணி செந்தில்

.

வண்ணமற்ற சொற்கள்.

நிறமற்ற என்
சொற்களின்
மீது உனக்கு
பிடித்த
வண்ணத்தை
பூசி விடு..

கூடவே
அப்போதைய
உன் மனநிலைக்கு
தகுந்தாற் போல்…
ஒரு அந்தியையோ..
ஒரு மழையையோ..
கூதிர் காலமொன்றையோ..
வெண்பனிச் சாரலையோ..
கொடும் பாலையையோ. .
அவசியம் இணை.

சொற்களை கரைத்து
விழுங்கும்
பின்னணி இசை
இசைக்கப்படின்
இன்னும் பிரமாதம்.

முடிவில் ஒரு
மலை முகட்டின்
மேலமர்ந்து
தனிமைப்
பொழுதொன்றை
நீயே தேர்ந்தெடு.

என் சொற்களை
உடை அவிழ்ப்பது
போல..
தனித்தனியே கழற்று..
கலைத்துப் போடு.
நிறைவேறாத படைப்பின்
நிராசை ஓவியனாய்
வெற்று பார்வை
ஒன்றைப் பார் .

எழுத்துகளாய் எஞ்சி
இருப்பவற்றை..
உனக்கு பிடித்தமாய்
கோர்த்துப் படி..

நான் தெரியலாம்.
சில நேரங்களில்
நீயும்.

மணி செந்தில்.

கடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.


…..

2016 ஜனவரி.

