பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: சுயம் Page 2 of 6

நந்தனின் கேள்வி.

தனக்குள் ஆழ்ந்திருந்த தியானத்திலிருந்து கால நழுவலின் ஒரு நொடியில் கண் விழித்த புத்தர் மௌனத்தின் உரமேறி இருந்த ஞானத்திலிருந்து சிந்தப்போகும் சொற்களுக்காக எதிரே தன் முன்னே காத்திருந்த சீடர்களைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார்.

ஒரு இலை உதிர்தல் கூட அங்கே சூழ்ந்து இருக்கும் அமைதியின் ஒழுங்கை சிதைத்து விடுமோ என்ற சிந்தனையில் சீடர்கள் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

எங்கும் அமைதி . எங்கும் அமைதி.

முன்வரிசையில் அமர்ந்திருந்த நந்தன் எழுந்து நின்றான்.

புத்தரின் கனிவுமிக்க பார்வை தன் உச்சி முதல் பாதம் வரைக்கும் உடலில் ஒரு திரவம் போல படர்வதை உணர்ந்த அவன் ஞான உணர்வில் சிலிர்பேறினான்.

“நந்தா” என்று புத்தர் மென்மையாக அழைத்த போது கனிவேறிய அவரது சொல்லால் தனது பெயர் ஒலிக்கப்படுவதை எண்ணி மனம் உருகினான்.

என்ன வேண்டும் என புத்தர் சிரித்துக் கொண்டே கேட்டபோது… நீங்கள்தான், நீங்கள் சுமந்திருக்கும் அமைதி தான்.. என்று அவனால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.

உள்ளுக்குள் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டு அவன் துடிப்பதை பார்த்த புத்தர்…

“கேட்க வந்ததை கேட்டு விடு . இல்லையேல் கேட்க வந்தது தேங்கி ஒரு நாள் அதில் நீயே முழ்கி விடுவாய்..” என்றார்.

ஐயனே.. எனக்குள் அலைமோதும் எண்ண அலைகள் பலவற்றை ஒன்று சேர்த்து ஒரே ஒரு கேள்வியாக தயாரித்து வைத்திருக்கிறேன்.

நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்.

உலகத்தின் மகத்தான வலி எது..??

நந்தா கேள்வியை கேட்டுவிட்டு புத்தரின் முகத்தை பார்த்தான்.

புத்தர் மீண்டும் மென்மையாக சிரித்தார். தன் முன்னே குழுமி இருந்த சீடர்களை பார்த்து .. “இதற்கு என்ன பதில் உங்களுக்கெல்லாம் தோன்றுகிறது சொல்லுங்கள்..” என்றார்.

தலைமைச் சீடர்களில் ஒருவரான அசிதர் எழுந்து.. “மரணத்தின் போது ஏற்படுகிற வலி” என்றார்.

இன்னொரு சீடர் எழுந்து “சகிக்க முடியாத தனிமை” என்றார்.

பூரணர் எழுந்து நின்று “பிரிவு” என்றார்.

இப்படி ஆளாளுக்கு மழைத்துளிகள் போல பதில்களால் அங்கே அவரவர் ஆன்ம அறிவினை நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு அனைவரும் பதில் அளித்த சூழலில் மீண்டும் மௌனம் அங்கே சூழ்ந்து கொண்டது.

புத்தர் மீண்டும் தியானத்திற்குள் போனார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு கண்விழித்தவர் அமைதியாக சொன்னார்.

“மிகவும் நேசித்தவரின் துரோகம்.”

ஆழ்கடலின் அமைதி சீடர்களை சூழ்ந்தது.

????

அவனைப்போல வேறு யாருண்டு…??

????

முதன் முதலாக நாம் தமிழர் கட்சியில் மாணவர் பாசறை உருவாக்கப்பட்டபோது அதன் தொடக்க கூட்டத்தில் தான் அந்த இளைஞனை நான் பார்த்தேன். மிக ஒல்லியான உடல்வாகு. யாரிடமும் முன்வந்து எதையும் கேட்காத கூச்ச உடற் மொழி. அவன் பெயரை அழைத்து மேடையில் ஏற்றிய போது தயங்கியவாறே சென்று பின் வரிசையில் நின்று கொண்ட அந்த நொடியில் என்னை போன்ற பலரது இதயத்தில் முன் வரிசையில் வந்து அமர்ந்து கொண்டவன் அவன். தம்பி என்று அழைத்தாலும் மனதால் எங்கள் எல்லோருக்கும் மகனாகிப் போனவன் அவன்.

திருத்துறைப்பூண்டி பகுதி என்கிறார்கள். நம்ம ஊர் பகுதி ஆயிற்றே.. ஆனால் நாம் இந்த தம்பியை எதிலும் பார்த்ததில்லையே என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தபோது சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நேரடியாக அண்ணன் சீமானை சந்தித்து தன்னை முழு நேர அரசியலுக்கு ஒப்படைத்து கொண்டுவிட்டவர் என்றார்கள்.

கூட்டம் முடிந்த பிறகு அவனை அழைத்து பேசியபோது நெருங்கியே அவன் வரவில்லை.கூச்சமும் தயக்கமும் எதிலும் முன்னிற்காத தன்மை போன்றவை எல்லாம் அரசியல் பாத்திரத்திற்காக அவன் பொருத்திக்கொண்ட ஒப்பனைகள் அல்ல. அவன் இயல்பிலேயே அவ்வாறாகத்தான் இருந்தான். எங்களைப் போன்று சுற்றி இருந்தவர்களுக்கு மிகப்பெரிய சவாலே அவன் இயல்பிலேயே கொண்டிருந்த அந்த தயக்கப் பூட்டுகளை எந்த பேரன்பின் சாவி கொண்டு திறப்பது என்பதுதான்..

அண்ணன் சீமான் மூலம் சிறிது சிறிதாக படிக்க கற்றுக் கொண்டவன் மேடையில் ஏறி பேசத் தொடங்கிய பிறகு மேடைகள் தீப்பற்றி எரியத்தொடங்கின. சில மாதங்களுக்கு முன் எங்களுக்கெல்லாம் பின்வரிசை பேச்சாளராக இருந்த அவன் ஒரு சில மாதங்களில் எங்களை எல்லாம் கடந்து முன்னணி பேச்சாளராக நிமிர்ந்து நின்ற போது யாருக்கும் அவனைப் பார்த்து பொறாமையோ போட்டியோ ஏற்படவில்லை. காரணம் அப்பழுக்கற்ற அவனது உழைப்பு. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத நேர்மையான அவனது வாழ்க்கை.

மேடை ஏறி அவன் பேசுகின்ற மொழியில் அதிரடியாய் வந்து விழுகிற நகைச்சுவை தெறிப்புகளில், அனல் பொழியும் ஆக்ரோஷ மொழியில் கூடியிருந்தோர் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் போது அண்ணன் சீமானின் கண்கள் பெருமிதத்தால் மிளிரும். உண்மையில் அண்ணன் சீமான் தயாரித்த இன விடுதலைக்கான கருவி அவன்.

