நேற்று மாலை என்னுடைய மகன்களோடு 2020 க்கு பிறகான திரைப்படங்களில் சமீபத்திய மிகச்சிறந்த இசைப் பாடல்கள் எவை எவை என பேசிக் கொண்டிருந்தோம். ஒரு பிளே லிஸ்ட்டையும் தயார் செய்தோம். 20 பாடல்களுக்கு மேலாக எனது மகன்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். சில பாடல்களை சேர்த்துக் கொள்ளலாம் என காம்ப்ரமைஸோடு சொன்னார்கள். இந்த சில பாடல்களில் தமிழ் வரிகள் நன்றாக இருக்கும் என்றார்கள். முடிவில் ஒரு ஐந்து வருடங்களில் 25 பாடல்களுக்கு மேலாக சிறந்த பாடல்களின் பட்டியலை மேலாக தயாரிக்க முடியவில்லை.
அப்படியே அவர்கள் கைப்பிடித்து எங்களின் 80களின் நினைவு வீதிக்கு அழைத்துச் சென்றேன்.
அந்த வீதியில் ஒரே ஒருவரின் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் வானொலிகளில் இசைத்தட்டுக்களில் கேசட்டுகளில் ஒவ்வொரு வீடுகளில் சாலை ஓரக் கடைகளில் சலூன்களில் மக்கள் உழைத்துக் கொண்டிருக்கும் இடங்களில் சடங்கு கல்யாணம் கருமாதிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அந்த பிரம்மாண்டத்தின் பெயர் இளையராஜா.
இளையராஜாவுக்கான பிளே லிஸ்ட் என யாராலும் ஒட்டுமொத்தமாக தயாரித்து விட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இளையராஜா. எங்கள் தலைமுறையின் ஒவ்வொருவரின் ஒவ்வொரு உணர்வின் ஒத்திசைவிற்கும் இளையராஜா இசையமைத்திருந்தார். பல்லாயிரக்கணக்கான பாடல்களின் மடியில் கதகதப்பாக நாங்கள் சுருண்டுப் படுத்திருந்தோம். ஒரு பாடல் கேட்டு மயங்கி கிறங்கி தவித்துக் கொண்டிருக்கையில், பக்கத்திலேயே அடுத்த பாடல் குதித்து விடும். அந்தப் பாடலைக் கேட்டு ஆகா ஓகோ என கண்கள் சொருக.. ஏகாந்தித்துக் கொண்டிருக்கிற வேளையில்.. இன்னொரு பாடல் எங்கிருந்தோ வந்துவிடும்.. திகட்ட திகட்ட அமிர்தம் குடித்த நாட்கள் அவை.
இப்போதெல்லாம் வருகிற பாடல்கள் குறித்து பெரும்பாலும் இளையராஜாவின் ரசிகர்களுக்கு எந்த கருத்தும் இல்லை. ஒரு இசையமைப்பாளரின் எப்போதோ அபூர்வமாக வருகிற ஒரே ஒரு பாடலுக்காக நாம் பல பக்கங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இளையராஜாவின் பல்லாயிரக்கணக்கான பாடல்களில் உள்ள சிறந்த அம்சங்களை எழுதுவதற்கு நமக்கு காகிதங்களில், கணினித் திரைகளில், அலைபேசி ஒளிர்வுகளில் பக்கங்கள் இல்லை.
வாழ்வின் ஓட்டத்தில் எப்படியோ கேட்டுவிடும் அந்தப் பெருமகனின் ஒரு இசைத் துளியில்.. உள்ளுக்குள் இருந்து கசிகிற விழியோர கண்ணீரில், ரகசியப் புன்னகையில், சின்ன ஒரு வலியில், இன்னும் ஏகப்பட்ட உணர்வுகளில் அவரின் பாடலுக்கான பாராட்டு உரை எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அவருக்கென எவ்வளவு பாராட்டு விழா நடத்தினாலும் அது போதுமானதாக இல்லை என்கிற குறை பலருக்கும் இருக்கிறது.
இளையராஜா என்ற தனி மனிதன் எங்கள் தலைமுறைக்கு வழங்கிய கடனை, கொடையை, அருளை எதைக் கொண்டு ஈடு செய்து விட முடியும்…??
அவரைப் பார்க்கும்போதும், கேட்கும்போதும் அடைகிற சிலிர்ப்பும், தொண்டை அடைக்கும் விம்மலும், உணர்ந்தே இருக்கின்றன.
ஒரு தலைமுறையின் யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாத அவரவர் ரகசிய வாழ்வின் பொன் ஒளி வீசும் பக்கங்களுக்கு. பால்ய காலத்து எழில் பூசி உலவும் புன்னகை நாட்களுக்கு. இளமையின் துடிப்பேறிய காதலின் பூத்தலுக்கு. எங்கே துளிர்க்கிறது எனத் தெரியாமல் அரும்பரும்பாய் மலர்ந்து கிளர்ந்த காமத்தின் வாசனைக்கு, பிரிவின் துயருக்கு, அவமானத்தின் காயத்திற்கு, முகத்தில் அறையப்பட்ட புறக்கணிப்பிற்கு, தனிமையின் சிலுவை ஆணிகளுக்கு , தாய் அன்பிற்கு, பசி இரவுகளுக்கு, வேலையற்ற பகல் பொழுதுகளுக்கு, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. அவை அனைத்திற்கும்..
மனித வாழ்வின் ஓட்டத்தில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ, செய்த பாவங்களை தொண்டைக்குழிக்குள் உறுத்தும் முள்ளாக சுமந்தலையும் விழிகள் தனித்து தெரிபவை. மன்னிப்பை தேடி அலையும் அந்த ஈரமுள்ள ஆன்மாக்களின் கடைசிப் புகலிடம் கடவுள்.
” கடவுள் மிக மன்னிப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கிறான்” என்கிற வரிகள் கடவுளின் மொழியாக புனித நூல் குர்ஆன் கூறுகிறது. கடவுளின் மைந்தனாக தோன்றிய இயேசு பிரானும் ” அவர்கள் என்ன பாவம் செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்கிறார்கள். என் பிதாவே! அவர்களை மன்னித்து விடுங்கள்..” என்று கேட்டார் என புனித பைபிள் கூறுகிறது.
ஏறக்குறைய எல்லா அற நூல்களும் மன்னிப்பின் புனிதத்தை சதா போதித்துக் கொண்டே இருக்கின்றன.
நம் தலைமுறையின் மகத்தான கவிஞன் முத்துக்குமார் தனது கடைசி திரைப்படமான “தரமணி” யில் ஒரு மன்னிப்புப் பாடல் ஒன்றை மனமுருக எழுதியிருப்பார்.
“என்னை மன்னிப்பாயா
யா அல்லா ஓ
நஞ்சினைப்போல
நெஞ்சுக்குள் இருக்கும்
குற்றம் கொல்கிறதே
என் தொண்டைக்குழியில்
உறுத்தும் முள்
ஏதோ சொல்கிறதே
நீ இருக்கும் இடந்தான்
எது அல்லா
அது மன்னிக்கும் மனமே
யா அல்லா..”
மன்னிக்கும் மனதை கடவுளின் இருப்பிடமாக முத்துக்குமார் எழுதியிருப்பார்.
இறுதியாக எல்லா காயங்களையும் பாவங்களையும் தூக்கிக் கொண்டு கடவுளின் முன்னால் சரண் அடைந்திருக்கிற ஒரு ஆன்மாவின் அழுகையாக அந்தப் பாடல் இப்படி நீளும்.
“காயங்களை கட்டிக்கொண்டு
உன்னிடம் வந்துவிட்டேன்
என் பாவம் யாவும் தூயவனே
என்றோ மறந்துவிட்டேன்
லாயில்லாஹாயில்லல்லா
லாயில்லாஹாயில்லல்லா
முகம்மது ரசூலல்லா”
…
உண்மையில் “மன்னிப்பு என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நிம்மதி” என்கிறார் கவியரசர் கண்ணதாசன். “மன்னித்துவிடு. கொந்தளித்துக் கொண்டிருக்கும் உன் மனது அமைதியாகி விடும்” என்று சொல்லும்
அவரது வரிகள் மிக ஆழமானவை.
மன்னிப்பை மிக அதிகமாக பேசும் புனித பைபிளில் சில வாசகங்கள் நம்மை அதிரச் செய்கின்றன.
மனிதனுக்கு மன்னிப்பைப் போதிக்கின்ற கடவுள் பழிவாங்குதலை தனக்குரியதாக மாற்றுகிறான். புனிதக் குர்ஆனிலும் ” கடவுள் கண்காணிப்பதிலும், கணக்குத் தீர்ப்பதிலும் விரைவானவன். ” என்ற வரிகள் உண்டு.
“பழிவாங்குதல் ஒரு பரிசுத்த உணர்வு” என்கிறது மகாபாரதம்.
….
என்னுடைய பதின் வயதுகளில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டங்களுக்கு நான் அடிக்கடி சென்றபோது பழக்கமான
மத ஊழியர் சகாயம். எப்போதும் பைபிளின் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு ஜெபமாலைகளின் மணிகளை உருட்டிக் கொண்டே இருக்கும் அவரை பைபிள் இல்லாமல் பார்க்க முடியாது. எல்லோரிடமும் அதிகம் பேசாத, அதே சமயத்தில் ஊழியக் கூட்டத்திற்கான எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கின்ற அவரிடம் வெறுப்புற்றவர் என்று யாருமில்லை. அவருக்கென்று யாரும் கிடையாது என்றும், இளம் வயதில் திருமணம் செய்த மனைவி இரண்டு வாரங்களில் யாரோ ஒருவரோடு ஓடி விட்டதாகவும், இதே ஊரில் அந்தப் பெண்ணும் குடும்பம் சகிதமாக இருப்பதாகவும், இவர் யாரிடமும் பேசாமல் எப்போதும் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பதாகவும் அவரைப் பற்றி என் நண்பன் சாம் என்னிடம் கூறிய போது, பிறகு இவர் யாருக்காக பிரார்த்திக்கிறார் என எனக்கு தோன்றியது.
ஒருமுறை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சற்று முன்னதாகவே சென்று விட்ட நிலையில், அந்த சிறு அரங்கில் கடவுளின் சிலுவைக்கு முன்னால் சகாயம் மண்டியிட்டு ஜெபமாலை உருட்டிக் கொண்டே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். ஜன்னலின் வழியே மாலை வெயிற்துளி கீற்றுப் போல உள்ளே பாய , அதன் ஒளியில் நின்று, நிழலின் ஆழத்தில் நின்றுக் கொண்டிருக்கும் கடவுளின் சொரூபத்தை நோக்கி மனமுருக பிரார்த்தித்துக் கொண்டிருந்த அவரின் கண்களில் பிரார்த்தனையின் போதே சாரை சாரையாக கண்ணீர் கசிந்து வழிந்துக் கொண்டிருந்தது.
நான் அமைதியாக காத்திருந்தேன். பிரார்த்தனை முடிந்து திரும்பியவர் என்னை பார்த்தவுடன் சற்றே அதிர்ச்சி அடைந்தார். அவரது தனிப்பட்ட பிரார்த்தனையை நான் பார்த்து விட்டதை கண்டு அவர் சற்று கூச்சப்பட்டார். என்னிடம் ஏதும் சொல்லாமல் விலகிப் போன அவரை அதன் பிறகு தனியே எங்கும் பார்க்க முடியவில்லை. எங்களது பள்ளி தலைமையாசிரியர் ஜேம்ஸ் ரெல்டன் ஒருமுறை என்னிடம் தனியே பேசிக் கொண்டிருக்கும்போது சகாயத்தை பற்றி பேச்சு வந்தது.
அவன் யாருக்காக பிரார்த்திக்கிறான் என்று நினைக்கிறாய் என ஜேம்ஸ் சார் கேட்டபோது என்னிடம் எந்த பதிலும் இல்லை. அவன் ஓடிப் போன தன் பொண்டாட்டிக்காக பிராத்தித்து கொண்டிருக்கிறான் என்ற போது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. “மன்னிப்பதன் மூலமாக நிம்மதியை அடைகிறார் போல..” என நான் சொன்ன போது .. இல்லை இல்லை என மறுத்த ஜேம்ஸ் சார் அடுத்தது சொன்னது தான் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
“அந்த மன்னிப்பு அவன் அவளுக்கு கொடுக்கிற தண்டனை..” என்று அவர் சொன்னார். எப்படி என்று புரியாமல் நான் பார்த்தபோது..
