“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள்.
“வேண்டாம்.
புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை.
நினைவின் சுழல் கொண்டவை.
கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை.
மீளவே முடியாத
ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை.
வேண்டாம்..”
என அச்சத்துடன் மறுத்தேன்.
“இல்லை இல்லை..
தீரா மோகத்தின் வெப்பம் வீசும் விழிமயக்க புனைவு கதைகள்
அடங்கிய வசீகர புத்தகங்கள் நிறைய அடுக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகளுக்கு பின்னால்
கனவின் கதவு
ஒன்று இருப்பது போல ..
ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னாலும் ஒரு கனவின் மாயக்கதவு ஒன்று மறைந்து இருக்கிறது.
அதற்குள் சென்றால் ஆழ்மனதில் உறுத்தும் நம் ஆறாக் காயங்களை, சுகந்த நினைவின்
காற்று ஊதி ஊதியே குணப்படுத்தும் காதலின் தேவதை ஒருவள் காத்துக் கொண்டிருக்கிறாள்.
அவளைப் பார்த்துவிட்டு வரலாம் வா..” என்று அழைத்தாள்.
எனக்கு முன்னால் நட்சத்திரங்களை விண்ணை நோக்கி வீசிக்கொண்டிருக்கும் ஒன்றோடு ஒன்று பின்னிய நிறைவேறா கனவுகளின் கனலேறிய விசித்திர கிளைகள் கொண்ட ஒரு கொன்றை மரம் ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
பார்க்கவே அச்சம் . மேலும் அசைந்து கொண்டிருக்கும் கிளைகள் என்னை இழுத்து அந்தக் கனல் மரத்திற்குள் வைத்து கழுவேற்றிக் கொல்லுமோ என்கிற தீவிர பய உணர்ச்சி.
நடுங்கியவாறே என்னை நோக்கி மிதந்து வந்த அந்த அலைபேசி இணைப்பை துண்டித்தேன்..
….
விழிகளை மூடி அமர்ந்திருந்த அந்த கணத்தில் தான்.. நொடி பிசகிய திடுக்கிடலில் விழித்து பார்த்த போது..
நானாக உருவாக்கிக் கொண்ட காரணங்கள் துருவேறி இறுகிக் கிடக்கும் அந்தக் காலப் பூட்டு
அதுவாகத் திறந்து, என் முன்
என் வாழ்வில் இனி எப்போதும்
வாழ முடியாத, வசந்த காலத்தின் வண்ணப் புகைப்படங்கள்
கண்ணீர் கோர்த்திருக்கும் என் விழிகளுக்கு முன்னால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.
நீ என்னை ஆக்கிரமிப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் வீசும் ஆயுதங்களை கம்பீரமான எனது கலகக் குரல் மூலமாக அடித்து நொறுக்குவேன்.
நான் விடுதலையின் காற்று. எதிர்ப்பின் ஏகாந்தம். உன் கட்டுபாட்டுக் கம்பி வேலிக்குள் அடங்கி விடமாட்டேன்.
ஓங்கி ஒலிக்கும் எனது முழக்கம் என்னைப்போலவே, உன்னை எதிர்த்துப் போராடி உன்னால் உயிரோடு கொளுத்தப்பட்ட எனது முன்னோரின் சாம்பலிலிருந்து கிளர்ந்து எழுந்தது.
நான் யாராக இருக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதை விட நீ தீர்மானிக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நான் யார் என்பதை நீ தீர்மானித்து வைத்திருக்கும் எல்லா வரையறை சட்டகங்களையும் கிழித்து எறிவேன்.
எனது உடை உன் அதிகார பாசிச உச்சங்களின் உள்ளத்தை நடுங்கச் செய்கிறது என்றால் அதை நான் ரசித்து அணிவேன்.
எனது பண்பாட்டின், எனது வழிபாட்டின், கற்றைப் புள்ளிகளை உன் கைப்பிடி அதிகாரத்தால் ஒற்றைப் புள்ளியாக வரைய துடிக்கும் உனது வரலாற்று வன்மத்தை எகிறி மிதிப்பேன்.
என்னை அச்சுறுத்துவதாக எண்ணி கூட்டம் கூடி முழங்கித் தீர்க்கும் உனது அச்சம் கம்பீரமான எனது ஒற்றை அதட்டலால் அடங்கி ஒடுங்கும்.
நீ கடவுளைச் சொல்லி என்னை கலங்கச் செய்வாய் என்றால், நானும் கடவுளை முழங்கி உன்னை நடுக்கமுறச் செய்வேன்.
இன்னும் மீறி அழுத்தினால், எல்லோரும் ஓர் குரலில், ஓர் உடையில் , உரக்கச் சொல்வோம்.