இடும்பாவனம் கார்த்திக்.

காவிரிச்செல்வன் மன்னார்குடி விக்னேஷ் சென்னையில் நடந்த பேரணியில் தீக்குளித்த போது அண்ணன் சீமானுக்கு பிறகு அவன் தேடியது தம்பி கார்த்தியை தான்.
நானும் தம்பி கார்த்தியும் தான் விக்னேஷ் உடலை அடையாளம் காட்ட சென்றவர்கள். அன்று இரவு முழுக்க தனியே உட்கார்ந்து அழுத தீர்த்தவாறே இருந்த அவனது கண்கள் அதன் பிறகு எதற்கும் அப்படி கலங்கியதில்லை.

அண்ணன் சீமான் பார்த்து பார்த்து உருவாக்கிய தம்பிகள் சாட்டை துரைமுருகனும் துருவன் செல்வமணியும் இடும்பாவனம் கார்த்திக்கும் முன்னணி பேச்சாளர்களாக உருவாகி வருவதற்கு அப்போதைய முன் கள பேச்சாளராக திகழ்ந்த புதுக்கோட்டை ஜெயசீலன் போன்றவர்களின் ஊக்கமும் ஒரு மிக முக்கிய காரணம். போட்டியும் பொறாமையும் மிகுந்த இந்த உலகத்தில் தம்பிகள் வளர்வதற்கு உகந்த நேசமிக்க ஆன்மாவை கொண்ட அபூர்வ மனிதர்கள் அவர்கள்.

குறிப்பாக தம்பி கார்த்தி மேடையில் பேசி விட்ட அடுத்த நொடியில் பார்வையாளர் பகுதியில் நின்று கொண்டு புதியதோர் தேசம் செய்வோம் இதழை விற்றுக் கொண்டிருப்பான். மாணவர் பாசறை காலத்திலேயே தீ என்ற இதழை வெளியிட்டு அவன் நடத்திக் கொண்டிருந்தான். பெருந்தலைகள் நிரம்பி இருந்த எங்களது இளைஞர் பாசறை சார்பாக ஒரு இதழ் கொண்டு வர வேண்டும் என விரும்பி கடைசி வரை முடியாமல் போனது என்பதெல்லாம் வேறு கதை.

தனிநபராக இருந்து கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்துவது என்பது மிகச் சாதாரணமான வேலை அல்ல. அவன் நடத்திய தீ இதழாக இருக்கட்டும் இப்போது நடத்திக் கொண்டிருக்கின்ற புதியதோர் தேசம் செய்வோம் என்கின்ற இதழாக இருக்கட்டும் எல்லாமே அவனது தனிமனித உழைப்பு தான். எல்லாம் உழைப்பை சிந்திஒரு செயலை செய்வதற்கு எது மூலக்காரணமாக இருக்க வேண்டுமென கேள்விகள் எழுவது இயல்புதான்.

காரணம் பெரிதாக இல்லை. அது ஒரு மனநிலை. ஊதியம் அங்கீகாரம் மதிப்பு உயர்நிலை என எவ்விதமான கோரிக்கையும் இல்லாத மனநிலை அது. தன்னைத் தானே தன் இனத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற மாவீரர்களின் தியாகத்தில் இருந்து, முத்துக்குமார் விக்னேஷ் ஆகியோர் தங்களை எரித்துக் கொண்ட தீயின் நாவிலிருந்து எடுத்துக்கொண்ட உச்சபட்ச வெப்ப மனநிலை.கனன்று கொண்டிருக்கும் அந்த நெருப்பில் இருந்து தான் தனக்கான அர்ப்பணிப்பு வாழ்வு ஒன்றை அவன் சமைத்துக் கொண்டிருக்கிறான்.

என் மனம் திறந்து அவனை என்னால் மிக அதிகமாக நேசிக்க மட்டும் அல்ல, என்னை விட பன்மடங்கு அனைத்திலும் உயர்ந்தவன் என வெளிப்படையாக ஒத்துக் கொள்ள முடியும். ஐபிஎல் வழக்கிற்காக அவன் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாக சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டபோது அவனுக்காக யாராவது உறவினர் வந்து வாதாட வேண்டும் என நிலை ஏற்பட்ட போது எனது தங்கை மீரா பாக்கியராசன், எனது அம்மா கலையரசி பலரும் முன் வந்து நாங்கள் எம் பிள்ளைக்காக வாதாடுகிறோம் எனக் கூறியபோது அப்பழுக்கற்ற அந்த எளியவன் நாம் தமிழர் என்கின்ற குடும்பத்தில் அடைந்திருக்கின்ற உயரத்தை யாராலும் வியக்காமல் இருக்க முடியாது.

எத்தனையோ நள்ளிரவுகளில் சுகாதாரம் அற்ற பேருந்து நிலையங்களில் இருக்கும் பெஞ்சுகளில் கொசுக்கடியில் படுத்து கிடந்து இரவு பகலாக அரசு பேருந்துகளில் அலைந்து பேச வரைபடத்தில் இல்லாத கிராமங்களில் கூட சிறு மேடையில் ஏறி பேசி நாம் தமிழர் என்கின்ற விதையை நாடெங்கும் விதைத்து வருகிற அவனைப் போன்றவர்கள் தான் இந்தக் கட்சியின் மூலதனம்.

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து பேசியதற்காக நேற்றைய தினம் கூட ஒரு வழக்கினை பெற்று அரசியல் சமூக வாழ்வில் தனக்கான பதக்கங்களை அவன் அடைந்து கொண்டே அலைந்து கொண்டிருக்கிறான். இத்தனை அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் தனக்கான எந்த அங்கீகாரத்தையும் தேடாமல், தான்மை என்பதே துளி கூட இல்லாமல் தன் அடையாளத்தை இந்த இனத்தின் மீட்சிக்காக இழக்கத் துணியும் என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் போன்றவர்கள் தான் எம் இனத்தின் பெருமை.

சிறுவயதில் என் மகனிடம் சித்தப்பா கார்த்தி போல அப்பழுக்கு இல்லாத கொண்ட கொள்கைக்கு எதையும் இழக்க துணிந்து நேர்மையாக நீ வாழ வேண்டும் என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு.

இன்றும் அதைத்தான் நினைக்கிறேன்.

என்றும் அதைத்தான் நினைப்பேன்.

சி.ஆர்.7 -தன்னிகரற்ற வீரர்.

கால்பந்து ஆட்டங்கள் பார்க்கத் தொடங்கிய காலம் தொட்டு என்னுடைய அணி அர்ஜென்டினா. முதலில் மாரடோனா. தற்காலங்களில் என்னுடைய கதாநாயகன் மெஸ்ஸி. ஆனாலும் போர்ச்சுகல் நாட்டின் ரொனால்டோ ஆகச்சிறந்த கால்பந்து வீரனாக உருவாகி வந்த காலகட்டங்களில் ஒரு மெஸ்ஸியின் ரசிகனாக ரொனால்டோவை வெறுக்க முடியாதது ஒன்றுதான் ரொனால்டோவின் ஆகப்பெரும் வசீகரம். ஏனெனில் அந்தத் திறமை வெறுக்க முடியாத, பொறாமை கொள்ள முடியாத உயரம் கொண்டது.