” வழக்கமா பாதிக்கப்பட்டவன் சபிப்பான். ஆனா இவனோ யாரால பாதிக்கப்பட்டானோ, அவ நல்லா இருக்கணும்னு பிராத்திக்கிறான். அத, அவன் எழுதி பிரார்த்தனை கூடையில போட்ட பிரார்த்தனை ஓலை மூலமா பாதர் பீட்டருக்கு தெரிஞ்சி, அவர் ஒரு முறை அந்த பொண்ணுகிட்டயே இத பத்தி சொல்ல , அன்னைக்கு இவன் பிரார்த்திக்கிறத, அந்தப் பொண்ணு தூரத்திலிருந்து பாத்துட்டு , கதறி அழுதது இருக்கே.. நினைச்சு பாக்க கூட முடியல” என ஜேம்ஸ் சார் கண்கள் பனிக்க சொன்னது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது.
உண்மையில் சகாயம் மன்னித்தது தான் அந்தப் பெண்ணுக்கு வழங்கிய மாபெரும் தண்டனை என நினைக்கும் போது இன்றும் பயமாக இருக்கிறது .
…
ஜெயமோகன் எழுதிய “அமுதம்” என்ற நெடுங்கதை ஒன்றைப் படித்தேன். காட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட மாபெரும் தோற்றம் கொண்ட பசு ஊர் முழுக்க அனைவருக்கும் பால் சுரந்து பசியாற்றி ஊரை செழிக்க வைக்க, பால் குடித்த அனைவரும் உடல் பூரித்து வளமான உடல் அடைய, அந்த ஊருக்கே பாலூர் என பெயர் வந்ததாக நீளும் அந்தக் கதையில், இறுதியாக அந்தப் பசுவை துர்சக்தியாக கருதி ஊர் மக்கள் அவமானப்படுத்தி அடித்து துரத்தி காட்டில் வைத்து எரித்துக் கொள்ளும் அந்த சமயத்தில் அந்தப் பசு யாரையும் சபிக்காமல், பால் குடித்த அனைவரும் தனது பிள்ளைகள் எனக் கருதி, அனைவரையும் மன்னித்து, நிதானமாக நின்று அந்த மரணத்தை எதிர்கொள்ளும் காவியத் தருணத்தை ஜெயமோகனின் வரிகளில் படிக்கும் நொடிகளில் மகத்தான சிலிர்ப்பை ஊட்டுபவை.
“கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டவனின்
காலில் வந்து விழுகிறது
கோபுரத்தின் நிழல்.”
– மதிக்குமார் தாயுமானவன்.
கடவுளுக்கே குற்ற உணர்வு கொடுத்த மதிக்குமார் தாயுமானவன் எழுதிய இந்த கவிதைக்கு தலைப்பு
” பாவமன்னிப்பு.”
….
உண்மையில் வாழ்வின் ரகசிய சூத்திரம் என்னவென்றால்.. மன்னிப்பவர்களோ அல்லது பழி வாங்குபவர்களோ.. யாருமே நிம்மதியாக இல்லை என்பதுதான்.
பழிவாங்குதலை ஒரு தட்டிலும் மன்னிப்பதை இன்னொரு தட்டிலும் ஏந்தி மாயத் தராசு ஒன்று முன்னும், பின்னும் அசைந்தாடும் ஆட்டத்தை தான்
காலையிலிருந்து இந்த புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஷீகான் உசைனி எங்கள் தலைமுறையின் மகத்தான தற்காப்புக் கலை பயிற்சியாளர். தற்காப்புக் கலை, கராத்தே, வில்வித்தை போன்றவை மிகவும் பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களுக்கு மட்டுமே என்கிற நிலையை மாற்றி, பாலின வேறுபாடுகளைத் தகர்த்து அதை வெகுசனப்படுத்திய தற்காப்புக் கலை கலைஞர்களில் உசைனி முக்கியமானவர்.
பத்ரி உள்ளீட்ட சில திரைப்படங்களில் நடித்து, திடீரென சமையற்கலை நிபுணராக தோன்றி வேக வேகமாக சமைத்து, பாத்திரங்களை, கரண்டிகளை தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டமாக அவர் பேசிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 90களில் பிரபலம். சிற்பியாகவும் முத்திரை பதித்தவர்.
என் மகன்கள் இருவரும் அவருடைய பயிற்சி வகுப்பில் இணைந்து இருந்தவர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் “தரப்படுத்துதல்” என்கிற வகுப்பில் ஈடுபட கும்பகோணம் வந்திருந்த போது கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளி வளாகத்தில் அவரை என்னுடைய தம்பியும் அவருடைய தலைசிறந்த மாணவர்களில் ஒருவரான கும்பகோணம் நகரத்தின் மகத்தான கராத்தே மாஸ்டர் “தம்பி வினோத்” அவர்கள் என்னை ‘சீமான் தம்பியாக’ அறிமுகப்படுத்திய போது ” எனது சிறந்த நண்பர் சீமான், அவருடைய தமிழ் உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்” எனச் சொல்லி கை குலுக்கினார். அவரது கரங்களை பற்றி கொடுக்கும் போது இரும்புக்கை மாயாவியின் கரங்களை குலுக்கியது போன்ற ஒரு உணர்வு. அவ்வளவு உறுதி.
திடீரென ஒரு நாள் அவருக்கு அபூர்வமான புற்றுநோய் வந்திருக்கிறது என சொல்லி முகநூலில் வீடியோ போட்ட போது இதையும் அவர் “100 கார்களை கைகளில் ஏற்றுகின்ற சவால்” போல வென்று வந்துவிடுவார் என நான் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தமிழகமே நம்பியது.
ஏனெனில் அவர் அவ்வாறு தான் தன்னைப் பற்றிய தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார். தன்னம்பிக்கையும், எதையும் சாதிக்கும் உறுதியும் கொண்ட அந்த இரும்பு மனிதனுக்கு எதுவும் ஆகாது என்று நாமெல்லாம் நினைத்தது அந்த மனிதன் நமக்குள் தனது அளப்பரிய ஆற்றலால் விதைத்த பொதுப்புத்தி.
ஆனாலும் மரணம் கருணையற்றது தானே.. மரணத்திற்கு எந்த காரணமும் தேவையில்லை. மரணத்திற்கான காரணங்கள் மனிதர்களுக்காக தயாரிக்கப்படுபவை. மரணம் குறித்து சொல்லப்படும் காரணங்கள் மனிதர்களை சமாதானப்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்டவை. அதை உசைனியும் நிரூபித்து விட்டு சென்றிருக்கிறார்.
அவருக்குப் பின்னால் அவரது மாணவர்கள் ஒவ்வொரு ஊரிலும் அவருடைய கலையை, எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்த்து அவரை என்றென்றும் நினைவு கூர வைப்பார்கள்.
எனது உயிருக்கினிய இரண்டு தம்பிகள் மாஸ்டர் வினோத் அவனுடைய மாணவனும், கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் போராளியுமான விக்கி ஆகிய இருவரும் மாஸ்டர் உசைனி கும்பகோணம் நகரத்திற்கு வழங்கிய கொடைகள். அடுத்தடுத்த இழப்புகளில் சிக்கித் தவிக்கும் என் தம்பி வினோத் இதிலிருந்தும் மீண்டு வர வேண்டும். அவன் மீண்டு வருவான். ஏனெனில் அவன் உசைனி மாணவன்.
இப்படி ஒவ்வொரு ஊரிலும் தமிழ் உணர்வும், தற்காப்பு கலை நிபுணத்துவமும் வாய்ந்த தம்பிகளை மாஸ்டர் உருவாக்கி விட்டு சென்றிருக்கிறார்.
அவர் நீடித்து வாழ்வதற்கான எல்லா காரணங்களையும் அவர் மரணத்திற்கு முன்பே செய்துவிட்டு மறைந்திருக்கிறார்.
அவருக்கு என் கண்ணீர் வணக்கம்.
துயர் மரணத்தின் நிழல் பேரிருளாய் சூழ்ந்திருக்கும் இந்த இரவை இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்படி கடப்பாரென்று நினைத்துப் பார்த்தாலே மனம் கனத்துப் போகிறது. மாஸ்டர் ஷிகான் ஹீசைனிக்காக இரங்கல் பதிவு எழுதிவிட்டு மாலையில் மௌனமாக அமர்ந்திருந்த போது இயக்குனரும் நடிகருமான மனோஜ் இறந்த செய்தி வந்து சேர்ந்தது.
அவரது மரணச் செய்தி கேட்டு பலரும் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு ஊடகங்களில் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். முக்கியமாக நடிகர் தம்பி ராமையா அவர்கள் கொடுத்த பேட்டி என்னவோ மனதை ஏதோ செய்தது. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்.
உண்மையில் மனோஜ் தன் வாழ்நாள் முழுக்க தன் தந்தை அடைந்த கலை உயரத்தில் பாதியாவது தொட்டுவிட வேண்டும் என போராடிக் கொண்டே இருந்தார். மாபெரும் ஆளுமைகளுக்கு மகன்களாகப் பிறப்பதும் ஒருவித சாபம்தான். எதற்கெடுத்தாலும் தன் தந்தையோடு அவர்களை ஒப்பிட்டு அவர்களின் சுயம் அழிக்கும் உலகம் தான் மனோஜ் போன்றவர்களை கொன்றுக் கொண்டே இருக்கிறது.
இன்று மாலை மனோஜ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த “தாஜ்மஹால்” படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மிகச்சிறந்த ஆல்பம் அது. கவிப்பேரரசு வைரமுத்து ஒவ்வொரு வரியையும் தனக்கு வாழ்வளித்த பாரதிராஜாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக எழுதி இருப்பார்.
படம் வெளியானபோது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அபூர்வமான ஒலிக் கோர்வைகளோடு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருந்த பாடல்கள் வேறு படத்தின் மீதான பரபரப்பை கூட்டி இருந்தன. இத்தனைக்கும் மணிரத்னத்தின் கதை திரைக்கதையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் அது.
சுவையான எல்லாவற்றையும் கலந்து, சுவையற்ற ஒன்றை தயாரித்தது போல ஆகிவிட்டிருந்தது படம். இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு திருப்பாச்சி அருவாளை தீட்டிக்கொண்டு வாடா வாடா என அறிமுகமானார் மனோஜ். ஆனால் வழக்கமான பாரதிராஜாவின் உயிர்ப்பும் உணர்வும் நிரம்பி வழியும் “பாரதிராஜாவின் கிராமம்” அந்தத் திரைப்படத்தில் இல்லை. செயற்கையான காட்சி அமைப்புகள், உடைகள் என படம் ஏதோ தெலுங்கு கிராமத்தை நகலெடுத்தது போல அமைய, மனோஜ் வெற்றி பெற முடியாமல் முடங்கத் தொடங்கினார்.
ஆனாலும் அவருக்குள் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டே இருந்தது. திரைப்படத்துறையோடு ஏதோ ஒரு வடிவத்தில் தொடர்பு கொண்டவாறு இருக்க முயற்சி செய்தார். சில முயற்சிகள் சிறு வெற்றிகள் அடைந்தாலும், பாரதிராஜா என்கின்ற மாபெரும் யானை அடைந்திருந்த உயரம் அந்த சிறு வெற்றிகளுக்கான அங்கீகாரங்களைக் கூட அவரை அடைய விடாமல் தடுத்தது.
அது ஒரு வகை சாபம்தான். ” காந்தி இஸ் மை ஃபாதர்” என்று ஒரு புத்தகம் உண்டு. காந்தியின் மூத்த மகன் ஹரிலால் தன் வாழ்வில் தன் தந்தையின் உயரத்தால் அடைந்த துயரின் கதை அது. இறுதியில் ஒரு குடிகாரனாக மாறி, காந்தியை எதிர்ப்பதற்காகவே மதமும் மாறி எல்லாவற்றையும் இழந்து கடைசியில் அனாதை போல அரசு மருத்துவமனையில் இறந்து போனார் தேசப்பிதாவின் அசல் மகன். அது திரைப்படமாக கூட வெளிவந்திருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர். ஆனாலும் அவருக்கும் இதே போன்ற சிக்கல்தான். தன் தந்தையை விட்டு கொஞ்சம் விலகி நின்ற யுவன் சங்கர் ராஜா அடைந்த வெற்றியை தந்தையின் நிழலில் நின்று கொண்டிருந்த கார்த்திக் ராஜா அடைய முடியவில்லை. இத்தனைக்கும் தன் அண்ணன் கார்த்திக் ராஜா தன்னைவிட மிகச் சிறந்த இசை அறிவு கொண்டவர் என யுவன் சங்கர் ராஜாவால் புகழப்பட்டவர் அவர்.