அவர்கள் எங்களை தடுத்தார்கள். இதற்கு மேலே வாகனங்கள் செல்ல முடியாது. பாலங்கள் உடைந்து கிடக்கின்றன என்றார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட அழிவு அதிகமாகத்தான் இருந்தது. சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த மக்கள் எதிரே வாகனங்களை மறித்து, இருப்பதை பிடிங்கிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாகதானிருந்தது. பசியால் வெளிறிய கண்களோடு குழந்தைகள் ஏங்கி நிற்கின்ற அக்காட்சி எதனாலும் சகிக்க முடியா துயராய் இருந்தது. ஆம். கடலூர் ஏறக்குறைய துண்டிக்கப்பட்ட நிலமாய் , வேதனையும், அழுகுரல்களும் நிரம்பிய மனித வாதையின் கொடுஞ்சாட்சியாய் மாறிய தீவாய் மாறி இருந்தது.
அந்த பொழுதில் தான் என் அலைபேசி அலறிய வண்ணம் இருந்தது. எங்கே அண்ணன் வந்துட்டீங்களா என 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பதற்ற அழைப்பு. ஒரு கடை வீதிக்கு முன்னால் எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. இந்த விபரத்தை நான் அலைபேசியில் சொன்னவுடன் பக்கத்தில் தான் இருக்கோம். இதோ வர்றோம். என சொன்னதை கேட்டு நான் நிமிருகையில்.. கருஞ்சட்டை அணிந்த ஏழெட்டு இளைஞர்களோடு கடல் தீபன் வந்துக் கொண்டு இருந்தான். எப்போதும் புன்னகையை சுமந்திருக்கும் முகம் அன்று..தொடர்ச்சியான பல உறக்கமில்லா இரவுகளை கண்டு சோர்ந்திருந்தது. கடந்த சில வாரங்களாகவே அந்த இளைஞர்கள் உறங்கி இருக்கவில்லை. சரியான உணவோ, ஒய்வோ இல்லாத சூழலில் கொடும் கூற்றாய் விளைந்த இயற்கைக்கு எதிராக அந்த எளிய இளைஞர்கள் போர் தொடுத்து நின்றார்கள். மக்களை காக்க வேண்டும். அவர்களின் கடும் துயரினூடே ஏதாவது ஒரு ஆறுதலை , மீட்பை தந்து விட வேண்டும் என அந்த இளைஞர்கள் போராடினார்கள். அவர்களுள் கடல் தீபன் தனித்து தெரிந்தான். மாநிலம் முழுக்க இருக்கிற நாம் தமிழர் உறவுகளிடத்தில் கோரி உதவிகள் பெற்று அதை மக்களிடம் சேர்ப்பதில் மிகுந்த கவனம் கொண்டிருந்தான். எங்கள் வாகனம் வந்த உடன் ஏதோ உதவி வந்திருக்கிறது என ஓடி வந்த மக்களை ஒழுங்கு செய்ய முடியாமல் கண்கலங்கி நின்றிருந்த அவன் மெல்லிய குரலில் சொன்னான்.. எது தந்தாலும் தீராத பசியை , குறையாத வலியை இந்த புயல் வெள்ளம்.. தந்து விட்டு போயிடுச்சிண்ணே..அது தான்னே பெரிய துயர்.
அவனை இதற்கு முன் பல முறை சந்தித்து இருக்கிறேன். அண்ணன் சீமானின் செயல் வடிவம் அவன். அவருடைய உதட்டில் இருந்து சொல் புறப்படும் முன்னரே செயலில் இறங்கி இருப்பான் தீபன். மக்களுக்காக,மக்களோடு நிற்பதற்காக நாம் தமிழரில் விரும்பி இணைந்து இருந்தான். அயலகத்தில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு 2009 க்கு பிறகான தமிழின எழுச்சியை தகவமைப்பதில் தன் வாழ்க்கையையே இழந்து அர்ப்பணித்து நின்ற இளைஞன் அவன்.
.
அவன் மீது தான்.. அந்த கடலூர் கடல்தீபன் மீதுதான்.. இன்று தமிழக அரசு குண்டர் சட்டத்தை ஏவி இருக்கிறது. காவிரி நதி நீர் சிக்கலில் எத்தனையோ அரசியல் அமைப்புகள் போராடின. ஆனால் நாம் தமிழர் கட்சியின் மீது மட்டும் வரலாறு காணாத அடக்குமுறை. சென்னையில் உள்ள கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என குறிவைத்து காவல் துறை வேட்டையாடியது இந்திராகாந்தி காலத்து எமர்ஜென்சி அத்துமீறல்களுக்கு சற்றும் குறையாதது. தமிழகமெங்கும் கட்சியின் பொறுப்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள், அன்பான அறிவுரை போன்ற மிரட்டல்கள், முளைச்சலவை பேச்சுக்கள் என பல்வேறு ஆயுதங்களை காவல்துறை மூலம் உபயோகித்து நாம் தமிழர் கட்சிக்கு எதிரான ஒரு வெளிப்படையான யுத்தத்தை ஆளும் வர்க்கம் நடத்தி வருகிறது. என்ன நடக்கிறது என்று பார்க்க வந்த நடிகர் மன்சூரலிகான் மீது கூட பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு.
.
இத்தனைக்கும் ஒரு ஒழுங்கமைவு போராட்டத்தை தான் அண்ணன் சீமான் வடிவமைத்தார். இராணுவத்தைப் போல ஒரு பார்வை மூலம் தன் தம்பிகளை கட்டுப்படுத்தி படை நடத்துவதில் , போராட்டக் களங்களை அமைப்பதில் சீமான் தேர்ந்தவர். ஏறக்குறைய 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் பெருங்கூட்டம். உணர்ச்சியும், அறிவும் சமவிகிதத்தில் கலந்து சூழலியல், அரசியல், இயற்கை, வேளாண்மை, உலக அறிவு, கலை பண்பாட்டு விழுமிய புரிதல் என பல்வகை நுண்மாண் நுழைபுல அறிவோடு ஒரு இளைஞர் படையை சமகாலத்தில் கட்டுவதில் அண்ணன் சீமான் வெற்றிப் பெற்றிருக்கிறார். ஆனாலும் ஒரு போராட்டம் இரு முனைகளை கொண்ட கூரிய ஆயுதம். எந்த