ஒரு பேட்டியில் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த வீரர்களை பற்றி கூறும் போது ரொனால்டோவின் பெயரை கூறாதது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்புவார்கள். அப்போது மெஸ்ஸி சிரித்துக்கொண்டே “நான்தான் அவர். என்னில் இருந்து அவரைப் பிரிக்க முடியாது.. எனவே தான் அவரை நான் தனியே சொல்லவில்லை..” என்று சொல்வார்.

அதுதான் ரொனால்டோ. சிஆர் 7 என்று அவர் டீசர்ட் அணிந்து மைதானத்தில் இறங்கும்போது ஒவ்வொரு முறையும் ஆகச் சிறந்த ஆட்டக்காரரான அவர் தன்னைத்தானே மிஞ்சி காட்டுவதில ஒரு மந்திரக்காரன்.

தன்னை நோக்கி வரும் பந்தை உயரமாக எழும்பி கோலாக மாற்ற அவர் எழும்பும் உயரம் உலகில் இதுவரை யாராலும் முறியடிக்கப்படாதது மட்டுமல்ல, ஒரு கவிதை போல அவ்வளவு வசீகரமானது.

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடியும்போது உலகின் ஆகச்சிறந்த வீரர்களான நெய்மர் , மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்று இனி விளையாட மாட்டார்கள் என செய்திகள் வெளியான போதே கால்பந்து ரசிகர்கள் பலருக்கும் நாடு இனம் கடந்து மனம் வலிக்க தொடங்கியிருந்தது.

இன்றும் அப்படித்தான்.

உலகக் கோப்பையின் கால் இறுதி போட்டியான இன்று போர்ச்சுக்கல் ஆப்பிரிக்க நாடான மொராக்காவை எதிர்கொண்டார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஏனோ முதன்மை வீரரான ரொனால்டோவை போர்ச்சுக்கலின் கோச் இறக்காமல் பெஞ்சில் அமர வைத்து இருந்தது பார்வையாளர்களின் கடுமையான விமர்சனமாக இருந்தது.

இந்த உலகப் பந்தய போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த அணிகளை வென்று வருகிற மொரோக்கா ஆட்டத்தின் முதல் பாதியிலேயே கோல் அடிக்க இதுவரை போர்ச்சுக்களால் அதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை.

இறுதியில் முதல்முறையாக ஒரு ஆப்பிரிக்க நாடு உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், கால்பந்து போட்டிகளின் கதாநாயகன் 37 வயது நிரம்பிய ரொனால்டோ தன் கடைசி போட்டியில் அழுது கொண்டே களத்தை விட்டு வெளியேறும் போது ,

மெஸ்ஸியின் பரம ரசிகனான என் இளைய மகன் பகலவன் கலங்கி அழுது கொண்டிருந்தான்.

அதுதான் ஒரு சிறந்த விளையாட்டு வீரன் தன் வாழும் காலத்தில் பெறுகிற உயர்வான வெகுமதி.

போய் வாருங்கள் சிஆர் 7.

உங்கள் கால்கள் உலவாத கால்பந்து மைதானங்கள் மெஸ்ஸியின் ரசிகர்களால் கூட விரும்பப்படாதவை தான்.

ஏனெனில் நீங்கள் விளையாடும் காலத்தில்…ஒரு காலத்தை உருவாக்கினீர்கள்.

எப்போதும் மெஸ்ஸியின் ரசிகனாக இருந்து சொல்வேன்..உங்கள் காலத்தில் தன்னிகரற்ற வீரர் நீங்கள் தான்.

❤️❤️❤️

நிலாப் பொழுதுகளின் நிழற்படங்கள்.

“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள்.

“வேண்டாம்.

புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை.

நினைவின் சுழல் கொண்டவை.

கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை.

மீளவே முடியாத

ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை.

வேண்டாம்..”

என அச்சத்துடன் மறுத்தேன்.

“இல்லை இல்லை..

தீரா மோகத்தின் வெப்பம் வீசும் விழிமயக்க புனைவு கதைகள்

அடங்கிய வசீகர புத்தகங்கள் நிறைய அடுக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகளுக்கு பின்னால்

கனவின் கதவு

ஒன்று இருப்பது போல ..

ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னாலும் ஒரு கனவின் மாயக்கதவு ஒன்று மறைந்து இருக்கிறது.

அதற்குள் சென்றால் ஆழ்மனதில் உறுத்தும் நம் ஆறாக் காயங்களை, சுகந்த நினைவின்

காற்று ஊதி ஊதியே குணப்படுத்தும் காதலின் தேவதை ஒருவள் காத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பார்த்துவிட்டு வரலாம் வா..” என்று அழைத்தாள்.

எனக்கு முன்னால் நட்சத்திரங்களை விண்ணை நோக்கி வீசிக்கொண்டிருக்கும் ஒன்றோடு ஒன்று பின்னிய நிறைவேறா கனவுகளின் கனலேறிய விசித்திர கிளைகள் கொண்ட ஒரு கொன்றை மரம் ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

பார்க்கவே அச்சம் ‌. மேலும் அசைந்து கொண்டிருக்கும் கிளைகள் என்னை இழுத்து அந்தக் கனல் மரத்திற்குள் வைத்து கழுவேற்றிக் கொல்லுமோ என்கிற தீவிர பய உணர்ச்சி.

நடுங்கியவாறே என்னை நோக்கி மிதந்து வந்த அந்த அலைபேசி இணைப்பை துண்டித்தேன்..

….

விழிகளை மூடி அமர்ந்திருந்த அந்த கணத்தில் தான்.. நொடி பிசகிய திடுக்கிடலில் விழித்து பார்த்த போது..

நானாக உருவாக்கிக் கொண்ட காரணங்கள் துருவேறி இறுகிக் கிடக்கும் அந்தக் காலப் பூட்டு

அதுவாகத் திறந்து, என் முன்

என் வாழ்வில் இனி எப்போதும்

வாழ முடியாத, வசந்த காலத்தின் வண்ணப் புகைப்படங்கள்

கண்ணீர் கோர்த்திருக்கும் என் விழிகளுக்கு முன்னால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.

❤️

எப்போதும் என் அம்மா.

❤️

இன்று கும்பகோணத்தில் மின் கட்டண உயர்வை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் என் அம்மா கலந்து கொண்டதை பற்றி என் தம்பி மருத்துவர் மு.முகம்மது சர்வத்கான் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தான்.

இந்த காட்சி எனக்கு புதிதல்ல. சிறுவயதில் இருந்து எனக்கு தோளுக்கு தோளாக மட்டுமல்ல , உயிராக இருப்பது எனது அம்மா தான்.