மனோஜ் தன் தனிப்பட்ட வாழ்வில் அனுதினமும் எதிர்கொண்ட அழுத்தங்கள் அவரை சாகும் வரை நிம்மதியாக இருக்க முடியவில்லை. எப்படியாவது தந்தைக்காக ஒரு வெற்றி அடைந்து விட வேண்டும் என போராடி தவித்த நல்ல மகன் அவர். சிறுநீரக பிரச்சனைகளுக்கு நடுவில் அவர் இயக்கிய “மார்கழித் திங்கள்” மோசமான தோல்வியை சந்தித்தது. நீண்ட நாட்களாக “சிவப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுத்து விட வேண்டும் என தவித்ததாக அவர் பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார்.
அரண்மனையில் இருந்தவர்தான். ஆனாலும் வீதியில் இறங்கி தனக்கென ஒரு தனிப்பட்ட அடையாளம் வேண்டும் என எல்லா கதவுகளையும் தட்டிப் பார்த்திருக்கிறார்.
ஒரே ஒரு கதவு தான் அவருக்காக திறந்திருந்தது.
அது மரணத்தின் கதவு.
மனோஜ் போய்விட்டார்.
கம்பராமாயணத்தில் தன் மகன் இந்திரசித்தை போரில் இழந்த ராவணன் “எனக்கு நீ செய்ய வேண்டியது எல்லாம் உனக்கு நான் செய்து கொண்டிருக்கிறேனே..” என அழுது புலம்பும் ஒரு துயர் கவிதைப் போல பாரதிராஜாவின் இந்த சோகம் மீதம் இருக்கும் அவரது சிறு வாழ்நாளில் பெரும் முள்ளாய் உறுத்தி உயிர்வாதை செய்துக் கொண்டே இருக்கும்.
அதுவும் அவர் துளித்துளியாய் அடையும் ஒருவகை மரணம் தான்.
‘வரலாறு கொடியது. அது எப்போதும் புனிதப் பிம்பங்களை உடைத்துக் கொண்டே நகர்கிறது’ என விரைந்தோடும் காலம் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. ஏனெனில், புனிதப் பிம்பங்கள் நிரந்தரமானவை அல்ல; எல்லாக் காலத்திலும் புனிதப் பிம்பங்களின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் புனிதப் பிம்பங்கள் அந்த நிலையிலிருந்து அகற்றப்பட்டு, வேறு நிலையில் நகர்த்தப்படுகின்றன. எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடியது என எந்தத் தத்துவமும் இல்லை. அதற்கு பெரியார் கருத்துக்களும் விதிவிலக்கல்ல எனக் கூறினாலும், நாம் ஆரிய அடிமைகளாகக் காட்டப்படுவோம்; பாஜகவின் கைப்பாவைகளாகக் கட்டமைக்கப்பட்டு விடுவோம் என்கிற அறிவுப்பரப்பில் திராவிட ஆதரவாளர்களால் எப்போதும் விடுக்கப்படுகிற மிரட்டல்கள் தற்போது முறியடிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில், இங்கே காலங்காலமாக பெரியார் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஏதேனும் குரல் எழுந்தால், அந்தக் குரல், ‘ஆரியத்தின் குரல்’, ‘ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் குரல்’ எனக் கூக்குரலிட்டு தொண்டை குரல்வளை நெறிக்கப்படுகிற காட்சிகள்தான் இதுவரை நடைபெற்று இருக்கின்றன. ‘பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கையைக்கூட ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதன் நுண்ணரசியல் பெரியாரின் முரண்பட்டக் கருத்துக்கள் எங்கே பொதுபார்வைக்கு வந்துவிடுமோ என்கிற அச்சம்தான் எனும் வாதத்தினைத் தள்ளி வைக்க முடியாது.
இந்திய வரலாற்றில் எண்ணற்ற பெருந்தலைவர்கள் விமர்சனங்களால் மறுவாசிப்புக்கு/ மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். காந்தியடிகள் குறித்தும், ஜவஹர்லால் நேரு குறித்தும் இதுபோன்ற விமர்சனங்கள் வரும்போது அவர்களது ஆதரவாளர்கள் எவரும் பெரியார் ஆதரவாளர்கள்போல, பதற்றம் அடைவதில்லை. சமீபத்தில்கூட எட்வினா மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்கள் குறித்து வடஇந்தியாவில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்கள் இவ்வளவு பதற்றங்கள் நிறைந்தது அல்ல! சொல்லப்போனால், அது ஜவஹர்லால் மற்றும் எட்வினா எனும் தனி நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சார்ந்தது. அந்த மீறலைக்கூட உரையாடல்களாக, விவாதங்களாகவே வடநாட்டில் வைத்துக் கொண்டார்கள்.
இதுதான் பெரியாருக்கும் நிகழ்கிறது. பெரியார் மீண்டும் மறுவாசிப்புக்கு உள்ளாவது என்பதை அவரது ஆதரவாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவர்கள், ‘கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை’ என்று கூறிய பெரியாரைக் கடவுள் ஆக்கிவிட்டு, ‘சொந்தப்புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தி ஒன்றே போதும்’ என்ற அகங்காரத்தில் உன்மத்த வெறியில், எதிர்கொண்டவர்களைத் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பெரியார் மீது இப்போது எழுந்திருக்கும் விமர்சனங்கள் எப்போதும் இருப்பவைதான். ஆனால், பதற்றத்தின் அளவு எப்போதும் இல்லாதது. புனிதப் பிம்பங்களாக மாற்றப்பட்டவர்களின் அடையாளங்களுக்கு எதிராக எதிர்வினைகள் நிகழ்ந்துகொண்டே இருப்பது என்பதுதான் இயற்கை. இதில் எவரும் பதற்றமடையவோ, வன்முறை வெறிக் கொள்ளவோ எதுவும் இல்லை. பெரியாரைப் பற்றி எந்தவிதமான விமர்சனமும் எழுந்துவிடக்கூடாது என்பதில் இவர்கள் காட்டுகிற தீவிரம் மிகவும் அபத்தமானது.
பெரியாரைக் கடந்துசென்றவர்களைக்கூட அதிதீவிர பெரியார் எதிர்ப்பாளர்களாக மாற்றியதில் பெரியாரைப் பற்றித் திட்டமிட்டுப் புனையப்பட்ட மிகைப்பிம்பமும், பெரியாரை சர்வலோக நிவாரணியாக மாற்றி வழிபட்ட திராவிட ஆதரவாளர்களின் வழிபாட்டு மனநிலையும், காலத்திற்கு ஒவ்வாத முரண்பாட்டு மூட்டையான பெரியாரின் குழப்பவாதங்களை இப்போதும் உட்புகுத்தியதும்தான் முதன்மைக்காரணம் எனலாம்.
பெரியாரைப் பற்றி இப்போது எழுகிற எதிர்க்குரல்கள் யாவும் புதிதானவை அல்ல. இதற்கு முன்னால் பெரியாரைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கின்றன. சமகாலத்தில் தீவிர தமிழ்த்தேசியத்தளங்களிலிருந்து பெரியாரைப் பற்றிய விமர்சனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டேதான் இருக்கின்றன. பெரியார் மிக நீண்டநெடிய அரசியல் பொதுவாழ்வைக் கொண்டவர். அவரது தத்துவம் என எதையும் நிலைநிறுத்த முடியாத அரசியல் நடவடிக்கைகளை உடையவர். காங்கிரசு கட்சியைவிட்டு வெளியே வந்து, அதனை எதிர்ப்பதற்காக முதல் மொழிப்போரை ஆதரித்த பெரியார், அதே காங்கிரசை ஆதரிப்பதற்காக இரண்டாம் மொழிப்போரை எதிர்த்தார். முதல் குடியரசு இதழ் 02-05- 1925 அன்று தொடங்கும்போது, ‘ஈசன் அருளால்’ எனத் தொடங்கியுள்ள பெரியார், 01-01-1962 ஆம் ஆண்டு எழுதிய, ‘விடுதலை’ கட்டுரையில், ‘10 வயதில் இருந்து தான் நாத்திகன்’ எனக் கூறியுள்ளார். முதல் குடியரசு இதழைத் தொடங்கும் போது அவருக்கு வயது 46. 1925ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த பி.டி. தியாகராயர் இறந்தபோது, “அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்கிறார் பெரியார். ‘ராமசாமி நாயக்கர்’ என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அவர் தனது சாதிப்பட்டத்தை 1927ஆம் ஆண்டுதான் நீக்கினார். கீழ்வெண்மணி படுகொலையில் பெரியார் சாதியவாதிகளுக்கு ஆதரவாகத்தான் நின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரசு கட்சி கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டத்தைப் போல, ஒரு காத்திரமானப் போராட்டத்தை பெரியார் ஏன் தமிழ்நாட்டில் முன்னெடுக்கவில்லை? என்பது கேள்விக்குரியது. தொடக்கத்தில், ‘குடியரசு’ இதழின் முத்திரைக்கு கீழாக, பெரும்பாவலர் பாரதியாரின், ‘எல்லோரும் ஓர் குலம்! எல்லோரும் ஓரினம்! எல்லோரும் இந்திய மக்கள்!’ எனும் வரிகள் இடம் பெற்றிருந்தது. 1930ஆம் ஆண்டுக்குப் பிறகாகத்தான் பாரதியாரை பெரியார் நிராகரித்தார். அண்ணா மனமுவந்து ஏற்றுக்கொண்ட இந்தியாவின் சுதந்திர தினத்தை கருப்புத் தினமாகவும் அறிவித்தவர் பெரியார்.
கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு, இந்திய எதிர்ப்பு என்பது எல்லாம் பெரியாருக்குக் காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றமென்றால், இதே கருத்து மாற்றம் பட்டறிவு மூலம் எவருக்கேனும் நிகழும்போது ஏன் வலிக்கிறது? என்பதுதான் நமது கேள்வி. பெரியாரின் நிலைப்பாடுகள் காலந்தோறும் மாறி வந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் தத்துவார்த்தரீதியில் அமையாமல், அந்தந்தச் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல, பெரியார் என்ற தனி மனிதனின் எண்ணத்திற்கும், முடிவுக்கும் ஏற்றாற்போலவே அமைந்தன எனலாம்.
பெரியார் வாழும் காலத்திலேயே அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதன், ம.பொ.சி போன்ற தமிழினத்தின் தலைவர்களால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். இறுதிக்காலத்தில், தன் பாடல்களில் திராவிடத்தை நீக்கிய பாரதிதாசனோடும் முரண்பட்டார் என்றெல்லாம் தகவல்கள் உண்டு.
அறிஞர் குணா எழுதிய, ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற சிறு நூல் என் கைகளுக்கு கிடைத்தக் காலத்தில் நான் தீவிர பெரியார் ஆதரவாளர். பிறகு, அ. மார்க்ஸ் அந்தப் புத்தகத்திற்கான எதிர்வினை கட்டுரைகளை ஒரு நூலாக்கி இருந்தார். அந்த நூலின் பெயர், ‘குணா பாசிசத்தின் வடிவம்’. அதன்பிறகு, தற்போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருக்கிற ரவிக்குமார், 2002ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில், ‘தாய்மண்’ இதழில் எழுதிய பல்வேறு கட்டுரைகள் அப்போது மீண்டும் விவாதப் பொருளாக மாறின. பிறகு, பெரியார் குறித்த விமர்சனங்களோடு எண்ணற்ற புத்தகங்கள் காலந்தோறும் வெளிவந்து கொண்டேதானிருந்தன. அதில் தமிழ்த்தேசியத் தத்துவப் பேராசன் ஐயா பெ.மணியரசன் அவர்கள் எழுதிய, ‘பெரியாருக்குப் பின் பெரியார்’ , ‘திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? , ‘வெண்மணித்தீ வெளிச்சத்தில் காங்கிரசு – கம்யூனிஸ்ட் – திராவிட அரசியல்’, வழக்கறிஞர் சக்திவேல் எழுதிய, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ , ’வழக்கறிஞர் குப்பன் எழுதிய, ‘தமிழரின் இனப்பகை ஈவெரா’, சுப்பு எழுதிய, ‘திராவிட மாயை’, சடகோபன் எழுதிய, ‘ஆரிய திராவிட மாயை’, முருகு ராசாங்கம் எழுதிய, ‘பெரியாரின் குடியரசு – முதல் மலர் கிடைத்துவிட்டது’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக, இடைநிலை சாதிகளுக்காகத்தான் போராடினார் பெரியார்; தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அல்ல என்கிற கருத்தோட்டத்தில் ஏராளமான நூல்கள் ஆதித்தமிழர்கள் பார்வை நிலையிலிருந்து எழுதப்பட்டு, பெரியாரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் மறுவாசிப்புக்கும், கடுமையான எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கின்றன. பெரியார் மறைவுக்குப் பின்பு, ‘பெரியாரின் கொள்கைகளைத் குழிதோண்டிப் புதைத்த திராவிடர் கழகம்’ என வே. ஆனைமுத்து எழுதிய நூலும் இருக்கிறது.