வகையிலும் அத்துமீறல்கள் எளிதில் நுழையக் கொடுக்கிற அபாயத்தைக் கொண்ட ஆபத்து. இம்முறை திட்டமிட்டு அதுதான் நடந்தது. காவிரி நதி நீர் உரிமைக்காக காவல் துறை அனுமதித்த இடத்தில் தான் நாம் தமிழர் கட்சியினரும், இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலைப் பண்பாட்டு பேரவையினரும், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் என பல தலைவர்களும், அவர்களது அமைப்பினரும், போராடிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத காவல் துறையின் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இயக்குனர் வெற்றிமாறன், தமிழர்நல பேரியக்கத்தின் தலைவர் களஞ்சியம்,அவரது கரூர் மாவட்ட பொறுப்பாளர் ரமேசு ஆகியோர் கொடுமையாக தாக்கப்பட்டார்கள். இந்நிலையில் காவல்துறையினர் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்து சென்னையில் இருக்கிற நாம் தமிழர் பொறுப்பாளர்கள் இரவோடிரவாக கைது செய்யப்பட்டனர்.அவர்களது வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து ,மின்சாரத்தை நிறுத்தி, அலைபேசிகளை பறித்து மிகப்பெரிய பயங்கரவாதிகளை கைது செய்து போல தோற்றத்தை ஏற்படுத்தியது காவல் துறை. கடந்த 10-04-2018 அன்று நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐயா .பெ.மணியரசன், செந்தமிழன் சீமான் , தனியரசு, தமிமுன் அன்சாரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அமீர் உள்ளீட்ட 780 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் சீமான் மீது மட்டும் கொலைமுயற்சி உள்ளீட்ட கடும் பிரிவுகளில் வழக்கு பதிவு. ஐபிஎல் மைதானத்தில் செருப்பு வீசி கைதான பிரபாகரன், அய்யனார், மகேந்திரன் ,வாகைவேந்தன் உள்ளீட்ட11 பேர் மீது பிணையில் வரமுடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு. அன்றைய தினமே சேப்பாக்கம் தொடர் வண்டி நிலையம் அருகே முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட 9 பேரும், பிரதமர் மோடி வருகையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளீட்ட 13 பேரும், நேற்றுதான் பிணையில் வந்துள்ளார்கள். பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான சீமான் அவர்களை தொடர்ச்சியாக சிறைப்படுத்தப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளீட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்னும் சிறையில் இருக்கின்றனர். குறிப்பாக மன்சூர் அலிகான் கைது செய்யப்படும் 2 நாட்களுக்கு முன்னர் தான் பித்தப்பை அறுவை சிசிக்கை மேற்கொண்டு மருத்துவ மனையில் இருந்தவர் என குறிப்பிடத்தக்கது.கடந்த 14 ஆம் தேதி ஸ்டாலின் என்பவரும் கைது செய்யப்பட்டார். இன்னும் கட்சியின் பல முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்ய காவல் துறை முனைப்பாக உள்ளது. இந்நிலையில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கடல் தீபன் மீது குண்டர்கள் சட்டம் பாய்ந்துள்ளது.
.
நீண்ட தொலைவு கொண்ட இலட்சியப் பயணத்தில் இது போன்ற அடக்குமுறைகளை கடக்காமல் ஒரு வெகுசன அரசியல் அமைப்பு பயணப்பட்டு விட முடியாது என்ற புரிதல் இருந்தாலும், இங்கே அரசியலைப்புச்சட்டத்தால் உறுதி செய்யப்படுகிற அனைத்து வகை உரிமைகளும் மிதித்து அழித்தொழிக்கப்படுகிற இவ்வேளையில் இது சனநாயகமா..இல்லை சனநாயக போர்வையில் விளைந்த பாசிசமா என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. காவிரி நதி நீர் உரிமைகளில் போராடுவதாக காட்டிக்கொள்கிற தமிழக அரசு, போராடும் சக அமைப்பினரை கொடும் வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் அடைப்பதை எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்கிற கேள்வியில் இருந்தே பிறக்கிறது இவர்களின் போராடுவதன் லட்சணம்.
.
கடல் தீபன் போன்றோர் கடலலைகளுக்கு ஒப்பானவர்கள். எண்ணற்ற துயர் காற்றின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஓயாமல் உழைப்பவர்கள். அடிமைப்பட்டு அல்லலுற்று ..தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிற அன்னை தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்காக தன் சுய வாழ்வினை தூக்கி எறிந்து விட்டு மாசற்ற இலட்சியங்களுக்காக.. தன்னையே விலையாக கொடுத்தவர்கள். இவர்களைப் போன்ற இளைஞர்களை தன் உடன்பிறந்தானாக கொண்டு நிற்கிற அண்ணன் சீமானும், அவரது தத்துவமும்.. இருண்டு கிடக்கிற அரசியல் வானில்.. நிகழத் துடிக்கிற அதிசயம்தான். அதில் மின்னும் பொன்துகளாய்..ஒரு ஒளித்துளியாய் கடல் தீபன் மின்னுகிறான்.
……

