பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 4 of 11

துளி-23

 

பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவம் சமூகத்தில் பல சிந்தனைகளை, விவாதங்களை உருவாக்குகின்ற குறியீடாக மாறி இருக்கிறது.

பொள்ளாச்சி நடைபெற்ற அந்த சம்பவங்கள் வெறும் ஒரு ஊரும்,சில இளைஞர்களும் சம்பந்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த சமூகமே தங்களைத் தாங்கள் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய நிலையை இச்சம்பவம் உருவாக்கி இருக்கிறது. சாதி முதல் குழந்தை வளர்ப்பு வரை அனைத்தையுமே நாம் இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

காதலித்து விடக்கூடாது. சாதி மாறி காதலிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்,நாடகக் காதல் , ஜீன்ஸ் காதல் என்றெல்லாம் குமறியவர்கள் எல்லாம் இச்சமயத்தில் மெளனமாக இருக்கிறார்கள். கவனிக்க.

விளம்பரங்களில் வரும் குழந்தைகள் கூட மதங்கள் கிழித்திருக்கும் கோடுகளை தாண்டி விடக்கூடாது என்று பதறியவர்கள் எல்லாம் மெளனமாக இருக்கிறார்கள்.கவனிக்க.
…..

சாதி ஆணவக் கொலைகளால் உயிரிழந்த இளைஞர்கள் தாங்கள் நேசித்த பெண்களுக்காக தண்டவாளங்களில் பிணமாக கிடந்தார்கள். அவர்கள் இவர்கள் போல் அல்ல. அழைத்து வந்த பெண்ணை முறைப்படி மணந்தார்கள். வாழ முயற்சித்தார்கள்.

நம்பி வந்த பெண்ணுக்காக உயிரையும் கொடுத்து நேர்மையாக நின்றார்கள்.

அவர்கள் காதலை காட்டி யாரையும் ஏமாற்றவில்லை.நண்பர்களை வைத்துக் கொண்டு யாரையும் கற்பழிக்கவில்லை.
…..

இத்தனை பெண்கள் பாதிக்கப் பட்ட பிறகும் கூட ஏன் அந்தப் பெண் அங்கே போனாள்.. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி முடியும்‌. என்றெல்லாம் பேசுகிற ஆட்களின் பின்புலத்தினை கவனித்து வையுங்கள்.. சாதி மதம் போன்றவற்றின் பாதுகாவலர்களாக அவர்கள் இருப்பார்கள்.பெண் கல்வியை மறுப்பவர்களாக.. பெண்களின் மீதான வன்முறை நிகழும் போதெல்லாம் அந்த பெண் ஏன் அப்படி உடை அணிந்தாள் .. அவள் ஏன் செல்போன் பயன்படுத்தினாள் என்று பேசுபவர்களாக.. இருப்பார்கள்.

பெண்கள் மீதான வன்முறைக்கு சாதி மதம் எல்லாம் வரையறைக்கோடுகள் அல்ல. சொல்லப்போனால் சாதி – மதம் போன்ற அடிப்படை வாதங்கள் தான் இதுபோன்ற கேடுகளை பராமரிக்கும். பாதுகாக்கும்.

இதில் ஊடகங்கள் நிகழ்த்துகின்ற அரசியலையும் நாம் கவனிக்க வேண்டும். செய்தியை யார் முந்தித் தருவது, பரபரப்பை யார் தூண்டுவது, என்கிற போட்டியால் பொறுப்பற்ற முறைமையில் ஊடகங்கள் செயல்பட தொடங்கி விட்டன. ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் உண்மைக்கு தாண்டிய உள் நோக்கங்கள் இருக்கின்றன என்பதை கடந்த காலங்களில் ஊடகங்கள் வெளிப்படுத்தியே வருகின்றன.

குற்றம் செய்த இளைஞர்களை தாண்டி அவர்களது குடும்பத்தினரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளிவருவது என்பது இன்னொரு கொடுமை. அந்த குடும்பத்தினரின் பொறுப்பற்ற தன்மை தான் இந்த குற்றவாளி இளைஞனை உருவாக்கியிருக்கிறது என்றாலும் கூட.. தற்போது தலைகுனிந்து இருக்கின்ற அந்த குடும்பத்தினரை நாம் மேலும் காயப்படுத்துவது என்பது சரியல்ல என்றே நான் கருதுகிறேன்.

…..

இதையெல்லாம் தாண்டி ஆண் குழந்தைகளை பெற்று வளர்க்கின்ற பெற்றோராகிய நமக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.

மகன்களோடு உரையாடுதல். ஆண் உடல் போன்றே பெண் உடலும் என்ற புரிதலை ஏற்படுத்துதல். பெண் சமூகத்தின் சக உயிரி என்ற மதிப்பீட்டை உருவாக்குதல். வீட்டில் இருக்கின்ற பெண்களை மதிப்புடன் நடத்துதல். சமூகப் பார்வையோடு சமூக கேடுகளுக்கு எதிரான உணர்ச்சிகளோடு பிள்ளைகளை வளர்த்தல்.
.
இதுவரை மகன்களோடு வெளிப்படையாக உரையாடாத பெற்றவர்கள் யாரேனும் இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது. தோழமை மிகுந்த அறிவுறுத்தல்களே நம் மகன்களை மிருக நிலையிலிருந்து காப்பாற்றும்.

நான் என் மகன்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள்..??

மணி செந்தில்.

நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா

நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளை கூராக்கு..
 புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக
அந்த கத்திகளை என் மார்பில் பாய்ச்சு.. மணிக்கணக்காக
நாட்கணக்காக
ஆண்டுக்கணக்காக
இருண்ட யுகங்களாக
 நட்சத்திர நூற்றாண்டுகளாக
என்னை அழ விடு.
-பாப்லோ நெரூதா.
*
இறுக்கமும் நினைத்துப் பார்க்கவே மறுக்கவும் கூடிய பால்யத்தை கொண்டவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வின் விதிகளுக்கு கட்டுப்படாத ஒரு கட்டற்ற காற்றைப்போல திரிவார்கள். பால்யத்தின் பசி என்பது வாழ்வு முழுக்க அடங்காத நீட்சியை கொண்ட பெரும் பயணம். துன்பமும் துயரமும் கொண்ட இளம் வயது வாழ்வினுடையவர்களின் விழிகளை என்றாவது உற்று கவனித்து இருக்கிறீர்களா.. எதையும் சற்றே நிமிர்ந்து பார்க்க தயங்கும் அவர்களின் பார்வையில் எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரத்தின் நிழல் படிந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..
அப்படியானால் நீங்கள் மார்லன் பிராண்டோவை புரிந்து கொள்வது மிக எளிது.
.
சில நாட்களாக அவரைப்பற்றி தேடி வாசித்து வருகிறேன். அவருடைய திரைப்படங்கள் பலவற்றை தேடிக் கண்டெடுத்து பார்த்து வருகிறேன். ஒரு திரைப்பட நடிகனின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள அல்லது தரிசிக்க  என்ன  இருக்க முடியும் என்கிற கேள்விக்கு.. மார்லன் பிராண்டோவின் வாழ்க்கை தரும் அசத்தலான பதில்.. அசலான மனிதன் எப்போதும் சமூகத்தின் சட்டகங்களை மீறுபவனாகவே இருந்து வருகிறான்.
.
மார்லன் பிராண்டோவை பற்றி பல்வேறு செய்திகள் நமக்கு நூலாகவும் கட்டுரைகளாகவும் புத்தகங்கள் வடிவத்திலும் இணையத்திலும் கிடைக்கின்றன. அவரே தன் வாழ்க்கையை பற்றி “Songs my mother rought me” என்கிற சுயசரிதையை எழுதி உள்ளார். மார்லன் பிராண்டோவை பற்றி தமிழில் அஜயன் பாலா ஒரு சிறப்பான நூலை எழுதியிருக்கிறார் .எதிர் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய உலக சினிமாவில் மார்லன் பிராண்டோவின் புகழ்பெற்ற பேட்டியின் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது
 தன்னை தீவிரமான அமெரிக்கா எதிர்ப்பாளராக காட்டிக் கொண்ட அவர் பூர்வகுடி மக்களுக்காக தீவிரமாக இயங்கியவர். அவரது எழுத்துக்களில் முழுக்க நிறத்தால் இனத்தால் பேதம் காட்டப்பட்டு சுரண்டப்பட்ட பூர்வகுடி மக்களின் உரிமைகள் பற்றிய ஆவேசமே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. .
.
எப்போதும் மீறல்களும், கோபமும் நிறைந்த மனிதனாக மார்லன் பிராண்டோ திகழ்ந்திருக்கிறார். சிறுவயதில் கோபக்கார தந்தைக்கும் குடிகார தாய்க்கும் மகனாகப் பிறந்த அவரது பால்யம் துயர நினைவுகளாலும் அலைகழிப்புகளாலும் நிறைந்தது. குடித்துவிட்டு எங்கோ மதுபான கடையில் விழுந்து கிடக்கிற தாயை தூக்கி வருகிற வேலையை இவரும் இவரது மூத்த சகோதரியும் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கிறார்கள். சிறுவயதில் தன்னை கவனித்து கொள்ள வந்த பணிப்பெண்ணான எர்மி என்ற இளம் பெண்ணிடத்தில் தீவிரமாக ஈர்ப்புக் கொள்கிறார் மார்லன். அந்தப் பெண் சில மாதங்களில் காதலனுடன் ஓடிப்போக மிகுந்த தனிமை உணர்ச்சிக்கு உள்ளாகிறார். அந்தத் தனிமை உணர்ச்சி அவர் வாழ்நாளெல்லாம் நிழலென தொடர்ந்து வருகிறது. தான் பழகும் எல்லாப் பெண்களிலும் எர்மியை தேடி கண்டடைய முடியாமல் சோர்வதுதான் அவரது வழக்கமாக இருந்திருக்கிறது.
.
அவரது வாழ்க்கை முழுக்க பெண்களை தேடுவதும் அவர்களில் கொதித்துக் கொண்டிருக்கிற தனது உணர்ச்சி அலைகளை ஆற்றுப்படுத்த வழி தேடுவதுமாகவே மார்லன் இருந்திருக்கிறார். பெண்களை நீக்கி அவரது வாழ்வில் கண்டடைய கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று அவரே சொல்லிக் கொண்டாலும் சகமனிதனின் பால் ஒடுக்கப்பட்ட மக்களின் பால் அவர் கொண்டிருந்த அளவற்ற நேசம் ஆச்சரியகரமானது.
.
அமெரிக்க இந்தியர்களின் போராட்ட இயக்கங்களில் தன்னையும் ஒருவனாக அவர் இணைத்துக் கொண்டிருக்கிறார். மார்டின் லூதர் கிங் பேச்சை கேட்டு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். ஆகச்சிறந்த திரைப்பட நடிகன், ஆஸ்கர் விருதிற்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட திறமைசாலி என்றெல்லாம் அவருக்கு ஒரு புகழுச்சிகள் இருந்தாலும்.. பூர்வகுடி மக்களுக்காகப் போராடுவதை தான் தனது வாழ்நாள் கடமையாக அவர் கருதியிருக்கிறார். அமெரிக்காவை கண்டு பிடித்ததாக உலகவரலாற்றில் போற்றிக் கொண்டாடப்படும் கொலம்பஸ் ஸை மனிதநேயமற்ற கொலைகாரன் என்று மார்லன் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவிற்கு பீகார் பஞ்சத்தை பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார். இந்த நிலத்தில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகளே உலகத்தில் நடக்கிற அனைத்து விதமான கொடுமைகளை விட ஆகப்பெரும் கொடுமை என்று வருந்துகிறார்.இந்திய நிலத்தின் மாபெரும் திரைப்பட ஆளுமை சத்யஜித்ரே யோடு நெருங்கி பழகி இருக்கிறார். அவரது மிக நெருக்கமான இன்னொரு நண்பன் மைக்கேல் ஜாக்சன்.
ஆஸ்கர் விருதுக்காக இயங்குகிற இயங்குகிற நடிகர்களை பார்த்து ஏளனம் செய்கிறார் மார்லன்.தி காட்பாதர் படத்தில் நடித்ததற்காக அவர் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.அந்த விருதைப் பெறும் நிகழ்ச்சியை அமெரிக்க பூர்வகுடிகள் அடைந்திருக்கிற துயரங்களை உலகம் முழுக்க கொண்டு செல்கிற ஒரு வாய்ப்பாக பயன்படுத்த மார்லன் பிராண்டோ முடிவு செய்தார். தனக்கு பதில் அந்த விருதைப் பெற சச்சின் லிட்டில் வெதர் என்கிற ஒரு பூர்வகுடி பெண்ணை அனுப்பி இதுவரை அமெரிக்க பூர்வகுடிகள் அடைந்திருக்கிற துயரங்களை உலகறிய செய்தார்.
தனித்த தீவு ஒன்றை விலைக்கு வாங்கி வசிக்க முயன்ற மார்லன் பிராண்டோ தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகளை தி காட்பாதர் படத்தின் நாயகன் மாஃபியா கிங்   டான் கார்லியோன் போலவே அனுபவித்தவர். தனது மகளின் காதலனை தனது மூத்த மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று 10 வருட சிறை தண்டனை அனுபவிக்க மகள் தற்கொலை செய்து கொள்ள தீரா மனவேதனையில் ஆழ்ந்து போனார் மார்லன் பிராண்டோ.
தனது 47வது வயதில் 70வயது கிழவனாக காட்பாதர் இல் நடித்து உலகப் புகழ் அடைந்த மார்லன் பிராண்டோ தனது வாழ்க்கையை மூடி வைத்த ஒரு புத்தகமாக கருதவில்லை. கேமரா முன் நின்றவுடன் தன்னை அந்த கதாபாத்திரத்திற்குள் உட் செலுத்துவதில் மார்லன் பிராண்டோ ஒரு ஜீனியஸ். அவர் நடித்த தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் என்கிற திரைப்படத்தில் மிகு காம உணர்வு கொண்ட ஒரு மிருகம் போல வாழ்ந்து காட்டி இருப்பார். காட்பாதர் படத்தில் நடிப்பதற்காக தனது தாடையை மாற்றி அமைத்துக் கொண்டு ஒவ்வொரு அசைவிலும் ஒரு டான் போல வாழ்ந்திருப்பார். அவருக்கு எலிசபெத் டெய்லர் மர்லின் மன்றோ போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்களோடு நெருக்கமான உறவு இருந்தது. கூட நடிக்கும் பல நடிகைகளோடு அந்தரங்க உறவு வரை வைத்துக்கொள்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளம் வயதில் தன்னை ஏமாற்றிய எர்மி என்ற அந்தப் பணிப்பெண் தன்னை விட்டு போனதிலிருந்து வேறு எந்தப் பெண்ணிடமும் ஏமாந்து விடக்கூடாது என்கின்ற எண்ணத்தினாலேயே ஒரே சமயத்தில் பல பெண்களோடு.. ஒன்று போனால் இன்னொன்று என்ற வகையில் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக அவரே ஒத்துக் கொள்கிறார்.
.
ஏறத்தாழ என்பது வருடங்கள் வாழ்ந்த அவரது வாழ்க்கை துயரங்களும் ஏமாற்றங்களும் நிறைந்த கொடும் பாதை என்றாலும் அவர் அந்த உணர்ச்சிகளின் நெருக்கடி தீண்டாத திறன்மிக்க பெரும் ஆளுமை கொண்ட நடிகராக திகழ்ந்தார். திரையில் அவர் தோன்றிவிட்டால் அவரது ஆளுமை படாத சக கதாபாத்திரங்கள் இருக்க இயலாது. திரை முழுக்க தனது திறமையால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தெரிந்த அந்தப் பெரும் கலைஞனுக்கு வாழ்வின் சூட்சமங்கள் குறித்து இதுவரை தெரியவில்லை என்பதுதான் பெரும் சோகம்.
புகழ்பெற்ற இயக்குனர் பெர்னாண்டோ பெர்ட்டோலூச்சி இயக்கிய தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் என்கின்ற திரைப்படத்தில் மார்லன் பிராண்டோ நடித்த போது  கேமிராவின் வியூ பைண்டர் மூலம் அவரை பார்க்க முடியவில்லை .. கால்கள் உதறல் எடுக்கிற அளவிற்கு நடிப்பில் ஆளுமை செலுத்துகிறார் என்று அந்த திரைப்படத்தின் கேமராமேன் மிரண்டு போனார். அதேபோல  பியூஜிடீவ் மைண்ட் என்ற திரைப்படத்தின் இயக்குனர் சிட்னி லூமட் மார்லன் பிராண்டோ நடிக்கும்போது ஒரு பறவை சத்தமிட்டால் கூட அதனை வெறுமனே தன் ஒற்றைப் பார்வையால் அடங்க செய்துவிடுவார் என்று பிரமிக்கிறார். அந்த அளவிற்கு நடிப்பில் ஆளுமை செலுத்திய மாபெரும் கலைஞனாக மார்லன் பிராண்டோ திகழ்ந்தார்.
இதையெல்லாம் தாண்டி அவர் அரசியலாக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக , அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அழுத்தமான தனது குரலை பதிவு செய்திருக்கிறார் என்ற காரணத்தினாலேயே ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள வேண்டிய , அறிந்துகொள்ள வேண்டிய பெரும் இலக்கியமாக மார்லன் பிராண்டோ வரலாற்றில் உறைந்திருக்கிறார்.
இந்த மாபெரும் கலைஞனை தனது அசாத்திய எழுத்து மூலமாக தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள அஜயன்பாலா விற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரு சுய சரிதை நூலுக்குரிய வெறும் தகவல் களஞ்சியமாக இல்லாமல் குறைகளையும் நிறைகளையும் சொல்லி ஆராய்ந்து கொள்கிற ஒரு மனிதனின் குரலாக அஜயன் பாலாவின் இந்நூல் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுமைகளைப் பற்றிய வாழ்வியல் சுயசரிதை அறிமுகங்களை தமிழில் தனி வகைமையாக எழுதி வருகிற அஜயன் பாலாவின் இந்த நூல்  தமிழ் மொழிக்கான அவரது மிகச்சிறந்த கொடை.
(மார்லன் பிராண்டோ – தன் சரிதம் தமிழில் அஜயன்பாலா எதிர் வெளியீடு ,விலை ரூ 250)
Attachments area