‘தமிழ்த்தேசியம் எதிர் திராவிடம்’ என வரும்போது திராவிடத்தின் வாளாகவும், திராவிடத்தின் கேடயமாகவும் பெரியாரே முன்னிறுத்தப்படுகிறார். எனவே, காலங்காலமாக தமிழ்த்தேசியவாதிகளால் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் பெரியார். மேலும், மொழி, தேசிய இனம், தேசம், நிலப்பரப்பு எனும் எதிலும் பெரியார் விருப்பம் கொண்டவர் அல்லர். எனவே, தமிழர் இன உரிமைகளுக்கான கருத்தியலின் அரசியல் வடிவமான, ‘தமிழ்த்தேசிய அரசியல்’ என்பது பெரியாரின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானதுதான். ‘தமிழ்த்தேசியம்’ என்கிற இனவிடுதலை அரசியல் பயணத்தில் நிற்பவர்களுக்கு திராவிடம் என்பது மிகப்பெரிய தடையாக எழும்போது, பெரியார் நிலைகள் தாக்கப்படுவது இயல்பானதுதான். மேலும், பெரியாரை தமிழின அறிவுலகத்தின் உச்சமாக வைத்து வழிபடும் அந்த வழிபாட்டு மனநிலைதான் அதிகாரத்தின் வழியாக பொதுப்புத்தியாக மாறி, இன்று பெரும் ஆபத்தாக மாறி நிற்கிறது. தமிழ்த்தேசியர்களால் பெரியார் குறித்த விமர்சனங்களைச் சார்ந்து, திராவிடக் கூடாரங்களில் எழும் பதற்றம் அவர்களது கருத்தியல் வறட்சியைக் காட்டுகிறது. மேலும், பெரியார் புத்தகங்களை முன்வைத்து நிகழும் இந்த உரையாடல்களில் சான்றுகளைத் தேடி, இருதரப்பும் அலைந்து கொண்டிருக்கையில் அதை நாட்டுடைமை ஆக்காமல் தனி உடைமையாக வைத்திருப்பது குறித்து திராவிட ஆதரவாளர்கள் பேச மறுப்பதன் உண்மை பொருள் என்னவெனில், பெரியார் கருத்துக்கள் பல இன்று ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஒன்றுக்கொன்று முரண்பட்டு அவரது பிம்பத்தை அவரே சிதைக்கிற வகையில் அமைந்திருப்பதுதான். இது பெரியார் மறுவாசிப்புக்கு/ விமர்சனங்களுக்கு உள்ளாகிற காலம்; புனிதப்பிம்பங்களும், போலிக் கருத்துருவாக்கங்களும் உடைகிற காலம்!
பெரியார் எழுதிய எழுத்துக்களை அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள், ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்கிற தலைப்பில் வரிசை நூல்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். அதேபோல, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களால் ‘பெரியார் களஞ்சியம்’ என்கிற தலைப்பில் தொடங்கப்பட்டு வரிசை நூல்களாக வெளிவந்திருக்கின்றன. பெரியாரின் கருத்துக்கள் இதுவரை நமக்கு நூலாகவும், இணையப் பதிவுகளாகவும், பல்வேறு அறிஞர்கள் தெரிவித்தக் கருத்துக்களின் அடிப்படையிலும் இந்தத் தொடர் முழுக்க மீள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றன. பெரியார் குறித்த இந்த விவாதங்கள் தமிழ் அறிவுப்பரப்பில் எவ்வித அதிகாரக் கட்டுப்பாடும் இன்றி, சுதந்திரத்தோடு நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தின் வெளிப்பாடே இந்தத் தொடர்!
பெரியாரை ஆழமாக வாசித்த பெரியாரியவாதிகள் பெரியார் ஒன்றுக்கொன்று முரணாக வைத்த கருத்துக்களை ஒருதலைப்பட்சமாக அணுகி, பெரியார் மீது உள்ள அளவற்ற வழிபாட்டு மனநிலையாலும், கண்மூடித்தனமானப் பற்றினாலும் எவ்வித விமர்சனப் பார்வையுமின்றி மொத்தமாகக் கடந்திருக்கிறார்கள். அந்த விபத்து எனக்கும் நடந்திருக்கிறது என்பதை மறைப்பதற்கில்லை. அளவற்ற அதே பற்றினால் பெரியார் குறித்து பல கட்டுரைகளை ஏற்கனவே எழுதியிருக்கிற எனக்கும் இது ஒருவித புது அனுபவம்தான். பெரியாரின் கருத்துக்களை ஏன் மறுவாசிப்புக்கு உள்ளாக்க வேண்டும்? என்கிற கேள்வி அபத்தமானது. ஒவ்வொருவர் கருத்தும் வருங்காலத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பதுதான் வரலாறு நமக்கு விடுத்திருக்கிற செய்தியாகும்.
தமிழர்களின் உச்சபட்ச அறநூலாகப் போற்றப்படும் திருக்குறள் குறித்து பெரியார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோது, பி.ஆர்.பரமசிவ முதலியார் ஒரு நீண்ட மறுப்பு எழுதினார். அதற்கு பெரியார் அளித்த பதில்கள், பெரியார் கருத்துக்களுக்கும் பொருந்தும்தானே!
“உண்மையைப் பேசும்போது அதனால் யாருக்கும் பழிப்பு ஏற்படுமானாலும் அது பற்றி கவலை கொள்ளாது அந்தப் பழிப்பிற்குக் காரணமாக உள்ளதை ஒழிக்க முயல வேண்டியதே வீரர்களின் கடமையாகும்.” ( ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி 1 – பக்கம் 213)
பார்ப்பன எதிர்ப்பு அரசியலிலிருந்து பெரியாரது அரசியல் உருவாகிறது. பார்ப்பன எதிர்ப்பு அரசியலை ஆரிய எதிர்ப்பு அரசியலாக வரையறுத்த பெரியார் வரலாற்றில் இல்லாத ‘திராவிடர்’ என்கிற இனத்தை முன்னிறுத்தினார். தனது எழுத்துக்களில் பேச்சுக்களில் ஒரு இடத்தில், ‘திராவிடர்’ என்றும், இன்னொரு இடத்தில், ‘தமிழர்’ என்றும் மாற்றி மாற்றி அடையாளப்படுத்தி, தமிழர் நிலத்தில், தமிழர் அறிவுப்பரப்பில் அடையாளக் குழப்பங்களை உண்டாக்கினார். அதற்கு கால்டுவெல்லை துணைக்கு அழைத்துக் கொண்ட பெரியார், தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரை உள்ளடக்கி, ஆரிய எதிர்ப்புச் சொல்லாக, ‘திராவிடர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதாக புது விளக்கம் அளித்தார். “தமிழர் என்றால், அதற்குள் பார்ப்பனர் வந்து விடுவார்கள்” என்று விசித்திர விளக்கம் அளித்த பெரியார், ‘திராவிடர்’ என்ற சொல்லே தென்னிந்திய பார்ப்பனர்களை குறிக்கும் சொல்தான் என்பதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. ‘திராவிடம்’ என்ற சொல் தமிழ்ச்சொல்லும் அல்ல; தமிழ் இலக்கியங்களில், ‘திராவிடம்’ என்ற சொல் எங்கும் காணப்படவில்லை என்பதும், பெரியார் நிறுவ முயன்ற, ‘திராவிடம்’ என்ற கற்பனை இனவாதத்தை தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் புறக்கணித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இல்லாத கற்பனைவாதமான திராவிடத்தை ஆரிய எதிர்ப்பு சொல்லாக அறிவித்து, தமிழர்களின் இயல்பான தேசிய இன அடையாளத்தை மறுத்து, திராவிடரென்பதையே ஒரு இனமாக வரையறுக்க முயன்ற பெரியார் தனக்கு இனப்பற்றோ, மொழிப்பற்றோ இல்லை என்றார். ஆனால், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, “கண்ணப்பர் தெலுங்கர்; நான் கன்னடியன்; தோழர் அண்ணாதுரை தமிழர்” என்று கூறியதோடு மட்டுமில்லாமல், “நான் பலிஜா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு – 22.08.1926) என்றும் சுயஅறிமுகம் செய்கிறார்.
தனக்கு மொழி அபிமானமோ, தேச அபிமானமோ இல்லை எனத் தீர்க்கமாக அறிவித்த பெரியார், தமிழ்மொழியை விமர்சித்த அளவுக்கு தனது தாய் மொழியான கன்னடத்தையோ, இதர திராவிட மொழிகள் என அடையாளம் காட்டிய தெலுங்கையோ, மலையாளத்தையோ விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த மொழியின் மீதும் பற்றில்லை என்ற பெரியார், ஆங்கில மொழி மீது அளவற்ற நாட்டம் கொண்டிருந்தார். பெரியாரின் மொழி, இனம் குறித்தான முரண்பாடான கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் வரும் அத்தியாயங்களில் காண்போம்.
( 2025 ஈரோடு இடைத்தேர்தல் முடிவின் அசலான குறுக்குவெட்டுத் தோற்றம்)
எப்போதும் தேர்தல் களம் என்பது கொள்கையற்ற சுயநலப் பிழைப்புவாதிகளுக்கு அது தான் சுரண்டுகிற மற்றுமொரு வாய்ப்பு .ஆனால் கொள்கைப் பற்றுறுதி என்ற கனவின் தணலோடு நிற்கிறவர்களுக்கு தேர்தல் களம் என்பது கருணையற்ற வேட்டைக்களம்தான்.
ஏனெனில் நாம் தமிழர் அரசியலை விரும்பி ஏற்ற கூட்டமல்ல. அவர்கள் அதிகாரத்தைத் தேடி அலைபவர்களும் அல்ல. அவர்கள் இன அழிவின் வலியால் வீதிக்கு வந்தவர்கள். மலிந்த ஜனநாயகத்தின் துருவேறிய ஈட்டி முனைகளுக்கு முன்னால் எதனையும் இழக்கத் துணிந்து இலட்சிய இன்முகத்தோடு நிற்பவர்கள்.
தேர்தல் வணிகம் ஆகிவிட்ட நிலையில்,பெரும்பாலும் தகுதி வாய்ந்த கொள்கைவாதிகள் தேர்தல் களத்தை தவிர்த்துப் போவதற்கு மிக முக்கியமான காரணம்.. அது கோருகின்ற அளவற்ற உழைப்பும், இறுதியில் அடைகிற துளியும் நியாயமற்ற முடிவும்தான்.
ஆனால் இதில் அண்ணன் சீமான் வித்தியாசமாக யோசித்தார். கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து எல்லா தேர்தல்களிலும் போட்டியிடுவது. அதுவும் தனித்து போட்டியிடுவது. இளம் தமிழ்த் தேசியர்கள் தேர்தல் என்ற அந்த வேட்டைக்காட்டில் தனித்து திரிந்து, வேட்டையாடப் பழகிப் பழகி இறுதியில் புலியாகவே மாற்றுகிற நம்பிக்கை வித்தை அது .
உண்மையில் ஈரோடு இடைத்தேர்தலைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கு ஒன்று தெரியும். நேற்றைய இரவில் எந்த திராவிட ஆதரவாளர்களாலும் நிம்மதியாக தூங்கியிருக்க முடியாது. அவர்களது மகத்தான நம்பிக்கையை அண்ணன் சீமான் உடைத்ததோடு மட்டுமல்லாமல், இனி அந்த நம்பிக்கையை யாரும் சுமக்க முடியாத அளவிற்கு ‘தேவையற்றச் சுமையாக’ மாற்றியதுதான் அவர் செய்ததிலேயே மகத்தான “சம்பவம்”.
