பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கவிதைகள் Page 4 of 9

பூங்கதவுகளின் புராணம்..

 

மூடப்பட்ட கதவின்
மேல் கோபிக்காதே..

ஏனெனில் கதவுகள்
மூடுவதற்காகவே தான்
தயாரிக்கப்படுகின்றன.

மூடப்படுவதை
உன் நம்பிக்கை
கோபுரத்தின் மேல்
விழுந்த பேரிடியாக
கருதாதே..

அது..
இன்னொரு
திறப்பிற்கான வழி..

மூடப்படுவது உன்
முகத்தில்
உமிழப்பட்ட எச்சிலாக
கருதி உன்மத்தம்
கொள்ளாதே..

திறந்திருந்தால்
உன் கனவின் மீது
படியும் ஏமாற்ற
நிழலை எங்கே
கொண்டு புதைப்பாய்..??

மூடப்படுதல் ஓரு
வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி.

நீ எழுத இருக்கிற
காப்பியத்தின்
தொடக்கப்புள்ளி..

மூடப்படுதல்
ஒரு நிராசையின்
முடிவு.

இன்னொரு
விடியலுக்கான
துளிர்ப்பு..

ஒரு வேளை
மூடப்படாமலும்
திறக்கப்படாமலும்
காற்றின் திசைகளில்
கதவு அலைகின்றதா..??

யோசிக்காதே.
நீயே சாத்தி விட்டு நகர்.

ஏனெனில்
நகரும் உன்
காலடியில்தான்
உலகத்தின் கதவு
திறக்கிறது.

பிரிவொன்றின் மழை..

இறுதியாக
பிரிதலுக்காக
நீயே மழை ஒன்றை
தயாரிக்கிறாய்‌.‌.

வெறுமைக்
காரணங்களையும்..
வலிந்து
திணித்த
போலி
நியாயங்களையும்
கொண்டு தயாராகிறது
மழை..

நேசிப்பின்
மேகங்களை
வெறுப்பின்
கருமைக் கொண்டு
இருளாக்க மறதிக்
காலம் ஒன்று
அவசரத் தேவையாக
ஆம்புலன்சில் வருகிறது.

விழியோரம்
கனவொன்று சட்டென்று
கசிந்து விடக்கூடாது
என்கிற கவனம்
விரிய காத்திருக்கும்
பிரிய குடை ஒன்றை
மடித்து வைக்கிறது..

நிலாக்கால
நினைவுகளின்
ஏக்கப்பெருமூச்சுகள்
பெருங்காற்றாய்
வீச..
பிரிவின் மழை
மேகம் கலையுமோ
என அஞ்சுகிறாய்.

பிறகு நீயே
அலட்சிய புன்னகை
ஒன்றினால்
நிராசைத் தூறல்களை
தூவ வைக்கிறாய்‌.

உதிரம் கசியும்
ஒரு வயலினையும்

இருளடர்ந்த
ஒரு வனத்தையும்

சில கண்ணீர்த்
துளிகளால்

நீயே உருவாக்கிறாய்.

பொழியத் தொடங்குகிறது
மழை.

நான் நனையத்
தொடங்குகிறேன்.

நதியற்ற பாவம்.

 

 

 

நதிகளில்
தொலைக்க
பாவங்கள்
இருக்கின்றன..

பாவம்.
நதிகள் தான்
தொலைந்திருக்கின்றன.

நேற்றிருந்தவர்களின் கதை.

 

நேற்றிரவு
அவர்கள்
இருந்தார்கள்..

நேற்றிரவு
இந்த நொடியில்
அவர்கள்
உறங்கியும்
இருந்தார்கள்..

கண் மூடி
கதகதப்பாய்..
நாளையும்
இப்படிதான்
உறங்கப்
போகிறோம்
என்ற
நம்பிக்கைகளோடு..