தற்கால மருத்துவ நல விவாதங்களும்….தமிழர் மரபு மருத்துவமும்

 

 

 

சமீப காலமாக மரபு வழி மருத்துவத்திற்கும், ஆங்கில மருத்துவத்திற்குமான முரண் உரையாடல்கள் நடந்து வருகின்றன. மரபு வழி மருத்துவம் பிற்போக்குத்தனமானது, அறிவியல் தன்மையற்ற கையாளல்   என்றும் , ஆங்கில வழி மருத்துவம் அறிவியல் பூர்வமானது என்றும் ,நவீனமானது என்றும் அவரவர் பார்வைகளுக்கேற்ப ,அரசியல்- சமூக சிந்தனைகளுக்கேற்ப ஒருவருக்கொருவர் ஊடகங்களிலும், சமூக வெளி தளங்களிலும் விவாதித்து வருகின்றனர்.  ஆங்கில மருத்துவம் தான் அகில உலகையும் காக்கவும் மீட்கவும் வந்த இறுதி மீட்பர் போல சில முற்போக்கு முட்டுச்சந்துகள் கதறுவதையும் நம்மால் கவனிக்க முடிகிறது. சிறிய சிறிய நோய்களுக்குக் கூட ஆயிரக் கணக்கில் செலவு செய்தே தீர வேண்டும் என்கிற ஆங்கில மருத்துவம் தன் முறையைத் தவிர இதர மருத்துவ முறைகளை கடுமையாக நிராகரிப்பதன் நோக்கம், அதன் வணிகமயமும், லாப நோக்கமும் தானே தவிர வேறில்லை.

மனித உடல் குறித்தும், மருத்துவம் குறித்தும் சங்க காலம் தொட்டே தீவிர விழிப்புணர்வில் தமிழ்ச்சமூகம் இருந்தது என்பதற்கான இலக்கியச் சான்றுகள் பரவலாக காணக்கிடைக்கின்றன.

அற்றால் அளவறிந் துண்அ அகுதுடம்பூ

பெற்றான் நெடிதுய்க்கு மாறு

என்கிறது மருந்து என தனி அதிகாரம் கண்ட தமிழர் மறையான திருக்குறள். அளவறிந்து உண்பது குறித்து அன்றே சிந்தித்திருக்கிற தமிழர் மரபு முழுக்க முழுக்க அறிவியல் தன்மைகளை தனது பண்பாட்டு விழுமியங்கள் மூலம் கண்டடைந்து சிறந்திருக்கிறது.

மேலும்

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து

என்கிறது குறள். அதாவது நோயுற்றவன், அந்த நோயை தன் ஆலோசனை மூலம் தீர்க்கும் மருத்துவர், மருந்து, அருகிலிருப்பவரின் அன்பும், பராமரிப்பும் இந்த நான்கும் ஒரு நோய்க்கு மருந்து என சொல்கிறது குறள். இதில் கவனமாக பார்க்க வேண்டியது நோயுற்றவனே மருந்துகளில் ஒரு வகை. என்கிறது திருக்குறள். ஒவ்வொரு மனிதனுள்ளும் இயற்கையாக இருக்கக் கூடிய நோய் எதிர்ப்பு உணர்வு, மருந்துகளை மிகச்சரியாக காலம் தவறாமல் எடுக்கக்க்கூடிய ஒழுங்கு என நோயுற்றவன் கூட மருந்தாக விளங்குகிறான் என்கிறது தமிழர் மறை.

இவ்வளவு நுட்பமாக மனித உடலை, நோயை, நோய் எதிர்ப்பு உணர்ச்சியை ஆராய்ந்திருக்கிற தமிழரின் மருத்துவ மரபை ஒரே அளவு கோலில் வைத்து பிற்போக்குத்தனமானது என பொங்கும் உளறல்களை எதிர்த்து நாம் தீவிரமாக எதிர்வினையாற்ற வேண்டிய கடமை இருக்கிறது.

ஒரு நோயாளியை கையாளுவதில் மருத்துவரின் கடமை என்ன என்பதை எளிமையாக இரண்டே வரிகளில் விளக்குகிறது தமிழர் மரபு.

நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச்செயல்

நோயை இன்னதென்று ஆராய்ந்தறிந்து, அதன் மூலக் காரணத்தை கண்டறிந்து , அந்த நோயை தணிக்கின்ற வழியையும் கண்டறிந்து, அதை உடலுக்கு பொருந்தும் படியாக மருத்துவர் மருத்துவம் அளிக்க வேண்டும் என்கிறது குறள்/

மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட

      புண்தேர் விளக்கின் தோன்றும்” (அகநானூறு-111)

என்ற சங்கப்பாடல் போர்களத்தில் காயம் பட்ட வீரனின் காயத்தின் அளவறிந்து மருத்துவம் பார்க்கிற மருத்துவ காட்சியினை விளக்குகிறது.

சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர் தம்

      உள்நீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்

      தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்

      கண்ணீர் நனைக்கும் கடுமைய காடுஎன்றாள்

(கலித் தொகை)

போர்க்களத்தில் காயம் ஏற்பட்டு உதிரப்போக்கு அதிகம் நிகழும் போது நா வறட்சி ஏற்படும் என்றும் நீர் தாகத்தால் தடுமாற்றம் ஏற்பட்டு துயரம் நேரிடும் என்றும் இக் கலித்தொகைப் பாடலில் மருத்துவ குறிப்புகள் காணப்படுகின்றன.

சித்தர் மரபு வழித் தொடங்கி, இயற்கை மருத்துவ செறிவுடன் இணைந்து தமிழர் மருத்துவம் பல சிறப்புகளைக் கொண்டது.

ஆனால் காலப் போக்கில் காணக்கிடைக்காத  அறிவுச்சுவடிகளை எல்லாம் யாகத்தில் போட வேண்டும் என ஆரியச் சதிக்கு ஆட்பட்டு தீக்கு தின்ன கொடுத்ததும் தமிழர்களே..

இன்றைய ஆங்கில மருத்துவமுறை உலக மயமாக்கலின், வணிகமயமாக்கலின் ஒரு அங்கமாக மாறிப் போய்விட்டது . இந்தியாவில் செயல்படுகிற மருத்துவர்களில் 50 % தகுதியற்ற, அடிப்படை தகுதியற்ற ,பயிற்சியற்ற மருத்துவர்கள் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஒரு எம்.பி.பி.எஸ் படிப்பு என்பது மருத்துவத்திற்கான பட்டமே ஒழிய அதுவே மருத்துவரின் தகுதியல்ல.ஒரு மருத்துவ படிப்பிற்கு தனியார் கல்லூரிகள் கோடிக்கணக்கில் வாங்கி பொருளீட்டும் இந்த வணிகச் சூழலில் தரமான மருத்துவர்கள் எவ்வாறு உருவாக முடியும் என்பதற்கு எவரிடத்திலும் பதில் இல்லை. இந்திய பெருநாட்டில் இன்றைய மாபெரும் வணிகமே மருத்துவம் தான் என்பதும், நாட்டின் மக்களை பெருங்கடனுக்கு ஆழ்த்துவதில் மருத்துவச் செலவுகளே முதலிடம் பிடிக்கின்றன என்பதும் புள்ளி விபரங்கள் காட்டுகிற அபாய சமிக்கைகள்.

குறிப்பாக உலக மயமாக்குதல் என்கிற பேராபத்து 1990-ல் தான் வேகமெடுக்க ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இந்தியாவை ஆண்டுக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் அமெரிக்கா போன்ற பன்னாட்டு வல்லரசு நாடுகளின் நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு எளிய மக்களின் உயிரில் விளையாடத் தொடங்கினார்கள்.ஊருக்கு ஊர் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள் தோன்றத் தொடங்கின. அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது கேவலம் என்றும், மீறி எடுத்தால் நோய் முற்றி இறந்து விடுவோம் என்பதுமான உளவியல் பரப்புரைகள் வலிந்து பரப்பப்பட்டன. அரசியல்வாதிகள் கூட உடல் நலம் சரியில்லை என்றால் மிகப்பெரிய மருத்துவமனைகளில் மருத்துவம் எடுத்துக் கொள்ளும் செய்திகள் திட்டமிட்டு பெரிதாக்கப்பட்டன.  மருத்துவ நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை விற்க பல்வேறு சலுகைகளை, உல்லாச சுற்றுலாக்களை, பரிசுப்பொருட்களை மருத்துவர்களுக்கு வாரி இறைக்கின்றன. பெரும்பாலான மருத்துவர்களும் இவற்றை எல்லாம் துய்ப்பதற்கு இல்லாத நோய்களுக்கு இரண்டு பக்கம் சீட்டெழுதி எதற்கெடுத்தாலும் ஸ்கேன் என்றும் பரிசோதனை என்றும் நோயாளிகளை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக கருதத்தொடங்கி விட்டார்கள்.  கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரிகிற மருத்துவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு பண இலக்கு வைத்து ,மீட்டிங் வைத்து கேள்வி கேட்கிற நிகழ்வுகளும் இயல்புகளாகி விட்டன. சந்தைப் பொருளாதாரத்தில் மனித உயிரும், அது குறித்தான அச்சமும் தான் தற்காலத்தில் நடைபெறும் வணிகத்திற்கு கச்சாப் பொருட்களாக விளங்குகின்றன.

இந்த ஆங்கில மருத்துவ கொள்ளைகளுக்கு மாற்றாக பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் , ஆங்கில மருத்துவத்தின் பரப்பும், விளம்பரமும் ,பகட்டும் மற்ற மருத்துவ முறைகளை நாடாமல் மக்களை கண்கள் கட்டிய குதிரையாய் ஓட வைத்திருக்கின்றன.

நமது பாரம்பரிய மருந்துப் பொருளான மஞ்சளுக்கு கூட காப்புரிமை நம்மிடத்தில் கிடையாது. காலங்காலமாக நாம் பயன்படுத்திய நம் பூர்வீக மருத்துவ அறிவினை இன்று ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு பலிக் கொடுத்து விட்டு சிறிய தலைவலி என்றாலும் ஸ்கேன் இயந்திரத்தில் தலைகளை நுழைத்துக் கொண்டிருக்கிறோம். காசில்லாதவர்கள் தாங்களே கல்லறையில் சென்று படுத்துக் கொள்ள வேண்டும் என்கிற  நிலையை ஆங்கில மருத்துவமும், பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் இன்று ஏற்படுத்தி இருப்பதை எவராலும் மறுக்க இயலாது.