எங்களை ஒவ்வொரு நொடியும் எதிர்ப்பதற்காகவே இயங்கிக் கொண்டிருந்த ஊடகங்கள், ஏறக்குறைய எல்லா கட்சியினரும் ஒன்றாக நிற்கும் நிலை, மறுபக்கம் எங்கள் கட்சியிலிருந்து எல்லோரும் போய்விட்டார்கள் என்கிற தோற்றம் ,
மறுபுறம் அண்ணன் தலைவரை சந்திக்கவே இல்லை என்கிற அவதூறு, அதற்கு ஆதரவாக திராவிடக் கூட்டம் உலகம் தழுவி செய்த ஊடறுப்பு வேலைகள், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் எல்லாவற்றிலும் தடை, அனைத்திலும் போராட்டம், ஓட்டு கேட்க செல்லும் இடங்களில் எல்லாம் கூலிப்படைகளை வைத்துக்கொண்டு செய்த தடுப்பு வேலைகள் என நாற்புறமும் பகைச் சூழ்ந்து நிற்கும் களத்தில் அண்ணன் சீமான் அனைத்திற்கும் முகம் கொடுத்து தனித்து நின்றார்.
அவரை வன்மத்தோடு அழுத்தினார்கள்.
அவர் தண்ணீரில் அழுத்தப்பட்ட பந்தாய் மாறினார். எதிரிகள் அழுத்த அழுத்த அவர் எகிறிக் கொண்டு பாய்ந்தார். சிறு தீபமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தவரை ஊதி ஊதி காட்டுத் தீயாய் மாற்றினார்கள். அவர் கொழுந்து விட்டு எரியத் தொடங்கினார்.
அந்த சவாலை அவர் விரும்பி ஏற்றார். பிரச்சாரம் முடிவடையும் முந்தைய நாள் இரவில் அவர் எங்களிடத்தில் அழுத்தமாக ஒன்று சொன்னார். ” எது நடந்தாலும் இதுவரை நடக்காத ஒன்றுதான் இனி நடக்கும்” என. நடந்தேவிட்டது.
கிடைத்திருக்கும் 24,182 வாக்குகளும் அதிமுக பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு அளித்த வாக்குகள் என அறிவாலயத்தில் கூலி வாங்கிக் கொண்டு கூவுகிறவர்கள் வேண்டுமானால் சொல்லிக் கொண்டு சமாதானம் அடையலாம்.
உண்மை வேறு மாதிரியானது. 25% அதிமுக / பாஜக Core கட்சிக்காரர்கள் எப்போதும் நாம் தமிழரை விரும்பாதவர்கள்.அவர்கள் திமுகவிற்கும் ஓட்டு போட முடியாமல் நோட்டாவில் குத்தினார்கள். மீதம் 75% diluted கட்சிக்காரர்களை ஆளுங்கட்சி ஒட்டுமொத்தமாக எளிதாக விலைக்கு வாங்கியது.
பிறகு நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்குகள்… அண்ணன் சீமானின் அனல் தெறிக்கும் பிரச்சாரத்திற்கு கிடைத்த வாக்குகள்.திராவிடம் vs தமிழ்த் தேசியம் என்று கிளம்பிய விவாதத்தால் ஈர்க்கப்பட்ட முதல் தலைமுறை இளைஞர்களின் வாக்குகள். திமுகவின் திறமையற்ற ஊழல் மலிந்த ஆட்சி முறைக்கு எதிராக ஒற்றை மனிதனாய் கலகம் செய்யும் சீமானின் ஆளுமைக்கு கிடைத்த வாக்குகள்.
மற்றக் கணக்குகள் அவரவர் கற்பனைக்கு ஏற்றது. ஒரு இடைத் தேர்தலில் பல கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு நிற்கின்ற ஆளுங்கட்சியை, எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல், பொருளாதார/சாதியப் பின்புலம் இல்லாமல், ஒரு எளியப் பெண் வேட்பாளரை முன்னிறுத்தி, துணிவுடன் கூட்டணி இல்லாமல், தேர்தலை எதிர்கொண்டு, ஏறக்குறைய 25 ஆயிரம் வாக்குகளை ஒரு எளிய கட்சி பெறுகிறது என்றால்.. அது வலுவான ஆளுங்கட்சி முழுமையாக அடைந்திருக்கிற தோல்வி. இனி வரப்போகிற தோல்விகளுக்கெல்லாம் எழுதப்பட்டிருக்கிற முன்னெழுத்து.
நோட்டாவை விட நாம் தமிழர் கட்சி குறைந்து வாக்கு வாங்கி விட வேண்டும் என கணக்கு போட்டு நோட்டு கொடுத்த ஆளுங்கட்சி தனது உள்ளார்ந்த விருப்பத்தில் தோற்றுப் போனது அதன் உச்சந்தலையில் அடிக்கப்பட்ட ஆணி.
கூடுதலாக எல்லாவற்றிலும் மிக முக்கியமான சுவாரசியமான விஷயம் எதுவென்றால்.. இந்தத் தேர்தலில் பெரியார் ஒரு காரணி அல்ல என்ற உண்மை புலப்பட்டதுதான். நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்குகளுக்கும் பெரியார் ஒரு காரணி அல்ல, திமுக வாங்கிய வாக்குகளுக்கும் பெரியார் ஒரு காரணி (Factor ) அல்ல. திமுக வாங்கிய வாக்குகள் பெரியார் தாத்தாவால் அல்ல, காந்தி தாத்தாவால் என்கிற சமூக வலைத்தள மீம்ஸ்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஈரோட்டு மக்கள் அதைத்தான் காட்டியிருக்கிறார்கள்.
ஏறக்குறைய 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட ஈரோட்டில் பதிவானது என்னவோ ஒரு லட்சத்து 55 ஆயிரம் வாக்குகள் மட்டுமே. 66 சதவீதம் வாக்குகளில் திமுக பெற்றிருக்கும் வாக்குகளை விட, தேர்தலில் வாக்களிக்காமல் இருந்த மற்றும் திமுகவுக்கு எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகளுக்கு வாக்களித்து இருக்கின்ற, நோட்டாவில் வாக்களித்திருக்கின்ற என இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகள்தான் அதிகம். உண்மையான ஜனநாயகப் போரில் ஆளுங்கட்சியான திமுக தோற்றுவிட்டது. அதை மறைக்கத்தான் யாரும் டெப்பாசிட் வாங்கவில்லை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சில சுவாரசியமான காட்சிகளும் நடந்தன.
பெரியாரை முன்வைத்து உங்களால் ஓட்டு வாங்க முடியுமா என அண்ணன் சீமான் போகிறப் போக்கில் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன பெரியாரிய அமைப்புகள் இந்த தேர்தல் களத்தினைத் தங்களுக்கான சவாலாக எடுத்துக்கொண்டு , பெரியாரை சீமான் திட்டுகிறார்/ புறக்கணிக்கிறார் /விமர்சிக்கிறார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, பெரியாரை முன்னிறுத்தி, ஈரோட்டு மண்ணில் வெண்ணிலா என்ற வேட்பாளரை 32 அமைப்புகள் சார்பாக நிறுத்தி, பெற்ற வாக்குகள் 222. உண்மையில் இதுதான் ஈரோட்டில் பெரியார் கொண்டிருக்கின்ற செல்வாக்கா என்றெல்லாம் நாம் கேள்வி எழுப்பப்போவதில்லை.உண்மையில் பெரியாருக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை.ஏற்கனவே சொன்னது போல அவர் ஒரு Factor இல்லை என்று பெரியாரிய அமைப்புகளே செய்து கொண்ட சுயச் சோதனையின் பதில்தான் இது.
திமுக வழக்கம் போல 2026 தேர்தலையும் இப்படி அணுகி விட முடியாது என்பதை உணர்த்தும் முடிவு தான் இது. அதே சமயத்தில் நாம் தமிழர் தனித்து நின்றாலும் தனித்துவத்தோடு மேலெழும்ப முடியும் என்பதற்கான நம்பிக்கையை தன் தம்பிகளுக்கு/ தங்கைகளுக்கு மீண்டும் ஒருமுறை வழங்கி அண்ணன் சீமான் அடுத்தப் பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக.. எங்கள் வேட்பாளர் அக்கா சீதாலட்சுமியை அருகில் பார்த்தபோது, காயம் பட்ட புலிப் போல கடுமையான களைப்போடு இருந்தாலும் ஆவேசத்தோடு களத்தில் நின்றார்.
சந்திரகுமார் சட்டமன்றத்தில் போய் மேசையை தட்டுவதை தாண்டி எதுவும் பேசப் போவதில்லை. ஆனால் அக்கா சீதாலட்சுமி போய் இருந்தால்…. அவரது அனல் மொழியில் சட்டமன்றம் தகித்திருக்கும். ஈரோட்டின் தலையெழுத்து மாறி இருக்கும். வெறும் சீதாலட்சுமி அல்ல அவர். சளைக்காத கடும் உழைப்பின் அடையாளம்.
நாம் தமிழர் கட்சியை எதிர்த்துப் பேசும் எல்லோருக்கும் ஒரு உண்மை தெரியும். எல்லா விமர்சனங்களையும் தாண்டி அந்தக் கட்சி நிற்கிறது என்று சொன்னால் அதன் உள்ளார்ந்த ஆற்றல் தான். இறுதிவரை மரபு ரீதியான போரிலேயே நிலைத்தவர்களிடத்தில் இருந்து நாங்கள் அடைந்தது.
அது தலைவர் தன் தம்பிக்கு தந்தது. அந்தத் தம்பி தன் தம்பிகளுக்கு தங்கைகளுக்கு தருவது.
“300” திரைப்படத்தில் ஸ்பார்ட்டன் நகரத்துச் சிறுவர்களை இளம் வயதிலேயே காட்டில் விட்டு விடுவார்கள். உறைய வைக்கும் குளிர், கொடும் பசி, உயிர்த் தின்ன அலையும் விலங்குகள்,வாழவே முடியாத நிலை என எல்லாச் சவால்களுக்கு முகம் கொடுத்து பிழைத்து வரும்போது
அவர்கள் வீரர்களாக திரும்புவார்கள்.
அப்படித்தான் இந்த ஜனநாயகக் காட்டில் நாங்கள் நுழைந்த போது இளம் சிறுவர்கள். ஆனால் இன்றோ..
திராவிடத் தலைநகருக்கே சென்று “திராவிட அரசனை” எங்கள் வினாக்களின் கூர்முனையில் நிறுத்தி, சுற்றி பாய்ந்த நரிக் கூட்டத்தை சம்பவம் செய்துவிட்டு, நாங்கள் நிற்கையில்.. நாங்கள் தோற்றாலும் பெருமிதமாக உணர்கிறோம்.
நாங்கள்தான் அந்த 300 பருத்தி வீரர்கள்.
இறுதியாக..
எங்களை வழிநடத்தும் எம் “King leonidas” ஆன அண்ணன் சீமான் அடிக்கடி சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.
” நாங்கள் நிரூபிப்பதற்காக போராடுபவர்கள் அல்ல. போராடுவதால் நிரூபிக்கப்பட்டவர்கள்.”
(கொஞ்சம் பெரிய பதிவு.. சில வரலாற்று உண்மைகளுக்காக..)
2006 முதல் 2009 வரையிலான காலக்கட்டம். நாங்கள் ஆர்க்குட் இணையதளத்தில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் என்கிற குழுவை வைத்து இயங்கிக் கொண்டிருந்தோம். அதன் முதல் வருடாந்திரக் கூட்டம் சென்னை விஜிபி கோல்டன் பீச்சில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை நான் தலைமையேற்று நடத்த ஐயா சுபவீ, அண்ணன் அறிவுமதி, எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன், தோழர் பாமரன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.
மறுவருடக் கூட்டத்தில் அண்ணன் சீமான் உரையாற்றினார். இதற்கு நடுவில் அண்ணன் அறிவுமதி மூலம் அண்ணன் சீமான் எனக்கு நெருக்கமாகி இருந்த காலகட்டம் அது. அப்போது சில மாதங்கள் அண்ணன் சீமானோடு எந்த தொடர்பும் கொள்ள முடியவில்லை. அவர் நாட்டிலேயே இல்லை என்றெல்லாம் தகவல். நீண்ட நாள் கழித்துதான் அண்ணன் சீமான் என் தொடர்புக்கு வந்தார்.அப்போது தோழர் மகேந்திரன் அவர்களது வழிகாட்டுதலின் அடிப்படையில் நான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் நகரத் துணைச் செயலாளர் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றத்திலும் பணிபுரிந்து வந்தேன்.