நேற்றிரவு
குளிர்மையாய்
உறைந்திருந்த
சில தோட்டாக்கள்
அச்சமயம்
புன்னகைத்ததை
அவர்கள்
அறியவில்லை..

…….

புற்றில்லாத
உடலோடு
நஞ்சற்ற
நிலத்தில்
வாழ்தலென்ற
கனவோடு
அவர்கள்
காலை
விழித்தார்கள்..

அதிகாரத்தை
அரிதாரமாக
பூசி இருக்கும்
அரச துவக்குகள்
ஏற்கனவே
வேதாந்தா வீசிய
எலும்புத்
துண்டுகளுக்காக
நாய்களாக மாறிய
கதை தெரியாமல்..

எதிர்காலம்
என்பதை
இருத்த…
விதி ஒன்றை
மாற்ற அவர்கள்
வீதிகளிலே
போனார்கள்..

ரூபாய் நோட்டுகள்
செருகப்பட்ட
செவிகளில்
நெஞ்சடைத்து
அவர்கள் இடும்
முழக்கங்கள்
கேட்கட்டும் என
அவர்கள் நடந்தார்கள்..

ஏதோச்சதிகார
துவக்கின்
நாவிலிருந்து
உமிழப்பட்ட
தோட்டாக்களில்
அவர்களின்
பெயர்
எழுதப்பட்டிருப்பதை
அறியாமல்..
நெஞ்சத்தை
துளைக்கும்
முதல்
நொடி வரை
நம்பினார்கள்..

இது ஒரு நாடென..

பேய் அரசாண்டால்
மட்டுமல்ல..
பேயின் நாய்
அரசாண்டால் கூட
பிணம்தான்
தின்னும்
சாத்திரங்கள்..

நேற்றிரவு அவர்கள்
இருந்தார்கள்..

நாளை விடியும்
என்ற நம்பிக்கையோடு..

நேற்றிரவு அவர்கள்
இருந்தார்கள்..

 

வண்ணமற்ற சொற்கள்.

நிறமற்ற என்
சொற்களின்
மீது உனக்கு
பிடித்த
வண்ணத்தை
பூசி விடு..

கூடவே
அப்போதைய
உன் மனநிலைக்கு
தகுந்தாற் போல்…
ஒரு அந்தியையோ..
ஒரு மழையையோ..
கூதிர் காலமொன்றையோ..
வெண்பனிச் சாரலையோ..
கொடும் பாலையையோ. .
அவசியம் இணை.

சொற்களை கரைத்து
விழுங்கும்
பின்னணி இசை
இசைக்கப்படின்
இன்னும் பிரமாதம்.

முடிவில் ஒரு
மலை முகட்டின்
மேலமர்ந்து
தனிமைப்
பொழுதொன்றை
நீயே தேர்ந்தெடு.

என் சொற்களை
உடை அவிழ்ப்பது
போல..
தனித்தனியே கழற்று..
கலைத்துப் போடு.
நிறைவேறாத படைப்பின்
நிராசை ஓவியனாய்
வெற்று பார்வை
ஒன்றைப் பார் .

எழுத்துகளாய் எஞ்சி
இருப்பவற்றை..
உனக்கு பிடித்தமாய்
கோர்த்துப் படி..

நான் தெரியலாம்.
சில நேரங்களில்
நீயும்.

மணி செந்தில்.

பிம்பம் தாங்காத ஆடி..

 

 

 

 

…ஆகப்பெரும்

கண்ணாடியாய்
கனவு பிம்பங்களை
மாறி மாறி
வரும் வாழ்வின்
உதய,
அஸ்தமனங்களுக்கு
ஏற்ப வாரி இறைத்துக்
கொண்டிருந்தோம்.

சரிவொன்றின்
சங்கடப்படுத்தும்
நிழலொன்றில் கூட
கலையாத பிம்பமாய்
நம் பற்றை
தகவமைப்பதில்
கவனம் கொண்டிருந்தோம்.