மாற்று மருத்துவமுறைகளான ஹோமியோபதி, அக்குபஞ்சர்,சித்தா, ஆயுர்வேதிக் போன்ற முறைகளில் பல நோய்கள் குணமாவதை பல மருத்துவர்கள் வெற்றிக்கரமாக நிருபித்து இருந்தாலும் அச்செய்திகள் வெளிவராமல் மிகக் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. இச்சூழலில் மாற்று மருத்துவத்தை பயின்ற மருத்துவர்கள் கூட நோய்கள் உடனே குணமாக வேண்டும், நோயாளிகள் தங்களை விட்டு போய் விடக்கூடாது என்கிற இலாபநோக்கத்திற்கு பலியாகி ஆங்கில மருத்துவத்தை உபயோகிப்பதையும் நம்மால் காண முடிகிறது.

இந்துத்துவ மத நம்பிக்கையாளர்களும், அடிப்படைவாதிகளும் முன் வைக்கிற மூட நம்பிக்கை மருத்துவ முறைகளை போன்றதல்ல தமிழரின் மரபு மருத்துவம். காலங்காலமாய் தமிழர் தனது வாழ்வியலில் கடைப்பிடித்து அறிந்த அறிவின் செழுமை. வேத காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்கள், சிசரியன் செய்தார்கள் என்றெல்லாம் கதை கட்டி இன்று பதஞ்சலி,ஹிமாலாயா போன்ற இந்துத்துவ வணிக நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக போட்டிப் போடும் இச்சூழலில் எப்போதும் இல்லாத நெருக்கடிகளை தமிழரின் மருத்துவ மரபு எதிர்க்கொண்டுள்ளது.

ஒரு தனிநபர் யூ டியூபில் பார்த்து தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் அதிக உதிரப் போக்கினால் அப்பெண் இறந்தார் என்கிற தனிநபர் முட்டாள் தனத்தைக் கொண்டே பாரம்பரிய மரபு மருத்துவமுறைகளை தடுக்க கோருவது மிகவும் கொடுமையானது. சுகப்பிரசவத்தைக் கூட சிசரியன் பிரவசங்களாக மாற்றி மனித உயிரை மூலதனமாகக் கொண்டு பணம் பறிக்கும் கொள்ளைக் கூடங்களாக தனியார் மருத்துவமனைகள் மாறி விட்ட பின்னர்… இக்கொள்ளைகளுக்கு எதிராக எந்த சிந்தனை முளைத்தாலும் கொள்ளைக்காரர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்…?

எத்தனையோ தலைமுறைகளாக கிராம மருத்துவச்சிகளால் சுகப்பிரசவம் கண்ட நம் மரபு சார்ந்த பிரசவ முறைகள் இன்னும் ஆய்வுக்குட்படுத்தி, நவீன முறைகளுக்கேற்ப மரபு சார் மருத்துவகல்விமுறைகள் மாற்றப்பட்டு ஆங்கில அலோபதி மருத்துவ முறைகளுக்கு மாற்றாக நவீன தமிழர் மருத்துவம் எழ வேண்டும் என்பதுதான் இம்மண்ணைச்சேர்ந்த நமக்கான விருப்பாக இருக்கிறது.

ஒரு பெண் செத்து விட்டாள். இனி சுகப்பிரசவத்தையே நினைத்துப் பார்க்க கூடாது . தனியார் மருத்துவமனையில் சிசரியன் தான் செய்துக் கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கிற இந்த முற்போக்கு வெங்காயங்களுக்கு தனியாருக்கு அள்ளிக் கொடுக்க கொள்ளையடித்த கோடிகள் இருக்கலாம். ஆனால் நமக்கு..?

ஆங்கில மருத்துவம் தான் அதி உன்னதமும் இல்லை. மற்ற மாற்று மருத்துவமுறைகளில் உண்மைகள் இல்லாமலும் இல்லை. உண்மையில் பல நோய்களுக்கு அலோபதியில் மருந்தே கிடையாது. அனைத்திற்கும் ஒரு வகையான ஆண்டிபயாடிக் என அழைக்கப்படும் எதிர் உயிரி மருந்துகளை வைத்துக் கொண்டு எளிய மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஆங்கில மருத்துவ முறைகளுக்கு மாற்றாக மாற்று மருத்துவ முறைகளும் உருவாக வேண்டும்.

பேரா. அ.மார்க்ஸ் எழுதிய மருத்துவ நல சிந்தனைகள் என்ற ஒரு நூல் இருக்கிறது. ஆங்கில மருத்துவ நிறுவனங்களின் கொள்ளை மற்றும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அலோபதி மருந்துகள் (பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை ) எத்தகைய கொடும் விளைவுகளை ஏற்படுத்தும், இம் மருந்துகள் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன என்பது குறித்து எழுதப்பட்ட விரிவான நூலை அனைவரும் வாசிக்க வேண்டும். அதே போல மருத்துவர் கு.சிவராமன் மற்றும் ம. செந்தமிழன் மரபு மருத்துவ சிந்தனைகள் குறித்த பல்வேறு முக்கியமான கட்டுரைகளை,நூல்களை எழுதி வருகிறார்கள். மருத்துவத்திற்கும், உணவிற்கும் உள்ள நெருங்குய தொடர்பை உணவு யுத்தம் என்கிற நூலில் விரிவாக எழுத்தாளர். எஸ்.இராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

எந்த ஆங்கில மருத்துவ நிறுவனமாவது தன் மாத்திரை,மருந்துகள் தயாரிக்கிற உற்பத்தி விலையை வெளிப்படையாக அறிவிக்குமா என்கிற கேள்வியில் இருக்கிறது ஆங்கில மருத்துவமுறையின் வணிகக் கொடூரம்.

நவீன காலத்தில் மருத்துவ நல சிந்தனைகள் மேலோங்கி இருக்கின்றன.அலோபதி மருத்துவமுறையின் பணம் பிடுங்கும் கொள்ளை, அம்மருத்துவ முறையின் பின் விளைவுகள் ஆகியவற்றை கண்டு,அனுபவித்த மக்கள் பாரம்பர்ய,இயற்கை மருத்துவ முறைகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளார்கள். மீண்டும் தங்களை மரபு சார் வாழ்வியல் முறைகளுக்கு ஆட்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். இவ்வித மாற்றங்களே ஆங்கில மருத்துவத்தை மூலதனமாகக் கொண்டு கொள்ளையடித்து வரும் கொள்ளைக் கூட்டத்திற்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஆங்கில மருத்துவ முறை மேற்கொள்ளும் மருத்துவர்களிலும் நேர்மையான மருத்துவ சிந்தனையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சளி பிடிக்கிறது என்று போனால் வீட்டில் மிளகு ரசம் வைத்து குடி என சொல்லும் சில அலோபதி மருத்துவர்களும் இருக்கிறார்கள். எனது குடும்ப மருத்துவர் ஆண்டிபயாடிக் மருந்துகளை எனக்கு எப்போதும் எழுதி தர மறுப்பார். காய்ச்சலா ..அது நான்கு நாளைக்கு இருக்கும். குணமாகி விடும், இது மாத்திரையா என கேட்பார். ஆனால் இப்படி உள்ளோர் மிகச்சிலர் தான் என்பதுதான் வேதனைக்கரமான உண்மை.

தற்காலத்தில் அலோபதி, ஹோமியோபதி,சித்தா, ஆயுர்வேதிக், உணவு முறைகள், உடற்பயிற்சி என பல்வேறு மருத்துவ முறைமைகள் இணைந்த கூட்டு மருத்துவ முறைகளே பயனளிக்கிறது என சமீபத்திய மருத்துவ நல சிந்தனைகள் வெளிப்படுத்தி வருகின்றன.

எனவே அலோபதி ஆங்கில மருத்துவம் தான் அனைத்திற்குமான தீர்வு என கதறும் முற்போக்கு அறிவுசீவிகளை இடது கையால் ஒதுக்கித்தள்ளி விட்டு, பல்வேறு மாற்று மருத்துவமுறைமைகளின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். மேலும் பாரம்பரிய தமிழர் மரபு சார்ந்த மருத்துவ முறைகள் குறித்து ஆராய அரசே ஆய்வகங்களை உருவாக்கி, நம் மரபு சார்ந்த மருத்துவத்தை மீண்டும் செழுமைப்படுத்திட வேண்டும்.

ஆம் ..இதையெல்லாம் யார் செய்வது.. எது செய்யும்..

இம்மண்ணை, இம்மக்களை நேசிக்கக்கூடிய ஒரு மண்ணின் மகனிடத்து அதிகாரங்கள் ஒரு நாள் கிடைக்கும் பொழுது..மக்களின் துயர்களுக்கு மாபெரும் விடுதலைப் பொழுது துளிர்க்கும்.

இ.த.ச பிரிவு 377 நீக்கம்- தேவைப்படும் சில புரிதல்கள்..

இன்றைய தினம் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களை விடுவிக்க அதிகாரம் தமிழக அரசுக்கு பிரிவு 161 ன் வாயிலாக உண்டு என்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.

மற்றொன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 யை ரத்து செய்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. 1860 ஆம் ஆண்டு மெக்காலே பிரபு அந்த கால சூழலுக்கு ஏற்ப இங்கிலாந்து ராணி குடும்ப விசுவாசத்திற்கு உட்பட்டு இங்கிலாந்து நாட்டின் அதிகாரம் ஆட்சி செய்யும் நிலங்களில் நீக்கமற பரவ வேண்டும் என்ற நோக்கத்தோடு இயற்றப்பட்ட மிகப் பிற்போக்குத்தனமான சட்டம் தான் இந்திய தண்டனை சட்டம். இந்த சட்டம் காலப்போக்கில் ஏற்பட்ட பல மாறுதல்களை உள்வாங்கி பல திருத்தங்களை கண்டு வருகிறது. ஆனாலும் நீண்ட நெடிய நாட்களாக பிரிவு 377 யை தடை செய்யக் கோரும் போராட்டங்கள் இந்திய அறிவுலக சமூகத்தினராலும் ,முற்போக்குச் சிந்தனையாளர்களாலும்,மாற்று பாலினத்தவர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 என்ன சொல்கிறது என்பதை நாம் ஆழமாக கவனிக்க வேண்டும்.

அது இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யும் சட்டமாக மேலோட்டமாக கருதப்பட்டாலும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகக் கொடுமையானவை. இதன்படி மாற்றுப் பாலினத்தவர்கள் இணைந்து வாழ முடியாத நிலைமையும், மாற்று பாலினத்தவரோடு பிறர் இணைந்து வாழ முடியாத நிலைமையும் நீடிக்கிறது. மேலும் சாதாரண மனிதர்களின் சில பாலுறவு முறைமைகளையும் இது தடை செய்கிறது. பாலுறவு தேர்வு என்பது தகுதி வாய்ந்த வயதையும் , விருப்பத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர இந்திய தண்டனைச் சட்டத்தின் பக்கங்களில் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக பிரிவு 377 யை எதிர்த்து போராடி வருகிற முற்போக்காளர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களின் கருத்து.

மேலும் ஒரே பாலின திருமண முறையான தன்பாலின உறவு திருமணத்துக்கு இதுவரை 25-க்கும் மேலான நாடுகள் அனுமதி அளித்துள்ளன. குறிப்பாக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், பின்லாந்த், பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பெர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா, உருகுவே போன்ற நாடுகள் அனுமதி அளித்துள்ளன.இந்நிலையில் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

இப்பிரிவின் கீழ் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்ற மாற்று
பாலினச் சொந்தங்கள். காலம் காலமாக அவர்கள் மீது சுமத்தப்படுகிற இழிவிற்கும், நிகழ்த்தப்படுகிற அடக்குமுறைகளுக்கும் இன்றைய தினம் ஒரு விடிவு பிறந்திருக்கிறது என்றே கொள்ளலாம்.

இந்த பிற்போக்குத் சட்டப்பிரிவை கொண்டுவந்த இங்கிலாந்து அரசு கூட பிரிவு 377 யை 60 களிலேயே திரும்பப் பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்ளிட்ட மத ஆதிக்கங்கள் உடைய சில நாடுகளில் மட்டுமே இச் சட்டம் போன்ற சில பிரிவுகள் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தை எழுதிய மெக்காலே மத நம்பிக்கைகள் அதிகம் உடைய இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக விசுவாசமானவர். அவர் கடவுளின் விருப்பத்திற்கு மாறானது என மத நம்பிக்கைகளை சார்ந்து இப்பிரிவை ஏற்படுத்தினார்.அதனாலேயே மத நிறுவனங்கள்,மத ஆதரவு அமைப்புகள் போன்றவை பிரிவு 377 யை தடை செய்ய எதிராக இருக்கின்றன. இதில் இந்து,கிருத்துவம், இஸ்லாம் என்றெல்லாம் பேதமில்லை.

ஆனால் நவீன உலகில் ஒடுக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஆதரவாக பல உரிமைக் குரல்கள் எழுந்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி கூட சென்ற முறை சட்டமன்றத் தேர்தலில் திருநங்கை ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்து வரலாற்றின் பொன்னேடுகளில் தன் பெயரை பதித்துக் கொண்டது.மேலும் தன் உறுப்பினர் சேர்க்கையில் ஆண்/பெண் என்பதோடு மட்டும் நில்லாமல் மூன்றாம் பாலினத்திற்கும் உரிய இடத்தை நாம் தமிழர் கட்சி வழங்கி இருக்கிறது.

பிரிவு 377 என்பது ஓரினச்சேர்க்கையை தடை செய்த சட்டம். அது நீக்கப்பட்டு விட்டதால் இனி நாடு முழுக்க ஓரினச்சேர்க்கை பரவும் என்பதான விடலைத் தன சிந்தனைப் பதிவுகளை நம்மால் காண முடிகிறது. சமூக தளங்களில், கல்வியறிவு கொண்ட மட்டங்களில் கூட மாற்றுப் பாலினம் அல்லது மூன்றாம் பாலினம் குறித்து இன்னும் பிற்போக்குத் தனமான சிந்தனைகள் நிலவுவது வேதனையானது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நாஸ் பவுண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடுத்த மனுவின் அடிப்படையில் நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய இந்திய அரசியலமைப்பு சட்ட அமர்வு பிரிவு 377 யை தடைசெய்து இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அவமானத்திலும், இழிவிலும் ,கூனிக் குறுகி நின்று ..கூனிக்குறுகி ..இத்தனை ஆண்டு காலம் பிச்சை எடுத்து ,பாலியல் தொழில் செய்து ..காவல்துறைக்கு கப்பம் கட்டி.. இழிபிறவிகளாக கேலி செய்ய படுபவர்களாக நடத்தப்படும் மாற்றுப் பாலின உறவுகளின் வாழ்வில் இத்தீர்ப்பு புதிய நம்பிக்கைகளை உண்டாக்கி இருக்கிறது. வலியும்,மானக்கேடும் இல்லாத ஒரு சகதர்ம வாழ்வு அவர்களுக்கு அமையட்டும்.