நோயால் பாதிக்கப்பட்ட என் பால்ய காலத்தில் என் அம்மா மட்டும்தான் எனது பால்யகால தோழி. காலில் கட்டு போட்டு அமர்ந்திருக்கும் என்னோடு என் அம்மா தான் கேரம்போர்டு விளையாடுவாள். டிரேடு என்று சொல்லக்கூடிய ஒரு விளையாட்டு. பரமபதம் சதுரங்கம் அமர்ந்து விளையாடக்கூடிய எல்லா விளையாட்டுகளிலும் அம்மா தான் அமர்ந்திருப்பாள். நான் கற்பனை காண்பது எதையாவது படித்து பரவசம் அடைவது என எனது எல்லா உணர்ச்சிகளையும் அம்மாவிடம் தான் கொட்டுவேன்.

அம்மாவிற்கு 16 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. 17 வது வயதில் நான் பிறந்து விட்டேன். 17 வயதில் நோயுற்ற ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு வீதி வீதியாக மருத்துவமனைகளுக்கு அலைந்த இயல்பு வாழ்க்கையை மீறிய அவலமும், அலைகழிப்பும் கொண்ட வாழ்க்கையை அடைந்த ஒரு தாய் எனது அம்மா. இப்போதுள்ள கருத்தடை போன்ற அறிவியல் வசதிகள் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் நோயுற்ற ஒரு குழந்தை பிறந்து விட்டானே என்ற ஒரே காரணத்திற்காக என் அம்மா அடுத்த குழந்தையை கூட பெற்றுக் கொள்ளவில்லை.

ஒரு மனிதனாக அது போன்ற தருணங்களை என்னால் இந்த வயதில் புரிந்து கொண்டு கண்கலங்க முடிகிறது.

தனிமை தரும் வலி என்னை வதைத்து விடக்கூடாது என்பதற்காக எப்போதும்‌‌ நான் சாய்வதற்கான தோள்களை அம்மா தயாராகத்தான் வைத்திருக்கிறாள். இன்றளவும் கூட அப்படித்தான்.

இன்றும் நான் காலையில் எழுந்து தேடும் முதல் முகம் என் அம்மா உடையது தான். என்னை மட்டுமல்ல என் பிள்ளைகளையும் அவள் தான் வளர்த்து ஆளாக்குகிறாள்‌ . என் மகன்களுக்கு அவர்களது தாய் தந்தையரை விட தாத்தா ஆத்தா தான் முதன்மையானவர்கள் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமிதம் தான்.

நான் படுத்து “பறக்கும் குதிரை” கதை கேட்ட அதே மடியில் தான் என் மகன்களும் படுத்து அதே “பறக்கும் குதிரை” கதை கேட்டார்கள்.

இன்றளவும் எனது சிறு அசைவுக்கு கூட அம்மாவிடம் ஏற்படும் மாற்றம் மிக வியப்பானது. அதை பதைபதைப்பு என்று சொல்வதா, தன் தயாராவதற்கான ஆயத்தம் என்று சொல்வதா என்றெல்லாம் எனக்கே குழப்பங்கள் உண்டு.

சமீபத்தில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் சற்றே தடுமாறி கீழே விழுந்து விட்டேன். இது போன்ற நூற்றுக்கணக்கான சூழ்நிலைகளை அம்மா தன் வாழ்வில் சந்தித்திருந்தாலும், இந்த முறை ஏனோ கொஞ்சம் தளர்ந்து விட்டாள். கொஞ்சம் காலில் அடிபட்டு இருந்தாலும் அம்மாவிற்காக அடுத்த நாளே நான் எழுந்து நடக்கத் தொடங்கி விட்டாலும் இந்த முறை அம்மாவை சமாதானப்படுத்துவது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

கீழே விழுந்து கொஞ்சம் அடிபட்டு இருந்த என்னை பார்க்க

பெருந்தமிழர் கிருஷ்ணகுமாா் வந்திருந்த போது அம்மா உடைந்து அழ, அம்மாவிற்கு எந்தவித சமாதானமும் சொல்லாமல் ஐயா அவர்கள் அமைதியாக தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தார்கள்.

பக்கத்தில் அமர்ந்திருந்த வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் சதீஷ் அம்மாவை சமாதானப்படுத்துங்கள் ஐயா எனக் கேட்டுக் கொண்ட பிறகும் கூட ஐயா அவர்கள் எதுவும் பேசாமல் தலையை குனிந்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

அந்த நிலை எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அம்மாவிற்கு ஏதோ ஐயா ஆறுதல் சொல்வார்கள், அம்மா சமாதானம் அடைவாள் என நினைத்த எனக்கு ஐயாவின் அமைதி ஆச்சரியமாக இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து கலங்கிய கண்களோடு ஐயா நிமிர்ந்து பார்த்தார். ஏன் ஐயா எதுவும் சொல்ல மறுக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு… “அந்தத் தாய்மை கொண்ட வலிக்கு ஆறுதல் கூற என்னிடத்தில் மொழி இல்லை, அப்படி மீறி கூறினாலும் அந்த மொழி பற்றாக்குறையாக தான் இருக்கும், எனவே அதுவே அழுது அதுவே ஓயட்டும்..” எனச் சொல்லிவிட்டு கண்களை துடைத்தவாறே சென்றார். தமிழ் மொழி மட்டுமல்ல உணர்வின் மொழியும் அறிந்த பெருமகன் அவர்.

அந்த நொடியில் நான் முடிவெடுத்துக் கொண்டேன். அம்மாவிற்காவது நான் நிறைய வேலைகளை என் சக்திக்கு அப்பாற்பட்ட பணிகளை எடுத்துக்கொண்டு செய்து என்னை இயல்பானவனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்து சமீபத்தில் எங்கள் இல்லத்தில் ஒரு திருமணமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இன்றும் அப்படித்தான். நான் போராட்டத்திற்கு கிளம்பினேன். போராட்டத்திற்கு நிறைய ஆட்களை அழைப்பதற்காக பேசிக் கொண்டே இருந்தேன். அம்மா உடனே எதுவுமே சொல்லாமல் நானும் அப்பாவும் வருகிறோம் என்று என் காரில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது மகன் எதன் பொருட்டும் சங்கடப்பட்டு விடக்கூடாது. குறிப்பாக எனது நாம் தமிழர் முயற்சிகளில் அனைத்திலும் என் தாய் தந்தையரின் பங்கு உண்டு. அவர்களைப் பொறுத்த வரையில் அண்ணன் சீமான் இன்னொரு மகன்.

மூத்த மகன் எடுக்கின்ற முயற்சிகளுக்கு இளைய மகன் நிற்க வேண்டும் என்கிற தீவிரம் அவர்களுக்கு எப்போதுமே உண்டு.

போராட்டத்தில் நின்று நான் பேசி முடிக்கும் வரை அம்மா என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த தன் மிக முக்கியமான காரணம் தஞ்சை சாலையில் தடுமாறி விழுந்துவிட்ட தன் மகன் கும்பகோணத்தில் விழாமல் நின்று பேசி விடுவான் என்ற நம்பிக்கை.