அப்போது உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தில் இருந்து நாங்கள் பிரிந்து “இணையத் தமிழர் இயக்கம்” என்பதை உருவாக்கி பணிபுரிய தொடங்கியிருந்தோம். என்னோடு தோழர்கள் கோவை யுவன் பிரபாகரன், விஷ்ணுபுரம் சரவணன், அப்போது சேனா பானா என்று அழைக்கப்பட்ட இப்போது நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கிற எனது மைத்துனர் பாக்கியராசன், இப்போது திமுகவில் இருக்கும் டான் அசோக், நண்பன் ஒட்டக்கூத்தன் என பலரும் அதில் இயங்கினோம்.
நீண்ட நாட்கள் கழித்து அண்ணன் சீமான் தொடர்புக்கு வந்த போது மிக முக்கியமான செய்திகள் இருக்கிறது தம்பி.. நேரில் சந்திப்போம் என சொல்லி இருந்தார். இதற்கு நடுவே மாவீரன் முத்துக்குமார் தற்கொடை, அடுத்தடுத்த அண்ணன் சீமான் அவர்களின் கைது என நாட்கள் கழிய அண்ணனை நான் பாண்டிச்சேரி சிறையில் தான் நேரில் சந்திக்க நேர்ந்தது.அப்போது நான் அண்ணன் சீமான் அவர்களின் சிறை தண்டனையை எதிர்த்து எழுதிய “கம்பிகளைத் தாண்டி வீசும் காற்று” என்கிற கட்டுரையை தோழர் மகேந்திரன் அவர்கள் தாமரை இதழின் அட்டைப்படக் கட்டுரையாக கொண்டு வந்தார்.
அண்ணன் சீமான் வெளியே வந்த போது போர்ச்சூழல் அங்கே இறுகி இருந்தது. இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் திரைப்பட இயக்குனர்களை வைத்துக்கொண்டு காங்கிரசை பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வீழ்த்துவதற்காக பெரும் பிரச்சார பயணத்தில் கும்பகோணத்தில் “இணையத் தமிழர் இயக்கம்” சார்பாக கும்பகோணம் மகாமகக் குளத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் ஐயரை எதிர்த்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் எழுச்சி உரையாற்றினார்.
அப்போதெல்லாம் கொளத்தூர் மணி அவர்கள், அண்ணன் அறிவுமதி அவர்கள், ஐயா சுபவீ அவர்கள் அண்ணன் சீமானோடு மிக நெருங்கிய உறவு. இவர்கள் சந்திக்கும் பல தருணங்களில் நான் உடன் இருக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அப்போது எல்லா தருணங்களிலும் அண்ணன் சீமான் தன்னுடைய ஈழப் பயணம் அனுபவங்களை முக்கியமாக தலைவரைப் பார்த்து வந்ததைத்தான் அதிகம் பேசிக் கொண்டிருப்பார். அதுவெல்லாம் பொய் என்றால் இவர்கள் அங்கேயே மறுத்து பேசி இருக்கலாம். சொல்லப்போனால் பெரியார் திக மேடைகளில் அண்ணன் சீமான் பேசும் போதெல்லாம் தனது ஈழப் பயணத்தின் அனுபவங்களைப் பற்றியும், தலைவரை சந்தித்து வந்தது பற்றியும் உணர்வுபூர்வமாக பேசுவார். அப்போதும் கூட மறுத்திருக்கலாம். அப்போது அருகில் இருந்து கைதட்டி மகிழ்ந்தவர்கள் இப்போது அவர் தலைவரையே சந்திக்கவில்லை என்றெல்லாம் பேசுவது அவர்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்பதை உலகிற்கு காட்டுகிறது.
மறைந்த இயக்குனர் அப்பா மணிவண்ணன் அவர்களும் அண்ணன் சீமான் அவர்களும் தலைவரோடு நிகழ்ந்த சந்திப்பு குறித்தும் அப்போது தலைவர் தந்த பணிகளைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தபோது கொடியைப் பற்றி பேச்சு வந்தது. இயக்குனர் மணிவண்ணன் தலைவர் அண்ணன் சீமான் அவர்களுக்கு அளித்த பணிகளை செய்ய தலைவரின் கொடியை சில மாறுதல்கள் மட்டும் செய்து நாம் பயன்படுத்துவோம் என்றார். அந்த சந்திப்பில் தலைவரோடு நடந்த சந்திப்பில் நிகழ்ந்த பல செய்திகளை அண்ணன் சீமான் எடுத்துரைக்க அருகில் இன்று அண்ணன் சீமான் சொல்வதை எல்லாம் மறுக்கின்ற பலரும் இருந்தார்கள். நானும் அருகில் இருந்தேன். முதல் கொடி அறிவிப்பு மாநாடு தஞ்சையில் நானும், தஞ்சையின் மூத்த வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை அவர்களும் திலகர் திடலில் நடத்தினோம். சோழர்களின் கொடி புலிக்கொடி என்பதால் கொடி அறிமுகத்திற்கு தஞ்சை தேர்வு செய்யப்பட்டது.
நாம் தமிழர் இயக்கமாக இருந்த காலத்தில் இருந்த கொடி சிறிது சிறிதாக சில மாற்றங்கள் அடைந்து இன்று இருக்கின்ற இறுதி நிலையை அடைந்தது.
நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தலைவரின் எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. தலைவரே ஆன்மப் பலமாக இருந்து அதை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நான் உறுதியாக உணர்ந்துதான் நான் பெருமிதத்தோடு அண்ணன் சீமானுடன் நிற்கிறேன்.
முதலில் சந்திக்கவே இல்லை என்றார்கள். பின்னர் திரைப்படங்களைப் பற்றி மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றார்கள். பிறகு ஐந்து நிமிடம் தான் பார்த்தார் என்றார்கள். பிறகு புகைப்படம் மட்டும் தான் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்து விட்டார் என்றார்கள். பிறகு அந்த புகைப்படம் பொய்யானது என்றார்கள். இப்போது வடிவமைத்து கொடுத்தது நான் தான் என்று யாரையோ பேச வைக்கிறார்கள்.
அண்ணன் சீமான் தலைவரை சந்தித்ததை பற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எத்தனையோ இயக்கத்தின் மூத்தவர்கள் சொல்ல நான் எல்லாம் கேட்டிருக்கிறேன். சொல்லப்போனால் தலைவர் சந்திப்பில் நடந்த பலவற்றை அண்ணன் சீமான் இதுவரை சொல்லவில்லை. இன்னும் வெளியிடாத பல புகைப்படங்கள் அதற்கு ஆதாரமாக இருக்கின்றன. அதில் சிலவற்றை நானே பார்த்திருக்கிறேன்.
தலைவரை சந்திக்காத ஒருவரை பற்றி தன் இறுதி நொடியில் அண்ணன் சூசை பேச வேண்டிய அவசியம் இல்லை. “சீமான் கிட்ட சொல்லுங்கோ.. அவரிடம் தான் விட்டுப் போறோம்..” என்கிற அவரது குரல் இன்னும் இந்த காற்றில் மிதந்துக் கொண்டுதான் இருக்கிறது.
அண்ணன் சீமானின் ஈழப் பயணம் எந்த நேரத்தில் எப்பேர்பட்ட தருணத்தில் நடந்தது, அதில் என்னென்ன பேசப்பட்டது, அவர் எவரையெல்லாம் சந்தித்தார் என்பது அண்ணன் சீமானோடு அப்போது இருந்த எனக்கு உட்பட எல்லோருக்கும் தெரியும்.
இப்போது தரம் தாழ்ந்து பேசும் பெரியவர் கொளத்தூர் மணி அவர்கள் இதையெல்லாம் பொய் என்று சொல்லி இனிமேலும் மறுக்கக்கூடும். மீசையை தவிர வேறு எதையும் நிமிர்த்தாத சுபவீ அண்ணா அறிவாலயத்து திண்ணைக்காக இவற்றையெல்லாம் தவறு என தர்க்கம் செய்யக்கூடும்.
இன்னும் நான் பெயர் சொல்லவே கூசுகின்ற சில பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இதற்கெல்லாம் ஜால்ரா அடித்து கதைகள் கட்டக்கூடும்.
உண்மைகள் தெரிந்தவர்கள் எல்லோரும் உயிருடன் தான் இருக்கிறோம். கவனம்.
இத்தனை ஆண்டுகள் கழித்து இதுவெல்லாம் ஏன் பேசப்படுகிறது என்றால் கடந்த பத்து நாட்களாக அண்ணன் சீமான் அடித்த அடி அப்படி.
புதைக்குழியில் ஆழப் புதைக்கப்பட்ட அக்காலத்து விடுதலை இதழ்கள் ஒவ்வொன்றாய் வெளிவர… திராவிடக் கூடாரம் நடுக்கம் அடைந்து அவதூற்றுப் பொய்களை “பெரியாரைக் காப்பாற்ற பெரியவர்கள் துணையோடு” அழைத்து வந்திருக்கிறது.
பொய்களுக்குத்தான் விளம்பரம் தேவை.உண்மைகளுக்கு எந்த வெளிச்சமும் தேவையில்லை. காலப் புழுதிகளை, அவதூற்றுப் புயல்களை தாண்டி கம்பீரமாக நிற்க உண்மைக்கு எப்போதுமே வலிமை உண்டு.
என்னிடம் என் மனச்சான்று அறிய எளிமையான உண்மைகள் இரண்டு உண்டு.
இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு இறுதி நேரத்தில் ஓட்டுனர் கிடைக்காமல் நானே எனது மகிழுந்துவை எடுத்துக்கொண்டு என் தம்பிகளை அழைத்துக் கொண்டு ஓட்டிச் சென்றது வலி மிகுந்த களைப்பாக இருந்தாலும், பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. உடல் வலிமையாக இருக்கிறதா என நானே பரிசோதித்து பார்த்துக் கொண்டது நம்பிக்கை அளித்தது.
இந்த வருடம் புத்தக கண்காட்சியில் தமிழ் மொழியில் நேரடியாக எழுதப்பட்ட படைப்புகள் வழக்கத்திற்கு மாறாக குறைவாக தெரிந்தன. சில அரங்குகளின் பாதைகள் அகலமாகவும் சில பாதைகள் குறுகலாகவும் இருந்தது பல இடங்களில் நெருக்கடியாக இருந்தது. நிறைய அரங்குகளில் மொழிபெயர்ப்புகள் அதிகம் காணப்பட்டன.
அதனால் இந்த முறை மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்தி நிறைய நல்லப் புத்தகங்களை வாங்க தமிழின் நவீன இலக்கிய இளம் முகங்களாக திகழ்கிற எழுத்தாளுமைத் தம்பிகள் லட்சுமி சரவணகுமார், அகர முதல்வன் ஆகியோர் கூடவே அலைந்து உதவி செய்தனர். அவர்களுடன் என் மைத்துனர் பாக்கியராசன், தங்கை வெண்ணிலா, தமிழ் மீட்சிப்பாசறை கார்த்தி உள்ளிட்ட என் உறவுகளோடு ஒரு அட்டகாசமான அசைவ விருந்தை வழங்கிய தன் உணவகத்தில் என் தம்பி குறிஞ்சி பிரபா எனது பேரன்பிற்கு எப்போதும் உரியவன்.
எனது மகள்கள் அபி மற்றும் இசை மற்றும் மகன் பகலவனுக்காக புத்தகங்கள் வாங்க என்னைப் போலவே அலைய தொடங்கி இருக்கும் எனது மகன் சிபிக்கு எனது பேரன்பு.
என்னுடன் கும்பகோணத்தில் இருந்து புத்தக கண்காட்சிக்கு வந்த தம்பிகள் லிங்கதுரை முத்து அருண் எனது மகன் சிபி கௌதம் சென்னையில் இணைந்து கொண்ட தம்பிகள் எங்கள் மாவட்ட செய்தி தொடர்பாளர் தம்பி மணிகண்டன் தம்பி அன்பு ராஜேஷ், அரங்க உரிமையாளர்கள் பதிப்பாளர் சரவணன் தங்கப்பா, தமிழம் செந்தில்நாதன், தம்பி இடும்பாவனம் கார்த்திக் எப்போதும் என்னுடன் இணைந்து இருக்கிற என் மைத்துனர் பாக்கியராசன் என பலரும் புத்தகம் வாங்க அலைந்த போது, நடக்க முடியாத என்னைச் சுமந்து, என்னோடு திரிந்து என்னை ஆசுவாசப்படுத்தி, ஆங்காங்கே அமர நாற்காலிகள் வாங்கி கொடுத்து பல்வேறு பேருதவிகள் செய்தார்கள். அவர்கள் உதவி இல்லை என்றால் எதுவும் சாத்தியம் இல்லை.