வாழ்த்துகள்.

செங்கொடி… தீயில் உறைந்திருக்கும் கனவு.

 

 

ஜன்னல்களை கடந்து நான் நகரும்போது …
என் அரவம் கேட்டு
கண்களை உயர்த்தி
கேட்கிறார்கள்..
“நான் கடலைச் சென்று அடைவது எப்படி..?”

அப்போது
கடலின் நட்சத்திர எதிரொலிகளை .. நுரையின் சிதறல்களை..
மணற் சுழல்களின் சிதறலை..‌
பின்னொதுங்கும் உப்பின் முனகலை ….
கரையில் ஒதுங்கும் கடற்பறவைகளின் கூக்குரலை…
எதுவும் பேசாமல் ஒலிபரப்புவேன்.

அவ்வாறு என்னில் ஊடே..‌
சுதந்திரமும் கடலும்
மூடப்பட்ட இதயத்திற்கு
பதில் அளிக்கும்.

-பாப்லோ நெருடா (தமிழில் சுகுமாரன்)

நிறமற்ற பல நிறங்களின் அடர்த்தியே இருட்டு. அதுவும் சிறைச்சாலை கொண்டிருக்கின்ற இருட்டு இன்னும் தனித்துவமானது. பகலிலும் சூழ்ந்திருக்கும் இருட்டு. விழிகளிலும் படர்ந்திருக்கும் இருட்டு. அடைப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனதிலும் அடி ஆழ ஏக்கமாய்.. விடுதலை விம்மலாய் விரிந்திருக்கும் இருட்டு. அந்த இருட்டு ஒரு திரவம் போன்றது. ஏறக்குறைய பாதரசம் போல. சிறைபட்டு கிடக்கின்ற அவர்களின் உடலில் அந்த இருட்டு கொடிய அமில மழையாய் தூறிக் கொண்டு இருக்கின்ற வடிவம் கொண்டது.

சிறையின் நோக்கம் குற்றம் செய்தவர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தி தடுத்து வைப்பதல்ல. மாறாக அவர்களை உளவியலாக சிதைப்பது .நீ சமூகத்திற்கான மனிதன் இல்லை என்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொண்டே இருப்பது. நீ உயிருள்ள பிணம். உனக்கென்று உணர்ச்சிகளோ எண்ணங்களோ இல்லை என்று அடைப்பட்டு கிடப்பவரின் ஆன்மாவில் சதா அலறிக் கொண்டே இருப்பது.

உடையிலிருந்து ..உணவிலிலிருந்து ..
இயல்பான பழக்கவழக்கங்களில் இருந்து.. ஒரு மனிதனை அப்புறப்படுத்தி நீ அதிகார கரங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு கைதி ஒரு அடிமை என அவருக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பது.

இன்னமும் ஜனநாயக முறைமைகளுக்கு உட்படாத இந்திய சிறைச்சாலைகள் சர்வாதிகாரத்தின் வடிவமாக ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மிச்சமாக இருக்கின்றன. வெட்டவெளி வானத்தையும்.. எப்போதாவது வீசி தழுவி பார்க்கும் காற்றையும் மட்டுமே அனுமதிக்கின்ற சிறை வளாகங்கள் சிறைப்பட்டவரின் கனவினை காயப்படுத்தும் கத்தி முனைகளாக இருந்து வருகின்றன.

27 வருடங்கள். ஒரு முடிவடையாத வழக்கு. செய்யாத குற்றம். ஆதாரங்களை புறக்கணித்த தண்டனை. இன்னும் முழுமையான உண்மை வெளிவராத சூழல். தண்டனை அளித்த நீதிபதிகளுக்குள்ளாகவே மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருக்கிற விசித்திரம். இதுதான் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு.

“அடி தளரும்போது ..
பேச்சு தடுமாறும்போது..
மனம் கஷ்டத்தை விழுங்குகிறது.
மௌனம் இருப்பாகிறது.”

(சிறைப்பட்ட கற்பனை என்ற நூலில் வரவர ராவ்))

அப்படி மௌனத்தையே இருப்பாக.. மன வலியையே உடையாக.. எதிர்காலம் குறித்த ஏக்கத்தையே வாழ்வியல் இயக்கமாக 27 வருடங்களாக கொண்டிருக்கின்ற ஏழு தமிழர்களின் விடுதலை தமிழர்களின் கையாலாகாத காரணத்தினால் இன்னும் கானல்நீராகவே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

உலகில் வேறு எந்த இனத்திற்கும் நேராத துயரம். இதை ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி தான் நமது தாய் மண் முற்று முதலுமாக அழிக்கப்பட்டது. இதே ராஜீவ்காந்தி கொலையை காரணமாக காட்டிதான் நம் உடன் பிறந்தார் லட்சக்கணக்கில் கொலை செய்யப்பட்டு
உயிர் துறக்கும் போது நம் உதடுகள் கூட அசையாமல் கவனமாக கண்காணிக்கப்பட்டு ..தடை செய்யப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை தமிழர்கள் மீது கவிழ்ந்து இருக்கிற குற்ற உணர்வாக இந்திய அரசு கட்டமைத்து வருகிறது. எந்த உரிமைக்கு குரல் எழுப்பினாலும் நீங்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் என்று ஏகாதிபத்தியத்தின் விரல்கள் நம்மை நோக்கி நீண்டு கொண்டிருக்கின்றன. எவ்வளவு மனித உரிமைகள் பேசுகிறவர்கள் மனித உரிமைகளுக்காக போராடுபவர்கள் ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு 28 வருடங்களாக சிறைபட்டு கிடைக்கின்ற அந்த ஏழு தமிழர்களைப் பற்றி பேச மறுக்கிறார்கள். இன்னமும் நம் தமிழ்நாட்டிலேயே கூட ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு விடுதலை கேட்கிறார்கள் என்றெல்லாம் குரல்கள் எழுவதை நம்மால் வேதனையுடன் கவனிக்க முடிகிறது.

ஏனெனில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது மிக நுட்பமாக கட்டமைக்கப்பட்ட ஒரு பெரும் கதை. கதை எழுதி அவர்களே கதைக்கான கதாபாத்திரங்களை உருவாக்கினார்கள் . கதைக்கான வில்லன்களை தயார் செய்தார்கள் . வில்லன்களாக சித்தரிக்கப்பட்டவர்களுக்கு அவர்களே தண்டனையும் வழங்கினார்கள். இந்தப் பெரும் கதையை புனைவு செய்யப்பட்ட காட்சியை நம்பியே தீர வேண்டுமென நாம் அனைவரும் கட்டாயப்படுத்தப்பட்டு இறுதியில் நம்பியும் இருக்கிறோம்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரிகளான கார்த்திகேயன் ரகோத்தமன் ஆகியோர் எழுதிய நூல்களிலேயே ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு நிற்கின்ற விசித்திரமான காட்சியை நாம் பார்க்கிறோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தடா சட்டம் இவ்வழக்கிற்கு பொருந்தாது என்றும் ராஜீவ் காந்தி கொலை என்பது தனிப்பட்ட பகையின் காரணத்தால் ஏற்பட்ட கொலையே தவிர அது பயங்கரவாத செயல் இல்லை என்றும் ராஜீவ் கொலை இந்திய நாட்டிற்கு இந்திய மக்களுக்கு எதிரானது இல்லை என்றும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கினை உச்சநீதிமன்றத்தில் விசாரித்த நீதியரசர்களான வாத்வா மற்றும் தாமஸ் ஆகியோர் இடையே தீர்ப்புரையில் பெரும் முரண்கள் இருந்ததை இந்திய நீதி சமூகமும் சட்ட வல்லுனர்களும் கவனிக்காதது போல கள்ள மௌனம் காத்தது இந்த வழக்கில் நிகழ்ந்திருக்கிற இன்னொரு கொடுமை.

பூந்தமல்லி தடா நீதிமன்றம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்க 26 தமிழர்களுக்கும் தூக்கு தண்டனை அளித்தது. இந்தத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் இன்று சதைப்பற்று இருக்கிற 7 தமிழர்களை தவிர மற்ற 19 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை இவர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் இவர்கள் யாரும் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. உதவி செய்தவர்கள் மட்டுமே அந்த உதவிக்கான தண்டனையும் கூட இவர்கள் ஏற்கனவே அனுபவித்து விட்டார்கள் என்று தெளிவாக அறிவித்தது.

ஆனால் இதில் என்ன மாபெரும் கொடுமை என்றால்.. இப்போது சிறைபட்டிருக்கிற ஏழு தமிழர்களும் கூட கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அதற்கான ஆதாரமும் யாரிடத்திலும் இல்லை. வழக்கை ஜோடித்த சிபிஐ கூட இன்று சிறைபட்டு இருக்கிற இந்த ஏழு தமிழர்கள் ராஜீவ் கொலையில் நேரடியாக தொடர்பு கொண்டதற்கான ஒழுங்கான சாட்சியம் எதையும் முன்வைக்கவில்லை. பிறழ் சாட்சிகள், முரண் ஆதாரங்கள் ,கவனக்குறைவான வாக்குமூலங்கள், என்றெல்லாம் மிக தகுதிகுறைவான ஒரு வழக்கை சிபிஐ தாக்கல் செய்து இன்று ஏழு தமிழர்கள் வாழ்வினை முடக்கிப் போட்டு வைத்திருக்கிறது.

காவல்துறையின் பிடியில் இருக்கக்கூடிய ஒருவர் அளிக்கும் வாக்குமூலத்தை நீதிமன்ற சாட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என இந்திய சாட்சிய சட்டம் தெளிவாக கூறுகிறது. ஆனால் இவ்வழக்கிலோ காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான அடி உதை களுக்கு நடுவே பெறப்பட்ட வாக்குமூலங்கள் தான் இவ்வழக்கின் அடிப்படை ஆதாரங்களாக பயன்படுத்தப்பட்டன ‌.

இதுவரை இந்திய நீதி முறைமை கொண்டிருந்த அனைத்து மரபுகளையும் இந்த வழக்கு காற்றில் பறக்க வைத்தது. செத்துப் போனவன் யாரோ ..சிக்கியவனை சிறைப்படுத்து என்பதுபோல ஏதோ காரணங்களால் சிக்கியவர்களை 27 வருடங்களாக அநியாயமாக சிறைபடுத்தி வைத்திருப்பது என்பது ஒட்டுமொத்த மானுட தன்மைகளுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கிற பெரும் கொடுமை.

27 வருடங்களை இந்த மனிதர்கள் எவ்வாறு கடந்திருப்பார்கள் என்று நினைக்கும் போது .. நம்மால் வேதனை படாமலும்.. அதேசமயம் நம்பிக்கை கொண்ட குறிப்பாக தமிழர்கள் மீது தமிழர்களின் போராட்ட உணர்வின் மீது நம்பிக்கை கொண்ட அவர்களின் மன உரம் குறித்து நம்மால் வியக்காமலும் இருக்க முடியாது.

நான் அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான விடுதலைக்கு விலங்கு எழுதியபோது சிறையில் அவரை சந்தித்து பல மணி நேரம் பேசிக்கொண்டிருக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரோடு அண்ணன் பேரறிவாளனும் வருவார். இருவரும் இணைந்து அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களை ,புன்னகை தவழும் முகங்களோடு.. ஆழமான சொற்களோடு .. ஏதோ கிண்டலாக பேசுவது போல துயரத்தையும் நகைச்சுவையாக மாற்றி என் தோளில் கை போட்டவாறே கதைசொல்லி முடிப்பார்கள். கேட்கும் நமது விழிகள்தான் கலங்குமே ஒழிய, அவர்கள் விழிகள் எவ்வித உணர்வுமற்று.. சலனமற்று அமைதியாக இருக்கும்.

ஏனெனில் அவர்கள் அழுவதற்கு இனி அவர்களது கண்களில் கண்ணீரும் இல்லை . உள்ளுக்குள் ஊறிக்கொண்டிருக்கும் சோகத்தை வார்த்தைகளில் வடித்தெடுக்க அவர்களுக்கு வலிமையும் இல்லை.

அண்ணன்கள் முருகன் சாந்தன் ஜெயக்குமார் ஆகியோரோடு நான் மிக நெருக்கமாக பழகியிருக்கிறேன். அண்ணன் ரவிச்சந்திரன் மதுரை சிறையில் இருப்பதாலும் ,அண்ணி நளினி அவர்கள் மகளிர் சிறையில் இருப்பதாலும் பார்க்க வாய்ப்பில்லாமல் போனது.

குறிப்பாக அண்ணன்கள் ராபர்ட் பயஸ் மற்றும் பேரறிவாளன் ஆகிய இருவரும் என் குடும்பத்தின் உறுப்பினர்களாக மாறிப் போனவர்கள். எம் அம்மா அற்புதம் அவர்கள் தன் மகனை மீட்க வயதான தன் கால்களால் நடந்து நடந்து..அடைக்கப்பட்டிருக்கிற கதவுகளை எல்லாம் தட்டி தட்டி ..எங்கெங்கெல்லாம் விடுதலைக்கான குரல்கள் எழும்புகிறதோ அங்கெங்கல்லாம் ஓடிப்போய் உடன் நின்று சோர்ந்தவர். தனது வயதான காலத்திலாவது தனது ஒரே மகன் வீடு திரும்ப மாட்டானா என்று அழைப்பு மணியை ஏங்கி பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்த தாயின் கண்ணீருக்கு இங்கு எவரிடத்திலும் பதில் இல்லை.

அண்ணன் ராபர்ட் பயஸ் மிகுந்த மனவலிமை கொண்டவர். எதையும் புன்னகையால் வென்று விட முடியும் என்று நம்புகிறவர். அவர் கட்டி அணைக்கும் போதே தெரியும் அவர் பேரன்பின் முகவரி என.. என் தம்பி இடும்பாவனம் கார்த்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அண்ணன் இராபர்ட் பயஸையும், அண்ணன் பேரறிவாளனையும் பார்க்க நான் சென்ற போது…அப்பொழுதுகளில் மிக இளையவனான தம்பி கார்த்தியை அண்ணன்கள் வயசும் பேரறிவாளனும் செழுமைப்படுத்திக் கொண்டே இருந்ததை என்னால் கண்ணால் காணமுடிந்தது. சிறை மீண்டு வந்த தம்பியும் அதைத்தான் பிரதிபலித்து கொண்டிருக்கிறான்.