அம்மா நம்பிக்கை என்று பலிக்காமல் இருந்திருக்கிறது..??

நானும் பேசிவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

அம்மா நான் நன்றாக பேசினேனா என்று என் கேள்விக்கு..

கலங்கிய விழிகளோடு என் அம்மா அளித்த பதில் ..

“நல்லா ஆயிட்ட.”

❤️

அம்மாவைப் போன்ற ஒரு தேவதை என் பக்கத்தில் இருக்கும் போது எனக்கு என்னதான் நேர்ந்து விடும்..??

“சேயோன்” வெல்வான்.

❤️

அவனை வாழ்த்த சென்று வாழ்த்தாக தெரிவித்தது ஒன்றே ஒன்றுதான்…

“இதையாவது வணிகமாக மட்டும் செய். “

….

உண்மையில் அவன் பெற்றிருக்கின்ற பலவற்றை வணிகமாக்க மறுத்ததை நானே பலமுறை எதிர்த்து இருக்கிறேன். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாட்டில் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் பெரும் வாய்ப்பினை, அறிவை வணிகமாக்க மறுத்து, வெளிநாட்டு வாழ்வு, பொருளாதார உயர்வு என பலவற்றை இழந்து விட்டு, சொந்த ஊரில் கடை திறக்கும் அவனைப் பார்த்தால் ஒரே நேரத்தில் கோபம் கொள்ளவும், ஆழமாக நேசிக்கவும் தோன்றுகிறது.

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி முனைவர் செந்தில்நாதன் எனக்கு 2007 2008 காலங்களிலேயே பழக்கம். ஆர்குட் பக்கங்களில் அப்போது அவர் மதிமுக ஆதரவாளர். நானோ திமுகவின் போர்வாள். எனவே அப்போதே அவரது நண்பராக இருந்த சக்திவேல் மற்றும் செந்தில்நாதனோடு எனக்கு கடுமையான மோதல் (?) உண்டு.

அதன் பிறகு தமிழ்த் தேசிய தளத்தில் அண்ணன் வழக்கறிஞர் நல்லதுரை மூலமாக தம்பியாக செந்தில்நாதன் மாறுகிறான். எதை எடுத்தாலும் இப்போது கடை தொடங்கி இருக்கும் நிகழ்வு வரை ஆர்வத்தின் உச்சத்தோடு அணுகும் அவனது மனோபாவம் ஆச்சரியகரமானது. குறிப்பாக தமிழ்த் தேசிய தளத்தில் அவனது பங்களிப்பு மகத்தானது. தொடர்ச்சியான பண்பாட்டு மீட்சிப் போராட்டங்களில் உச்சங்களை தொட்டு வரும் வீரத்தமிழர் முன்னணி யின் ஒவ்வொரு அசைவிலும் அவனது உழைப்பின் உதிரம் நிறைந்திருக்கிறது.இன்று நாம் தமிழர் அடைந்திருக்கும் பல எல்லைகளை அன்றே தொட முயற்சித்து எங்கள் பலரின் எதிர்ப்பினை அவன் அடிக்கடி சம்பாதிப்பான். ஆனாலும் உற்சாகம் குறைந்ததில்லை.

பல இடங்களில் அவனோடு நான் முரண்பட்டு இருக்கிறேன். முடிந்த அளவு மோதி இருக்கிறேன்.‌ அடுத்த நொடியே சமாதானமாகி இன்னொரு வேலையில் இருவரும் இணைந்திருப்போம். முரண்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு கல்விப் புலத்தில் அவன் மேதமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். செங்கிப்பட்டிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ஏழை குடும்பத்து இளைஞன் தன் மேதமையால் ஜெர்மனி பிரான்ஸ் இத்தாலி நோபல் கமிட்டி என்றெல்லாம் உச்சத்தை தொட்டு விட்டு மீண்டும் செங்கிப்பட்டிக்கு திரும்பி வந்திருப்பது ஒரு திரைப்பட கதைக்கே உரிய சுவாரசியம் என்றாலும், அதற்குப் பின்னால் கொள்கை நேசிப்பு சார்ந்த, பிடித்த வேலையை செய்ய எண்ணி, பிடித்த பிடிவாதத்தால், ரத்தமாய் துயரம் கவிழ்ந்த ஒரு அசலான வாழ்க்கை இருக்கிறது.

ஆனாலும் அவன் ஜீவிதம் யார் முரண்பட்டாலும் அவனளவில் மிக நேர்மையானது. அவன் வாழ்வில் இருக்கும் மிகப்பெரிய உன்னதமே அதுதான். அதற்காக அவன் இழந்ததெல்லாம் மிக மிக அதிகம் என்றாலும் அதை துளித் துளியாய் ரசித்து விரும்பி இழந்திருக்கிறான்.

எத்தனையோ முயற்சிகளை சலிப்பில்லாமல் சங்கடமில்லாமல் தொடர்ந்து செய்ய முடிகிற அவனது ஆன்ம பலம் , எப்போதும் எல்லாவற்றிலும் இருந்து விலகிக் கொள்ள இடம் தேடும் எனது உளவியலுக்கு நேர் எதிரானது என்றாலும், நான் கற்றுக்கொள்ள

விரும்புவது.

இப்போதும் “சேயோன்”என்ற முயற்சியோடு நம் முன்னால் தம்பி செந்தில்நாதன் நிற்கிறான். தவிர்க்கவே முடியாத நம்பிக்கை கண்களோடு அவனை இன்று கடைவாயிலில் பார்த்த போது வாழ்கின்ற போராட்டத்திற்கான ஆழமான வேட்கையை வரும் எல்லோருக்கும் வழங்குகிற கருவியாக அவன் மாறி இருந்தான்.

பல இடங்களில் கிடைக்காத நல்ல புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கிறான். உடலுக்கும் மனதிற்கும் எப்போதும் கெடுதல் செய்யாத இயற்கை உணவு பொருட்களை எங்கெங்கோ அலைந்து திரிந்து வாங்கி வைத்திருக்கிறான். ஒவ்வொன்றிலும் சமூக நலம் சார்ந்து சிந்தித்து இருக்கும் அவனுக்காகத்தான் நான் இந்த பத்தியின் மூன்றாவது வரியில் சொன்ன அறிவுரை.

“இதையாவது வணிகமாக செய்..”

சமூக நலமும் வணிக வெற்றியும் முரண்பாட்டு புள்ளிகள் என்பதை அவனது வெற்றி தான் மாற்றி அமைக்க வேண்டும்.

…..

கடை திறப்பு விழாவிற்காக குழந்தைகளோடு குடும்பத்தோடு அவன் எங்கள் எல்லோரையும் வரவேற்று நின்று கொண்டிருந்த காட்சி நோபல் பரிசு கமிட்டியில் விவாதித்து உலகப் புகழ் அடைந்தவர்களோடு, ஒரே தகுதி இருக்கையில் அமர்ந்து உச்சம் தொட்டவனுக்கானது அல்ல என்றாலும், இந்த வாழ்வினை அசலாக வாழ விரும்பும் தமிழ்த்தேசியப் பற்றாளனுக்கானது என்ற வகையில் அவன் உறுதியாக வென்றாக வேண்டும் என நான் உளமார விரும்புகிறேன்.