பிசிறில்லா இசையாய்
மாசற்ற கவிதையாய்
அருவமான அற்புதமாய்
அது நிகழ்ந்துக் கொண்டே
இருக்க வேண்டும் என
உறுதி கொண்டோம்..

தவறுகள் மீதும்
காரணங்கள் மீதும்
கட்டப்பட்ட கண்ணாடி
மாளிகையாய்
அது காட்டப்பட்டு
விடக் கூடாதென்றும்..

சின்ன விழி அசைவில்
கூட தெறிக்கும் உணர்வு
கல்லொன்றின் வீசலில்
அது விரிசலாகி விடக்
கூடாதென்றும்..

சில கணக்குகள்
சமைத்து
நமக்குள்ளாக
விடைகளையும்
நாம் சேகரித்து
வைத்திருந்தோம்..

பிரிவொன்றின்
பிரளயக்
காற்று கசியும்
அபாயமிருக்கிற
அனைத்து
பொந்துகளும்
அடைப்பட்டு
விட்டதென நாம்
அறிந்திருந்த
வேளையில் தான்..

வெண்ணிற இரவுகள்*
பக்கங்களில் இருந்து
இறங்கி வந்த
கனவுலகவாசி
சொன்னான்..

உங்களின்
நிலாக்காலம்
அந்த
கண்ணாடியில்
கரும் புகையாய்
படிந்திருக்கிறதென..

சட்டென
மீட்டப்பட்ட
வீணையின்
தந்தியாய்
அதிர்ந்தோம்.

கண்ணாடி
விரிசல் விட
தொடங்கிற்று.

– மணி செந்தில்

* வெண்ணிற இரவுகள்.
மாபெரும் எழுத்தாளர்
தாஸ்தாவெஸ்கி எழுதிய
சிறு புதினம்.

இருட்பாதையின் திசை வழி..

பொய்கள்
பாசியென
படர்ந்திருந்த
குளமொன்றில்
அரூவ மீனாய்
நீந்திக்கொண்டிருந்த
உன்னை நோக்கி
எறியப்பட்ட தூண்டில்
வாயில்தான்
என் கனவொன்று
இரையாய் சிக்கித்
தவித்துக்
கொண்டு இருந்தது.

எதிர்பாராமின்மையை
சூட்சம விதிகளாய்
கொண்டிருக்கும் அந்த
மாய விளையாட்டில்
அவரவர் பசிகளுக்கேற்ப
சொற்களின் பகடையாட்டம்
நடந்தன….

உக்கிரப் பொழுதில்
தாங்காமல் நிகழ்ந்த
பெரு வெடிப்பு .
கணத்தில் சிதறிய
என் சிலுவைப் பாடுகளின்
கதறல் ஒலிகள்
உன்னால் சில்லறைகளின்
சிந்திய ஓசை என
அலட்சியப் படுத்தப்பட்ட
நொடியில்..

திரும்பவே இயலா
திசையில்..
நான் வெகுதூரம்
போய் இருந்தேன்..

எப்போதாவது
உன் நம்பிக்கைகளும்..
கணக்குகளும் பொய்த்துப்
போன இருட் பாதையில்
தேடிப்பார்.

நான் ஏற்கனவே
தவற விட்டிருந்த..
எனது சில
விழிநீர்த்
துளிகளும்..
இந்த கவிதை
வரிகளும்..

உனக்கு விளக்காகலாம்..

நிழலற்ற கோபுரம்

 

 

அந்த கோபுரம்
அவ்வளவு
எளிமையானதல்ல..

விழி வழியே
அளந்து விட
விண்ணை
உரசும்
அதன் உயரம்
அனுமதித்ததில்லை..

மேனி முழுக்க
சிற்ப எழில்
பூசி நிற்கும்
திமிர்
பல உளிகளின்
வலி தாங்கி
உருவான வசீகரம்.