ஆகச் சிறந்த மனிதர்கள். விடுதலையாகி வெளியே இருந்தால் நாட்டை வழி நடத்தும் திறன் கொண்ட தலைவர்கள். அண்ணன் பேரறிவாளன் பெயருக்கு ஏற்றாற் போல மிகுந்த வாசிப்பறிவு கொண்டவர். பயஸ் அண்ணன் சிறை வளாகத்தில் புறா வளர்த்து ஓவியங்கள் வரையக்கூடிய மயிலிறகு மனது கொண்ட கலைஞன்.

இப்படி ஒவ்வொருவரும் தனித் திறன்கள் கொண்ட தனிப்பெரும் ஆளுமையாக திகழ்பவர்கள். ஆனால் காலம் அவ்வளவு கருணையானதல்ல. வாழ்வு ஒன்றும் வசந்த பூக்களால் நிரம்பிய பூக்கூடை அல்ல. பெரும் சாபமே கொண்ட ஆழ்கிணறு என்பதனை அவர்களது 27 வருட சிறை வாழ்க்கை உணர்த்துகிறது.

அவர்கள் பட்டிருக்கும் சிறை என்பது தமிழ்த் தேசிய இனம் பட்டிருக்கும் கடன். நம் ஒவ்வொருவரின் மீது சுமத்தப்படுகின்ற சுமை. உறக்கத்தின் போது கூட நம் கனவிலும் நம்மை வெறிநாய் போல துரத்துகின்ற கொடும் நினைவு.

அவர்களைச் சந்தித்த பிறகு மகிழ்ச்சியான பொழுதுகளில் கூட குற்ற உணர்வோடு நான் இற்றுதான் போய் இருக்கிறேனே ஒழிய… இயல்பானவனாக இருந்ததில்லை.

இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம். இருக்கிறது.

அதை உணர்ந்துதான் தங்கை செங்கொடி தீக்குளித்தாள். உடன் பிறந்த அண்ணன்கள் எவ்வித ஆதரவும் மற்றும் தூக்கில் தொங்க விடக்கூடாது.‌ நீதி செத்து விடக்கூடாது… அநியாயமாக கைது செய்யப்பட்ட 7 தமிழர்களுக்கு ஆதரவாக 12 கோடி தமிழ்த்தேசிய இனத்தில் ஒருவர் கூட இல்லை என்ற பழிச்சொல் இந்த இனத்தின் மீது விழுந்து விடக்கூடாது என்ற பரிதவிப்பில் தான் எம் தங்கை செங்கொடி தீக்குளித்தாள். அவள் காலம் காலமாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறாள். விடுதலை என்ற கனவு நிறைவாகும் வரை அவள் எரிந்து கொண்டுதான் இருக்கிறாள். அவள் எரியும் தீயில் உறைகிறது விடுதலைக் கனவு.

ஒரு ராஜீவ் காந்தி இறந்தற்காக இன்னும் எத்தனை தமிழச்சி தாலி அறுக்க வேண்டும் ..???
இன்னும் எத்தனை தமிழர் கொல்லப்பட வேண்டும்..???
ஈழம் போல இன்னும் எத்தனை தேசங்கள் அழிய வேண்டும்..???
இன்னும் எத்தனை விழிகள் கண்ணீர் விட வேண்டும்..???

உண்மையான குற்றவாளிகளை உலகத்திலே உலவ விட்டு விட்டு.. தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்தினால்.. ஏழு தமிழர்கள் அநியாயமாகச் அடைபட்டுக் கிடப்பது என்பது ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் மீது விடுக்கப்பட்டிருக்கிற சவால்.

இதை உணர்ந்துதான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 7 தமிழர் விடுதலையில் உறுதியாக நின்றார். காரியங்களை நகர்த்தினார். அவரது வழியில் ஆட்சி செய்வதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி உண்மையில் ஜெயலலிதாவுக்கு கட்ட வேண்டியது மணிமண்டபம் அல்ல ….அவரது பெரும் கனவான 7 தமிழர் விடுதலையை சாத்தியப்படுத்துவது.

7 தமிழர் அடைப்பட்டு இருக்கின்ற ஒவ்வொரு நொடியும் தமிழர்களின் இயலாமை உலகிற்கு உரத்த குரலில் அறிவிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

இனத்தின் பெருங்கடன் 7 தமிழர் விடுதலை.

கடனை அடைக்க களத்தில் கூடுவோம்.

ஏழு தமிழர் விடுதலையே.. இனத்தின் விடுதலை.

தங்கை செங்கொடிக்கு வீரவணக்கம்.

கடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.

 

கால்கள் இழந்தும் கண்,கைகள் சிதைவடைந்தும்

சித்தம் குழம்பிப்போய்

சிரித்தும் அழுதுக் கொண்டும்

ஊனமாய் போய்விட்ட ஒரு பெரும் சமுதாயம்

கத்தி அழுதபடி

காரிருளில் அங்குமிங்கும்

வாழ்ந்த மண்ணை

வாயினிலும் தலையினிலும் அள்ளி எறிந்து

ஆவிகளாய் அலைந்தபடி.

ஒப்பாரி வைக்கின்ற ஓலத்தை

என் வாழ்வில் எப்படிதான் நான் மறப்பேன்.

என் சகியே..

                          -திரு.

எனக்கு முன்னால் அமர்ந்திருந்த சரவணன் தலைகவிழ்ந்து அமைதியாய் இருந்தார். என்ன.. என்று தளர்ந்த குரலில் கேட்டேன். நிமிர்ந்த சரவணனின் கண்கள் கலங்கி இருந்தன. கவிஞரை இரண்டு நாளா காணோம் ..என்றார்.

எங்கே போனாருன்னு தெரியல ..

எங்களால் கவிஞர் என அழைக்கப்பட்ட விழியன் என்னும் அந்த நண்பனின் முகம் ஒரு நொடி கண் முன் தோன்றி மறைந்தது இன்னும் பதட்டமாக இருந்தது.

ஏன்..ஏதாவது பிரச்சனையா ..

 இல்ல.. அவரு கொஞ்சம் நாளா தூங்கல..பத்திரிக்கையில வர்ற செய்திகள பாத்துட்டு நிறைய குடிக்க ஆரம்பிச்சிட்டாரு..திடீரென இப்ப காணோம்.

செய்தி சொல்லிக் கொண்டிருந்த சரவணனுக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

நல்ல வேளை அவரால காணாம போக முடிஞ்சது.. இல்ல சரவணன்..என்ற என் பதிலை அவரும் எதிர்பார்த்திருப்பார் போல..

தலையை மீண்டும் கவிழ்ந்துக் கொண்டார்.உரையாடல்கள் எதுவும் அற்ற ,சொற்கள் தீர்ந்த மனிதர்கள் இருவரும் அந்த அறையில் ஏறக்குறைய உறைந்த நிலையில் அமர்ந்திருந்தோம்.

எங்களுக்குத் தெரியும். எங்களைப் போல பலரும் அப்படித்தான் அந்நேரத்தில் உறைந்திருந்தார்கள் என..

.

அந்த அலைபேசி இலக்கத்தை கண்டாலே மனதிற்குள் பதட்டம் வந்து சேர்ந்துக் கொள்கிறது. வெளிநாட்டு எண். பேசுபவர் அயல் மண்ணான அமெரிக்காவில் இருந்து புதிது புதிதாக ஈழ யுத்தச் செய்திகளை சொல்லும் எனது நண்பர் பாக்கியராசன். கடந்த சில நாட்களாக எதுவும் பேசவில்லை. இப்படி பேசாமல் அவர் எப்போதும் இருந்ததில்லை. இது புதிது. இப்படி பேசாமல் இருந்தது கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது. ஏனென்றால் அப்போது எல்லாமும் முடிந்திருந்தது. நீண்ட தயக்கத்திற்கு பிறகு அழைப்பினை எடுத்தேன்.

சொல்லுங்க தல..

எதிர்முனையில் நீண்ட மெளனம்.

தல..

ம்ம்ம்..

என்னங்க..

ஒண்ணுமில்ல..

அமெரிக்காவில் இருந்து அலைபேசியில் அழைப்பவரிடத்தில் என்ன என்று கேட்டால் ஒன்றுமில்லை என்கிற பதிலைப் பெறுவது சற்று விசித்திரமானது என்றாலும் எனக்கு ஆச்சர்யமானது இல்லை. கிளிநொச்சி வீழ்ந்த போது கூட இயக்கம் பெரிய திட்டம் வைத்துள்ளது என்கிற நம்பிக்கையை என்னுள் விதைத்தவர் அவர். தற்போது சொற்களற்ற மனிதராய்.. ஏறக்குறைய சலனமற்ற மெளனத்தைப் போர்த்திக் கொண்ட மனிதராய் உலர்ந்துப் போனார்.

தோத்துட்டோம் தல. என்று அவர் தழுத்தழுத்த குரலில் சொல்லி முடிப்பதற்கு முன்னரே நான் இங்கே அழுது விட்டேன். செத்துட்டோம் தல என்று சொல்லியவாறே அந்த அழைப்பை துண்டித்தார். இனி அவரிடம் பகிர எந்த செய்திகளும் இல்லை.

எங்களுக்குத் தெரியும். எங்களைப் போல பலரும் அப்படித்தான் அந்நேரத்தில் உறைந்திருந்தார்கள் என..

.

ஈழத் தாயகத்தை இழந்ததும், அந்த விடுதலைப்போரில் நாம் தோற்றதும் வெறும் சரித்திர நிகழ்வுகள் அல்ல. அத் தோல்வி ஒரு வரலாற்றுச் சம்பவமல்ல. அந்த இழப்பு தாயகத் தமிழகத்தில் வாழ்ந்து வந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஆழ்ந்த உளவியல் காயம். அத் தோல்வி மாறவே மாறாத குற்ற உணர்ச்சி. ஒரு வகையிலான வலியும், கழிவிரக்கமும் நிரம்பிய உளவியல். அந்நாட்களில் ஒரு முத்துக்குமார் எரிந்து இறந்துப் போனான். பல முத்துக்குமார்கள் இறக்கமுடியாமல் அனுதினமும் எரிந்துக் கொண்டிருந்தார்கள்.

.

எதிரே நடந்து வருபவர்களைக் கூட ஏறெடுத்துப் பார்க்க இயலா காயத்தினை..முகத்தில் ஏற்பட்ட வடுவாய் ஈழத்தின் அழிவு உணர்வுள்ள ஒவ்வொரு தமிழின இளைஞனின் இதயத்திலும் ஆழமாய் ஏற்படுத்தி சென்று இருக்கிறது. 2009 மே மாதத்தில் விடுதலைப்புலிகள் பெரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்த போது ..அந்த பின்னடைவை வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருந்த கூட வேலைப் பார்த்த ஒரு சிங்களனை கொல்லத்தோணுகிறது என சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிற என் தம்பி ஒருவன் வெறித்தனமாக என்னிடம் அலைபேசியில் கதறியது இன்னமும் காதில் ஒலிக்கிறது. ஆம்..உலகம் முழுக்க தமிழின இளைஞர்கள் புலிகளின் பின்னடைவை தங்களது தோல்வியாக கருதி தங்கள் ஆன்மாவை காயங்களால் நிறைத்துக் கொண்டார்கள்.
கண்கள் சிவந்து..கை கால்கள் நடுங்கி..எங்கே அழுது விடுவோமா என்றெல்லாம் அஞ்சி..இனி வாழ முடியுமா என்றெல்லாம் மயங்கி ..தன்னிலை மறந்து ஒரு நாட்டினை அழியக் கொடுத்தோமே என்கிற குற்ற உணர்வில் சவமாய் திரிந்த நாட்கள் அவை.  தலைவரின் உடம்புப் போல ஒன்றை தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள் என்ற செய்தி வந்தவுடன் குலை நடுங்கி ..இது வரை கொண்ட நம்பிக்கைகள் நட்டாற்றில் போனது போல நா குழறி..உடல் வியர்த்து ..நினைவற்று கிடந்த அந்த கோர நாட்களின் துயர் நினைவுகளை இன்று நினைத்தாலும் உள்ளம் வலிக்கிறது.  அது ஒரு நம்ப முடியாத முடிவு. ஆம். நம்ப முடியாத முடிவு.

.

ஏனெனில் ஈழத்தின் போர் வரலாறு நம்பவே முடியாத விசித்திரங்களைக் கொண்டது. ஆசியாவின் பெரும் வல்லாதிக்க நாடான இந்தியாவின் அமைதிப்படையை தோற்கடித்து ஒரு மாபெரும் தேசத்தை விடுதலைப்புலிகள் உருவாக்கி இருந்தார்கள்.  பல சாகசங்களை, பல வெற்றிகளை நம்பவே முடியாத அளவிற்கு பெற்று எதிலும் இருந்து மீண்டு வருவார்கள் என்கிற பொது உளவியலை தாயகத் தமிழர்களிடையே ஏற்படுத்தி இருந்தார்கள்.  புலிகளின் கடந்த காலம் புகழ்ப்பெற்ற மீள் எழுச்சிகளால் நிரம்பியது.

.

விடுதலைப்புலிகள் வெறும் ஆயுதங்கள் மீது பற்றுக் கொண்டு முரட்டுத்தனமான போர்களால் தங்கள் விடுதலைப்பாதையை சமைத்துக் கொண்டவர்கள் அல்ல. ஒரு தேசிய இனத்தின் பன்னெடுங்கால கனவினை தனது தியாகங்களால் நினைவாக்க முயன்ற ஒரு யுகத்தின் தலைவர் தயாரித்த தனித்த வார்ப்புகள். பூர்வக்குடி ஒன்றின் விடுதலைப்போராட்டதினை உலக வல்லாத்திக்கமே ஒற்றைக்குடையின் கீழ் நின்று எதிர்த்தது அதுதான் முதல் முறை. ஏனெனில் எதனாலும் விலைக்கு வாங்க இயலா மலையாக விடுதலைப்புலிகள் திகழ்ந்தார்கள். சமகாலத்தில் அறிவும், உணர்வும், ஆற்றலும் சமவிகிதத்தில் கலந்த அற்புத கலவையாக அவர்கள் விளங்கினார்கள்.