ஏனெனில் அவனது வெற்றி என்பது இந்த களத்தில் நிற்கின்ற எண்ணற்ற இளைய புரட்சியாளர்களுக்கான வெற்றியாக கருதப்படும்.

வெளிச்சமாய் அவன் மாறட்டும்.

உள்ளம் நெகிழ அணைத்து வாழ்த்துகிறேன்.

அவசியம் அனைவரும் செல்லுங்கள்.

அவனை வாழ்த்துங்கள்.

சேயோன் வெல்வான்.

சேயோன் அங்காடி, கந்தர்வகோட்டை சாலை, செங்கிப்பட்டி.

தொடர்புக்கு..9442248351.

அண்ணன் சீமானுக்கு..

என் அண்ணனுக்கு…எனக்கு அந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. நம் உயிர் தலைவர் அவர்களின் உடல் கிடைத்து விட்டதாக கூறி சிங்களன் செய்தி வெளியிட்டு மகிழ்ந்த நாள். அந்த செய்தி கிடைத்த போது நான் ஒரு முச்சந்தியில் நின்று கொண்டிருந்தேன். எந்த திசையும் தெரியாமல்.நான் மட்டுமல்ல. என்னைப் போன்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் திசையற்றுப்போனதருணம் அது. எல்லா ஊர்களிலும் ஈழ விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த எண்ணற்ற இளைஞர்கள் கண்கலங்கி , ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தப் போதும் கூட தலைகுனிந்து மௌனமாக கடந்த பொழுதுகள் அவை.

திசையழிந்தஇருள் வெளியில் நின்றுகொண்டிருந்த இனத்திற்கு பற்றிக்கொள்ள ஒரு நம்பிக்கை தேவைப்பட்டது. அவநம்பிக்கை மிகுந்த எங்களது விழிகளில் ஒளி மீண்டும் பிறக்க ஒரு பகலவன் தேவைப்பட்டான்.அப்போதுதான் நாங்கள் உங்களை தேடினோம். அப்போது நீங்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை.இரண்டு மாதம் கழித்து நீங்கள் என்னை அழைத்தீர்கள் அண்ணா.நான் மறுக்கவே முடியாத ஒரு அழைப்பு அது. அந்த நொடியிலிருந்து அக்குரலின் எந்த ஒரு அழைப்பிலிருந்தும் எக்காலத்திலும் நான் விலகியதில்லை.அறுத்தெறிவோம் வாரீர் என நீங்கள் அழைத்த போதுதான் குனிந்த எங்களது தலைகள் நிமிர்ந்தன. நாங்கள் பற்றிக் கொள்வதற்கு நம்பிக்கை மிகுந்த ஒளி உமிழும் ஒரு பற்றுக்கோடு கிடைத்துவிட்டது.

ஆம். எம் இருட் வாழ்வின் பகலவன் நீங்கள்தான்.ஆம் அண்ணா. நீங்கள் மட்டும் தான் எனது ஒரே நம்பிக்கை. எனக்கு மட்டுமல்ல என்னை போல பல லட்சக்கணக்கில் இருக்கும் ஊருக்கு ஊர் நீங்கள் அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு வேர்வை சிந்தி உருவாக்கி இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் மட்டும்தான் ஒரே நம்பிக்கை.குறிப்பாக நான் நம்பிக்கை கொள்வது உங்களோடு மட்டும்தான்.இன்றளவும் நான் தட்டுத்தடுமாறி நடக்கும்போது கீழே விழுந்து விடுவேனோ என நினைக்கும் அந்த ஒரு நொடியில் உங்களது குரலோ அல்லது உங்களது முகமோ எனக்கு நினைவுக்கு வந்து நான் நிமிருவதற்கான‌ வலு எனக்கு பிறக்கிறது.

தனிப்பட்ட என் வாழ்விலும் , சமூக வாழ்விலும் எனக்கு எல்லாமே நீங்கள் தான். எனது ஆசிரியர், எனது அண்ணன், வழி தடுமாறும் நேரங்களில் வழியாகி கிடைக்கும் எனது விழி என எல்லாமுமே எனக்கு நீங்கள் தான். உங்களுக்கு எதுவும் ஆகாது அண்ணா. உங்களை மாவீரர் தெய்வங்கள் எப்போதும் பாதுகாப்பார்கள் என்பதை நான் அறிவேன். இந்த இனம் வாழ இந்த மொழி செழிக்க நீங்கள் காலத்தினால் உருவாக்கப்பட்ட மகத்தான கருவி அண்ணா.அந்தப் புனித மிக்க காலக் கருவியின் கடமை முடியாமல் எதுவும் உங்களுக்கு நடக்காது அண்ணா.

இன்று ஒரு நொடி நீங்கள் மயங்கிய அந்தத் தருணத்தில் என்னைப்போன்ற எத்தனையோ பேர் இறந்து பிறந்தோம் அண்ணா.உங்களை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை கலங்கிக்கொண்டே எங்கள் விழிகள் எங்களுக்கே இன்றைய நாளில் உணர்த்தின.வலிமிகுந்த இந்த நாளில் நாங்கள் வெற்றிகரமாக சோழ மண்டல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தையும் நடத்தினோம் அண்ணா. வழக்கத்துக்கு மாறாக பெரும் கூட்டம் கூடியது. ஆனால் எல்லோரும் வலியால் அமைதியாக இருந்தார்கள். ஒருவருக்கு ஒருவர் நீங்கள் நலம் என்ற செய்தியை நம்பிக்கையோடு பகிர்ந்து கொண்டார்கள்.உங்களை உயிராக நேசிப்பவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி உங்களுக்குப் பிடித்தமான கட்சி வேலையை உச்சபட்ச கவனத்தோடு செய்து கொண்டிருந்தோம்.

அதுதான் உங்களுக்கு நாங்கள் செய்கிற நேர்மையான பேரன்பின் பரிசு என்பதை நான் அறிவேன்.

விரைவில் தேறி வாருங்கள் அண்ணா.

இந்த இனத்தை, இந்த நிலத்தை தேற்ற வாருங்கள்.

உங்கள் தம்பி.

மணி செந்தில்.

( ஏப் 2-2022 அண்ணன் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உடல் நலிவுற்றப் பொழுதில்..)

என் அன்பு மகன் சிபிக்கு..

19.03.2022 இரவு 12.01.

எனது அன்பு மகன் சிபிக்கு..