நிலாவை உடலில்
போர்த்தி
சுடர்விட்ட ஒரு
இரவில் தான்..
அந்த கோபுரத்தை
கண்டவர்கள்..
அது வெறும்
கற்களால் ஆனது
அல்ல..
கண்கள் முழுக்க
சுமந்த கனவின்
கனல் என
கண்டார்கள்..

வானெங்கும்
சிறகு விரித்து
இறகு கவிதை
எழுதும் பறவை
கவிஞர்களுக்கு
அந்த கோபுரம் தான்
இராஜ மாளிகை..

கால வீதியில்
கணக்கில் ஒன்றாய்
சட்டென
கடந்துப் போக
அந்த கோபுரம்
ஒற்றையடிப்பாதை
அல்ல..
பூரித்து நிற்கும் கடல்.

குப்பைகள்
காற்றில் மிதந்து
கலசத்தை உரசிய
போதும்..
ஆழ்ந்திருக்கும்
அதன் மெளனம்
சொற்கள் அற்று அல்ல..
உரசுபவை வெறும்
குப்பைகள் எனக் கற்று..

வார்த்தைகளை வார்த்து..
வாக்கியங்களை கோர்த்து..
இழி சொற்சங்கிலிகளால்..
அந்த கோபுரத்தை
சரித்து விடலாம் என
நினைப்பவர்களுக்கு..

தங்கப் பக்கங்களில்
எழுதப்படும் ஒரு
யுகத்தின் வரலாறு
கம்பீரமாக அறிவித்துக்
கொண்டே இருக்கிறது..

அந்த கோபுரம்
அவ்வளவு
எளிமையானதல்ல..

காதலின் பெருங்குளம்..

 

 

 

27867625_396526987438842_5551065892319946309_n

https://youtu.be/rMAOPsp5EB0

நினைவுகள்
பாசியாய்
படர்ந்திருக்கிற
அந்த விழிகளில்தான்..

தவழும்
கனவலைகளில்
தவிப்போடு
நான் நீந்துகிறேன்..

காற்றின் சிறகுகளோடு
கணப்பொழுதுகளில்
கைக் கோர்த்து
நடம் புரிகிற
அந்த காரிருள்
கூந்தல் இழைகளில்தான்
நான் விழித்திருக்கிறேன்.

அசையா நொடிகளில்
கசிந்துருகி..
இமையோரம் ததும்பி
நதியென பின்
பெருக்கெடும்
கண்ணீர்த் துளிகள்
வழிகிற அந்த
செம்மை கன்னக்
கதுப்புகளில் தான்
நான் உயிர்த்தெழுகிறேன்..

மோகத்திரள்
மழை மேகமாய்
கருக்கிற முடிவிலி
இரவில் ..
நிகழாத
பெளர்ணமிக்காக
காத்திருக்கும்
அடிவானமாய்
சிவந்திருக்கும்
அந்த தேவதையின்
நிலா முகத்தில் தான்
நித்தமும் நான்
குளிர் காய்கிறேன்..

கால மலர்கள்
வாழ்வின் விருட்சத்தில்
இருந்து உதிர்ந்து
இதய வேரில் நிறைந்தாலும்
இன்னமும் வசந்தமாகவே
என் புன்னகையில்
நிறைந்திருக்கிற
அந்த கவிதை
கழுத்தோரம் தான்
நான் இளைப்பாறுகிறேன்..

நாம் வாழ்ந்தது
சம்பவங்களின் சங்கிலித்
தொடர் அதிரும்
வாழ்வின் ஓட்டமல்ல..
இன்னமும் நீளும்
மாபெரும் காப்பியத்தின்
பொன்னெழுத்து பக்கங்கள்
என மயக்க மொழியில்
வெளிவந்த அந்த
வார்த்தை
தடுமாற்றங்களில் தான்..
என் மிச்ச வாழ்விற்கான
உயிர் எச்சத்தை நான்
உருவாக்குகிறேன்..