. ‘

ஒரு கனவு நாட்டினை அவர்கள் உதிரமும், உயிரும் கொண்டு கட்டினார்கள். களவு இல்லாத, கற்பழிப்பு இல்லாத, ஒரு துளி லஞ்சம் இல்லாத, சாதியற்ற, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிந்த ஒரு சமநிலை நாட்டை புலிகள் படைத்தார்கள். பெரும் பெரும் அறிவார்ந்த தலைவர்களால் கூட சாத்தியமற்ற ஒரு கனவினை பொடியன்கள் என்று அழைக்கப்பட்ட அந்த வசீகரம் மிக்க வாலிபத் தோள்கள் கட்டி எழுப்பின.  சீர் மிகுத் தமிழ்மொழியில் அறிவிப்புப் பலகைகள், உயர்படிப்பு வரை தாய்மொழிக் கல்வி என உள்ளங்கை அளவு நாட்டில் தங்கத் தமிழ்மகள் இதுவரை இல்லாத இன்முகத்தோடு ஆட்சிச் செய்தாள்.

.

தொடர்ச்சியான சிங்கள பேரினவாத தாக்குதல்கள்.. உலகம் முழுக்கத் தடை, மின்சாரமோ, அடிப்படை வசதிகளோ இல்லாத வாழ்க்கை,  என சகலவிதமாத தடைகளுக்கு மத்தியில் தமிழினத் தலைவர் மேதகு.பிரபாகரன் இப்பூமிப் பந்தில் தமிழர்களுக்கான ஒரு நாட்டை கட்டி எழுப்பியே விட்டார். எத்தனை நீண்ட கால தவம்.. எத்தனை உயிரிழப்புகள்…எத்தனைப் போராட்டங்கள்.. எத்தனைப் போர்க்களங்கள்…???

 பாரதியும், பாரதிதாசனும், பெருஞ்சித்திரனாரும், பாவாணரும், புலவர்  கலியபெருமாளும், தமிழரசனும், இன்னும் பலரும் கண்ட கனவினை நம் கண் முன்னால் நிஜமாக்கி காட்டினார். தமிழரின் தொன்ம அறத்தோடும், மரபு வழி பிறந்த மறத்தோடும் கூடிய தன்மானத் தலைமையாக தலைவர் பிரபாகரன் விளங்கினார்.

.

எதற்கும் தலைவர் விலை போனதில்லை. தனித்தமிழ் ஈழம் என்கிற ஒற்றைப் புள்ளியிலிருந்து எந்த நொடியிலும் விலகியதில்லை. மாகாண முதலமைச்சர், துணை அதிபர் , வசதியான வாழ்க்கை, உச்சப்பட்ச பதவிகள், பணம் ,புகழ் என்றெல்லாம் பல்வேறு சலுகைகள் அவருக்கு முன்னால் மண்டியிட்டப் போதும் சமரசம் இல்லாத சரித்திரனாய் தலைவர் விளங்கினார். அவரும், அவரது படைகளும் நாம் நிஜ உலகில் பார்க்க இயலா அற்புதன்கள். யுத்தக் களத்தில் நின்ற போதும் பூக்களை மிதிக்காமல் சண்டையிட்டவர்கள். ஒரு  கையில் துவக்கு ஏந்திய போதிலும், மறுகையால் உலகை ஆரத்தழுவி நேசித்து கவிதைப் பாடிய காவிய மனசுக்காரர்கள். மனித நேயமும், கொள்கைப் பிடிப்பும் கொண்ட போராட்டக் காலமொன்றை அவர்கள் உருவாக்கினார்கள். திலீபனும், அங்கயற்கண்ணியும், மில்லரும், கிட்டுவும், குமரப்பாவும், புலேந்திரனும், பால்ராஜ்ஜீம், தமிழ்ச்செல்வனும் என பட்டியலிட்டால் எழுதிக் கொண்டும், புகழ்ந்துக் கொண்டும் போய்க் கொண்டே இருக்கலாம் என்ற அளவிற்கு வான்புகழ் கொண்டு வரிசையாய் தாய் மண்ணை முத்தமிட்டு தமிழ் அன்னைக்காக விண்ணையேறிய வானவில் போராளிகள் அவர்கள். ஆம் .‌நாம் கனவில் மட்டுமே காண முடிகிற அற்புதங்களை நிஜத்தில் செய்து விட்டு சென்றார்கள் அவர்கள்.

.

உண்மையில் நாம் இழந்தது ஈழம் என்கிற நம் தாய் மண்ணை மட்டுமா உறவுகளே..? அல்ல. அந்த மனிதர்களை.. கனிவு நிரம்பிய கண்களோடு, துணிவு நிரம்பிய நெஞ்சோடு உலவிய போர்க்களத்தில் பூத்த பூக்களை… அல்லவா நாம் இழந்திருக்கிறோம்..? இனி எக்காலத்தில் அவர்களை நாம் சந்திப்போம்..? திரைப்படங்களில் மட்டுமே சிந்திக்க முடிகிற அந்த கதாநாயகர்களை கண்டு எந்த நாளில்.. எவ்விடத்தில் …ஆரத்தழுவி அழப்போகிறோம்..??

காட்டுக்குள் இருந்தாலும் கம்பீரமாக விமானம் கட்டி பறந்து விண்ணை முத்தமிட்ட அந்த அறிவின் செறிவானவர்களை இனி எந்த செருக்களம் காணும்..?

.

இத்தனை இழப்பிற்கு பின்னரும் இன்னும் எதைக் கேட்டு ஈழத்து மண் தன் அடிமை விலங்கொடிக்க காத்திருக்கிறது..? .  நினைத்தாலே மனம் கனமாகி கண்கள் குளமாகின்றன. இனியொரு காலம் பிறக்கும். மீண்டும் பாலச்சந்திரன் பிறப்பான். மீண்டும் இசைப்பிரியா தன் குரலால் பாடுவாள். இன்னொரு முறை புதுவை அய்யா தனது புத்தொளிக் கவிதைகளால் புவிக்கு ஒளியூட்டுவார். இலட்சியம் மிக்க கண்களோடும், கலைந்த தலையோடும், வசீகரனாய் திலீபன் மீண்டும் யாழ்த் தெருக்களில் திரிவார்.  வெடி மருந்துத் தூள் படிந்திருக்கிற ஈழப் புல்வெளிகளில் மீண்டும் காந்தள் மலரும்..என்கிற நம்பிக்கை மனதின் ஏதோ மூலையில் மின்மினிப்பூச்சிப் போல சுடர்விட்டு அலைந்துக் கொண்டிருப்பதால் தான் பெருமூச்செறிதல்களோடு இந்த வாழ்வினை நம்மால் வாழ முடிகிறது.

.

ஒரு பத்தாண்டு கூட கடக்காத சூழலில் இதுவும் கடந்துப் போகும், இன்னமும் கடந்துப் போகும், இதற்கு மேலும் உடைந்துப் போகும் என்கிற எதிர்மறை மனநிலையோடு ஈழ விடுதலையை அணுக இயலாது. தேக்கி வைத்த கோபம்… தன் சொந்த சகோதரியின் பிறப்பு உறுப்பினை படம் எடுத்து சிங்களன் உலகத்தின் விழிகளுக்கு விருந்தாக்கி விட்டானே என்கிற அவமானம்.. தோல்வி தந்த வலி… தலைக்குனிவு.. சொந்த சகோதரனை பறிக் கொடுத்த வன்மம்..  நம் தாய் மண்ணின் மடியில் அன்னியன் கால்பதித்து திரிகிறானே என்கிற பழிவாங்கல் உணர்ச்சி.. சென்ற முறை இருந்த மறத்தோடு.. உலகத்தை தழுவிய பார்வைக் கொண்டு எழுகிற ராசதந்திர நகர்வு ..இன்னும் பல..இன்னும் பல கொண்டு நம் தாயக விடுதலையை..ஈழப்பெருந்தேச கனவினை சாத்தியப்படுத்த இந்த பூமிப்பந்தில் வாழ்கிற ஒவ்வொரு தமிழனும் ஆழ்மனதில் இருந்து உறுதியேற்கிற நாள் தான் இந்த இனப்படுகொலை நாள்.

இது இழப்பின் நாள் அல்ல. உயிர் மூச்சால் நம் உடன்பிறந்தவர்கள் காற்றில் கலந்து சுவாசமாய் நம்மை எழுப்புகிற நாள்.

எழுவோம். திருப்பி அடிப்போம். பகை முடிப்போம்.

இருள் விலக்கி விடுதலைச்சூரியனின் சுடர் பிடிப்போம்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.

— மணி செந்தில்

.

கடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.


…..

2016 ஜனவரி.

அவர்கள் எங்களை தடுத்தார்கள். இதற்கு மேலே வாகனங்கள் செல்ல முடியாது. பாலங்கள் உடைந்து கிடக்கின்றன என்றார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட அழிவு அதிகமாகத்தான் இருந்தது. சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த மக்கள் எதிரே வாகனங்களை மறித்து, இருப்பதை பிடிங்கிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாகதானிருந்தது. பசியால் வெளிறிய கண்களோடு குழந்தைகள் ஏங்கி நிற்கின்ற அக்காட்சி எதனாலும் சகிக்க முடியா துயராய் இருந்தது. ஆம். கடலூர் ஏறக்குறைய துண்டிக்கப்பட்ட நிலமாய் , வேதனையும், அழுகுரல்களும் நிரம்பிய மனித வாதையின் கொடுஞ்சாட்சியாய் மாறிய தீவாய் மாறி இருந்தது.
அந்த பொழுதில் தான் என் அலைபேசி அலறிய வண்ணம் இருந்தது. எங்கே அண்ணன் வந்துட்டீங்களா என 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பதற்ற அழைப்பு. ஒரு கடை வீதிக்கு முன்னால் எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. இந்த விபரத்தை நான் அலைபேசியில் சொன்னவுடன் பக்கத்தில் தான் இருக்கோம். இதோ வர்றோம். என சொன்னதை கேட்டு நான் நிமிருகையில்.. கருஞ்சட்டை அணிந்த ஏழெட்டு இளைஞர்களோடு கடல் தீபன் வந்துக் கொண்டு இருந்தான். எப்போதும் புன்னகையை சுமந்திருக்கும் முகம் அன்று..தொடர்ச்சியான பல உறக்கமில்லா இரவுகளை கண்டு சோர்ந்திருந்தது. கடந்த சில வாரங்களாகவே அந்த இளைஞர்கள் உறங்கி இருக்கவில்லை. சரியான உணவோ, ஒய்வோ இல்லாத சூழலில் கொடும் கூற்றாய் விளைந்த இயற்கைக்கு எதிராக அந்த எளிய இளைஞர்கள் போர் தொடுத்து நின்றார்கள். மக்களை காக்க வேண்டும். அவர்களின் கடும் துயரினூடே ஏதாவது ஒரு ஆறுதலை , மீட்பை தந்து விட வேண்டும் என அந்த இளைஞர்கள் போராடினார்கள். அவர்களுள் கடல் தீபன் தனித்து தெரிந்தான். மாநிலம் முழுக்க இருக்கிற நாம் தமிழர் உறவுகளிடத்தில் கோரி உதவிகள் பெற்று அதை மக்களிடம் சேர்ப்பதில் மிகுந்த கவனம் கொண்டிருந்தான். எங்கள் வாகனம் வந்த உடன் ஏதோ உதவி வந்திருக்கிறது என ஓடி வந்த மக்களை ஒழுங்கு செய்ய முடியாமல் கண்கலங்கி நின்றிருந்த அவன் மெல்லிய குரலில் சொன்னான்.. எது தந்தாலும் தீராத பசியை , குறையாத வலியை இந்த புயல் வெள்ளம்.. தந்து விட்டு போயிடுச்சிண்ணே..அது தான்னே பெரிய துயர்.
அவனை இதற்கு முன் பல முறை சந்தித்து இருக்கிறேன். அண்ணன் சீமானின் செயல் வடிவம் அவன். அவருடைய உதட்டில் இருந்து சொல் புறப்படும் முன்னரே செயலில் இறங்கி இருப்பான் தீபன். மக்களுக்காக,மக்களோடு நிற்பதற்காக நாம் தமிழரில் விரும்பி இணைந்து இருந்தான். அயலகத்தில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு 2009 க்கு பிறகான தமிழின எழுச்சியை தகவமைப்பதில் தன் வாழ்க்கையையே இழந்து அர்ப்பணித்து நின்ற இளைஞன் அவன்.
.
அவன் மீது தான்.. அந்த கடலூர் கடல்தீபன் மீதுதான்.. இன்று தமிழக அரசு குண்டர் சட்டத்தை ஏவி இருக்கிறது. காவிரி நதி நீர் சிக்கலில் எத்தனையோ அரசியல் அமைப்புகள் போராடின. ஆனால் நாம் தமிழர் கட்சியின் மீது மட்டும் வரலாறு காணாத அடக்குமுறை. சென்னையில் உள்ள கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என குறிவைத்து காவல் துறை வேட்டையாடியது இந்திராகாந்தி காலத்து எமர்ஜென்சி அத்துமீறல்களுக்கு சற்றும் குறையாதது. தமிழகமெங்கும் கட்சியின் பொறுப்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள், அன்பான அறிவுரை போன்ற மிரட்டல்கள், முளைச்சலவை பேச்சுக்கள் என பல்வேறு ஆயுதங்களை காவல்துறை மூலம் உபயோகித்து நாம் தமிழர் கட்சிக்கு எதிரான ஒரு வெளிப்படையான யுத்தத்தை ஆளும் வர்க்கம் நடத்தி வருகிறது. என்ன நடக்கிறது என்று பார்க்க வந்த நடிகர் மன்சூரலிகான் மீது கூட பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு.
.
இத்தனைக்கும் ஒரு ஒழுங்கமைவு போராட்டத்தை தான் அண்ணன் சீமான் வடிவமைத்தார். இராணுவத்தைப் போல ஒரு பார்வை மூலம் தன் தம்பிகளை கட்டுப்படுத்தி படை நடத்துவதில் , போராட்டக் களங்களை அமைப்பதில் சீமான் தேர்ந்தவர். ஏறக்குறைய 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் பெருங்கூட்டம். உணர்ச்சியும், அறிவும் சமவிகிதத்தில் கலந்து சூழலியல், அரசியல், இயற்கை, வேளாண்மை, உலக அறிவு, கலை பண்பாட்டு விழுமிய புரிதல் என பல்வகை நுண்மாண் நுழைபுல அறிவோடு ஒரு இளைஞர் படையை சமகாலத்தில் கட்டுவதில் அண்ணன் சீமான் வெற்றிப் பெற்றிருக்கிறார். ஆனாலும் ஒரு போராட்டம் இரு முனைகளை கொண்ட கூரிய ஆயுதம். எந்த வகையிலும் அத்துமீறல்கள் எளிதில் நுழையக் கொடுக்கிற அபாயத்தைக் கொண்ட ஆபத்து. இம்முறை திட்டமிட்டு அதுதான் நடந்தது. காவிரி நதி நீர் உரிமைக்காக காவல் துறை அனுமதித்த இடத்தில் தான் நாம் தமிழர் கட்சியினரும், இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலைப் பண்பாட்டு பேரவையினரும், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் என பல தலைவர்களும், அவர்களது அமைப்பினரும், போராடிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத காவல் துறையின் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இயக்குனர் வெற்றிமாறன், தமிழர்நல பேரியக்கத்தின் தலைவர் களஞ்சியம்,அவரது கரூர் மாவட்ட பொறுப்பாளர் ரமேசு ஆகியோர் கொடுமையாக தாக்கப்பட்டார்கள். இந்நிலையில் காவல்துறையினர் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்து சென்னையில் இருக்கிற நாம் தமிழர் பொறுப்பாளர்கள் இரவோடிரவாக கைது செய்யப்பட்டனர்.அவர்களது வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து ,மின்சாரத்தை நிறுத்தி, அலைபேசிகளை பறித்து மிகப்பெரிய பயங்கரவாதிகளை கைது செய்து போல தோற்றத்தை ஏற்படுத்தியது காவல் துறை. கடந்த 10-04-2018 அன்று நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐயா .பெ.மணியரசன், செந்தமிழன் சீமான் , தனியரசு, தமிமுன் அன்சாரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அமீர் உள்ளீட்ட 780 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் சீமான் மீது மட்டும் கொலைமுயற்சி உள்ளீட்ட கடும் பிரிவுகளில் வழக்கு பதிவு. ஐபிஎல் மைதானத்தில் செருப்பு வீசி கைதான பிரபாகரன், அய்யனார், மகேந்திரன் ,வாகைவேந்தன் உள்ளீட்ட11 பேர் மீது பிணையில் வரமுடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு. அன்றைய தினமே சேப்பாக்கம் தொடர் வண்டி நிலையம் அருகே முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட 9 பேரும், பிரதமர் மோடி வருகையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளீட்ட 13 பேரும், நேற்றுதான் பிணையில் வந்துள்ளார்கள். பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான சீமான் அவர்களை தொடர்ச்சியாக சிறைப்படுத்தப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளீட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்னும் சிறையில் இருக்கின்றனர். குறிப்பாக மன்சூர் அலிகான் கைது செய்யப்படும் 2 நாட்களுக்கு முன்னர் தான் பித்தப்பை அறுவை சிசிக்கை மேற்கொண்டு மருத்துவ மனையில் இருந்தவர் என குறிப்பிடத்தக்கது.கடந்த 14 ஆம் தேதி ஸ்டாலின் என்பவரும் கைது செய்யப்பட்டார். இன்னும் கட்சியின் பல முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்ய காவல் துறை முனைப்பாக உள்ளது. இந்நிலையில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கடல் தீபன் மீது குண்டர்கள் சட்டம் பாய்ந்துள்ளது.
.
நீண்ட தொலைவு கொண்ட இலட்சியப் பயணத்தில் இது போன்ற அடக்குமுறைகளை கடக்காமல் ஒரு வெகுசன அரசியல் அமைப்பு பயணப்பட்டு விட முடியாது என்ற புரிதல் இருந்தாலும், இங்கே அரசியலைப்புச்சட்டத்தால் உறுதி செய்யப்படுகிற அனைத்து வகை உரிமைகளும் மிதித்து அழித்தொழிக்கப்படுகிற இவ்வேளையில் இது சனநாயகமா..இல்லை சனநாயக போர்வையில் விளைந்த பாசிசமா என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. காவிரி நதி நீர் உரிமைகளில் போராடுவதாக காட்டிக்கொள்கிற தமிழக அரசு, போராடும் சக அமைப்பினரை கொடும் வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் அடைப்பதை எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்கிற கேள்வியில் இருந்தே பிறக்கிறது இவர்களின் போராடுவதன் லட்சணம்.
.
கடல் தீபன் போன்றோர் கடலலைகளுக்கு ஒப்பானவர்கள். எண்ணற்ற துயர் காற்றின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஓயாமல் உழைப்பவர்கள். அடிமைப்பட்டு அல்லலுற்று ..தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிற அன்னை தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்காக தன் சுய வாழ்வினை தூக்கி எறிந்து விட்டு மாசற்ற இலட்சியங்களுக்காக.. தன்னையே விலையாக கொடுத்தவர்கள். இவர்களைப் போன்ற இளைஞர்களை தன் உடன்பிறந்தானாக கொண்டு நிற்கிற அண்ணன் சீமானும், அவரது தத்துவமும்.. இருண்டு கிடக்கிற அரசியல் வானில்.. நிகழத் துடிக்கிற அதிசயம்தான். அதில் மின்னும் பொன்துகளாய்..ஒரு ஒளித்துளியாய் கடல் தீபன் மின்னுகிறான்.
……