இந்நேரம் இருட்சிறையின் தனிமை பொழுதொன்றை மழைக்கால தேநீராய் மாற்றி அருந்திக் கொண்டிருப்பான் கடல் தீபன். மின்னும் அவனது விழிகளில் தான் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்காலம் சுடர் விடுகிறது.

.
மணி செந்தில்

பிம்பம் தாங்காத ஆடி..

 

 

 

 

…ஆகப்பெரும்

கண்ணாடியாய்
கனவு பிம்பங்களை
மாறி மாறி
வரும் வாழ்வின்
உதய,
அஸ்தமனங்களுக்கு
ஏற்ப வாரி இறைத்துக்
கொண்டிருந்தோம்.

சரிவொன்றின்
சங்கடப்படுத்தும்
நிழலொன்றில் கூட
கலையாத பிம்பமாய்
நம் பற்றை
தகவமைப்பதில்
கவனம் கொண்டிருந்தோம்.

பிசிறில்லா இசையாய்
மாசற்ற கவிதையாய்
அருவமான அற்புதமாய்
அது நிகழ்ந்துக் கொண்டே
இருக்க வேண்டும் என
உறுதி கொண்டோம்..

தவறுகள் மீதும்
காரணங்கள் மீதும்
கட்டப்பட்ட கண்ணாடி
மாளிகையாய்
அது காட்டப்பட்டு
விடக் கூடாதென்றும்..

சின்ன விழி அசைவில்
கூட தெறிக்கும் உணர்வு
கல்லொன்றின் வீசலில்
அது விரிசலாகி விடக்
கூடாதென்றும்..

சில கணக்குகள்
சமைத்து
நமக்குள்ளாக
விடைகளையும்
நாம் சேகரித்து
வைத்திருந்தோம்..

பிரிவொன்றின்
பிரளயக்
காற்று கசியும்
அபாயமிருக்கிற
அனைத்து
பொந்துகளும்
அடைப்பட்டு
விட்டதென நாம்
அறிந்திருந்த
வேளையில் தான்..

வெண்ணிற இரவுகள்*
பக்கங்களில் இருந்து
இறங்கி வந்த
கனவுலகவாசி
சொன்னான்..

உங்களின்
நிலாக்காலம்
அந்த
கண்ணாடியில்
கரும் புகையாய்
படிந்திருக்கிறதென..

சட்டென
மீட்டப்பட்ட
வீணையின்
தந்தியாய்
அதிர்ந்தோம்.

கண்ணாடி
விரிசல் விட
தொடங்கிற்று.

– மணி செந்தில்

* வெண்ணிற இரவுகள்.
மாபெரும் எழுத்தாளர்
தாஸ்தாவெஸ்கி எழுதிய
சிறு புதினம்.

Page 30 of 57

Powered by WordPress & Theme by Anders Norén