இந்த வருடம் எனது கட்டுரை அடங்கிய அன்பு அண்ணன் பாலமுரளி வர்மன் தொகுப்பில் உருவாகி அண்ணன் சீமான் வெளியிட்ட “தமிழ்த்தேசியம் ஏன் எதற்கு எப்படி” என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் சரி, விற்பனையிலும் சரி பரபரப்பை கூட்டியது. தமிழ்த் தேசியத்தின் மீதான அறிவுலகின் நவீனத் தீண்டாமையை பெரும் கருத்துத் சுத்தியல் வைத்து உடைத்த வேலையை சிறப்பாக செய்த அண்ணன் பாலமுரளி வர்மன் அவர்களுக்கு எனது மனமார்ந்தப் பாராட்டுக்கள்.
அதேபோல் எனது கவிதைத் தொகுப்பான “நீல அந்தி” சிந்தனை விருந்தகம் வெளியீடாக அதன் அரங்கில் வெளியானது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை அளித்தது. நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய எழுத்தாளர்கள் ஆய்வாளர் மன்னர் மன்னன், குணா கவியழகன், அஜிதன், தீபச்செல்வன் ஆகியோரை சந்தித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது. வழக்கம்போல் அண்ணன் பேரறிவாளன், அம்மா அற்புதம், எனது ஆசான் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரையும் பார்த்து உரையாடி விட்டு வந்தேன்.சில புத்தகங்களை சென்னையிலேயே சிந்தனை விருந்தகம் அரங்கில் விட்டு விட்டு வந்து விட்டேன். அதை பாதுகாத்து பத்திரமாக அனுப்பிய சரவணன் தங்கப்பா அவர்களுக்கும், எனது மாப்பிள்ளை அஜித் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
புத்தகங்களை அள்ளிக்கொண்டு மகிழ்ந்துவை ஓட்டி வரும்போது புத்தகம் சினிமா என உரையாடி நடு இரவில் மிகுந்த களைப்போடு வீடு திரும்பும் போது வாங்கி வந்த புத்தகங்களை அடுக்கி பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் போது களைப்பை மீறி ஒரு ராஜ போதை எழுகிறது அல்லவா… அது எதற்கும் ஈடாகாது.
இவ்வளவு புத்தகங்கள் வாங்கி படிக்கிறீர்களா என சென்ற வருடமும் கேட்டவர்களுக்கும் இந்த வருடமும் கேட்பவர்களுக்கும் சொல்லிக் கொள்ள ஒரே ஒரு பதில் தான்.. நம்மைச் சுற்றி இவைகள் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இவைகளுக்கு மத்தியில் வாழ்தல் என்பது வரம்.பெரும்பாலும் படித்து விடுவேன். சில படிக்க முடியாமலும் போய்விடுகிறது. ஆனால் வாங்காமல் இருக்க முடியவில்லை.பெரும்பாலும் புத்தகங்களை வாங்குவதை தவிர வேறு பெரிய செலவுகள் எதுவும் நான் செய்வதில்லை. எனது நூலகத்தில் இருக்கும் போது தான் என்னை பரிபூரணமாக உணர்கிறேன்.
இந்த வருடம் வாங்கியப் புத்தகங்களின் பட்டியல்.****************
1)யானைகளும் அரசர்களும்- சுற்றுச்சூழல் வரலாறு-தாமஸ் ஆல் ட்ரவுட்மன்.
2) திருக்குறள்- பரிமேலழகர் உரை ( என் அப்பாவிற்காக தம்பி அருண் வாங்கி கொடுத்தது)
3) திருக்குறள்- நாவலர் நெடுஞ்செழியன் உரை
4) சயனைட் – தீபச்செல்வன்
5) நபிகள் நாயகம் சில முக்கிய குறிப்புகள்- ஜியாவுதீன் சர்தார் – தமிழில் முடவன் குட்டி முகமது அலி.
6) ஆராச்சார்- கே ஆர் மீரா. தமிழில் செந்தில்குமார்.
7) குற்றமும் தண்டனையும்- தாஸ்தா வெஸ்கி – தமிழில் சுசீலா
8)கடவுளின் இறுதியாத்திரை- நேர்காணல்கள்- தமிழில் அசதா.
9) கே 3 – குறுங்கதைகள்- தமிழில் கணேஷ் ராம்.
10) 10 இரவுகளின் கனவுகள் – நாட்சுமே சோசெகி. தமிழில் கணேஷ் ராம்
11) மழையில் நனையும் பூனை மொழிபெயர்ப்பு கதைகள்- தமிழில் கோபாலகிருஷ்ணன்.
12) ஆகம்- சிங்கள நாவல்- மனுஷா ப்ரபானி திசநாயக்கா- தமிழில் எம் ரிஷான் ஷெரீப்
15) முதல் தமிழ் வீரன் பூலித்தேவன் – துர்கா தாஸ் எஸ் கே ஸ்வாமி.
16) பாயக் காத்திருக்கும் ஓநாய்.-கவிதைகள்- அப்பாஸ் கியாரோஸ்தமி தமிழில் மோகனரங்கன்
17) இந்தியாவின் சுருக்கமான வரலாறு-ஜான் ஜுபர்ஸிக்கி- தமிழில் அரவிந்தன்.
18) வணக்கம் துயரமே- பிரான்சுவாஸ் சகன்.
19) மூன்று ஆண்டுகள்- அந்தோன் செகாவ்
20) சகினாவின் முத்தம்- விவேக் ஷான்பாக்
21) முறிந்த ஏப்ரல்- இஸ்மாயில் கதாரே
22) பெருந்தொற்று- ஆல்பர் காம்யூ
23) சிக்கு பிடித்த துயர்- நவீன் கிஷோர்.
24) அலியும் நினோவும்- குர்பான் சையத்.
25) மகாபாரதம்- கணேஷ் தேவி.
26) நிச்சயக்கப்பட்ட பெண்- ஆன்டன் செகாவ்.
27) பாரிவேள்- கி வ ஜெகநாதன்.
28) ஆன்டன் செகாவ் கதைகள்.
29) ஒளியின் கைகள்- எஸ் ராமகிருஷ்ணன். 30) கவளம்- எஸ் ராமகிருஷ்ணன். 31) கற்பனை அலைகள்- எஸ் ராமகிருஷ்ணன். 32) தபால் பெட்டி எழுதிய கடிதம்- எஸ் ராமகிருஷ்ணன்.
33) மலை பூத்த போது- ஜெயமோகன்
34) நாவலெனும் கலை நிகழ்வு- பி கே பாலகிருஷ்ணன்.
35) சூரியனை அணிந்த ஒரு பெண் கே ஆர் மீரா.
36) சுதந்திரத்தின் நிறம்- கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் வாழ்க்கை வரலாறு.
37) தமிழ்த்தேசியம் ஏன் எதற்கு எப்படி தொகுப்பு பாலமுரளி வர்மன்.
38) தோழர் தமிழரசன் மூன்று அறிக்கைகள்.
39) சிலப்பதிகாரம்- முனைவர் சரவணன்.
40) கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும் – மரியா ஆஞ்சலு.
41) ஒரு பெண்மணியின் கதை- அன்னி என்னோ
42) பட்டு-அலெக்சாண்டோ பாரிகோ.
43) கபிலர்- புலவர் கோவிந்தன்
44) கடலோடியின் மனைவி- லத்தின் அமெரிக்க பெண் எழுத்து
45) கண்ணகியார் அடிச்சுவட்டில் – சி. கோவிந்தராசனார்
46) பெரும் மரங்கள் விழும்போது- என் எஸ் மாதவன் தமிழில் நிர்மல்யா.
47) ஆணவ கொலை சாமிகளும் பெருமித கொலை அம்மன்களும்- ஆ. சிவசுப்பிரமணியன்.
48) கடைசி வருகை மாய யதார்த்த வாத உலகக் கதைகள்.
49) மொழிபெயர்ப்பு கட்டுரைகள் தமிழில் அசதா.
50) எரியும் சமவெளி யுவான் குல்ஃபோ.
51) தமிழரின் அடையாளம் எது? திராவிடம் குறித்த மீளாய்வு கருத்தியல்கள்- தொகுப்பு .ஏர் மகராசன்.
52) கோவில் புலியும் குமாயூன் ஆட்கொல்லியும் – ஜிம் கார்பெட்.
53) ஆத்ம சகோதரன்- தாவித் டியோர்.
54) என் தந்தை பாலையா ஒய் பி சத்யநாராயணா.
55) இஸ்லாமோ போபியா – இஸ்லாமிய வெறுப்பை அழித்தொழித்தல் -சுகைனா மன்சூர் கான்.
56) சொர்க்கத்தின் பறவைகள்- அப்துல்ரஸாக் குர்னா.
57) கொடுங்கோளூர் கண்ணகி – பி ஆர் சந்திரன்- தமிழில் ஜெயமோகன்.
58) ஆயிரம் ஊற்றுகள்- ஜெயமோகன்
59) வேங்கைவனம்- எம் கோபாலகிருஷ்ணன். சிறுவர் நூல்கள் ————————————
60) கயிறு- விஷ்ணுபுரம் சரவணன்.
61) டிராகன் அரசன் உலக நாடோடிக் கதைகள் தமிழில் சுகுமாரன் .
62) மரப்பாச்சி சொன்ன ரகசியம் – பாலபாரதி.
63) வாசிக்கும் கழுதை- உலக நாடோடி கதைகள் தமிழில் சுகுமாரன்
64) என் பெயர் வேனில்- ரமணி
65) கிச்சா பச்சா- விழியன். 66) மீன் காய்க்கும் மரம்- வைசாகன்
67) நீல தேவதை- ரமணா.
68) முத்து காமிக்ஸ் தொகுப்புகள் டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் 3 ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் -1
இதில் சில புத்தகங்களை நான் கேட்டதற்காக புத்தக கண்காட்சியின் கடைசி நாட்களில் அலைந்து திரிந்து வாங்கி பாதுகாப்பாக வந்து என்னிடம் சேர்த்த எனது தம்பி அகரம் அருண், கொற்கை கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.
“வரலாறு கொடியது. எப்போதும் புனித பிம்பங்களை உடைத்துக் கொண்டே அது நகர்வது. ” என நேற்று என்னிடம் பெரியார் கருத்துக்கள் பற்றி சமகாலத்தில் நிகழ்கிற வாத/ பிரதிவாதங்களை பற்றி பேசிக் கொண்டிருந்த ஒரு மூத்த இயற்பியல் பேராசிரியர் சொன்னார்.ஏனெனில் புனித பிம்பங்கள் நிரந்தரமானவை அல்ல. எல்லா காலத்திலும் அவற்றின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் புனித பிம்பங்கள் அந்த நிலையில் இருந்து அகற்றப்பட்டு வேறு நிலையில் நகர்த்தப்படுகின்றன.
எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியது என எந்த தத்துவமும் இல்லை. அதற்கு பெரியார் கருத்துக்களும் விதிவிலக்கல்ல என்று சொன்னால் நாம் ஆரிய அடிமைகளாக காட்டப்படுவோம், “பிஜேபியின் B டீம்” ஆக கட்டமைக்கப்பட்டு விடுவோம் என்கிற அறிவுப்பரப்பில் திராவிட ஆதரவாளர்களால் எப்போதும் விடுக்கப்படுகிற மிரட்டலை அண்ணன் சீமான் அடித்து நொறுக்கி விட்டார்.ஏனெனில் இங்கே காலங்காலமாக பெரியார் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஏதேனும் குரல் எழுந்தால் அந்தக் குரல் ஆரியத்தின் குரல்/ ஆர் எஸ் எஸ்ஸின் குரல் என கூக்குரலிட்டு,தொண்டை குரல்வளை நெறிக்கப்படுகின்ற காட்சிகள் தான் இதுவரை நடைபெற்று இருக்கின்றன. தமிழக வரலாற்றில் இன்று அண்ணன் சீமான் பெரியாரின் கருத்துக்கள் மற்றும் திராவிட ஆதரவு நிலைகளை நோக்கி எழுப்பி இருக்கிற எதிர்க்குரலை நேர்மையாக எதிர்கொள்ளும் துணிச்சலற்று, சாலைகளில் கட்டப்பட்டு இருக்கின்ற நாம் தமிழர் கட்சி கொடிகளை அறுப்பது, ஆபாசச் சுவரொட்டிகளை ஒட்டுவது என மும்முரம் காட்டுகிற பெரியார் ஆதரவாளர்களின் நிலை மிக பரிதாபகரமானது.