இந்நேரம் இருட்சிறையின் தனிமை பொழுதொன்றை மழைக்கால தேநீராய் மாற்றி அருந்திக் கொண்டிருப்பான் கடல் தீபன். மின்னும் அவனது விழிகளில் தான் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்காலம் சுடர் விடுகிறது.

.
மணி செந்தில்

கடவுள் வாசித்த பைபிள்..

 

 

 

இயற்கையின் படைப்பில் மகத்தானது பெண்தான்.அவளைப் போல எதுவும் உலகில் வலிமையானது இல்லை. பெண்களின் உழைப்பினால்..தியாகத்தினால் பரிபூரணம் அடைகிறது உலகு. மானுட வாழ்வின் மகத்தான விழுமியம் பெண்தான்.

இரவுப் பகலாக பெண்கள் உழைக்கிறார்கள். வாழ்வதற்காக போராடுகிறார்கள். ஆண்கள் அலட்சியப்படுத்தும் ஒவ்வொன்றையும் பெண்கள் கவனம் கொள்கிறார்கள். படைக்கிறார்கள். மன்னிக்கிறார்கள்.மாசற்ற அன்பிற்காக வாழ்வின் இறுதி நொடி வரை ஏங்கி மாள்கிறார்கள்.

சக மனிதனின் சலனப்பார்வை ஒன்று கூட சங்கடப்படுத்துகிற அவர்களது வாழ்வை ஒரு ஆணாக இருந்து நம்மால் சிந்திக்கக் கூட முடியாது.

அவர்கள் மர்மமானவர்கள் அல்ல. மறைவானவர்கள். அதே சமயம் கம்பீரமானவர்கள். மறுக்கப்படும் மதிப்பிற்காக.. சக உரிமைகளுக்காக வரலாற்றின் வீதிகள் முழுக்க காத்திருப்பவர்கள்..

என் உலகம் சிறுவயதில் இருந்து பெண்கள் சூழ் உலகு. நான் ஒவ்வொரு முறையும் வீழும் போதும் பெண்கள் தான் என்னை தூக்கி நிறுத்தி அவையத்து முந்தி இருக்க அனுப்பி இருக்கிறார்கள்.

ஒரு கனிவான பார்வை ஒன்றின் மூலமாகவே கலைந்த ஒரு ஆணை ஒரு பெண்ணால் காப்பாற்ற முடிகிறது. சிக்கலான கோடுகளை ஒரு வெற்றுத்தாளில் கிறுக்குவது போல வாழ்வினை தன் போக்கிற்கு கிறுக்கித்தள்ளும் ஆணின் ஒழுங்கின்மையை ஓவியமாக்குவது பெண் தான்.

மார்க்ஸ்.. ஜென்னி, லெனின்.. நதேழ்தா, சே குவெரா …அலெய்டா, பிரபாகரன்.. மதிவதனி, பாரதி.. செல்லம்மா, என நீளும் .அப்பட்டியல் ஒரு உண்மையை உலகிற்கு உரத்து அறிவிக்கிறது..

பெண்ணால் தான் ஆண்.

என் சிறு வயது வாழ்வில் சென்னை அடையாறு ஆந்திர மகிள சபாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் பயின்ற போது வயது முதிர்ந்த மேட்டர்ன் அம்மா என்று அழைக்கப்பட்ட ஒரு ஆங்கிலோ இண்டியன் மதர் தான் என் பராமரிப்பாளர்.

எப்போதும் வெள்ளுடை தரித்து ..சிலுவை தரித்து வலம் வரும் அந்த கனிவு கண்ட முகம் தான் நான் கண்ட முதற் கடவுள்.

சுருக்கங்கள் நிரம்பிய அவரது முகம் அங்கே பயின்ற எங்கள் ஒவ்வொருக்கும் பிரத்யோக புன்னகையை அள்ளி இறைக்கும்.பால்யத்தில் நேரக்கூடா எம் தனிமையை அவரது விழிகள் தான் நேர் செய்யும்.

ஒரு பனி இரவில்.. மெழுகுவர்த்தி ஒளியில் பைபிள் படித்துக் கொண்டிருந்த அவரை தூக்கக் கலக்கத்தில் மங்கலாய் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. ஒரு ஓவியம் போல உறைந்து பைபிளின் வாசிப்பில் இருந்த அவர்.. தன்னியல்பாய் கொண்டிருந்த உள்ளுணர்வின் மூலமாய் நான் விழித்துக் கொண்டிருப்பதை உணர்ந்துக் கொண்டு விட்டார். மெதுவாய் எழுந்து வந்து என்னருகே வந்த அவர்… ஆதரவாய் என் தலையை கோதினார். தாயை பிரிந்த என் வேதனையை சிற்சில கோதல்களிலும், அன்பான வருடல்களிலும் நேர் செய்தார். இன்றளவும் நான் உணரும் மேரி மாதா அவர்தான். அந்த கடவுளின் கருணையால் அந்த இரவில் நான் பேரன்பு கதகதப்போடு உறங்கினேன்.

மறுநாள் காலை நான் விழித்த போது மேட்டர்ன் அம்மா அதே உடையோடு மலர்கள் சூழ ஒரு கண்ணாடிப் பெட்டியில் படுத்திருந்தார்.. மரணச்சுவை அறியாத வயது. ஏதோ மேட்டர்ன் அம்மா தூங்குகிறார்கள் எனக் கருதினேன். பிறகு மாலையில் தான் யாரோ சொன்னார்கள் மேட்டர்ன் அம்மா இனி வர மாட்டார்கள் என.

நீண்ட காலம் அவரது விரல்கள் புரட்டிய வண்ணம் இருந்த அந்த பைபிள் தனியே அதே மேசையில்.. தனிமை ராகம் இசைத்தவாறு உறைந்திருந்தது. ஆம்… கடவுளே வாசித்த பைபிள் அல்லவா அது.. ??

நினைத்தாலே ஊறும்
இந்த கனிவை.. இன்றளவும் நெகிழ்வுடன் என் விழிகளில் சுரக்கும் கண்ணீரை… அளிக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடிந்திருக்கிறது.

இன்றளவும் பெண்களே கண்ணீரை அளிக்கிறார்கள். அவர்களே ஈரம் கனக்கும் விழிகளை துடைத்து ஆற்றுப்படுத்தும் விரல்களாக இருக்கிறார்கள்.

என்னை நேசித்த, நேசிக்கிற, உருவாக்கிய, உருவாக்குகிற..

என் வாழ்வின் சகல விதமாகவும் நிறைந்திருக்கிற.. அவர்களுக்கு..

உழைப்பால்.. காதலால்..தாய்மையால்..
இன்னும் பிற பலவற்றால்..இந்த உலகை இன்னமும் வாழ தகுதியாக்க போராடும்…அவர்களுக்கு..

இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.

நான் ஆகாயம் போல் வாழ்பவன்..

DSC_0513

 

எவரிடமும் யாசகம் பெறுவதல்ல அறிவு. சிலர் நினைப்பது போல தந்திரத்திலோ..குறுக்கு வழியிலோ பெற்று விடுதல்ல தகுதி. உலகின் விழிகள் உறங்கும் போது மூடா இமைகளை கொண்டு புத்தகங்களுக்குள் தன்னைத் தொலைக்கிற பயிற்சி.. நீண்ட பயணங்கள்.. ஒவ்வொன்றையும் பதிவு செய்ய சிறு வயது முதல் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி பார்த்து… படைப்பில் கரைகிற உளவியல்..

சிறு வயது முதல் உடன் பயணிக்கிற உடல் குறைபாடுகளை வைத்துக் கொண்டு வெல்ல துடிக்கிற உத்வேகம்.

உளராமல்,,தளராமல் வார்த்தைகளை விரயமாக்குகிற எவற்றிலிருந்தும் தள்ளி நின்று தியானம் போல மெளனிப்பது..

யாரிடமும் என்ன பேச வேண்டும் என்கிற அடிப்படை அறிவு. சொல் புத்தி கேட்டாலும்..அதிலுள்ள அரசியலையும்,உண்மைத் தன்மையையும் ஆராயாமல் ஏற்கிற சுய புத்தியை அழிப்பது…

இவையெல்லாம் ஒரு நொடியில் முளைப்பதல்ல.. கடும் உழைப்பினால், ஏற்படுகிற பயிற்சி..

இரவு பகல் பாராது உழைப்பினால் ஏற்படுகிற தன் ஊக்கத்தினால் விளைகிற முயற்சி.

எத்தனை முறை சரிந்தாலும்…நிமிர்கிற தெம்பு இருப்பதால் தான்.. சரிவுகளையும்,அழிவுகளையும் பயிற்சியானதாக பார்க்க முடிகிறது.

மற்றபடி நீங்கள் அவன் சரிவிற்காக காத்திருங்கள்.

அந்நேரத்தில் அவன் தன் நிமிர்விற்காக உழைத்து விட்டு போகிறான்…

நீங்கள் அடைக்கத்துடிக்கும் சிற்சில கதவுகளைத் தாண்டி ஆயிரம் வாசல்களை கொண்டிருக்கும் அவனது பயணம் முடிவிலியானது.

இதை கூட சொல்லாமல் செய்யலாம் தான்.

அடுத்தவனின் சரிவில்..அழிவில் தன் வாழ்க்கையை தேடுபவனை பார்த்து இப்போதும் பரிதாபம் தான் கொள்ள தோணுகிறது. ஒரு இறுதி பரிவுப் போல..

அணி சேர்த்தோ..புறம் பேசியோ வெல்ல முடிவதற்கு அவன் உங்களில் ஒருவன் அல்ல.

ஆயிரத்தில் ஒருவன்.

அணுஅணுவாய் பார்த்து அவனாய் செதுக்கி உருவாக்கிக் கொண்ட அவனது வாழ்க்கையை அழிக்க யாராலும் முடியாது.