துளித்துளியாய் நகரும் இந்த இரவில், கண்கள் முழுக்க நெகிழ்ச்சியோடு, உள்ளம் முழுக்க பேரன்போடு உனக்காக எழுதுகிறேன்.முதலில் உன்னை உச்சிமோர்ந்து கண் கலங்க முத்தமிடுகிறேன்.கலீல் ஜிப்ரான் சொல்வதுபோல நீ என்னில் இருந்து வந்தவன் தான். ஆனால் நீ நான் அல்ல. என் கனவுகளை உன் மீது சுமத்தி நான் வளர்க்கும் ஒட்டகமாய் உன்னை திரிய வைக்க நான் எப்போதும் விரும்பியதில்லை. உனது சுதந்திரத்தையும், உனது தேர்வுகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன். அவற்றையும் எனக்கானதாய் கருதி நான் விரும்ப கற்றுக் கொள்கிறேன்.இவ்வளவும் நான் உன் மீது வைத்திருக்கிற பேரன்பினால் மட்டும் விளைந்தது அல்ல. மாறாக அப்பழுக்கற்ற நம்பிக்கையினால்.ஆம். நான் மட்டுமல்ல. இந்த கலையகத்தில் இருக்கும் ஒவ்வொரு துரும்பும் உன்னை நம்புகிறது. உனது புன்னகைக்காக ஏங்குகிறது.

18 வருடங்களுக்கு முந்தைய ஒரு மாலை நேரத்தில் அது வரை எதுவுமே அற்ற என் வாழ்க்கையில், ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அள்ளிக்கொண்டு நீ வந்தாய் ‌.அந்த நொடி இன்னும் என் விழிகளுக்குள்ளாக பசுமையாக இருக்கிறது. உனது பிஞ்சு கால்களின் மென்மையை இப்பொழுதும் எனது உள்ளங்கை உணருகிறது.எந்த நொடியிலும் நீ கலங்கி விடக்கூடாது என்பதை என் வாழ்க்கையின் நோக்கமாக அன்றைய நாளில் தான் நான் மாற்றிக் கொண்டேன்.நான் அடைந்த எந்த இருண்மையும் உன்னைத் தொட்டு விடக்கூடாது என்பதற்காக எப்பொழுதும் உனக்காக துடிக்கும் என் ஆன்மா உன் மீது அன்பின் நிழல் வேய்ந்திருக்கிறது.நீ நடக்கும் போதும், ஓடும் போதும், மண்ணிலிருந்து விண்ணை நோக்கி பாய்ந்து தாவும் போதும் நானே நடப்பதாக ஓடுவதாக பறப்பதாக உணர்ந்தேன். எனக்கு இந்த உலகம் எதை எதை மறுத்ததோ , அவை அனைத்தையும் உன் மூலம் நான் அடைந்து விட்டேன். அதில் நான் இந்த உலகையே வென்று விட்டேன்.

❤️

தாத்தா ஆத்தா அம்மா தம்பி என்று ஒரு பாதுகாப்பான வேலிக்குள் ஒரு தோட்டத்து மல்லிகைச் செடி போல இதுவரை நீ இருந்து விட்டாய்.அதைத் தாண்டிய ஒரு உலகம் உன்னை இந்த நொடியில் கையசைத்து அழைக்கிறது. நீ அங்கு போய் தான் ஆக வேண்டும். ஒவ்வொரு நொடியும்விரிவடைந்துகொண்டே போகின்ற அந்த உலகம் இதுவரை வாழ்ந்த உன் வீடு போல எளிமையும் பாதுகாப்பும், முறைமையும் கொண்டது அல்ல.எல்லா திசைகளிலும் திருப்பங்களை கொண்ட அந்த உலகில் அலைந்து திரிந்து உனக்கு நீயே ஆசிரியனாய் அனுபவங்கள் வாயிலாக கற்று கொள்ள இதோ ஒரு வாசல் கதவு திறக்கிறது.ஒரு சிட்டுக்குருவியை போல நீ பறந்துப் போக ஒரு பெரிய வானம் காத்திருக்கிறது.

ஒரு வெண்புறா போல அகத்தூய்மை கொண்ட நீ அப்படியே இருந்து விடாதே.கழுகைப் போல பார்வையும், வல்லூறைப் போல வலிமையும் உனக்குத் தேவை.இனி நிறைய பயணப்படு. தனியே ஊர் சுற்று. தினந்தோறும் உடற்பயிற்சி செய். மிக சாதாரண எளிய மக்களோடு மிக எளிய வாழ்க்கை ஒன்றை வாழ பழகிக் கொள். கிடைத்தவற்றை, கிடைத்த நேரத்தில் சாப்பிட்டு செரித்துக்கொள்ள உறுதியான வயிறு ஒன்றினை பயிற்சியின் மூலம் கண்டடை. உடலை,மனதை கெடுக்கும் எதனையும் தீண்டாதே.எல்லோருக்கும் உதவு. இரக்கப்படு. நீதிக்காக உரத்துக் குரல் கொடு. அநீதியை ஒருபோதும் சகித்துக் கொள்ளாதே.புத்தகங்களோடு வாழப் பழகிக் கொள்.மற்றபடி இந்த வாழ்க்கை உன்னுடையது. உறுதியோடு நம்பிக்கையோடு வசீகரமான பயணம் போல இந்த வாழ்க்கையை வாழ்ந்து அனுபவி.‌ கொண்டாட்டங்களின் ஊடாக சக மனிதர்களை நேசி.இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்பதற்கான சட்டக விதிகள் இவைகள் அல்ல. உனது பயணம் தங்கு தடையில்லாமல் வெற்றிகரமாக அமைய ஏற்கனவே பயணப்பட்ட ஒருவனின் அனுபவக் குறிப்புகள். முள் பட்ட கால்களின் முன் தீர்ப்புகள்.

உன்னை மகிழ்ச்சியோடு இறுக்க கட்டிப் பிடித்துக் கொள்கிறேன். மிகச்சிறந்த தோழனாய் இந்த நொடியில் உன்னை நான் உணருகிறேன். நமது பல ரசனைகள் ஒன்றாகவே அமைந்திருப்பது கண்டு நான் ஒருபோதும் வியந்ததில்லை ‌. உனது நிழலாக நானிருக்கிறேன் என்பதும், எனது நகலாக நீ இருக்கிறாய் என்பதும் நாம் அறிந்தவை தானே.மற்றபடி 17 முடிந்து 18 யை தொட்டுவிட்டாய். இனி புதிய உலகம். புதிய வாழ்க்கை. புதிய அனுபவங்கள்.சென்றுவிட்டு, வென்று விட்டு, எப்பொழுது ஆனாலும் வீட்டுக்கு வந்துவிடு‌.பரவசமாய் உனது வெற்றிகளை கேட்க, பார்க்க நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்.அதோ தூரத்தில் கைதட்டல் ஓசை கேட்கிறது.

சென்று வா.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சிபி.

Missed call..

❤️

❤️

அந்தப் பாடல் ஒரு கருணை என்றாய். மழை போல. இளவெயில் போல.‌ எப்போதாவது உணரத்தக்க மனநிலையில் ‌ காலத்துளியின் நழுவத் துடிக்கும் ஒரு இழையில் அனிச்சையாக சிக்கிக்கொண்ட அபூர்வம் போல அந்தப்பாடல் ஒரு கருணை என விழிகள் மூடி மெய்மறந்து நீ சொல்லும் அந்தக் கணத்தில்…

நிச்சயமாக நீதான் அந்தக் கருணை என எனக்கு சொல்லத் தோன்றியது.