இந்திய வரலாற்றில் எண்ணற்ற பெருந்தலைவர்கள் விமர்சனங்களால் மறுவாசிப்புக்கு/ மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். காந்தி குறித்தும் நேரு குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் இது போன்ற விமர்சனங்கள் வரும்போது அவர்களது ஆதரவாளர்கள் யாரும் பெரியார் ஆதரவாளர்கள் போல பதட்டம் அடைவதில்லை. சமீபத்தில் கூட ஜவகர்லால் நேரு, எட்வினா மவுண்ட்பேட்டன் பிரபவிற்கு எழுதிய கடிதங்களை குறித்து வட இந்தியாவில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்கள் இவ்வளவு பதட்டங்கள் நிறைந்தது அல்ல. சொல்லப்போனால் அது ஜவகர் மற்றும் எட்வினா என்கின்றதனி நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சார்ந்தது.அந்த மீறலை கூட உரையாடல்களாக, விவாதங்களாக வடக்கர்கள் வைத்துக் கொண்டார்கள்.இதுதான் பெரியாரின் கருத்துக்களுக்கு நிகழ்கிறது.
பெரியார் மீண்டும் மறுவாசிப்புக்கு உள்ளாவது பெரியார் ஆதரவாளர்களால் தாங்க முடியவில்லை. ஏனெனில் அவர்கள் “கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை” என்று சொன்ன பெரியாரை கடவுள் ஆக்கிவிட்டு, பெரியார் தந்த புத்தி போதும் என்ற அகங்காரத்தில், உன்மத்த வெறியில், எதிர்க்கருத்து கொண்டவர்களைத் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பெரியார் மீது இப்போது எழுந்திருக்கும் விமர்சனங்கள் எப்போதும் இருப்பவைதான். ஆனால் பதட்டத்தின் அளவு எப்போதும் இல்லாதது. பிம்பங்களாக மாற்றப்பட்டவர்களின் அடையாளங்களுக்கு எதிராக எதிர்வினைகள் நிகழ்ந்து கொண்டே இருப்பது என்பது இயற்கை. இதில் எவரும் பதட்டமடையவோ வன்முறை வெறிக் கொள்ளவோ எதுவும் இல்லை.பெரியார் ஆதரவாளர்களை, அதிதீவிர பெரியார் எதிர்ப்பாளர்களாக மாற்றியது பெரியாரைப் பற்றி திட்டமிட்டு புனையப்பட்ட மிகை பிம்பமும், காலத்திற்கு ஒவ்வாத முரண்பாட்டு மூட்டையான பெரியாரின் கொள்கைகளும், பெரியார்/ திராவிட ஆதரவாளர்களின் “சகல வியாதிகளுக்கும் மருந்தாக பெரியாரை” மாற்றி வழிபட்ட தொழுகிற மனநிலையும் தான்.
பெரியாரைப் பற்றி அண்ணன் சீமான் முதல் முதலாக விமர்சனம் வைப்பவர் அல்ல. இதற்கு முன்னால் பெரியாரைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கின்றன. சமகாலத்தில் தீவிர தமிழ்த் தேசிய தளங்களிலிருந்து எப்போதும் பெரியாரைப் பற்றி விமர்சனங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கின்றன.
பெரியார் மிக நீண்டகால அரசியல் வாழ்வைக் கொண்டவர். அவரது தத்துவம் என எதையும் நிலை நிறுத்த முடியாத முரணான/ சீரற்ற அரசியல் நடவடிக்கைகளை உடையவர். காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியே வந்து காங்கிரசை எதிர்ப்பதற்காக முதல் மொழிப்போரை ஆதரித்த பெரியார், அதே காங்கிரசை ஆதரிப்பதற்காக, இரண்டாம் மொழிப்போரை எதிர்த்தார். மொழிப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்களை “காலிகள்” என்று அழைத்தார். ஏனெனில் அவருக்கு மொழி பற்றி எந்த அபிமானமும் கிடையாது.அதனால்தான் தமிழ் காட்டுமிராண்டி மொழியானது. சனியன் ஆனது. முதல் குடியரசு இதழ் 02-05-1925 தொடங்கும் போது “ஈசன் அருளால்” தொடங்கியுள்ள பெரியார், 1-1-1962 ல் எழுதிய விடுதலை கட்டுரையில் “10 வயதில் இருந்து தான் நாத்திகன்” என கூறியுள்ளார். முதல் குடியரசு இதழை தொடங்கும் போது அவருக்கு வயது 46. ( ஆதாரம் முருகு ராசாங்கம் எழுதிய பெரியாரும் குடியரசும்).1925 ஆம் வருடம் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்த சர் பி.டி. தியாகராயர் இறந்தபோது “அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்கிறார். ராமசாமி நாயக்கர் என தன்னை அழைத்துக் கொண்ட அவர் தனக்கான சாதிப் பெயரை 1927 ஆம் வருடம் தான் நீக்கினார்.ஆதிக்க எதிர்ப்பு என்கிற நிலையில் வெண்மணி படுகொலையில் பெரியார் முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவாக தான் நின்றார்.
காங்கிரசு கட்சி கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டத்தைப் போல ஒரு காத்திரமான போராட்டத்தை பெரியார் ஏன் தமிழ்நாட்டில் முன்னெடுக்கவில்லை என்பது கேள்விக்குரியது. குடியரசு முத்திரைக்கு கீழாக பாரதியாரின் வரிகள் “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லோரும் இந்திய மக்கள்” என இடம் பெற்றிருந்தது. 1930க்கு பிறகாக பாரதியாரை பெரியார் நிராகரித்தார். அண்ணா மனமுவந்து ஏற்றுக் கொண்ட இந்தியாவின் சுதந்திர தினத்தை கருப்புத் தினமாக அறிவித்தார்.நாத்திகம்/ சாதி எதிர்ப்பு/ இந்திய எதிர்ப்பு/ இந்தி எதிர்ப்பு -ஆதரவு என்பதெல்லாம் பெரியாருக்கு காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றம் என்றால்,இதே கருத்து மாற்றம் பட்டறிவு மூலம் அண்ணன் சீமானுக்கு நிகழும் போது ஏன் வலிக்கிறது என்பதுதான் நமது கேள்வி.
பெரியாரின் நிலைப்பாடுகள் காலந் தோறும் மாறி வந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் தத்துவார்த்த ரீதியில் அமையாமல் அந்தந்த சூழ்நிலைகளுக்கு தகுந்தாற் போல்/ நபர்களுக்கு தகுந்தாற் போல் பெரியார் என்ற தனி மனிதனின் எண்ணத்திற்கும் முடிவுக்கும் ஏற்றாற் போல் அமைந்தன.பெரியார் வாழும் காலத்திலேயே அண்ணல் தங்கோ, கி ஆ பெ விசுவநாதம், ம.பொ.சி போன்ற தமிழினத் தலைவர்களால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.இறுதிக்காலத்தில் தன் பாடல்களில் திராவிடத்தை நீக்கிய பாரதிதாசனோடு முரண்பட்டார் என்றெல்லாம் தகவல்கள் உண்டு.
அறிஞர் குணா எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற சிறு நூல் என் கைகளுக்கு கிடைத்த காலத்தில் நான் தீவிர பெரியார் ஆதரவாளன்.பிறகு அ. மார்க்ஸ் அந்தப் புத்தகத்திற்கான எதிர்வினை கட்டுரைகளை ஒரு நூலாக்கி இருந்தார். “குணா பாசிசத்தின் வடிவம்” என்று நினைக்கிறேன். அதன் பிறகு தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருக்கின்ற ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் தாய் மண் இதழில் வெளியிட்ட கட்டுரைகள் பெரியார் குறித்து மீண்டும் விவாதப் பொருளாக மாறின. பிறகு பெரியார் குறித்து விமர்சனங்களோடு எண்ணற்ற புத்தகங்கள் காலம் தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதில் தமிழ்த் தேசிய தத்துவப் பேராசான் ஐயா பெ.மணியரசன் எழுதிய பெரியாருக்கு பின் பெரியார் , திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா..?, வெண்மணித் தீ வெளிச்சத்தில் காங்கிரசு கம்யூனிஸ்ட் திராவிட அரசியல், வழக்கறிஞர் சக்திவேல் எழுதிய “தமிழ்நாடு தமிழருக்கே! ,” வழக்கறிஞர் குப்பன் எழுதிய தமிழரின் இனப் பகை ஈவேரா, சுப்பு எழுதிய திராவிட மாயை, சடகோபன் எழுதிய ஆரிய திராவிட மாயை, முருகு ராசாங்கம் எழுதிய “பெரியாரின் முதல் குடியரசு இதழ் கிடைத்துவிட்டது” போன்ற பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக பெரியார் இடைநிலை சாதிகளுக்கு மட்டும்தான் ஆதரவாளர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அல்ல என்கிற நிலைப்பாட்டில் ஏராளமான நூல்கள் தாழ்த்தப்பட்டோர் பார்வை நிலையில் இருந்து எழுதப்பட்டு பெரியாரின் எழுத்துக்கள் மறுவாசிப்புக்கும், கடுமையான எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கின்றன.
பெரியார் மறைவுக்குப் பின்பு “பெரியாரின் கொள்கைகளை குழித் தோண்டிப் புதைத்த திராவிடர் கழகம்” என வே ஆனைமுத்து எழுதிய புத்தகமும் இருக்கிறது.
தமிழ்த் தேசியம் எதிர் திராவிடம் என வரும்போது திராவிடத்தின் வாளாகவும் திராவிடத்தின் கேடயமாகவும் பெரியாரே புனித பிம்பமாக முன்னிறுத்தப்படுகிறார்.எனவே காலங்காலமாக தமிழ்த் தேசியவாதிகளால் பெரியார் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். மேலும் தேசிய இனம், தேசம் ,மொழி, நிலப்பரப்பு போன்ற எதிலும் பெரியார் விருப்பம் கொண்டவர் அல்ல. எனவே தமிழர் இன உரிமைகளுக்கான கருத்தியலின் அரசியல் வடிவமான “தமிழ்த் தேசிய அரசியல்” பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானது தான்.
தமிழ்த் தேசியம் என்கின்ற இன விடுதலை அரசியல் பயணத்தில் நிற்பவர்களுக்கு திராவிடம் என்பது மிகப்பெரிய தடையாக எழும்போது, பெரியார் நிலைகள் தாக்கப்படுவது இயல்பானது. மேலும் பெரியாரை தமிழ் இன அறிவுலகத்தின் உச்சமாக வைத்து வழிபடும் அந்த வழிபாட்டு மனநிலை தான் அதிகாரத்தின் வழியாக பொது புத்தியாக மாறி இன்று பெரும் ஆபத்தாக மாறி நிற்கிறது.எனவே அண்ணன் சீமான் எழுப்பி உள்ள பெரியார் குறித்த விமர்சனங்களை சார்ந்து திராவிடக் கூடாரங்களில் எழும் வரையறையற்ற பதட்டம் அவர்களது கருத்தியல் வறட்சியை காட்டுகிறது.
மேலும் பெரியார் புத்தகங்களை முன்வைத்து நிகழும் இந்த உரையாடலில் சான்றுகளைத் தேடி இரு தரப்பும் தேடி அலைந்துக் கொண்டு இருக்கையில், அதை நாட்டுடைமை ஆக்காமல் தனி உடைமையாக வைத்திருப்பது குறித்து திராவிட ஆதரவாளர்கள் பேச மறுப்பதன் உண்மை பொருள் என்னவெனில்.. பெரியார் கருத்துக்கள் பல, இன்று ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு, ஒன்றுக்கொன்று முரண்பட்டு, அவரது பிம்பத்தை அவரே சிதைக்கின்ற வகையில் அமைந்திருப்பது தான்.
இது பெரியார் மறுவாசிப்புக்கு/ விமர்சனங்களுக்கு உள்ளாகிற, புனித பிம்பம் உடைகிற காலம். பெரியார் மட்டுமல்ல , காலம் என்கிற மாமலைக்கு முன்னால் எல்லாப் பெரிய மனிதர்களும் அணு அளவைத் தாண்டிலும் சிறியவர்களே.