இன்னுமொரு இரவு..
மற்றுமொரு மதியம்..
பிறிதொரு மாலை..
என அடுக்கடுக்காய்
நினைத்துப் பார்த்து
சிலிர்க்கும் அந்த
நிலாக்கால
நேசங்களில் தான்
நான் பூத்துக் கொண்டே
இருக்கிறேன்..

யாருமற்ற அந்தர வெளியில்
தனித்து பறக்கும்
பெருங் கழுகொன்றின்
தனிமை போல..

நானும்..
என் காதலும்
தனித்திருக்கிறோம்…

பின்னிரவு குளிரில்
உறைந்திருக்கும்
ஆழ் கடலின் சலனமற்ற
அமைதி போல..

காத்திருக்கும்
என் உணர்வுகளின்
ராகத்தை இளையராஜா
பாடலாய் வாசித்துக் காட்ட..

என் நரம்புகளால்
இறுக்கி கட்டப்பட்ட
ஒரு கிடார் இருக்கிறது..

வாசித்துக் கொண்டே
இரு..

உயிரோடு நானும்
இருக்கிறேன்..

……..

இவ்வாறாக நீளும்
இந்த கவிதை ஒரு போதும்
முடிவதில்லை தான்.

அது போலத்தான் எனதன்பும்..

……..

தினங்களில் குறுக்கிக்
கொள்ள..
என் காதல்
இன்பியல் நிகழ்வல்ல..

மாறாய் பிரிவின்
இரத்தம் கசியும்
இசைத்தட்டு..

வாழ்வின் நிகழ்தகவு
முள்ளாய் கீறினாலும்..

மகத்தான
வாழ்வொன்றின்
ஆன்ம ராகத்தை
பாடியே
தீரும்..

மீண்டும்..

கேட்கிறாயா சகி..?

அந்தந்த நேரத்து நியாயங்கள்..

 

26733705_386350815123126_611877709230030666_n (1)

 
அந்த அழகான
பலிபீடம்
அந்த ஒற்றை
வெள்ளாட்டின்
முன் கருணை
விழிகளோடு
வீற்றிருந்தது..

குளிர்மையும்
வழுவழுப்பும்
நிரம்பிய
அதன் வளைவுகளில்
வெள்ளாடு லயித்திருந்தது..

அழகானது இது..

தலை பொருந்துவது
போன்ற வளைவு..

சற்றே சாயலாம்.
கொஞ்சம் உறங்கலாம்..

வெள்ளாட்டின் விழிகளில்
வண்ணக்கனவுகள்
மிளிர்ந்தன..

கத்தியின் கனம்
தெரிவு செய்ய
வெள்ளாட்டின் கழுத்து
மிருதுவான வருடல்களால்
ஆராயப்பட்டது..

தனித்தே பிறந்த,திரிந்த
வெள்ளாடு தன் மீது
சொரியும் வருடல்களால்
கசிந்தது..

எவ்வளவு கதகதப்பான
கரங்கள்..
ஆதரவாய்..ஆதுரமாய்..

நீ தனியன் இல்லை
என்பதை உணர்த்துவது
போல..

கலங்கி அழத் தொடங்கியது..
வெள்ளாடு.

அனலேறிய அப்பகற்
பொழுதில் தன் மீது
தெளிக்கப்பட்ட
குளிர் நீரை அருவியென
கருதி சிலிர்த்த வெள்ளாட்டின்
கழுத்தில் மாலையும்
இடப்பட்டது…

எவ்வளவு மரியாதை..
வெறும் ஆடு என
கருதாமல்..
செய்யப்பட்ட
பெருமை அருமை.

ஆகா.. இவ்வுலகம்
அன்பின் மடியாய்..
கருணையின்
கருவறையாய்..

சே..இந்த அன்பிற்காக
சாகவும் செய்யலாம்..

என வெள்ளாடு
கண்கலங்கி
உருகிய அந்நொடியில்..தான்

தலை தனித்து விழுந்தது.

 

Page 4 of 9

Powered by WordPress & Theme by Anders Norén