❤️

இப்போதும் எங்கேயாவது என்னையும் மீறி கேட்டு விடுகிற அந்த பாடல் விரைந்து செல்கிற நதி
குளிர்கால பனியால் கனத்து விடுவதுபோல‌ கனத்து விடுகிறது.

அந்தப் பாடல் ஒரு திடப்பொருள் போல உறைந்து விடுகிறது.

எல்லாவற்றையும் தாண்டி விலகி ஓடுகிற மணி நேர நொடிகளை இறுக்கி கட்டி அந்தப் பாடல் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்து விடுகிறது.

❤️

எங்கிருந்தோ கிடைத்த அந்தப் பாடலின் வசீகரமான துண்டு ஒன்றினை என் அலைபேசியின்
அழைப்பிசையாக பொருத்திய போது, யாரோ ஒருவர் அழைக்கும் போதெல்லாம் நீயே அழைப்பதாக எனக்குத் தோன்றியது.

ஒரு கட்டத்தில் நீ தான் அந்தப்பாடல்
என உணரத் தொடங்கிய போது
நானே வெவ்வேறு அலைபேசிகளின் மூலமாக என்னை அழைத்துக் கொண்டதும் நடந்தது.

இறுதியாக நீயே ஒரு பின்னிரவில் என்னை அழைத்தாய்.

உலகமே தன் இமைகளை மூடிக்கிடக்கும் அந்த சலனமற்ற
நள்ளிரவின் திறக்கப்படாத கதவுகளை அந்த அழைப்பிசை
திறந்ததாக நான் உணரத் தொடங்கினேன்.

காலதேச தூரம் கடந்து காற்றின்
சிறகை பிடித்துக் கொண்டு
நீயே அருகில் வந்து விட்டதாய் ஓர் உணர்வு.

அழைப்பினை எடுக்க துடிக்கிற
எனது விரல்களுக்கும்..
அழைப்பிசை தந்த மெய் மறத்தல்
உணர்வுகளுக்கும் இடையே..

நேரம் வழுவி அழைப்பு துண்டானது.

மீண்டும் அழைத்தாய்.

மீண்டும் அதே நிலை.

❤️

எதற்காக அழைத்து இருப்பாய் என எண்ணுவதற்கு முன்பாக அழைத்திருக்கிறாய் என்ற நிறைவில் நான் நிலைத்திருக்க..

“Missed call’ என்று உனது பெயர் மின்னிக் கொண்டிருந்தது.

❤️

அப்பாவின் பிறந்தநாளில்..

அப்பாவுக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள்.எப்போதும் அவருக்கு பிறந்த நாள் என்பது ஒரு சாதாரண நாளாக தான் கடந்து போகும் ‌. இன்றும் அவர் அப்படித்தான் அதை அவர் எடுத்துக்கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் நாட்களின் நகர்வு ஒன்று மட்டுமே மனிதனின் வாழ்நாள் அல்ல. அந்த நாட்களில் அவன் என்ன சாதித்து இருக்கிறான் என்பதே அவனது வாழ்நாள் என்கிறார்.

அவர் அப்படித்தான். இன்றளவும் தினந்தோறும் மூன்று மணிநேரங்கள் படிப்பதற்காக ஒதுக்குகிறார். நாம் தமிழர் காணொளிகள் அனைத்தையும் விடாமல் பார்த்து விடுகிறார். வாரத்திற்கு ஒரு முறை அண்ணன் சீமானோடு அலைபேசியில் பேசி விடுகிறார். அடுத்து வருகின்ற ஆன்றோர் அவைய கூட்டத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

வீட்டிற்கு வந்திருக்கும் இடும்பாவனம் கார்த்தியோடு சமகால அரசியல் குறித்து ஆர்வத்துடன் விசாரிக்கிறார்.ஒரு காலத்தில் முரசொலி படிக்காமல் அவருக்கு ஒருநாள் முடியாது. வீட்டில் கருணாநிதி என அழைக்கக் கூடாது கலைஞர் என்றுதான் அழைக்க வேண்டும் என வாதிட்டவர். எங்கெங்கெல்லாம் கருப்பு சிவப்பு கொடி பறக்கிறதோ அதுவெல்லாம் தன் ஊராக நினைத்தவர், 2009 இன அழிவிற்கு பிறகு தன்னை வெகுவாக மாற்றிக் கொண்டு விட்டார்.

இன்று இடும்பாவனம் கார்த்தியிடம் புதியதோர் தேசம் இதழை புத்தக வடிவில் கொண்டுவர முடியுமா எனக் கேட்கிறார். அண்ணன் சீமான் மீது அளவற்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. உறுதியாக அவர் வெல்வார் என நம்புகிறார். நான் படிப்பது, இனத்திற்காக நிற்பது, மொழியை நேசித்து எழுதுவது எல்லாமுமே அவரை பார்த்து நகல் எடுத்தது தான். புத்தகங்கள் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை எனக்கு அளித்து நோயில் இருந்தும், தனிமையில் இருந்தும் என்னை விடுவித்தவர்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது போகிற போக்கில் நம் முன்னோர்கள் உதிர்த்து விட்டுப் போன வார்த்தை அல்ல என்பதை பலமுறை எனக்கு உணர்த்தியவர்.அவருக்கு அருகில் நான் மிகப் பாதுகாப்பாக உணர்ந்திருக்கிறேன். உணருகிறேன். அவர் எனக்கு அளித்த அனைத்து நல்லவைகளுக்காகவும, நல்லவை களைத் தவிர வேறு எதுவும் எனக்கு அளிக்காத இந்த வாழ்விற்காகவும் அவருக்கு நெகிழ்வோடு நன்றி சொல்கிறேன்.

இன்றைய நாளில் அவருக்காக வந்திருந்து மகிழ்ந்த , சென்னை தவிர்த்து அப்பாவிற்காக என்னுடன் இருந்த என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் , குடும்பத்தோடு வந்து இருந்து நேசித்து மகிழ்ந்த என் உடன்பிறந்தவர்கள் வழக்கறிஞர் மோ.ஆனந்த் , பிரகாஷ் , அடுத்த வருடம் இந்நாளில் இருவராக மாற இருக்கும் என் தம்பி Lingadurai K , எனது அலுவலக இளையோர் வீர பிரபாகரன், பிரகாஷ் , தங்கை லட்சுமி , என் தங்கை மீனா உள்ளிட்ட அனைவருக்கும் எனது பேரன்பு.

இனிய அகவை தின வாழ்த்துக்கள் அப்பா.

363பிரகாஷ், இரா. கார்த்தி நிமலன் and 361 others104 comments5 sharesLikeCommentShare

10

Page 2 of 6

Powered by WordPress & Theme by Anders Norén