உங்கள் வாழ்க்கையை உருவாக்க உழையுங்கள். உங்களுக்காக .. உங்கள் தகுதிகளுக்காக உழையுங்கள்.

நீங்கள் எல்லாம் வெல்லக்கூடிய.. அவனை தோற்கடிக்க கூடிய இடத்தில் அவனில்லை.

மற்றபடி..பொல்லாதவன் படத்தில் சொல்வது போல்…

அவனை எல்லாம் அப்படியே விட்டணும்..

ஏனெனில்… அவன் ஆகாயம் போல் வாழ்பவன்..

டேனியலின் தாய் மடி…

 

 

crying_baby_by_adelelliethy-d50418n

குழந்தைப் பருவம் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட… பட்டாம்பூச்சிகளின் சிறகு சொருகப்பட்ட..தேனமுது நிரப்பப்பட்ட கனவுகளால் ஆனது என்று பொதுவிதி எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் வாழ்வின் நிலையாமையும், அபத்தமும், நிரம்பிய விசித்திரக் கோடுகள் கலைத்துப் போட்ட ஓவியமாய் பால்யத்தைக் கொண்ட குழந்தைகளும் நம்மிடையே இருக்கிறார்கள் நம்மில் யாரால் உணர முடிகிறது..?

எதனாலும் ஆற்ற இயலா காய வடுக்களை இளம் வயதிலேயே விதி சமைத்த கோரத்தால் பெற்று விட்ட குழந்தைகள் தனித்துவமானவர்கள். பொங்கி வரும் புன்னகை தருணங்களிலும் கண்களில் ததும்பும் காயத்தை மறைக்க முடியாமல் தேம்பி நிற்கும் அவர்களது வாழ்க்கை எப்போதும் மர்மமானது. இயல்பான குழந்தைமைக்கும்… அவர்களுக்கு நேர்ந்து விட்ட வாழ்வியல் முரண்கள் அவர்களுக்கு பரிசளித்திருக்கிற சாபங்களுக்கும் நடுவே அல்லாடுகிற ஊசலாட்டம் அவர்களின் வாழ்வு முழுக்க தொடர்ந்து துரத்தி வரும் நிலையாமையின் வடிவம் கொண்ட வெறி பிடித்த ஓநாய்களுக்கு சமமானது.

சிறு வயதிலேயே எதிர்பாராமல் பெற்றோரை இழந்தவர்கள்… எதன் காரணத்தினாலோ பெற்றோரை இழந்து அனாதையாக்கப் பட்டவர்கள்.. வாழ்வின் ஓட்டத்தில் சுமையாகி கைவிடப்பட்டவர்கள்.. உடனிருந்து உறைகிற நோயின் காரணமாய் பெற்றோரின் நடுவே கதகதப்பாய் உறங்குகிற இரவுகளை தொலைத்தவர்கள் என காயம் பட்ட பால்ய காலத்தை கொண்ட குழந்தைகள் சமூக வெளியில் புறக்கணிக்கப்பட்டவர்களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களை எங்கும் எளிதில் அடையாளம் காணலாம்..சற்றே தயக்கத்துடன்..அச்சத்துடன் அவர்களுடன் உறைந்திருக்கிற வித்தியாசமான உடற்மொழி அவர்களை தனித்துக் காட்டும்.

எத்தனையோ அனாதை இல்லங்களில் …சாலை ஓரங்களில் குழந்தைமைக்கான எவ்வித இயல்புமற்று பிறந்து விட்ட காரணத்திலேயே வாழ்ந்தே தீர வேண்டிய நிர்பந்தம் தான் அவர்கள் எதிர் கொள்கிற மாபெரும் துயரம்.ஏதேதோ ஆலயங்களில் புண்ணியத்தை தேடுபவர்கள் இந்த குழந்தைகளோடு ஏதோ ஒரு நாள் செலவிட்டால்….வாழுகின்ற நாளொன்றுக்கு அர்த்தம் ஏற்படும்.

புறக்கணிக்கப்பட்டு …கைவிடப்படும் ஒவ்வொரு குழந்தையும் தங்கள் ஆன்மாவில் பெரும் வலியை சுமக்கிறார்கள். அதை யாராலும் போக்க முடியாது. விவாகரத்து வழக்கிற்கென தாயாலோ..தந்தையாலோ அழைத்து வரப்படும் குழந்தைகளின் கண்களை பாருங்கள். வலியை சுமந்து மெளனத்தை சுமக்கும் ஊமை விழிகள் அவை.

எனது பால்யம் சென்னை அடையாறு ஆந்திரமகிள சபா என்று அழைக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் கழிந்தது. என்னோடு இருந்த பலர் பெற்றோரை இழந்தவர்கள். மிக நீண்ட வாரண்டாவில் கம்பி வலை அடைக்கப்பட்ட சன்னலோரத்தில் நின்றவாறே எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டே உறைந்து போய் நின்றுகொண்டு இருக்கும் பல சிறுவர்களுக்கு நடுவே நானும் ஒருவனாய் இருந்தக் காலக்கட்டம் அது. எனது நோயின் காரணமாய் நான் பெற்றோரை பிரிந்திருந்தேன். ஆனாலும் மாதத்தின் முதல் வார சனிக்கிழமை அன்று என் அம்மா என்னை பார்க்க வந்து விடுவார். அன்றைய நாளில் பெரும்பாலும் வழிபாட்டு நேரமான காலை 8 மணிக்கு என் அம்மா கும்பகோணத்தில் இருந்து நீண்ட தூரம் பயணித்து வந்து எனக்காக காத்திருப்பார். என் அம்மா என்னை காண வந்திருப்பதை பெரும் பாலும் என்னிடம் புன்னகைப் பொங்க அறிவிப்பது அண்ணன்கள் டேனியலும், கில்பர்ட் ராஜாவும் தான்.

குறிப்பாக அண்ணன் டேனியல். அவருக்கு தாய் தந்தை கிடையாது. விடுதிலேயே வளர்பவர். அப்போது அவர் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

என் அம்மா சனிக்கிழமை வந்து… அன்றைய இரவு என்னுடனேயே தங்கி…மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு திரும்புவார். ஓவ்வொரு முறையும் அம்மா வந்தவுடன் ..என் கூடவே இரும்மா என்று நான் அடம் பிடிப்பதும்..நான் உன் கூடத்தான் இனி இருக்கப் போகிறேன் என அம்மா சொல்வதும் வழக்கமான நிகழ்வுகள். அப்போது டேனியல் அண்ணனும் அம்மா சொல்வதை ஆமோதித்து என்னை தேற்றுவார். ஆனால்..எங்கள் மூவருக்கும் தெரியும்..அது நடக்கப் போவதில்லை என.. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நான் அம்மா என்னுடன் நிரந்தரமாக இருக்கப் போகிறார் என உறுதியாக நம்பி கனவில் திளைப்பேன். சனிக்கிழமை இரவு அம்மாவை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டு அம்மாவின் சேலை வாசத்தை முகர்ந்தவாறே நான் அயர்ந்து நிம்மதியாக தூங்கிய உறக்கத்தை இதுநாள் வரைக்கும் தூங்கியதில்லை.. அந்த இரவுகள் என்றும் மங்காத நட்சத்திரங்களானவை என்பது இன்றளவும் நினைவில் பெருகும் நதியென என்னுள் சலசலத்துக் கொண்டே இருக்கும்.

அம்மா ஊருக்கு திரும்ப வேண்டிய ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து நான் அழத் தொடங்கி விடுவேன். என்னை ஆற்றுப்படுத்த மதிய உணவு முடிந்தவுடன் அம்மா எனக்கு கதை சொல்லத் தொடங்குவார் .. எப்போதும் எனக்கு பிடித்த கதை அது மட்டும் தான். எப்போதும் அதைதான் அம்மா சொல்ல வேண்டும். பறக்கும் குதிரை கதை. வானலோகத்தில் இருந்து பறந்து வரும் வெள்ளைக் குதிரை நிலங்களில் இருக்கிற பயிரை மேய்ந்து விட்டு பறந்து போய் விடுவதையும் …அதை அந்நாட்டின் இளவரசன் கண்டு பிடித்து அடக்கி தன் வயப்படுத்துவதான கதை… பாதி கேட்டுக் கொண்டிருக்கும் போதே நான் உறங்கி விடுவேன். ஏதோ ஒரு நொடியில் திடுக்கிட்டு நான் விழிக்கையில் என்னருகில் படுத்திருந்த அம்மா என் பக்கத்தில் இருக்க மாட்டார். நான் கத்தி கூறியவாறே சன்னலோரம் போய் பார்க்கையில்…தூரமாய் கானல் நீர் போல அம்மா போய்க் கொண்டு இருப்பார்…நான் அம்மா…அம்மா என கத்தி தீர்க்கும் போது டேனியல் அண்ணா தான் என்னை கட்டி அணைத்துக் கொள்வார்.

அவரிடம் இருக்கிற வண்ண வண்ண பென்சீல்களை கொடுத்து என்னை வரையப் சொல்லி என் கவனத்தை மாற்ற முயல்வார். ஒரு கட்டத்தில் நானும் சமாதானமாகி வரைவதில் மும்முரமாவேன். அப்படியே அவரோடு படுத்து உறங்கியும் விடுவேன்.

டேனியல் அண்ணா போலியோவால் இரு கால்களும் பாதிக்கப்பட்டு..இரு தோள்களிலும் கட்டை வைத்து நடந்தாலும் கூட..அப்போதே நிறைய வரைவார். பிரார்த்தனை கூட்டங்களில் அவரே பேச்சாளர். கடவுளின் குழந்தைகளான நம்மை கடவுள் என்றும் கைவிட மாட்டார் என உறுதியான குரலில் சொல்லும் போது.. கடவுள் வானிறங்கி வந்து நம் கரங்களை பற்றிருப்பார். அந்த அளவிற்கு உணர்வுகளை சொற்களில் வடிப்பதில் டேனியல் அண்ணா ஒரு தேவதன்.

ஒரு வெள்ளிக்கிழமை மதியம் என்னை டேனியல் அண்ணா தனியே அழைத்துப் போய் தான் சொல்வதை யாரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறி நாளை உன் அம்மா வருவாங்களா என கேட்டார். கண்டிப்பாக அண்ணா என்ற என்னை .. எனக்கு ஒரு ஆசை டா .. அம்மா மடியில் ஒரு 5 நிமிடம் நான் படுத்துகிட்டா என தயக்கமாக கேட்டார்.

அந்த வயதில் அக்கேள்வியை எதிர்க் கொள்ள என்னால் முடியவில்லை… என் அம்மா..அவங்க மடியில் இவர் ஏன் படுக்கணும் என எனக்கு கோபம். அதெல்லாம் முடியாது…அது என் அம்மா என்று வெடுக்கென்று சொல்லி விட்டு வந்து விட்டேன். திடீரென டேனியல் அண்ணா எனக்கு எதிரியாகிப் போனதாக நான் நினைத்துக் கொண்டேன்

. அன்றைய இரவு உணவின் போது கூட அவரை பார்க்க விரும்பாமல் தவிர்த்தேன்..

மறுநாள் என்னை காண வந்திருந்த அம்மாவிடம் கோபமாய் இதை தெரிவித்தேன். ஏண்டா இப்படி சொன்ன..அவனும் என் மகன் தானே படுத்துட்டு போறான்..பாவம் இல்லையா அவன்., என கேட்ட அம்மாவிடம் அவருக்கு தான் அப்பா அம்மா இல்லையே… அவர் எப்படி உன் மகனாவார் என கேட்ட என்னை அம்மா கோபமாய் பார்த்து விட்டு டேனியல் அண்ணாவை தேடிப் போனார். எங்கு தேடியும் டேனியல் அண்ணா கிடைக்கவில்லை. அம்மா என்னை திட்டியவாறே ஊருக்கு போய் விட்டார்..

அதன் பிறகு இரண்டு நாள் கழித்து டேனியல் அண்ணாவை பார்த்தேன்..அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.. என்னை பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில் எதுவும் பேசாமல் அமைதியாக தலைகுனிந்து சென்று கொண்டிருப்பார்.

அதன் பிறகு சில மாதங்களில் என் மருத்துவ சிகிச்சை முடிந்து ஊருக்கு திரும்பும் போது சொல்லி விட்டுப் போக டேனியல் அண்ணாவை தேடிய போது அவர் சிக்கவில்லை. வேண்டுமென்றே என்னை தவிர்த்திருந்தார்.

கால நதியின் இரக்கமற்ற வேகத்தில் ஆண்டுகள் ஆயின… எனக்கும் திருமணம் ஆகி இரண்டு மகன்களை பெற்றெடுத்தேன்.

ஒரு பணி நிமித்தமாக சென்னை போன போது பல ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர மகிள சபா சென்றிருந்தேன். டேனியல் அண்ணா வை பற்றி விசாரித்த போது அவர் இன்னமும் அங்கு இருப்பதாகவும்,அங்கே ஓவிய ஆசிரியராகப் பணி புரிவதாகவும் சொன்னார்கள்.

அவரை பார்க்க போன போது அவர் வகுப்பறையில் ஏதோ வரைந்துக் கொண்டிருந்தார். முடியெல்லாம் நரைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு வயதாகி இருந்தார்.

அண்ணா…என்று அழைத்த என்னை அவரால் சட்டென அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. நான் தான்னா என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு அவரது கண்கள் ஒளிர்ந்தன. இறுகிக் கட்டிக்கொண்டார். இன்னமும் திருமணம் ஆகாமல் இருந்த அவர் என் தொழில், திருமணம்,என் குழந்தைகள் என அனைத்தையும் கேட்டார்.

இரண்டு பசங்களடா…எப்படி இருக்காங்க…

ஓடியாடி விளையாடுறாங்கண்ணா…அடம் தாங்கல….. என சொன்ன என்னை உற்றுப் பார்த்த அவர் … விடு… நம்மைப் போல இல்லாம நல்லா விளையாடட்டும். கர்த்தரே… பிள்ளைகளுக்கு நன்மை செய்யப்பா என ஜபம் செய்தார்.

பிறகு அவரிடமிருந்து விடைப்பெற்றேன். சில ஓவிய பயிற்சி புத்தகங்களை என் மகன்களுக்கு பரிசாக அளித்து வாசல் வரை வந்து வழி அனுப்பினார்.

ஒரு விஷயம் எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

ஏனோ அவர் இறுதி வரை அம்மாவை பற்றி கேட்கவும் இல்லை.. நான் சொல்லவும் இல்லை.

Page 4 of 11

Powered by WordPress & Theme by Anders Norén